Monday 28 July 2014

ஆடி அமாவாசை - அம்மாவும் பிரகதியும்


ஆடி அமாவாசை... (26/07/2014)

அன்றைய நாள் ஆசிர்வதிக்கப்பட்டதா தான் கண்டிப்பா இருக்கணும்...

இந்த நாள் மேல எனக்கு அவ்வளவா நம்பிக்கை இல்ல. இந்த உலகத்துல நம்மள தனியா விட்டுட்டு போனவங்களுக்கு தர்ப்பணம் பண்ணினா அவங்க ஆத்மா சாந்தியடையும்ன்னு நம்பிக்கை... ஆனா எனக்கு அம்மாவுக்கு அதெல்லாம் பண்ணனும்ன்னு கொஞ்சம் கூட ஆர்வம் இல்ல. காரணம், என் கூட இருக்குரவள எதுக்கு அனாவசியமா வேறெங்கயாவது அனுப்பி வைக்கணும்?

ஆறு மணிக்கு ரெடியா இரு, வெளில போயிட்டு வருவோம்னு அப்பா சாயங்காலமே சொல்லிட்டு கோவிலுக்கு போயிட்டாங்க. நான் எங்கன்னு எல்லாம் பெருசா கேக்கல... இப்படி எங்கயாவது கூட்டிட்டு போனா, அது பாங்க்ஸ் சிக்கின் (சிக்கன் இல்ல, சிக்கின் தான்) சாப்பிட தான் இருக்கும்னு நானே நினைச்சுகிட்டேன்.

அப்பா கோவில்ல இருந்து வந்ததும் கதவை தட்டி கூப்பிட்டாங்க. ரெடியா தான் இருந்தேன். கடகடன்னு செருப்பை கால்ல மாட்டிகிட்டு வெளில வந்தா ஒரு ஆச்சர்யம். காருக்குள்ள பின் சீட்ல தம்பி. தம்பி மடியில பிரகதி.

ஒரு வேளை ஹாஸ்பிடல் எங்கயாவது போறோமோன்னு ஒரு சந்தேகம். எங்கப்பா போறோம்னு அப்பாவ பாத்து கேட்டேன். நீ வண்டிய எடு. போறப்ப சொல்றேன்னு சொல்லிட்டு அப்பா பக்கத்துல வந்து உக்காந்தாங்க.

கொஞ்ச தூரம் எதுவுமே சொல்லல... எனக்கு பிரகதி எங்க வர்றான்னு ஒரே ஆச்சர்யம். கண்ணாடி வழியா பாத்தா அவ தம்பி மடியில ஜம்முன்னு உக்காந்து இருக்கா. அதே ஜோதிகா பார்வை. அதே கெத்து. அதே புன்னகையும் கூட. எங்க பிரகதி எவ்வளவு அழகு தெரியுமா?

கார் சிட்டி தாண்ட ஆரம்பிச்சப்ப தான் சட்டுன்னு மூளைக்குள்ள ஒரு மின்னல். அம்மாவ பாக்கப் போறோம். அதே தான்...

அப்பா தலைல கை வச்சு முடிக்குள்ள வருடி விட்டாங்க. திடீர்னு மனசெல்லாம் பாரம் ஆன மாதிரி ஆகிடுச்சு. அந்த உணர்ச்சி கலவைகள எப்படி சொல்றதுன்னு எனக்கு தெரியல. ஏனோ ரோட்ல இன்னிக்குன்னு பாத்து ரொம்ப ட்ராபிக். கவனமா தான் வண்டி ஓட்ட வேண்டியிருந்தது.

எனக்கு மனசுல சித்தப்பாவோ, சித்தியோ, இல்ல அவரோட பசங்களோ நியாபகத்துல இல்லவே இல்ல. அதோ அந்த காம்பவுண்ட் திறந்து வீட்டுக்குள்ள போகாம வலது பக்கமா அந்த சிமின்ட் நடைபாதை வழியா நடந்தா நடந்தா, வெறுமையான புறாக்கூடுகளும், லவ் பேர்ட்ஸ் கூண்டுகளும், தண்ணியே இல்லாத மீன் தொட்டியும் வரும். சிகப்பு ஜாக்கெட், வெள்ளை முண்டு உடுத்தின பெண் இடுப்புல இருக்குற குடம் காலியாவே இருக்கும். கவனத்த அங்கெல்லாம் சிதற விடவே கூடாது.

மனம் மின்னல் வேகத்துல வீட்டை கடந்து, அதோ அந்த முள்வேலி தாண்டி, தோப்பு முடிவுல ரோட்டோரமா போய் அம்மாகிட்ட நிக்குது. அந்த தருணம் ஒரு ஆழ்நிலைக்கு சமம். மூச்சை அப்படியே நல்லா உள்ளிழுத்து வெளிய விட்டு பாத்தா, உடம்பு முழுக்க அம்மா வருடுன தடம் பதிஞ்சு போயிடும். போதும், இந்த தருணம் போதும்... இதுக்கு ஈடா வேற எதுவுமே கிடையாது...

கார கொண்டு வந்து காம்பவுண்ட்குள்ள விட்டப்போ நிஜமாவே அங்க யாரும் இருந்த மாதிரி தெரியல. அப்பா தான் இறங்கி போய் கேட் திறந்து விட்டாங்க. நல்லதா போச்சு. காரை பார்க் பண்ணிட்டு, கார் கதவை திறந்து, மனசு நினச்ச மாதிரியே கடகடன்னு கால் நடக்க ஆரம்பிச்சுடுச்சு. அப்பா தம்பி கூட பின்னால நடந்து வராங்க. பிரகதிய தம்பி கைல தூக்கிட்டு வரான்.

அம்மா கிட்ட போனப்போ, அப்படியே மடங்கி உக்காந்துட்டேன். அவள தொடல, அப்படியே அண்ணாந்து அவளையே பாத்துட்டு இருந்தேன். ஏண்டி இப்படி பண்ணினன்னு மனசு கேக்க ஆரம்பிச்சுடுச்சு. அப்பா அம்மாவ தடவி குடுத்துட்டு இருந்தாங்க. தம்பியும் அம்மாவ தொட்டுப் பாத்தான். அப்புறம் பிரகதிய கீழ விட்டுட்டு, எட்டி தாவல்ல இருந்த கிளைய முறிச்சி பிரகதி கிட்ட குடுத்தான்.

பிரகதிக்கு ஒரே ஜாலி தான். கொஞ்ச நேரத்துல ஒரு கொப்பை காலி பண்ணிட்டா. தம்பி அடுத்த கிளையை ஒடிக்க ஆரம்பிச்சான்.

அம்மாவுக்கு கண்டிப்பா வலிச்சிருக்காது. ஆனா அழுதுருப்பா. இதோ, ஈரப்பதத்தோட வீசுதுல, காத்து... அதுல அம்மா கலந்துருப்பா, பிரகதிய ஆரத்தழுவியிருப்பா... இவளும் அவளோட பிள்ளை தானே. என்னை பாத்துக்குற மாதிரி கண்டிப்பா பிரகதிய பாத்துப்பா தானே... அழுதுகிட்டே அம்மாகிட்ட நான் கேட்டது ஒண்ணே ஒண்ணு தான். "அம்மா, பிரகதி எங்களுக்கு வேணும். இன்னும் கொஞ்ச வருஷம் அவள எங்ககிட்ட விட்டு வையேன். ப்ளீஸ்"

தோளை தொட்டு பிரகதிக்கு எது நல்லதோ, அத அம்மா கண்டிப்பா பண்ணுவா. நீ முதல்ல எழுந்து அம்மா கிட்ட போய் இருன்னு அப்பா சொன்னப்ப தட்ட முடியல. எழுந்து அம்மாவ போய் கட்டிபிடிச்சுகிட்டேன். நான் அவளுக்கு முத்தம் குடுத்தப்ப தம்பி பிரகதிய கட்டிக்கிட்டு திரும்பிகிட்டான். கண் கலங்கிட்டானோ என்னவோ?

கொஞ்ச நேரம் அங்க தான் நின்னுட்டு இருந்தோம். பிரகதி அங்கயும் இங்கயுமா ஓடி விளையாடிட்டு இருந்தா. ஒரு பதினஞ்சு நிமிஷம் தான் இருக்கும். இனி இவளை அதிகமா துள்ள விட வேணாம்னு கிளம்பிட்டோம். சித்தப்பா வீட்ல எல்லோரும் எங்கன்னு கேக்கல... கேக்கவும் தோணல... மனச முழுக்க அங்கயே விட்டுட்டு இதோ கார மறுபடியும் நான் தான் ஓட்டிட்டு இருக்கேன்.

போற வழியிலயே சாப்பிட்டுட்டு போயிடுவோம்ன்னு அப்பா சொன்னாங்க. அப்படியே காரை அக்க்ஷயாவுக்குள்ள பார்க் பண்ணி, ரூப் கார்டன் போய் ஆளுக்கு ஒரு தோசை ஆர்டர் பண்ணினோம். கூடவே டொமாட்டோ சாஸ் (எனக்கு மட்டும்), உளுந்தவடை, இன்ஸ்டன்ட் ப்ரூ ஆர்டர் பண்ணினோம். பிரகதிக்கு நாலு இட்லி.

தோசைய கண்டதும், பிரகதி பாய்ஞ்சு போய் தம்பியோட சேர்ந்து திங்க ஆரம்பிச்சுட்டா... அப்பா கூட அவங்க தோசைய அவளுக்கே குடுத்துட்டாங்க. நான் அவளையே பாத்துட்டு தோசைய எடுத்து கைல வச்சுட்டு காத்திருந்தேன். வயிறு நிறைஞ்சுடுச்சு போல. அவ பாட்டுக்கு துள்ளி ஓட ஆரம்பிச்சுட்டா. இன்னிக்கி அந்த ரூப் கார்டன் வந்தவங்களுக்கு பிரகதி தான் பொழுது போக்கு. எல்லாரும் அவளையே தான் பாத்துட்டு இருந்தாங்க. போட்டோ எடுக்க கூட ட்ரை பண்ணினாங்க. ஆனா தம்பி ப்ளீஸ் வேணாம்னு சொல்லிட்டான். அப்புறம், அப்பாவும் தம்பியும் இட்லியும் வடையும் சாப்ட்டுட்டு, கிளம்பும் போதுஆளுக்கொரு ஐஸ்க்ரீம் ஆர்டர் பண்ணினாங்க. மொத்தம் நாலு ஐஸ்க்ரீம். ஆனா பிரகதி சாப்பிடல. ரொம்ப குளிரா இருந்துச்சுல... வாய வச்சுட்டு எடுத்துட்டா. ஆனா நல்லா சப்பு கொட்டிட்டே இருந்தா...

பிரகதியோட ஐஸ்க்ரீம் எடுத்துட்டு வீட்டுக்கு கிளம்பிட்டோம். வீடு வந்து சேர்ற வர பிரகதி ஐஸ்க்ரீம் சாப்பிடல. தம்பி அவளை அவ அம்மாகிட்ட கொண்டு போய் விட போய்ட்டான். நான், இந்தா இங்க வந்துட்டேன்.

அம்மா எது செய்தாலும் நல்லதுக்கு தான் செய்வா. பிரகதி அவளோட பிள்ளை. அவ பிள்ளைய என்ன பண்ணனும்ன்னு அவளுக்கு தெரியாதா? என்னோட இல்லல, நம்மோட பிரார்த்தனைகளும் அவளுக்கு உண்டு தானே... எல்லோரும் அவளை ஆசீர்வதிச்சுட்டு போங்க...

Sunday 27 July 2014

புட்டு செய்வோமா?


ஞாயிற்று கிழமை....

ப்ரீயா தானே இருக்கோம்.... வாங்களேன், கிச்சனுகுள்ள புகுந்துடுவோம்...

மேல அந்த ஸ்லாப்ல ஒரு எவர்சில்வர் தூக்குவாளி இருக்கு பாருங்க, அத எடுங்க...

இதுக்குள்ள இருக்குறது தான் அரிசி மாவு. இது எப்படி ரெடி பண்ணனும்ன்னு இப்ப நான் சொல்லித் தரேன், சரியா...

பச்சரிசிய நல்லா தண்ணியில ஊறப் போட்டு, அப்புறம் தண்ணிய நல்லா வடிச்சி எடுத்துக்கங்க. அப்புறம் சுளவுல கொட்டி அப்படியே பரவலா விரிச்சி வச்சுட்டா தண்ணி எல்லாம் நல்லா வடிஞ்சுடும். அப்புறமா அத எடுத்து உரலுல போட்டு, உலக்கை எடுத்து இடிச்சிக்கங்க.

இப்போ இடிச்சி எடுத்த அரிசி மாவுல குருணை கிடக்கும். அதனால நல்லா பரும்கண்ணி வச்ச அரிப்புல வச்சு அரிச்சி மாவு தனியா, குருணை தனியா பிரிச்சி எடுத்துக்கணும் சரியா. குருணைய மறுபடியும் உரல்ல போட்டு இடிங்க... மாவு கிடைச்சிடும்.

இந்த மாவை அப்படியே சேர்த்து வைக்க முடியாது. ஈரப்பதம் அதிகமா இருக்குறதால ஈசியா பூஞ்சை புடிச்சுடும். அதனால இப்போ மாவு வறுப்போம் வாங்க...

அந்த வெங்கல உருளிய எடுத்துக்கோங்க. இப்போ மாவை அதுல கொட்டுவோம். அடுப்பை பத்த வச்சுப்போம். அய்யய்யோ கிண்டி குடுக்கணுமே, அந்த கண்ணாப்பைய எடுங்க. கை விடாம கிண்டி குடுத்துட்டே இருக்கணும் சரியா, இல்லனா அடி பிடிச்சுக்கும்.

இப்போ மாவு பொன்னிறமா வந்துடுச்சா, அவ்வளவு தான், வேலை முடிஞ்சுது. கொஞ்சம் ஆற வச்சுட்டு, தூக்கு வாளில போட்டு வச்சுடலாம்...

ஹலோ, ஹலோ, ஹலோ.... எங்க போறீங்க, இதல்லாம் ப்ளாஷ் பேக் தான். இனி மேல தான் வேலையே இருக்கு.

வாங்க, ஒரு கப் மாவு எடுத்து அந்த சருவத்துல எடுத்துக்கோங்க. அப்படியே ஒரு கப்புல உப்பு தண்ணி எடுத்து வச்சுக்கோங்க. முக்கியமா தேங்காய் துருவ மறந்துடாதீங்க. அத தனியா ஒரு தட்டுல துருவி வச்சுக்கோங்க...

சரி இப்போ, உப்பு தண்ணிய கொஞ்சம் கொஞ்சமா மாவுல விட்டு பிசைய ஆரம்பிங்க. கொஞ்சம் கூட தண்ணி விட்ட மாதிரி தெரிய கூடாது. மாவு கொஞ்சம் ஈரப்பதமா ஆகணும். அவ்வளவு தான். உப்பு டேஸ்ட் எப்படின்னு பாத்துக்கோங்க... ஓகே, இப்போ மாவு ரெடி...

இன்னிக்கி சிரட்டை புட்டு செய்வோமா? அந்த தேங்காய் துருவின சிரட்டை இருக்குல, அதுல ஒரு கண்ணை கத்தி வச்சி கொஞ்சம் பெருசாக்கிகோங்க... உள்ள இருக்குற கசட எல்லாம் நல்லா கத்தி வச்சி இளைச்சி எடுத்துடுங்க. வீட்ல சின்னதா இருக்குற குக்கர்ல தண்ணி மட்டும் விட்டு அடுப்புல வச்சிடுங்க. குக்கர் வெயிட்டர் மட்டும் போட வேண்டாம்.

இப்போ தண்ணி சூடாகி, ஆவி வரப்ப, சிரட்டையோட கண்ண அதுல சொறுகிடுங்க... ஒரு கை மாவு அள்ளி போட்டு, அது மேல தேங்காப்பூவ தூவி விட்டுருங்க...

என்ன, ஆவி இப்போ தேங்கா துருவல் மேல படர்ந்து வெளில வருதா, அப்போ புட்டு ரெடி. சுடாம இருக்க ஒரு துணி சுத்தி, சிரட்டைய எடுத்து, பாத்துரத்துல கவுத்துருங்க... அவ்வளவு தான், இனி அடுத்த புட்டு செய்ங்க...

சரி, சரி, நேரம் ஆகிட்டதால கொல்லாங்கொட்டைய நானே வறுத்து உடைச்சும் வச்சுட்டேன். பப்படமும் பொரிச்சி வச்சுட்டேன். மணக்க மணக்க கருப்பட்டி காப்பியோட இன்னொரு நாள் இந்த வேலைய நீங்க தான் செய்யணும் சரியா....

இப்போ வாங்க சாப்பிடலாம்...

புட்டு சாப்ட்டுட்டே ஒரு குட் மார்னிங்....

Tuesday 1 July 2014

திருவிழா பாக்க போவோமா?


 
இன்னிக்கி எங்க போறது?

பேசாம ஒரு திருவிழா கூட்டத்துக்குள்ள புகுந்துடுவோமா?

 நம்ம ஊருல திருவிழானாலே அசத்தல் தானே... இப்போ திருவிழா நடக்குதான்னு எல்லாம் கேக்கக்கூடாது, நாம போகணும்ன்னு முடிவெடுத்தாலே கண்டிப்பா திருவிழா நடக்கும்.


சரி, சரி, தாத்தா, பெரியப்பா, சித்தப்பா, அண்ணா, தம்பி, மாமா, மச்சான் எல்லாரும் வெள்ளை வெளேர்ன்னு வேஷ்டி கட்டிக்கோங்க. உங்க கிட்ட இருந்தா பட்டு வேஷ்டி கூட கட்டிக்கலாம். கழுத்துல மைனர் செயினு, விரல்ல அதிரசம் சைசுக்கு மோதிரம், வலது கைல வாட்சு, இடது கைல பிரேஸ்லெட்... ப்பாஆஆ... அசத்துறீங்க...

அட, இங்க பாருங்க, பெரியம்மா, சித்தி, மாமி, அக்கா, தங்கச்சி பாட்டி எல்லாம் நான் சொல்லாமலே ரெடி ஆகிட்டாங்க. அட, பாட்டி கழுத்துல பாம்படம் அசத்தல். தோள் வரைக்கும் காத வழிச்சு நீட்டி உருட்டி உருட்டி பாம்படம் போட்ருக்காங்க. சைஸ்ச பாத்த உடனே ரொம்ப கனமா இருக்கும்னு நினச்சீங்கனா ஐயாம் சோ சாரி, உள்ள மெழுகு வச்சு அடைச்சி வச்சிருக்காங்க. அடேங்கப்பா, சித்தி கழுத்துல அட்டியல பாருங்களேன், என்னா பெருசு. தங்கச்சி, அது என்ன, நெத்திச்சுட்டி டாலடிக்குது? அதுவும் சிகப்பு கல்லுல... இங்க நம்ம அக்கா மூக்குல வைர மூக்குத்தி... ஆள் ஆளுக்கு அசத்துறீங்க... பட்டுப்புடவை சரசரக்க வேகமா வாங்க....

ஹலோ, அங்க யாரு வந்தவங்கள வேடிக்கை பாக்குறது? போங்க சார், போய் திருவிழாவ வேடிக்கை பாருங்க. ரோஸ் கலர்ல பஞ்சு முட்டாய் இருக்கு, மஞ்ச, சிகப்பு, கருப்புன்னு கலர் கலரா சவ்வு முட்டாய் இருக்கு, சுடச்சுட தேன்குழல் ரெடி. இந்த பக்கம் வாங்க, வலது பக்கம் காரச்சேவு அடுக்கி வச்சிருக்காங்க, இடது பக்கம் இனிப்பு சேவு. ஹைய்யய்யோ அதென்ன, மஞ்சயா, உருண்ட உருண்டையா? அது பூந்திங்க. அப்படியேவும் சாப்பிடலாம், கொஞ்சம் பக்குவப்படுத்தி லட்டு பிடிச்சும் சாப்பிடலாம்.

அந்த கார வகைகள் எல்லாம் எங்க இருக்கு? அதோ, அந்த வருசைல இருக்கு. மிக்சர், சிப்ஸ், கிழங்கு வத்தல், ஹே, அதென்ன, கருப்பட்டி முட்டாய். எல்லாமே அசத்தல்.

இந்தாங்க, அண்ணே, பொம்பள புள்ளைங்கள பாக்காதீங்கண்ணே அவங்க பாட்டுக்கு, வளையல், ஜிமிக்கி, தோடு, சாந்து பொட்டு, நெயில் பாலிஷ், லிப்ஸ்டிக்ன்னு வாங்கி குவிச்சுட்டு இருக்காங்க. நீங்க வேணும்னா உங்க வீட்டு புள்ளைங்களுக்கு வாட்ச்சு, ஸ்டோரி புக், துப்பாக்கி, பலூன், யானை பொம்மை, குதிரை பொம்மை, கார் இப்படி ஏதாவது ஒண்ணு வாங்கி குடுங்க.

 சரி எல்லாரும் வாங்க, கொஞ்ச நேரம் ரங்கராட்டினம் சுத்தலாம். மயிலாட்டம், ஒயிலாட்டம்ன்னு வேடிக்கை பாக்கலாம். அங்க என்ன கூட்டம், அட, கபடி விளையாட்டு நடக்குது. கபடி, கபடி, கபடி..... ஹஹா.... கொஞ்ச நேரம் இங்க நின்னுட்டு அடுத்து சறுக்கு மரம் ஏறுரத பாக்க போகலாம். இல்லனா சின்ன புள்ளைங்களுக்கு முறுக்கு கடித்தல் போட்டியும், பலூன் உடைத்தல் போட்டியும் நடக்குது, அங்க போகலாம். என்னது, பாம்பு படமெடுத்து ஆடுறத பாக்க போகணுமா, ஹையய்யோ நான் வரல, எனக்கு பயம். நீங்க போயிட்டு வாங்க...

 ஹோய்.... அங்க பாருங்க, வான வேடிக்கை.... ஹைய் செமையா இருக்குல. இந்த சரவடி போடும் போது மட்டும் கொஞ்சம் காத பொத்திக்கணும். டம், டமால், டுமீல்... வீட்டுக்கு ஒரு துப்பாக்கியும் ரோல் பட்டாசும் வாங்கிட்டு போகணும். எல்லாரையும் ஹான்ட்ஸ் அப் சொல்லி சுட்டு சுட்டு விளையாடணும்...

 சரி, சரி, சாமி பல்லக்குல ஏறியாச்சு. எல்லாரும் கன்னத்துல போட்டுட்டு பக்தி பரவசத்தோட கும்பிட்டுக்கோங்க... எனக்கு உங்களுக்கு எல்லாம் சுத்தி காட்டின டயர்ட்... ரெஸ்ட் எடுக்க போறேன், வரட்டா....