Monday 28 September 2015

பானிப்பூரியும் மசால் பூரியும்



சாயங்காலம். மணி ஆறு பத்து. நான் பாட்டுக்கு பேஸ்புக்ல குரூப் மெஸ்சேஜ் போட்டுட்டு அப்படியே ராஜா ராணி படத்தை பாத்துட்டு இருந்தேன்.

திடீர்னு ஹோய்ன்னு ஒரு குரல். அதுவும் என் ரொம்ப பக்கத்துல. பட்டுன்னு ஒரு நிமிஷம் இதயத்துடிப்பு நின்னுடுச்சு. யார்ரா அது நம்ம பெட் ரூமுக்குள்ள நம்ம பக்கத்துலன்னு. பாத்தா பக்கத்து வீட்டுப் பொண்ணு. இவ எப்ப என் ரூம் கதவ தொறந்தா, எப்ப பக்கத்துல வந்தான்னு ஒண்ணுமே கவனிக்காம தேமேன்னு படத்தப் பாத்துட்டு இருந்துருக்கேன்னா பாத்துக்கோங்களேன்.

எங்கயாவது வெளில போவோமான்னு கேட்டா. இல்ல, இருட்ட ஆரம்பிச்சிடுச்சு. இனி வெளில போனா வீட்ல பாட்டி திட்டுவாங்கன்னு சொன்னேன். பாட்டி எங்கயோ போன மாதிரி இருந்துச்சே, இப்ப எல்லாம் வர மாட்டாங்கன்னு சொன்னா. அடப் பாவிகளா, என்னை விட பாட்டிய நீங்க அதிகமா வாட்ச் பண்ணுவீங்க போலயேன்னு நினச்சுட்டு, நான் அப்பா கிட்ட பெர்மிசன் கேக்கணும்னேன். என்ன நினச்சாளோ, சரி, நான் போயிட்டு வரேன்னு போய்ட்டா.

அவ பாட்டுக்கு சொல்லிட்டு போய்ட்டா. இப்ப என் மனசுக்குள்ள ஒரு ஆசை. வீட்டை விட்டு இப்படி ராத்திரி நேரம் வெளில கிளம்பி ரொம்ப நாள் ஆகிடுச்சே, போய் தான் பாப்போமான்னு. நந்து வீட்டுக்கு போன் அடிச்சேன், “அடியே வெளில போறேன், வரியா”ன்னு கேட்டு.

அடுத்த பத்தாவது நிமிசத்துல நந்துவும், அவ ப்ரெண்ட் முருகேசும் என் வீட்ல ஆஜர். இந்த கார் சாவி எங்கன்னு தெரியலயேன்னு நான் சொல்ல, அவ ஓடிப் போய் பாட்டி ஒளிச்சு வச்சிருந்த கார் சாவிய எடுத்துட்டு வந்துட்டா. வெளில போறோம், எதுக்கும் செலவுக்கு கொஞ்சம் காசு எடுத்து வைப்போம்னு இருநூறு ரூபாய பேக்ல இருந்து எடுத்து யார் கிட்டயோ குடுத்தேன்.

அப்புறம் மடமடன்னு கால்ல பேன்ட்-எய்ட் சுத்தி, ஒரு சுடிதார எடுத்து போட்டுட்டு ஆறரை மணிக்கு கிளம்பிட்டேன். வாக்கர் வச்சு, வாசலுக்கு வந்து, அங்க இருந்து படி இறங்கி, கார் செட்ல போய் கார எடுத்துட்டு வெளில வந்தோம்.

நல்ல மழை பெஞ்சு, அப்பவே கும்மிருட்டு பரவ ஆரம்பிச்சிடுச்சு. சரி, எங்கப் போகலாம்னு யோசிச்சா ஒரு ஐடியாவும் தெரியல. நந்து மெதுவா பானிபூரி சாப்பிடப் போவோமா அக்கான்னு கேட்டா. அதுவும் சரி தான், கடைசியா அத சாப்ட்டு ஒரு வாரம் ஆகிடுச்சுன்னு முடிவெடுத்து, மெயின் ரோட்டுல போனா என்ன த்ரில் இருக்கு, நாம ஊர் காட்டுக்குள்ளோட வண்டிய எடுத்துட்டு போவோம்னு முடிவு பண்ணி தெருவுக்குள்ள வண்டிய விட்டேன்.

வழக்கமா நான் கொக்கு, மைனா, காக்கா, வாத்து எல்லாம் பாக்கப் போற வழி தான். ஆனாலும் இருட்டா இருந்ததால அந்த குளக்கரையையும், வயக்காட்டையும் கொஞ்சம் வேகமாவே கடந்துப் போனேன். எதிர்ல வர்ற வண்டி எல்லாம் அவ்வளவு பாஸ்ட்டா வருது. கொஞ்சம் பாதைல இருந்து விலகினாலும் கடக்காலுக்குள்ள வண்டியோட விழ வேண்டியது தான். ஆனாலும் எப்படியோ வேகவேகமா எல்லாத்தையும் கடந்து சிட்டிக்குள்ள நுழைஞ்சு, பானிப்பூரி விக்குற வண்டிகிட்ட கொண்டு போய் காரை நிறுத்தினேன்.

சரி, காசு எங்கன்னு தேடினா காச காணோம். வீட்ல வச்சு யார் கிட்டயோ குடுத்தேனேன்னு ஒரே யோசனையா போச்சு. நந்துகிட்ட ஏய், காச உன்கிட்ட தான குடுத்தேன்னேன். அவ, நீ எங்க என்கிட்ட குடுத்த, நான் சாவி எடுக்கல போனேன்னா. முருகேசு, என்கிட்ட குடுக்கலன்னு படபடன்னு தலையாட்டினான். எப்பவுமே கார் டேஷ் போர்ட்ல ஐநூறு ரூபா எமர்ஜென்சி வச்சிருப்பேன். காசு எங்க போச்சுன்னு குழம்பிட்டே சரி, அந்த ஐநூறு ரூபாய வச்சு அட்ஜஸ்ட் பண்ண வேண்டியது தான்னு குழப்பத்தோடவே கார விட்டு இறங்கினேன். அந்த பய முருகேசு கலகலன்னு சிரிக்கான்.

என்னலேன்னு கேட்டா, காச என்கிட்ட தான் குடுத்த, எப்படியும் நீ மறந்துருவ, அதான் உன்னை டெஸ்ட் பண்ணினேன்ங்குறான் கொரங்கு. கிர்ர்ர்ர்.... காச வெடுக்குன்னு அவன் கைல இருந்து பிடிங்கிட்டு ஒரு முறை முறைச்சேன். அவன் அசராம வெவேவேங்குறான். இந்த பயல என்ன பண்ண. என்ன சொன்னாலும் நமக்கு தான் பல்ப் குடுப்பான். சரி மன்னிச்சு விட்ருவோம்னு நினச்சு மன்னிச்சு விட்டுட்டேன்.

எனக்கு ரெண்டு ப்ளேட் மசாலா பூரி, நந்துவுக்கு ஒண்ணு, முருகேசுக்கு ஒண்ணுன்னு ஆர்டர் பண்ணினேன். ஹலோ, அதென்ன உங்களுக்கு மட்டும் ரெண்டு, எனக்கும் வேணும்னு முருகேஷ் அடம் பிடிக்க ஆரம்பிச்சுட்டான். முதல்ல இத தின்னுடா, அப்புறமா வாங்கித் தரேன்னு அவன் தலைல ஒரு குட்டு வச்சு, மசாலாபூரி தின்னு முடிச்சாச்சு. நந்து மெதுவா அக்கா பானிபூரின்னு இழுக்க, சரின்னு ஆளுக்கு ஒரு ப்ளேட் பானிபூரி ஆர்டர் பண்ணி அதையும் காலிப் பண்ணியாச்சு.

எல்லாம் முடிஞ்சு கிளம்பலாம்னு நினச்சா, முருகேஷ் மறுபடியும் மசாலா பூரி வாங்கித் தருவேன்னு சொன்னல, அத வாங்கிக் குடுன்னு அடம் பிடிக்குறான். எனக்கா, ஒரே கோவம். டேய், இந்தா பாரு, வாங்கித் தரத பத்தி ஒண்ணும் பிரச்சனை இல்ல, ஆனா எல்லாத்தையும் திங்கணும், தெரிஞ்சுதான்னு மிரட்டினதும் பய, நீ மட்டும் ரெண்டு ப்ளேட் தின்னல, சின்னப் புள்ளைக்கு வாங்கித் தராம ஏமாத்துறன்னு பொசுக்குன்னு கூட்டத்துல வச்சு மானத்த வாங்கிட்டான். சரி, சரின்னு அவனுக்கு இன்னொரு ப்ளேட் ஆர்டர் பண்ணினேன். ரெண்டு வாய் எடுத்து தின்னவன், எனக்கு போதும் இந்தான்னு என்கிட்ட நீட்டிட்டான்.

எனக்கு அத வாங்கி தின்ன ஆசை தான், ஆனாலும் மூணு ப்ளேட் மசாலா பூரி தின்னான்னு யார் கிட்டயாவது இவன் போட்டுக் குடுத்துட்டா மானம் மரியாத எல்லாம் போயிடுமேன்னு கொஞ்சம் யோசிச்சேன். அப்புறம், அட, இதெல்லாம் நமக்கு புதுசா என்னன்னு மானம் மரியாதைய எல்லாம் தூக்கி ஓரமா வச்சுட்டு மசாலா பூரிய ஒரு பிடி பிடிச்சேன். நந்து அக்கா எனக்கு சாக்லேட் வேணும்னு அடம்பிடிக்க, அதையும் வாங்கிக் குடுத்து வண்டிய ஸ்டார்ட் பண்ணினேன்.

அப்ப பாத்து கோவில் யானை ஒண்ணு க்ராஸ் ஆச்சு. ஹை யான யானைன்னு நந்து குதிக்க ஆரம்பிச்சுட்டா. ஆமா, இவ பெரிய அஞ்சலி பாப்பா, யானைய கண்டதும் சீன் போடுறான்னு முருகேசு அவள நக்கல் அடிக்க, போல, நான் யானைய போய் தொடப்போறேன்னு டக்குன்னு கார் கதவ தொறந்துட்டு ஓட ஆரம்பிச்சுட்டா.

ஏய், ஏய், நந்துன்னு நான் உக்காந்துட்டே கத்துறேன். முருகேசு எங்கன்னு பாத்தா பயத்துல கோழி குஞ்சு மாதிரி பதுங்கி போய் கிடக்கான் பின்னால உள்ள சீட்ல. ஹஹா... இந்தாடி, காசு குடுன்னு மிச்சம் இருந்த ஒரே அஞ்சு ரூபாயையும் அவ கிட்ட நீட்ட, ஓடிட்டு இருந்தவ அப்படியே திரும்பி வந்து காச பிடிங்கிட்டு மறுபடியும் யானை கிட்ட ஓடினா.

அப்புறமா, கொஞ்ச நேரம் யானைய தடவி பாத்து, அது துதிக்கைய எடுத்து அவ தலைல வைக்க, பிள்ளைக்கு சந்தோசம் தாங்கல. யானை அப்படியே நடந்து போய்ட்டே இருக்க, இவ திரும்பி திரும்பி பாத்து அதுக்கு டாட்டா காட்டிகிட்டே வந்தா.

இப்ப மணி ஏழரை. கும் இருட்டு. அப்படியே மெயின் ரோடு பிடிச்சு போனா பயம் இல்லாம வீடு போய் சேர்ந்துடலாம். ஆனாலும் என்னவோ ஒரு அசாத்திய துணிச்சல் மனசுக்குள்ள. மறுபடியும் வந்த வழியே போனா என்னன்னு. ரைட்டு, முடிவு எடுத்தாச்சு. இனி மாறக் கூடாது.

அந்த வழி மனுசங்க அதிகமா போகாத வழி. ஒரு சின்ன கார் போற அளவு தான் இடம் இருக்கும். எதுத்தாப்புல ஒரு வண்டி வந்துச்சுனாலே க்ராஸ் பண்ணி வர ரொம்ப கஷ்டம். இப்படி தான் போன வாரம் ஒருநாள் பகல் நேரத்துலயே ஒரு டூ-வீலர் மேல கொண்டு போய் மோதினேன். ஆனா தப்பு அவர் மேலங்குரதால ஒண்ணுமே சொல்லாம சாரி கேட்டுட்டு போயிருந்தார். இப்ப அங்க தான் போயிட்டு இருக்கேன். ஹெட் லைட் வேற டிம்மா வச்சுட்டு ஆம வேகத்துல தடக் தடக்ன்னு பதைபதைக்க ஓட்டிகிட்டு இருக்கேன். வழில ஆள் நடமாட்டமே இல்ல. வலது பக்கமா இருக்குற வயல்ல தண்ணி சலம்புர சத்தம். என்னடான்னு பாத்தா ரெண்டு நாய்ங்க பட்டுன்னு வண்டி குறுக்க ஓடி வந்துடுச்சு.

பட்டுன்னு பிரேக் அடிச்சு வண்டிய நிறுத்தினா இந்த முருகேசு ஊஊஊ....ன்னு ஊளை போடுறான். டேய், அடங்குடா, நாம இப்ப சுடுகாட்ட க்ராஸ் பண்ணப் போறோம், இரு இரு, பேய் கிட்ட உன்னை புடிச்சு குடுக்குறேன்னு சொன்னதும் பையன் பயத்துல கப்சிப்.

சுடுகாட்டை க்ராஸ் பண்ணும் போது கொஞ்சம் தூரமா உத்துப் பாத்தேன். எங்கயோ ஒரு விளக்கு வெளிச்சத்துல என்னவோ அசைஞ்ச மாதிரி இருந்துச்சு. ஒரு வேளை பேயா இருக்குமோ? அடி ஆத்தி.... வேணாம் காயு, பேய் எல்லாம் உனக்கு பிரெண்ட் தான், ஆனா இந்த நேரத்துல உனக்கு அந்த பிரெண்ட்ஷிப் தேவையான்னு எனக்கு நானே கேள்விக் கேட்டுகிட்டேன். வேணாம், வேணாம், எதுக்கும் நாளைக்கு காலைல வந்து பேய்க்கு ஹாய் சொல்லலாம்னு அப்படியே பார்வைய பாதைக்கு திருப்பி பொம்ம மாதிரி ஸ்டியரிங்க பிடிக்க ஆரம்பிச்சுட்டேன்.

அடுத்து வந்தது குளம். இந்த பக்கம் குளம். அந்த பக்கம் வயல். அதுவும் அதள பாதாளத்துல இருக்கு. இருக்குறதுலயே அது தான் குறுகலான பாதை. ஒரு நிமிசப் பயணம். அத தாண்டிட்டேன்னா அப்புறம் ஊருக்குள்ள நுழஞ்சிடலாம். திடீர்னு முருகேசு அக்கா, வேகமா போக்கான்னான். அடேய், இருடா, நானே பயத்துல தவந்துட்டு இருக்கேன், இன்னும் கொஞ்சம் தான், தாண்டிடலாம்னு சொல்லிட்டு இருக்கும் போதே, நந்து ஹாஹான்னு சிரிக்க ஆரம்பிச்சுட்டா.

என்னடி, பேய் மாதிரி சிரிக்குறன்னு நான் கேட்டதும், வேகமா போனா, அப்படியே மேல போய்டலாம்க்கா. அங்க எல்லாம் நமக்கு ப்ரீ டிக்கெட். ப்ரீயோ ப்ரீன்னு மறுபடியும் சிரிக்குறா. வெளில இந்த சில்வண்டுங்க வேற கர்ட் கர்ட்ன்னு சத்தம் போடுதுங்க. அவ்வ்வ்வ், தெரியாம வந்துட்டோமோ, சரி, இன்னும் பத்தடி தானன்னு யோசிச்சுட்டு இருக்குறப்பவே எதுத்தாப்புல ஒரு ஆட்டோ. அய்யயோ, இப்ப என்ன பண்றதுன்னு வண்டிய அப்படியே நிறுத்திட்டேன். அப்புறம் ஆட்டோக்காரர் என்ன நினச்சாரோ, அவர் வண்டிய ரிவேர்ஸ் எடுக்க, நான் பாட்டுக்கு அந்த இடத்த கிராஸ் பண்ணி வந்துட்டேன்.

வீட்டுக்கு வந்ததும் பாட்டி, எங்க போய் தொலைஞ்சீங்கன்னு கத்துனாங்க. அக்காவோட பாய் ப்ரெண்ட பாத்துட்டு வரோம் பாட்டின்னு நந்து சொன்னா. ஆஹா, இது நல்ல ஐடியாவா இருக்கே. பிற்காலத்துல ஒரு நாள் உதவும்னு மனசுக்குள்ள நினைச்சுகிட்டேன்.

பை நந்து, பை முருகேஷ்ன்னு சொல்லிட்டே ரூமுக்குள்ள வந்து கதவ அடச்சுட்டேன். ஒரு பொட்டப்புள்ள இப்படியா வீட்டுக்கு அடங்காம திரியுறதுன்னு பாட்டி குரல் கொஞ்ச நேரம் கேட்டுட்டு இருந்துச்சு.


நமக்கு எதுக்கு அதெல்லாம்.... கொர்ர்ர்ர்....


.

Thursday 24 September 2015

இதுவும் தப்பில்லை - சுய இன்பம் ஒரு குற்றமல்ல




ஒரு பொண்ணோட அந்தரங்கமான விசயங்கள பத்தி பேசணும்னு நினச்சாலே அதெல்லாம் ரொம்பப் பெரிய தப்புன்னு கூச்சல் போடுற சமூகம் நம்மோடது. இந்த சூழ்நிலைல நான் ரொம்ப நாளாவே நான் பேசணும்னு நினைக்குற ஒரு தலைப்பு இது. சுய இன்பம் பற்றினது. இத வெளிப்படையா பேச இன்னும் இந்த சமூகம் ஒத்துக்குதான்னு தெரியல. ஆனா, அத பத்தி பேசிடலாம்னு இப்ப முடிவு பண்ணிட்டேன்.

அப்ப தான் நான் கல்லூரி முதல் வருடம் சேர்ந்துருந்தேன். கொஞ்ச நாள்லயே அங்க இருக்குற ரெட் ரிப்பன் க்ளப் உறுப்பினரா சேர்ந்தேன். தீவிர உறுப்பினர்கள்ங்குற முறைல எங்களுக்கு பல்கலைக்கழகத்துல வச்சு ஒரு கூட்டம் போட்டாங்க. அந்த கூட்டத்துல ஒரு துண்டு சீட்டு குடுத்தாங்க. பாலியல் உணர்வுகளை கட்டுப்படுத்துறது எப்படின்னும் சுய இன்பம் பாவமல்லன்னும் சொல்லி அதுக்கான விளக்கமும் குடுத்துருந்தாங்க. அந்த வயசுல அத பத்தின எந்த எதிர்பார்ப்பும் இல்ல, தெரிஞ்சுக்கணும்னு ஆவலும் இல்ல, அவசியமும் இல்ல. ஆனா அந்த விஷயம் தப்பில்லன்னு மட்டும் மனசுக்குள்ள பட்டுச்சு.

அதுக்கப்புறமா எனக்கு வந்த சில உடல்நிலை பாதிப்புனால மாதவிடாய் பிரச்சனை நிறையவே வந்துச்சு. வயித்த கிழிக்குற மாதிரியான வலி. அப்படியே கத்திய எடுத்து வயித்த கிழிச்சு போட்டுட்டா என்னன்னு தோணும். மாசக் கணக்குல ரெத்தப்போக்கு நீடிக்கும். நடக்கவே முடியாம தலைசுத்தி படுக்கைலயே விழுந்து கிடப்பேன். அப்படி எனக்கு என்னதான் பிரச்சனைன்னு பாத்தா, எல்லாமே சரியா இருக்குன்னு தான் மருத்துவமனை அறிக்கைகள் காட்டும். கர்ப்பப்பை முதற்கொண்டு சூல்ப்பை வரைக்கும் எல்லாம் சரியா இருக்கும். தைராய்டு அளவுகள பாத்தா அதுவும் பிரச்சனைக்குரியதா இல்ல.

ஆனா மாதவிடாய் ஆரம்பிச்ச ரெண்டாவது நாள் பிரசவ வலி மாதிரியான ஒரு வலி உடம்பு முழுக்க பரவ ஆரம்பிக்கும். சுண்டுவிரல் அளவிலான ஒரு சதைப் பகுதி அறுந்துகிட்டு வெளில வந்தா மட்டும் தான் வலி குறைய ஆரம்பிக்கும். அந்த நான் ரொம்ப பயந்து போயிருந்தேன். இதென்ன கர்ப்பப்பை கிழிச்சு வெளில வருதோன்னு. அப்புறம் தான் என் அம்மா, சித்தி, பாட்டி எல்லாருக்குமே இந்த பிரச்சனை இருக்குறது தெரிய வந்துச்சு. அந்த சதைப் பகுதிய எடுத்து டாக்டர் கிட்ட காமிச்சா அவங்க பிரசவம் ஆனவங்களுக்கு தான இப்படி வரும், உனக்கு ஏன் இப்படி வருதுன்னு என் கிட்டயே திருப்பி கேப்பாங்க. அவங்க தான் இன்னொரு டாக்டர போய் பார்க்க சொன்னாங்க.

அவர் ஸ்கேன் எல்லாம் எடுத்து பாத்துட்டு, கர்ப்பபைல கருப்பை உச்சளிப் படலத்தோட (Endometrium) அடர்த்தி அதிகமா இருக்கு, ஹார்மோன் அளவு கம்மியா இருக்கு, நீ சுய இன்பம் பண்ண மாட்டியான்னு கேட்டாங்க. “இல்ல மாட்டேன், எனக்கு அப்படினா என்னன்னு கூட சரியா தெரியாது, அதுல இஷ்டமும் இல்ல”ன்னு சொன்னதும், அம்மாவ கூப்ட்டு பொண்ணுக்கு சொல்லிக் குடுங்க, இல்லனா சீக்கிரம் கல்யாணம் பண்ணி வச்சிடுங்கன்னு அறிவுரை சொல்லியிருக்காங்க.

மாதவிடாய் பிரச்சனை வர பல காரணங்கள் இருக்கலாம், அந்த காரணங்கள்ல இதுவும் ஒண்ணாம். அந்தந்த வயசுல அனுபவிக்க வேண்டியத அந்தந்த வயசுல அனுபவிக்கணும்ன்னு இதுக்கு தான் சொல்லியிருக்காங்க போல. குறிப்பிட்ட வயசு வந்ததும் கல்யாணம் பண்ணி வைக்குறதும் இதுக்குதான். ஆனா, எல்லாராலும் நினச்ச மாதிரி கல்யாணமும் பண்ண முடியாது. எல்லோருக்கும் வெற்றிகரமான வாழ்க்கை அமைஞ்சுடுறதும் இல்ல. சரியான வாழ்க்கைக்கு சரியான வாழ்க்கை துணை அவசியம். அப்படி அமையாத பட்சத்துல சுய இன்பம் தப்பில்ல - இது என் அம்மா எனக்கு கத்துக் குடுத்தது.

இத பத்தி நான் எழுதணும்னு முடிவு எடுத்த உடனே இணையத்துல என் மாதிரியான அனுபவம் உள்ளவங்க இருக்காங்களான்னு தேடித் பாத்தேன். ரொக்சனா பென்னெட்ங்குற பெண் இந்த கருப்பை உச்சளிப் படலத்தோட பிரச்சனைனால எவ்வளவு தூரம் பாதிப்புக்கு உள்ளானாங்க, அவங்களால ஏன் இயற்கை உடலுறவு பண்ண முடியாம போச்சு, எதனால அவங்களுக்கு சுய இன்பம் அவசியமாச்சுன்னு சொல்லியிருக்காங்க. ஹார்மோன் சுரப்பு சரியில்லாதவங்க, எதிர்பாலினம் மேல ஈர்ப்பு இல்லாதவங்களுக்கு எல்லாம் இந்த பிரச்சனை சர்வ சாதாரணமா வந்துடுது. அப்படியும் இல்லையா, சில நோய்களுக்கு மருந்து எடுக்கும் போது பக்க விளைவுகளாவும் வந்துடுது.

இந்த இடமகல் கருப்பை அகப்படலம் (endometriosis) வந்துடுச்சுனா, கல்யாணம் ஆகி குழந்தை உள்ள பெண்களா இருந்தா கர்ப்பப்பைய நீக்குறது தான் நிரந்தரத் தீர்வு. கல்யாணம் ஆகாத பெண்களா இருந்தா, அறுவை சிகிச்சை மூலமா இந்த கருப்பை உச்சளிப் படலத்த நீக்குறாங்க. அப்படி பண்ணினா ரெண்டுல இருந்து மூணு வருஷம் வரைக்கும் இந்த பிரச்சனை திரும்பி வராம இருக்கும்னு மருத்துவர்கள் சொல்றாங்க. ஆனாலும் அதுக்கு எந்த உத்தரவாதமும் குடுக்க முடியாது. இப்படி வலியும் வேதனையுமா அவஸ்தைப்படுறதுக்கு பேசாம சுய இன்பம் பண்ணிட்டு போய்டலாம். ஓரளவு இந்த பிரச்சனைல இருந்து தப்பிச்சிரவும் செய்யலாம்.
.................................................

சரி, முன்னப் பாத்தது உடல் ரீதியான பிரச்சனை. இதுல மனரீதியான பிரச்சனைகள் என்னென்ன வரும்?

பாலியல் உணர்வுங்குறது எல்லாராலும் சுலபமா கடந்து வர முடியாத விஷயம். இந்த உணர்வுகள் இல்லாத உயிரினமே கிடையாதுங்குறப்ப இத பத்தி பேச மட்டும் ஏன் தயங்கணும்னு தான் எனக்குப் புரியல. ஆணா இருந்தாலும் சரி பெண்ணா இருந்தாலும் சரி, இந்த உணர்வு இயற்கையானது. அடுத்தவங்கள குறை சொல்லிட்டு இருக்குறவங்க தனக்கும் இந்த உணர்ச்சிகள் இருக்கும், அதையும் தான் பூர்த்தி செய்துட்டுதான் இருக்கோம்ங்குறத ஏனோ சுலபமா மறந்துடுறாங்க. சுய இன்பம்ங்குற வார்த்தைய கேட்டாலே முகம் சுளிக்குற எல்லாருக்குமே கலவி தேவையா தான் இருக்கு. வித்யாசம் என்னன்னா, அவங்களுக்கு ஒண்ணு அவங்களோட பாலியல் ஆசை நிறைவேற வழி இருக்கு, அதனால அத பூர்த்தி செய்ய முடியாதவங்கள பாத்தா என்னமோ தீண்டத்தகாதவங்கள பாக்குற மாதிரி தோணுறது, இன்னொரு வகை மனுசங்களுக்கும் இந்த பாலியல் ஆசைகள நிறைவேற்ற வழி இருந்திருக்காது, அதனால அடுத்தவங்கள திருத்துறேன்ங்குற பெயர்ல அவங்களே வார்த்தை பலாத்காரம் செய்துகிடுவாங்க. ஒரு பொதுவான விசயத்த, அதாவது நாம பண்ற விசயத்த அடுத்தவங்க பண்ணினா ஐயோ அம்மா, தப்புன்னு குதிக்குரத முதல்ல நிறுத்தினாலே போதும்.

ஆண்கள பொருத்தவரைக்கும் இந்த உணர்ச்சிகள கட்டுப்படுத்த முடியாதவங்க தான் தீவிர விளிம்புநிலைக்கு போய் அஞ்சு வயசு பொண்ணுன்னு கூட பாக்காம தூக்கிட்டு போய் கற்பழிக்குறான். ஐம்பது வயசு பெரியம்மாவையும் நாசம் பண்றான். நாம இங்க உக்காந்து அவனோட அத வெட்டணும், இத வெட்டணும், அவன் வீட்டு பொம்பளைங்கள இப்படி செய்தா தான் அவனுக்கு புத்தி வரும்னு நம்ம மனசுல இருக்குற வக்கிரங்கள கொட்டிகிட்டு இருக்கோம். யாராவது ஒருத்தர் அவன் இப்படி பண்ணக் காரணம் என்ன, அவன் மனசுல படிஞ்சு இருக்குற அழுக்க நீக்க நாம என்ன செய்துருக்கோம்ன்னு யோசிச்சிருக்காங்களா? சரி, அதெல்லாம் விடுங்க, கற்பழிக்கப்படுற பொண்ணையும் சேர்த்து இன்னும் இன்னும் கற்பழித்தவன் வீட்டு பெண்களும் வார்த்தை கற்பழிப்பு செய்யப்படுவாங்க நம்ம சமூகத்துல. இதெல்லாம் ரொம்ப தெளிவா கூச்சமே இல்லாம செய்வோம், ஆனா இந்த மாதிரியான பாலியல் உணர்வு தப்பு இல்லன்னும் அத எப்படி கட்டுப்படுத்துறதுன்னும் சொல்லிக் குடுக்க மட்டும் தயங்குவோம். கேட்டா அதப் பத்தி பேசினா அசிங்கமாம், ஆபாசமாம். சொல்லிக் குடுக்கலாம் தானே நம்ம வீட்டு பசங்களுக்கு, இந்த பாலியல் உணர்வு இயற்கையானது. உன்னால கட்டுப்படுத்த முடியலனா சுய இன்பம் பண்ணிட்டுப் போ, எந்த பொண்ணையும் நாசம் பண்ணாதன்னு.

இந்த விசயத்த இன்னும் கொஞ்சம் ஆழமா போய் உணர்வு ரீதியா பாத்தோம்னா, ஆண்களை போல தான் பெண்களுக்கும் இந்த பாலியல் ஆசைகள் இருக்கு. சில நேரத்துல எதோ ஒரு காட்சி, இல்லனா நினைவு மனசுக்குள்ள பாலியல் ஆசைய தூண்டி விடும். அத அடக்கி வச்சுட்டு அடுத்த வேலைய பாத்துட்டு இருந்தா, அத பத்தின நியாபகத்துலயே சகஜமா இருக்க முடியாது. பதற்றம், பயம், கோபம் விரக்தி எல்லாம் இதுனாலேயும் தான் வருது. ஆண்கள் எப்படி அடக்க முடியாத காமத்த கற்பழிப்புல காட்டுறாங்களோ, அப்படி பெண்கள் தங்களோட பாலியல் ஆசை நிறைவேறாத தருணங்கள கோபத்துல காட்டுறாங்க. எதைப் பாத்தாலும் கோபம், என்ன செய்தாலும் கோபம். இதனால அவங்கள சார்ந்து உள்ளவங்க தான் பாதிக்கப்படுறாங்க. இந்த மாதிரியான ஆசைகள உள்ளயே வச்சுட்டு கோபமும் பதற்றமுமா திரியுறது பதிலா அடுத்தவங்கள பாதிக்காத, அடிமையாகாத, எல்லை மீறாத மாற்று வழி தப்பே இல்ல. சுய இன்பம் பண்ணி முடிச்சுட்டு அடுத்த வேலைய பாக்க போய்ட்டே இருக்கலாம்.

ரொம்ப சமீபத்துல முகநூல்ல ஒரு சண்டைய பாத்தேன். ஒரு ஆணும் பெண்ணும் அசிங்க அசிங்கமா திட்டி மாத்தி மாத்தி நிலைத் தகவல் போட்டுகிட்டே இருந்தாங்க. பாக்குறதுக்கே அத்தன அருவெறுப்பு. ஒருத்தர் மேல இன்னொருத்தர் சேறை வாரி இறைஞ்சதோட இல்லாம, அவங்கவங்க குடும்பத்து பெண்களையும் வார்த்தை கற்பழிப்பு செய்துட்டு இருந்தாங்க. இத எல்லாம் வேடிக்கைப் பாத்தவங்க அதுக்கும் மேல. அந்த ஆள தூண்டி விட கொஞ்ச பேர், இந்த பொண்ணை தூண்டி விட கொஞ்ச பேர். அநாகரீக வார்த்தைகளை பயன்படுத்ததன்னு அந்த பொண்ணுக்கு சொல்ல யாரும் இல்ல. எல்லாருமே விடாதீங்க, நாங்க இருக்கோம்ன்னு உசுப்பேத்திட்டு இருந்தாங்க. அதுவே அந்த பொண்ணுக்கு பெரிய பிரச்சனைன்னு வந்தா ஆளாளுக்கு ஓடி ஒளிஞ்சு, தனியா அந்த பக்கம் போய் இன்னொரு பொண்ணை பத்தி பேசிட்டு இருப்பாங்கங்குறது தான் நிதர்சனமான உண்மை. கெட்ட கெட்ட வார்த்தை ப்ரயோகத்துக்கு வக்காலத்து வாங்குறவங்க, உணர்வுப்பூர்வமா விளக்கம் குடுக்க நினச்சா ஆபாசம்னு சொல்லுவாங்க.

இப்படி இந்த நிறைவேறாத பாலியல் ஆசைகளால ஆண்கள நம்பி ஏமாந்து போற பெண்கள் எத்தனையோ பேர். ஆண்களும் சரி, பெண்களும் சரி, மாறிப் போன காலச்சூழ்நிலைகளுக்கு ஏற்ப, தங்களோட தேவைகள பூர்த்தி செய்ய இணையத்த பயன்படுத்த ஆரம்பிச்சுட்டாங்க. அதேநேரம் இன்றைய சூழ்நிலைல இந்த மாதிரி வேறு ஆண்களோட உறவு வைக்குற பெண்கள் அவங்களுக்கே தெரியாம பல விதத்துல பலருக்கும் பயன்படுறாங்க. அலைபேசி மூலமா நம்பிக்கையான ஒருத்தன் கூட தான் பாலியல் பேச்சுகள் வச்சுக்குறோம்ன்னு நினச்சா அவன் அந்த பக்கம் சத்தமா போட்டு அவ பேசிட்டு இருக்குறத நண்பர்கள் கூட உக்காந்து கூட்டமா கேட்டுட்டு இருப்பான். அத பதிவு செய்து இணையத்துல உலவ விடுவான். அதுக்கப்புறம் அந்த பெண்ணோட நிலைய நினைச்சுக் கூட பாக்க முடியாது. அத்தனை பேரும் அவங்கவங்க நிலை மறந்து அந்த பெண் மட்டுமே தப்பு செய்தவள்ன்னு ஆளாளுக்கு பேச ஆரம்பிச்சிடுவாங்க. வார்த்தை பலாத்காரம் செய்ய ஆரம்பிச்சிடுவாங்க. கேலிகளும் கிண்டல்களுக்கும் நக்கல்களுக்கும் குறைவே இருக்காது. அதே மாதிரி தான் இணையத்துல முகநூல், ஜி-டாக் வகையறாக்களும். உள்டப்பியில பதிவு செய்யப்படுற வார்த்தை பிரயோகங்கள் அப்படி அப்படியே எத்தனை பேருக்கு வெட்டி ஒட்டப்படும்ன்னு சொல்ல முடியாது. இன்னும் விதவிதமான பிரச்சனைகள சந்திச்சவங்க எத்தனையோ பேரு.

எல்லாம் சரியா போயிட்டு இருக்குற வரைக்கும் தப்பில்ல, ஆனா பிரச்சனைன்னு வந்துட்டா பதிவு செய்யப்பட்ட பாலியல் பேச்சுகளும், பாலியல் உரையாடல்களும் (sex chatting) மிரட்டுறதுக்கு பயன்படும். பெண்கள் நிம்மதிய, வாழ்க்கைய தொலைக்குறது இந்த மாதிரி நேரங்கள்ல தான். ஒண்ணு அந்த பெண் விருப்பமே இல்லாம அவங்க மிரட்டலுக்கு பணிஞ்சு போகணும், இல்லனா தங்களோட வாழ்க்கைய முடிச்சுக்கணும். குடும்பத்த எதிர்க்கொள்ள முடியாம, மான அவமானம் தாங்க முடியாம இந்த மிரட்டல் தற்கொலைல வந்து முடிய வேண்டியதா இருக்கு.

உனக்கெதுக்கு இந்த அக்கறை, யாருக்குமே இல்லாத அக்கறைன்னு கேள்விகள் கேட்டா, பெண் என்பவள் வெறும் போதை பொருள் இல்ல, எல்லாரையும் போல் சிந்திக்கவும், சுதந்திரமா இருக்கவும் அவளுக்கும் உரிமை உண்டு. அந்த உரிமைய புரிய வச்சுட்டாலே குற்றவுணர்ச்சில இருந்து அவ தப்பிச்சிடுவா. அதுவும் இல்லாம கல்யாணம் ஆகி கணவனை இழந்தவங்க, கணவனை பிரிஞ்சி இருக்குறவங்க, சந்தர்ப்ப சூழ்நிலையான கல்யாணம் ஆகாதவங்க, குடும்ப பிரச்சனைகள்ல ரொம்ப பெரிய மன அழுத்தத்துல இருக்குற பெண்களுக்கு இது பெரிய ஆறுதல். உடனே எல்லா பெண்களும் சுய இன்பம் பண்ணனும்னு சொல்றீங்க, அதெப்படி நீங்க சொல்லலாம்னு சண்டைக்கு வந்துடாதீங்க, நான் எல்லாரும் கண்டிப்பா சுய இன்பம் பண்ணனும்னு சொல்லவே இல்ல. அதே நேரம், அப்படி பண்ண வேண்டிய கட்டாயம் வந்தா தப்பில்லன்னு தான் சொல்ல வரேன். அதென்னவோ கொலை குற்றம் பண்ற மாதிரி கூனி குறுகி போக வேண்டிய அவசியம் இல்லன்னு தான் திரும்ப திரும்ப சொல்ல வரேன்.

இப்போதைக்கு விடைபெறுறேன்....

....................................................................................

இந்த கட்டுரை என்னோட சொந்தப் படைப்பு. இந்த படைப்பு தமிழ் வலைப்பதிவர்கள் சந்திப்பு திருவிழா- 215- புதுக்கோட்டை மற்றும் தமிழ்நாடு அரசு தமிழ் இணையக் கல்விக் கழகம் நடத்தும் மின் தமிழ் இலக்கியப் போட்டிகள் – 215” வகை- (3) பெண்கள் முன்னேற்றம் கட்டுரைப் போட்டிக்காக எழுதப்பட்டது.  இது இதுக்கு முன் வெளியான படைப்பு இல்ல, முடிவு வெளிவர வரைக்கும் வேற இதழ்கள்ல வெளிவராதுன்னு உறுதி அளிக்கிறேன். 

நன்றி
படம்: இணையம் (www.google.com) 


Saturday 12 September 2015

யாதுமாகியவன்


அந்தப் பாடல்
என் காதில் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது...
பகலில் கூட வானத்தை
வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்...

விம்மி முட்டி வெளிவரத் தயங்கிய கண்ணீரை
அணையுடைத்து வெளிக்கொண்டு வந்தவன்
ஒரு நாள் இதே வானத்தின் சாட்சியாய்
என் கைப்பற்றிக் கிடந்தான்...

அது ஒரு மொட்டை மாடியென்று
உங்களுக்கு சொல்லத் தேவையில்லை...
நிலாவெளிச்சத்தில் எங்களை
ரசித்துக் கொண்டிருந்த அந்த தென்னங்கீற்றுகள்
ஏற்கனவே உங்களுக்கு சாட்சி சொல்லியிருக்கும்...

யாரவன் உனக்கு?
இப்படி திடீரென ஒரு கேள்வியை
உங்களிடமிருந்து எதிர்க்கொண்டால்
நிச்சயம் திணறித் தான் போவேன் நான்...

யாதுமாகியவன் என்று ஒற்றை வார்த்தையில்
முடித்துக் கொண்டால்
புரிந்து கொள்வீர்களா என்ற ஐயம் எனக்கு...

ஏனென்றால் ஒரு தெய்வீக காதலனை நீங்கள்
உங்கள் கற்பனையில்
உருவகித்துவிடக் கூடாது பாருங்கள்...

இவன் என் சண்டைக்காரன்.
முணுக்கென்று கோபம் கொண்டு
நான் விட்டெரியும் தலையணைகளை
அலட்சியமாய் பிடித்து வெவ்வெவே என்பான்...

எதிர்வீட்டு பெண்களுக்கு கண்ஜாடை காட்டிவிட்டு,
என்னைக் கண்டதும் ஓடி ஒளிந்துக் கொள்வான்.
காது பிடித்து திருகினாலோ
பவ்யமாய் அப்பாவி முகம் காட்டுவான் கிராதகன்.

காட்டுக்கத்தலாய் நான் கத்திக் கொண்டிருக்கும் பொழுது
படக்கென்று ஒற்றை முத்தத்தால்
என்னை ஊமையாக்கிவிடும் பாதகன்...

என் பிசாசு, எருமை மாடு, கொரங்கு, ஹிப்போபொட்டாமஸ்...
இன்னும் இன்னும் நிறைய...

மற்றொரு நாள் இவன் யாரென்று கேட்டால்
என் பிள்ளை என்பேன்.
அவனோ என்னை குழந்தையாக்கி
தாலாட்டு பாடிக் கொண்டிருப்பான்...

இதோ அந்த பாடல் இன்னும் தொடர்ந்துக் கொண்டேதானிருக்கிறது...
"நான் உனை பார்த்தது பூர்வ ஜென்ம பந்தம்
நீண்ட நாள் நினைவிலே வாழுமிந்த சொந்தம்...



.

Thursday 3 September 2015

அந்த நாள் நியாபகம் வந்ததே நெஞ்சிலே



நான் கே.ஜி படிச்சிட்டு இருந்த நேரம். “ஆலமரமே ஆலமரமே பச்சை கண்ணாடி”ன்னு ஒரு பாட்டு, நாலு மிஸ் கோரசா பாடுவாங்க, பிள்ளைங்க ஆலமரம், வேப்பமரம், தென்னை மரம்ன்னு ஒவ்வொரு மரமா வேஷம் போட்டுட்டு நிக்கணும். பாட்டோட வேகம் போக போக, சிட்டுக்குருவிக்கு இடம் குடுக்காத மரம் எல்லாம் அடிக்குற புயல்ல ஒவ்வொண்ணா சாஞ்சுடும். இதுல எனக்கு சிட்டுக் குருவி வேஷம். கிட்டத்தட்ட ஹீரோயின் நாம தான். சந்தோசமா ரிகர்சல் எல்லாம் பண்ணி, ஸ்கூல் டே-யும் வந்தாச்சு.



டான்ஸ்க்குனே அம்மா ப்ரில் வச்ச ஒரு இளநீல ட்ரெஸ் எடுத்து தந்துருந்தா. தலைல வைக்க கிரீடம் ஒரு வாரத்துக்கு முன்னாலயே தம்பியும், நானும், அம்மாவுமா கார்ட் போர்ட்ட வெட்டி, அதுல ஏகப்பட்ட ஜிகினா எல்லாம் தூவி, ரெடி பண்ணி வச்சிருந்தோம்.

வீட்ல இருந்தே வேஷம் போட்டுட்டு கிளம்பி ஸ்கூல் போனா, மிஸ் ஓடி வந்து, வா, வா, கொஞ்சம் மேக் அப் போடுவோம்னு கூப்ட்டு வச்சு, கன்னத்துல ரோஸ் பவுடர் பூசி விட்டாங்க. நமக்கு சும்மாவே நம்மள யாராவது தொட்டா பிடிக்காது, அவ்வ்வ்வ்க்க்க்க்ன்னு மூஞ்ச வச்சிகிட்டு எப்படியோ ரோஸ் பவுடர போட விட்டுட்டேன். அடுத்து ரெண்டு அட்டைய தூக்கிட்டு வந்து சிட்டுகுருவிக்கு சிறகு வைப்போம்னு (நான் கேட்டேனா) சொல்லி, கைய தூக்கி கட்டி விட ட்ரை பண்ண, நான் கூச்சத்துல நெளிய ஆரம்பிச்சுட்டேன்.

நமக்கு தான் அழுது பழக்கம் இல்லையே, ச்சீ சீ எனக்கு இது பிடிக்கல மிஸ், குடுங்க, நானே கட்டிக்குறேன்னு சிறகை பறிச்சு எடுக்க, அவங்க விடாப்பிடியா நான் தான் கட்டி விடுவேன்னு அடம்பிடிக்க, அந்த இடமே களேபர பூமியாகிடுச்சு. என் கைல குடுக்கணும்னா குடுங்க, இல்லனா நான் ஸ்டேஜ்க்கு போக மாட்டேன்னு ஒத்தக்கால தரைல தூக்கி அடிச்சு அடம்பிடிக்க ஆரம்பிச்சுட்டேன்.

சரி, எந்தாலயும் போன்னு சொல்லி தண்ணி தொளிச்சு விட்டுட்டாங்க. ஒரு பக்கம் சிறக கைல கட்டியும், இன்னொரு பக்க சிறக தரைல இழுத்துட்டும் போய் ஒரு வழியா அந்த நாடகம் முடிவுக்கு வந்துச்சு. அதுல இருந்து என்னை ஸ்டேஜ் ஏத்தியிருப்பாங்கன்னு நினைக்குறீங்க? நோ சான்ஸ்... நமக்கும் இந்த கூட்டத்துல மேக் அப் போடுறது, ட்ரெஸ் மாத்துறது எல்லாமே அலர்ஜியோ அலர்ஜிங்குறதால அவங்க கூப்பிடாதது பரம சந்தோசமா இருந்துச்சு.

கல்ச்சரல்ஸ்னா தானே இந்த பிரச்சனை எல்லாம், வா, போட்டிகள்ல கலந்துக்கன்னு அங்க கொண்டு போய் நிறுத்துவாங்க. நமக்கு தான் மனப்பாடம் பண்றதுனா வரவே வராத கலையாச்சே, பேச்சுப் போட்டியில எல்லாருக்கும் முன்னால கொண்டு போய் நிறுத்தினதும், படிச்சு வச்சது எல்லாம் மறந்து போய் பேந்த பேந்த முழிச்சுட்டு நிப்பேன். வ, வ, வ-ன்னு வணக்கத்தையே முப்பது தடவ சொல்லுவேன். அவ்வளவு தான் மேட்டர் க்ளோஸ். இனி இந்த பக்கம் எட்டிப் பாப்பேனா?

ஆனா ஒண்ணு, பாட்டு போட்டியில கண்ண மூடிட்டு “ஆயர்பாடி மாளிகையில்” இல்லனா “கற்பூர நாயகியே கனகவல்லி”ன்னு பாடி முடிச்சு, பெருசா கைத்தட்டு எல்லாம் வாங்கியிருக்கேன். பஸ்ட் ப்ரைஸ் எல்லாம் குடுப்பாங்க, நம்புங்க. அதே மாதிரி தான் கட்டுரை எழுதுறதும். விஷயம் என்னன்னு கேட்டுட்டு நானா கொஞ்சம் எக்ஸ்ட்ரா பில்ட் அப் எல்லாம் போட்டு எழுதி வச்சிடுவேன். அநேகமா மூணாவது பரிசு நமக்கு தான்.

இப்படியான ஒரு நாள்ல தான் நான் அப்ப பிப்த் படிச்சுட்டு இருந்தேன். குமரி கலைக் கழகம் (பேரு சரிதானான்னு தெரியல) சார்புல மாவட்ட அளவுல போட்டிகள் நடக்குறதாவும், அதுல கலந்துக்குறவங்கள ஸ்கூல் செலக்ட் பண்ணி அனுப்பும்னும் சொன்னாங்க. எப்படியும் நாம எதுலயும் செலக்ட் ஆகப் போறது இல்ல, வெட்டியா எதுக்கு ஸ்க்ரீனிங்ல கலந்துக்கன்னு நான் எதுவுமே ப்ரிபேர் பண்ணல. ஆனா மிஸ் எல்லாரும் எழுதுங்கன்னு ஒரு பேப்பர கைல தந்து எழுத வச்சிட்டாங்க. இந்திய சுதந்திர இந்தியா-ன்னு தலைப்பு. வளர்ச்சி எல்லாம் இருக்கட்டும், முதல்ல புள்ளைங்கள மனப்பாடம் பண்ண வைக்காம, சுதந்திரமா சிந்திக்க வைங்கன்னு கடுப்புல எழுதி வச்சிருந்தேன்.

அடுத்தநாள் பாத்தா, நான் ஸ்க்ரீனிங் பாஸ் ஆகிட்டேனாம். மிஸ் வந்து இன்னும் ஒரு வாரம் தான் இருக்கு. நல்லா ப்ரிபேர் பண்ணிட்டு போய் எழுது. ஆல் தி பெஸ்ட்ன்னு சொல்லிட்டாங்க.

அய்யயோ முதல் தடவையா ஸ்கூல் விட்டு வெளில போட்டிகள்னு கலந்துக்கப் போறோம், நோட்ஸ் எல்லாம் எடுக்கணுமேன்னு அம்மா கிட்ட வந்து பண்ணின அலம்பல்ல என்னைக் கொண்டு போய் பக்கத்து ஊர்ல ஒருத்தர் கிட்ட விட்டுட்டாங்க. அவர் தான் முடிசூடும் பெருமாள். அவர் தான் அந்த கட்டுரைய ரெடி பண்ணி, என்னை மனப்பாடம் பண்ண வைக்காம, கதையா சொல்லி புரிய வச்சு, முதல் பரிசு வாங்க காரணமா இருந்தவரு. அதுக்கப்புறம் தான், பேச்சுப் போட்டி, கட்டுரை போட்டி, கவிதைப் போட்டி, கதை போட்டி-ன்னு எதா இருந்தாலும் தைரியமா இறங்கி ஒரு கை பாக்க ஆரம்பிச்சேன்.

முடிசூடும் பெருமாள் ஒரு சுதந்திர போராட்ட தியாகி. ஊர்ல அவரோட நிலத்துலயே ஒரு பொது லைப்ரரி கட்டி அவருக்குன்னு வர்ற பென்சன் பணத்துல நிறைய புக்ஸ் வாங்கிப் போடுவார். கல்யாணமே ஆகாம ரொம்ப வருஷம் வாழ்ந்துட்டு, அப்புறமா அவங்கம்மா கட்டாயப்படுத்தினதுக்காக கல்யாணம் பண்ணிகிட்டவர்.

தினமும் பேப்பர் படிக்க, ஊர்ல உள்ள ஆம்பளைங்க எல்லாம் அங்க தான் கூடுவாங்க. நமக்கு சிறுவர் மலர், காமிக்ஸ் புக்ஸ் எல்லாம் படிக்க கிடைக்கும். பிள்ளைங்கள வட்டமா உக்கார வச்சு கதைகள் சொல்லுவார். என்ன தான் ஸ்கூல்ல ராமாயணமும், மகாபாரதமும் கத்துக் குடுத்துருந்தாலும், கண்ணகியையும் கோவலனையும் அறிமுகப்படுத்தினது முடுசூடும் பெருமாள் தான். கூடவே மாதவியோட நடனத்த கண்ண உருட்டி அபிநயமா விவரிப்பார். எல்லாரும் கண்ணகிய கற்புக்கரசின்னு சொன்னா, இவர் மாதவிய உதாரணமா சொல்லுவார். அபிமன்யூவும் பிரகலாதனும் நம்ம ஹீரோவாகி போயிருந்தாங்க.

சுதந்திர தினமும் குடியரசு தினமும் வந்தா போதும், காலைல நாலு மணிக்கே ஊர்ல உள்ள புள்ளைங்கள எல்லாம் அவரே வீடு வீடாப் போய் தட்டி எழுப்பி, லைப்ரரில கூட வச்சு, இந்தியாவோட அருமை பெருமைகள விளக்கி சொல்லி, தேசத் தலைவர்கள எல்லாம் அறிமுகம் செய்து வைப்பார். அப்புறம் பக்தியும் வீரமுமா தேசிய கொடிய ஏத்தி வச்சு, ஒரு சல்யூட் வைப்பார் பாருங்க, அப்படியே சிலிர்க்கும். இந்த தேசியக் கொடிக்குள்ள செம்பருத்தி பூக்கள பிச்சு கட்டி வைக்குறது என் வேலை.

அவர் என்னை எப்பவும் வாய் நிறைய மருமகளே-ன்னு தான் கூப்பிடுவார். ஊருக்குள்ள எங்கயாவது போட்டி நடந்தா என் பெயர அவரே குடுத்துட்டு, கலந்துக்கோ கலந்துக்கோன்னு பின்னால வந்து கெஞ்சுவார். அவரு தொல்லை தாங்காமலே பல போட்டிகள்ல கலந்துகிட்டு ப்ரைஸ் எல்லாம் வாங்கியிருக்கேன்.

ஒரு நாள் திடீர்னு அவர் பையன் வந்து, உன்னை ஏன் எங்க அப்பா மருமகளேன்னு கூப்பிடுறார் தெரியுமா, உன்னை எனக்கு கட்டிக் குடுக்கத் தான். என்னிக்கி இருந்தாலும் நீ தான் எனக்கு பொண்டாட்டின்னு சொல்லிட்டான். அவ்வளவு தான், ஆத்தா மலையேறி, அவன் உச்சி முடிய புடிச்சு உலுக்கி, “போலே உன் சோலிய பாத்துட்டு”ன்னு எட்டி ஒரு மிதி மிதிச்சதோட அங்க போறதையே நிறுத்திட்டேன்.

அவன் கிடக்குறான் லூசுப் பய, நீ வீட்டுக்கு வா, நிறைய கதை சொல்றேன்னு அவர் பின்னால அலைஞ்சும் நான் திரும்பியே பாக்கல. அப்ப தான் எதிர்பாக்காம திடீர்னு ஒரு நாள் ஹார்ட் அட்டாக்ல செத்தும் போய்ட்டார்.

எனக்கு ஸ்டேஜ் ஏறுற தைரியமும், எந்த டாபிக் குடுத்தாலும் சட்டுன்னு பேச, எழுத முடியும்ங்குற நம்பிக்கையும் குடுத்தது முடிசூடும் பெருமாள் மாமா தான். இன்னிக்கி அவர் கட்டிக் குடுத்த லைப்ரரிய அவர் பையன் இடிச்சுட்டு அந்த இடத்துல பலசரக்கு கடை கட்டி வாடகைக்கு விட்டுட்டான். போன தடவ ஊருக்கு போனப்ப பொண்டாட்டி சீதனமா கொண்டு வந்த டாட்டா இண்டிகா-ல ஊர சுத்திட்டு இருந்தான்.


.

Wednesday 2 September 2015

தென்னங்கீற்றுகளின் சாட்சியாக - காயு பேசுறேன்


கவிதை புக் போடணும்னு முடிவெடுத்த உடனே கார்த்திக் கிட்ட போய் பாவமா மூஞ்சை வச்சுகிட்டு, "டே மக்கா, எனக்கு அந்த முன்னுரையோ, அணித்துரையோ என்னமோ ஒண்ணு உண்டுல, அத எழுதி தருவியா"ன்னு கேட்டேன்...

மனுஷன் என்ன மூட்ல இருந்தாரோ, "உனக்கில்லாததா... என்னடி இப்படி கேட்டுட்ட"ன்னு பீல் பண்ணின கையோட, கடகடன்னு அரை மணி நேரத்துல அவரோட பார்ட்ட எழுதி தந்துட்டார். வார்த்தைகளோட விளையாட அவருக்கா தெரியாது...

செல்வா அண்ணா கிட்ட கேட்டேன், அண்ணா சந்தோசமா பொறுமையா என்னோட கவிதைகள படிச்சு எழுதி குடுத்துட்டாங்க. தமிழரசி அக்கா கேக்கவே வேணாம், நம்மள ஒரே செல்லம் கொஞ்சல்ஸ் தான்...

எல்லாரும் எழுதியாச்சு. நான் என்ன எழுதுறது?

பேஸ்புக்லனா எதையாவது கடகடன்னு எழுதி போட்டுடலாம். ஆனா இது புக்கு. கவிதை புக்குக்கு கொஞ்சமாவது கவிதைத்துவமா எழுத வேண்டாமா?

என்ன எழுத, என்ன எழுதன்னு யோசிச்சு யோசிச்சு ஒண்ணும் புரியல. சரி, இதுக்கு ஏதாவது பண்ணணுமேன்னு கார்த்திக் கிட்ட போய் "மக்கா, நான் எழுத வேண்டிய போர்சன் சொல்லித் தாயேன், ப்ளீஸ், ப்ளீஸ், ப்ளீஸ்"ன்னு கெஞ்ச ஆரம்பித்தேன்.

ஆளு கெஞ்சினாலும் மசியல, கொஞ்சினாலும் மசியல, "ஓடிப் போய்டு"ன்னு தொரத்தியே விட்டுட்டார்.

ஆனாலும் விடுற ஆளா நாம.... ஒரு நாள் ராத்திரி முழுக்க உக்காந்து, மனுசன சொரண்டி சொரண்டி, கொஞ்சம் கொஞ்சமா சேகரிச்ச விசயங்கள தான் நீங்க கீழ படிக்கப் போறீங்க...

முழுசா எல்லாத்தையும் முடிவு பண்ணிட்டு அந்த வார்த்தைகள படிச்சா, எனக்கே அவ்வளவு பிடிச்சுப் போச்சு...

என்னை, முழுசா இதான் நான்னு உணரவச்ச வரிகள் அதெல்லாம்....

இதுக்காக கார்த்திக்குக்கு தேங்க்ஸ் எல்லாம் சொல்ல முடியாது. ராட்சசன், எவ்வளவு கெஞ்ச வேண்டியதா போச்சு... கிர்ர்ர்ர்ர்....

சரி, சரி, அப்படி என்ன தான் என் புக்ல எழுதியிருக்கேன்....

இந்தா இதான்......

*******************************************

வண்ணங்கள் நிறைந்த நாட்கள்
----------------------------------------------

எந்த புள்ளியிலிருந்து தொடங்குவது என்றெல்லாம் தெரியவில்லை.. ஆனால் தொடங்கிவிட்டேன். தென்னங்கீற்றுகளின் சாட்சியாக... நான் காயத்ரிதேவி. இப்படி ஒரு பெயரால் உங்களிடம் அடையாளப்பட்டுக் கொண்டவள்..
மரங்கள், அணில்கள், வண்ணத்துப்பூச்சிகள், மீன்கள், கிளிகள், நந்து, தம்பி, தேவதைகளுக்குப் ஆண்பாலாக வாய்த்திருக்கும் அப்பா என்ற என் உலகம் அத்தனையும் பேரன்பால் சூழப்பட்டதென்று நீங்கள் அநேகமாய் அறிந்திருப்பீர்கள். ஆனால் நீங்கள் அறியாத ஏதோ ஒன்றிலும் இல்லை இல்லை ஒவ்வொன்றிலும் நான் இருக்கின்றேன்.

இதோ நகர்ந்துபோன இந்த நொடிகளைக் கூட உணர்வுகளால் கடத்திப் போகும் மாயவித்தையை இந்த கவிதைகளில் மட்டுமே நான் கண்டடைந்திருக்கின்றேன். என் உலகை அம்மாவுக்கு முன் அம்மாவுக்குப் பின் என்று இரண்டிரண்டாய்ப் பிரிக்கலாம்...

செல்லமாய்க்கிள்ளி என்பிள்ளை என்று வாரியெடுத்து முத்தமிட்ட தாயின் கன்னத்து எச்சிலைத் துடைத்து போம்மா என்று தூக்கக் கலக்கத்தில் வீராப்புக்காட்டும் சிலுப்பட்டைக்காரியாக வாழ்ந்த நாட்கள்... வண்ணங்கள் நிறைந்தவை..

அம்மாவுக்குப் பிறகான நாட்களை அத்தனை வலிகளோடு கடந்திருக்கிறேன்... வலிகள் என்றால் உச்சரிக்கின்ற வெறும் வார்த்தை அல்ல, ஒவ்வொரு இழையாகக்கீறி மறுபடி இழைத்து என்னை நெய்தது போல மரணங்களைத் தொட்ட நாட்கள் அவை. பின்னே வான்முட்டப் பறக்க சிறகுகளை வளர்த்துக்கொள்ள சுதந்திரப்படுத்தப்பட்டேன்.

கூட்டுப்புழுவுக்குச் சுதந்திரம் பிடிக்குமென்று நாம் கற்பித்துக் கொண்டிருக்கின்றோம்... எதுவுமற்ற பிரபஞ்சத்தில் எல்லாமுமான சுதந்திரத்தில் நிரம்பி இருக்கும் வெறுமையை நீங்கள் கொஞ்சம் நினைத்துப் பார்த்தால் பயமொன்று கவ்விக் கொள்கிறதா இல்லையா.. அப்படி என்னைக் கவ்வின பயத்தை நான் மெல்ல மெல்ல தடவிக்கொடுத்து நான் சொன்னது கேட்கும் நாய்க்குட்டியாக்க கொஞ்சம் அன்பைப் பொழியவேண்டியதாய்ப் போனது...

அதன்பின்னான நாட்களில் எனக்கு பயங்கள் இல்லை... ஆனால் ஏதோ ஒன்றை இழந்த வெற்றிடத்தை எதைக் கொண்டு நிரப்பினாலும் இன்னும் இன்னுமென அடம்பிடிக்கத் துவங்கிய மனதுக்கு ஏதோ உரு ஸ்திரமான பிடி தேவையாக இருந்தது. அந்நாளில் தான் என்னுள் மொத்தமாய் ஒருவன் நுழைந்து என் வெற்றிடங்களில் எல்லாம் தன்னை நிரப்பிக்கொண்டான்.

அவன் திமிர், பரிச்சயம், வலிகள், கோபம், நட்பு, அன்பு, பேரன்பு என எல்லாமுமாய் நிறைத்துவிட்டான்.. வெள்ளியுதிரும் வரைக்கும் கதைசொல்லியாகி மறத்துப் போன விழிகளுக்கு உறக்கம் கொடுத்தான். போதும் இனி அள்ளிக்கொள்ள என் கைகள் பத்தாது என்று சொல்லும் வரைக்குமாய் கை நிறைய அன்பைக் கொடுத்தான். அவன் தோள்கள் எத்தனை சுகமானது... அதனால் தான் தோழனென்ற வார்த்தை கூட அழகாகப் படுகிறதோ என்னவோ...

அன்பின் நிமித்தம் என்னையே முழுமொத்தமாய்த் தாங்கித் திரிந்தவன்.. எல்லாமுமாகிவிட்ட ஒருநாள் காதலைக் கேட்டபோது ஒரு மொட்டைமாடி நிலவும் சில தென்னங்கீற்றுகளும் மட்டுமே எங்களுக்குள் சாட்சியாகி நின்றன...

அன்பின் ஈர்ப்பில் கரைந்துகொண்டிருந்த என்னை அசட்டையாய்க் கடந்துபோக இயலாத அந்த நண்பன்... இதோ இன்னும் நெருக்குகிறான் இதயத்தின் சப்தங்களை...

இப்போது எங்களுக்குள் காதல் பூத்துவிட்டதாய் ஊர்சொல்லித் திரிகிறது... நெருப்பில்லாமல் புகையாதாமே! உண்மையா இல்லையாவென்று அவனிடமே தான் கேட்கவேண்டும்..

நண்பனாகியிருந்த அவன் நினைவுகள் காதலாகிப் போனபின் ஏற்பட்ட சலனங்களின் மொழிகளை உணர்வுகளாக்கி இங்கே பக்கங்கள் பூராவும் எழுதப்பட்டிருக்கிறது... மீண்டும் வண்ணம் தீட்டப் பட்டிருக்கிறது என் வீடு.

விம்மலான அழுகையும், பின்னே அவன் படுத்துகிற சமாதானமும்... அழவைக்கும் கோபமும்.. தவிக்கவிடும் விலகலும், தேடிவந்து கோர்த்துக் கொள்ளும் கரங்களும், திகட்டத் திகட்டத் தீராக் காதலுமாய்.. நிகழ்ந்த இவ்வுணர்வுகள் எல்லாம்... எனக்குள் நானே எழுதிக்கொண்ட எழுதின இரண்டாம் அத்யாயம்...

அந்த அத்யாயங்களை மீண்டும் வாசித்துப் பார்க்க என் பக்கங்களைப் புரட்டியபோது இழையோடிக் கொண்டிருந்த என் சிநேகங்களுக்குரியவனைப் பற்றிய பாடல் தான் மழையாய் நனைந்துகொண்டிருக்கிறது..

அந்த மழையில் நனைந்த தென்னங்கீற்றுகளின் நுனியில் வரிசைகட்டி நிற்கும் மழைத்துளிகள் தாம் இந்தக் கவிதைகள்.

கொஞ்சம் விரல்நீட்டி மழைத்துளிகளை சிதறடித்து விளையாடிக் கொண்டிருக்கின்றேன் அத்தனைக் குழந்தைத் தனத்தையும் பத்திரமாய்ச் சேமித்துக் கொண்டபடி.. யார் சொன்னார் இப்போதென் அம்மா என்னருகில் இல்லையென...

-காயத்ரி தேவி

Tuesday 1 September 2015

காயு காலேஜ் போய்ட்டா






நேத்து ராத்திரி எட்டு மணிக்கு தான் இன்னிக்கி காலேஜ் போய் பாத்தா என்னன்னு தோணிச்சு. கிட்டத்தட்ட கால் முறியுறதுக்கு ஒரு மாசம் முன்னாடியே ரொம்ப வெயில்ன்னு காலேஜ் கட் அடிச்சுட்டு வீட்ல இருந்தேன். சரி, வெயில் அடிச்சா பரவால, காலேஜ் போலாம்னு முடிவெடுத்தப்ப கால் முறிஞ்சு போச்சு.

அப்படியும் இப்படியுமா நாலு மாசம் வேற ஓடிப் போச்சா, எப்படியும் இன்னும் ஒரு வாரத்துல கால்ல அடுத்த சர்ஜரி பண்ணப் போறதா முடிவாகிடுச்சு, அதுக்குள்ள இப்ப நடக்க முடிஞ்ச வேகத்தோட காலேஜுக்கு ஒரு நாள் போயிட்டு வந்துடுவோம்னு ஒரு ஆசை.

அப்பாவுக்கு வேற என்ன தோணிச்சோ தெரியல, கார் நீ ஓட்றியான்னு கேட்டார். ஹார்ட் அட்டாக்கும், ஸ்ட்ரோக்கும் வந்த அப்புறம் அப்பா அதிகம் கார் ஓட்டுறது இல்ல. என்னை கூட மாமா தான் காலேஜ்ல விட்டுட்டு இருந்தார். அதனால தான் அப்பா இன்னிக்கி என் கிட்ட அப்படி கேட்டதும் ரொம்ப ஆச்சர்யம். நீ கொஞ்ச தூரம் கார ஓட்டு, கால் வலிச்சா நான் ஓட்டுறேன்னு சொன்னார். காரணம் கிட்ட தட்ட முப்பத்தஞ்சி கிலோமீட்டர் இருக்கு எங்க வீட்டுக்கும் காலேஜுக்கும் தூரம்.

கரண்டை கால் ஒரு பத்து ஸ்டெப் எடுத்து வச்சா வலி எடுக்க ஆரம்பிச்சுடுது. ஆனா இந்த வலி எல்லாம் சீக்கிரம் பழகிப்போகும்னு காலேஜ் கிளம்புறப்ப நினைச்சுகிட்டேன். பாட்டி எதோ நல்ல மூட்ல இருந்துருப்பாங்க போல, உன் சுடிதார குடு, நான் அயர்ன் பண்ணித் தரேன்னு சொல்லி அயர்ன் வேற பண்ணித் தந்தாங்க. பார்டா...ன்னு மனசுக்குள்ள நினைச்சுக்கிட்டேன். நாம நாலு எட்டு எடுத்து வச்சு நடந்தா எல்லாருக்கும் சந்தோசம் தான் போல.

வாக்கர் எடுத்து கார்ல போடவான்னு அப்பா கேட்டாங்க. இல்லப்பா, வேணாம், அது இருந்தா, அத பிடிச்சுட்டு நடக்கத் தோணும், இல்லனா, கஷ்டப்பட்டாவது நடப்பேன்லன்னு சொன்னதும் அப்பா, சரின்னு சொல்லிட்டு என்னை கார எடுக்க சொன்னாங்க.

ஏற்கனவே அப்பா கூட ஒரு வாரம் முன்னாடி ஒரு ரவுண்டுஸ் போயிட்டு வந்தேன்னாலும் இப்ப போகப் போறது ஒரு லாங் ட்ரைவ். கால் வலிச்சாலும் இன்னிக்கி முழுக்க முழுக்க நாம தான் ஓட்டணும்னு முடிவு பண்ணிட்டேன். மாமா பின் சீட்ல ஏற, அப்பா முன் சீட்ல உக்காந்துகிட்டாங்க. நான் காரை ஸ்டார்ட் பண்ணி தெருவுல இறங்க ஆரம்பிச்சேன்.

அது ஏனோ தெரியல, இப்ப எல்லாம் ஆக்சிலேட்டர கொஞ்சம் வேகமா மிதிக்கவே பயமா இருக்கு. கிர்ர்ர்ரு கிர்ர்ர்ருன்னு தேர்ட் கியர்லே வண்டி ஓட்டுறேன். முதல்ல இந்த பயத்த போக்கணும்னு சொல்லிட்டே மெதுவா வேகம் எடுக்க ஆரம்பிச்சேன்.

இந்த ரோடு இருக்கே ரோடு, அது இல்லாம இருந்தாலே நல்லா இருக்கும். அந்தளவுக்கு ரோட்டை எல்லாம் தோண்டி போட்ருக்காங்க. பாதி தூரம் வந்ததுமே அப்பா நான் ஓட்டட்டுமான்னு கேக்க, வேணாம்பான்னு சமாளிச்சு ஓட்டுறேன். ஒரு பெரிய குண்டுல ஏறி இறங்கினேனா, கரண்டைக்காலு மழுக்குன்னு ஒரு சத்தத்துல என்னமோ ஆக, ஆவ்வ்வ்வ் அப்பான்னு வலில முனங்கிட்டேன். வண்டிய ஓரமா நிறுத்துன்னு சொல்லிட்டு அப்பா காரை ஓட்ட ஆரம்பிச்சுட்டார்.

டிரைவிங் போனா என்ன, நாம தான் வேடிக்கை பாக்கலாம்ல. ரொம்ப நாள் கழிச்சு, கரண்ட் கம்பில இருந்த காக்காவையும், கூட்டமா பறந்த புறாக்களையும் வேடிக்கை பாத்துட்டே வந்தேன். ஒரு இடத்துல அஞ்சாறு கருப்பு ஆடுங்க படுத்து அசை போட்டுட்டு இருந்துச்சு. சரி, சரி, விட்டா நான் நாய்ங்க குறுக்க ஓடினதையும் சொல்லிட்டே இருக்கப் போறேன், வாங்க காலேஜ்க்குள்ள போய்டலாம்.

கேம்பஸ் வந்த உடனே அப்பா, நீ எங்க போறன்னு கேட்டதும், லேப்க்கு போறேன்ப்பான்னு சொல்லிட்டேன். நான் கடைசியா விட்டுட்டு வந்தப்ப லேப் வெளில இருக்குற இடம் முழுக்க வறண்டு போய் புல் எல்லாம் கருகி இருந்துச்சு. இப்ப முட்டி அளவு புல் வளர்ந்து நிக்குது. மழை வந்து இந்த இடத்த எவ்வளவு பசுமையாக்கி இருக்குன்னு அதிசயமா இருந்துச்சு. அப்படியே அங்க புதுசா முளைச்சிருந்த சங்கு புஸ்பம் செடில அஞ்சு பூ வயலெட் கலர்ல அழகா சிரிச்சுட்டு இருந்துச்சு. ரைட்டு, நமக்கு ஒரு புது ப்ரெண்ட் கிடச்சாச்சுன்னு அதப் பாத்து சிரிச்சேன்.

அப்பா, லேப் கிட்ட காரை நிறுத்தினவர், அடுத்து எப்ப கூப்ட வரன்னு கேக்க, நான் போன் பண்றேன்ப்பான்னு சொல்லிட்டு இறங்கி நடந்தேன். கல்லும் மண்ணுமா இருந்த தரையை புல் மறைச்சு வச்சிருக்குறதால கால் கொஞ்சம் இடறிச்சு. அப்பா பாத்து பாத்துன்னு சொல்லிட்டே கைப் பிடிச்சு லேப் வராண்டா வரைக்கும் கொண்டு விட்டாங்க. இன்னும் நாலஞ்சு அடி எடுத்து வச்சா அங்க போய் உக்காந்துக்கலாம்.

சரிப்பா, நீங்க கிளம்புங்கன்னு சொன்னேன். மாமா நான் வண்டி ஓட்டுறேன் அத்தான்னு அவர் டிரைவர் சீட்ல ஏறி உக்காந்துட்டார். அப்பா டாட்டா காட்டிட்டு போயிட்டு வரேன்னு சொன்னாங்க. அது புதுசா இருந்துச்சு. எல்.கே.ஜி ல முதல் நாள் விடுறப்ப கூட அப்பா இப்படி டாட்டா காட்டினது இல்ல. ஹஹா மை செல்ல அப்பா...

நான் லேப்ல போய் உக்காந்தப்ப யாருமே இல்ல. என்னடா இது, நாம வந்தது சர்ப்ரைசா இருக்கட்டும்னு பாத்தா, இங்க யாருமே இல்லாம நமக்கு சர்ப்ரைசா இருக்கேன்னு நினச்சுட்டே கொஞ்ச நேரம் டேபிள்ல படுத்து தூங்கிட்டேன்.

திடீர்னு, மேடம், எப்ப வந்தீங்க, ஹையோ எப்படி இருக்கீங்கன்னு ஒரு உற்சாகக் குரல் என்னை தூக்கத்துல இருந்து எழுப்பி விட்டுடுச்சு. அட, லேப் அட்டெண்டர். கல்யாணம் ஆகி ரெண்டு புள்ளைங்களுக்கு அம்மா, ஆனா நான் அவங்கள முன்னாடி லெப்ட் ரைட் வாங்கிட்டு இருப்பேன், பொறுப்பே இல்லன்னு. அவங்க தான் அவ்வளவு சந்தோசமா என்னைப் பாத்து சிரிக்குறாங்க. அப்புறம், மேடம் இருங்க, நான் இந்தா வந்துட்டேன்னு சொல்லிட்டு குடுகுடுன்னு வெளில ஓடிட்டாங்க.

சரி, எங்க போனாங்களோ, பொறுப்பே இல்ல, லேபை இப்படியா தொறந்து போட்டுட்டு போவாங்க, நம்ம கைட் போனதும் ஒரு பயம் இல்லாம போச்சுன்னு நினச்சுட்டே இருக்கேன், அவங்க ஒரு கைல காபியும், ஒரு கைல வாழக்கா பஜ்ஜியுமா நின்னுட்டு இருக்காங்க.

பொதுவா நான் இத எல்லாம் சாப்பிட மாட்டேன்னாலும் ரொம்ப ஆசையா இருந்தா கேண்டீன்ல வாங்கி திம்பேன். அத நியாபகம் வச்சு வாங்கிட்டு வந்துருக்காங்க. தேங்க்ஸ் மேடம்னு சிரிச்சேன். நீங்க இல்லாம ஒரு கலகலப்பே இல்ல மேடம், லேப் ரொம்ப அமைதியா இருக்கும். உங்கள நாங்க நிறைய மிஸ் பண்ணினோம்னு சொன்னாங்க. கண்ணு லேசா வியர்த்திடுச்சு. நம்ம மேல எவ்வளவு பாசம்னு.

அதுக்குள்ள, நான் வந்த விஷயம் கேள்விப் பட்டு எங்க ஹச்.ஓ.டி போன் பண்ணினாங்க. என்ன, சொல்லாம கொள்ளாம வந்துருக்கன்னு. வரணும்னு தோணிச்சு மேடம், வந்தேன்னு சொன்னேன். கால் இப்ப எப்படி இருக்கு, நடக்க முடியுமான்னு கேள்விகள் கேட்டுட்டு, ரெண்டு பேப்பர் எடுக்க ஆள் இல்ல, யார போடலாம்னு யோசிச்சுட்டு இருந்தேன், நீ எடுக்குறியான்னு கேட்டாங்க.

என்னால ரெகுலரா வர முடியுமான்னு தெரியல மேடம், ஆனா அப்பப்ப வேணா வந்து எடுத்துட்டு போறேன், பரவால நம்பிக்கை இருந்தா குடுங்கன்னு சொன்னேன். ஆக, சும்மா வந்த இடத்துல க்ளாஸ் எடுக்க தானே கேட்டதோட இல்லாம, நீ லேப்லயே வச்சு நடத்து, பிள்ளைங்கள அங்க வர சொல்லிடலாம்னு ஏற்பாடும் பண்ணி குடுக்குறாங்க. இந்தா பார்ரா, எந்த ஹச்.ஓ.டி பிடிக்கலன்னு மனசுக்குள்ள சஞ்சலமா இருந்தேனோ, அவங்களே நம்மள தானா கூப்ட்டு க்ளாஸ் குடுக்குறாங்கன்னு சிரிச்சுகிட்டேன்.

என்ன, இந்த தடவ அவங்க எனக்கு குடுத்துருக்குற சப்ஜெக்ட் பெர்சனாலிட்டி டெவலெப்மென்ட். என் சப்ஜெக்ட்டுக்கு கொஞ்சமும் சம்மந்தமில்லாத டாபிக்னாலும் உளவியல் சார்ந்து பிள்ளைங்களுக்கு க்ளாஸ் எடுக்க ஒரு நல்ல சான்ஸ். இதற்கு தானே ஆசைப்பட்டாய் காயுன்னு எனக்கு நானே மனசுக்குள்ள சபாஷ் சொல்லிகிட்டேன் (இதுவே ஒரு வருசத்துக்கு முன்னாடினா, என்னோட சப்ஜெக்ட் தான் நான் எடுப்பேன்னு தாட் பூட்ன்னு குத்திச்சிருப்பேன்ங்குறது வேற விஷயம்).

அப்புறம் ஒவ்வொரு பிள்ளைங்களா ஓடி வந்தாங்க. ஹையோ மேடம், ஹையோ மேடம்ன்னு ஆளாளுக்கு கன்னத்துல கை வச்சு ஆச்சர்யமா குதிக்குறாங்க. இந்த புள்ளைங்கள எல்லாம் பாத்து எவ்வளவு நாள் ஆச்சு. நிஜமாவே ஐ மிஸ் யூ ஆல் மை செல்லம்ஸ்.

மேடம், ப்ளீஸ் எங்களுக்கு க்ளாஸ் எடுக்க வருவீங்கலன்னு அவங்க கேட்டதும், எப்பவாவது வர்றேண்டா, ஆனா அடிக்கடி உங்கள எல்லாம் பாப்பேன்லன்னு சொன்னேன்.

ஒருத்தி, முந்தின வாரம் ஓணம் கொண்டாடியிருக்காங்க, அதுல அலங்காரத்துக்கு வச்சிருந்த ஒரு பிளாஸ்டிக் பூவை எடுத்து நீட்டி, வெல்கம் மேம்னு சொன்னா.

அப்புறம் கால்ல மாட்டியிருந்த அந்த சப்போர்டிவ் மெட்டீரியல பாத்து, இன்னும் சரியாகலயா மேடம், கெட் வெல் சூன் மேடம்னு வாழ்த்தெல்லாம் சொல்லிட்டு, மேடம் நீங்க இல்லனதும் இங்க ஒருத்தி சோம்பேறி ஆகிட்டா, ஒழுங்கா அசைன்மென்ட் எழுத மாட்டேங்குறான்னு ஆளாளுக்கு கம்ப்ளைன்ட் சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க. நான் சிரிச்சுட்டே, சரி சரி, இனி பாருங்க, ஆடித் தீத்துடுறேன்னதும், நீங்க திட்டினா நல்லாயிருக்கு மேடம். திட்டினா தான் நாங்க படிக்குறோம்னு சொல்லி எல்லாரும் ஆமா, ஆமான்னு கோரஸ் பாடுறாங்க.
ரொம்ப சந்தோசமா இருந்துச்சு. இவங்கள எல்லாம் விட்டுட்டு இத்தன நாள் வீட்டுக்குள்ளயே அடைஞ்சு கிடந்தது என்னோட தனித் தன்மையையே பதம் பாத்துடுச்சு. இந்தா அந்த நிமிஷம் புதுசா பொறந்த மாதிரி ஒரு உற்சாகம். ஜல்லுன்னு உடம்பு முழுக்க ஒரு சிலிர்ப்பு.

மதியமே வீட்டுக்கு போய்டனும்னு தான் ப்ளான். ஆனா அந்த இடத்தையும் பிள்ளைங்களையும் விட்டுட்டு அவ்வளவு சீக்கிரம் வர மனசே இல்ல. நிறைய பேசினோம், நிறைய சிரிச்சோம். அப்படியே எனக்கு குடுத்த பாடம் பத்தி கொஞ்சம் ரெபர் பண்ணினேன். எல்லாமே சுத்த தமிழ்ல இருந்துச்சு. சரி, இன்னொரு நாள் படிச்சுக்கலாம்ன்னு நினைச்சு அத ஓரமா வச்சுட்டு, அப்பாவுக்கு கால் பண்ணி அப்பா, சாயங்காலம் வந்தா போதும்னு சொன்னேன்.

அப்புறம், கூப்பிட மாமா தான் வந்தாங்க. பகல் முழுக்க உக்காந்து இருந்ததால, கால் நல்லா வீங்கி நீர் கோர்த்துடுச்சு. ஆனாலும் என்ன, மனசு நிறைஞ்சிடுச்சே...

நாளைக்கும் காலேஜ் போகணும்னு ஆசையோட தூங்கப் போறேன். பாக்கலாம், என்ன நடக்குதுன்னு.....



.