Tuesday 17 June 2014

இளவரசியும் தவளையும்


ஒரு நாட்டுல ஒரு இளவரசி இருந்தா. ஒரு நாள் அவ வழக்கம் போல அரண்மனை தோட்டத்துல விளையாட போனா. அரண்மனை தோட்டம்னா சும்மாவா? ரோஜாக்களும், பவள மல்லிகை கொடிகளும் அரண்மனை தோட்டத்தையே அழகாக்கி இருந்துச்சு. அங்க இருந்த குளத்துல வெள்ளை தாமரையும், சிகப்பு அல்லியும் கூடுதல் அழக குடுத்தன.

இளவரசி அவ தோழிகளோட சந்தோசமா இருந்தத பாத்த ஒரு தவளை தானும் அவ தோழியா ஆகணும்ன்னு ஆசப்பட்டுச்சு. அது தத்தி தத்தி இளவரசி முன்னால வந்து நின்னுச்சு. இளவரசியும் அந்த தோட்டத்து தவளைய அரண்மனைக்கு கொண்டு போனா.  

அரண்மனைக்குள்ள போன உடனே இளவரசிக்கு வேண்டியவங்க எல்லாருக்கும் தவளைய அறிமுகப்படுத்தினா. தோட்டத்துல தனியாவே இருந்த தவளை அரண்மனைல எல்லார் கூடவும் சந்தோசமா இருந்துச்சு. இளவரசியோட தோழிங்க எல்லாம் அதுக்கும் தோழி ஆகிட்டாங்க.

இப்படி எல்லாமே நல்லபடியா போயிட்டு இருந்தப்போ, ஒரு நாள் ராத்திரி இளவரசி தவளை க்ராக் க்ராக்ன்னு கத்துறத கேட்டுட்டா. அந்த சத்தம் வித்யாசமா இருக்கவே, இது மாதிரி நாமளும் பாட கத்துகிட்டா என்னன்னு இளவரசிக்கு தோணிச்சு.

இளவரசிக்கு அந்த யோசனை வந்த உடனே, தவளைக்கும் ரொம்ப சந்தோசம். இளவரசி முன்னாடி க்ராக் க்ராக்ன்னு அதிகமா கத்த ஆரம்பிச்சுடுச்சு. இளவரசியும் தவளை கத்துன சத்தத்துல சில வார்த்தைகள எடுத்துகிட்டு அழகழகான பாட்டுக்களா பாட ஆரம்பிச்சுட்டா. ரொம்ப சீக்கிரமே நாடு முழுக்க இளவரசியோட பாட்டு பிரசித்தி ஆகிடுச்சு.

இளவரசிக்கு கிடச்ச பாராட்டுக்கள கண்ட தவளைக்கு பொறாமை வர ஆரம்பிச்சுடுச்சு. நம்ம கிட்ட இருந்து பாட்டு கத்துகிட்டு இப்போ இந்த இளவரசி பிரபலமாகிட்டாளேன்னு மனசுக்குள்ள பொரும ஆரம்பிச்சிடுச்சு. அப்படியே இளவரசியோட தோழிகள் கிட்டயும் புலம்ப ஆரம்பிச்சுடுச்சு. போக போக தனிமைல சத்தம் போட்டு கூப்பாடு போடவும் ஆரம்பிச்சுடுச்சு.

இத கேட்ட இளவரசி தவளையோட அறியாமைய நினச்சு வருத்தப்பட, இளவரசியோட நல்ல தோழி, இளவரசிக்கிட்ட ஒரு விஷயம் சொன்னா. அது என்னன்னா, கத்துறதும், புலம்புறதும் தான் தவளையோட இயல்பு. அத தாண்டி அது வெளில வராது, வரவும் தெரியாது. ஆனா தன்னால தான் எல்லாமேங்குற அறியாமை மட்டும் இருந்துட்டே இருக்கும். குளத்துல இருந்த தவளைய அரண்மனைக்கு கொண்டு வந்தது தப்பு, அத குளத்துலயே விட்டுருங்கன்னு.

இளவரசிக்கு பாவமா இருந்தாலும் அது தான் சரின்னு பட்டுச்சு. தவளைய கொண்டு போய் குளக்கரைலயே விட்டுட சொல்லிட்டா.
இளவரசி மேலும் மேலும் தன்னோட திறமைய வளத்துக்குறதுல கவனம் செலுத்த ஆரம்பிச்சிட்டா.

தவளையோ, இளவரசி தனக்கு துரோகம் செய்துட்டதா புலம்பி புலம்பி அந்த குளக்கரைலயே காலத்த ஒட்டிச்சு. தவளை கூட இருந்த வம்பு பேசுற தோழிகளும் வேற வம்பு கிடைச்சதும் தவளைய விட்டுட்டு போய்ட்டாங்க. இப்போ எல்லாம் தவளை கத்துரதே இல்ல...


என்ன செல்லங்களா, இந்த கதைல இருந்து நாம என்ன தெரிஞ்சுக்க விரும்புறோம்னா, நட்புங்குறது பொறாமைப்படுறது இல்ல. அப்படி பொறாமை பட்டா அது நல்ல நட்பே இல்ல. அதே மாதிரி திறமைங்குறது யார் கிட்டயும் கத்துகிட்டு வர்றதில்ல, அது அவங்கவங்க உள்ளிருந்து வர்றது. தவளை கத்துன மாதிரியே கத்திகிட்டு இருந்தா இளவரசியை பைத்தியம்ன்னு சொல்லியிருப்பாங்க. தவளையோட கத்தல் கூட தன்னோட கற்பனையையும் சேர்த்து இளவரசி பாடினதால தான் அவளால நல்லா வர முடிஞ்சுது. அதனால நண்பர்கள் பாத்து எப்பவும் பொறாமை படவே கூடாது, தலைக்கனமும் கூடாது, சரியா... இல்லனா தவளைக்கு நேர்ந்த மாதிரி தனியாவே புலம்பிட்டு இருக்க வேண்டியது தான். கவனிக்க யாருமே இருக்க மாட்டாங்க... 

Friday 6 June 2014

நிலவறை



ஷ்ஷ்ஷ்..... சத்தமே போடாம வாங்க....

நாம இப்போ இதுவரைக்கும் போகாத ஒரு இடத்துக்கு போகப்போறோம்...

வாங்க வாங்க, வீட்டோட பின்வாசலுக்கு வாங்க. ஏங்க, கிணத்தடி பக்கமா இப்போ போக வேணாம், நாம போக வேண்டிய இடம் பின்வாசல் ஒட்டிய நிலவறை தான்.

பாத்து, பாத்து, இருட்டா தான் இருக்கும். ஆனாலும் சூரிய வெளிச்சம் மெல்லிசா உள்ள வந்துட்டு தான் இருக்கு பாத்தீங்களா? எதுக்கும் ஒரு மண்ணெண்ணெய் லாந்தர் கைல எடுத்துப்போம். மெதுவா கால்கள எடுத்து வச்சு படி இறங்குங்க.. பத்தே படிதான். தரை வந்துடுச்சு பாத்தீங்களா?

ஹோய், யாரது, நிலவறை கதவ மூடினது, வெளிச்சம் வர வேணாமா? அப்புறம் பின்னால வர்றவங்க கண்ணு தெரியாம குவிச்சி வச்சிருக்குற தேங்கா மேல இடறி விழுந்துட போறீங்க... ஜாக்கிரதையா வாங்க..

இங்க தேங்காய் கொட்டி கிடக்கு பாத்தீங்களா, கிட்டத்தட்ட நூறு தேங்கா, ரெண்டு மாசத்துக்கு தேவையானத சேமிச்சு வச்சிருக்கு. தேவைப்படுறப்போ அஞ்சாறு நாளைக்கு ஒருதடவ பத்து, பதினஞ்சு தேங்காய வெளில எடுத்துட்டு போய் உரிச்சி வச்சிக்கலாம்.

இந்தா அந்த பக்கம் விறகு அடுக்கி வச்சிருக்காங்க. மழை நேரத்துல விறகு எல்லாம் நனஞ்சுடக்கூடாதுல, அதே போல வெயில் நேரத்துல கரையான் அரிச்சுடும். அதான் பாதுகாப்பா இங்க கொண்டு வந்து வச்சிருக்காங்க.

செமையா மாம்பழ மணம் வருதே, மாம்பழத்த காணோம்ன்னு தேடுறீங்களா? ஹஹா, அதோ அந்த ஈக்காம்பெட்டி இருக்கு பாத்தீங்களா, அது நிறைய வைக்கோல் தெரியுதா? அதுக்குள்ள தான் மாம்பழம் இருக்கு. வைக்கோலுக்குள்ள வச்சி மாம்பழம் பழுக்க வச்சா மணமும் ருசியும் தனி தான், தெரியும்ல...

ஆத்தீ.... பாத்து வாங்க, மம்பட்டி, கொறடு, சாந்து சட்டி, அருவா, கடப்பாரை எல்லாம் இங்க தான் இருக்கு. வயல் வேலை நடக்கும் போது எடுத்துட்டு போய்டுவாங்க, இதெல்லாம் விவசாயத்துக்கு தான் பயன்படுத்துவாங்க. நீங்க பயப்படாதீங்க.

அடடே, நாம இப்போ கொஞ்ச நேரம் அந்த வைக்கல்கட்டு மேல உக்காந்து ரெஸ்ட் எடுத்துக்கலாம். அந்தா, அந்த வலது மூலைல செந்துளுவன் பழம் இருக்கு பாருங்க, அப்படியே அந்த குலையை தூக்கிட்டு வாங்க, ஆளுக்கொரு பழம் எடுத்து சாப்பிடலாம்.

என்னது, மாம்பழமா? அந்த ஈக்காம்பெட்டிய அப்படியே தூக்குங்க, புட்டு சாப்பிடும் போது, அது கூட சைட் டிஷ்ஷா வெட்டி வச்சி சாப்பிடலாம்.

பாத்தீங்களா, உங்கள சுத்திக் காட்டுற உற்சாகத்துல வந்த வேலையை மறந்துட்டேன்....

குட் மார்னிங்...

Monday 2 June 2014

சுறா, நீயா நானா? மற்றும் டிஸ்கவரி தமிழ்


நேத்து சுறா படம் பாத்த எப்பக்ட் - இன்னும் மயக்கம் தெளியல

அத போய் யாரு பாக்க சொன்னான்னு எல்லாம் கேக்காதீங்க, லேப் டாப் தான் போச்சே, கொஞ்ச நேரம் டிவி பாக்கலாம்ன்னு தான் அந்த பக்கமா போனேன். அதுவும் ரொம்ப வருஷம் கழிச்சு முதன்முறையா டிவி பாக்க போனேன். நான் டிவிய ஆன் பண்ணின உடனே சன் டி.வில சுறா படம் தான் ஓடிச்சு.

சரி, இந்த படத்த தான் பேஸ் புக்ல கழுவி கழுவி ஊத்துறாங்களே, இப்படி வரலாற்று சிறப்பு மிக்க படத்த பாக்கலனா எப்படிங்குற ஒரு ஆர்வத்தோட தான் படம் பாக்க உக்காந்தேன்.

அட, நல்லா தான போயிட்டு இருந்துச்சு. இந்த தமனா புள்ள இருக்கே, அத அப்படியே மெழுகு பொம்மையா செய்துட்டு இருந்தப்போ உள்ள ஒரு பேட்டரி வச்சி தூக்கிட்டு வந்துட்டாங்க போல. அது பேசினது வசனமாங்க?

இப்போ உங்க மைன்ட் வாய்ஸ் எனக்கு கேக்குது. எனக்கு தமனாவ பிடிக்கலன்னு நீங்க நினைக்குறீங்க.... அதானே இல்ல... ஆனா ஒண்ணுங்க, சில பேர பாத்தா புடிக்காது, பாக்க பாக்க தான் புடிக்கும் (இது தனுஷ் டயலாக்ன்னு காமடி பண்ணக்கூடாது, இங்க இப்போ இது காயு டயலாக்). இந்த புள்ள லூசா இருந்தாலும் கத போகுற போக்குல இத பாத்தா சிரிப்பு சிரிப்பா தான் வந்துச்சு.

ஏன்மா? அந்த ரமேசுக்கு முன்னால வேற யாரும் உன்ன விட்டுட்டு ஓடி போகலையா? இத்தன வயசு வர எப்படி கடல்ல குதிக்காம இருந்த? அப்புறம், கடல்ல விழுந்தா மேக்அப் தண்ணி பட்டு கரைஞ்சு போய்டும் கண்ணு, நீ ஏன் ஏசியன் பெய்ன்ட் ட்ரை பண்ணக் கூடாது?

இதுல எனக்கு இன்னொரு டயலாக் ரொம்ப பிடிச்சுது. அது என்னன்னு நான் சொன்னா இங்க யாரும் கொடி புடிச்சுட்டு சண்டைக்கு வரக்கூடாது சரியா. ஹிஹி பளிச்சுன்னு "எங்கப்பா ஒரு டம்மி பீசு"ன்னு படக்குன்னு சொல்லுமே, நான் கெக்கே பிக்கே, கன்னாபின்னான்னு சிரிச்சுட்டேன்.

அடுத்ததா வடிவேலு. வெறும் அவ்வ்வ்வ்ங்குற ஒரு சத்தத்த (இது சத்தம் தானே, வார்த்த இல்லீல) வச்சுகிட்டு மனுஷன் என்னமா நடிக்குறார்யா... டைப் டைப்பா அவர் மூஞ்சிய மாத்துற அழகு இருக்கே. ஹலோ வடிவேலு, ஐ லவ் யூ. அந்த இத்துனூண்டு குரங்கு மூஞ்சிக்குள்ள எத்தன கலைஞன் ஒளிஞ்சி இருக்கான் பார்யா... அப்புறம் விஜய வாடா போடான்னு சொல்றாரா, நமக்கு வடிவேலு தான் ஹீரோ மாதிரி தெரிஞ்சார்.

இப்படி எல்லாமே நல்லாதாங்க போயிட்டு இருந்துச்சு. அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா என் மண்டைக்குள்ள யாரோ வந்து நல்லா குழப்பி விட்டுட்டாங்க...

எப்பவுமே கேள்வி கேட்டே பழகிட்டேனா, இப்போ நான் கேள்வி கேக்குறேன், நீங்க பதில் சொல்லுங்க சரியா?

சுறாவுக்கு லட்சியம் வீடு கட்டுறது தானே, அப்புறம் எதுக்கு  அவ்வளவோ பெரிய காரு, கண்ணாடி, தொப்பி, கோட்டு, சூட்டு, சூ?

தன்னை விட பெரிய பணக்காரங்கள ஒரு சொட்டு சயனைட்ல சைலென்ட்டா மேல அனுப்புற வில்லன் ஏன் சுறா பின்னால லோலோன்னு அலையுறார்?

அப்புறம், வேறென்ன சந்தேகம்?

ம்ம்ம்ம் வந்து, வந்து.... ஐயோ, நான் யாரு, எங்க இருக்கேன்?
ஆமா, நீங்க எல்லாம் யாரு?
............................................................................

சுறா படம் பாத்துட்டு இருக்குறப்பவே அப்பப்போ விளம்பர இடைவேளைல வழுக்கிகிட்டு போய் அதாங்க ஸ்கிப் ஆகி (அது ஸ்லிப்ன்னு எனக்கு டியூஷன் எடுக்காதீங்க, ப்ளீஸ், நானே கன்பீஸ்ல இருக்கேன்) விஜய்டிவி பக்கமா போய் விழுந்துட்டேன்.

அட, நம்ம நீயா நானா கோபிநாத் நாட்டுக்கு முக்கியமான அதி தீவிரமான விசயத்த பத்தி டிஸ்கஸ் பண்ணிட்டு இருந்தார்.

உங்களுக்கு உங்க ஹஸ்பன்ட் எப்படி எல்லாம் ரொமான்ஸ் பண்ணனும்ன்னு ஆசையா இருக்குன்னு நாட்டுக்கு முக்கியமான ஒரு கேள்விய கேட்டார். உடனே மடை திறந்த வெள்ளமா வந்துச்சு பாருங்க பதில்கள். அட, அட, அட, நான் அப்படியே அசந்துட்டேன்.

இதுல ஒருத்தங்கள காலைல பக்கத்துல வந்து உக்காந்து கிஸ் பண்ணி எழுப்பி விடணுமாம். இன்னொருத்தங்க பைக்ல போகும்போது அப்படியே தோள்ல கை போட்டுட்டே தான் போகணுமாம் (நல்ல வேளை, இங்க தான் சுறா படம் என்னை இவங்க கிட்ட இருந்து காப்பாத்திச்சு).

இதுல ஒருத்தங்களுக்கு சினிமா பாத்து, அப்படி எல்லாம் நடந்துக்கணும்ன்னு ஆசை வந்துச்சாம்? எங்க போய் முட்டிக்க?

ஆனா இங்க கூட ஆன்னு வாய தொறந்துட்டேஒரு விஷயம் ரசிச்சேன்ங்க.

ஒருத்தங்க சொன்னாங்க, எல்லாரும் பீச்சுக்கு ஜோடியா தான போவாங்க, இவரு தனியா போவார்ன்னு. என்னாடா இது புதுமையா இருக்குன்னு கொஞ்சம் நிமிர்ந்து உக்காந்து, கேமராவ அந்த பக்கம் திருப்புனா, நான் சின்ன வயசுல இருந்தே தனியா தானே போவேன்ன்னு அப்பாவியா மூஞ்சி வச்சுட்டு சொன்னார் பாருங்க, ஏன் சார், நீங்க எப்பவுமே இப்படி தானா? இல்ல, இப்படி தான் எப்பவுமேவா?

பாவங்க, அவருக்கு சத்தம் போட்டாலாம் பிடிக்காதாம். அப்படியே அமைதியா அரை மணிநேரம் கடலை பாத்துட்டே இருக்கணுமாம். இதுல சார் அஞ்சு வருஷம் லவ் பண்ணி கல்யாணம் பண்ணிகிட்டாராம். அவர லவ் பண்ணுன அந்த பொண்ண கையெடுத்து கும்பிடணும். ஒரே ஒரு ரோஸ் வாங்கி குடுங்கன்னு கெஞ்சோ கெஞ்சுன்னு பப்ளிக்ல கெஞ்சுது. ஹஹா கல்யாணத்துக்கு முன்னால கேட்டா இதெல்லாம் தப்பு, அப்புறம் பாத்துக்கலாம்ன்னு சொல்லுவாரு, இப்போ கேட்டா வீட்ல பசங்க இருக்காங்கன்னு சொல்றாருன்னு அவங்க பீல் பண்ணப்போ, ஏன்யா, ஒரு ரோஜாப்பூ வாங்கி குடுக்க அறுபது வருசமாயா காத்திருக்கணும்?

இதுல பொண்டாட்டி குடுத்த கிரீட்டிங் கார்ட் பத்தி ஒரு கமன்ட் குடுத்தார் பாருங்க மனுஷன். ஒரு தாள குடுத்தா எவ்வளவு நேரம் தான் பாத்துட்டு இருக்க முடியும்? கொஞ்ச நேரம் பாத்துட்டு அப்புறம் தூக்கி போட்டுற வேண்டியது தான். அத என்ன பிரேம் போட்டா மாட்ட முடியும்?

அண்ணே, உங்க பீலிங்க்ஸ் நியாயம் தாண்ணே... உங்க பொண்டாட்டிகிட்ட தாராளமா பொறுமையா இருக்குறது எப்படின்னு எல்லா பொண்ணுங்களும் டியூஷன் போகலாம்.

அப்புறமா, இந்த நகரத்து பொண்ணுங்க என்னமோ வீனஸ்ல இருந்து குதிச்சு வந்த மாதிரி கிராமம்னா ஒரு வாழத் தகுதி இல்லாத இடம் மாதிரி பீல் பண்ணிட்டு இருந்தாங்க. இங்க நகரத்து பொண்ணுங்க மட்டுமே இருந்ததால அவங்க அலட்டல மட்டும் தான் பாக்க முடிஞ்சுது. என்னவோ, பொண்ணுங்களே அலட்டல் பேர்வழின்னு ஒரு கணம் எல்லார் மனசுலயும் வந்துட்டு போயிருக்கும். நகரத்து ஆண்கள் கிட்டயும் கேட்டுருந்தா தானே அவங்களும் கிராமத்த சீப்பா நினைக்குறாங்கங்குறது தெரிய வரும்.. என்னவோ போங்கப்பா... நான் பேசாம தூங்க போறேன்...
........................................................................................

ஆங்க்..... பாத்தீங்களா, சுறா படத்தையும் கோபிநாத்தையும் பாத்த எபக்ட்ல நான் ரசிச்ச இன்னொரு விசயத்த மறந்தே போயிட்டேன். இது இது ரெண்டும் பாக்குறதுக்கு முன்னாடி பாத்தது. நீங்க, இவ்வளவு நீள பதிவுல இத வாசிப்பீங்களான்னு தெரியல... ஆனாலும் நான் ரசிச்சத சொல்லிறணும்ல.

டிஸ்கவரி தமிழ்....

கூட்டமா இடம் விட்டு இடம் நகர்ருற உயிரிணங்கள பத்தினது. நிஜமாவே மலைச்சு தான் போயிட்டேன்.

முட்டை விட்டு தன்னோட சந்ததிய பெருக்க பெரிய ரிஸ்க் எடுத்து, காட்டுல இருந்து கடலுக்கு போற சிகப்பு நண்டுகள், மனுசனோட தவறால லெச்ச கணக்குல பெருகி இப்போ ஆறோட பொருளாதார வளத்தையே அழிக்குற மீன்கள், கும்பலா கிளம்பி வர்ற வவ்வால்கள்ன்னு எல்லாமே பிரமிப்பா தான் இருந்துச்சு. இயற்கை, எப்பவுமே அழகு தாங்க...

வாழ்க்கைல ஒரு பகுதிய தெளிஞ்ச நீரோடை, பச்சை பசேல்ன்னு காடுன்னு வாழ்ந்து பாத்துடணும்....
.............................................................................................

அப்புறம், இந்த போஸ்ட்ல நான் போடுற படம் ஏதும் நல்லா இல்லனா என்னைய திட்டிராதீங்க, நானே இருட்டுல தடவி தடவி, குத்து மதிப்பா போட்ருக்கேன். லேப் டாப்ல கண்ணே தெரியல. டிஸ்ப்ளே மாத்தணும். மறுபடியும் ஆன்லைன் வரணும்னா ஒரு மாசம் கூட ஆகலாம்.