Monday 20 February 2017

தொடுதல் பழக்குவோம்



எந்த பக்கம் திரும்பினாலும் மனசுக்கு அச்சுறுத்துற மாதிரி தான் செய்திகள் வந்துட்டு இருக்கு. இதெல்லாம் பாக்குறப்ப மனசுக்குள்ள ஒரு மாதிரியான பயம் வர்றத தடுக்கவே முடியல.

மூணு வயசு, அஞ்சு வயசு குழந்தைங்க எல்லாம் எப்படி தான் சில பேரோட கண்ணுக்கு போகப் பொருளா தெரியுறாங்களோ புரியல....

ரொம்ப சுதந்திரமா வளந்தவன்னு பெருமையா நினைச்சுப்பேன் சில நேரம். ஆனா இப்ப தான் தெரியுது நானெல்லாம் ஏதோ ஒரு பாதுகாப்பு வளையத்துக்குள்ள ரொம்ப ரொம்ப ஜாக்கிரதையா பொத்தி பொத்தி வளர்க்கப் பட்டுருக்கேன்ன்னு...

எனக்கு தெரிஞ்ச ஆண்கள் ஒரு சகமனுசியா தான் பெண்கள நடத்தி இருக்காங்க. ஒரு கூட்டுக் குடும்பத்துக்குள்ள வாழ்ந்த வாழ்க்கை எவ்வளவு வரம் வாங்கி வந்ததுன்னு புரிய ஆரம்பிக்குது எனக்கு.

எங்க பாத்தாலும் பெண்கள் அப்படி இருக்கணும், ஆண்கள் அப்படி நடந்துக்கணும்ங்குற மாதிரியான கருத்துக்கள பாத்து பாத்து சலிப்பா இருக்கு. பயமா இருக்கு, அத செய்யாத, அடக்கி வை-ன்னு சொல்ற அத்தன வார்த்தைகளும் எனக்கு அசூயையா இருக்கு.

அதுக்காக நம்ம வீட்ல நடக்காத வரைக்கும் நாம பத்திரமா தான் இருக்கோம்னும் அசால்ட்டா விட்டுற முடியாது.

பாலியல் ரீதியான அச்சுறுத்தல்கள் பெருகி வர்ற இந்த நேரத்துல, நமக்கு எது தேவைங்குற புரிதல் முதல்ல வேணும்னு நினைக்குறேன்....

பொம்பள புள்ளைகிட்ட அப்படி இரு, இப்படி இரு, ஜாக்கிரதையா இருன்னு சொல்றதோ, ஆம்பள பசங்ககிட்ட பொண்ணுங்கள தொடாதன்னு சொல்றதோ இன்னும் ஒரு அச்சுறுத்தலான மனநிலைக்கு தான் கொண்டு போகும்ன்னு நான் நினைக்குறேன்...

எத பாத்தாலும் சந்தேகத்தோடவும் விரக்தியோடவும் பாத்துகிட்டு இருந்தா அதுக்கப்புறம் வாழ்ந்து தான் என்ன பிரயோஜனம்?

அதுக்கு பதிலா பாலியல் ரீதியா பாகுபாடு இல்லாத ஒரு சமூகத்த நாம உருவாக்க முயற்சிக்கலாம்....

பள்ளிகள்ல ஆண் பெண் குழந்தைகள பிரிச்சி உக்கார வைக்காம கலந்து உக்கார வைக்கலாம். ஒருத்தருக்கொருத்தர் பாராட்டுற நேரம் கை குடுத்துக்குறது, தோள் தட்டிக்குறது மாதிரியான நண்பர்களுக்குள்ள நடக்குற தொடுதல்கள அனுமதிக்கலாம், encourage பண்ணலாம்...

இந்த தொடுதல்கள் மூலமா இவங்க நம்மோட சக மனுசி, மனுஷன், நமக்கும் இவங்களுக்கும் வித்யாசம் கிடையாதுங்குற எண்ணம் குழந்தைகள அறியாமலே அவங்களுக்குள்ள புகுந்துடும்...

நாம கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் இது தான்....

எத நாம செய்யக் கூடாதுன்னு சொல்றமோ அத தான் பிள்ளைங்க செய்ய நினைப்பாங்க. ஒரு ஆர்வமும் குறுகுறுப்பும் அதுல தான் வரும். அதுக்கு மாறா, ஆண், பெண் நட்பு தப்பேயில்லன்னு சின்ன வயசுலயே புரிய வச்சுட்டா bad touch-க்கு உள்ளாகுற குழந்தைக்கு தானே வித்யாசம் புரிய ஆரம்பிக்கும். மெது மெதுவா bad touch பத்தி அவங்க மனசுல புரிய வைக்கலாம்... அப்படியே ஜாக்கிரதை உணர்வுகளையும் அவங்க புரிய ஆரம்பிச்சுடுவாங்க...

ஆணும் பெண்ணும் சக மனுசங்களா பழகுறது உளவியல் ரீதியா சரின்னு தோணினாலும் விஞ்ஞான ரீதியா இது சரியா வருமா? ஒரு ஆணையும் பெண்ணையும் கலந்து பழக விட்டா அவங்களுக்குள்ள காமம் சுரக்காம இருக்க வாய்ப்பு இருக்கான்னு ஒரு கேள்வி எழலாம்.

அதுக்கு என்னோட பதில் இது தான். உளவியல் ரீதியா ஒரு ஆணும் பெண்ணும் பாலின வேறுபாடு பாக்காம பழக ஆரம்பிச்சுட்டாலே அவங்களுக்குள்ள மனக் கட்டுப்பாடுங்குறது தானா வந்துடும். பாக்குற எல்லா ஆண்கள் மேலயும், அல்லது பெண்கள் மேலயும் காமம் பெருக்கெடுத்து ஓட வாய்ப்பே இல்ல.

அப்படி யாருக்கோ யார் மேலயோ ஈர்ப்பு வந்துச்சுனா அவங்களால அத எந்தவித கூச்சமும் இல்லாம வெளிப்படையா கேக்க முடியும். அப்படி கேக்குறப்ப பெண் “No” சொன்னா அத அந்த ஆண் சுலபமா புரிஞ்சுப்பான். அத ஒரு “take it easy”யா அவனால ஏத்துக்க முடியும். அந்த பெண்ணை கட்டாயப்படுத்தி அவள அடையணும்னு நினைக்க மாட்டான்.

எப்படி ஒரு பெண்ணுக்கோ அல்லது ஆணுக்கோ தன்னை பாலியல் ரீதியா நெருங்குரவங்ககிட்ட “NO” சொல்ல உரிமை இருக்கோ, அதே அளவு “YES” சொல்லவும் உரிமை இருக்கு. அத நாம புரிஞ்சுக்க தான் வேணும். ஏத்துகிட்டு தான் ஆகணும். காமமும் காதலும் தனிமனித சுதந்திரம். அடுத்தவங்கள காயப்படுத்தாத, அடுத்தவங்களுக்கு தீமை குடுக்காத, அடுத்தவங்கள புரிஞ்சுக்குற எந்த காதலும் காமமும் சரி தான்.


மறைச்சு வைக்கப்படுற காமம் தான் எதயாவது செய்து அத அடைஞ்சே ஆகணும்னு பிடிவாதம் பிடிக்க வைக்குது. தைரியம் உள்ளவன் பெண்களை கற்பழிக்குறான், கோழை குழந்தைகள சீரளிக்குறான். இதுல ரெண்டு வகையினருமே கடைசில உண்மை வெளில வந்துடக் கூடாதுன்னு கொலையும் பண்ணிடுறாங்க.

தங்களோட உணர்வுகள பரிமாறிக்க, கலந்து ஆலோசனை பெற வழியே இல்லாத ஒரு தனித்து விடப்பட்ட சமுதாயம் தான் உயிர்களோட மதிப்பும் உணர்வும் தெரியாம விளையாடிகிட்டு இருக்குங்குறது தான் உண்மை. இயந்திர உலகத்துல கூட்டு குடும்ப வாழ்க்கை சிதறி போனது கூட ஒரு காரணமா இருக்கலாம். அதனால தான் சொல்றேன், குழந்தைகள் அதிகநேரம் செலவிடுற பள்ளிகள்ல ஆண் பெண் சமத்துவத்த அங்கீகரிக்கலாம்.

அத விட்டுட்டு, ஆண்கள் அத்தனை பேரும் வெட்கப்படணும், வேதனைப்படனும், ஆண்கள் அத்தனை பேரும் மோசமானவர்கள், கருவிலயே ஆண்களை அழிக்கணும்ங்குற மாதிரியான பொங்குதலோ, ஒரு பையன இப்படி வளத்தது அவன் தாயோட தப்பு, அவன் இப்படி இருந்தா அவன் அம்மா எப்படி பட்டவளா இருப்பாங்குற இழிநிலை ஆராய்ச்சிகளோ தேவையே இல்ல...

ஒரே ஒரு விசயத்த எல்லாரும் புரிஞ்சுகிட்டா சரி....

ஆணில்லாம பெண் இல்ல, பெண் இல்லாம ஆண் இல்லவே இல்ல. ஒருத்தருகொருத்தர் வடிகாலா இருந்தே ஆகணும். அத சரியானபடி புரிதல்களோட இருக்கணும்ங்குறது மட்டும் தான் இப்போதைய வேண்டுதல் எல்லாமே....


Sunday 12 February 2017

பாம்பும் நானும்



"நம்ம வீட்ல பாம்பு இருக்கு தெரியுமா?"ன்னு கேட்டுகிட்டே வந்தான் ராஜீவ்...

"ஐ, பாம்பா... சூப்பர், எங்க பாத்த?"ன்னு கேட்டேன்...

"உன் கார் முன்னால தான் ஊந்து போயிட்டு இருந்துச்சு"ன்னான்...

எனக்கு சாயங்காலமா பீச் போவமான்னு தங்கச்சி கேட்டது நியாபகம் வந்துச்சு. ஒரு கும்பலா போய் சில பல செல்ஃபிக்கள் எடுக்கணும்னு ப்ளான்.

கார் கண்ணாடி எல்லாம் ஏத்தி விட்டுருக்கான்னு தெரியல. இந்த எருமைங்க யார் ஏறினாலும் ஒழுங்கா கண்ணாடிய பூட்டுறதும் இல்ல, கதவ சரியா லாக் பண்றதும் இல்ல.

நிறைய தடவ அவசர அவசரமா கிளம்பி காலேஜ் போறப்ப, இதுக்காகவே நான் வண்டிய இடைல நிறுத்தி கதவ ஒழுங்கா லாக் பண்ண வேண்டியிருக்கும்...

இவன் வேற பாம்பு பாத்தேன்னு சொன்னானா, எனக்கு பாம்பு காருக்குள்ள இருந்து, சாயங்காலம் நாங்க வண்டிய எடுத்துட்டு போயிட்டு இருக்குறப்ப, திடீர்னு அது முன்னால வந்து தரிசனம் தந்தா எப்படி இருக்கும்னு கற்பனை எல்லாம் ஓட ஆரம்பிச்சிடுச்சு.



ஏற்கனவே இப்படி தான், காலேஜ்ல லேப்க்குள்ள பாம்பு வந்துரும்னு லேப் அசிஸ்டென்ட் பயந்தப்ப எனக்கு மட்டும் ஒரே சந்தோசமா இருந்துச்சு.

"தாத்தாகிட்ட வீட்டை சுத்தி இருக்குற செடி எல்லாம் வெட்ட சொல்லிட்டேன். இப்ப ஆள் வந்துருவாங்க"ன்னு அவன் குரல் கேட்டதும் தான் கற்பனை குதிரை என்னை தூக்கி வாரி போட்டுட்டு ஓடி போச்சு...

"என்னது, செடிய வெட்டப் போறாங்களா?"ன்னு அதிர்ச்சியில நான் அப்படியே ஷாக் ஆகிட்டேன்...

"பின்ன, பாம்பு வந்தா பயமா இருக்காதா, அதான் அந்த பிச்சி செடி, ரோஜா செடி எல்லாம் வெட்டிற சொல்லிட்டேன்"ன்னான்....

அவன் அதோட விடல, "இந்த காக்டெயில், finches எல்லாத்தையும் தூக்கி வெளில பறக்க விட சொல்லிட்டேன். அதோட நாத்ததுக்கு தான் பாம்பு வீட்டுக்கு வருது"ன்னு கூலா சொன்னான்.

எனக்கு பி.பி எல்லாம் கோக்குமாறா எகிற ஆரம்பிச்சுது.

"ஒரு செடிய வளர்த்து கொண்டு வர்றது எவ்வளவு கஷ்டம் தெரியுமா, இப்படி அருவா எடுத்து ஒரே வெட்டுல வெட்டணும்னு சொல்றியே, ஒரு உயிரோட அருமை தெரியுமாடா உனக்கு"ன்னு கத்த ஆரம்பிச்சுட்டேன்...

"பாம்பை பாத்தேன்னு சொன்ன, நான் எவ்வளவு சந்தோசப்பட்டேன் தெரியுமா? இன்னிக்கி ஒரு பாம்பு நம்மளால பாக்க முடியுதா, இயற்கை எல்லாம் இப்படியே அழிஞ்சு போயிட்டு இருந்தா கடைசில வெட்ட வெளில சுடுற சூரியன்ல நீயும் நானும் கரிஞ்சு தான் போகணும்:ன்னு படபடன்னு பொரிஞ்சு தள்ளிட்டேன்.

மொபைல் எடுத்து அப்பாவுக்கு கால் பண்ணி வெட்ட வேணாம்னு சொல்லிறலாம்னா அப்பா கால் அட்டென்ட் பண்ணவே இல்ல. அப்புறம் அண்ணனுக்கு கூப்ட்டு விசயத்த சொல்லி, "அப்பாகிட்ட செடிங்ககள வெட்ட வேணாம்னு சொல்லுண்ணே... வீட்டுக்கு வந்தாலே தனிமைல வெறிச்சுன்னு இருக்குற எனக்கு தொணையா இருக்குறது இந்த செடிங்களும் பறவைங்களும் தான். அதுகளும் இல்லனா எனக்கு பைத்தியமே பிடிச்சுடும்"ன்னு அழுதுட்டேன்...

"அதெல்லாம் நீ பயப்படாத, பாம்பு வந்தா இப்ப என்ன, எப்பவும் செடி மூட்டுக்குள்ளயா நாம போய் இருக்கோம். நான் சித்தப்பாகிட்ட சொல்றேன், சித்தப்பா சும்மா ராஜீவ சமாதானப் படுத்த சொல்லி இருக்காரு, அப்படி எல்லாம் பண்ண மாட்டாரு"ன்னு அவன் சொன்னதுக்கு அப்புறம் தான் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆனேன்...

நிஜமாவே யாருமே இல்லாத தனிமை எவ்வளவு கொடுமையா இருக்கும்னு அனுபவிச்சு பாத்தா தான் தெரியும். காலேஜ்ல இருந்து வீட்டுக்கு வந்தாலே, அங்க நமக்குன்னு யாரு இருக்காங்குற நெனப்பு அவ்வளவு இம்சையா இருக்கும். கிட்டத்தட்ட ஒரு ஜெயில் மாதிரின்னு தான் சொல்லணும்.

நிறைய பேரு கேப்பாங்க, எப்படி இப்படி தன்னந்தனியா உன்னால இருக்க முடியுது, பேசாம உன் அப்பாகூட போய் இருக்க வேண்டியது தானே"ன்னு. அதுக்கு நான் இப்படியே இருந்துடுவேன்னு பதில் சொல்லிடுவேன்.

அப்பப்ப வர்ற கிளிகள் சத்தம், கீச் கீச்ன்னு கத்துற அணில்கள் சத்தம், குயில், காக்கான்னு எல்லாரோட சத்தமும் தான் எனக்கு ஐ லவ் யூ சொல்லிகிட்டே இருக்கும்.

பாக்யா அடிக்கடி சொல்லுவா, உங்க வீட்ல உருப்படியா இருக்குற விசயமே அந்த பிச்சி செடிங்க தான்னு.... அது உண்மை தான். காரை கொண்டு வந்து பார்க் பண்ணினாலே, பச்சை பசேல்ன்னு அதோட செழுமையும், வெள்ளை வெள்ளையா பூத்து கிடக்குற பறிக்காத பூவும், கூடவே வர்ற வாசமும் மனசுக்கு அப்படி ஒரு இதம். சிகப்பு, மஞ்சள், வெள்ளைன்னு அப்பப்ப மொட்டு விடுற ரோஜாக்கள பாத்தா அது ஒரு பெருமை. சந்தோசம். "ஹாய் டா பசங்களா, நல்லா இருக்கீங்களா"ன்னு ஒரு விசாரிப்பு விசாரிக்க தோணும்.

கதவ தொறந்துட்டு ஹால் உள்ள வந்தா இரை கேட்டு கண்ணாடிய முட்டிக்கிட்டு நிக்குற மீன்கள பாத்தா ஒரு சிரிப்பு வரும். "இந்தா வந்துட்டேன்"ன்னு அதுக்கு ரெண்டு இரை எடுத்து போட்டுட்டு இருக்குறப்பவே ப்ரித்வி கழுத்தை ஒரு பக்கமா சாய்ச்சு என்னை பாத்துகிட்டே "க்க்க்க்கேஏஏஏ"ன்னு ஒரு குரல் குடுப்பான். நாமளும் எதிர்குரல் அவன் குரல் மாதிரியே குடுக்கணும். நல்ல மிமிக்கிரி ப்ராக்டிஸ்... சம்யூ குறுகுறுன்னு என்னையே பாத்துட்டு இருப்பா... இவங்க தான் என்னோட காக்டெயில். அவங்கள பாத்து சிரிச்சு ரசிச்சுட்டு என்னோட ரூமுக்குள்ள நுழைவேன்.

அங்க எனக்கு எப்பவும் துணையா இருக்குறது finches. உங்களுக்கு புரியணும்னு தான் finchesன்னு சொன்னேன். மத்தப்படி, அவங்க தான் என்னோட போர்ப்படை தளபதிகள். யுவா, கயல், நவீன், மிருதுள், பாரதி, நளன், தமயந்தின்னு அவங்க பேரு.

இப்படி ஒரு உலகத்துல வாழ்ந்துட்டு இருக்குற என்கிட்ட வந்து செடிய வெட்டப் போறோம், பறவைங்கள விரட்டப் போறோம்னு விளையாட்டா சொன்னா கூட டென்சன் வருமா வராதா?

"நீ சின்னப் புள்ளைல பாம்பு பின்னால தொரத்திகிட்டு ஒடுவியாம், உண்மையா?"ன்னு ராஜீவ் அடுத்த கேள்வி கேட்டான்.


அதென்னடா சின்னப்புள்ளையிலன்னு சொல்ற, இப்பவும் பாம்பு பின்னால ஓட ஆசை தான், ஆனா உடல்நிலை ஒத்துழைக்க மாட்டேங்குறதேன்னு மனசுல  நினைச்சுகிட்டே "ஆமா... எனக்கு எல்லா உயிர்களுமே ரொம்ப புடிக்கும். அதுங்க கூட பழகுறதும் நேசிக்குறதும், பேசுறதும் ஒரு சாகசம். உனக்கு புரியாது. நீ என்னடான்னா ஒரு பாம்பை பாத்ததுக்கு பயந்து நடுங்கி, இப்படி எல்லாத்தையும் அழிக்கணும்னு அழிசாட்டியம் பண்ணிட்டு வந்துருக்க"ன்னு மூக்கை பிடிச்சு இழுத்தேன்.

"ஏன் எனக்கு இதெல்லாம் தெரியல"ன்னு கேட்டான்.

"நேசிக்க ஆரம்பி, அதுக்கும் வலிக்கும், அதுக்கும் ஏதாவது பிடிக்கும், அதுக்கும் மனசுன்னு ஒண்ணு இருக்கும்ன்னு நீ புரிஞ்சுகிட்டாலே அதுங்க கூட பேச ஆரம்பிச்சுடலாம்"னு சொன்னேன்.

"ரொம்ப மொக்கப் போடாத"ன்னு சொல்லிட்டு போய்ட்டான்... இப்ப பழையபடி தனிமை.

"க்க்க்க்கேஏஏஏ, ரூம்ல என்ன பண்ணிட்டு இருக்க"ன்னு ப்ரித்வி இந்தா கூப்டுறான்....

Monday 6 February 2017

சவாதி அண்ணன் - வேர்களை தேடி



மூத்தம்மாவ பாக்க வீட்டுக்கு போயிருந்தேன்...

அம்மா அப்பாவ நல்லா வச்சு காப்பாத்தணும்னு சவாதி அண்ணன் ஆச ஆசையா கட்டின வீடு அது...

நான் போனதுமே, பரபரன்னு ஓடி வந்து கதவ தொறந்தாங்க....

"ஏ மக்ளே, சோமா இருக்கியா? வா மோளே, பாத்து வா, மெதுவா வா..."ன்னு பரவசத்தோடயே வரவேற்றாங்க...

"ஒண்ணுமில்ல மூத்தம்மா, நம்ம குடும்பத்துல உள்ள அத்தன பேர் பத்தின விவரங்களையும் தேடிட்டு இருக்கேன்... அதுல பெண் வாரிசுங்கள பத்தின குறிப்புகள் இல்ல, அதான் உங்ககிட்ட கேட்டுட்டு போவலாம்னு வந்தேன்" நேரா விசயத்துக்கு வந்துருந்தேன்...

அதென்னவோ, எப்படி இருக்கீங்க, நல்லா இருக்கீங்களா?ன்னு யார பத்தியும் குசலம் விசாரிக்குற பழக்கம் எனக்கு வரவே மாட்டேங்குவு...

அப்படியே ஒவ்வொரு விபரமா கேட்டுகேட்டு பேப்பர்ல எழுதிட்டு இருந்தேன்.

மூத்தம்மாவுக்கு நிரம்ப சந்தோசம். பல கதைகளும் பேசினதுக்கு அப்புறம் பேச்சு சவாதி அண்ணன் பத்தி திரும்பிச்சு...

அவன் பேரு கனக சபாபதி. எனக்கு அவன் சவாதி அண்ணன்.

இங்க பொதுவா எல்லார் வீட்லயும் show case இருக்கும். அண்ணனோட show case ரொம்ப பெருசு. ஒரு பெரிய சுவர் முழுக்க show caseசா மாத்தி வச்சிருந்தான். அதுல புத்தகங்கள தவிர வேற எதுவும் இருக்கவும் இருக்காது...

என்னோட புத்தகம் ஒண்ண எடுத்துட்டு போயிருந்தேன். அண்ணனுக்கு தான் புத்தகம் பிடிக்கும்ல மூத்தம்மா, அதான் கொண்டு வந்தேன், இது அவனுக்குன்னு அத மூத்தம்மாகிட்ட குடுத்தேன்...

அந்த புத்தக அலமாரியில இருந்த சில புத்தகங்கள எடுத்து பாத்தேன். அம்மா அப்பாவ பாராமரிக்குற முறைகள அடிகோடு போட்டு வச்சிருக்கான்...

பின்ன இந்த பய ஏன் இப்படி திடீர்னு செத்துப் போனான்னு தொண்டைக்குள்ள துக்கம் அடைக்க ஆரம்பிச்சுது...

கணவன் மனைவி சண்டை, சந்தேகம், மனநிலை பாதிப்புன்னு ஆளாளுக்கு பேச விட்டுட்டு அவன் பாட்டுக்கு போய் சேர்ந்துட்டான்...

அவன் செத்து போனதுக்கு யாரு வேணா ஆயிரம் காரணம் சொல்லலாம், ஆனா அந்த உண்மை அவனுக்கும், அவன் கூடவே எரிஞ்சி போன அண்ணிக்கும் தான் தெரிஞ்சிருக்கும்...

"அவன் அப்படி போனான்னு நினைக்கல மோளே, அவன் நேரம் போகணும்னு இருக்கு, போய்ட்டான்... உன் அண்ணி இருக்காளே, அவளும் ஒரு வார்த்த சொல்லல. என் முன்னால தான் ரெண்டு பேரும் உள்ள போனாங்க, கதவடைச்சுகிட்டாங்க. அவனுக்கு கொல்லாங்கொட்டை தவுத்து குடுத்துட்டு இருந்த சத்தம் கூட கேட்டுச்சு. அத தின்னுகிட்டு இருக்கும் போது தான் இப்படி ஒரு சம்பவம் நடந்து போச்சு"ன்னு சொன்னப்ப மூத்தம்மா கண்ணுல கண்ணீரே இல்ல. எல்லாமே வத்தி போயிருக்கும்.

நின்ன இடத்துலயே நின்னு எரிஞ்சி செத்துப் போனான் அண்ணன். யாரையும் பழி சொல்லாம, வீரப்பா அதிகார தோரணைலயே பதில் சொல்லிட்டு அண்ணியும் செத்து போனாங்க.

"உன் அண்ணன் போனப்ப உன் மூத்தப்பா கொஞ்சமும் கலங்கல. இன்னிக்கி போகலனா இன்னொருநாள் தனியா போயிருப்பான், இப்ப தொணைக்கு பொண்டாட்டியையும் கூட்டிட்டு போயிட்டான்னு மட்டும் சொல்லுவார்" மூத்தம்மா மூத்தப்பா பத்தி சொன்னாங்க. அண்ணன் செத்த ஒரு வருசத்துல மூத்தப்பாவும் செத்துப் போய்ட்டார்...

"இந்த வீட்ல தனியா இருக்க உங்களுக்கு பயமா இல்லையா மூத்தம்மா"ன்னு கேட்டா, "நான் தனியா எல்லாம் இல்ல மோளே, அதான் உன் அண்ணன் கூட தானே இருக்கான். எனக்கு ஏதாவது பிரச்சனைனா அவன் இப்பவும் வந்து நிப்பான்"ன்னு சொன்னாங்க.

அவனுக்கு பிடிக்காத எதுவும் அந்த வீட்ல நடக்கவே முடியாது. அவன் நடக்க விடவும் மாட்டான். மூத்தமாவ நல்லா கவனிக்கணும்ன்னு வீட்டு வேலை செய்ற கோமதி பாட்டிகிட்ட கனவுல வந்து அடிக்கடி சொல்லுவானாம்.

மூத்தப்பா சாகுறதுக்கு முன்னாடி லீவ் போட்டுட்டு போன நர்ஸ் கனவுல போய் அப்பாவுக்கு உடம்பு சரியில்ல, உடனே எங்கப்பாவ போய் கவனிங்கன்னு சொல்லி இருக்கான்... ஆச்சர்யமா இப்பவும் பாப்பா சித்தி (நர்ஸ்) சொல்ற விஷயம் இது...

ஆமா, நம்புறவங்க நம்பட்டும், நம்பாதவங்க நம்ப வேணாம், ஆனா அண்ணன் இன்னமும் இங்கயே தான் இருக்கான். அதுவும் பொண்டாட்டியோட சந்தோசமாவே இருக்கான்...