Saturday 30 May 2015

பாலியல் புரிந்துணர்தல்கள்



இத நான் எழுதலாமா வேணாமான்னு தெரியாம கொஞ்ச நேரம் குழம்பி தான் இருந்தேன். காரணம், ஒரு விசயத்த எடுத்து பேச ஆரம்பிக்கும் போது தப்பான தகவலோ இல்ல முரணான தகவலோ குடுத்துடக் கூடாதுன்னு எப்பவும் தீர்க்கமா இருப்பேன். ஆனா இப்ப நான் பேசலாம்னு முடிவெடுத்த விசயத்த பத்தி எனக்கு எதுவுமே தெரியாது.

சரி, தெரியாத விசயத்த ஏன் பேசுவானேன்னு கேட்டீங்கனா, அப்போ பேசவே பேசாம இருந்துட்டா எப்ப தான் தெளிவடையுறது?

அதனால, ஒருவேளை நான் ஏதாவது புரிதல் இல்லாம எழுதியிருக்கலாம், இல்ல, எனக்கு தெரிஞ்சதுன்னு தப்பான தகவல குடுத்துருக்கலாம், பேசலாம், ஆரோக்கியமான விசயமா மட்டும் பேசலாம்.

ஏற்கனவே பொதுவெளில இந்த மாதிரி எல்லாம் பேசக் கூடாதுன்னு சட்டம் கிட்டம் போட்டு வச்சிருக்காங்களான்னு தெரியல, ஆனா இத பத்தி பேச நினைச்சாலே என்ன ஏதுன்னு கூட யோசிக்காம பட்டுன்னு ஒரு முத்திரைய குத்திட்டு போய்டுறாங்க.

நான் இத பத்தி பேசணும்னு முடிவெடுத்த காரணம் நேத்து நந்து என்கிட்ட கேட்ட கேள்வி.

தன்னோட பிரெண்ட் முருகேஷ்ன்னு ஒரு பையன கூட்டிட்டு வந்து அறிமுகப் படுத்தினா. சரி வான்னு உக்கார வச்சி பேசிட்டு இருந்தேன். அப்படியே என்னோட ரூம் எல்லாம் கிளீன் பண்ணி, புக்ஸ் எல்லாம் அடுக்கி வச்சுட்டே ஹால்ல வந்து உக்காந்தோம் எல்லாரும்.

கொஞ்ச நேரம் மீனையே பாத்துட்டு இருந்தா. அக்கா, எனக்கு சமையல் கத்துக்கணும்னு ஆசையா இருக்கு, இந்த சண்டே நாம சிக்கன் சமைக்கலாமான்னு கேட்டா.

இந்த சண்டேவா? இல்ல, முடியாது, இன்னும் நாலஞ்சு நாளைக்கு என்னை தொல்லைப் பண்ண நினைக்காதன்னேன்.

ஏன், ஏன், தொல்லைப் பண்ண கூடாது? – இது அவ

உடம்பு சரியில்லாம ஆகும்டி – இது நான்

ஹஹா உடம்பு சரியில்லாம போனா கூட சொல்லிட்டு தான் வருமா? லூசாக்கா நீ? – அவ தான்

அதெல்லாம் அப்படித் தான். சொன்னா கேட்டுக்கோ – நான்

அப்படி என்ன தான் உனக்கு உடம்பு சரியில்லாம வரும்? – அவ

வயிறு வலிக்கும்டி – நான்

அப்ப அடுத்த நாள் – அவ

மூணு நாலு நாளைக்கு அப்படி தான் இருக்கும். நான் அசைய மாட்டேன் – நான்

அப்படினா மாசா மாசம் வலிக்குமா? – அவ

ஆமா – நான்

கொஞ்ச நேரம் அமைதியாவே இருந்தா. இத்தனையும் பக்கத்துல உக்காந்து எதுவுமே கவனிக்காத மாதிரி எங்கயோ பாத்துட்டு காலாட்டிட்டு இருந்தான் முருகேஷ்.

திடீர்னு நந்து அடுத்த கேள்விய கேட்டா.

அக்கா, எங்க ஸ்கூல்ல லலிதா ப்ளஸ் டூ படிக்குறாங்க. அவங்க சொன்னாங்க, பெரிய மனுசி ஆகலனா குழந்தை பிறக்காதாம். உண்மையா?

எனக்கு புரியல, இதெல்லாம் இந்த வயசுல இவளுக்கு எப்படி விளக்கி சொல்றது, இல்லனா அப்படியே விளக்கி சொல்றதா இருந்தாலும் இது சரியான நேரம் தானா? பக்கத்துல வேற பத்து வயசுல ஒரு பையன் உக்காந்துட்டு இருக்கான். சரி ஏதாவது சொல்ல ட்ரை பண்ணுவோம்னு ஆரம்பிச்சேன்.

அவ சொன்னது நிஜம் தான். வயசுக்கு வரலனா குழந்தை பிறக்காது.

ஏன் அப்படி?

ஏன்னா, பிறக்குறப்ப எல்லாருமே குழந்தைங்க தான். அவங்க ஒரு குழந்தை பெத்துக்குறதுக்கு அவங்க உடம்புல மாற்றம் வர வேண்டியிருக்கு. அதனால தான் அவங்க வயசுக்கு வராங்க.

அப்படினா மாசா மாசம் ரெத்தம் வருமா?

வரும்.

சட்டுன்னு முருகேஷ் கிட்ட திரும்பி, அப்படினா பாய்ஸ்க்கு எப்படி? அவங்களுக்கும் ரெத்தம் வருமா? நீங்க எல்லாம் பெரிய மனுஷன் ஆவுறத எப்படி தெரிஞ்சுப்பீங்க?

அவ இப்படி ஒரு கேள்வி திடீர்னு கேப்பான்னு நானும் எதிர்பாக்கல, முருகேசும் எதிர்பாக்கல. சரி, அவன் என்ன தான் சொல்றான்னு பாக்கலாம்னு அவனையே பாத்தேன்.

கூச்சமா நெளிஞ்சான்.

அவன காப்பாத்தலாம்ன்னு நினச்சு, அதெல்லாம் அவங்களே தெரிஞ்சுப்பாங்கன்னு சொன்னேன்.

அவன் டக்குன்னு, அக்கா, அந்த மீனுக்கு என்ன இரை போடுவீங்கன்னு பேச்சை மாத்திட்டான். பேச்சும் திசை மாறி போய்டுச்சு.

அவங்கள அனுப்பி வச்சுட்டு தனியா வந்து உக்காந்து யோசிக்க ஆரம்பிச்சேன்.

பெண் சுதந்திரம், பெண்களுக்கான கொடுமைகள், பெண்களுக்கான அவஸ்தைகள்ன்னு இன்னிக்கி பெண்கள பத்தி பெண்கள் கூட சுதந்திரமா பேச ஆரம்பிச்சாச்சு. பெண்கள் படுற கஷ்டம் என்னென்னன்னு அவங்களால பொதுப்படையா பேசவும் முடியுது. ஏன், தன்னோட வயசுல இருக்குற பையன் கிட்ட நீ எப்படி வயசுக்கு வருவன்னு தயக்கமே இல்லாம நந்துவால கேக்க முடியுது. அத கேக்குறப்ப அவ கிட்ட எந்த தடுமாற்றமும் இல்ல. நேருக்கு நேரா அவன பாத்து அந்த கேள்விய கேக்குறா அவ. அப்படினா ஒரு சுதந்திரமான தலைமுறை பிறந்துடுச்சுன்னு தான அர்த்தம்?

நானும் கூட சின்ன வயசுல தைரியமா பேசி திரிஞ்சிருக்கேன். எந்த சந்தேகம்னாலும் தீத்து வைக்க அம்மா இருந்தா. பீரியட்ஸ், குழந்தை பிறப்பு, குடும்ப கட்டுப்பாடு, குழந்தை எப்படி பிறக்கும், சிலருக்கு ஏன் குழந்தை பிறக்க மாட்டேங்குது, எக்ஸ் க்ரோமோசோம், வொய் க்ரோமோசோம், ஹீட் பீரியர்ட்ன்னு எல்லாம் தெரிஞ்சி வச்சுட்டு தயக்கமே இல்லாம ஊர்ல உள்ள பொம்பளைங்களுக்கு எல்லாம் விளக்கம் குடுத்துட்டு இருப்பேன். கூடவே தான் என்னோட பிரெண்ட்ஸ் இருப்பாங்க. ஆனா அதே பசங்களுக்கு என்னென்ன பிரச்சனை வரும்னு நான் கேட்டதும் இல்ல, யோசிச்சதும் இல்ல. ஏன் அவனுங்களே பெண்களோட கஷ்டம் அவஸ்தைன்னு தான் பேசியிருக்கான்களே தவிர, ஆண்களோட விஷயங்கள் பத்தி பேசினது கூட இல்ல. பேசணும்னு யோசிச்சது கூட இல்ல.

ஆக, பாலியல் சம்மந்தமான ஒரு புரிதல் பெண்களுக்கு வர ஆரம்பிச்சுடுச்சு. அதப் பத்தி பேச நிறைய ஆண்களும் களத்துல இறங்கிட்டாங்க.

ஆனா இந்த ஆம்பள பசங்கள யாரு தான் கவனிக்குறா? அவங்களுக்குன்னு பிரச்சனைகளே இருக்காதா?

பொம்பள புள்ளைங்க விசயத்த பிரெண்ட்ஸ் மூலமா தெரிஞ்சுக்குறாங்க. அதுல வர்ற சந்தேகத்த வீட்ல உள்ள பெரியவங்க கிட்ட கேட்டு தெளிவாகிடுறாங்க. அதுவே பசங்களும் பிரெண்ட்ஸ் மூலமா தான் தெரிஞ்சுக்குறாங்க. ஆனா வர்ற சந்தேகத்த பெரியவங்க கிட்ட கேட்டுக்குற அளவு அவங்களுக்கு நாம சுதந்திரம் குடுத்துருக்கோமா?

அப்படி ஒரு பையன் ஏதாவது கேட்டுட்டா அத அருவெருப்பாவோ இல்ல, இதெல்லாம் நீ பேசக் கூடாது, அதெல்லாம் நீயா தெரிஞ்சுப்பன்னு அவன தவிர்த்து தான விடுறோம்.

இதே சந்தேகத்த பிரெண்ட் ஒருத்தன்கிட்ட நானும் கேட்டேன். நீங்க எல்லாம் எப்படிடா வயசுக்கு வர்றீங்க? அத எப்படி தெரிஞ்சுப்பீங்க?ன்னு.

இதுக்கெல்லாம் தனியாவா ட்யூசன் போக முடியும்? பக்கத்து வீட்ல ஏதாவது பொண்ணை பாத்தா சட்டுன்னு வந்துரும். அப்ப தான் பெரிய மனுஷன் ஆகிட்டோம்னு தெரிஞ்சுக்குறோம். அப்புறம் அதப் பத்தி விரிவா தெரிஞ்சுக்க மஞ்சள் பத்திரிக்கையும், ப்ளூ பிலிமும் பிரெண்ட்ஸ் தருவாங்க. அத எல்லாம் பாத்து தெரிஞ்சுக்க வேண்டியது தான்னு.

அவனுக்குள்ள ஏற்படுற சந்தேகத்த அவனே  தான் தீத்துக்கணும். சரி, அதுக்கான தீர்வையாவது இந்த இன்டர்நெட், பத்திரிக்கை ஊடகங்கள் செய்து வச்சிருக்கா? அப்படியே இருந்தாலும் குவிஞ்சு கிடக்குற குப்பைகள் தான அவன ஈசியா ஈர்த்துடுது. அந்த குப்பைய ஒதுக்கி, தேவையானத மட்டும் எடுத்துக்க பசங்களுக்கு எத்தன பக்குவம் வர வேண்டியிருக்கு.

தானாவே புரிஞ்சுக்குற பையன் இங்க காலங்காலமா எல்லார் மனசுல ஊறிப் போன அழுக்கை தான் அழகுன்னு புரிஞ்சுப்பான். பொண்ணுங்கனா அவங்க தன்னோட இச்சைய தீத்துக்குற ஒரு உயிரினம்ன்னு தான் புரிஞ்சுப்பான். அவனோட ஆசைத் தீர சரியான வழி என்னன்னு தெரியாம தனக்கு புரிஞ்ச மாதிரி கைல கிடைக்குற பொண்ணை தூக்கிட்டு போய் ரேப் பண்ணத் தான் செய்வான்.

அச்சச்சோ, என்னமோ என் உடம்புல இருந்து வருது, இது என்னன்னு அவனால பெரியவங்க கிட்ட கேக்கவா முடியும்? அதுக்கான சுதந்திரத்தையோ அது பத்தின அவனோட கூச்சத்தையோ போக்கணும்னு எந்த பெத்தவங்களாவது யோசிச்சிருக்காங்களா?

டெல்லி ரேப் கேஸ்ல கேட்டானே, அவ ஒத்துழைச்சிருந்தா அவள கொல்ல வேண்டிய அவசியம் வந்திருக்காதேன்னு, அவனோட புரிதல் அவ்வளவு தான். இந்த சமூகம் அவனுக்கு இவ்வளவு தான சொல்லிக் குடுத்துருக்கு.

பெண் பருவமடைய தயாராகும்போது அவளோட உடல், மன மாற்றங்கள பத்தி இப்ப பேச நிறைய பேர் இருக்காங்க, ஆனா அதுவே பசங்கள பாத்து அவங்களோட மாற்றங்களை புரிஞ்சு அவங்கள சரியான பாதைல திருப்புற வேலைய இந்த சமூகம் பண்ணிட்டு தான் இருக்கா? எனக்கு தான் அதப் பத்தி தெரியலையான்னு எனக்கு புரியல.

நாளைக்கு ஒரு பையனுக்கு அம்மாவா ஆனா, இத எல்லாம் தெரிஞ்சுக்காம நான் எப்படி அவனை எதிர்க்கொள்றது? பொம்பள புள்ளைய பெத்து அவள சகல சுதந்திரத்தோட வளர்த்து விடணும்னு நினைக்குற நான் எனக்குன்னு ஒரு ஆம்பள புள்ள பொறந்தா அட்லீஸ்ட் கேள்வி கேட்டு தெளிவடையுற அடுத்த ஜெனெரேசனா அவன வளர்த்தெடுக்க வேணாமா? அதுக்கு நான் பசங்கள பத்தி தெரிஞ்சுக்க வேணாமா?

இது கூட ஒரு விதத்துல பாலியல் வன்முறை தானா? அவனுக்கான கேள்வி கேக்குற உரிமைகள கூட நாம மறுத்து  தான் வச்சிருக்கோமா?




.

Friday 29 May 2015

ரெட்டை ஜடை வயசு


அதென்னமோ இந்த வாரம் பேஸ் புக்ல  பின்னி கொண்டை வச்சு பூ சூடுற வாரம் போல... ஆளாளுக்கு ஜடைப் பின்னி தலைல பூ வைக்குறது பத்தி எழுதினாங்கனா நான் சும்மா இருக்க முடியுமா? அதனால நான் இப்ப ஒரு ப்ளாஸ் பேக் சொல்லியே தீருவேன், எல்லாரும் படிச்சுட்டு அவங்கவங்க ப்ளாஸ் பேக்கை சொல்லிட்டுப் போங்க.

இந்தா, மெழுகுவர்த்தி சுத்த ஆரம்பிச்சிடுச்சு.

சொயிங்.....
-----------------------------------------------------

அப்ப எனக்கொரு அஞ்சு வயசு இருக்கும். தலைல முடிய மொட்டையா பையன் மாதிரி வெட்டி விட்ருவாங்க. நான் வேற எப்பப் பாரு சட்டையும் டவுசரும் போட்டுட்டு பசங்க கூட்டத்துலயே திரிவேனா, நம்மள யாரும் பொம்பள புள்ளன்னு அடிச்சு சொன்னாலும் நம்ப மாட்டாங்க. அதுக்கப்புறமா தான் எங்க பாட்டி, பொம்பள புள்ளைக்கி ஒரு டோப்பாவாவது வச்சு விடுங்கடேன்னு சொல்ல, மஸ்ரூம் கட் எனக்கு அடையாளமா போச்சு.

செகண்ட் படிக்குறப்ப கூட படிக்குற புள்ளைங்க எல்லாம் ஜடை பின்னி ரிபன் கட்டிட்டு வர்றத பாத்து எனக்கும் ரெட்டை ஜடை போடணும்னு ஆசை வந்துடுச்சு. அவ்வளவு தான் முடி வெட்ட போக மாட்டேன்னு உருண்டு புரண்டு அடம் பிடிக்க, கொஞ்ச நாள்லயே நானும் ரெட்டை ஜடை போட்டு, அத மடிச்சு வேற கட்டி ஒரு மாதிரியா கெத்தா நடக்க ஆரம்பிச்சுட்டேன்...

ஸ்டாப் ஸ்டாப் ஸ்டாப்..... நம்ம பராக்கிரமம் எல்லாம் கொஞ்சம் தள்ளி வச்சுக்கலாம், இல்லனா கண்ணு பட்டுரும். இப்ப நீங்க எல்லாரும் ஒரு பனிரெண்டு வருஷம் பின்னாடி வந்து எங்க தோட்டத்துல நில்லுங்க...
-------------------------------------------

ஆங்... வந்தாச்சா, அந்தா பாத்தீங்களா அதான் ரோஜாத் தோட்டம். நம்ம ஆடு மாடுங்க எல்லாம் மேய்ஞ்சுற கூடாதுன்னு வேலி போட்ருக்காங்களா, அங்க கேட்டை தொறந்துட்டு உள்ளப் போவோம்.

இந்தா, இதான் பட்டன் ரோஸ், ரோஸ் கலர்ல அடுக்கடுக்கா, கொத்து கொத்தா பூத்து கிடக்கா, அந்த அது வெள்ளை பட்டன் ரோஸ். அந்தா அங்க ஆரஞ்ச், செகப்புன்னு பட்டன் ரோஸஸ் பாருங்க. அம்மாவுக்கு பட்டன் ரோஸ்னா ரொம்ப பிடிக்கும். அதான் நாலஞ்சு பட்டன் ரோஸ் நிக்குது.

தம்பிக்கு எப்பவும் பெங்களூர் வரைட்டி தான் பேவரைட். அதுலயும் ரெட் ரோஸ். கூடவே மஞ்ச ரோசாப் பூவும் சிரிக்குது பாருங்க.

இந்தா, இது பன்னீர் ரோஸ். என்னோட பேவரைட். அப்பாவுக்கும் இது ரொம்ப பிடிக்கும். தலைல கூட வைக்க வேண்டாம், அப்படியே பறிச்சு, பச்சையா திங்கலாம். வாசம் எப்படி இருக்கும்ங்குறீங்க, கும்ன்னு இருக்கும்.

அப்புறம், அந்தா, அங்க வெள்ளை, ஆரஞ்ச், ஆரஞ்ச் சிகப்புமா டபுள் கலர் எல்லாமே அழகோ அழகு.

இங்க எல்லாம் பூ பறிக்க அனுமதி உண்டுனாலும் ஊர்ல உள்ள புள்ளைங்க எல்லாம் ஒத்த ரோசாப்பூ வேணும்னு கேட்டு வந்தா, தம்பி தரமாட்டேன்னு தரைல உளுந்து பொரண்டு பொரண்டு அழுவான். அத்தன புள்ளைங்களும் அவனுக்கு படு ஐஸ் வைக்கப் பாப்பாங்க, பய மசிய மாட்டான். அய்யய்யோ, அவனப் பத்தி தனியா எழுதணும்ல நினச்சேன், ஹெலோ ஹலோ, தம்பியப் பத்தி நான் எழுதினத மறந்துடுங்க.

உங்கள நான் மல்லிகை தோட்டத்துக்கு கூட்டிட்டுப் போறேன். இந்தா இங்க நாலஞ்சு குத்து செடி நிக்குது பாத்தீங்களா, இதான் மல்லிகை செடி. செடி முழுக்க மொட்டா தான் இருக்கும். அப்புறம், அந்தா பிச்சி செடி, கனகாம்பரம் எல்லாம் நிக்குது பாருங்க. கனகாம்பரத்துல மஞ்சள், செகப்பு, ஆரஞ்ச், பச்சை, நீலம்ன்னு எல்லா வரைட்டியும் உண்டு. கூடவே டிசம்பர் பூவும்.

இந்த பூவெல்லாம் ஒட்டுமொத்தமா பறிச்சுட்டு வந்து நாலுகட்டு முத்தத்துல சொளவுல கொட்டி வச்சுட்டு ஊருல உள்ள பொம்பளைங்க எல்லாம் கால் நீட்டி உக்காந்து வம்பளந்துகிட்டே பூத் தொடுப்பாங்க.

லூஸ் விட்டு சாமிக்கி கட்டுறதுல இருந்து, சுத்தி கட்டுறது, சொட்டைப் போட்டு கட்டுறது, கால்ல கொக்கி போட்டு கட்டுறதுன்னு ஆளாளுக்கு டைப் டைப்பா கட்டுவாங்க.

அப்புறம் நாலு மணி பூ தோட்டம் முழுக்க பரவியிருக்கு பாத்தீங்களா, இது எல்லாம் வயலட் கலர். வெள்ளை, மஞ்சள், சிகப்பு எல்லாம் எங்க வீட்ல இல்ல.

அந்த வேலி ஓரத்துல நாட்டு செம்பருத்தி நிக்குதே, அதோட பூவ பறிச்சி தான் தலைக்கு வைக்க எண்ணெய் காய்ப்பாங்க. அப்படியே அந்த மருதாணி மரத்துல உள்ள இலையும் எண்ணெய் சட்டியில பொறியும்.

அப்பா, மருதாணி இலையை பறிச்சி, உருட்டி, வெயில்ல காய வச்சு, முத்துன தேங்காய அடிச்சு, துருவி, பால் பிழிஞ்சு, பெரிய உருளில விட்டு நல்லா வத்த காய்ச்சு, எண்ணெய் தனியா, கக்கன் தனியா பிரிஞ்சதும், உள்ளி, கருவேப்பிலை எல்லாம் போட்டு கூடவே காய வச்ச மருதாணி உருண்டைகளயும் போட்டு வைப்பாங்க. இன்னிக்கி வரைக்கும் நமக்கு எண்ணெய் காய்ச்சு தர்றது அப்பா தான்...
----------------------------------------------

கம்மிங் பேக் டு த பாயிண்டு.

இப்படி எல்லாம் எண்ணெய் காய்ச்சி, தலை நிறைய வச்சதால தானோ என்னவோ எனக்கு முடி கருகருன்னு நீளமா வளர ஆரம்பிச்சிடுச்சு. நம்ம சும்மாவே அராத்து, இதுல முடி வேற நீளமா இருந்தா கேக்கவா வேணும்?

தலைப் பின்னி விடத் தான் அப்பம்மா இருந்தாங்களே, ப்ரீ ஹேயர் விடுறதுல இருந்து, இறுக்கமா ஆயிரங்கால் பின்னல் வரைக்கும் போட்டு விடுவாங்க. முன்னால கொஞ்சம் முடிய மட்டும் தனியா வகிடு எடுத்து, அத அப்படியே சுருட்டி தொப்பி மாதிரி வச்சுட்டு, பின்னால குட்டி குட்டியா ஆயிரங்கால் பின்னல் போட்டுட்டு, அதுல பட்டன் ரோஸ் வச்சு அலங்கரிச்சு போனா அத்தன புள்ளைங்களும் ஆ-ன்னு வாயப் பொளக்கும். நதியா கொண்டை இன்னொரு ரகம்.

அப்புறம் இன்னொரு ஹேர் ஸ்டைல். அது என்னன்னா, அப்படியே மண்டைல அத்தன முடியையும் நேர் நேர் கோடு எடுத்து இருபத்து அஞ்சு, முப்பதா பிரிச்சுப்பாங்க, அப்படியே அதையும் மூணா பிரிச்சு பின்னிகிட்டே வந்தா, இந்த நைஜீரியன் பார்ட்டிங்க எல்லாம் எங்க பாட்டிகிட்ட ட்ரைனிங் எடுக்கணும். அப்படியே அத்தனையையும் பின்னி முடிச்சு, பின்னால வந்து ஒரு ரப்பர் பேண்டோ இல்ல, ரிப்பனோ வச்சு இறுக்கி கட்டுவாங்க. அதோட முடிஞ்சுதானா இல்ல, பின்னால கிடக்குற முடிய மறுபடியும், ஒரு பதினஞ்சு, இருபது பாகமா பிரிச்சு, அப்படியே முறுக்கி முறுக்கி, ஒரு கயிறு மாதிரி திரிச்சி, அப்படியே ரப்பர் பேண்டுக்குள்ள மடக்கி சொருகிடுவாங்க. அந்த நேரம் என்னை பாத்தா, இந்த ஆப்பிரிக்கன் அழகிங்க எல்லாம் மலைச்சி போய்டுவாங்க கேட்டீங்களா?

ஊருக்குள்ள ஒரு புள்ளையும் நம்ம ஹேர் ஸ்டைல்ல திரியக் கூடாது... எவளாவது அப்பம்மாகிட்ட வந்து அதே மாதிரி பின்னிட்டு போய்ட்டா, அன்னிக்கி அப்பம்மா க்ளோஸ். தூக்கிப் போட்டு மிதிக்க எல்லாம் செய்திருக்கேன் (அவ்வ்வ்வ் ஜாரி). ஆனாலும் என்னை அப்படி திமிரோட வளர்த்தது அப்பம்மா குத்தம் தான். அம்மா கைக்குள்ள நான் முழுசா போனதே சிஸ்த் வந்ததுக்கப்புறம் தான்.

அப்புறமா தான் நாம இந்த சமூக சேவை, அது இதுன்னு (அட நம்புங்கப்பா) பசங்க கூட அதிகமா சுத்த ஆரம்பிச்சுட்டேனா, ஒரு நாள் அவசரமா ஒருத்தருக்கு ரெத்தம் தேவை, வா, ஊருக்குள்ள போய் கேன்வாஸ் பண்ணி நாலஞ்சு பேர குண்டு கட்டா தூக்கிட்டு போகணும்னு பிரெண்ட் ஒருத்தன் அவசரப் படுத்தினான். இருடா, பின்னல்ல சிக்கு விழுந்திடுச்சு, அவுக்கவே முடியலன்னு பின்னல் கூட மல்லுக் கட்டிட்டு இருந்தேனா, உனக்கு மேக் அப் பண்ணவே அரை நாளு ஆவும், நான் மாலிய கூட்டிட்டுப் போறேன்னு அவன் கிளம்ப போக, அந்த மாலினி புள்ள வரவர எப்பப் பாத்தாலும் இந்த மூர்த்தி கூட ஒட்டிகிட்டு திரியுறா, அவள அவன் கூட அனுப்பலாமா?
பக்கத்துல இருந்த கத்திரிய எடுத்து ஒரே வெட்டா முடிய வெட்டிப் போட்டுட்டு, இந்தா வந்துட்டேன்னு கிளம்பி போயிட்டேன்.

அவ்வளவு தான், நமக்கும் அந்த அல்ட்ராசிட்டி ஹேர் ஸ்டைலுக்கும் ஏற்பட்ட காதல், பந்தம் பாசம் எல்லாத்துக்கும் ப்ரேக் அப் ஆகிப் போச்சு. அப்புறம் முடி வளர்ந்தாலும் ஒரு ஸ்டேஜுக்கு மேல வளர விட்டதில்ல.

ஆங்... அந்த பூ விசயத்த மறந்துட்டேனே, கனகாம்பரமும் மல்லிகையும் வச்சா எனக்கு உசிரே போற மாதிரி தலைய வலிக்குமா, அதனால அத எல்லாம் எப்பவோ டைவேர்ஸ் பண்ணிட்டேன். நமக்கு கூட மாட ஒத்தாசையா இருக்குறது இப்போதைக்கு பிச்சிப் பூ தான். அத எல்லாம் என் கையால தொடுத்து தலைல வச்சா தனி கெத்து தான்...

அவ்வளவு தான், வீர தீர ப்ரதாபங்கள் இப்போதைக்கு ஒத்திவைக்கப் பட்டுள்ளது. எல்லாரும் போய் அவங்கவங்க வேலையைப் பாருங்க...டொயிங்.....
--------------------------------------------
அப்புறம், மேல சுத்தினது மெழுகுவர்த்தி இல்லையாம், கொசுவர்த்தி சுருளாம், இதெல்லாம் நமக்கு எங்க தெரியுது
--------------------------------------------

அட, ஆயிரங்கால் பின்னல்ன்னு கூகிள்ல தேடினா ஒத்த போட்டோ கூட சிக்கல, அதனால ஒத்த ஜடையோட ஒரு புள்ளைய சுட்டு கொண்டாந்து போட்ருக்கேன். புள்ள நம்ம அளவு அழகா இல்லனாலும், பாக்க எதோ சுமாரா இருக்குல....

Wednesday 27 May 2015

சாகசப் பயணம்-1



இப்பவரைக்கும் எனக்கு ஆச்சர்யமா இருக்கு. இந்தா, தன்னோட மொத்த துடுப்புகளையும் அழகா விரிச்சு தன்னோட பேரழக வெளிப்படுத்திட்டு இருக்குற நெய்தல பாத்துட்டே இருக்கேன்.

இதே நெய்தல் தானே, தன்னோட எழில் எல்லாம் அழிஞ்சு போய் எமன் கூட போராடி மீண்டு வந்தவன். கிட்டத்தட்ட இருபது நாள் சரியா ஆகாரம் கூட எடுக்காம, வாழணும் வாழணும்னு ஒரு உந்து சக்தியோட போராடி மீண்டவன்.

அவனுக்குள்ள என்ன லட்சியம் இருந்துச்சுன்னு எனக்கு தெரியாது, ஆனா கண்டிப்பா அவனுக்குன்னு ஒரு லட்சியம் இருக்கும்.

இப்படி தான ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு லட்சியம், ஆசைகள், ஏக்கம் எல்லாமே இருக்கும். எனக்கு அந்த மாதிரியான ஆசைகள் நிறைய இருந்துச்சு.

மரணம்னா என்னன்னே தெரியாத இல்ல, அதப் பத்தி தெரிஞ்சுக்க விரும்பாத பருவத்துல நான் அப்ப இருந்தேன். எனக்கு தெரிஞ்சதெல்லாம் நண்பர்கள், அம்மா, அப்பா, தம்பி, என் வீட்டு மாட்டுத் தொழுவம், விலங்கியல் பண்ணை இதெல்லாம் தான். ரொம்ப ரொம்ப சந்தோசமான நாட்கள் அதெல்லாம்.

ஆண்டவன் நியாபக மறதிய தெரிஞ்சி தான் மனுசங்களுக்கு வச்சிருப்பாரு போல. இப்ப யோசிச்சுப் பாக்குறப்ப நான் கடந்து வந்த வலிகள் எதுவுமே நியாபகத்துக்கு இல்ல. ஆனாலும், அம்மாவும் அப்பாவும் ஒரு மாதிரி பதட்டத்தோட கைய பிசஞ்சுகிட்டு நின்ன அந்த காட்சி நியாபகத்துக்கு வருது.

நானும் தம்பியும் ஹாஸ்பிட்டல் வராண்டால ஒரு வீல் சேர்ல போற ஆள பாத்துட்டு இருந்தோம். தம்பி தான் சொன்னான், இந்த ஆளு சீக்கிரம் எழும்பி நடக்கணும்ல அக்கா அப்படின்னு. அதெல்லாம் டான்னு எழும்பிடுவாருடா, இவங்க சும்மா மிரட்டுறதுக்கு அந்தாள வீல் சேர்ல வச்சு தள்ளிட்டுப் போறாங்கன்னு சொல்லிட்டு இருக்குறப்ப தான் அம்மாவும் அப்பாவும் டாக்டர் ரூமுக்குள்ள இருந்து வெளில வந்தாங்க.

ஏன்மா, ரிப்போர்ட்ல என்ன சொன்னாங்க? எனக்கு மூளை இருக்குன்னு இப்பவாவது ஒத்துக்குறாங்களா?ன்னு நான் கேக்க, அதெல்லாம் உனக்கு கிடையவே கிடையாது, வீணா பேராசைப் படாதன்னு தம்பி சொல்லிட்டே ஆர்வமா அம்மாவையும் அப்பாவையும் பாத்தான்.

வழக்கமான அம்மா கிண்டல் பண்ணுவா. ஆனா இவகிட்ட ஒரு தடுமாற்றம் இருந்துச்சு. அதெல்லாம் ஒண்ணுமில்ல, வந்து கார்ல ஏறுங்கன்னு சொல்லிட்டு அவ பாட்டுக்கு வெளில போய் கார் பக்கத்துல நின்னுகிட்டா.

இவளுக்கு என்ன ஆச்சு, யோவ் குமாரு, பொண்டாட்டிய ஒழுங்கா அடக்கி வைக்க தெரியல உமக்குன்னு சொல்லிட்டே நானும் கார் முன் கதவ தொறந்து ஏறி உக்காந்துட்டேன்.

முன் சீட் எப்பவும் அம்மாவுக்கு தான். அவள வம்புக்கு இழுக்கணும்னே நான் அங்க போய் உக்காருவேன். நான் தாண்டி என் புருஷன் பக்கத்துல உக்காருவேன்னு புடிச்சு வெளில தள்ளிடுவா எப்பவும். ஆனா அன்னிக்கி எதுவுமே சொல்லாம பின்னால ஏறி உக்காந்துட்டா.

அப்பவே மனசுக்குள்ள ஒரு அலாரம் அடிக்க ஆரம்பிச்சிடுச்சு என்னமோ தப்பா இருக்குன்னு. தம்பிக்கும் ஒண்ணுமே புரியல. ஒரு மாதிரியான அமானுஷ்ய அமைதியோட தான் கார் வீடு வந்து சேர்ந்துச்சு.

ராத்திரி என்னமோ சத்தம் கேக்குதுன்னு முழிப்பு வந்து அப்பா ரூம்ல எட்டிப் பாத்து கதவ தள்ளினா அது தொறந்துடுச்சு. ராட்சசி, கதவ எப்பவும் தொறந்து போட மாட்டா. என்னடா இது அதிசயம்னு பாத்தா, அம்மா அப்பா நெஞ்சுல சாஞ்சு இருக்கா. அவ விசும்புறான்னு தெரிஞ்சுது. என்னைப் பாத்ததும் டக்குன்னு விலகி, போய் தூங்குடின்னு விரட்டினா.

அடுத்த நாள் காலைல அம்மா ரொம்ப ப்ரெஸா இருந்தா. சுறுசுறுன்னு தோசைச் சுட்டு, எல்லாருக்கும் தந்துட்டு, அவளும் சாப்ட்டுட்டு இருந்தா. நானும் தம்பியும் கேசரி கிண்டப் போறோம்னு கிளம்பினோம். உடனே, உக்காருங்க, உங்க கிட்ட பேசணும்னு சொன்னா. சொல்லிட்டே ஒரு பேப்பர நீட்டினா.

இது உங்க கிட்ட மறைக்க கூடிய விஷயம் இல்ல. நேத்து டாக்டர் குடுத்த ரெக்கமென்ட்டேசன் லெட்டர் இது, நாம இப்ப திருவனந்தப்புரம் போறோம்னு சொன்னா.

கூடவே, இது மேலிக்நன்ட் ட்யூமர், கண்டுபிடிச்சது தெய்வச் செயல்னு டாக்டர் சொன்னாங்கன்னும் சொன்னா.

எனக்கு ட்யூமர்னா என்னன்னு தெரிஞ்சுது, அதுக்கே பயந்தாச்சு. கை எல்லாம் நடுங்கி, பொலபொலன்னு கண்ணுல இருந்து ஒரே தண்ணி. எதப் பத்தியும் யோசிக்கல. அப்ப செத்துருவேனாமான்னு மட்டும் தான் கேட்டேன்.

சே சே... அப்படி எல்லாம் நாங்க விட்டுற மாட்டோம். முதல்ல எதுவும் ஆகாதுன்னு நம்புவோம். கண்டிப்பா எதுவும் ஆகாது, ஆனா இப்படியே இருக்க முடியாதுல, அடுத்து என்னப் பண்ணனும்ன்னு முடிவு பண்ணுவோம்னு கடகடன்னு சொன்னா.

அடுத்து வந்த நாட்கள் பரபரப்பா ஓடிப் போச்சு. அது தான்னு கன்பார்ம் பண்ணினதும், உடனடியா சர்ஜரி பண்ணிடலாம்னு டாக்டர் சொல்லிட்டாங்க. பொழைச்சு வர எப்படியும் இருபது சதவீத வாய்ப்பு இருக்குன்னு டாக்டர்ஸ் சொன்னதும் சொந்தக்காரங்க எல்லாம் இல்ல, வேணாம், அவ இருக்குற வரைக்கும் இருக்கட்டும், பயமா இருக்குன்னு அங்க நடந்த கதை, இங்க நடந்த கதைன்னு சொல்லி சொல்லி பயமுறுத்த ஆரம்பிச்சாங்க. கோவிலுக்கு போ, அங்க நேர்த்தி கடன் செய் அப்படி இப்படின்னு ஒரே டார்ச்சர்.

அம்மா ஒரே முடிவா சொன்னது இது தான். எனக்கு என் புள்ள வேணும். இல்ல அட்லீஸ்ட் அவ எனக்கு கிடைப்பாளா மாட்டாளானாவது தெரியணும். அவ உயிரோட இருந்தா நிறைய நாள் இருக்கட்டும், இல்ல இப்பவே செத்துப் போகட்டும்ன்னு தான்.

பெரியளவுல நான் இதுக்கெல்லாம் தயாரானேனான்னு எனக்கு சொல்லத் தெரியல, ஆனா அம்மா மேல உள்ள நம்பிக்கை, அவ எது சொன்னாலும் சரியாத் தான் இருக்கும்ங்குற திண்ணம் என்னை சர்ஜரிக்கு சம்மதிக்க வச்சுது.

ஆனாலும், இந்த பரபரப்புல தம்பிய யாருமே கவனிக்காம தான் விட்டுட்டோம். எதுவுமே பேசாம, ஏதோ குடுக்குற தின்னுட்டு தனியா போய் அவன் ஒடுங்குனது எல்லாம் இந்த காலகட்டங்கள்ல தான். சரி, அத அப்புறம் பாத்துக்கலாம்.

என்னோட மனசுல பயம் எல்லாம் போய் ஒரு விதமான ஆர்வத்த அம்மா தூண்ட ஆரம்பிச்சா. ஆப்பரேசன் தியேட்டர் எப்படி இருக்கும்? நம்மள சுத்தி டாக்டர்ஸ் எல்லாம் எப்படி நிப்பாங்க, அப்புறம் என்னென்ன செய்வாங்கன்னு கற்பனைல மிதக்க ஆரம்பிச்சுட்டேன். டிவில அந்த மாதிரியான சீன்ஸ் எல்லாம் வந்தா, ஆர்வமா பாக்கவும் ஆரம்பிச்சேன்.

ரொம்ப நாள்னு இல்லாம எல்லாம் தெரிஞ்ச இருபதே நாள்ல அது நடந்துடுச்சு. ஆமா, ஆப்பரேசனுக்காக என்னை ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணினாங்க.

அந்த சூழல் ஒரு மாதிரியான மிரட்டுற சூழல். நல்லவேளை வெளில அதிகம் நடமாட முடியாத மாதிரி ஹாஸ்பிட்டல் ரொம்ப ஸ்டிரைக்ங்குறதால அதிகமா நோயாளிகள என்னால பாக்க முடியல. இல்லனா அவங்கள எல்லாம் பாத்து பாத்தே என்னோட எனர்ஜி லெவல் டவுன் ஆகியிருக்கும்.

போன உடனே ஜன்னல் வழியா தெரிஞ்ச ஒரு பெரிய மரம் தான் என்னை வரவேற்றுது. ட்ரீட்மென்ட் எடுத்து எடுத்து, நொந்து நூலாகி, அப்புறம் கடைசியா சர்ஜரிக்கு போகாம, ரொம்ப பிரெஷா நேரடியா ஆப்பரேசன் தியேட்டருக்குள்ள நான் போனது எனக்கு கிடச்ச வரம்னு தான் சொல்லணும்.

அட்மிட் ஆன அடுத்த நாள் தான் சீப் டாக்டர் என்கிட்ட வந்தார். நான் கட்டில்ல படுத்து குமுதம் புரட்டிட்டு இருந்தேன். அவர பாத்ததும் டக்குன்னு எழும்ப ட்ரை பண்ண, படு படுன்னு தோள தொட்டு படுக்க வச்சார். ரூம்ல அம்மா மட்டும் தான். என் பக்கத்துல அப்படியே ஒரு ஸ்டூல் போட்டு உக்காந்தார்.

ஏதாவது பயமா இருக்கா? (Are you afraid?). இதான் அவர் என்கிட்ட கேட்ட முதல் கேள்வி. ஒரு மாதிரி ஆமா சொல்லுவமா, இல்ல சொல்லுவமான்னு தெரியாம பொத்தாம் பொதுவா தலையாட்டி வச்சேன்.

லிசன், கவனி, உனக்கு வந்திருக்குறது கேன்சர். கேன்சர்னா உடனே பயப்பட வேண்டாம், இப்ப அதுக்கெல்லாம் நிறைய ட்ரீட்மென்ட் இருக்கு. யங் லேடி, நீ லக்கி, பாரு, உனக்கு நடந்தது என்னன்னு அனுபவிக்குரதுக்கு முன்னாடியே கண்டுப் பிடிச்சுட்டோம். அது கடவுள் அருள். அதே கடவுள் உன் உயிர மீட்டுத் தருவார்ன்னு நம்பணும்ன்னார்.

சிரிச்சுகிட்டே அம்மாவ பாத்தேன். கடவுள் கிடையாதுன்னு கடவுள் மறுப்பு வாக்குவாதங்கள்ல அதிதீவிரமா நான் ஈடுபட்டுட்டு இருந்த நாட்கள் அது. அம்மாவும் சிரிச்சா. “ஐ பிலீவ் மைசெல்ப் அண்ட் மை மாம்” அப்படின்னேன். “யுவர் மாம் ஈஸ் யுவர் காட், இஸின்ட் இட்? தென் டிபிநிட்லி யூ வில் பி பேக் வித் பவர்புல் போர்ஸ்”ன்னு சொன்னார். எனக்கு இந்த உரையாடல் இன்னமும் மறக்காம இருக்கு.

அப்புறம், மயக்கம் எப்படி வரும், சர்ஜரி எப்படி பண்ணுவாங்க, வலிக்குமா, முளிச்ச உடனே காபி குடிக்கலாமா, ஏற்கனவே நிறைய நாள் லீவ் போட்டுட்டேன் காலேஜ் போகலாமா, அப்படின்னு ஏகப்பட்ட கேள்விகள்.

பாவம் மனுஷன், ஒரு பேப்பர் பென் எடுத்து ஹிண்ட்ஸ் எடுத்து ஒவ்வொரு கேள்விக்கும் பொறுமையா பதில் சொன்னார்.

எனக்கு ஊசினா பயம். இங்க வந்ததுல இருந்து ரெண்டு ஊசி போட்டுட்டாங்க, அத முதல்ல நிறுத்த சொல்லுங்கன்னேன். சிரிச்சுட்டே, நீ பிரேவ் கேர்ள்ன்னு நினச்சேன், இப்படியா சைல்ட்டிசா பிகேவ் பண்ணுவன்னு கேட்டதும் வெக்கம் பிடுங்கி தின்னுடுச்சு. ஊசிப் போடுறப்ப ஊருல உள்ள டாக்டர் எல்லாம் பட்ட பாட்ட நினைச்சுப் பாத்து சிரிப்பு சிரிப்பா வந்துச்சு.

அதுவும் இந்த அம்மா உராங்குட்டான், அவர் கிட்ட ஊருல ஊசிப் போட்டா நான் பண்ற அலப்பறை எல்லாம் எடுத்து விட ஆரம்பிச்சுட்டா. போதும் நிறுத்து, இனிமேல் ஊசிப் போட்டா நான் அழுறேனான்னு பாரு, அத விட்டுட்டு பெரிய இவ மாதிரி போட்டுக் குடுக்காதன்னு அம்மாவ முறைச்சேன்.

சரி, டாக்டர்கிட்ட பேசினதுல நான் தெரிஞ்சிகிட்டது இதுதான், எனக்கு சர்ஜரி தலைல பண்ணப் போறதால மொட்டை போட்ருவாங்க. அதுக்கு அடுத்து ரேடியேசன் தெரபி, அப்புறம் ஹீமோ தெரபி. இதெல்லாம் முடிஞ்சி நான் நார்மல் ஆகணும்னா மூணு நாலு மாசம் (அவர் புளுகு மூட்டைன்னு அப்புறம் தான தெரிஞ்சுது) ஆகும். அப்புறம் நார்மல் லைப்க்கு திரும்பிடலாம்.

எல்லாத்துக்கும் சரி சரின்னு தலையாட்டிகிட்டேன். இப்ப எனக்கு சர்ஜரி மேல பெரிய இன்ட்ரெஸ்ட். என்னமோ பெரிய வீர சாகசம் பண்ணப் போற மாதிரி மனசுக்குள்ள ஒரு பெருமை. டிவி, தியேட்டர்கள்ல பாத்த ஆப்பரேசன் தியேட்டர நான் நேர்ல பாக்கப் போறேன். அங்க என்ன நடக்குதுன்னு எல்லாத்தையும் ஒண்ணு விடாம பாக்கணும்னு மனசுக்குள்ள பேராசை.

அதுவும் பக்கத்து வீட்டு அக்கா ஒருத்தங்க டெலிவரி நேரத்துல அவங்க கண்ண கட்டியிருந்த துணி விலகி, கீழ வயித்த கீறி பிள்ளைய எடுத்தத எல்லாம் பாத்தேன்னு சொன்னது நினைவுக்கு வந்ததும், அப்ப நம்மளும் நம்ம மண்டைய கீறி மூளைய வெளில எடுத்தத எல்லாம் பாத்துட்டு வந்து பிரெண்ட்ஸ் கிட்ட சொல்லணும்னு நினைச்சுகிட்டேன்.

அந்த நாளும் வந்துச்சு. முந்தின நாளே மூணு நர்ஸ் வந்து வெயிட் பாத்து, கைல வெயின் எந்தெந்த பொசிசன்ல இருக்கு, பிபி நார்மலான்னு டெஸ்ட் எல்லாம் பண்ணி, முடி வெட்டி, தலைய முழுக்க வழிச்சி, கண்ணாடி எடுத்து காட்டி, யூ ஆர் சோ க்யூட்ன்னு சொல்லிட்டுப் போனாங்க. நிஜமாவே அழகா இருந்த மாதிரி தான் தோணிச்சு. திரும்ப திரும்ப தலைய தடவிப் பாத்துகிட்டேன். அம்மா உள்ள வந்தா. சிரிச்சுட்டே தலைய தடவி காமிச்சேன். அவளும் வந்து தடவி மொட்டை மண்டைல முத்தம் குடுத்தா.

ராத்திரி முழுக்க ஒரு மாதிரியான எக்சைட்மென்ட். பிழைக்க இருபது பர்சென்ட் சான்ஸ் இருந்தாலும் ஒரு வேளை நான் செத்துப் போய்ட்டா? இந்த ரூம், அம்மா வாசம், பாட்டி மடி, அப்பாவோட சிரிப்பு இப்படி எதுவுமே எனக்கு கிடைக்காம போய்டும்ல. இழுத்து ஒரு தடவ மூச்சு விட்டுகிட்டேன்.

விடிஞ்சதும் ஆசையாசையா எல்லாரையும் மறுபடி மறுபடி பாத்தேன். அப்பா கைய பிடிச்சு வச்சுட்டு முத்தம் குடுத்தேன். தம்பி எங்க, அவன தேடினா அவன் வெளில இருக்கான்னு அம்மா சொன்னாங்க. இன்னும் நேரம் இருக்கு. விஷயம் தெரிஞ்சி ஹாஸ்பிட்டல் முழுக்க ஒரே கூட்டம் (அம்மா அப்புறமா சொன்னா). அதுலயும் ஒரு நாலு பேர் கூட்டமா உள்ள வந்துட்டாங்க.

அம்மாவும் அப்பாவும் டாக்டர் கூப்பிட்டார்னு போய்ட்டாங்க. வந்தவங்க சும்மா இருக்க வேண்டியது தான, கைய குறுக்க கட்டிக்கிட்டு முந்தானைய எடுத்து வாய்க்குள்ள சொருகிட்டு விக்கி விக்கி அழுறாங்க ஒருத்தங்க. இன்னொருத்தங்க உனக்கு போய் இப்படி ஆகிடுச்சேன்னு ஒரே ஒப்பாரி. எனக்கு படக்குன்னு சாவு வீடு நியாபகம் வந்து, மனசுக்குள்ள எல்லாரும் சேர்ந்து டண்டணக்கா டணக்குணக்கான்னு தார, தப்பட்ட அடிக்க ஆரம்பிச்சுட்டாங்க.

இது சரி வராதுன்னு அம்மா அம்மான்னு அலறுனேன். ஒருத்தங்க அதுக்கும், பயப்படாதமா, அந்த முத்தாரம்மன் உனக்கு துணையிருப்பான்னுஓ...ன்னு ஒப்பாரி வைக்குறாங்க. நான் போட்ட கூச்சல்ல தம்பி தான் வந்து எட்டிப் பாத்து என்னன்னு கேட்டான்.

இவங்கள எல்லாம் வெளில போக சொல்லு. நிம்மதியா சாகக் கூட முடியாது போலருக்குன்னு கத்தினேன். அவங்க எல்லாம் அதிர்ச்சியில ஒரு மாதிரி பாத்துட்டு நிக்குறாங்க. அம்மா அதுக்குள்ள வந்து என்னடான்னு கேக்க, பாருமா, என்னமோ நான் கன்பார்மா சாகத் தான் போறேன் மாதிரி குலுங்கி குலுங்கி அழுறாங்க. இவங்களுக்கு நான் பொழைச்சு வரணும்னு இருக்கா, இல்ல சாகணும்னு இருக்கா. எனக்கு சர்ஜரினா பொழைச்சுப்பேன்னு சந்தோசப்படுறத விட்டு ஒப்பாரி வைக்குறாங்கன்னு படபடன்னு பொரிஞ்சுட்டேன். அம்மா மெதுவா அவங்கள வெளில தள்ளிட்டுப் போய்ட்டா.

சர்ஜரிக்கு இன்னும் நேரம் இருக்கு. அமைதியா நானும் கட்டில்ல படுத்துட்டு கைய கட்டிகிட்டேன். மனசு மறுபடியும் ஒரு மாதிரி சமாதான நிலைக்கு போய்டுச்சு. அப்பாவ பக்கத்துலயே இருக்க சொன்னேன்.

திடுதிடுப்னு ஸ்டெச்சரோட நர்ஸ் எல்லாம் உள்ள வந்தாங்க. படபடன்னு எனக்கு ட்ரெஸ் மாத்தி படுக்க வச்சாங்க. நான் இன்னும் நேரம் இருக்கேன்னு கேட்டத எல்லாம் அவங்க பொருட்படுத்தவே இல்ல. கூட்டிட்டு வர சொன்னாங்கன்னு தூக்கி ஸ்டெச்சர்ல போட்டு உருட்டிட்டு போக ஆரம்பிச்சுட்டாங்க. நான் அம்மா கைய பிடிச்சுட்டே வாசல் வர போனேன். அப்புறம், நாங்க பாத்துக்குறோம்னு சொல்லிட்டு, அப்பாவுக்கு ஸ்மைல் பண்ணுன்னு அவங்க சொன்னதும் அப்பாவ பாத்து சிரிச்சேன். தம்பிய தேடினா காணோம்.

சரின்னு உள்ள போனதும் எனக்கு அப்படியே டிவில பாத்த என்விரான்மென்ட் மாதிரி தான் இருந்துச்சு. எல்லாம் பச்சை கலர் ட்ரெஸ் போட்டுட்டு, அப்படியே பச்சை கலர் முகமூடி போட்டுட்டு ஆளாளுக்கு என்னமோ பண்ணிட்டு இருக்காங்க. ஸ்டெச்சர்ல இருந்து டேபிளுக்கு மாத்தினதும் மேல இருந்த கண்ணாடில நம்ம மண்டை தெரியுதான்னு பாத்தேன். ஒண்ணும் தெளிவா தெரிஞ்ச மாதிரி தெரியல. ஒரு வேளை அந்த அக்கா தப்பா சொல்லிட்டாங்களோ?

என் பக்கத்துல அனஸ்த்தீசியன் உக்காந்துட்டு இருந்தாரு. கைல நரம்பு தேடிபிடிச்சு ட்ரிப்ஸ் போட்டாங்க. வலிச்சுது. அத விட பயமா இருந்துச்சு. ஆனா வெளில சொல்ல முடியுமா? சகிச்சுகிட்டேன். அப்புறம் ஒரு ஊசி போட்டுட்டு ஒண்ணுமில்ல, ஒண்ணுல இருந்து நூறு வரைக்கும் எண்ணு. எல்லாம் சரியாப் போகும்னு சொன்னார். நான் மயங்கப் போறேன்னு தெரிஞ்சுகிட்டேன்.

நான் எப்படி மயங்குறேன்னு அந்த நிமிசத்த மனசுல வச்சுக்கணும்னு நினச்சுட்டே பக்கத்துல இருந்த மானிட்டர பாத்து ஒண்ணு, ரெண்டுன்னு மனசுக்குள்ள எண்ண ஆரம்பிச்சேன். எத்தனை வரைக்கும் எண்ணினேன்னு சுத்தமா நியாகபம் இல்ல, அனேகமா முப்பது கூட தாண்டலன்னு நினைக்குறேன். அவ்வளவு தான், எனக்கும் இந்த உலகத்துக்குமான தொடர்பு, தற்காலிகமா துண்டிச்சுப் போச்சு.

சரியா நான் படக்குன்னு முழிச்சுகிட்டேன்னு சொல்ல முடியாது, ஒரு மாதிரியான அமானுஸ்யத்துல கொஞ்ச நாள் நான் உலாவிட்டு இருந்தேன். எமெர்ஜென்சி, அர்ஜென்ட்ன்னு டாக்டர் குரலும், ஷூ சத்தமும், க்ரீச் க்ரீச் சத்தமும் அடிக்கடி கேக்கும். கண்ணத் தொறந்து பாக்கலாம்னு நினச்சா முடியாது.

எழும்பலாம்னு நினைப்பேன், முடியாது. எனக்கே புரிஞ்சுது, ஒரு மாதிரியான மயக்கத்துல நான் இருக்கேன்னு. அதுவும் டாக்டர்களோட குரல் நான் சீரியஸா இருக்கேன்னு காட்டிக் குடுக்கும். வலியும் உணர்ச்சியும் இல்லாத பொழுது அது.

அப்படினா நான் சாகப் போறேன்னு மட்டும் மனசுக்குள்ள நினைச்சுப்பேன். அம்மா தேடுவாளே, அப்பா அழுவாரா, தம்பி யார் கூட சமையல் செய்வான், இப்படி தான் கேள்வி மனசுல வந்துட்டே இருந்துச்சே தவிர பயம் சுத்தமா இல்ல.

நினைவு தப்பிக் கிடந்த அந்த மூணு நாளும் தான் எனக்கு மரணத்த பத்தின ஒரு முழுமையான புரிதல குடுத்திச்சு. அது ஒண்ணும் பயங்கரமானது இல்ல. கண்டிப்பா இல்ல. ஒரு மாதிரியான நிம்மதி வரும் மரணம் நேரும் போது. என்ன, நம்மள சுத்தி இருக்குறவங்களுக்கு தான் அது வேதனைய குடுக்கும். நமக்கு கண்டிப்பா இல்லன்னு நல்லாவே தெரிஞ்சுகிட்டேன்.

இதுக்கப்புறம் தான் ஒரு சாகசப் பயணத்துல நான் அடியெடுத்து வச்சேன். இன்னிக்கி இப்ப நீ சரியாகிட்டலன்னு கேக்குறவங்க கிட்ட ஆமான்னு புன்னகையோட சொல்லிட்டு கடந்து போகப் பழகிட்டேன். என்னோட சாகசம் தொடர்ந்துகிட்டே தான் இருக்கு.



-தொடரும்



Thursday 21 May 2015

இது நம்ம வீட்டுக் கல்யாணம்



எப்படியோ, ஒரு வாரமா இருந்த கல்யாண வீட்டு பரபரப்பு இன்னிக்கி தான் கொஞ்சம் கம்மி ஆகியிருக்கு.

அது சரி, யாருக்கு கல்யாணம்னு எல்லாம் கேக்காதீங்க. என் தங்கச்சிக்கு தான் கல்யாணம்.

சொந்த தங்கச்சி இல்ல, என் அப்பாவோட சித்தப்பா பையனோட பொண்ணு. கிட்டத்தட்ட எங்க ரெண்டு பேருக்கும் ஒரே மாதிரி பெயர், ஒரே மாதிரி முட்டைக் கண்ணு, ஒரே மாதிரி சோடாப் புட்டி கண்ணாடி... அதனாலயே அவ கல்யாணம்னா எனக்கு ஸ்பெசலா தோணிச்சு.

கல்யாணம் எல்லாம் பிக்ஸ் ஆகி கிட்டத்தட்ட ஒரு வருஷம் ஆன நிலைல ஒரு வாரம் முன்னாடியே வீடு களைகட்ட ஆரம்பிச்சிடுச்சு. சொந்தக்காரங்க ஒவ்வொருத்தரா முறைச் சோறு பொங்கி போட்டு போட்டு, அத நாங்க சாப்பிட போய் போய் ரொம்ப டயர்ட் ஆகிடுச்சு. எங்க பங்குக்கு நாங்களும் முறைச் சோறு பொங்கிப் போட்டோம்...

அப்படி இப்படின்னு ஒரு வழியா நேத்து முகூர்த்த நாள். அக்கா, சீக்கிரமே வந்துடுன்னு சொல்லி விட்ருந்தா. நானாவது சீக்கிரம் போறதாவது. புள்ள ஆள் தெரியாம சொல்லி விட்ருக்குன்னு நினைச்சுகிட்டே காலைல ஒன்பது மணிக்கு தான் மெதுவா கிளம்ப ஆரம்பிச்சேன்.

வேற விசேஷங்கள்னா பரவால, டக்குன்னு கிளம்பிடலாம், கல்யாண வீட்டுக்கு அப்படியா கிளம்ப முடியுது?

பட்டுச் சேலை பாக்கணும், அதுக்கு மேட்சிங்கா நகை, அதுவும் வளையல், கம்மல், மாட்டி, நெத்திசுட்டின்னு... ஷப்பா..... அப்படியும் அரைமணி நேரத்துல கிளம்பி, ஒரு மணி நேரம் ட்ராவல் பண்ணி, ஒரு வழியா கிளம்பி மண்டபத்துக்குள்ள நுழையுரப்ப மணி பத்தரை.

நானும் அப்பாவும் போய் இறங்குற நேரம் தான் மாப்பிளை காரும் உள்ள என்ட்டர் ஆகுது. உடனே ஒரு பரபரப்பு.

சரி, நாம எதுக்கு இந்நேரம் கூட்டத்துக்கு உள்ளே நுழையணும்ன்னு அப்பாவோட ஒரு ஓரமா நின்னுகிட்டேன். சித்தப்பா அப்பாவ பாத்ததும், அண்ணாச்சி, நல்ல வேளை வந்துட்டீங்க, வாங்க வாங்க மாப்ளைய வரவேற்கப் போவோம்னு கைபுடிச்சு இழுத்துட்டு போய்ட்டாங்க. நான் தேமேன்னு நின்னுட்டு இருக்கேன் தன்னந்தனியா...

ஆரத்தி எடுக்க யார் வராங்கன்னு பாத்தா, அட, நம்ம புள்ளைங்க. எல்லாம் என் மாமா பசங்களும் பொண்ணுங்களும் தான். கூடவே அப்பா வழி சொந்தங்கள்.

என்னதான் நாங்க சொந்தக் காரங்களா இருந்தாலும், என் தங்கச்சி அப்பா வழி சொந்தம், என் மாமா பசங்க அம்மா வழி சொந்தம். ரெண்டு குடும்பங்களுக்கு அவ்வளவா நெருக்கம் எல்லாம் இல்லாததால யாரையும் யாருக்கும் தெரியாம இருந்துச்சு. ஆனா எப்ப நான் மாமா குடும்பத்தோட ஐக்கியமானேனோ அப்பவே அவளும் எங்க கூட்டத்துல ஒருத்தியாகிட்டா...

ஆரத்தி எடுத்தவ, தட்டுல காசு போட்டதும், எடுத்து பாத்துட்டு ஐநூறு ரூபா தானா, இன்னும் தாங்கன்னு சண்டைக்கு போய்ட்டா. அப்புறம் மாப்ளை எப்படியோ பாக்கெட்டை தடவி இன்னொரு ஐநூறு ரூபா குடுத்ததும் தான் வழியே விட்டா. பசங்க அதுக்குள்ள பன்னீர் தெளிக்க, என் தம்பி (அவ வீட்டுக்கு ஒரே பொண்ணு) மாப்பிளைக்கு மாலை போட்டு, சந்தனப் பொட்டு வச்சு கைப்பிடிச்சு உள்ளக் கூட்டிட்டு போனான்.

நான் என்னப் பண்றதுன்னு தெரியாம நின்னுட்டு இருந்தேன். அப்பா தான் வந்து வா உள்ளப் போகலாம்னு கூட்டிட்டுப் போனார். எனக்கு கொஞ்சம் எல்லாமே அன்னியமா தான் தெரிஞ்சுது. காரணம் இது என் சொந்த ஊர். சொந்த ஊருக்குள்ள ஒரு விருந்தாளி மாதிரி வர்றது ஒரு கொடுமை இல்லையா? என் அம்மா இதே ஊர்ல தான் இருக்கா. அவள கூட என்னால பாக்க முடியாதுனா அது எத்தனைப் பெரிய வலி. சரி, சரி, என் புலம்பல அப்புறமா வச்சுக்கலாம், வாங்க நாம கல்யாணத்த கவனிப்போம்.

நான் உள்ளப் போனதும் தான் கவனிச்சேன், புள்ளைங்க எல்லாம் கல்யாணத்துக்குன்னே சேலை எடுத்துருக்காங்க. அடப் பாவிகளா, என்னைய விட்டுட்டு ஆளாளுக்கு என்னமா ஸ்டைலு... எல்லாரும் ஒரே மாதிரி புடவை, ப்ளவுஸ் பாத்தா, செம அட்டகாசம். ஒவ்வொருத்தியும் அவ்வளவு அழகா இருக்காங்க. மாமா பசங்க அத்தனை பேரும் பட்டு வேட்டி கட்டி, மல்லுவேட்டி மைனர் மாதிரி சிங்குச்சா சிங்குச்சா கலர்ல சட்டை போட்ருக்காங்க.

ஓய், இன்னா, என்னை விட்டுட்டு நீங்க எல்லாம் இப்படின்னு கேட்டா, நாங்க கேட்டோம், நீ தான வேணாம்னு சொன்னன்னு அவங்க திருப்பி தாக்க, ஆனாலும் பொறாமையா இருக்கு பக்கிங்களான்னு நான் சைலென்ட் ஆகிட்டேன். பின்ன, கெத்தா, நான் எல்லாம் உங்க கூட கூட்டு சேர்ந்து வர மாட்டேன்னு நான் தான ஒரு வாரம் முன்னால சொன்னேன்.



சரி, அத விடுங்க, அந்தா அங்கப் பாருங்க, மாப்பிள்ளை உக்காந்துட்டு இருக்கார். வாங்க, அவர ஒரு ரவுண்டு போய் பாப்போம்...

என் தங்கச்சில ஒருத்தி, மாப்பிளை பக்கத்துல போய், மாப்பிளை சார், எங்க கண்ணையே உங்ககிட்ட ஒப்படைக்குறோம், தயவு செய்து அவள இனி இந்தியாவுக்குள்ள விட்ராதீங்க, அவ அலம்பல் தாங்கலன்னு சொல்றா. அவரு சிரிச்சுகிட்டே, சொல்லிட்டீங்கல யூ.எஸ் லயே அவள பூட்டி வச்சிடுறேன்னு சொல்றார்.
அதுக்குள்ள மாமன் கல்யாணத்துக்கு நேரமாக, வரிசையா அவளோட மாமாக்கள எல்லாம் உக்கார வச்சாங்க. மொத்தம் நாலு பேரு. நாலு பேரையும் ஒவ்வொருத்தரா மணமேடைக்கு ஏத்தி, என்னமோ மந்திரம் எல்லாம் சொல்லி, கைல மஞ்சள் கிழங்க கட்டி விட்டு, அப்புறமா, தங்கச்சிய வர சொல்லி, எல்லார் கிட்டயும் ஆசிர்வாதம் வாங்க சொன்னாங்க. அந்த புள்ள சும்மாவே அழகு, மேக் அப் எல்லாம் போட்டு செம்ம அழகா இருந்தா (கிர்ர்ர்ர்)....

இதுல நீங்க ஒரு விஷயம் கவனிக்கணும். நான் எப்பவுமே அழகு பத்தி பெருசா அக்கறை எடுத்துக்க மாட்டேன். யாரையும் டக்குன்னு அழகுன்னு சொல்லவும் மாட்டேன். ஆனா ஏனோ அன்னிக்கி எனக்கு எல்லாருமே அழகா தெரிஞ்சாங்க. என்னைத் சுத்தி எல்லாமே அழகா தெரிஞ்சுது. ஏன், என்னைக் கூட எவ்வளவு அழகா இருக்கேன்னு பெரியவங்க நெட்டி முறிச்சாங்க.

சரி, சர்ர்ர்ரீரீரீ.... விசயத்துக்கு வர்றேன், மாமாக்கள் எல்லாம் ஆசிர்வாதம் பண்ணின கையோட, ஆளுக்கொரு தங்க வளையலையும் மாட்டி விட பொண்ணு வீட்டு ஆம்பளைங்க எல்லாம் அனந்தரம் பண்ண வரிசைல வர ஆரம்பிச்சாங்க. அது ஒரு நீண்ட வரிசை. ஊர்ல உள்ள அத்தன பேரும் மேடையேறி பொண்ணுக்கு நாமம் விட்டு, மங்கல தண்ணி தெளிச்சு ஆசீர்வாதம் பண்ணினாங்க. அதெல்லாம் முடிஞ்சு, மாப்பிளை வீட்டுக்காரங்க முகூர்த்தப் பட்டு எடுத்துகிட்டு ரூமுக்குள்ள போனாங்க.

நான் அப்படியே வெளில நோட்டம் விட்டேன். பாட்டு கச்சேரி ஏற்பாடு பண்ணியிருந்தாங்க. ஆரம்பமே குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டுக் கேக்குதா குக்கூ குக்கூன்னு ஒரு பொண்ணு கூவிட்டு இருந்துச்சு. யாருடா இதுன்னு மூஞ்சியப் பாத்தேன்... ப்பாஆஆ... யாருடா, இது பேய் மாதிரின்னு எனக்கு நானே கேட்டுகிட்டேன்... அவ்வ்வ்வ் அது ஏற்கனவே வெள்ளையா இருந்துச்சு, அதுல நாலு இஞ்சுக்கு பாண்ட்ஸ் பவுடரப் போட்டு உரமேற்றியிருக்கும் போல. கூடவே அந்த செக்க செவேல்ன்னு லிப்ஸ்ஸ்டிக்...சரி, ரொம்ப பயந்துட வேணாம்... நான் வேற டாபிக் போய்டுறேன்...

மாப்பிளை யூ.எஸ்ல வேலைப் பாக்குறதால அவரோட பிரெண்ட்ஸ் சில பேர் வெள்ளைவெளேர்ன்னு சுத்திக்கிட்டு இருந்தாங்க. எனக்கு அவங்க காஸ்ட்யூம் பாத்து ஒரே ஆச்சர்யம். அவங்களும் அப்படியே வேட்டி, புடவைன்னு அசத்தினது தான் காரணம். ஆனா வேட்டி கீழ விழுந்துருமோ விழுந்துருமோன்னு திகிலோட திரிஞ்சாங்க போல. அடிக்கடி பிடிச்சுகிட்டே நடந்தாங்க. ஒரே ஒரு பொண்ணு, அதுவும் சான்சே இல்ல, ரொம்ப அழகு.

ஒரு வழியா முகூர்த்த பட்டு கட்டிக்கிட்டு பொண்ணு வர, மந்திரங்கள் ஒழிக்க, கெட்டிமேளம் கெட்டி மேளம் முழங்க தாலி கழுத்துல ஏறிடுச்சு. நான் அப்பா பக்கத்துல உக்காந்து பூ போட்டேன். சித்தப்பா கைப் பிடிச்சு குடுக்க, அப்படியே பொண்ணும் மாப்பிளையும் மேடைய வலம் வந்தாங்க. ஒவ்வொரு தடவ பக்கத்துல வரும்போதும் எல்லாரும் பூ போட்டு ஓ...ஹோன்னு கூச்சல்.

அப்புறம், மாப்பிளை வீட்டு சொந்தங்கள் எல்லாம் அனந்தரம் செய்ய, அப்படியே குடும்பம் குடும்பமா மேடையேறி, கிப்ட் குடுத்து, போட்டோ வீடியோன்னு எடுக்க ஆரம்பிச்சுட்டாங்க.

ஒருபக்கம் அதெல்லாம் நடந்துட்டு இருக்க, இன்னொரு பக்கம் ஆர்கெஸ்ட்ரா அடிச்சு தூள் பண்ண ஆரம்பிக்க, கூட்டம் கட்டுப்படுத்தவே முடியல. அந்த களேபரத்துலயும் மாமா பையன் ஒருத்தன், அங்க ஸ்டேஜ்ல இருந்த ஒரு சிகப்பு கலர் பூவ போய் எடுத்துட்டு, நேரா பொண்ணுகிட்ட போய் நீ ரொம்ப அழகா இருக்க, அயாம் லவ் வித் யூன்னு கலாய்க்குறான். அடப்பாவி, தாலி ஏறுறதுக்கு முன்னாடி சொல்லியிருக்க கூடாதா, இப்ப வந்து சொல்லுறியேன்னு அவளும் கேக்க, சோகமா மூஞ்சிய வச்சுட்டு நேரே என் கிட்ட வந்து, நீ என்னை கட்டிக்குறியான்னு கேக்குறான். ஹஹா... பக்கத்துல இருந்த அப்பா விழுந்து விழுந்து சிரிச்சுட்டாங்க. ரொம்ப செல்லம் அவன் எங்களுக்கு. ரொம்ப ரொம்ப அழகா வேற இருப்பான். அவன் கேட்டு மறுக்க முடியுமா. இப்பவே வேணா கல்யாணம் பண்ணிப்போம்டான்னு சொன்னேன்.

உடனே, ஆர்கஸ்ட்ரா மைக்க வாங்கி, “பொய் சொல்லக் கூடாது காதலி, பொய் சொன்னாலும் நீயே என் காதலி”ன்னு பாட்டுப் பாட ஆரம்பிச்சுட்டான். அவன் கூட அப்படியே எழும்பி போய் ஒரு டான்ஸ் ஆடலாமான்னு தோணிச்சு, அதுக்குள்ள இன்னொருத்தி ஓடிப் போய் அவன் கூட ஜோடியா ஆட ஆரம்பிச்சுட்டா.

அடுத்தடுத்து ஒவ்வொரு பாட்டா ஆர்கஸ்ட்ரால உள்ளவங்க பாட ஆரம்பிக்க, மொத்த புள்ளைங்களும் ஆளுக்கு ஒரு டான்ஸ்ன்னு ஆடத் தொடங்கிட்டாங்க. செம கலாட்டா. அதுவும் அந்த பாரின் ஆட்கள எல்லாம் வேற ஜோடியா சேர்த்துகிட்டாங்க. அப்பப்ப அவங்க கூட செல்பி எடுத்துட்டு, டான்ஸ் மூவ்மென்ட் சொல்லிக் குடுத்துட்டுன்னு இருந்த நேரம், மேடைல ஒரே கூட்டம்.

எங்க ஊர் பசங்க எல்லாம் ஒரு ஓரமா நின்னு இதுங்க பண்ற அட்டூளியத்த எல்லாம் பாத்துட்டே நிக்குரானுங்க. இதுல சில பேர் நான் பாக்குறேன்னு தெரிஞ்சதும் சிரிச்சாங்க. ஒரு காலத்துல நான் அவங்க கூட தான் ஊர் சுத்துவேன். இப்ப ரொம்ப ரொம்ப அடக்கமா ஹாய்ன்னு இங்க இருந்தே கைக் காட்டி சிரிச்சுட்டு அப்பா பக்கத்துலயே உக்காந்துகிட்டேன்.

ஒரு விஷயம் சொல்ல மறந்துட்டேன், என்னை இங்க இம்ப்ரஸ் பண்ணின விஷயம் என்னன்னா, முகூர்த்தம் முடிஞ்சதுமே சித்தப்பா அப்பா கிட்ட பரபரப்பா ஓடி வந்தாங்க. அண்ணே, சாப்பாடு எல்லாம் வண்டியில ஏத்திக்கிட்டு இருக்காங்க. கொஞ்சம் பொறுப்பா பாத்து அனுப்பி வைக்கணும், நான் இங்க மாட்டிகிட்டேன்னு சொன்னதும், அப்பா நான் போய் பாக்குறேன்னு போயிட்டு வந்தாங்க. சாப்பாடு எல்லாம் பந்தி ஆரம்பிக்குறதுக்கு முன்னாடியே பக்கத்துல இருக்குற ரெண்டு ஹோம்கள்ல பசங்களுக்கு சாப்பிட குடுத்து விட்டாங்க. நல்ல விஷயம் தானே. சித்தப்பா அதுக்கு முந்தின நாளும் சாப்பாடுக் குடுத்தாங்கன்னு அப்புறமா தெரிஞ்சிகிட்டேன்.

அடுத்து பிடிக்காத விஷயம், அரசியல்வாதிகள் கூட்டம். இன்ன கட்சின்னு இல்லாம எல்லா கட்சியில இருந்தும் ஆட்கள் வந்துட்டு இருந்தாங்க. அட, எல்லாரும் கழுவி ஊத்துற ஆளும் கட்சி மாநில பொறுப்பாளர் கூட கும்பலா வந்து போட்டோ எல்லாம் எடுத்துட்டு போனார்.

அப்பாவோட உக்காந்துட்டு இருக்கேன், டக்குன்னு ஒருத்தர் பக்கத்துல வந்து உக்காந்த பீல். யாருடா இது, எங்கயோ பாத்தது மாதிரி இருக்கேன்னு அப்பா கிட்ட கேட்டா அவர் தான் எதிர்க்கட்சி ஆளாம். தன்னந்தனியா வந்து உக்காந்து, வாங்கன்னு கூட சொல்ல யாரும் இல்லாம அவர் பாட்டுக்கு உக்காந்துட்டு இருக்கார். எனக்கு எழும்பி போகவா வேணாமான்னு ஒரே சந்தேகம். கொஞ்ச நேரம் கழிச்சு தான் ஒவ்வொரு வயசானவங்க வந்து, வாங்கன்னு கூப்ட்டுட்டு அவங்களும் அவங்க பாட்டுக்கு போய்ட்டாங்க. எப்படியோ அப்புறம் போய் மணமக்கள வாழ்த்திட்டு வந்தார். ஒரு காலத்துல ஓஹோன்னு வாழ்ந்த ஆளு, மந்திரியா கூட இருந்துருக்கார்ன்னு நினைக்குறேன். கழுத்துல தேசியக் கொடி மாதிரி துண்டு போட்ருந்தார். சின்ன வயசுல அவர அத்தனை கம்பீரமா அவர பாத்துருக்கேன். இப்ப கட்சியே இல்ல, இவர யாரு மதிக்கப் போறா?

நகர சபை சேர்மன்ல இருந்து மாநில தலைவர் வரைக்கும் வந்த நேரம் எல்லாம், ஒரு மாதிரி ஒரு பந்தா நிலவுன மாதிரி தோணிச்சு எனக்கு. அது மட்டும் தான் எனக்கு பிடிக்கவே இல்ல...

மறுபடியும் நாம கொண்டாட்டத்துக்குள்ள வந்துருவோம்...

அதென்னவோ, நேத்து முழுக்க முழுக்க ரொம்ப கொண்டாட்டமான நாளா இருந்துச்சு. எல்லா புள்ளைங்களும் இத்தனை அழகான்னு அசர வச்சுட்டு இருந்தாங்க. பசங்க, புள்ளைங்க கலாட்டால நான் எப்பவுமே என்னை ஈடுபடுத்திக்க மாட்டேன். ஆனா நேத்து அவங்க கூட போய் நானும் கலாட்டா பண்ணனும்னு ஆசைப் பட்டேன். ஆனா பாருங்க, இந்த ஈகோ இல்ல ஈகோ, அது வந்து என்னை தடுத்திடுச்சு...

அப்புறமா சாப்பிட போகலாம்னு முடிவுப் பண்ணி எழுந்தப்ப, பொண்ணும் மாப்பிளையும் சாப்பிட வந்துட்டாங்க. மாப்பிளை பொண்ணுக்கு ஊட்டி விடுங்கன்னு அங்க வந்தும் கலாட்டா. நோ, அதெல்லாம் முடியாது, என் பிரெண்ட்ஸ் எல்லாம் பாத்துட்டு இருக்காங்கன்னு மாப்பிளை வெக்கப் பட, அப்படினா என் டார்லிங்குக்கு நான் ஊட்டி விடுறேன்னு என் மாமா பையன் முன்னாடிப் போய் நிக்குறான். என் தங்கச்சி ஒருத்தி, அப்படினா அத்தானுக்கு நான் ஊட்டி விடுறேன்னு சொல்றா. எல்லாரும் பேசாம போய் சாப்பிடுங்கன்னு கூட்டத்துல ஒரு ஆள் அதட்டுன பிறகு தான் அடக்க ஒடுக்கமா எல்லாம் ஓடிப் போய் சாப்பிட உக்காந்தாங்க.

அப்பவும் விடாம, மாப்பிளையோட பிரெண்ட்ஸ் கிட்ட போய், இத சாப்பிடுங்க, இது நல்லாயிருக்கும், இத சாப்பிடாதீங்க, காரமா இருக்கும்னு பொண்ணுங்க எல்லாம் அக்கறையா சொல்லிக் குடுத்துட்டு இருந்தாங்க. ஹஹா இந்தியன் கேர்ள்ஸ் ஆர் வெரி ப்யூட்டிபுல்ன்னு ஒருத்தர் ஈஈ-ன்னு சிரிச்சுட்டு இருந்தார். ரியலி ஐ லைக் திஸ் மேரேஜ், டோன்ட் வொர்ரி, வி வில் டேக் கேர் ஆப் யுவர் சிஸ்டர்ன்னு ஒருத்தர் வாக்குறுதி குடுத்தார்.

ரொம்ப அலைச்சல் வேற இருந்ததால சாப்பிட்டதும் நான் டயர்ட்ல வீட்டுக்கு வந்துட்டேன். மறுவீடு காணப் போனவங்க, மாப்பிளை வீட்ல இருந்து கிளம்ப ராத்திரி பதினோரு மணி ஆகிடுச்சாம். பாவம் தான் பொண்ணும் மாப்பிளையும்...

இந்தா இன்னிக்கி அவங்களுக்கு விருந்து. நல்லா மூக்கு முட்ட சாப்ட்டுட்டு வந்ததால, அத பத்தி எழுத சோம்பலா இருக்கு...

இவ்வளவு நீளமா எழுதினா யார் படிப்பான்னு நீங்க கேக்குறதும் புரியுது, அதனால இத்தோட விட்டுட்டேன். பொழச்சுப் போங்க....

.

Saturday 16 May 2015

கன்னி பூஜை - 2



நேத்து ஒரு முக்கியமான நாள். ஆமா, கணேசன் மாமாவுக்கு கன்னி பூஜை.

வழக்கமா பூஜை எங்களோட பூர்வீக வீட்ல தான் நடக்கும். ஆனா இந்த வருஷம் அந்த வீட்டை புதுபிச்சு வாடகைக்கு குடுத்துட்டதால எங்க வச்சு நடக்க போகுதுன்னு யோசிச்சுகிட்டே இருந்தேன். ஆனா யார் கிட்டயும் கேக்கல.

சாயங்காலம் ஆறு மணிக்கு கிளம்புறேன்னு சொல்லிட்டு நல்லா தூங்கிட்டேன். பட்டுன்னு முழிப்பு வந்தப்ப மணி ஏழு. மாமாவ பாக்கப் போறோம், இப்படியே கிளம்பிட்டா நல்லாயிருக்காதேன்னு குளிச்சி முடிச்சி கிளம்ப ஏழரை ஆகிடுச்சு.

என்ன ஒரு அதிசயம்... கன்னி பூஜை மூத்த மாமா வீட்ல வச்சு. மூத்த மாமா குடும்பத்துல எல்லாருக்கும் பெரியவர். சமீபத்துல ஹார்ட் அட்டாக் வந்து, அதி அற்புதமா பெரிய போராட்டத்தோட மீண்டவர். அதனாலதானோ என்னவோ மாமி மனசு மாறி இந்த பூஜைக்கு சம்மதிச்சிருக்கணும்.

இதுல என்ன அதிசயம்னு கேக்குறீங்களா? மாமி எப்பவுமே எங்க குடும்பத்தோட ஒட்ட மாட்டாங்க. யார் கிட்டயும் பேசவும் மாட்டாங்க. யார் வீட்டுக்கும் வரவும் மாட்டாங்க. வருசா வருஷம் கன்னி பூஜை நடந்தா மட்டும் எதோ சக்தி அவங்கள பூஜை நடக்குற இடத்துக்கு இழுத்துட்டு வந்துடும்.

ஆனா இந்த வருஷம் அந்த பிரச்சனையே இல்லையே. பூஜையே அவங்க வீட்ல தானே.

நான் அங்க போனப்ப வாசல்ல பிள்ளைங்க பாண்டி விளையாடிகிட்டு இருந்தாங்க. இன்னும் கொஞ்ச பேர் கண்ணாமூச்சி விளையாட, யார் பின்னால ஒளியலாம்ன்னு இடம் தேடிட்டு இருந்தாங்க.

வாசல்லயே மாமி உக்காந்துட்டு இருந்தாங்க. என்னைக் கண்டதும், சொன்ன முதல் வார்த்தை, “வாமா, சாப்டுறியா”ன்னு தான்.

நாம தான், சாப்பாடுனாலே எங்க சாப்பாடு, எங்க சாப்பாடுன்னு கேக்குற ஆளாச்சே, எல்லாரும் சாப்பிட்டாச்சான்னு கேட்டேன். இனி தான் எல்லாரும் சாப்பிடப் போறாங்க. நீயும் போய் சேர்ந்துக்கோன்னு சொன்னதும், அப்ப நிலா சோறு இல்லையான்னு சித்தி ஒருத்தங்கள பாத்துக் கேட்டேன்.

அதெல்லாம், உங்க அம்மா இருக்குறப்ப எல்லாருக்கும் வரசி குடுப்பா. இப்ப யாருக்கு அந்த பொறுமை இருக்குன்னு கேட்டதும், ஏன் நான் இல்லையா, சாப்பாட்ட எடுத்துட்டு வாங்க, இன்னிக்கி என் கையால தான் எல்லாருக்கும் சாப்பாடுன்னு சொன்னேன்.

விளையாடிட்டு இருந்த பசங்க எல்லாம் போட்டது போட்ட படி இருக்க, என் பக்கத்துல ஓடி வந்துட்டாங்க. ஒருத்தன் சட்டுன்னு என் கால்ல விழுந்து, தெய்வமே, நாங்களே சாப்ட்டுக்குறோம், எங்கள கொன்னுராதன்னு கையெடுத்து கும்புடுறான். உடனே கும்பலா எல்லாரும், ஆமா தெய்வமே, எங்கள விட்ருங்கன்னு ஒரே கோரஸ்...

கிர்ர்ர்ர்... இதுக்காகவே ஒருத்தரையும் விடப் போறதில்லன்னு மாமி கிட்ட, மாமி, வாங்க கிட்சனுக்குள்ள போவோம். இன்னிக்கி எல்லாருக்கும் என் கையால தான் சாப்பாடுன்னு சொல்லி விடு விடுன்னு கிட்சனுக்குள்ள போய்ட்டேன்.

சொல்ல மறந்துட்டேனே, இங்க யாருக்குமே நம்மள தொரத்துரவங்க வீட்ல இருக்கோம்ங்குற எண்ணமே இல்ல. எல்லாரும் என்னவோ அவங்கவங்க வீடு மாதிரி சகஜமா இருக்காங்க. ஏன், மாமியே கூட வாசல்லயே நின்னு, வாங்கன்னு கூப்ட்டுட்டு இருக்காங்க. மாமி இருக்காங்களேன்னு கூட பாக்காம அவங்கள இடிச்சுட்டு கண்ணாமூச்சி விளையாடுற பசங்க ஓடிட்டு இருக்காங்க. ஏன், நானே கொஞ்சமும் தயங்கல, உரிமைய கைல எடுத்துக்கிட்டேன்.

சரி, விஷயத்துக்கு வருவோம், கிட்சனுக்குள்ள புகுந்த நான், முதல்ல சோறு எங்க இருக்குன்னு கேட்டேன். அது ஒரு பெரிய பானைல இருந்துச்சு. ஒரு ஆப்பை கொண்டு வாங்க மாமின்னு சொல்லி, ஆப்பைய வாங்கி, சோத்தை எடுத்து ஒரு குத்துப்போனில போட்டு, என்னவெல்லாம் குழம்பு இருக்குன்னு கேட்டேன். பருப்பு, சாம்பார், ரசம் மூணும் இருக்குன்னு சொன்னாங்க. பருப்புக் குழம்பு வேணாம், மீதி ரெண்டையும் கொண்டு வாங்கன்னு சொல்லி, அதையும் வாங்கி சோத்துக்குள்ள விட்டேன்.

நாரத்தங்கா தீயல் பாத்தாலே நல்லா இருந்துச்சு. செம மணம். “தீயலுக்கு கருப்பட்டி போட்டீங்களோ மாமி”ன்னு கேட்டதும், “ஆமா, இல்லனா ரொம்ப கசக்கும்ல”ன்னு மாமி சொல்லிட்டே அவியலயும் எடுத்து தந்தாங்க. பப்படம் எங்கன்னு கேட்டா, இளைய மாமி அப்ப தான் அடுப்ப படபடன்னு பத்த வைக்குறாங்க. பொறிச்சு வச்சத எல்லாம் பிள்ளைங்க தின்னுட்டாங்க, இந்தா இப்ப பொறிச்சுடுறேன்னு சமாதானம் வேற.

சரி, பப்படம் மெதுவா ரெடி ஆகட்டும்னு நான் அவியலயும் நாரத்தங்கா தீயலயும் சோத்துக்குள்ள கொட்டி, கைய நல்லா கழுவிட்டு, சோத்துக்குள்ள விட்டு பிசைய ஆரம்பிச்சேன். பதமா பிசைஞ்சு ஒரு பெரிய உருண்டை உருட்டி நிமிரவும், கால்ல விழுந்தானே அந்த பக்கி முதல் ஆளா கைய நீட்டிகிட்டு நிக்கான். முதல் உருண்டை அவனுக்கு தான் வேணுமாம். “இன்னும் பப்படம் போடலல”ன்னு நான் சொன்னதுக்கு, “சும்மா குடு அண்ணி, உன் கையால எது குடுத்தாலும் நல்லா தான் இருக்கும்”னு கண்ணடிக்குறான். கிர்ர்ர்ர்... இன்னொரு சித்தி அவன் தலைய புடிச்சு உலுப்பி, “உனக்கு அவள கிண்டல் பண்ணலனா தூக்கம் வராதாலே”ன்னு கேக்க, எல்லாரும் ஒரே சிரிப்பு. நான் அந்த உருண்டைய அவனுக்கே குடுத்துட்டேன். வாங்கிட்டு “தேங்க்ஸ் அண்ணி”ன்னு ஓடிட்டான்.

அப்புறம் பப்படம் போட்டு வரசி, எல்லாருக்கும் உருண்டை பிடிச்சி குடுக்க ஆரம்பிச்சேன். கிட்டத்தட்ட மூணு நேரம் சோறு, கறி, கூட்டுன்னு எல்லாத்தையும் போட்டு வரசி வரசி குடுக்க குடுக்க தீந்துகிட்டே இருக்கு. அப்பா, மாமாக்கள், மாமிக்கள், சித்திங்க, சித்தப்பாங்க, பசங்கன்னு எல்லாரும் சாப்பிட்டாச்சு. தம்பி அந்த நேரம் அங்க இல்ல, அவன் மட்டும் தப்பிச்சுட்டான். எல்லாம் சரி, யாருலே எனக்கு சோறு வரசி தருவா? எல்லாம் அப்பப்ப ஒரு உருண்டை நானே சாப்ட்டுகிட்டேன். ரெண்டாவது மாமா என் கைல ஆயிரம் ரூபாய குடுத்து, வச்சுக்கோன்னு சொன்னாங்க. எதுக்கு மாமான்னு கேட்டேன், சந்தோசமா இருக்கேண்டான்னு தலைய தடவுனாங்க.

அதுக்குள்ள ரூபாய படக்குன்னு பிடிங்கிட்டு போய்டுச்சு ஒரு பக்கி. கூட்டத்துக்குள்ள யாருன்னு பாக்குறதுக்குள்ள ஒரு சலசலப்பு. நேரம் ஆச்சு, போய் படயல போடுங்கன்னு.

நான் ஹால்ல தான் இருந்தேன். என்னென்ன படைச்சாங்கனு பாக்கல. கண்டிப்பா கக்கன் இருக்கும். அது போக பலகாரம், பாயாசம், பஞ்சாமிர்தம், பானகாரம், புட்டாமிர்தம் முக்கியம். அப்புறம் இந்த அவல், பொறி, பழ வகைகள், இளநின்னு பெரிய லிஸ்ட் இருக்கும். எல்லாரும் அவங்கவங்க வேலைல மூழ்கிப் போக நான் கொஞ்சம் ஹால்ல உக்காந்து சூப்பர் சிங்கர் பாக்க ஆரம்பிச்சேன்.

மணி பதினொண்ணு. திடீர்னு சத்தம் கேட்டுச்சு. படையல் ரெடி ஆகிட்டு இருக்கும் போதே மாமி மேல கணேசன் மாமா வந்துட்டாங்க. மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க, கிட்சனுக்குள்ள வச்சே ஓ-ன்னு அழ ஆரம்பிச்சுட்டாங்க. கை கால் எல்லாம் வெட்டி வெட்டி இழுக்குது. தரையோட தரையா கிடந்து அங்கயும் இங்கயுமா தவழ்றாங்க. கையாலயே எல்லாரையும் ஆவேசமா விலக்கி விட்டுட்டு, பிடிக்க போனவங்கள எல்லாம் பிடிச்சு தள்ளி விடுறாங்க. அப்புறம் அவங்களே தவழ்ந்து தவழ்ந்து படையல் இருந்த இடத்துக்கு போய்ட்டாங்க.

படையல் இருந்த இடத்துக்கு போனதும், அங்க தீபாராதனை காட்ட மூணு இடத்துல சூடம் கொளுத்தி வச்சிருந்தாங்க. அத அப்படியே கைல எடுத்து அவங்களே ஆக்ரோசமா படையலுக்கு சுத்தி காட்டினாங்க. அப்படியே சூடத்த கீழ வச்சு, அது மேல கமந்து நின்னு, அந்த வாசத்த சுவாசிச்சாங்க. அப்புறம் கக்கன் வச்சிருந்த கிண்ணிய எடுத்து நல்லா மூச்சை இழுத்து விட்டு வாசம் எடுத்தாங்க. அப்புறம் பலகாரம், பாயாசம், பழங்கள்ன்னு ஒண்ணொண்ணா வாசம் பிடிச்சாங்க. கடைசியா அங்க இருந்த மல்லிகைப் பூவ எடுத்து நெஞ்சோட அணைச்சு வச்சு, கொஞ்ச நேரம் இழுத்து இழுத்து வாசம் பிடிச்சாங்க. அப்படி அவங்க செய்தப்ப ஒரு ஆக்ரோசம் தெரிஞ்சுது. இதெல்லாம் என்னோடதுன்னு ஒரு ஆர்வம் தெரிஞ்சுது. இடைல இடைல ஹக் ஹக் ன்னு விக்கலோட ஒரு சிரிப்பு வேற. கண்ண மூடிட்டே, எல்லாத்தையும் லயிச்சு, ரசிச்சு, அனுபவிச்சாங்க.

இத எல்லாம் பாத்துட்டு ரொம்ப பொடிசுங்க எல்லாம் ஓ-ன்னு பயத்துல அழ ஆரம்பிச்சுட்டாங்க. ஏலே, நான் வந்துருக்கேன், அழறத நிறுத்துன்னு முதல் வார்த்தை. கப்புன்னு எல்லாம் அழுகைய நிறுத்திட்டு மலங்க மலங்க முளிக்குதுங்க.

எல்லாரும் கூடி இருந்த கூட்டத்த விலக்கி யாரையோ தேடினாங்க. நானும் அக்காவும் தள்ளி நின்னு எட்டிப் பாத்துட்டு இருந்தோம். முதல்ல அக்காவ கைக்காட்டி பக்கத்துல கூப்ட்டாங்க.

அக்கா போனதும், அவளுக்கு வாய் நிறைய கக்கன் ஊட்டி, தலை நிறைய எண்ணெய குளிர குளிர வச்சு, பூ எடுத்து குடுத்து, கூடவே கொஞ்சம் பஞ்சாமிர்தம், பலகாரம், பாயாசம் எல்லாம் வழிய வழிய கைல அமுக்கி, தலைல கை வச்சுட்டே, இருபத்தி ஒன்பது வயசுல தான் இவளுக்கு கல்யாணம் நடக்கும், அதுவரைக்கும் புள்ளைய யாரும் தொல்லைப் பண்ணக் கூடாது, வார்த்தையால சுடக் கூடாதுன்னு எல்லாரையும் பாத்து கண்ண உருட்டிட்டே சொன்னாங்க. அப்படினா இன்னும் மூணு வருசத்துக்கு பேச்சிலர் லைப் என்ஜாய்க்கா ன்னு நான் சத்தமாவே சொன்னேன். உடனே, நீ இங்க வான்னு கூப்ட்டாங்க.

பக்கத்துல போனேன். படையல்ல அவ்வளவு ஐட்டம்ஸ் இருக்கு, எனக்கு ஒரே ஒரு மாம்பழத்த கைல குடுத்து, கக்கன் ஊட்டி விட்டு, தலைல எண்ணெய் வச்சு, உனக்கு நான் வேலை தருவேன். பறந்து போய்ட்டே இரு. சந்தோசமா இருன்னு சொல்லிட்டு, கொஞ்ச நேரம் அமைதியா இருந்தாங்க. சரி, அவ்வளவு தான்னு நான் எழுந்தேன். படக்குன்னு கைய புடிச்சு, அழுதுட்டே “ரொம்ப கவனமா இரு மக்கா”ன்னு சொன்னாங்க. அதெல்லாம் நான் இருப்பேன்னு சொன்னதும், கூட்டத்த பாத்து, புள்ளைய கலங்க விட்ராதீங்கலே, அது அழுதா எனக்கு தாங்காதுன்னு சொன்னாங்க. இப்ப யாருமே அவள அழ வைக்கலன்னு மாமா சொன்னதும், “அழ வைச்சிராதன்னு தானாலே சொன்னேன்”னாங்க. எனக்கு ரொம்ப ஆச்சர்யமா இருந்துச்சு. படையல்ல அத்தன பொருள் இருந்தும், ஒரே ஒரு மாம்பழத்த மட்டும் எனக்கு குடுக்க வேண்டிய அவசியம் என்ன? அப்படினா அம்மா என்கிட்ட இருக்கான்னு தானே அர்த்தம்.

அப்புறமா ஒவ்வொருத்தரயா கூப்பிட்டு ஒவ்வொருத்தருக்கும் ஏதாவது ஒண்ணு சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க. குடி குடின்னு குடிச்சு சீரளியுற மாமாவ பாத்து, அங்க இருந்த தென்னம்பூவ எடுத்து ரெண்டு அடி குடுத்து, உன்ன தாம்லே என்னால மாத்த முடியல, ஆனா உன் புள்ளைங்கள பாத்தியா, நல்லா வருவாங்கலேன்னு சொன்னாங்க. தம்பிய கூப்ட்டப்ப அவன் பொறுமையா பக்கத்துல உக்காந்து, இன்னும் ஏதாவது வேணுமா, அடுத்து நாங்க என்னப் பண்ணணும்னு அக்கறையா விசாரிச்சான். நாங்க சின்ன பசங்க, எங்களுக்கு என்ன பண்ணனும்னு எதுவும் தெரியாது, பெரியவங்க, நீங்க தான் சொல்லிக் குடுக்கணும், கண்டிப்பா கேட்டுக்குறோம்னு சொன்னான். கேக்குறேன் மக்கா, உங்க கிட்ட கேக்காம வேற யார் கிட்ட கேக்கப் போறேன்னு அவனுக்கு கக்கன் ஊட்டி விட்டாங்க.

கடைசியா, அப்பாவையும் மூணாவது மாமாவையும் பாத்த உடனே கட்டிப் பிடிச்சு, உச்சி மோந்து, குடும்பத்து தூணுங்கலேன்னு ஆக்ரோசமா சிரிச்சாங்க.

நான் இருக்கேன் மக்கா உங்களுக்கு எல்லாம். இந்த கொடி வாட எப்பவும் விட மாட்டேன். தெருதெருவா அலைஞ்சேன்லே, இருக்க ஒரு வீடு இல்லாம, எனக்குன்னு ஒரு இடம் மட்டும் தாங்கலே, என்னை இப்படி அலைய விடாதீங்கன்னு சொல்லும் போது கணேசன் மாமா கண்ணு கலங்கிடுச்சு. பசிச்சுதுலே, சரி, என் பழைய இடத்துக்கு போய்டலாம்னு அங்கப் போனேன், அங்க எல்லாரும் புதுசா இருக்காங்கலே, என்ன பண்றதுன்னே தெரியாம தெரு தெருவா அலைஞ்சேன்ன்னு சொன்னாங்க.

கூடவே, பாத்தீங்களாலே, எப்படி இங்கயே வந்துட்டேன்னு. இனி நான் இங்க தாம்லே இருக்கப் போறேன், இந்த இடம் சுத்தமா இல்லலே, சுத்தம் பண்ணி வைங்கன்னு கட்டளை போட்டாங்க. பெரிய மாமாவும் இந்த இடத்த இனி நீயே எடுத்துக்க. நான் எல்லாம் சரி பண்ணி தரேன்னு சொன்னாங்க.

அதுக்குள்ள கணேசன் மாமா ஓன்னு ஒரு சத்தம், வயிறெல்லாம் குளுந்துடுச்சு மக்கா. ரொம்ப சந்தோசமா இருக்கேன். என் மக்கள எல்லாரையும் பாத்துட்டேன். பின்னாலயே வருவேன்லே, உங்களுக்கு எதுவும் ஆக விட மாட்டேன். தனியான்னு எனக்கு எதுவும் செய்ய வேணாம்லே, எல்லாரும் சேர்ந்து கூடி எனக்கு படையல் போடுங்க மக்கான்னு சொல்லிட்டு இளநி, தண்ணின்னு மடக் மடக்னு குடிக்க ஆரம்பிச்சுட்டாங்க. கொஞ்ச நேரத்துலயே வலிப்பு வந்த மாதிரி உடம்ப முறுக்கி, பக்கத்துல சித்தியும் மாமியும் தாங்கி பிடிக்க, அப்படியே பொத்துன்னு கீழ விழுந்தாங்க.

பூஜை எல்லாம் முடிஞ்சு தனியா வந்து உக்காந்தப்ப எனக்கு ஒரு விஷயம் புரிஞ்சுது, ஆன்மாவா இருந்தாலும் அவங்களுக்குன்னு ஒரு இடம் வேணும்னு. கணேசன் மாமா தெருதெருவா இடம் இல்லாம அலைஞ்சேன்னு சொன்னப்ப நான் அழுதுட்டேன். இந்த குலத்தையே கட்டிக்காக்குற மாமாவுக்கு இந்த நிலையான்னு.

அப்புறம், படையல் எல்லாம் எல்லாரும் எடுத்து சாப்பிட்டுட்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தப்ப மணி ஒண்ணு. மனசு சந்தோசமா இருந்தாலும், ஒரு பாரம் அழுத்திட்டே இருக்கு. மாமாவுக்கு ஏதாவது செய்யணும்ன்னு தோணிகிட்டே இருக்கு.


.

Friday 15 May 2015

காதல் பொழுது...




சின்ன வயசுல இருந்தே எனக்குள்ள ஒரு கெத்து. என்னோட அம்மா அப்பா மாதிரி யாரும் லவ் பண்ண முடியாதுன்னு. அதுமட்டுமில்லாம சுத்துறது பூராவும் பசங்க கூட. இப்படி சுத்தி சுத்தியே பசங்கனா சைட் அடிக்கணும்ங்குற தியரியே மறந்து போச்சு.

என் ப்ரண்ட்ஸ் எல்லாரும் ஒரு குட்டிச் சுவர் மேல உக்காந்துட்டு வர்ற போற புள்ளைங்கள எல்லாம் சைட் அடிச்சுட்டு இருப்பாங்க. நானும் அவங்க கூட உக்காந்துட்டு ஹே அந்தப் பொண்ண பாரு, இந்த பொண்ணப் பாருன்னு லீட் எடுத்து குடுத்துட்டு இருப்பேன். நாம பசங்க சைட் அடிக்குறத ரசிக்கலாம், ஆனா ஒரு பையன் கூட நம்மள திரும்பிப் பாத்துரக் கூடாதுன்னு நினைப்பேன்.

வாழ்க்கைல நிறைய மாற்றங்கள் எப்பவுமே வந்துகிட்டே தான் இருக்கும். ஒரு கட்டத்துல காதல்ங்குற வார்த்தையே தப்புன்னு வெறுத்து ஓடியிருக்கேன். நானும் காதலிக்குறேன்னு பின்னால சுத்தியிருக்கேன். ஆனா அதெல்லாம் காதலே இல்லன்னு உணர்ந்தப்ப காதல்ங்குற வார்த்தை மேலயே ஒரு வெறுப்பு வந்துருக்கு. காதலே தப்புங்குறப்ப கல்யாண வாழ்க்கை மட்டும் எப்படி நிலைக்கப் போகுது? எல்லாத்தையும் தூக்கிப் போட்டுட்டு உடலும் மனமும் சோர்ந்த நேரத்துல கூட அவர் என்னோட நல்ல நண்பனா தொடர்ந்துருக்கார்.

அவர்னா அவர் தான்... யாருன்னு எல்லாம் கேக்கக் கூடாது.

பொதுவா நாங்க ரெண்டு பேரும் விடிய விடிய பேசிகிட்டே இருப்போம். ரெண்டு பேருக்கும் பல பல காயங்கள்னால தூக்கம் வர்றதில்ல. அப்படி தான் அன்னிக்கி நான் பத்து மணிக்கு கால் பண்ணினேன், எனக்கு உன்கிட்ட பேசணும் போல இருக்கு, ஆனா இப்ப பிரெண்ட்ஸ் பார்ட்டி வச்சிருக்காங்க, நான் அங்கப் போறேன், தூங்கிறாத, வந்து கூப்பிடுவேன்னு சொல்லிட்டு போன வச்சுட்டார்.

சரி, என்னமோ சொல்ல வர்றார்ன்னு நானும் வெய்ட் பண்ணினேன். அஞ்சே நிமிசத்துல அவர் கிட்ட இருந்து கால். நீ வெய்ட் பண்ணுவன்னு கஷ்டமா இருந்துச்சு, அதான் நான் பார்ட்டிக்கு போகலன்னு சொன்னார்.

வழக்கமா என் கிட்ட பேசணும்னா மொட்டை மாடிக்கு வந்துருவார். இன்னிக்கி நிலா ரொம்ப அழகா இருக்குன்னு சொன்னார். நிலா மறைக்கும் தென்னங்கீற்றுகள் அழகோ அழகுன்னு சொன்னார். கொஞ்ச நேரம் வழக்கமான மொக்கைகள், பாட்டு எல்லாம் பாடிட்டு இருந்தோம். அப்போ பேச்சு என்னோட பிரெண்ட்ஸ் பத்தி போச்சு.

எனக்கு நிறைய ப்ரண்ட்ஸ் இருக்காங்க, ஆனா க்ளோஸ் பிரெண்ட்ன்னு யாரும் கிடையாது. எனக்கு அவங்க கஷ்டம் எல்லாம் தெரியும், அப்ப எல்லாம் அவங்க கூட இருந்துருக்கேன், ஆனா யார் கிட்டயும் என் கஷ்டத்த பகிர்ந்துக்குறது இல்லன்னு சொன்னேன். அப்ப நான் யாருன்னு கேட்டார். பிரெண்ட்ன்னு சொன்னேன். நான் உன் க்ளோஸ் பிரெண்ட் இல்லையா, நீ எல்லாம் என்கிட்ட ஷேர் பண்ணுவன்னு எதிர்பார்த்தேன்னு சொன்னார். சொல்லிட்டு உடனே கட் பண்ணிட்டு போய்ட்டார்.

திருப்பி கூப்பிட்டா என்னை பிளாக் பண்ணி வச்சுட்டார். கால் போகவே இல்ல. சரி, நாம எதுவும் தப்பா சொல்லிட்டோமோன்னு ஒரே பதற்றம். அவர் மனச நாம காயப்படுத்திட்டோமோன்னு அழுகை வேற வந்துடுச்சு. கொஞ்ச நேரத்துல திருப்பி கூப்பிட்டார். இன்னியோட உன் கூட பேசுறத விட்டுடணும்னு தான் நினச்சேன், ஆனா முடியல, இனி இப்படி ஒரு வார்த்த பேசாதன்னு சொன்னார். யாருமே இல்லாம தனியா வீட்டை விட்டு வெளில வந்தப்ப உன் கிட்ட மட்டும் தான் என்னோட இருப்பிடத்த சொன்னேன், நீ மட்டும் தான் கூட இருந்தன்னு சொல்லிட்டே வந்தவர், உனக்கு இப்ப என்ன பிரச்சனை, செத்துப் போவ, அவ்வளவு தானேன்னு கேட்டுகிட்டு, கொஞ்சம் தயங்கி, சரி, உன் கிட்ட ஒண்ணு சொல்லணும்னு நிறுத்தினார்.

எனக்கு கொஞ்சம் வேர்க்க ஆரம்பிச்சிடுச்சு. என்னடா இது, ஒரு வேளை ஐ லவ் யூ சொல்லிடுவாரோன்னு. அவர் உடனே பக்கத்துல தண்ணி இருக்கானு கேட்டார். இருக்குன்னு சொன்னேன். எடுத்து குடின்னார். குடிச்சேன். இப்ப பதற்றம் போய்ட்டா, போய் தூங்கு, குட் நைட் ன்னு சொல்லிட்டார்.

நான் ஷாக்காகி, அப்புறம் நார்மலுக்கு வந்து சிரிக்க ஆரம்பிச்சுட்டேன். உடனே, இப்ப ரிலாக்ஸ் ஆகிட்டியா, எல்லாத்தையும் விடு, எனக்கு இந்த லவ் மேல எல்லாம் சுத்த நம்பிக்கை இல்ல, பேசாம என்னை கல்யாணம் பண்ணிக்குறியான்னு பட்டுன்னு கேட்டுட்டார். மறுபடியும், ஷாக், நடுக்கத்துல கண் எல்லாம் கலங்கி, அழ ஆரம்பிச்சுட்டேன். எனக்கு லவ் எல்லாம் பிடிக்காதுன்னு சொன்னேன். நானும் லவ் பண்றியான்னு கேக்கலையே, கல்யாணம் பண்ணிக்றியான்னு தானே கேட்டேன்னார். இதுக்கு ஓகேனா சொல்லு, நான் தொடர்ந்து பேசுறேன், இல்லனா என்னால நடிக்க முடியாது, இதோட நம்ம பழக்கத்த முடிச்சுக்கலாம்ன்னு சொல்லிட்டார்.

பத்து நிமிஷம் நான் எதுவுமே சொல்லல. அப்புறம் அவரே சாரி, உன்னை கட்டாயப் படுத்துறேன்ல, நீ எப்படி இருந்தாலும் எனக்கு பிடிக்கும், நீ என் பிரெண்டாவே இரு, போய் தூங்குன்னு சொல்லிட்டார். பேசவே மாட்டாரோன்னு நினச்சேன், ஆனா அடுத்த நாள்ல இருந்து சாப்ட்டியா, தூங்குனியான்னு ஒரே அக்கறை. என்ன இது? ஏன் இப்படி தொடர்ந்து கால் பண்றீங்கன்னு கேட்டா, உனக்கு தான் நான் பிரெண்ட், ஆனா எனக்கு நீ அப்படி இல்ல, நான் இப்படி தான் கேப்பேன்ன்னு ஒரே கலாட்டா...

ரெண்டு நாளுக்கு அப்புறம் நானும் சரி சொன்னேன். காரணம், அவர்னா எனக்கும் ரொம்ப பிடிக்கும். இந்த காதல் தான் பிடிக்காம இருந்துச்சு...

நிறைய சண்டை வரும். ரொம்ப கோபத்துல திட்டுவார், நான் பொறுமையா பின்னால போவேன், இப்ப நான் கோபத்துல கத்துறேன், அவர் பொறுமையா பின்னால வர்றார். இப்படியே நாட்கள் ஓடிட்டு இருக்கு. இன்னும் எத்தனை நாளோ, இல்ல வருசமோ ஆகும்னு தெரியாது, ரெண்டு பேருக்குமே தனித் தனி லட்சியங்கள்ன்னு இருந்தாலும், எங்களோட குடும்பம்னு ஒண்ணு இருக்கு. எக்காரணம் கொண்டும் எங்களால குடும்பத்துல யாருக்கும் சின்ன மன வருத்தம் கூட வந்துடக் கூடாதுன்னு நினைக்குறோம். காதலா, குடும்பமான்னு பாத்தா, ரெண்டுமே தேவையா இருக்கு. அதனால படிப்படியா ஸ்டெப் எடுத்து வச்சுட்டு இருக்கோம்.

அப்புறம் இதெல்லாம் உங்க சொந்த அனுபவமான்னு கேட்டா பதிலும் கிடைக்காது. எல்லாம் உங்கள் அனுமானத்துக்கே விட்டுடுறேன்.

ஏன்னா, சில விஷயங்கள் இப்படி இருந்தா நல்லா இருக்கும்னு தோணும்.... அத இப்படியாவது வாழ்ந்து பாத்துடணும்னு ஆசை இருக்கும். எனக்கு இதெல்லாம் பிடிச்சிருக்கு. அதோட என்னோட ப்ளாக் வாசிக்குரவங்களுக்கும் நான் ஒரு சுவாரசியத்த குடுத்தே ஆகணுமே... அதனால இது நடந்த சம்பவமான்னு கேட்டா அத மட்டும் சொல்ல மாட்டேன். டொட்டடொயிங்....



.

Tuesday 12 May 2015

முட்டைகள் பலவிதம்



கோழி முட்டை, வாத்து முட்டை, புறா முட்டை, காக்கா முட்டை, மயில் முட்டை, பருந்து முட்டைன்னு பறவைங்க முட்டை நாம ஏராளமா பாத்துருக்கலாம்...

சரி, சரி, அதெல்லாம் இருக்கட்டும். இப்ப வாங்க, அந்த பாழடைஞ்ச ஓட்டு வீட்டுக்குள்ள நுழைவோம்...

ஸ்... மெதுவா வாங்க. சிலந்தி வலை அங்கங்க பின்னியிருக்கு. கண்ணே தெரிய மாட்டேங்குது. அந்தா ஒரு மேஜை ட்ராயர் இருக்குல, அதுக்குள்ள டார்ச் லைட் இருக்கான்னு பாருங்க...

டார்ச் இருக்கா. இருங்க, இருங்க, நான் வரேன். பேட்டரி எல்லாம் கழட்டிப் போட்ருக்கு. இப்படி எடுத்து மாட்டணும். இந்தா இப்ப லைட் எரியுதுல.

அட, ட்ராயர்க்குள்ள என்னது இது? பல்லி முட்டை போட்டு வச்சிருக்கு. உடஞ்ச தோடு கூட இருக்கு. அனேகமா பல்லி குட்டி வெளில வந்துருக்கும்.

சரி, நமக்கு இன்னும் வேலை இருக்கு. பல்லி முட்டைய பாத்துட்டு அப்படியே நிக்க முடியுமா? பின்னால கதவத் தொறந்துட்டு அப்படியே அந்த குளத்துப் பக்கமா போவோம்.

மரம் எல்லாம் எவ்வளவு தாவல்ல கிளை விட்டுருக்கு. கொஞ்ச நேரம் அந்த கிளைல உக்காந்து ஊஞ்சல் ஆடலாம். அச்சச்சோ, என்னது இது, பளபளன்னு, என்னவோ ஜவ்வரிசிய அவிச்சி வச்ச மாதிரி?

அடடா, அதெல்லாம் மீன் முட்டைங்க. பொரிச்சதும், நேரா தண்ணிக்குள்ள விழுந்துடும். அதான் அந்த மீன் இந்த இலை கீழயே நின்னு தண்ணிய மேல பீச்சியடிச்சுட்டு இருக்கா? சரி சரி, டிஸ்டர்ப் பண்ண வேணாம், இறங்கி அந்த ஓடைப் பக்கமா போவோம்.

ஓடைல கூட தண்ணி சலசலன்னு ஓடுதுல. அந்தா, அங்க வீதியா இருக்குற இடத்துல கொஞ்சம் தண்ணி தேங்கி நிக்குது. அதுக்குள்ள என்னது, கண்ணாடி மாதிரி, நீளமா ஒரு கொடி? அவ்வ்வ்வ் இது தவளை முட்டை. அப்படியே உள்ள போட்டுறலாம். அம்மா தவளை இங்க எங்கயாவது தான் இருக்கும்.

தவளைய நினச்சு ஏன் பயந்து பின்னால போறீங்க? பாத்து, பாத்து, புதர்ல பாத்து காலை வைங்க. பாம்பு ஏதாவது இருக்கப் போகுது. அவ்வ்வ்வ், சொன்னேன் பாத்தீங்களா, இங்க ஒரு பாம்பு முட்டைப் போட்டு அது மேல அடைக் காத்துகிட்டு இருக்கு. நம்மள பாத்து சீறுது. மெதுவா, ஸ்டெப் ஸ்டெப்பா பின்னால வந்துருங்க. இப்ப ஓடலாம், ரெடி, ஜூட்....

அடப் போங்கப்பா, ஓடி ஓடி பீச்சுக்கே வந்துட்டோம். இருட்ட வேற ஆரம்பிச்சிடுச்சு. அந்தா பாருங்க, ஆமைங்க எல்லாம் பீச் மணல்ல குழி தோண்ட ஆரம்பிச்சுடுச்சு. வந்ததும் வந்துட்டோம், அப்படியே அது முட்டைப் போடுறதையும் பாத்துட்டுப் போய்டுவோம். அப்படி சைலென்ட்டா உக்காருங்க.

அந்த பாழடைஞ்ச வீட்ல எடுத்த டார்ச் எங்க? ஹாங்... கொண்டாங்க, அடிச்சுப் பாப்போம். அந்தா, அந்த வலது பக்கத்துல அந்த ஆமை முட்டைப் போடுது பாருங்க, ஒரே நேரத்துல இது என்ன பொத்து பொத்துன்னு நாலஞ்சு முட்டை போட்டுகிட்டே இருக்கு?

முடிஞ்சுது, அவ்வளவு தான், முட்டைப் போட்டதும் மண்ணை வச்சு மூடியாச்சு.

இனி நாம வீட்டுக்குப் போகலாம்.

ஆனா ஒண்ணு, காலைல எடுத்த ஓட்டத்துல, உங்களுக்கு எல்லாம் குட் மார்னிங் சொல்ல மறந்துட்டேன். அதனால இன்னிக்கி நோ குட் மார்னிங். நாளைக்கு வேணா, உங்கள காட்டுக்குள்ள கூட்டிகிட்டு போய் முதலை முட்டைய காட்டி குட் மார்னிங் சொல்றேன். வர்டா...

Monday 11 May 2015

பார்ன் ப்ரீ (born free) – திரை விமர்சனம்



பார்ன் ப்ரீ (born free) – இந்தப் படம் என் கைல கிடைச்சு கிட்டத்தட்ட ஆறு மாசமாவது இருக்கும். எப்பவும் பாத்த படத்தையே திருப்பி திருப்பி பாக்குற பழக்கம் எனக்கு இருக்குறதால, இத பாக்க ஏனோ இன்ட்ரெஸ்ட் காட்டவே இல்ல. ஒரு நாளு மட்டும் ஒன்னரை மணி நேரப் படத்த பத்தே நிமிசத்துல பார்வர்ட் அடிச்சு பாத்துட்டு, என்னமோ வேட்டைக்கு போறாங்க, ஒரு சிங்கம் வருது, ரெண்டு ஆளுங்க வராங்க, காட்டுக்குள்ள சுத்துறாங்கன்னு நானே முடிவு பண்ணி படத்த முடிச்சுட்டேன்.

நேத்து, நல்லா ஊர் சுத்திட்டு வந்தா வர்ற வழக்கமான தலைவலி, கூடவே உடல்வலின்னு எப்படியும் தூக்கம் வராதுன்னு தெரிஞ்சி போச்சு. சரி, ஏதாவது படத்த எடுத்து பாப்போம், எவ்வளவு மொக்கையா இருந்தாலும் பாத்துரணும்னு ஒரு முடிவோடத் தேடித் தான் இந்தப் படத்த பாக்க ஆரம்பிச்சேன்.

படம் ஒரு வேட்டைல ஆரம்பிக்குது. மனுசங்கள கொல்லுற சிங்கத்த கொல்லப் போனப்ப மூணு குட்டிங்களோட தாயையும் கொல்ல நேர்ந்துடுது. அத அப்படியே விட்டா செத்துப் போய்டும்ங்குறதால அதுங்கள தன்னோட இருப்பிடத்துக்கே தூக்கிட்டு வந்து தன்னோட மனைவி ஜாய் கிட்ட ஒப்படைக்குறார் ஜார்ஜ். நாள் முழுக்க எதுவுமே சாப்டாம அடம்பிடிக்குற அந்த குட்டிகள் மூணும் அப்புறம் என்னாச்சுங்குறது தான் கதை.

என்ன தான் பீடிங் பாட்டில்ல பால் குடுத்தாலும் மூஞ்சை திருப்பிக்குற குட்டிங்க, ஜார்ஜ் பாலை ஜாய் கைல விட, அத நக்கி நக்கி குடிக்க ஆரம்பிச்சிடுறதுல இருந்து படம் பிக் அப் ஆக ஆரம்பிச்சிடுது.

அடேங்கப்பா, மூணும் சேர்ந்து என்ன சேட்டைப் பண்ணுதுங்க. ஒண்ணு மேல ஒண்ணு ஜம்ப் பண்ணுதுங்க, குட்டிக்கரணம் அடிக்குதுங்க, ஒருத்தர ஒருத்தர் தொரத்திப் பிடிக்குதுங்க. இதுல ஆம்பள பசங்க ரெண்டு பேரும் எப்பவும் தனியா விளையாடிட்டு இருக்க கடைசி பொம்பள குட்டி எல்சா மட்டும் வீட்டுக்குள்ள வீட்டுக்குள்ள ஓடி வந்துடுது. நாளடைவுல எல்சா ஜாய் கூடவே சுத்தவும் ஆரம்பிச்சிடுது.

ஒரே அட்டூழியமா (இந்த அட்டூழியம் ரொம்ப ரசிக்க வைக்குது) போயிட்டு இருக்குற நேரத்துல தான் கதைல திடீர்னு கென்டால் வர்றார். அவர் ஜார்ஜோட பாஸ். அவர் இருக்குறப்பவே இதுங்க மூணும் வீட்டுக்குள்ள அட்டகாசம் பண்ண, அதுலயும் எல்சா அவர பாத்து ஒரு டீச்சர் ரேஞ்ச்ல உறும, அவர் அட்டென்சன்ல பெஞ்ச் மேல ஏறி நிக்குறார்.

இனி விடுவாரா அவர்? மூணு சிங்க குட்டிங்களையும் நெதர்லேண்ட்ல இருக்குற ஜூவுல கொண்டுப் போய் விட சொல்லிடுறார்.

ஜார்ஜும் ஜாயும் சிங்கக் குட்டிங்கள கொண்டுப் போய் ஜூவுல விடப் போகும் போது ஜார்ஜ் மனசு மாறி எல்சாவ ஜாய் கிட்ட திரும்பவும் ஒப்படைச்சுடுறார். அப்புறம் என்ன, எல்சா தனி மனுசியா இவங்க கூட வாழத் தொடங்குது.

காலம் ஒரே மாதிரி இருக்காதே, எல்சா பெரியவளா வளர்ந்துடுறா. ஒரு வளர்ப்பு பிராணிங்குறது தாண்டி அதுக்கும் தேவைகள் இருக்குனு ஜார்ஜும் ஜாயும் உணர ஆரம்பிக்குறாங்க. அந்த நேரத்துல தான் எல்சா ஒரு பெரிய யானைக் கூட்டத்த தொரத்தி ஊருக்குள்ள விட, யானைக் கூட்டம் ஊரையே அழிச்சுட்டு போய்டுது. ஆனா அது எதைப் பத்தியும் கவலைப் படாத எல்சா, யானைக் கூட்டத்துல இருந்து தான் கூட்டிகிட்டு வந்த யானைக் குட்டியோட விளையாடிகிட்டு இருக்கு.

நஷ்டஈடு கட்டிட்டு வந்த கென்டால் இதுக்கு மேல எல்சா அங்க இருக்கக் கூடாதுன்னு முடிவு எடுக்குறார். அவர் ஜார்ஜ், ஜாய் கிட்ட ரெண்டு ஆப்சன் குடுக்குறார்.

ஒண்ணு, எல்சா காட்டுக்கு திரும்ப போகணும், இல்லனா அவள ஜூவுக்கு அனுப்பணும்ன்னு.

அப்ப தான் அந்த துணிவான முடிவ எடுக்குறாங்க ஜாய். ஆமா, எல்சாவ காட்டுக்கு அனுப்ப போறதாவும் , அதுக்கு அவளுக்கு பயிற்சி குடுக்க மூணு மாசம் டைம் வேணும்னும் கென்டால் கிட்ட கேக்குறாங்க.

வீட்டுக்குள்ளயே சுத்தி சுத்தி வந்த எல்சாவுக்கு எப்படி காட்டு வாழ்க்கை பழகும்? அதுக்காக அவங்க ரெண்டு பேரும் எடுக்குற ஸ்டெப்ஸ் பாத்தா நிஜமாவே நமக்கு பதற்றமா இருக்கு.

ஒவ்வொரு தடவையும் எல்சா காயத்தோட திரும்பி வர்றப்ப எல்லாம் ஜாய் அத ஓடிப் போய் கட்டிக்குறாங்க. ஆனா திரும்ப திரும்ப காட்டுக்குள்ள தனியா விட்டுட்டு வராங்க.

ஒரு வாரம் அடிக்குற மழைனால எல்சாவ தேடிப் போக முடியாம கடைசில குத்துயிரா எல்சாவ கண்டுபிடிக்கும் போது ஜார்ஜ் தன்னோட மொத்த நம்பிக்கையையும் இழந்துடுறார். இவளால காட்டுக்குள்ள வாழவே முடியாது, இவள இப்படியே விட்டா ஒண்ணு வேட்டைக்காரங்க கொன்னுடுவாங்க, இல்லனா அவளே செத்துடுவா, இவளுக்கு ஜூ தான் பாதுகாப்பான இடம். எப்படி நீ இவ்வளவு கொடூரக்காரியா இருக்க”னு கோபமா கத்துவார்.

அவ சுதந்திரமா பிறந்தவ, அவ சுதந்திரமா தான் வாழணும், அவளால முடியும், முடியணும். அப்படி இல்லனா வாழ்நாள் முழுசும் ஒரு கூண்டுக்குள்ள அடைபட்டு செத்துப் போறதுக்கு ஒரு நாளாவது சுதந்திரமா இருந்துட்டு செத்துப் போகட்டும்னு ஜாய் சொல்றப்ப எனக்கு என் அம்மா நியாபகம் வந்தா. அம்மாவும் என்னை இப்படியே தானே சொல்லுவா.

இந்த மொத்தப் படமே சுவாரசியமானது தான்னாலும் சில இடங்கள் கூடுதல் சுவாரசியம்.

அதுவும் எல்சாவ ஒரு புது ஆண் சிங்கத்துக்கிட்ட அனுப்பி வச்சிட்டு “முதல் தடவ தன்னோட டீன் ஏஜ் பொண்ண டேட்டிங் அனுப்பி வைக்குற அம்மாவோட மனநிலைல நான் இருந்தேன்”னு ஜாய் சொல்றப்ப உதட்டுல ஒரு புன்னகை வராம இல்ல.

வேட்டையாட ஒரு காட்டுப் பன்றிய தொரத்திட்டு போற எல்சா, அத கொல்ல எந்த முயற்சியும் எடுக்காம போன்னு அசால்ட்டா விட்டுடுறா. ஆனா அந்த பன்றி இருக்கே, ரொம்ப திமிர் பிடிச்சது. தன்னை எல்சா எதுவும் செய்யாதுன்னு தெரிஞ்சதும் கொழுப்பு புடிச்சது எல்சாவ திரும்ப திரும்ப வம்புக்கு இழுக்குது. ஓடி வந்து முட்டி முட்டி சண்டைக்கு வான்னு சவால் விடுது. வெறுத்துப் போன எல்சா அந்த இடத்த விட்டு ஒரே ஓட்டம்... ஹஹா...

இத படம் வெளிவந்த ஆண்டு ஆயிரத்தி தொள்ளாயிரத்து அறுபத்து ஆறு. எங்க அம்மாக் கூட பொறக்கல அப்ப. அப்பவே என்ன மாதிரி ஒரு ரியாலஸ்ட்டிக் சீன்ஸ் எடுத்துருக்காங்க. மனுசங்க நடிச்சுட்டு போய்டலாம், அது ஒண்ணும் பெரிய விஷயம் இல்ல, ஆனா அதுல வர்ற ஒவ்வொரு சிங்கமும், பிரேம் பை பிரேம் அட்டகாசம் பண்ணியிருக்கு.

முகத்துல சிங்கங்க காட்டுற ஒவ்வொரு உணர்ச்சியும் சான்சே இல்ல. அதுவும் அந்த குட்டிங்க மூணும் அட்டகாசம் பண்றப்ப... ஹஹா... இத எல்லாம் ஒரு சிரிப்போட, முகம் எல்லாம் பிரகாசமா வச்சுட்டு எழுதிட்டு இருக்கேன்னு நான் சொன்னா கண்டிப்பா நீங்க நம்பணும், ஏன்னா, இப்ப உங்க முகத்துல கூட புன்னகை வருது பாருங்க...

இதே படத்த இந்த காலத்துல எடுத்துருந்தா நாலஞ்சு கம்ப்யூட்டர் முன்னால உக்காந்து தஸ்ஸு புஸ்ஸுன்னு க்ராபிக்ஸ்ல பண்ணி முடிச்சிடுவாங்க. எடே... சிங்கத்த கட்டிபுடிச்சி உருளவும் குடுத்து வச்சிருக்கணும்டே...

எனக்கும் உடனே கென்யா காட்டுக்குள்ள ஓடிப் போய் ஒரு சிங்கத்த கட்டிப் பிடிக்க ஆச தான், ஆனா காட்டு விலங்குகள நாம தொடக் கூடாது, ஏன்னா அதெல்லாம் “பார்ன் ப்ரீ அண்ட் ஷுட் லிவ் அஸ் ப்ரீ”ன்னு ஜாய் சொல்லியிருக்காங்க. எல்சாவோட குட்டிங்கள அணைச்சுக்க அவங்க துடிச்சாலும் எவ்வளவு கட்டுப்பாடா இருந்தாங்க.

அதனால, அடுத்து நான் அடுத்தப் படம் பாக்கப் போறேன், பாத்துட்டு வந்து கண்டிப்பா சொல்லுவேன். காதுல பஞ்சை ரெடியா வச்சிக்கோங்க. ஆனா கண்ண தொறந்து வச்சு படிச்சிருங்க.

Friday 8 May 2015

சுகாதாரம் வேண்டும்



மத்திய அமைச்சர் நிதின் கட்கரி என்னமோ ஒரு விஞ்ஞான கருத்து சொல்லிட்டாராமாம், இங்க நிறைய பேர் அவர கழுவி கழுவி ஊத்திகிட்டு இருக்காங்க...

ஒருத்தர் செடி மேல யூரின் போனா செடி பட்டுப் போய்டும்னு சொல்றாரு... அதென்னமோ உண்மை தான். காரணம் யூரின்ல நிறைய யூரியா இருக்கு. அதனால தான் செடி பட்டுப் போய்டுது. அதையே டைய்லூட் (dilute - நீர்த்துக் போகச் செய்தல்) பண்ணி பயன்படுத்தினா செடி தளதளன்னு வளர தான் செய்யும்... அமிர்தமும் நஞ்சுன்னு பழமொழி கூட இருக்குல.... அதுக்காக யூரினும் அமிர்தமும் ஒண்ணான்னு சண்டைக்கு வந்துராதீங்க... பயனுள்ள எதுவுமே அமிர்தம் தான்... கொஞ்சூண்டு யூஸ் பண்ணினா...

அப்புறம் சில பேரு இதெல்லாம் அசிங்கம், ச்சீ ச்சீ, அந்தாள அத எல்லாம் போய் சாப்பிடச் சொல்லுங்கன்னு சொல்லியிருக்கார். அவங்களுக்கு எல்லாம் நான் ஒரு சம்பவத்த சொல்லணும்னு நினைக்குறேன்...
..............................................

எங்களோட ப்ராக்ட்டிக்கல் க்ளாஸ்ல புட் மைக்ரோபியல் பயோடெக்னாலஜின்னு ஒரு க்ளாஸ் உண்டு. அதாவது நாம சாப்பிடுற பழம், காய்கறிகள், மீன், இறைச்சி, பால், குளிர்பானம் எல்லாம் தரமானது தானா, அதோட மேற்பரப்புல அதுல என்ன மாதிரியான கிருமிகள் இருக்கு, உட்பகுதில என்ன மாதிரியான கிருமிகள் இருக்குன்னு செக் பண்ணி கண்டுபிடிச்சு ரிப்போர்ட் குடுக்கணும்.

அப்படி சில காய்கறிகளை லேப்ல பிள்ளைங்க டெஸ்ட் பண்ணினாங்க. அதிர்ச்சி குடுக்குற விதமா அந்த காய்கறி மேற்பரப்புல எல்லாம் இருந்த கிருமிங்க என்னன்னு பாத்தீங்கனா பூராவும் மனுஷ கழிவுல வெளியேறுற அதி பயங்கரமான நோய் கிருமிங்களான விப்ரியோ காலரே, சால்மோனெல்லா, சிஜெல்லா, ஈ.கோலி எல்லாம். ஆனா அதே காய்கறிகளோட உட்பகுதியில பரிசோதிச்சுப் பாத்தா இதுல ஒண்ணு கூட காணோம்...

பிள்ளைங்க வந்து கேட்டாங்க, மேடம், என்ன ரிப்போர்ட் எழுதணும்னு...

"இந்த காய்கறி எல்லாம் சாப்பிட தகுதியானது தான், ஆனா நல்லா கழுவி அப்புறமா பயன்படுத்தணும். இதோட மேற்பரப்புல இருக்குற அந்த பயங்கர நோய் தொற்றுக் கிருமிகள் செடிகளுக்கு போடுற உரம் மூலமாவோ, நீர்பாசனம் மூலமாவோ வந்திருக்க வாய்ப்பிருக்கு, அதனால சாப்பிடும் போது எச்சரிக்கையா இருக்கணும்னு எழுது"ன்னு சொன்னேன்.

எப்பவுமே கழிவுகள் மறுசுழற்சி முறைல பயன்படுத்தப்பட்டுகிட்டே தான் இருக்கு. அதுல கலந்துருக்குறது பிற உயிர்கள்கிட்ட இருந்து வெளியேறுற உயிர் சத்துக்கள் தான். அதே நேரம் ஆபத்தும் கூடவே தான் இருக்கும்.

இன்னிக்கி ஒருத்தர் ஒரு வார்த்த சொல்லிட்டார்ன்னு கொதிக்குரவங்க காலம் காலமா அப்படி விளைவிக்கப் பட்ட காய்கறிகளையும், பழங்களையும் தான் சாப்பிட்டுட்டு இருக்கோம்ங்குறத மறந்துடக் கூடாது. அதுக்காக எதுவுமே சாப்டாம இருந்துடப் போறோமா என்ன?
................................................

முதல்ல அவர கழுவி ஊத்துறதுக்கு முன்னாடி, நாங்க எல்லாம் சுத்த சைவம்னு சொல்லிக்குறவங்க மண்ணுல விளையுற காய்கறிகள ஒழுங்கா கழுவி சாப்பிடுங்க. நீங்க விரும்பலனாலும் அதெல்லாம் தொட்டுத் தான் ஆகணும்...
................................................

கழுவினா, சும்மா முக்கி எடுக்குறது இல்ல.... நல்ல தரமான ரன்னிங் வாட்டர்ல (ஓடுற தண்ணி, அதான் பைப்ப தொறந்து வச்சுகிட்டு) நல்லா தேய்ச்சு கழுவணும். அந்த தண்ணிய எக்காரணம் கொண்டும் மறுபடியும் கழுவ யூஸ் பண்ணக் கூடாது. அப்படி யூஸ் பண்ணினா தண்ணில வெளியேறுன கிருமிங்க மறுபடியும் காய்கறில ஒட்டிக்கும், அப்படியே வயித்துக்குள்ளயும் போய்டும்...

...................................................................

பீ- கேர்புல்.... நான் மொத்தமா நம்மள தான் சொன்னேன்




.

Wednesday 6 May 2015

மாற வேண்டிய கல்வி முறை



பொதுவா எங்களோட யூனிவெர்சிட்டில அதுவும் நாங்க சார்ந்த டிபார்ட்மென்ட்கள்ல யூ.ஜி, பி.ஜி பிள்ளைங்களுக்கு க்ளாஸ் எடுக்குறவங்க அந்தந்த ப்ரொபசர் கீழ பி.ஹச்.டி பண்ற ஸ்காலர்ஸ் தான்.

அதுவும் சீனியர் ப்ரொபசர்களோட ஸ்டுடென்ட்ஸ்னா கெத்து ஜாஸ்தி. இவங்க எம்.பில், பி.ஜி பிள்ளைங்களுக்கு க்ளாஸ் எடுப்பாங்க. ஜூனியர் ப்ரொபசர்களோட ஸ்டுடென்ட்ஸ் யூ.ஜி பசங்களுக்கு க்ளாஸ் எடுப்பாங்க.

என்னோட கைட் கொஞ்சம் சீனியர். அதனால அவருக்கு பி.ஜி பசங்களுக்கு க்ளாஸ் ஒதுக்கப்பட்டுருக்கும். போன வருஷம் வரைக்கும் நான் பி.ஜி ஸ்டுடென்ட்ஸ்க்கு தான் க்ளாஸ் எடுத்துட்டு இருந்தேன்.

இந்த வருஷம் தான் ஒரு ஜூனியர் ப்ரொபசர் மெடிக்கல் லீவ் போட்டுட்டு போக, அவங்க க்ளாஸ் அட்ஜஸ்ட் பண்றதுக்காக என்கிட்ட வந்து கேட்டாங்க.

அதெல்லாம் முடியாதுன்னு தான் நான் முதல்ல சொன்னேன், யூ.ஜி பிள்ளைங்களுக்கெல்லாம் க்ளாஸ் எடுத்தா நம்ம கெத்து என்னாகுறது? ஆனாலும் அட்லீஸ்ட் இன்னிக்கி ஒருநாளாவது போன்னு சொன்னதால தான் யூ.ஜி பிள்ளைங்களோட க்ளாஸ் போக சம்மதிச்சேன். சும்மா ஏதாவது சொல்லிட்டு வந்துடலாம்ங்குறது தான் என்னோட ப்ளான். இன்னும் ஒரு விஷயம் என்னனா நான் ரெகுலரா காலேஜ் போக மாட்டேன். பல நேரங்கள்லயும் வீட்ல இருந்தே வேலைய முடிச்சுடுவேன்.

அங்க போனதுக்கப்புறம் தான் தெரிஞ்சுது, அத்தன புள்ளைங்களும் நாம பேசுறத அத்தன ஆர்வமா கேக்குறாங்க. தயக்கமே இல்லாம கேள்விகள் கேக்குறாங்க. அவங்க கிட்ட விளையாட்டுத் தனம் இருந்தாலும் அதே ஆர்வம் கத்துக்குறதுலயும் இருக்கு. ஆண், பெண்ங்குற பேதம் இல்லாம ஒரு சமமான சோசியல் மூவ் இருக்கு அவங்ககிட்ட.

அவங்ககிட்ட நான் முதல்ல க்ளாஸ் எடுத்தப்ப தமிழ்ல பேச ரொம்ப தடுமாறுனேன். நிறைய வார்த்தைகளுக்கு தமிழ்ல என்னன்னு எனக்கு புரியாம ஒரு மாதிரி அபிநயம் பிடிச்சி நான் பேசினத வச்சே அவங்க தமிழ் பெயர கண்டுபிடிச்சு சொன்னாங்க. உண்மைய சொன்னா முதல் நாள் நான் அவங்களுக்கு ஆசான் இல்ல, அவங்க தான் எனக்கு ஆசானா இருந்தாங்க. நிறைய தமிழ் வார்த்தைகள் கத்துக்கிட்டேன். அத வச்சே ஆங்கிலத்த அவங்களுக்கு புரிய வச்சேன்.

எப்படி, மனுஷன், விலங்கு, பறவை, மீனினம்ன்னு வேறுபாடுகள் இருக்கோ அப்படித் தான் கண்ணுக்கு தெரியாத நுண்ணுயிர்களுக்கும் (இந்த வார்த்தைய அவங்க கிட்ட இருந்து கத்துக்குறதுக்குள்ள நான் தடுமாறிட்டேன்) பேக்டீரியா, வைரஸ், பங்கை, ப்ரோடோசோவா அப்படின்னு வேறுபாடுகள் இருக்கு. நாம மனுசங்களுக்கு எப்படி பெயர் வச்சு கூப்டுறோமோ அப்படி தான் அதுகளையும் ஒவ்வொரு பேரு வச்சு கூப்பிடுறோம். என்ன ஒண்ணு, எப்படி ஜப்பான் நாட்டுல உள்ளவங்க பெயர் நமக்கு புரியாதோ அப்படி தான் இந்த பெயர்களும் அவ்வளவு ஈசியா வாய்ல நுழையாது. அதுக்காக படிக்காம அப்படியே விட்டுற முடியுமா? அதுக்கு ஒரு வழி இருக்கு.

பேக்டீரியாவுல “ப்டெல்லோவிப்ரியோ”ன்னு ஒரு இனம் இருக்கு. பெயரை கேட்டாலே என்னவோ மாதிரி இருக்குல, இது என்ன பண்ணும்னா வேற பேக்டீரியாக்கள புடிச்சி சாப்ட்டுடும். அந்த அளவு சேட்டைக்கார பேக்டீரியா அது. உங்கள்ல யாரு ரொம்ப சேட்டைப் பண்ணுவான்னு கேட்டேன்.

அவங்க ஒரு பையன கை காட்டினாங்க. இவன் தான் எங்க சாப்பாட்ட எல்லாம் இண்டர்வல் நேரம் எடுத்து சாப்ட்ருவான் மேடம்ன்னு.

சூப்பர், இனி அவனுக்கு “ப்டெல்லோவிப்ரியோ”ன்னு பெயர் வச்சிடுங்க. அதோட இந்த “ப்டெல்லோவிப்ரியோ” க்ராம் நெகடிவ் வகைய சார்ந்தது, அதான் சேட்டை பண்ணுதுல, அப்ப நெகடிவ்ன்னு மனசுல பதிய வச்சுக்கோங்க. இதால ஆக்சிஜன் இல்லாம வாழ முடியாது, அதனால அத “ஒப்ளிகேட் ஏரோப்”ன்னு சொல்றோம், அதால வேற பேக்டீரியாக்கள சாப்டாம இருக்க முடியாதுல, அப்படி தான் ஆக்சிஜன் இல்லாமலும் வாழ முடியாதுன்னு சொன்னேன்.

அப்புறமா அந்த க்ளாஸ்ல பல பேருக்கு பேக்டீரியாவோட பெயர் தான். அதோட குணநலன்கள அனுசரிச்சு ஒவ்வொரு பிள்ளைக்கும் ஒவ்வொரு நாமகரணம். அதுக்கப்புறம் நான் க்ளாஸ் போறேனோ இல்லையோ அந்த மேடத்த வர சொல்லுங்கன்னு அவங்களே என்னை சிபாரிசு பண்றாங்க.

இந்த புள்ளைங்க ஆர்வத்த பாக்குறப்ப ரெகுலரா போகலனாலும் நம்மால முடிஞ்ச அளவு அவங்களுக்கு க்ளாஸ் எடுக்கப் போகணும்னு முடிவு பண்ணி வச்சிட்டு தான் அப்பப்ப நானே ஆர்வமா அவங்க க்ளாஸ்க்கு ஓடுறேன்.

உண்மைய சொன்னா, ஏனோ தானோன்னு இருக்குற மேற்படிப்பு படிக்குற பிள்ளைங்களுக்கு அடித்தளம் படிக்குற இந்த புள்ளைங்க எவ்வளவோ மேல். கெத்தாவது மண்ணாவது... அட்லீஸ்ட் கத்துக்கணும்ங்குற ஆர்வமும், புது விசயங்கள தெரிஞ்சிக்கணும்ங்குற ஆர்வத்தையும் நாம ஊட்டிட்டா போதும், இந்த பிள்ளைங்களோட பேஸ்மென்ட் நல்லா இருந்தா, இதே பிள்ளைங்க மேற்படிப்பு படிக்கும் போது சிறந்த மாணவர்களா வருவாங்களே. அந்த பேஸ்மென்ட் சரியில்லாம தான் பி.ஜி படிக்குற பிள்ளைங்க வெறும் புத்தகப் புழுவாவும், சுயமா சிந்திச்சு ஒரு ரிசெர்ச் பண்ற முடியாமலும் இருக்காங்க.

ஏதோ மத்தவங்களுக்கு சொல்லிக் குடுக்குற அளவுக்கு எனக்கு சில விஷயங்கள் தெரியுதுனா என்னோட பேஸ்மென்ட் அப்படி. கேள்வி மேல கேள்வி கேட்டு நான் அத்தன படுத்தியும் பொறுமையா எல்லா கேள்விக்கும் பதில் சொல்லித் தந்தாங்களே அவங்களால தான் நான் இன்னிக்கி ஓரளவு என்னோட துறை சார்ந்த விஷயங்கள்ல ஆர்வமா இருக்கேன், இன்னும் கத்துக்குறேன்.

உச்சாணிக் கொம்புல இருந்துகிட்டு நான் மேல ஏறி வந்துட்டேன்னு சொல்றது வாழ்க்கை இல்ல, ஒவ்வொரு புள்ளைங்களா மேல ஏத்தி விட்டுட்டு, எப்பாவாவது வழியில பாக்குறப்ப எங்க மேடம்னு ஓடி வந்து கைப்புடிப்பாங்க பாத்தீங்களா, அது தான் வாழ்க்கை. ஸ்கூல் டீச்சரா போலாம்னா, அது பத்தி எதுவும் தெரியாது, ஆனாலும் எனக்கு இப்ப பேஸ்மென்ட் வாழ்க்கை ரொம்ப பிடிச்சிருக்கு. அடுத்த வருஷம் வாய்ப்பு கிடச்சா முழு நேர யூ.ஜி ஸ்டாபா மாறிடணும்.

ஏணி ஏறுறதுக்கு மட்டுமில்ல, இறங்கி வந்து கைகுடுத்து தூக்கி விடுறதுக்கும் தான்.




.