காலங்காத்தாலயே முழிப்பு தட்டிடுச்சு. பயங்கர குளிர். அடுத்து என்ன செய்றதுன்னு ஒண்ணும் தோணல. எதுவுமே தோணலனா அப்படியே படுத்து மறுபடியும் தூங்கிட வேண்டியது தானேன்னு நீங்க கேக்குறது எனக்கு புரியுது. நானும் வேற ஏதாவது பண்ணியிருப்பேன்னு நீங்க நினைக்குறீங்களா? கண்ணை இருக்க மூடிட்டு அப்படியே படுத்துட்டேன்.
கொஞ்ச நேரத்துலயே என்னமோ தோண, அப்படியே வாசல் பக்கமா உத்துப் பாக்குறேன். என்னவோ நெளிஞ்சிட்டு இருக்கு. மெல்ல எழும்பிப் பக்கத்துல போய் பாக்குறேன். ஆக்டோபஸ் மாதிரியும் இல்லாம, வேற எது மாதிரியும் இல்லாம உருவமே இல்லாம இருக்கு அது. என்னடா இதுன்னு அதையே பாத்துட்டு இருக்கேன். திடீர்னு அது துடிக்க ஆரம்பிக்குது.
எனக்கு என்னப்பண்றதுன்னே தெரியல. இப்ப இத கை வச்சு தொடலாமா? தொட்டா கடிக்குமா? ஏன் இது இப்படி துடிக்குது, இதுக்கு என்னாச்சுன்னு ஒரே கேள்வி மனசுல. அப்பத்தான் அது உடம்புல இருந்து ஒண்ணு தனியா கழண்டு விழுது. அந்த உருவமும் துடிப்பு அடங்கி அமைதியாகிடுச்சு. கீழ விழுந்தது என்னன்னு மெதுவா கைல எடுத்துப பாத்தேன். அட, முத்து. உருண்டையா, கொஞ்சம் பெருசா, பளபளன்னு இருக்கு.
முத்தையே பாத்துட்டு இருந்தேனா,இப்ப மறுபடியும் அந்த உருவம் துடிக்க ஆரம்பிக்குது. எனக்கு இப்ப பயம் ஒரு பக்கம், ஆவல் ஒரு பக்கம். மறுபடியும் முத்து வருமான்னு நினச்சுகிட்டு அதையே பாத்துட்டு இருக்கேன். இந்த தடவ வந்தது ஒரு சின்ன யானை பொம்மை. அதுவும் நேர்த்தியா அச்சு அசல் யானை மாதிரியே இருந்துச்சு.
அடுத்தடுத்து அது துடிக்க, மான் கொம்பு, ஜவ்வாது, குங்குமப்பூ, சந்தனக்கட்டைன்னு என்னென்னவோ வந்து விழ ஆரம்பிச்சுது. எனக்கு இப்போ பயம் சுத்தமா போய்டுச்சு. அது ஒவ்வொரு தடவ துடிக்கும் போதும் மெதுவா கை வச்சு தடவிக் குடுக்குறேன். நல்ல சாப்ட்டா தொடவே அவ்வளவு நல்லா இருந்துச்சு.
அப்புறம் ரொம்ப நேரம் அது துடிக்கவே இல்ல. சரி எல்லாம் முடிஞ்சிடுச்சுன்னு நினச்சு நான் வெளில வந்து விழுந்த பொருட்கள மறுபடியும் பாக்குறேன். எல்லாம் அங்கங்க சிதறிக் கிடக்கு. அப்ப தான் கண்ணுல அது படுது. ஒரு பை. என்ன இது, பை மாதிரி இருக்குன்னு மெல்ல எடுத்துப் பிதுக்கிப் பாக்குறேன்.
உள்ள என்னமோ நெளியுது. எனக்கு வேற சுத்தமா பயம் போய்டுச்சா, அது என்னன்னு பாத்துடணும்னு ஒரே ஆவல். அப்படியே பைக்குள்ள கைய விட்டு அத வெளில எடுக்குறேன்.
அட, அந்த பெருசை போலவே இது குட்டி. அப்படினா அந்த உருவம் குட்டிப் போட்டுருக்கு. அதுக்கு தான் அது அப்படி துடிச்சிருக்கு. குட்டிய எடுத்து அது கிட்ட காட்டினேன். அது சந்தோசத்துல அங்கயும் இங்கயுமா அசைஞ்சு டான்ஸ் ஆடிச்சு.
அதுக்கு ஏதாவது பேர் வைக்கணும்னு தோணிச்சு. பேர் வைக்கணும்னாலே நான் உங்க கிட்ட தான கேப்பேன். அதனால ஓடி வந்து லேப்டாப் எடுத்து ஆன் பண்ணி, டைப் பண்ண உக்காந்தேன். இன்னொரு தடவ அத பாப்போம்னு நினச்சு திரும்பிப் பாக்குறேன், அத காணோம். கூடவே அந்த குட்டியையும் காணோம்.
ஒரு மாதிரி ஷாக்ல, சரி எழுதுவோம்னு நினச்சு, கீ-போர்ட்ல டைப் பண்றேன், எழுத்து எதுவும் ஸ்க்ரீன்ல வரல. என்னடா இதுன்னு லேப்டாப்ப தொட்டுப் பாக்குறேன், இப்ப லேப்டாப்பயே காணோம்.
அப்படியே நெஞ்சை பிசையுற மாதிரி இருந்துச்சு. கொஞ்சம் தண்ணிக் குடிச்சா நல்லாயிருக்கும்னு தோணிச்சு. என்னது இது, பக்கத்துல வச்சிருந்த தண்ணி பாட்டிலையும் காணோம்? அந்த முத்து, மான் கொம்பு, யானை பொம்மை, சந்தனக்கட்டை, ஜவ்வாது இதெல்லாம் அங்கயே தான் இருக்கு.
அத எல்லாம் எட்டி எடுக்கலாம்னு கைய கொண்டு போய் பக்கத்துல போறேன், திடீர்னு தூக்கி வாரிப் போட்டு சட்டுன்னு எழுந்து உக்காந்துட்டேன். அட, அப்ப இதெல்லாம் கனவா? அடப் போங்கப்பா, நான் மறுபடியும் தூங்கப் போறேன்...
.


