Showing posts with label கனவு. Show all posts
Showing posts with label கனவு. Show all posts

Sunday, 15 November 2015

தூக்கம் வராத போது....



காலங்காத்தாலயே முழிப்பு தட்டிடுச்சு. பயங்கர குளிர். அடுத்து என்ன செய்றதுன்னு ஒண்ணும் தோணல. எதுவுமே தோணலனா அப்படியே படுத்து மறுபடியும் தூங்கிட வேண்டியது தானேன்னு நீங்க கேக்குறது எனக்கு புரியுது. நானும் வேற ஏதாவது பண்ணியிருப்பேன்னு நீங்க நினைக்குறீங்களா? கண்ணை இருக்க மூடிட்டு அப்படியே படுத்துட்டேன்.

கொஞ்ச நேரத்துலயே என்னமோ தோண, அப்படியே வாசல் பக்கமா உத்துப் பாக்குறேன். என்னவோ நெளிஞ்சிட்டு இருக்கு. மெல்ல எழும்பிப் பக்கத்துல போய் பாக்குறேன். ஆக்டோபஸ் மாதிரியும் இல்லாம, வேற எது மாதிரியும் இல்லாம உருவமே இல்லாம இருக்கு அது. என்னடா இதுன்னு அதையே பாத்துட்டு இருக்கேன். திடீர்னு அது துடிக்க ஆரம்பிக்குது.

எனக்கு என்னப்பண்றதுன்னே தெரியல. இப்ப இத கை வச்சு தொடலாமா? தொட்டா கடிக்குமா? ஏன் இது இப்படி துடிக்குது, இதுக்கு என்னாச்சுன்னு ஒரே கேள்வி மனசுல. அப்பத்தான் அது உடம்புல இருந்து ஒண்ணு தனியா கழண்டு விழுது. அந்த உருவமும் துடிப்பு அடங்கி அமைதியாகிடுச்சு. கீழ விழுந்தது என்னன்னு மெதுவா கைல எடுத்துப பாத்தேன். அட, முத்து. உருண்டையா, கொஞ்சம் பெருசா, பளபளன்னு இருக்கு.

முத்தையே பாத்துட்டு இருந்தேனா,இப்ப மறுபடியும் அந்த உருவம் துடிக்க ஆரம்பிக்குது. எனக்கு இப்ப பயம் ஒரு பக்கம், ஆவல் ஒரு பக்கம். மறுபடியும் முத்து வருமான்னு நினச்சுகிட்டு அதையே பாத்துட்டு இருக்கேன். இந்த தடவ வந்தது ஒரு சின்ன யானை பொம்மை. அதுவும் நேர்த்தியா அச்சு அசல் யானை மாதிரியே இருந்துச்சு.

அடுத்தடுத்து அது துடிக்க, மான் கொம்பு, ஜவ்வாது, குங்குமப்பூ, சந்தனக்கட்டைன்னு என்னென்னவோ வந்து விழ ஆரம்பிச்சுது. எனக்கு இப்போ பயம் சுத்தமா போய்டுச்சு. அது ஒவ்வொரு தடவ துடிக்கும் போதும் மெதுவா கை வச்சு தடவிக் குடுக்குறேன். நல்ல சாப்ட்டா தொடவே அவ்வளவு நல்லா இருந்துச்சு.

அப்புறம் ரொம்ப நேரம் அது துடிக்கவே இல்ல. சரி எல்லாம் முடிஞ்சிடுச்சுன்னு நினச்சு நான் வெளில வந்து விழுந்த பொருட்கள மறுபடியும் பாக்குறேன். எல்லாம் அங்கங்க சிதறிக் கிடக்கு. அப்ப தான் கண்ணுல அது படுது. ஒரு பை. என்ன இது, பை மாதிரி இருக்குன்னு மெல்ல எடுத்துப் பிதுக்கிப் பாக்குறேன்.

உள்ள என்னமோ நெளியுது. எனக்கு வேற சுத்தமா பயம் போய்டுச்சா, அது என்னன்னு பாத்துடணும்னு ஒரே ஆவல். அப்படியே பைக்குள்ள கைய விட்டு அத வெளில எடுக்குறேன்.

அட, அந்த பெருசை போலவே இது குட்டி. அப்படினா அந்த உருவம் குட்டிப் போட்டுருக்கு. அதுக்கு தான் அது அப்படி துடிச்சிருக்கு. குட்டிய எடுத்து அது கிட்ட காட்டினேன். அது சந்தோசத்துல அங்கயும் இங்கயுமா அசைஞ்சு டான்ஸ் ஆடிச்சு.

அதுக்கு ஏதாவது பேர் வைக்கணும்னு தோணிச்சு. பேர் வைக்கணும்னாலே நான் உங்க கிட்ட தான கேப்பேன். அதனால ஓடி வந்து லேப்டாப் எடுத்து ஆன் பண்ணி, டைப் பண்ண உக்காந்தேன். இன்னொரு தடவ அத பாப்போம்னு நினச்சு திரும்பிப் பாக்குறேன், அத காணோம். கூடவே அந்த குட்டியையும் காணோம்.

ஒரு மாதிரி ஷாக்ல, சரி எழுதுவோம்னு நினச்சு, கீ-போர்ட்ல டைப் பண்றேன், எழுத்து எதுவும் ஸ்க்ரீன்ல வரல. என்னடா இதுன்னு லேப்டாப்ப தொட்டுப் பாக்குறேன், இப்ப லேப்டாப்பயே காணோம்.

அப்படியே நெஞ்சை பிசையுற மாதிரி இருந்துச்சு. கொஞ்சம் தண்ணிக் குடிச்சா நல்லாயிருக்கும்னு தோணிச்சு. என்னது இது, பக்கத்துல வச்சிருந்த தண்ணி பாட்டிலையும் காணோம்? அந்த முத்து, மான் கொம்பு, யானை பொம்மை, சந்தனக்கட்டை, ஜவ்வாது இதெல்லாம் அங்கயே தான் இருக்கு.

அத எல்லாம் எட்டி எடுக்கலாம்னு கைய கொண்டு போய் பக்கத்துல போறேன், திடீர்னு தூக்கி வாரிப் போட்டு சட்டுன்னு எழுந்து உக்காந்துட்டேன். அட, அப்ப இதெல்லாம் கனவா? அடப் போங்கப்பா, நான் மறுபடியும் தூங்கப் போறேன்...


.

Wednesday, 27 November 2013

நிலவு வழித் தூது...!


ஏ நிலவு பெண்ணே...!

நீயே இந்த வழக்கின் உரையாடலை தீர்த்து வையடி…!

கார் என்றானாம், மாலை தொடுவானமென்றானாம்...
செங்காந்தள் நிரமவள், கற்பின் கனலென்று மகுடம் சூட்டி…
இருள் சூழ்ந்த மாலை நேரத்தில்
மதி மயங்கி கள்ளுண்ட மந்தியானானாம்...!

அத்தனை வர்ணனை
தூது செல்ல உன்னிடத்தில் கொட்டிய
என்னவன், என்முன் வார்த்தைகளின்
பஞ்சம் வர விக்கித்து நின்றதேனோடி...!

உனக்கு தெரியுமா?
வாய் சொல்லில் வீரனடி அவன்…
அவன் அதரம் உதிர்க்கும்
அத்தனை அனர்த்தங்களும்
அர்த்தமாய் தான் போய் விடுகிறது
அவன் கண்கள் ஊடுருவி நோக்கும்
மொத்த பாவையருக்கும்…!

கற்பனை உலகில் அவன் அங்கே
சஞ்சாரம் செய்து கொண்டிருக்க
பாவை என் மனமோ சஞ்சலத்தில் தவிக்குதடி...!

உன் மேகக் காதலனோ கொண்டலாய்
உன்னிடம் நேசம் பொழிந்திட்டான்…!
இங்கொருவனை பார்…
கொண்ட மையல் முழுவதையும்
தையல் உன்னிடம் கொட்டி விட்டு
வார்த்தைகள் தேடிக் கொண்டிருக்கிறான் என்னிடத்தில்...!

அவனிடத்தில் சென்று இதை கூறு
உன் அன்பிற்கினியவள் பசலை பீடிக்க
வெற்றிலை கொடியின்
இடையணைப்பில் கூட
மூச்சுத் திணறுகிறாளென்று...!
ஆம்பல் பூத்த தடாகத்து புல்வெளியில்
கரையிட்ட மச்சமாய் துள்ளித் தவிக்கிறாளென்று...!

அரை நாழிகை பொழுது கூட தலைவன்
பிரிந்து விட்ட காரணத்தால்
அரை நூற்றாண்டாய் வேடிக்கை காட்டுகிறது…!

விரைந்து செல்லடி மஞ்சு கொஞ்சும் வான்மதியே...!
இன்னும் ஒரு நொடி நீ தயங்கி நின்றால்
தலைவனின் பிரிவுணர்ந்த அன்றில் பறவையாய்…
என் தேகக்கூட்டில் உயிர் மட்டும்
மின்மினியாய் கண்சிமிட்டும்…!

நானோ...!

அவன் நினைவு தரும் மயக்கத்தில்
பிச்சியாய் உன்னோடு பிதற்றிக் கொண்டே
இப்படியே கல்லாய் சமைய வேண்டியது தான்…
அவனிருக்கும் திசை நோக்கி...!





- இது ஒரு மறுபதிவு 

Monday, 11 November 2013

கனவு கண்டா அது பலிக்குமா? பலிக்காதா?


ரெண்டு மூணு நாளா மனசுல எதோ ஒரு பாரம். அத எப்படி விவரிக்கன்னு கூட தெரியல. இன்னும் ஒண்ணரை வருசத்துல எப்படியாவது என்னோட கனவை நனவாக்கிட ரொம்ப ஆசை. இதுக்காக பெங்களூர் போகலாம்னு பாத்தா ஏனோ மனசு இங்க இருந்து கிளம்பவே மாட்டேங்குது. எதுவுமே வேணாம், இப்படியே இருந்துடலாம்னு தீவிரமா ஒரு மனசு சொல்லுது. வாழ்க்கைல அப்படி என்ன பெருசா சாதிச்சுட போறோம்னு ஒரு விதமான எண்ணம் மனசுக்குள்ள அலக்கழிச்சுட்டே இருக்கு.