Showing posts with label ரசிக்கலாம் வாங்க. Show all posts
Showing posts with label ரசிக்கலாம் வாங்க. Show all posts

Sunday, 15 November 2015

தூக்கம் வராத போது....



காலங்காத்தாலயே முழிப்பு தட்டிடுச்சு. பயங்கர குளிர். அடுத்து என்ன செய்றதுன்னு ஒண்ணும் தோணல. எதுவுமே தோணலனா அப்படியே படுத்து மறுபடியும் தூங்கிட வேண்டியது தானேன்னு நீங்க கேக்குறது எனக்கு புரியுது. நானும் வேற ஏதாவது பண்ணியிருப்பேன்னு நீங்க நினைக்குறீங்களா? கண்ணை இருக்க மூடிட்டு அப்படியே படுத்துட்டேன்.

கொஞ்ச நேரத்துலயே என்னமோ தோண, அப்படியே வாசல் பக்கமா உத்துப் பாக்குறேன். என்னவோ நெளிஞ்சிட்டு இருக்கு. மெல்ல எழும்பிப் பக்கத்துல போய் பாக்குறேன். ஆக்டோபஸ் மாதிரியும் இல்லாம, வேற எது மாதிரியும் இல்லாம உருவமே இல்லாம இருக்கு அது. என்னடா இதுன்னு அதையே பாத்துட்டு இருக்கேன். திடீர்னு அது துடிக்க ஆரம்பிக்குது.

எனக்கு என்னப்பண்றதுன்னே தெரியல. இப்ப இத கை வச்சு தொடலாமா? தொட்டா கடிக்குமா? ஏன் இது இப்படி துடிக்குது, இதுக்கு என்னாச்சுன்னு ஒரே கேள்வி மனசுல. அப்பத்தான் அது உடம்புல இருந்து ஒண்ணு தனியா கழண்டு விழுது. அந்த உருவமும் துடிப்பு அடங்கி அமைதியாகிடுச்சு. கீழ விழுந்தது என்னன்னு மெதுவா கைல எடுத்துப பாத்தேன். அட, முத்து. உருண்டையா, கொஞ்சம் பெருசா, பளபளன்னு இருக்கு.

முத்தையே பாத்துட்டு இருந்தேனா,இப்ப மறுபடியும் அந்த உருவம் துடிக்க ஆரம்பிக்குது. எனக்கு இப்ப பயம் ஒரு பக்கம், ஆவல் ஒரு பக்கம். மறுபடியும் முத்து வருமான்னு நினச்சுகிட்டு அதையே பாத்துட்டு இருக்கேன். இந்த தடவ வந்தது ஒரு சின்ன யானை பொம்மை. அதுவும் நேர்த்தியா அச்சு அசல் யானை மாதிரியே இருந்துச்சு.

அடுத்தடுத்து அது துடிக்க, மான் கொம்பு, ஜவ்வாது, குங்குமப்பூ, சந்தனக்கட்டைன்னு என்னென்னவோ வந்து விழ ஆரம்பிச்சுது. எனக்கு இப்போ பயம் சுத்தமா போய்டுச்சு. அது ஒவ்வொரு தடவ துடிக்கும் போதும் மெதுவா கை வச்சு தடவிக் குடுக்குறேன். நல்ல சாப்ட்டா தொடவே அவ்வளவு நல்லா இருந்துச்சு.

அப்புறம் ரொம்ப நேரம் அது துடிக்கவே இல்ல. சரி எல்லாம் முடிஞ்சிடுச்சுன்னு நினச்சு நான் வெளில வந்து விழுந்த பொருட்கள மறுபடியும் பாக்குறேன். எல்லாம் அங்கங்க சிதறிக் கிடக்கு. அப்ப தான் கண்ணுல அது படுது. ஒரு பை. என்ன இது, பை மாதிரி இருக்குன்னு மெல்ல எடுத்துப் பிதுக்கிப் பாக்குறேன்.

உள்ள என்னமோ நெளியுது. எனக்கு வேற சுத்தமா பயம் போய்டுச்சா, அது என்னன்னு பாத்துடணும்னு ஒரே ஆவல். அப்படியே பைக்குள்ள கைய விட்டு அத வெளில எடுக்குறேன்.

அட, அந்த பெருசை போலவே இது குட்டி. அப்படினா அந்த உருவம் குட்டிப் போட்டுருக்கு. அதுக்கு தான் அது அப்படி துடிச்சிருக்கு. குட்டிய எடுத்து அது கிட்ட காட்டினேன். அது சந்தோசத்துல அங்கயும் இங்கயுமா அசைஞ்சு டான்ஸ் ஆடிச்சு.

அதுக்கு ஏதாவது பேர் வைக்கணும்னு தோணிச்சு. பேர் வைக்கணும்னாலே நான் உங்க கிட்ட தான கேப்பேன். அதனால ஓடி வந்து லேப்டாப் எடுத்து ஆன் பண்ணி, டைப் பண்ண உக்காந்தேன். இன்னொரு தடவ அத பாப்போம்னு நினச்சு திரும்பிப் பாக்குறேன், அத காணோம். கூடவே அந்த குட்டியையும் காணோம்.

ஒரு மாதிரி ஷாக்ல, சரி எழுதுவோம்னு நினச்சு, கீ-போர்ட்ல டைப் பண்றேன், எழுத்து எதுவும் ஸ்க்ரீன்ல வரல. என்னடா இதுன்னு லேப்டாப்ப தொட்டுப் பாக்குறேன், இப்ப லேப்டாப்பயே காணோம்.

அப்படியே நெஞ்சை பிசையுற மாதிரி இருந்துச்சு. கொஞ்சம் தண்ணிக் குடிச்சா நல்லாயிருக்கும்னு தோணிச்சு. என்னது இது, பக்கத்துல வச்சிருந்த தண்ணி பாட்டிலையும் காணோம்? அந்த முத்து, மான் கொம்பு, யானை பொம்மை, சந்தனக்கட்டை, ஜவ்வாது இதெல்லாம் அங்கயே தான் இருக்கு.

அத எல்லாம் எட்டி எடுக்கலாம்னு கைய கொண்டு போய் பக்கத்துல போறேன், திடீர்னு தூக்கி வாரிப் போட்டு சட்டுன்னு எழுந்து உக்காந்துட்டேன். அட, அப்ப இதெல்லாம் கனவா? அடப் போங்கப்பா, நான் மறுபடியும் தூங்கப் போறேன்...


.

Friday, 16 October 2015

தொட்டிக்குளியலும் குட்டித் தூக்கமும்



இந்தா ஒரு படம் இருக்குல. அந்த படத்த பாத்த உடனே மனசுக்குள்ள அப்படி ஒரு சந்தோசம். “ஹே..... நாங்க குளிக்கப் போறோம்னு டவ்வல தலைக்கு மேல கறக்கிகிட்டே ஓடுன காலம் எல்லாம் மடமடன்னு நினைவுகளா நான் முந்தி நீ முந்தின்னு மனசுக்குள்ள முட்ட ஆரம்பிச்சிடுச்சு. இப்ப எத முதல்ல எடுத்து விட, எத ரெண்டாவதா எடுத்து விடன்னு ஒரே கொழப்பம். அதனால நான் பாட்டுக்கு நினைவுகள சில்லற மாதிரி சிதறி விடுறேன், நீங்க அப்படியே பாலோ பண்ணிக்கோங்க...

நாம இப்ப இருபத்தியஞ்சு வருஷம் முன்னால போகப்போறோம். ரைட்டு விடுங்க, ஒரு மூணு வருசத்த கழிச்சுட்டு இருபத்திரண்டு வருசத்துக்கு முன்னால போவோம். அப்ப தான் எனக்கு கொஞ்சம் வெவெரம் தெரிஞ்ச வயசா இருக்கும்.

அப்ப எங்க வீட்டை சுத்தி எங்களுக்குன்னு ஏழு ஏக்கர் உண்டு. சித்தப்பாவோடதும் சேர்த்து பதினாலு ஏக்கர். அதனால வயல், தென்னந்தோப்பு, வாழைத்தோப்பு, காய்கறி தோப்புன்னு தனித்தனியா பிரிச்சு ஒவ்வொரு வகை மரமும் நட்டு வச்சிருப்பாங்க. வயல் வரப்புலயும் பாத்தி வரப்புலயும் மாமரங்கள் நிக்கும். அப்படியே தோப்புக்கு ஓரமா போனா வருசையா கொல்லாமரங்கள். நடுநடுவுல சக்க மரங்கள். இதெல்லாத்துக்கும் தண்ணி அடிக்க ஒரு பம்பு செட்டு.

இந்த பம்பு செட்டு தான் எங்களுக்கு ஆட்ட பூமி. அதுவும் கிணறு பக்கத்துல மோட்டார் ரூம். மோட்டார போட்டா முதல்ல தண்ணி ஒரு சின்னத் தொட்டியில வந்து பாயும். அது நிரம்பி அடுத்து இருக்குற பெரிய தொட்டியில பாயும். தோப்புக்கு தண்ணியடிக்க அந்த சின்னத் தொட்டியே போதும். இந்த பெரிய தொட்டி எதுக்குனா மாடுகள குளிப்பாட்ட. கிட்டத்தட்ட அஞ்சு மாடுகள ஒரே நேரம் தொட்டிக்குள்ள இறக்கி, தொட்டி நிறைய தண்ணி நிரப்பி மாடுகள நீந்த விட்டு குளிப்பாட்டுவாங்க. நானும் தம்பியும் மாடுங்க மேல உக்காந்து வேடிக்கைப் பாத்துட்டு இருப்போம். பின்ன, தண்ணிக்குள்ள விழுந்தா கால் எட்டாது, தத்தக்கா பித்தக்கா கோவிந்தா தான்.

அப்பா மாடுகள எல்லாம் குளிப்பாட்டி முடிச்சதுக்கு பொறவு அரை தொட்டி தண்ணி போட்டு நாங்க ஆட்டத்த ஆரம்பிப்போம். தம்பிக்கு தண்ணினா பயம். ஒரு கை எடுத்து மூக்க பொத்திகிட்டே தான் முங்குவான். நான் அப்படி இல்ல, தம் கட்டி, அத்தபார்ன்னு முங்கி எழும்பிடுவேன்.

கொஞ்ச வருஷம் போனா, லீவு விட்டா போதும், ஊர்ல இருந்து மாமா பிள்ளைங்க, சித்தி பிள்ளைங்க, பெரியம்மா பிள்ளைங்க எல்லாரும் வந்து குவிஞ்சிருவாங்க. விடிஞ்சாலே போதும், பொடிசுங்க அத்தன பேரும் ஆளுக்கொரு துணியையும் டவலையும் எடுத்துகிட்டு குளிக்கப் போறோம்னு கிளம்பிடுவோம். பெரியவங்க எல்லாம் வீட்ல உள்ள சட்டிப் பானையெல்லாம் தூக்கிட்டு எங்க கூடயே கிளம்பிடுவாங்க. எதுக்கு? சமைக்கத் தான்.

பத்து பனிரெண்டு கிலோ கோழி, முட்டை, அஞ்சாறு கிலோ ஆட்டிறைச்சின்னு அன்னிக்கி சமையல் தூள் பறக்கும். தோப்புல கிடக்குற தென்னம்மட்ட, சில்லாட்ட, கதம்பல் எல்லாத்தையும் நாங்க பொறுக்கிட்டு வந்து குடுப்போம். அவ்வளவு தான் வேலை முடிஞ்சுது, நாங்க நேரா போய் தண்ணிக்குள்ள பாய்ஞ்சிடுவோம். அதுக்கப்புறமா, மெனுவை பொருத்து பிரியாணியோ, உளுந்தஞ்சோறோ ரெடி ஆகும். பெரும்பாலும் மீன் சமைச்சா அன்னிக்கி உளுந்தஞ்சோறு தான். இதுல அப்பா, மாமாக்கள்ன்னு பெரியாளுங்க எல்லாம் ஒரு துண்டையோ, பாயையோ பெட்ஷீட்டையோ புல்லுல விரிச்சி உறங்கிருவாங்க.

கண் எல்லாம் ரெத்த சிவப்பா, கை விரல்கள் எல்லாம் சுருக்கம் விழுந்து, பல் எல்லாம் கடகடன்னு தந்தியடிச்சாலும் தண்ணிய விட்டு ஒரு பயலும் புள்ளையும் வெளில வர மாட்டோமே. காலைல பத்து மணிக்கு தண்ணிக்குள்ள இறங்கினோம்னா மதியம் ரெண்டு மணிக்கு தான கரையேறுவோம். அதுவும் கடும் பசில சமையல் மணம் நாசிய தாக்கினா தான் உண்டு.

நான் எட்டாவது படிக்குறப்ப பம்பு செட்டு ரொம்ப தூரமா இருக்குன்னு அப்பா வீட்டு பின்னாலயே ஒரு தொட்டி கட்டினாங்க. அப்பவே நான் போட்ட கண்டிசன் ஒண்ணு தான், தொட்டி ரொம்ப பெருசா இருக்கணும், கிட்டத்தட்ட நீச்சல் குளம் மாதிரி, அப்படியே பக்கத்துல பாத் டப் மாதிரி ஒரு சின்ன தொட்டியும் வேணும்னு கேட்டேன். கிட்டத்தட்ட பதினஞ்சு பேர் தாராளமா உள்ள நின்னு குளிக்கலாம். அப்படி ஒரு தொட்டிய அப்பா கட்டினாங்க.

நானெல்லாம் சும்மாவே எங்கயாவது ப்ரண்ட்ஸ் கேங்கோட தான் திரிவேன், வீட்டு பின்னால தொட்டி வந்ததுக்கு அப்புறம் லீவ் நாள்னா எல்லாரும் அசம்பிள் ஆகுற இடம் அங்க தான். மொறுமொறுன்னு அம்மா தர்ற மிக்சர கொறிச்சுகிட்டே, தொட்டி மேல ஏறி உக்காந்துகிட்டு தண்ணிக்குள்ள ரெண்டு காலையும் விட்டு ஆட்டிகிட்டே கதை பேசுறது ஒரு சுகம். பாத்தாததுக்கு பக்கத்துலயே கொய்யா மரம். பசங்க எல்லாரும் கொரங்கு மாதிரி கொய்யா மரத்துல தான் ஏறிக்கிடப்பாங்க.

திடீர்னு யாராவது சவுண்ட் விடுவாங்க, “குளிப்பமா”ன்னு. அவ்வளவு தான் தொட்டில உக்காந்துட்டு இருக்குற அத்தனை பேரும் அத்தபார்ன்னு தண்ணிக்குள்ள பாய்ஞ்சிருவோம். அம்மாவுக்கு தான் கூடுதல் வேலை. பின்ன, நடுங்க நடுங்க குளிச்சிட்டு வர்ற எங்களுக்கு தலைத் துவட்ட டவல் குடுக்குறதுல இருந்து, சுட சுட காப்பியும் பஜ்ஜியும் குடுக்கணுமே.

காலேஜ் படிக்குறப்பவும் அதே கதை தான். குரூப் ஸ்டடின்னு எல்லாரையும் வீட்ல கூப்ட்டு வச்சுட்டு, நேரா வீட்டு பின்புறம் ஓடிருவோம்.

இப்படி ப்ரெண்ட்ஸ், ரிலேடிவ்ஸ் தவிர்த்து, இந்த தண்ணி தொட்டி என்னோட இன்னொரு உலகம். வாரத்துல அஞ்சு நாளும் அது தன்னந்தனியா என்னோட கட்டுப்பாட்டுல தான் இருக்கும். ஸ்கூல்/ காலேஜ் விட்டு வந்ததும் நேரே அங்க தான் போவேன். எனக்காக அந்த சின்னத் தொட்டி காத்துகிட்டு இருக்கும். அப்படியே மோட்டார போட்டு, தண்ணி நிரப்பி அதுல கால் நீட்டிப் படுத்தேன்னா அப்படி ஒரு உறக்கம் போடுவேன்.

யாராவது என்னைத் தேடி வந்தாங்கனா அந்த தண்ணித் தொட்டிக்குள்ள உறங்கிட்டு இருப்பா போய் பாருங்கன்னு தான் அம்மா சொல்லி விடுவா. முதல்ல பாக்குறவங்க எல்லாம் அதெப்படி தண்ணி மேல மிதந்துகிட்டே தூங்குறான்னு ஆச்சர்யமா பாத்துருக்காங்க. அப்புறம் அவங்களுக்கே பழகிப் போச்சு, புள்ளைய வீட்டுக்குள்ள காணோம்னா இங்க தான் தண்ணித் தொட்டிக்குள்ள ஊறிக் கிடப்பான்னு.



.

Tuesday, 13 October 2015

காலேஜ் அலப்பரைகள்



சாயங்காலம் காலேஜ் விட்டு மாமா கூட கார்ல வந்துட்டு இருந்தேன். இன்னிக்கின்னு பாத்து ஒரே ட்ராபிக் ஜாம். வண்டி எல்லாம் மெல்ல மெல்ல ஊர்ந்து போய், ஒரு இடத்துல அப்படியே நின்னுடுச்சு.

திடீர்னு ஒரு குரல். ஹே.... டர்ஸ் அப்படின்னு. அட, யாருடா இது, நம்மள இப்படி யாரும் கூப்பிட மாட்டாங்களேன்னு பாத்தா அது என்னோட காலேஜ் மேட். ஐ மீன், க்ளாஸ் மேட். அவ கிட்ட கொஞ்ச நேரம் பேசிட்டு ட்ராபிக் நகர ஆரம்பிச்சதும் டாடா சொல்லிட்டு கிளம்பிட்டேன்.

ஆனா என்னோட நியாபகங்கள் பின்னோக்கி போச்சு. இருங்க, ஒரு டார்ட்டாய்ஸ் கொசுவர்த்தி சுருள் கொளுத்திக்குறேன், அப்ப தான் சிட்டிவேசனுக்கு சரியா இருக்கும்... சொய்ங்......

ப்ளஸ் டூ முடிச்சதும் பெருசா காலேஜ் போய் படிக்கணும், சாதிக்கணும்னு எல்லாம் ஆசைகள் இல்ல. எனக்குன்னு ஒரு ஸ்கூட்டி, ஜாலியா ஊர் சுத்தணும், விளையாட்டா காலேஜ் போகணும், இதான் ப்ளானே.

அப்பாகிட்ட சொன்னப்ப, சரி, போறது தான் போற, பிபிஏ ஜாயின் பண்ணு, அப்புறம் எம்பிஏ படிச்சு பேங்க் மேனேஜர் (ஞே) ஆகிடலாம்னு சொல்லிட்டார். நானும் அந்த கோர்ஸ் எனக்கு சுத்தமா பிடிக்கலனாலும் நல்லப் புள்ளையா சரி சரின்னு தலையாட்டிகிட்டேன்.

அங்க க்ளாஸ்ல போய் உக்காந்தா எனக்கு தெரிஞ்ச ஒரே சப்ஜெக்ட் தமிழும் இங்கிலீசும் தான். வேற எத பாத்தாலும் முட்ட முட்டையா கம்பி கோலம் போட்ட மாதிரியே ஒரு பிரம்மை.

சரி, இப்ப அது நம்ம பிரச்சனை இல்ல, நான் விசயத்துக்கு வர்றேன்.

நான் அந்த கோர்ஸ் படிச்சது வெறும் ஒண்ணரை மாசம் தான். அதுக்குள்ள அங்க பண்ணின அட்டகாசங்கள் தான் ஹை-லைட்டே...

என்னோட சத்தம் எப்பவும் ரொம்ப பலமா இருக்கும். யார் கிட்ட பேசினாலும் குரலை ஓங்கி தான் பேசுவேன். அதனாலயே என்னைப் பாத்து என்ன மைக்க முழுங்கிட்டியான்னு கேப்பாங்க. தூரத்துல என்னைப் பாத்தாலே “ஹே மைக்”ன்னு தான் ஆரம்பிக்கவே செய்வாங்க. அப்பலாம் எனக்கு கோபம் எல்லாம் வராது, ஒரே பெருமை தான். பின்ன, ஒரு பட்டப்பெயர் கிடைக்குதுனா சும்மாவா.

சத்தமா பேசினாலும் ஆரம்பத்துல கொஞ்சம் அடக்க ஒடுக்கமா தான் இருந்தேன். அப்ப பாத்து எங்க சீனியர்ஸ் வெல்கம் டே வச்சாங்க.

இங்க எல்லாம் வெல்கம் டேனா என்னன்னு பாத்தீங்கனா ஸ்டாப் கிட்ட பெர்மிசன் வாங்கிட்டு அவங்க முன்னாடியே ராகிங் பண்றது தான்.

பாவம் எங்க சீனியர் அக்காங்க எல்லாம் ரொம்ப நல்லவங்களா இருந்தாங்க. ஒரு துண்டு சீட்டுல பாட்டு படி, டான்ஸ் ஆடு, பாண்டி விளையாடுன்னு ரொம்ப ஈசியா தான் எழுதி வச்சிருந்தாங்க. அத நல்லா குலுக்கி நாம ஒரு சீட்ட எடுத்து அதுல இருக்குற மாதிரி பண்ணனும்.

என் கிளாஸ்மேட்ஸ் இருக்காங்களே, சரியான அழுவுனி புள்ளைங்க. இதுக்கே பயந்து நடுங்கி, அழுது வடிச்சுட்டு இருந்தாங்க.

அப்ப தான் ஒருத்திக்கு கோழி பிடிக்கணும்னு வந்துச்சு. அவ அந்த இடத்துலயே கண் எல்லாம் கலங்கி பொலபொலன்னு அழ ஆரம்பிச்சுட்டா. நான் பாத்தேன். அக்கா, நான் கோழி பிடிக்குறேன்னு சொல்லிட்டே, பா...பா....ன்னு பீல்ட்ல இறங்கிட்டேன்.

கோழினா சும்மா பிடிச்சுட முடியுமா என்ன? பறந்து பறந்துல போகும். நானும் அது பின்னாலயே ஓடி ஓடி, கடைசியா கோழிய சீனியர் அக்கா ஒருத்தங்க தலைல நிப்பாட்டி வச்சுட்டேன்.

அக்கா, அசையாதுங்கக்கா, கோழி உங்க தல மேல நிக்குது. கைய தூக்காதீங்க, தலைய திருப்பாதீங்கன்னு ஏகப்பட்ட கண்டிசன்ஸ். அந்தக்கா திருதிருன்னு முழிச்சுட்டு அசையாம நிக்குறாங்க. அப்புறம் கபால்ன்னு கோழிய பாய்ஞ்சு பிடிச்சுட்டு, கோழி உங்க தலைல ஆய் போய்டுச்சுக்கா, தொடச்சுக்கோங்கன்னு சொல்லிட்டு சீட்ல வந்து உக்காந்துட்டேன்.

அப்புறம் என்னை சீட்டு எடுக்க சொன்னப்ப பாட்டு பாடவும்னு தான் வந்துச்சு. நான் பாட்டுக்கு நடுவுல போய் நின்னு, ரெண்டு பக்கமா போட்டுருந்த ஷால கழட்டி ஒரு பக்கமா போட்டுட்டு சிவாஜி மாதிரி ஸ்டைலா நிமிர்ந்து நின்னு “யாருக்காக, இது யாருக்காக, இந்த காலேஜு இது யாருக்காக”ன்னு பாடி மறுபடியும் ஸ்டைலா ஒரு பார்வை பாத்துட்டு உக்காந்துட்டேன். அப்ப தான் “யாருடா இவ”ன்னு மொத்த டிபார்ட்மென்டும் என்னை திரும்பி பாத்துச்சு.

ஒரு மேடம் எடுக்குற பாடம் சுத்தமா புரியாது. அது என்ன சப்ஜெக்ட்னே எனக்கு இப்ப மறந்தும் போச்சு. அவங்க வாயத் தொறந்தாலே தாலாட்டு பாடுற மாதிரி தான் இருக்கும். அப்படி தான் ஒருநாளு பக்கத்துல ஒருத்தி நல்லா தூங்கிட்டு இருந்தா. எனக்கு அத பாத்து ஒரே கொட்டாவி கொட்டாவியா வர ஆரம்பிச்சிடுச்சு. “ஏவ், ஏவ்”னு ஒரே குனிஞ்சு உக்காந்து கொட்டாவி விட்டுட்டு இருக்கேன். திடீர்னு ஒரு குரல். “ஸ்டான்ட் அப் ஆன் தி பெஞ்ச், அண்ட் கெட் அவுட்”ன்னு. நான் பட்டுன்னு பெஞ்ச் மேல ஏறி நின்னுகிட்டு இப்படியே எப்படி வெளில போகன்னு அப்பாவியா கேட்டேன். அப்புறம் தான் தெரிஞ்சுது, அந்த ஸ்டான்ட் அப் ஆன் தி பெஞ்ச் பக்கத்து சீட்டுக்காரிக்கும், கெட் அவுட் எனக்குமாம். இதென்ன சொத்தா மை லார்ட், பங்கு பிரிக்குரதுக்கு?

மறுபடியும் அதே மேடம் தான். அவங்க எடுக்குறதே புரியாது, இந்த லெச்சனத்துல செமினார் வேற எடுக்க சொன்னாங்க. காலேஜ் போயே அப்ப பதினஞ்சு நாள் ஆகல, அதுக்குள்ள செமினார் எடுக்க சொன்னா எப்படி?

எல்லா புள்ளைங்களும் பயந்துகிட்டு வாயே தொறக்கல. எனக்கு அப்ப டாபிக் எதுவும் குடுக்கல. நம்ம பேரு ஆல்பபெட்டிகல்ல கடைசி பேருங்குறதால அப்புறமா டாபிக் குடுக்கலாம்னு விட்டு வச்சிருந்தாங்க.

முதல் நாள் செமினார் க்ளாஸ். எடுக்க வேண்டிய புள்ள எழுந்து நின்னு அழுகுது. அதுவும் கேவி கேவி அழுகுது. நம்ம செட்டுல ஒரு புள்ள அழுதா பாத்துட்டு சும்மா இருக்க முடியுமா? மிஸ் நான் செமினார் எடுக்குறேன் மிஸ்ன்னு ரெடி ஆகிட்டேன். அவங்க என்ன நினச்சாங்களோ, சரி எடுன்னு சொல்லிட்டாங்க.

நான் பாட்டுக்கு முன்னாடி போனேன். சாக்பீஸ் எடுத்து ஏ+பி தி வோல் ஸ்கயர் ஈக்குவல் டூ ன்னு எனக்கு தெரிஞ்ச ஒரே கணக்கு பாடத்த எடுக்க ஆரம்பிச்சுட்டேன். இதுல காமடி என்னன்னா மேடம் உக்காந்துகிட்டு என்னையே பாத்துகிட்டு, நான் ஓவர் மேடம் சொன்னதும் போய் உக்காருன்னு சொல்லிட்டாங்க. ஆக மேடமுக்கே ஒன்னும் தெரியல சப்ஜெக்ட் பத்தி. நான் செமினார் முடிச்சுட்டு வந்து புள்ளைங்க கிட்ட இத சொல்லி சொல்லி ஒரே சிரிப்பு. மேடம், என்ன அதுன்னு மிரட்டி கேட்டதும் ஒருத்தி உளறிட்டா. உடனே நான் க்ளாஸ்ல இண்டீசென்ட்டா பிகேவ் பண்ணினேன்னு சொல்லி பிரின்சிபால்கிட்ட கொண்டு போய் விட்டுட்டாங்க

பிரின்சிபால் கிட்ட போனாலும் நாம அசருற ஆளா? முதல்ல அவங்கள புரியுற மாதிரி க்ளாஸ் எடுக்க சொல்லுங்க, அப்புறமா நாங்க வேணா செமினார் எடுக்குறோம், அதுக்கப்புறமா வேணா தூங்காமலும்  இருக்கோம்னு போர் கொடி தூக்கிட்டேன். அப்புறம் என்ன, அடுத்த நாள்ல இருந்து மேடம் விழுந்து விழுந்து படிச்சுட்டு வந்து க்ளாஸ் எடுத்தாங்க.

அதே மாதிரி இங்கிலீஷ் க்ளாஸ்க்கு செமினார் எடுப்பேன்னு அடம்புடிச்ச ஒரே ஆள் ஐயாம் தான். ஏன்னா, எல்லாம் தமிழ் மீடியம் பிள்ளைங்களா இருப்பாங்க, இங்கிலீஷ் கண்டா தெறிச்சு ஓடிருவாங்க. எனக்கு தான் நல்லா வருமே, அதான் பந்தாவுக்கு வீம்பா  செமினார் வேணும்னு கேப்பேன். ஆனா  அந்த  ஒன்னரை மாசத்துல  செமினார்  டாபிக்  கிடச்சும் என்னால செமினார்  எடுக்க  முடியலங்குறது  ஒரு பெரிய வருத்தமான விஷயம். 

எங்களுக்கு வாரத்துல ஒரு நாள் ப்ரீ ஹவர் உண்டு, அப்ப ஏதாவது விளையாட்டு ப்ராக்டிஸ் பண்ணுவோம், அப்ப எங்க பி டி மேடம் here one girl sitting, where going-னு கேட்டாங்க, நான் உடனே i go, she go madam, i come, she no come madam னு சொல்ல அவங்க u good girl ன்னு சொல்லி தட்டிக் குடுத்தாங்க பாருங்க, அவங்க  இங்கிலீஷ நினச்சு ஹாஹா கிரௌண்ட் விட்டு ஓடி வந்து அங்கயே விழுந்து விழுந்து சிரிச்சோம். இப்படி  எல்லாம்  படிச்சுக் குடுக்குறவங்கள கிண்டல் பண்ணக் கூடாதுன்னு யாரும்  சண்டைக்கு வந்துடாதீங்க. வயசு அப்படி. அதோட  படிச்சு குடுக்குற வாத்தியார் சரியா இருந்தா தான புள்ளைங்க சரியா இருப்பாங்க.

நான் படிச்சது லேடீஸ் காலேஜ். காலேஜ் உள்ள போகணும்னா மெயின் ரோட்டுல இருந்து இறங்கி ஒரு கிலோமீட்டர் நடந்து தான் போகணும். நான் ஸ்கூட்டில போவேனா, அதனாலயே சாயங்காலமானா ஸ்கூட்டில ரெண்டு ரெண்டு பேரா ஏத்தி ஒரு பத்து பேரை மையின் ரோட்டுல கொண்டு போய் விடுவேன். இப்படி நான் ட்ரிப் அடிக்குற இடத்துல தான் பசங்க நின்னுட்டு இருப்பானுங்க. நான் அங்கயும் இங்கயுமா மாத்தி மாத்தி ட்ரிப் அடிக்குறத பாத்துட்டு கொஞ்சம் கொஞ்சமா கிண்டல் பண்ண ஆரம்பிச்சானுங்க. நானும் கொஞ்ச நாள் கண்டுக்காம இருந்தேன்.

முதல்ல ஒருத்தன் லவ் லெட்டர் கொண்டு வந்து நீட்டினான். நானும் நல்லப்புள்ளையா அத வாங்கி அங்க வச்சே படிச்சு பாத்துட்டு, ஸ்பெல்லிங் மிஸ்டேக் எல்லாம் கரெக்சன் போட்டு பத்துக்கு மூணு மார்க் வேற போட்டுக் குடுத்தேன்.

அப்புறமாவது அந்த பசங்க திருந்தினாங்களா, இல்லையே, என்னைப் பாத்து ஒருத்தன் விசில் அடிக்க ஆரம்பிச்சான். ரெண்டு மூணு நாள் முறைச்சுப் பாத்தேன், அப்புறமும் அடங்குற மாதிரி தெரியல, நேரா அவன் முன்னால ஸ்கூட்டிய கொண்டு போய் விட்டுட்டு செவுள்லயே விட்டேன் ஒரு அறை. பையன் பொறி கலங்கிட்டான். அவனுக்கு சப்போர்ட்டா ஒருத்தன் பாட்டு பாடி கிண்டல் பண்ணிட்டு இருப்பான். அவனுக்கு செருப்பை கழட்டி மாத்தி மாத்தி மொத்திட்டேன். அவ்வளவு தான் காலேஜ் முழுக்க நான் பிரபலமாகிட்டேன்ல. அதனால என்னோட பெயர் மைக்ல இருந்து டர்ஸ் ஆகிடுச்சு.

இன்னும் நிறைய அலும்பல்கள். சேட்டைகள். எல்லாம் ஒரு ஒன்னரை மாசம் தான். அப்புறம் தான் என்னோட வாழ்க்கைல டர்னிங் பாயின்ட்டா ஒரு சம்பவம் நடந்துச்சு. அந்த சம்பவத்த தான் இங்க அப்பப்ப சொல்லிட்டு வரேன்னே....

இப்படியாக தான், மைக் என்றும், டர்ஸ் என்றும் டெரரா அழைக்கப்பட்ட நான் உங்களால் இப்பொழுது காயு என்று அன்போடு அழைக்கப்படுகிறேன்.

இப்படிக்கு, அன்பும் பணிவும் மிக்க காயு.....


.

Monday, 28 September 2015

பானிப்பூரியும் மசால் பூரியும்



சாயங்காலம். மணி ஆறு பத்து. நான் பாட்டுக்கு பேஸ்புக்ல குரூப் மெஸ்சேஜ் போட்டுட்டு அப்படியே ராஜா ராணி படத்தை பாத்துட்டு இருந்தேன்.

திடீர்னு ஹோய்ன்னு ஒரு குரல். அதுவும் என் ரொம்ப பக்கத்துல. பட்டுன்னு ஒரு நிமிஷம் இதயத்துடிப்பு நின்னுடுச்சு. யார்ரா அது நம்ம பெட் ரூமுக்குள்ள நம்ம பக்கத்துலன்னு. பாத்தா பக்கத்து வீட்டுப் பொண்ணு. இவ எப்ப என் ரூம் கதவ தொறந்தா, எப்ப பக்கத்துல வந்தான்னு ஒண்ணுமே கவனிக்காம தேமேன்னு படத்தப் பாத்துட்டு இருந்துருக்கேன்னா பாத்துக்கோங்களேன்.

எங்கயாவது வெளில போவோமான்னு கேட்டா. இல்ல, இருட்ட ஆரம்பிச்சிடுச்சு. இனி வெளில போனா வீட்ல பாட்டி திட்டுவாங்கன்னு சொன்னேன். பாட்டி எங்கயோ போன மாதிரி இருந்துச்சே, இப்ப எல்லாம் வர மாட்டாங்கன்னு சொன்னா. அடப் பாவிகளா, என்னை விட பாட்டிய நீங்க அதிகமா வாட்ச் பண்ணுவீங்க போலயேன்னு நினச்சுட்டு, நான் அப்பா கிட்ட பெர்மிசன் கேக்கணும்னேன். என்ன நினச்சாளோ, சரி, நான் போயிட்டு வரேன்னு போய்ட்டா.

அவ பாட்டுக்கு சொல்லிட்டு போய்ட்டா. இப்ப என் மனசுக்குள்ள ஒரு ஆசை. வீட்டை விட்டு இப்படி ராத்திரி நேரம் வெளில கிளம்பி ரொம்ப நாள் ஆகிடுச்சே, போய் தான் பாப்போமான்னு. நந்து வீட்டுக்கு போன் அடிச்சேன், “அடியே வெளில போறேன், வரியா”ன்னு கேட்டு.

அடுத்த பத்தாவது நிமிசத்துல நந்துவும், அவ ப்ரெண்ட் முருகேசும் என் வீட்ல ஆஜர். இந்த கார் சாவி எங்கன்னு தெரியலயேன்னு நான் சொல்ல, அவ ஓடிப் போய் பாட்டி ஒளிச்சு வச்சிருந்த கார் சாவிய எடுத்துட்டு வந்துட்டா. வெளில போறோம், எதுக்கும் செலவுக்கு கொஞ்சம் காசு எடுத்து வைப்போம்னு இருநூறு ரூபாய பேக்ல இருந்து எடுத்து யார் கிட்டயோ குடுத்தேன்.

அப்புறம் மடமடன்னு கால்ல பேன்ட்-எய்ட் சுத்தி, ஒரு சுடிதார எடுத்து போட்டுட்டு ஆறரை மணிக்கு கிளம்பிட்டேன். வாக்கர் வச்சு, வாசலுக்கு வந்து, அங்க இருந்து படி இறங்கி, கார் செட்ல போய் கார எடுத்துட்டு வெளில வந்தோம்.

நல்ல மழை பெஞ்சு, அப்பவே கும்மிருட்டு பரவ ஆரம்பிச்சிடுச்சு. சரி, எங்கப் போகலாம்னு யோசிச்சா ஒரு ஐடியாவும் தெரியல. நந்து மெதுவா பானிபூரி சாப்பிடப் போவோமா அக்கான்னு கேட்டா. அதுவும் சரி தான், கடைசியா அத சாப்ட்டு ஒரு வாரம் ஆகிடுச்சுன்னு முடிவெடுத்து, மெயின் ரோட்டுல போனா என்ன த்ரில் இருக்கு, நாம ஊர் காட்டுக்குள்ளோட வண்டிய எடுத்துட்டு போவோம்னு முடிவு பண்ணி தெருவுக்குள்ள வண்டிய விட்டேன்.

வழக்கமா நான் கொக்கு, மைனா, காக்கா, வாத்து எல்லாம் பாக்கப் போற வழி தான். ஆனாலும் இருட்டா இருந்ததால அந்த குளக்கரையையும், வயக்காட்டையும் கொஞ்சம் வேகமாவே கடந்துப் போனேன். எதிர்ல வர்ற வண்டி எல்லாம் அவ்வளவு பாஸ்ட்டா வருது. கொஞ்சம் பாதைல இருந்து விலகினாலும் கடக்காலுக்குள்ள வண்டியோட விழ வேண்டியது தான். ஆனாலும் எப்படியோ வேகவேகமா எல்லாத்தையும் கடந்து சிட்டிக்குள்ள நுழைஞ்சு, பானிப்பூரி விக்குற வண்டிகிட்ட கொண்டு போய் காரை நிறுத்தினேன்.

சரி, காசு எங்கன்னு தேடினா காச காணோம். வீட்ல வச்சு யார் கிட்டயோ குடுத்தேனேன்னு ஒரே யோசனையா போச்சு. நந்துகிட்ட ஏய், காச உன்கிட்ட தான குடுத்தேன்னேன். அவ, நீ எங்க என்கிட்ட குடுத்த, நான் சாவி எடுக்கல போனேன்னா. முருகேசு, என்கிட்ட குடுக்கலன்னு படபடன்னு தலையாட்டினான். எப்பவுமே கார் டேஷ் போர்ட்ல ஐநூறு ரூபா எமர்ஜென்சி வச்சிருப்பேன். காசு எங்க போச்சுன்னு குழம்பிட்டே சரி, அந்த ஐநூறு ரூபாய வச்சு அட்ஜஸ்ட் பண்ண வேண்டியது தான்னு குழப்பத்தோடவே கார விட்டு இறங்கினேன். அந்த பய முருகேசு கலகலன்னு சிரிக்கான்.

என்னலேன்னு கேட்டா, காச என்கிட்ட தான் குடுத்த, எப்படியும் நீ மறந்துருவ, அதான் உன்னை டெஸ்ட் பண்ணினேன்ங்குறான் கொரங்கு. கிர்ர்ர்ர்.... காச வெடுக்குன்னு அவன் கைல இருந்து பிடிங்கிட்டு ஒரு முறை முறைச்சேன். அவன் அசராம வெவேவேங்குறான். இந்த பயல என்ன பண்ண. என்ன சொன்னாலும் நமக்கு தான் பல்ப் குடுப்பான். சரி மன்னிச்சு விட்ருவோம்னு நினச்சு மன்னிச்சு விட்டுட்டேன்.

எனக்கு ரெண்டு ப்ளேட் மசாலா பூரி, நந்துவுக்கு ஒண்ணு, முருகேசுக்கு ஒண்ணுன்னு ஆர்டர் பண்ணினேன். ஹலோ, அதென்ன உங்களுக்கு மட்டும் ரெண்டு, எனக்கும் வேணும்னு முருகேஷ் அடம் பிடிக்க ஆரம்பிச்சுட்டான். முதல்ல இத தின்னுடா, அப்புறமா வாங்கித் தரேன்னு அவன் தலைல ஒரு குட்டு வச்சு, மசாலாபூரி தின்னு முடிச்சாச்சு. நந்து மெதுவா அக்கா பானிபூரின்னு இழுக்க, சரின்னு ஆளுக்கு ஒரு ப்ளேட் பானிபூரி ஆர்டர் பண்ணி அதையும் காலிப் பண்ணியாச்சு.

எல்லாம் முடிஞ்சு கிளம்பலாம்னு நினச்சா, முருகேஷ் மறுபடியும் மசாலா பூரி வாங்கித் தருவேன்னு சொன்னல, அத வாங்கிக் குடுன்னு அடம் பிடிக்குறான். எனக்கா, ஒரே கோவம். டேய், இந்தா பாரு, வாங்கித் தரத பத்தி ஒண்ணும் பிரச்சனை இல்ல, ஆனா எல்லாத்தையும் திங்கணும், தெரிஞ்சுதான்னு மிரட்டினதும் பய, நீ மட்டும் ரெண்டு ப்ளேட் தின்னல, சின்னப் புள்ளைக்கு வாங்கித் தராம ஏமாத்துறன்னு பொசுக்குன்னு கூட்டத்துல வச்சு மானத்த வாங்கிட்டான். சரி, சரின்னு அவனுக்கு இன்னொரு ப்ளேட் ஆர்டர் பண்ணினேன். ரெண்டு வாய் எடுத்து தின்னவன், எனக்கு போதும் இந்தான்னு என்கிட்ட நீட்டிட்டான்.

எனக்கு அத வாங்கி தின்ன ஆசை தான், ஆனாலும் மூணு ப்ளேட் மசாலா பூரி தின்னான்னு யார் கிட்டயாவது இவன் போட்டுக் குடுத்துட்டா மானம் மரியாத எல்லாம் போயிடுமேன்னு கொஞ்சம் யோசிச்சேன். அப்புறம், அட, இதெல்லாம் நமக்கு புதுசா என்னன்னு மானம் மரியாதைய எல்லாம் தூக்கி ஓரமா வச்சுட்டு மசாலா பூரிய ஒரு பிடி பிடிச்சேன். நந்து அக்கா எனக்கு சாக்லேட் வேணும்னு அடம்பிடிக்க, அதையும் வாங்கிக் குடுத்து வண்டிய ஸ்டார்ட் பண்ணினேன்.

அப்ப பாத்து கோவில் யானை ஒண்ணு க்ராஸ் ஆச்சு. ஹை யான யானைன்னு நந்து குதிக்க ஆரம்பிச்சுட்டா. ஆமா, இவ பெரிய அஞ்சலி பாப்பா, யானைய கண்டதும் சீன் போடுறான்னு முருகேசு அவள நக்கல் அடிக்க, போல, நான் யானைய போய் தொடப்போறேன்னு டக்குன்னு கார் கதவ தொறந்துட்டு ஓட ஆரம்பிச்சுட்டா.

ஏய், ஏய், நந்துன்னு நான் உக்காந்துட்டே கத்துறேன். முருகேசு எங்கன்னு பாத்தா பயத்துல கோழி குஞ்சு மாதிரி பதுங்கி போய் கிடக்கான் பின்னால உள்ள சீட்ல. ஹஹா... இந்தாடி, காசு குடுன்னு மிச்சம் இருந்த ஒரே அஞ்சு ரூபாயையும் அவ கிட்ட நீட்ட, ஓடிட்டு இருந்தவ அப்படியே திரும்பி வந்து காச பிடிங்கிட்டு மறுபடியும் யானை கிட்ட ஓடினா.

அப்புறமா, கொஞ்ச நேரம் யானைய தடவி பாத்து, அது துதிக்கைய எடுத்து அவ தலைல வைக்க, பிள்ளைக்கு சந்தோசம் தாங்கல. யானை அப்படியே நடந்து போய்ட்டே இருக்க, இவ திரும்பி திரும்பி பாத்து அதுக்கு டாட்டா காட்டிகிட்டே வந்தா.

இப்ப மணி ஏழரை. கும் இருட்டு. அப்படியே மெயின் ரோடு பிடிச்சு போனா பயம் இல்லாம வீடு போய் சேர்ந்துடலாம். ஆனாலும் என்னவோ ஒரு அசாத்திய துணிச்சல் மனசுக்குள்ள. மறுபடியும் வந்த வழியே போனா என்னன்னு. ரைட்டு, முடிவு எடுத்தாச்சு. இனி மாறக் கூடாது.

அந்த வழி மனுசங்க அதிகமா போகாத வழி. ஒரு சின்ன கார் போற அளவு தான் இடம் இருக்கும். எதுத்தாப்புல ஒரு வண்டி வந்துச்சுனாலே க்ராஸ் பண்ணி வர ரொம்ப கஷ்டம். இப்படி தான் போன வாரம் ஒருநாள் பகல் நேரத்துலயே ஒரு டூ-வீலர் மேல கொண்டு போய் மோதினேன். ஆனா தப்பு அவர் மேலங்குரதால ஒண்ணுமே சொல்லாம சாரி கேட்டுட்டு போயிருந்தார். இப்ப அங்க தான் போயிட்டு இருக்கேன். ஹெட் லைட் வேற டிம்மா வச்சுட்டு ஆம வேகத்துல தடக் தடக்ன்னு பதைபதைக்க ஓட்டிகிட்டு இருக்கேன். வழில ஆள் நடமாட்டமே இல்ல. வலது பக்கமா இருக்குற வயல்ல தண்ணி சலம்புர சத்தம். என்னடான்னு பாத்தா ரெண்டு நாய்ங்க பட்டுன்னு வண்டி குறுக்க ஓடி வந்துடுச்சு.

பட்டுன்னு பிரேக் அடிச்சு வண்டிய நிறுத்தினா இந்த முருகேசு ஊஊஊ....ன்னு ஊளை போடுறான். டேய், அடங்குடா, நாம இப்ப சுடுகாட்ட க்ராஸ் பண்ணப் போறோம், இரு இரு, பேய் கிட்ட உன்னை புடிச்சு குடுக்குறேன்னு சொன்னதும் பையன் பயத்துல கப்சிப்.

சுடுகாட்டை க்ராஸ் பண்ணும் போது கொஞ்சம் தூரமா உத்துப் பாத்தேன். எங்கயோ ஒரு விளக்கு வெளிச்சத்துல என்னவோ அசைஞ்ச மாதிரி இருந்துச்சு. ஒரு வேளை பேயா இருக்குமோ? அடி ஆத்தி.... வேணாம் காயு, பேய் எல்லாம் உனக்கு பிரெண்ட் தான், ஆனா இந்த நேரத்துல உனக்கு அந்த பிரெண்ட்ஷிப் தேவையான்னு எனக்கு நானே கேள்விக் கேட்டுகிட்டேன். வேணாம், வேணாம், எதுக்கும் நாளைக்கு காலைல வந்து பேய்க்கு ஹாய் சொல்லலாம்னு அப்படியே பார்வைய பாதைக்கு திருப்பி பொம்ம மாதிரி ஸ்டியரிங்க பிடிக்க ஆரம்பிச்சுட்டேன்.

அடுத்து வந்தது குளம். இந்த பக்கம் குளம். அந்த பக்கம் வயல். அதுவும் அதள பாதாளத்துல இருக்கு. இருக்குறதுலயே அது தான் குறுகலான பாதை. ஒரு நிமிசப் பயணம். அத தாண்டிட்டேன்னா அப்புறம் ஊருக்குள்ள நுழஞ்சிடலாம். திடீர்னு முருகேசு அக்கா, வேகமா போக்கான்னான். அடேய், இருடா, நானே பயத்துல தவந்துட்டு இருக்கேன், இன்னும் கொஞ்சம் தான், தாண்டிடலாம்னு சொல்லிட்டு இருக்கும் போதே, நந்து ஹாஹான்னு சிரிக்க ஆரம்பிச்சுட்டா.

என்னடி, பேய் மாதிரி சிரிக்குறன்னு நான் கேட்டதும், வேகமா போனா, அப்படியே மேல போய்டலாம்க்கா. அங்க எல்லாம் நமக்கு ப்ரீ டிக்கெட். ப்ரீயோ ப்ரீன்னு மறுபடியும் சிரிக்குறா. வெளில இந்த சில்வண்டுங்க வேற கர்ட் கர்ட்ன்னு சத்தம் போடுதுங்க. அவ்வ்வ்வ், தெரியாம வந்துட்டோமோ, சரி, இன்னும் பத்தடி தானன்னு யோசிச்சுட்டு இருக்குறப்பவே எதுத்தாப்புல ஒரு ஆட்டோ. அய்யயோ, இப்ப என்ன பண்றதுன்னு வண்டிய அப்படியே நிறுத்திட்டேன். அப்புறம் ஆட்டோக்காரர் என்ன நினச்சாரோ, அவர் வண்டிய ரிவேர்ஸ் எடுக்க, நான் பாட்டுக்கு அந்த இடத்த கிராஸ் பண்ணி வந்துட்டேன்.

வீட்டுக்கு வந்ததும் பாட்டி, எங்க போய் தொலைஞ்சீங்கன்னு கத்துனாங்க. அக்காவோட பாய் ப்ரெண்ட பாத்துட்டு வரோம் பாட்டின்னு நந்து சொன்னா. ஆஹா, இது நல்ல ஐடியாவா இருக்கே. பிற்காலத்துல ஒரு நாள் உதவும்னு மனசுக்குள்ள நினைச்சுகிட்டேன்.

பை நந்து, பை முருகேஷ்ன்னு சொல்லிட்டே ரூமுக்குள்ள வந்து கதவ அடச்சுட்டேன். ஒரு பொட்டப்புள்ள இப்படியா வீட்டுக்கு அடங்காம திரியுறதுன்னு பாட்டி குரல் கொஞ்ச நேரம் கேட்டுட்டு இருந்துச்சு.


நமக்கு எதுக்கு அதெல்லாம்.... கொர்ர்ர்ர்....


.

Tuesday, 1 September 2015

காயு காலேஜ் போய்ட்டா






நேத்து ராத்திரி எட்டு மணிக்கு தான் இன்னிக்கி காலேஜ் போய் பாத்தா என்னன்னு தோணிச்சு. கிட்டத்தட்ட கால் முறியுறதுக்கு ஒரு மாசம் முன்னாடியே ரொம்ப வெயில்ன்னு காலேஜ் கட் அடிச்சுட்டு வீட்ல இருந்தேன். சரி, வெயில் அடிச்சா பரவால, காலேஜ் போலாம்னு முடிவெடுத்தப்ப கால் முறிஞ்சு போச்சு.

அப்படியும் இப்படியுமா நாலு மாசம் வேற ஓடிப் போச்சா, எப்படியும் இன்னும் ஒரு வாரத்துல கால்ல அடுத்த சர்ஜரி பண்ணப் போறதா முடிவாகிடுச்சு, அதுக்குள்ள இப்ப நடக்க முடிஞ்ச வேகத்தோட காலேஜுக்கு ஒரு நாள் போயிட்டு வந்துடுவோம்னு ஒரு ஆசை.

அப்பாவுக்கு வேற என்ன தோணிச்சோ தெரியல, கார் நீ ஓட்றியான்னு கேட்டார். ஹார்ட் அட்டாக்கும், ஸ்ட்ரோக்கும் வந்த அப்புறம் அப்பா அதிகம் கார் ஓட்டுறது இல்ல. என்னை கூட மாமா தான் காலேஜ்ல விட்டுட்டு இருந்தார். அதனால தான் அப்பா இன்னிக்கி என் கிட்ட அப்படி கேட்டதும் ரொம்ப ஆச்சர்யம். நீ கொஞ்ச தூரம் கார ஓட்டு, கால் வலிச்சா நான் ஓட்டுறேன்னு சொன்னார். காரணம் கிட்ட தட்ட முப்பத்தஞ்சி கிலோமீட்டர் இருக்கு எங்க வீட்டுக்கும் காலேஜுக்கும் தூரம்.

கரண்டை கால் ஒரு பத்து ஸ்டெப் எடுத்து வச்சா வலி எடுக்க ஆரம்பிச்சுடுது. ஆனா இந்த வலி எல்லாம் சீக்கிரம் பழகிப்போகும்னு காலேஜ் கிளம்புறப்ப நினைச்சுகிட்டேன். பாட்டி எதோ நல்ல மூட்ல இருந்துருப்பாங்க போல, உன் சுடிதார குடு, நான் அயர்ன் பண்ணித் தரேன்னு சொல்லி அயர்ன் வேற பண்ணித் தந்தாங்க. பார்டா...ன்னு மனசுக்குள்ள நினைச்சுக்கிட்டேன். நாம நாலு எட்டு எடுத்து வச்சு நடந்தா எல்லாருக்கும் சந்தோசம் தான் போல.

வாக்கர் எடுத்து கார்ல போடவான்னு அப்பா கேட்டாங்க. இல்லப்பா, வேணாம், அது இருந்தா, அத பிடிச்சுட்டு நடக்கத் தோணும், இல்லனா, கஷ்டப்பட்டாவது நடப்பேன்லன்னு சொன்னதும் அப்பா, சரின்னு சொல்லிட்டு என்னை கார எடுக்க சொன்னாங்க.

ஏற்கனவே அப்பா கூட ஒரு வாரம் முன்னாடி ஒரு ரவுண்டுஸ் போயிட்டு வந்தேன்னாலும் இப்ப போகப் போறது ஒரு லாங் ட்ரைவ். கால் வலிச்சாலும் இன்னிக்கி முழுக்க முழுக்க நாம தான் ஓட்டணும்னு முடிவு பண்ணிட்டேன். மாமா பின் சீட்ல ஏற, அப்பா முன் சீட்ல உக்காந்துகிட்டாங்க. நான் காரை ஸ்டார்ட் பண்ணி தெருவுல இறங்க ஆரம்பிச்சேன்.

அது ஏனோ தெரியல, இப்ப எல்லாம் ஆக்சிலேட்டர கொஞ்சம் வேகமா மிதிக்கவே பயமா இருக்கு. கிர்ர்ர்ரு கிர்ர்ர்ருன்னு தேர்ட் கியர்லே வண்டி ஓட்டுறேன். முதல்ல இந்த பயத்த போக்கணும்னு சொல்லிட்டே மெதுவா வேகம் எடுக்க ஆரம்பிச்சேன்.

இந்த ரோடு இருக்கே ரோடு, அது இல்லாம இருந்தாலே நல்லா இருக்கும். அந்தளவுக்கு ரோட்டை எல்லாம் தோண்டி போட்ருக்காங்க. பாதி தூரம் வந்ததுமே அப்பா நான் ஓட்டட்டுமான்னு கேக்க, வேணாம்பான்னு சமாளிச்சு ஓட்டுறேன். ஒரு பெரிய குண்டுல ஏறி இறங்கினேனா, கரண்டைக்காலு மழுக்குன்னு ஒரு சத்தத்துல என்னமோ ஆக, ஆவ்வ்வ்வ் அப்பான்னு வலில முனங்கிட்டேன். வண்டிய ஓரமா நிறுத்துன்னு சொல்லிட்டு அப்பா காரை ஓட்ட ஆரம்பிச்சுட்டார்.

டிரைவிங் போனா என்ன, நாம தான் வேடிக்கை பாக்கலாம்ல. ரொம்ப நாள் கழிச்சு, கரண்ட் கம்பில இருந்த காக்காவையும், கூட்டமா பறந்த புறாக்களையும் வேடிக்கை பாத்துட்டே வந்தேன். ஒரு இடத்துல அஞ்சாறு கருப்பு ஆடுங்க படுத்து அசை போட்டுட்டு இருந்துச்சு. சரி, சரி, விட்டா நான் நாய்ங்க குறுக்க ஓடினதையும் சொல்லிட்டே இருக்கப் போறேன், வாங்க காலேஜ்க்குள்ள போய்டலாம்.

கேம்பஸ் வந்த உடனே அப்பா, நீ எங்க போறன்னு கேட்டதும், லேப்க்கு போறேன்ப்பான்னு சொல்லிட்டேன். நான் கடைசியா விட்டுட்டு வந்தப்ப லேப் வெளில இருக்குற இடம் முழுக்க வறண்டு போய் புல் எல்லாம் கருகி இருந்துச்சு. இப்ப முட்டி அளவு புல் வளர்ந்து நிக்குது. மழை வந்து இந்த இடத்த எவ்வளவு பசுமையாக்கி இருக்குன்னு அதிசயமா இருந்துச்சு. அப்படியே அங்க புதுசா முளைச்சிருந்த சங்கு புஸ்பம் செடில அஞ்சு பூ வயலெட் கலர்ல அழகா சிரிச்சுட்டு இருந்துச்சு. ரைட்டு, நமக்கு ஒரு புது ப்ரெண்ட் கிடச்சாச்சுன்னு அதப் பாத்து சிரிச்சேன்.

அப்பா, லேப் கிட்ட காரை நிறுத்தினவர், அடுத்து எப்ப கூப்ட வரன்னு கேக்க, நான் போன் பண்றேன்ப்பான்னு சொல்லிட்டு இறங்கி நடந்தேன். கல்லும் மண்ணுமா இருந்த தரையை புல் மறைச்சு வச்சிருக்குறதால கால் கொஞ்சம் இடறிச்சு. அப்பா பாத்து பாத்துன்னு சொல்லிட்டே கைப் பிடிச்சு லேப் வராண்டா வரைக்கும் கொண்டு விட்டாங்க. இன்னும் நாலஞ்சு அடி எடுத்து வச்சா அங்க போய் உக்காந்துக்கலாம்.

சரிப்பா, நீங்க கிளம்புங்கன்னு சொன்னேன். மாமா நான் வண்டி ஓட்டுறேன் அத்தான்னு அவர் டிரைவர் சீட்ல ஏறி உக்காந்துட்டார். அப்பா டாட்டா காட்டிட்டு போயிட்டு வரேன்னு சொன்னாங்க. அது புதுசா இருந்துச்சு. எல்.கே.ஜி ல முதல் நாள் விடுறப்ப கூட அப்பா இப்படி டாட்டா காட்டினது இல்ல. ஹஹா மை செல்ல அப்பா...

நான் லேப்ல போய் உக்காந்தப்ப யாருமே இல்ல. என்னடா இது, நாம வந்தது சர்ப்ரைசா இருக்கட்டும்னு பாத்தா, இங்க யாருமே இல்லாம நமக்கு சர்ப்ரைசா இருக்கேன்னு நினச்சுட்டே கொஞ்ச நேரம் டேபிள்ல படுத்து தூங்கிட்டேன்.

திடீர்னு, மேடம், எப்ப வந்தீங்க, ஹையோ எப்படி இருக்கீங்கன்னு ஒரு உற்சாகக் குரல் என்னை தூக்கத்துல இருந்து எழுப்பி விட்டுடுச்சு. அட, லேப் அட்டெண்டர். கல்யாணம் ஆகி ரெண்டு புள்ளைங்களுக்கு அம்மா, ஆனா நான் அவங்கள முன்னாடி லெப்ட் ரைட் வாங்கிட்டு இருப்பேன், பொறுப்பே இல்லன்னு. அவங்க தான் அவ்வளவு சந்தோசமா என்னைப் பாத்து சிரிக்குறாங்க. அப்புறம், மேடம் இருங்க, நான் இந்தா வந்துட்டேன்னு சொல்லிட்டு குடுகுடுன்னு வெளில ஓடிட்டாங்க.

சரி, எங்க போனாங்களோ, பொறுப்பே இல்ல, லேபை இப்படியா தொறந்து போட்டுட்டு போவாங்க, நம்ம கைட் போனதும் ஒரு பயம் இல்லாம போச்சுன்னு நினச்சுட்டே இருக்கேன், அவங்க ஒரு கைல காபியும், ஒரு கைல வாழக்கா பஜ்ஜியுமா நின்னுட்டு இருக்காங்க.

பொதுவா நான் இத எல்லாம் சாப்பிட மாட்டேன்னாலும் ரொம்ப ஆசையா இருந்தா கேண்டீன்ல வாங்கி திம்பேன். அத நியாபகம் வச்சு வாங்கிட்டு வந்துருக்காங்க. தேங்க்ஸ் மேடம்னு சிரிச்சேன். நீங்க இல்லாம ஒரு கலகலப்பே இல்ல மேடம், லேப் ரொம்ப அமைதியா இருக்கும். உங்கள நாங்க நிறைய மிஸ் பண்ணினோம்னு சொன்னாங்க. கண்ணு லேசா வியர்த்திடுச்சு. நம்ம மேல எவ்வளவு பாசம்னு.

அதுக்குள்ள, நான் வந்த விஷயம் கேள்விப் பட்டு எங்க ஹச்.ஓ.டி போன் பண்ணினாங்க. என்ன, சொல்லாம கொள்ளாம வந்துருக்கன்னு. வரணும்னு தோணிச்சு மேடம், வந்தேன்னு சொன்னேன். கால் இப்ப எப்படி இருக்கு, நடக்க முடியுமான்னு கேள்விகள் கேட்டுட்டு, ரெண்டு பேப்பர் எடுக்க ஆள் இல்ல, யார போடலாம்னு யோசிச்சுட்டு இருந்தேன், நீ எடுக்குறியான்னு கேட்டாங்க.

என்னால ரெகுலரா வர முடியுமான்னு தெரியல மேடம், ஆனா அப்பப்ப வேணா வந்து எடுத்துட்டு போறேன், பரவால நம்பிக்கை இருந்தா குடுங்கன்னு சொன்னேன். ஆக, சும்மா வந்த இடத்துல க்ளாஸ் எடுக்க தானே கேட்டதோட இல்லாம, நீ லேப்லயே வச்சு நடத்து, பிள்ளைங்கள அங்க வர சொல்லிடலாம்னு ஏற்பாடும் பண்ணி குடுக்குறாங்க. இந்தா பார்ரா, எந்த ஹச்.ஓ.டி பிடிக்கலன்னு மனசுக்குள்ள சஞ்சலமா இருந்தேனோ, அவங்களே நம்மள தானா கூப்ட்டு க்ளாஸ் குடுக்குறாங்கன்னு சிரிச்சுகிட்டேன்.

என்ன, இந்த தடவ அவங்க எனக்கு குடுத்துருக்குற சப்ஜெக்ட் பெர்சனாலிட்டி டெவலெப்மென்ட். என் சப்ஜெக்ட்டுக்கு கொஞ்சமும் சம்மந்தமில்லாத டாபிக்னாலும் உளவியல் சார்ந்து பிள்ளைங்களுக்கு க்ளாஸ் எடுக்க ஒரு நல்ல சான்ஸ். இதற்கு தானே ஆசைப்பட்டாய் காயுன்னு எனக்கு நானே மனசுக்குள்ள சபாஷ் சொல்லிகிட்டேன் (இதுவே ஒரு வருசத்துக்கு முன்னாடினா, என்னோட சப்ஜெக்ட் தான் நான் எடுப்பேன்னு தாட் பூட்ன்னு குத்திச்சிருப்பேன்ங்குறது வேற விஷயம்).

அப்புறம் ஒவ்வொரு பிள்ளைங்களா ஓடி வந்தாங்க. ஹையோ மேடம், ஹையோ மேடம்ன்னு ஆளாளுக்கு கன்னத்துல கை வச்சு ஆச்சர்யமா குதிக்குறாங்க. இந்த புள்ளைங்கள எல்லாம் பாத்து எவ்வளவு நாள் ஆச்சு. நிஜமாவே ஐ மிஸ் யூ ஆல் மை செல்லம்ஸ்.

மேடம், ப்ளீஸ் எங்களுக்கு க்ளாஸ் எடுக்க வருவீங்கலன்னு அவங்க கேட்டதும், எப்பவாவது வர்றேண்டா, ஆனா அடிக்கடி உங்கள எல்லாம் பாப்பேன்லன்னு சொன்னேன்.

ஒருத்தி, முந்தின வாரம் ஓணம் கொண்டாடியிருக்காங்க, அதுல அலங்காரத்துக்கு வச்சிருந்த ஒரு பிளாஸ்டிக் பூவை எடுத்து நீட்டி, வெல்கம் மேம்னு சொன்னா.

அப்புறம் கால்ல மாட்டியிருந்த அந்த சப்போர்டிவ் மெட்டீரியல பாத்து, இன்னும் சரியாகலயா மேடம், கெட் வெல் சூன் மேடம்னு வாழ்த்தெல்லாம் சொல்லிட்டு, மேடம் நீங்க இல்லனதும் இங்க ஒருத்தி சோம்பேறி ஆகிட்டா, ஒழுங்கா அசைன்மென்ட் எழுத மாட்டேங்குறான்னு ஆளாளுக்கு கம்ப்ளைன்ட் சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க. நான் சிரிச்சுட்டே, சரி சரி, இனி பாருங்க, ஆடித் தீத்துடுறேன்னதும், நீங்க திட்டினா நல்லாயிருக்கு மேடம். திட்டினா தான் நாங்க படிக்குறோம்னு சொல்லி எல்லாரும் ஆமா, ஆமான்னு கோரஸ் பாடுறாங்க.
ரொம்ப சந்தோசமா இருந்துச்சு. இவங்கள எல்லாம் விட்டுட்டு இத்தன நாள் வீட்டுக்குள்ளயே அடைஞ்சு கிடந்தது என்னோட தனித் தன்மையையே பதம் பாத்துடுச்சு. இந்தா அந்த நிமிஷம் புதுசா பொறந்த மாதிரி ஒரு உற்சாகம். ஜல்லுன்னு உடம்பு முழுக்க ஒரு சிலிர்ப்பு.

மதியமே வீட்டுக்கு போய்டனும்னு தான் ப்ளான். ஆனா அந்த இடத்தையும் பிள்ளைங்களையும் விட்டுட்டு அவ்வளவு சீக்கிரம் வர மனசே இல்ல. நிறைய பேசினோம், நிறைய சிரிச்சோம். அப்படியே எனக்கு குடுத்த பாடம் பத்தி கொஞ்சம் ரெபர் பண்ணினேன். எல்லாமே சுத்த தமிழ்ல இருந்துச்சு. சரி, இன்னொரு நாள் படிச்சுக்கலாம்ன்னு நினைச்சு அத ஓரமா வச்சுட்டு, அப்பாவுக்கு கால் பண்ணி அப்பா, சாயங்காலம் வந்தா போதும்னு சொன்னேன்.

அப்புறம், கூப்பிட மாமா தான் வந்தாங்க. பகல் முழுக்க உக்காந்து இருந்ததால, கால் நல்லா வீங்கி நீர் கோர்த்துடுச்சு. ஆனாலும் என்ன, மனசு நிறைஞ்சிடுச்சே...

நாளைக்கும் காலேஜ் போகணும்னு ஆசையோட தூங்கப் போறேன். பாக்கலாம், என்ன நடக்குதுன்னு.....



.

Monday, 27 July 2015

பாகுபலி - ஹோனன ஹோனன



திரும்ப திரும்ப அந்த பாட்டையே பாத்துட்டு இருக்கேன். பிரமாண்டம், அசத்தல்ன்னு படத்த பாத்து எல்லாரும் சொன்னாலும் எனக்கு இந்த பாட்டு என்னமோ மனசுக்கு அவ்வளவு பிடிச்சு போச்சு.

சும்மாவே பட்டாம்பூச்சினா விட மாட்டேன். அதுவும் நீல கலர்ல பட்டாம்பூச்சி பறக்க ஆரம்பிச்சதுமே ஹா-ன்னு ஆர்வமா பாக்க ஆரம்பிச்சவ தான், மனசு அப்படியே அந்த பட்டாம்பூச்சி ட்ரெஸ்ல தமனாவ பாத்ததும் ஸ்ட்ரக் ஆகிடுச்சு.

“ஹோனன ஹோனன ஹோனன
ஹோ நான் செந்தேனா?
ஹோனன ஹோனன ஹோனன
ஹோ நீ வண்டுதானா?” ன்னு பட்டாம்பூச்சிகள் சிதற, தேவதையா தமனா திரும்புறப்ப ப்ப்ப்ப்பா.... விழுந்துட்டேன்.

“அந்தரத்தில் ஒரு வெண்மதியாய்
உன்னை அழைத்தேனா?
இந்திரலோகத்துச் சுந்தரி
உனக்கே உனக்காய் முளைத்தேனா?”ன்னு தமனா வைக்குற அந்த ஸ்டெப்ஸ் செம. கூடவே அந்த அருவி, மலை, மரம்ன்னு பேக்ரௌண்ட்ஸ் அவ்வளவு அட்டகாசம்.

முந்தாநேத்து குரூப்ல பிரெண்ட் கூட பேசிட்டு இருக்குறப்ப அந்த ஹீரோயின் இன்ட்ரோ சாங் தேவையில்லன்னு நினைக்குறேன்னு சொன்னார். அய்யய்யோ, எனக்கு அந்த பாட்டு ரொம்ப பிடிச்சிருக்கே, அதுல தமனா அவ்வளவு அழகுன்னு சொன்னேன். ஆமா அழகு தான், ஆனா அந்த இடத்துல அந்த பாட்டு செட் ஆகலன்னு சொன்னார். என்ன கவனத்துல இருந்தேனோ, கவனம் திசை மாறிப் போச்சு.

ஆனா அந்த பாட்டு தானே படத்தோட ஸ்டார்டிங்கே. நூறு தடவ அந்த அருவிய தாண்டி மலையேற முயற்சி பண்ணி முயற்சி பண்ணி தோத்துப் போற ஹீரோ, தமனாவோட முகமூடிய பாத்ததும் அவள கண்டிப்பா பாத்துடணும்னு ஒரு உத்வேகத்தோட மலையேற ஆரம்பிக்குறார். கண்டிப்பா அவர் மலையேறுற சீனை வேற எப்படி காட்டியிருந்தாலும் போர் அடிச்சியிருக்கும். ஆனா ஒவ்வொரு தடவ அவ்வளவு பெரிய நீர் மலைல இருந்து அவர் விழுந்தாலும்

“வீரனே! உலகம் உந்தன் கீழே....

தீரனே! நீ நினைத்தாலே!”ன்னு தமனாவோட நினைப்பு அவர ஏற வச்சிடுது. அதே மாதிரி காட்டு புல்லை வச்சி வில்லும் அம்பும் செய்து, அப்படியே அந்தரத்துல குதிச்சி, உச்சில இருக்குற மரத்த நோக்கி அம்பு விடுற சீன், ஹப்பா.. சான்சே இல்ல. டாட்....

நான் இங்க படத்த பத்தி எதுவுமே சொல்லல, காரணம் அப்படியே நிமிர்ந்து உக்காந்து ஸ்க்ரீனையே வெறிச்சு பாத்துட்டு இருக்கும் போதே படம் முடிஞ்சு போய்டுது. சீக்கிரமா செகண்ட் பார்ட் கொண்டு வந்துடுங்கப்பா. இல்லனா படத்த திரும்ப திரும்ப படத்த பாத்து என் பென்-ட்ரைவ் தேய்ஞ்சுட போகுது.


ஆமா, கட்டப்பா ஏன் பாகுபலிய கொன்னார்?


.

Friday, 29 May 2015

ரெட்டை ஜடை வயசு


அதென்னமோ இந்த வாரம் பேஸ் புக்ல  பின்னி கொண்டை வச்சு பூ சூடுற வாரம் போல... ஆளாளுக்கு ஜடைப் பின்னி தலைல பூ வைக்குறது பத்தி எழுதினாங்கனா நான் சும்மா இருக்க முடியுமா? அதனால நான் இப்ப ஒரு ப்ளாஸ் பேக் சொல்லியே தீருவேன், எல்லாரும் படிச்சுட்டு அவங்கவங்க ப்ளாஸ் பேக்கை சொல்லிட்டுப் போங்க.

இந்தா, மெழுகுவர்த்தி சுத்த ஆரம்பிச்சிடுச்சு.

சொயிங்.....
-----------------------------------------------------

அப்ப எனக்கொரு அஞ்சு வயசு இருக்கும். தலைல முடிய மொட்டையா பையன் மாதிரி வெட்டி விட்ருவாங்க. நான் வேற எப்பப் பாரு சட்டையும் டவுசரும் போட்டுட்டு பசங்க கூட்டத்துலயே திரிவேனா, நம்மள யாரும் பொம்பள புள்ளன்னு அடிச்சு சொன்னாலும் நம்ப மாட்டாங்க. அதுக்கப்புறமா தான் எங்க பாட்டி, பொம்பள புள்ளைக்கி ஒரு டோப்பாவாவது வச்சு விடுங்கடேன்னு சொல்ல, மஸ்ரூம் கட் எனக்கு அடையாளமா போச்சு.

செகண்ட் படிக்குறப்ப கூட படிக்குற புள்ளைங்க எல்லாம் ஜடை பின்னி ரிபன் கட்டிட்டு வர்றத பாத்து எனக்கும் ரெட்டை ஜடை போடணும்னு ஆசை வந்துடுச்சு. அவ்வளவு தான் முடி வெட்ட போக மாட்டேன்னு உருண்டு புரண்டு அடம் பிடிக்க, கொஞ்ச நாள்லயே நானும் ரெட்டை ஜடை போட்டு, அத மடிச்சு வேற கட்டி ஒரு மாதிரியா கெத்தா நடக்க ஆரம்பிச்சுட்டேன்...

ஸ்டாப் ஸ்டாப் ஸ்டாப்..... நம்ம பராக்கிரமம் எல்லாம் கொஞ்சம் தள்ளி வச்சுக்கலாம், இல்லனா கண்ணு பட்டுரும். இப்ப நீங்க எல்லாரும் ஒரு பனிரெண்டு வருஷம் பின்னாடி வந்து எங்க தோட்டத்துல நில்லுங்க...
-------------------------------------------

ஆங்... வந்தாச்சா, அந்தா பாத்தீங்களா அதான் ரோஜாத் தோட்டம். நம்ம ஆடு மாடுங்க எல்லாம் மேய்ஞ்சுற கூடாதுன்னு வேலி போட்ருக்காங்களா, அங்க கேட்டை தொறந்துட்டு உள்ளப் போவோம்.

இந்தா, இதான் பட்டன் ரோஸ், ரோஸ் கலர்ல அடுக்கடுக்கா, கொத்து கொத்தா பூத்து கிடக்கா, அந்த அது வெள்ளை பட்டன் ரோஸ். அந்தா அங்க ஆரஞ்ச், செகப்புன்னு பட்டன் ரோஸஸ் பாருங்க. அம்மாவுக்கு பட்டன் ரோஸ்னா ரொம்ப பிடிக்கும். அதான் நாலஞ்சு பட்டன் ரோஸ் நிக்குது.

தம்பிக்கு எப்பவும் பெங்களூர் வரைட்டி தான் பேவரைட். அதுலயும் ரெட் ரோஸ். கூடவே மஞ்ச ரோசாப் பூவும் சிரிக்குது பாருங்க.

இந்தா, இது பன்னீர் ரோஸ். என்னோட பேவரைட். அப்பாவுக்கும் இது ரொம்ப பிடிக்கும். தலைல கூட வைக்க வேண்டாம், அப்படியே பறிச்சு, பச்சையா திங்கலாம். வாசம் எப்படி இருக்கும்ங்குறீங்க, கும்ன்னு இருக்கும்.

அப்புறம், அந்தா, அங்க வெள்ளை, ஆரஞ்ச், ஆரஞ்ச் சிகப்புமா டபுள் கலர் எல்லாமே அழகோ அழகு.

இங்க எல்லாம் பூ பறிக்க அனுமதி உண்டுனாலும் ஊர்ல உள்ள புள்ளைங்க எல்லாம் ஒத்த ரோசாப்பூ வேணும்னு கேட்டு வந்தா, தம்பி தரமாட்டேன்னு தரைல உளுந்து பொரண்டு பொரண்டு அழுவான். அத்தன புள்ளைங்களும் அவனுக்கு படு ஐஸ் வைக்கப் பாப்பாங்க, பய மசிய மாட்டான். அய்யய்யோ, அவனப் பத்தி தனியா எழுதணும்ல நினச்சேன், ஹெலோ ஹலோ, தம்பியப் பத்தி நான் எழுதினத மறந்துடுங்க.

உங்கள நான் மல்லிகை தோட்டத்துக்கு கூட்டிட்டுப் போறேன். இந்தா இங்க நாலஞ்சு குத்து செடி நிக்குது பாத்தீங்களா, இதான் மல்லிகை செடி. செடி முழுக்க மொட்டா தான் இருக்கும். அப்புறம், அந்தா பிச்சி செடி, கனகாம்பரம் எல்லாம் நிக்குது பாருங்க. கனகாம்பரத்துல மஞ்சள், செகப்பு, ஆரஞ்ச், பச்சை, நீலம்ன்னு எல்லா வரைட்டியும் உண்டு. கூடவே டிசம்பர் பூவும்.

இந்த பூவெல்லாம் ஒட்டுமொத்தமா பறிச்சுட்டு வந்து நாலுகட்டு முத்தத்துல சொளவுல கொட்டி வச்சுட்டு ஊருல உள்ள பொம்பளைங்க எல்லாம் கால் நீட்டி உக்காந்து வம்பளந்துகிட்டே பூத் தொடுப்பாங்க.

லூஸ் விட்டு சாமிக்கி கட்டுறதுல இருந்து, சுத்தி கட்டுறது, சொட்டைப் போட்டு கட்டுறது, கால்ல கொக்கி போட்டு கட்டுறதுன்னு ஆளாளுக்கு டைப் டைப்பா கட்டுவாங்க.

அப்புறம் நாலு மணி பூ தோட்டம் முழுக்க பரவியிருக்கு பாத்தீங்களா, இது எல்லாம் வயலட் கலர். வெள்ளை, மஞ்சள், சிகப்பு எல்லாம் எங்க வீட்ல இல்ல.

அந்த வேலி ஓரத்துல நாட்டு செம்பருத்தி நிக்குதே, அதோட பூவ பறிச்சி தான் தலைக்கு வைக்க எண்ணெய் காய்ப்பாங்க. அப்படியே அந்த மருதாணி மரத்துல உள்ள இலையும் எண்ணெய் சட்டியில பொறியும்.

அப்பா, மருதாணி இலையை பறிச்சி, உருட்டி, வெயில்ல காய வச்சு, முத்துன தேங்காய அடிச்சு, துருவி, பால் பிழிஞ்சு, பெரிய உருளில விட்டு நல்லா வத்த காய்ச்சு, எண்ணெய் தனியா, கக்கன் தனியா பிரிஞ்சதும், உள்ளி, கருவேப்பிலை எல்லாம் போட்டு கூடவே காய வச்ச மருதாணி உருண்டைகளயும் போட்டு வைப்பாங்க. இன்னிக்கி வரைக்கும் நமக்கு எண்ணெய் காய்ச்சு தர்றது அப்பா தான்...
----------------------------------------------

கம்மிங் பேக் டு த பாயிண்டு.

இப்படி எல்லாம் எண்ணெய் காய்ச்சி, தலை நிறைய வச்சதால தானோ என்னவோ எனக்கு முடி கருகருன்னு நீளமா வளர ஆரம்பிச்சிடுச்சு. நம்ம சும்மாவே அராத்து, இதுல முடி வேற நீளமா இருந்தா கேக்கவா வேணும்?

தலைப் பின்னி விடத் தான் அப்பம்மா இருந்தாங்களே, ப்ரீ ஹேயர் விடுறதுல இருந்து, இறுக்கமா ஆயிரங்கால் பின்னல் வரைக்கும் போட்டு விடுவாங்க. முன்னால கொஞ்சம் முடிய மட்டும் தனியா வகிடு எடுத்து, அத அப்படியே சுருட்டி தொப்பி மாதிரி வச்சுட்டு, பின்னால குட்டி குட்டியா ஆயிரங்கால் பின்னல் போட்டுட்டு, அதுல பட்டன் ரோஸ் வச்சு அலங்கரிச்சு போனா அத்தன புள்ளைங்களும் ஆ-ன்னு வாயப் பொளக்கும். நதியா கொண்டை இன்னொரு ரகம்.

அப்புறம் இன்னொரு ஹேர் ஸ்டைல். அது என்னன்னா, அப்படியே மண்டைல அத்தன முடியையும் நேர் நேர் கோடு எடுத்து இருபத்து அஞ்சு, முப்பதா பிரிச்சுப்பாங்க, அப்படியே அதையும் மூணா பிரிச்சு பின்னிகிட்டே வந்தா, இந்த நைஜீரியன் பார்ட்டிங்க எல்லாம் எங்க பாட்டிகிட்ட ட்ரைனிங் எடுக்கணும். அப்படியே அத்தனையையும் பின்னி முடிச்சு, பின்னால வந்து ஒரு ரப்பர் பேண்டோ இல்ல, ரிப்பனோ வச்சு இறுக்கி கட்டுவாங்க. அதோட முடிஞ்சுதானா இல்ல, பின்னால கிடக்குற முடிய மறுபடியும், ஒரு பதினஞ்சு, இருபது பாகமா பிரிச்சு, அப்படியே முறுக்கி முறுக்கி, ஒரு கயிறு மாதிரி திரிச்சி, அப்படியே ரப்பர் பேண்டுக்குள்ள மடக்கி சொருகிடுவாங்க. அந்த நேரம் என்னை பாத்தா, இந்த ஆப்பிரிக்கன் அழகிங்க எல்லாம் மலைச்சி போய்டுவாங்க கேட்டீங்களா?

ஊருக்குள்ள ஒரு புள்ளையும் நம்ம ஹேர் ஸ்டைல்ல திரியக் கூடாது... எவளாவது அப்பம்மாகிட்ட வந்து அதே மாதிரி பின்னிட்டு போய்ட்டா, அன்னிக்கி அப்பம்மா க்ளோஸ். தூக்கிப் போட்டு மிதிக்க எல்லாம் செய்திருக்கேன் (அவ்வ்வ்வ் ஜாரி). ஆனாலும் என்னை அப்படி திமிரோட வளர்த்தது அப்பம்மா குத்தம் தான். அம்மா கைக்குள்ள நான் முழுசா போனதே சிஸ்த் வந்ததுக்கப்புறம் தான்.

அப்புறமா தான் நாம இந்த சமூக சேவை, அது இதுன்னு (அட நம்புங்கப்பா) பசங்க கூட அதிகமா சுத்த ஆரம்பிச்சுட்டேனா, ஒரு நாள் அவசரமா ஒருத்தருக்கு ரெத்தம் தேவை, வா, ஊருக்குள்ள போய் கேன்வாஸ் பண்ணி நாலஞ்சு பேர குண்டு கட்டா தூக்கிட்டு போகணும்னு பிரெண்ட் ஒருத்தன் அவசரப் படுத்தினான். இருடா, பின்னல்ல சிக்கு விழுந்திடுச்சு, அவுக்கவே முடியலன்னு பின்னல் கூட மல்லுக் கட்டிட்டு இருந்தேனா, உனக்கு மேக் அப் பண்ணவே அரை நாளு ஆவும், நான் மாலிய கூட்டிட்டுப் போறேன்னு அவன் கிளம்ப போக, அந்த மாலினி புள்ள வரவர எப்பப் பாத்தாலும் இந்த மூர்த்தி கூட ஒட்டிகிட்டு திரியுறா, அவள அவன் கூட அனுப்பலாமா?
பக்கத்துல இருந்த கத்திரிய எடுத்து ஒரே வெட்டா முடிய வெட்டிப் போட்டுட்டு, இந்தா வந்துட்டேன்னு கிளம்பி போயிட்டேன்.

அவ்வளவு தான், நமக்கும் அந்த அல்ட்ராசிட்டி ஹேர் ஸ்டைலுக்கும் ஏற்பட்ட காதல், பந்தம் பாசம் எல்லாத்துக்கும் ப்ரேக் அப் ஆகிப் போச்சு. அப்புறம் முடி வளர்ந்தாலும் ஒரு ஸ்டேஜுக்கு மேல வளர விட்டதில்ல.

ஆங்... அந்த பூ விசயத்த மறந்துட்டேனே, கனகாம்பரமும் மல்லிகையும் வச்சா எனக்கு உசிரே போற மாதிரி தலைய வலிக்குமா, அதனால அத எல்லாம் எப்பவோ டைவேர்ஸ் பண்ணிட்டேன். நமக்கு கூட மாட ஒத்தாசையா இருக்குறது இப்போதைக்கு பிச்சிப் பூ தான். அத எல்லாம் என் கையால தொடுத்து தலைல வச்சா தனி கெத்து தான்...

அவ்வளவு தான், வீர தீர ப்ரதாபங்கள் இப்போதைக்கு ஒத்திவைக்கப் பட்டுள்ளது. எல்லாரும் போய் அவங்கவங்க வேலையைப் பாருங்க...டொயிங்.....
--------------------------------------------
அப்புறம், மேல சுத்தினது மெழுகுவர்த்தி இல்லையாம், கொசுவர்த்தி சுருளாம், இதெல்லாம் நமக்கு எங்க தெரியுது
--------------------------------------------

அட, ஆயிரங்கால் பின்னல்ன்னு கூகிள்ல தேடினா ஒத்த போட்டோ கூட சிக்கல, அதனால ஒத்த ஜடையோட ஒரு புள்ளைய சுட்டு கொண்டாந்து போட்ருக்கேன். புள்ள நம்ம அளவு அழகா இல்லனாலும், பாக்க எதோ சுமாரா இருக்குல....

Thursday, 21 May 2015

இது நம்ம வீட்டுக் கல்யாணம்



எப்படியோ, ஒரு வாரமா இருந்த கல்யாண வீட்டு பரபரப்பு இன்னிக்கி தான் கொஞ்சம் கம்மி ஆகியிருக்கு.

அது சரி, யாருக்கு கல்யாணம்னு எல்லாம் கேக்காதீங்க. என் தங்கச்சிக்கு தான் கல்யாணம்.

சொந்த தங்கச்சி இல்ல, என் அப்பாவோட சித்தப்பா பையனோட பொண்ணு. கிட்டத்தட்ட எங்க ரெண்டு பேருக்கும் ஒரே மாதிரி பெயர், ஒரே மாதிரி முட்டைக் கண்ணு, ஒரே மாதிரி சோடாப் புட்டி கண்ணாடி... அதனாலயே அவ கல்யாணம்னா எனக்கு ஸ்பெசலா தோணிச்சு.

கல்யாணம் எல்லாம் பிக்ஸ் ஆகி கிட்டத்தட்ட ஒரு வருஷம் ஆன நிலைல ஒரு வாரம் முன்னாடியே வீடு களைகட்ட ஆரம்பிச்சிடுச்சு. சொந்தக்காரங்க ஒவ்வொருத்தரா முறைச் சோறு பொங்கி போட்டு போட்டு, அத நாங்க சாப்பிட போய் போய் ரொம்ப டயர்ட் ஆகிடுச்சு. எங்க பங்குக்கு நாங்களும் முறைச் சோறு பொங்கிப் போட்டோம்...

அப்படி இப்படின்னு ஒரு வழியா நேத்து முகூர்த்த நாள். அக்கா, சீக்கிரமே வந்துடுன்னு சொல்லி விட்ருந்தா. நானாவது சீக்கிரம் போறதாவது. புள்ள ஆள் தெரியாம சொல்லி விட்ருக்குன்னு நினைச்சுகிட்டே காலைல ஒன்பது மணிக்கு தான் மெதுவா கிளம்ப ஆரம்பிச்சேன்.

வேற விசேஷங்கள்னா பரவால, டக்குன்னு கிளம்பிடலாம், கல்யாண வீட்டுக்கு அப்படியா கிளம்ப முடியுது?

பட்டுச் சேலை பாக்கணும், அதுக்கு மேட்சிங்கா நகை, அதுவும் வளையல், கம்மல், மாட்டி, நெத்திசுட்டின்னு... ஷப்பா..... அப்படியும் அரைமணி நேரத்துல கிளம்பி, ஒரு மணி நேரம் ட்ராவல் பண்ணி, ஒரு வழியா கிளம்பி மண்டபத்துக்குள்ள நுழையுரப்ப மணி பத்தரை.

நானும் அப்பாவும் போய் இறங்குற நேரம் தான் மாப்பிளை காரும் உள்ள என்ட்டர் ஆகுது. உடனே ஒரு பரபரப்பு.

சரி, நாம எதுக்கு இந்நேரம் கூட்டத்துக்கு உள்ளே நுழையணும்ன்னு அப்பாவோட ஒரு ஓரமா நின்னுகிட்டேன். சித்தப்பா அப்பாவ பாத்ததும், அண்ணாச்சி, நல்ல வேளை வந்துட்டீங்க, வாங்க வாங்க மாப்ளைய வரவேற்கப் போவோம்னு கைபுடிச்சு இழுத்துட்டு போய்ட்டாங்க. நான் தேமேன்னு நின்னுட்டு இருக்கேன் தன்னந்தனியா...

ஆரத்தி எடுக்க யார் வராங்கன்னு பாத்தா, அட, நம்ம புள்ளைங்க. எல்லாம் என் மாமா பசங்களும் பொண்ணுங்களும் தான். கூடவே அப்பா வழி சொந்தங்கள்.

என்னதான் நாங்க சொந்தக் காரங்களா இருந்தாலும், என் தங்கச்சி அப்பா வழி சொந்தம், என் மாமா பசங்க அம்மா வழி சொந்தம். ரெண்டு குடும்பங்களுக்கு அவ்வளவா நெருக்கம் எல்லாம் இல்லாததால யாரையும் யாருக்கும் தெரியாம இருந்துச்சு. ஆனா எப்ப நான் மாமா குடும்பத்தோட ஐக்கியமானேனோ அப்பவே அவளும் எங்க கூட்டத்துல ஒருத்தியாகிட்டா...

ஆரத்தி எடுத்தவ, தட்டுல காசு போட்டதும், எடுத்து பாத்துட்டு ஐநூறு ரூபா தானா, இன்னும் தாங்கன்னு சண்டைக்கு போய்ட்டா. அப்புறம் மாப்ளை எப்படியோ பாக்கெட்டை தடவி இன்னொரு ஐநூறு ரூபா குடுத்ததும் தான் வழியே விட்டா. பசங்க அதுக்குள்ள பன்னீர் தெளிக்க, என் தம்பி (அவ வீட்டுக்கு ஒரே பொண்ணு) மாப்பிளைக்கு மாலை போட்டு, சந்தனப் பொட்டு வச்சு கைப்பிடிச்சு உள்ளக் கூட்டிட்டு போனான்.

நான் என்னப் பண்றதுன்னு தெரியாம நின்னுட்டு இருந்தேன். அப்பா தான் வந்து வா உள்ளப் போகலாம்னு கூட்டிட்டுப் போனார். எனக்கு கொஞ்சம் எல்லாமே அன்னியமா தான் தெரிஞ்சுது. காரணம் இது என் சொந்த ஊர். சொந்த ஊருக்குள்ள ஒரு விருந்தாளி மாதிரி வர்றது ஒரு கொடுமை இல்லையா? என் அம்மா இதே ஊர்ல தான் இருக்கா. அவள கூட என்னால பாக்க முடியாதுனா அது எத்தனைப் பெரிய வலி. சரி, சரி, என் புலம்பல அப்புறமா வச்சுக்கலாம், வாங்க நாம கல்யாணத்த கவனிப்போம்.

நான் உள்ளப் போனதும் தான் கவனிச்சேன், புள்ளைங்க எல்லாம் கல்யாணத்துக்குன்னே சேலை எடுத்துருக்காங்க. அடப் பாவிகளா, என்னைய விட்டுட்டு ஆளாளுக்கு என்னமா ஸ்டைலு... எல்லாரும் ஒரே மாதிரி புடவை, ப்ளவுஸ் பாத்தா, செம அட்டகாசம். ஒவ்வொருத்தியும் அவ்வளவு அழகா இருக்காங்க. மாமா பசங்க அத்தனை பேரும் பட்டு வேட்டி கட்டி, மல்லுவேட்டி மைனர் மாதிரி சிங்குச்சா சிங்குச்சா கலர்ல சட்டை போட்ருக்காங்க.

ஓய், இன்னா, என்னை விட்டுட்டு நீங்க எல்லாம் இப்படின்னு கேட்டா, நாங்க கேட்டோம், நீ தான வேணாம்னு சொன்னன்னு அவங்க திருப்பி தாக்க, ஆனாலும் பொறாமையா இருக்கு பக்கிங்களான்னு நான் சைலென்ட் ஆகிட்டேன். பின்ன, கெத்தா, நான் எல்லாம் உங்க கூட கூட்டு சேர்ந்து வர மாட்டேன்னு நான் தான ஒரு வாரம் முன்னால சொன்னேன்.



சரி, அத விடுங்க, அந்தா அங்கப் பாருங்க, மாப்பிள்ளை உக்காந்துட்டு இருக்கார். வாங்க, அவர ஒரு ரவுண்டு போய் பாப்போம்...

என் தங்கச்சில ஒருத்தி, மாப்பிளை பக்கத்துல போய், மாப்பிளை சார், எங்க கண்ணையே உங்ககிட்ட ஒப்படைக்குறோம், தயவு செய்து அவள இனி இந்தியாவுக்குள்ள விட்ராதீங்க, அவ அலம்பல் தாங்கலன்னு சொல்றா. அவரு சிரிச்சுகிட்டே, சொல்லிட்டீங்கல யூ.எஸ் லயே அவள பூட்டி வச்சிடுறேன்னு சொல்றார்.
அதுக்குள்ள மாமன் கல்யாணத்துக்கு நேரமாக, வரிசையா அவளோட மாமாக்கள எல்லாம் உக்கார வச்சாங்க. மொத்தம் நாலு பேரு. நாலு பேரையும் ஒவ்வொருத்தரா மணமேடைக்கு ஏத்தி, என்னமோ மந்திரம் எல்லாம் சொல்லி, கைல மஞ்சள் கிழங்க கட்டி விட்டு, அப்புறமா, தங்கச்சிய வர சொல்லி, எல்லார் கிட்டயும் ஆசிர்வாதம் வாங்க சொன்னாங்க. அந்த புள்ள சும்மாவே அழகு, மேக் அப் எல்லாம் போட்டு செம்ம அழகா இருந்தா (கிர்ர்ர்ர்)....

இதுல நீங்க ஒரு விஷயம் கவனிக்கணும். நான் எப்பவுமே அழகு பத்தி பெருசா அக்கறை எடுத்துக்க மாட்டேன். யாரையும் டக்குன்னு அழகுன்னு சொல்லவும் மாட்டேன். ஆனா ஏனோ அன்னிக்கி எனக்கு எல்லாருமே அழகா தெரிஞ்சாங்க. என்னைத் சுத்தி எல்லாமே அழகா தெரிஞ்சுது. ஏன், என்னைக் கூட எவ்வளவு அழகா இருக்கேன்னு பெரியவங்க நெட்டி முறிச்சாங்க.

சரி, சர்ர்ர்ரீரீரீ.... விசயத்துக்கு வர்றேன், மாமாக்கள் எல்லாம் ஆசிர்வாதம் பண்ணின கையோட, ஆளுக்கொரு தங்க வளையலையும் மாட்டி விட பொண்ணு வீட்டு ஆம்பளைங்க எல்லாம் அனந்தரம் பண்ண வரிசைல வர ஆரம்பிச்சாங்க. அது ஒரு நீண்ட வரிசை. ஊர்ல உள்ள அத்தன பேரும் மேடையேறி பொண்ணுக்கு நாமம் விட்டு, மங்கல தண்ணி தெளிச்சு ஆசீர்வாதம் பண்ணினாங்க. அதெல்லாம் முடிஞ்சு, மாப்பிளை வீட்டுக்காரங்க முகூர்த்தப் பட்டு எடுத்துகிட்டு ரூமுக்குள்ள போனாங்க.

நான் அப்படியே வெளில நோட்டம் விட்டேன். பாட்டு கச்சேரி ஏற்பாடு பண்ணியிருந்தாங்க. ஆரம்பமே குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டுக் கேக்குதா குக்கூ குக்கூன்னு ஒரு பொண்ணு கூவிட்டு இருந்துச்சு. யாருடா இதுன்னு மூஞ்சியப் பாத்தேன்... ப்பாஆஆ... யாருடா, இது பேய் மாதிரின்னு எனக்கு நானே கேட்டுகிட்டேன்... அவ்வ்வ்வ் அது ஏற்கனவே வெள்ளையா இருந்துச்சு, அதுல நாலு இஞ்சுக்கு பாண்ட்ஸ் பவுடரப் போட்டு உரமேற்றியிருக்கும் போல. கூடவே அந்த செக்க செவேல்ன்னு லிப்ஸ்ஸ்டிக்...சரி, ரொம்ப பயந்துட வேணாம்... நான் வேற டாபிக் போய்டுறேன்...

மாப்பிளை யூ.எஸ்ல வேலைப் பாக்குறதால அவரோட பிரெண்ட்ஸ் சில பேர் வெள்ளைவெளேர்ன்னு சுத்திக்கிட்டு இருந்தாங்க. எனக்கு அவங்க காஸ்ட்யூம் பாத்து ஒரே ஆச்சர்யம். அவங்களும் அப்படியே வேட்டி, புடவைன்னு அசத்தினது தான் காரணம். ஆனா வேட்டி கீழ விழுந்துருமோ விழுந்துருமோன்னு திகிலோட திரிஞ்சாங்க போல. அடிக்கடி பிடிச்சுகிட்டே நடந்தாங்க. ஒரே ஒரு பொண்ணு, அதுவும் சான்சே இல்ல, ரொம்ப அழகு.

ஒரு வழியா முகூர்த்த பட்டு கட்டிக்கிட்டு பொண்ணு வர, மந்திரங்கள் ஒழிக்க, கெட்டிமேளம் கெட்டி மேளம் முழங்க தாலி கழுத்துல ஏறிடுச்சு. நான் அப்பா பக்கத்துல உக்காந்து பூ போட்டேன். சித்தப்பா கைப் பிடிச்சு குடுக்க, அப்படியே பொண்ணும் மாப்பிளையும் மேடைய வலம் வந்தாங்க. ஒவ்வொரு தடவ பக்கத்துல வரும்போதும் எல்லாரும் பூ போட்டு ஓ...ஹோன்னு கூச்சல்.

அப்புறம், மாப்பிளை வீட்டு சொந்தங்கள் எல்லாம் அனந்தரம் செய்ய, அப்படியே குடும்பம் குடும்பமா மேடையேறி, கிப்ட் குடுத்து, போட்டோ வீடியோன்னு எடுக்க ஆரம்பிச்சுட்டாங்க.

ஒருபக்கம் அதெல்லாம் நடந்துட்டு இருக்க, இன்னொரு பக்கம் ஆர்கெஸ்ட்ரா அடிச்சு தூள் பண்ண ஆரம்பிக்க, கூட்டம் கட்டுப்படுத்தவே முடியல. அந்த களேபரத்துலயும் மாமா பையன் ஒருத்தன், அங்க ஸ்டேஜ்ல இருந்த ஒரு சிகப்பு கலர் பூவ போய் எடுத்துட்டு, நேரா பொண்ணுகிட்ட போய் நீ ரொம்ப அழகா இருக்க, அயாம் லவ் வித் யூன்னு கலாய்க்குறான். அடப்பாவி, தாலி ஏறுறதுக்கு முன்னாடி சொல்லியிருக்க கூடாதா, இப்ப வந்து சொல்லுறியேன்னு அவளும் கேக்க, சோகமா மூஞ்சிய வச்சுட்டு நேரே என் கிட்ட வந்து, நீ என்னை கட்டிக்குறியான்னு கேக்குறான். ஹஹா... பக்கத்துல இருந்த அப்பா விழுந்து விழுந்து சிரிச்சுட்டாங்க. ரொம்ப செல்லம் அவன் எங்களுக்கு. ரொம்ப ரொம்ப அழகா வேற இருப்பான். அவன் கேட்டு மறுக்க முடியுமா. இப்பவே வேணா கல்யாணம் பண்ணிப்போம்டான்னு சொன்னேன்.

உடனே, ஆர்கஸ்ட்ரா மைக்க வாங்கி, “பொய் சொல்லக் கூடாது காதலி, பொய் சொன்னாலும் நீயே என் காதலி”ன்னு பாட்டுப் பாட ஆரம்பிச்சுட்டான். அவன் கூட அப்படியே எழும்பி போய் ஒரு டான்ஸ் ஆடலாமான்னு தோணிச்சு, அதுக்குள்ள இன்னொருத்தி ஓடிப் போய் அவன் கூட ஜோடியா ஆட ஆரம்பிச்சுட்டா.

அடுத்தடுத்து ஒவ்வொரு பாட்டா ஆர்கஸ்ட்ரால உள்ளவங்க பாட ஆரம்பிக்க, மொத்த புள்ளைங்களும் ஆளுக்கு ஒரு டான்ஸ்ன்னு ஆடத் தொடங்கிட்டாங்க. செம கலாட்டா. அதுவும் அந்த பாரின் ஆட்கள எல்லாம் வேற ஜோடியா சேர்த்துகிட்டாங்க. அப்பப்ப அவங்க கூட செல்பி எடுத்துட்டு, டான்ஸ் மூவ்மென்ட் சொல்லிக் குடுத்துட்டுன்னு இருந்த நேரம், மேடைல ஒரே கூட்டம்.

எங்க ஊர் பசங்க எல்லாம் ஒரு ஓரமா நின்னு இதுங்க பண்ற அட்டூளியத்த எல்லாம் பாத்துட்டே நிக்குரானுங்க. இதுல சில பேர் நான் பாக்குறேன்னு தெரிஞ்சதும் சிரிச்சாங்க. ஒரு காலத்துல நான் அவங்க கூட தான் ஊர் சுத்துவேன். இப்ப ரொம்ப ரொம்ப அடக்கமா ஹாய்ன்னு இங்க இருந்தே கைக் காட்டி சிரிச்சுட்டு அப்பா பக்கத்துலயே உக்காந்துகிட்டேன்.

ஒரு விஷயம் சொல்ல மறந்துட்டேன், என்னை இங்க இம்ப்ரஸ் பண்ணின விஷயம் என்னன்னா, முகூர்த்தம் முடிஞ்சதுமே சித்தப்பா அப்பா கிட்ட பரபரப்பா ஓடி வந்தாங்க. அண்ணே, சாப்பாடு எல்லாம் வண்டியில ஏத்திக்கிட்டு இருக்காங்க. கொஞ்சம் பொறுப்பா பாத்து அனுப்பி வைக்கணும், நான் இங்க மாட்டிகிட்டேன்னு சொன்னதும், அப்பா நான் போய் பாக்குறேன்னு போயிட்டு வந்தாங்க. சாப்பாடு எல்லாம் பந்தி ஆரம்பிக்குறதுக்கு முன்னாடியே பக்கத்துல இருக்குற ரெண்டு ஹோம்கள்ல பசங்களுக்கு சாப்பிட குடுத்து விட்டாங்க. நல்ல விஷயம் தானே. சித்தப்பா அதுக்கு முந்தின நாளும் சாப்பாடுக் குடுத்தாங்கன்னு அப்புறமா தெரிஞ்சிகிட்டேன்.

அடுத்து பிடிக்காத விஷயம், அரசியல்வாதிகள் கூட்டம். இன்ன கட்சின்னு இல்லாம எல்லா கட்சியில இருந்தும் ஆட்கள் வந்துட்டு இருந்தாங்க. அட, எல்லாரும் கழுவி ஊத்துற ஆளும் கட்சி மாநில பொறுப்பாளர் கூட கும்பலா வந்து போட்டோ எல்லாம் எடுத்துட்டு போனார்.

அப்பாவோட உக்காந்துட்டு இருக்கேன், டக்குன்னு ஒருத்தர் பக்கத்துல வந்து உக்காந்த பீல். யாருடா இது, எங்கயோ பாத்தது மாதிரி இருக்கேன்னு அப்பா கிட்ட கேட்டா அவர் தான் எதிர்க்கட்சி ஆளாம். தன்னந்தனியா வந்து உக்காந்து, வாங்கன்னு கூட சொல்ல யாரும் இல்லாம அவர் பாட்டுக்கு உக்காந்துட்டு இருக்கார். எனக்கு எழும்பி போகவா வேணாமான்னு ஒரே சந்தேகம். கொஞ்ச நேரம் கழிச்சு தான் ஒவ்வொரு வயசானவங்க வந்து, வாங்கன்னு கூப்ட்டுட்டு அவங்களும் அவங்க பாட்டுக்கு போய்ட்டாங்க. எப்படியோ அப்புறம் போய் மணமக்கள வாழ்த்திட்டு வந்தார். ஒரு காலத்துல ஓஹோன்னு வாழ்ந்த ஆளு, மந்திரியா கூட இருந்துருக்கார்ன்னு நினைக்குறேன். கழுத்துல தேசியக் கொடி மாதிரி துண்டு போட்ருந்தார். சின்ன வயசுல அவர அத்தனை கம்பீரமா அவர பாத்துருக்கேன். இப்ப கட்சியே இல்ல, இவர யாரு மதிக்கப் போறா?

நகர சபை சேர்மன்ல இருந்து மாநில தலைவர் வரைக்கும் வந்த நேரம் எல்லாம், ஒரு மாதிரி ஒரு பந்தா நிலவுன மாதிரி தோணிச்சு எனக்கு. அது மட்டும் தான் எனக்கு பிடிக்கவே இல்ல...

மறுபடியும் நாம கொண்டாட்டத்துக்குள்ள வந்துருவோம்...

அதென்னவோ, நேத்து முழுக்க முழுக்க ரொம்ப கொண்டாட்டமான நாளா இருந்துச்சு. எல்லா புள்ளைங்களும் இத்தனை அழகான்னு அசர வச்சுட்டு இருந்தாங்க. பசங்க, புள்ளைங்க கலாட்டால நான் எப்பவுமே என்னை ஈடுபடுத்திக்க மாட்டேன். ஆனா நேத்து அவங்க கூட போய் நானும் கலாட்டா பண்ணனும்னு ஆசைப் பட்டேன். ஆனா பாருங்க, இந்த ஈகோ இல்ல ஈகோ, அது வந்து என்னை தடுத்திடுச்சு...

அப்புறமா சாப்பிட போகலாம்னு முடிவுப் பண்ணி எழுந்தப்ப, பொண்ணும் மாப்பிளையும் சாப்பிட வந்துட்டாங்க. மாப்பிளை பொண்ணுக்கு ஊட்டி விடுங்கன்னு அங்க வந்தும் கலாட்டா. நோ, அதெல்லாம் முடியாது, என் பிரெண்ட்ஸ் எல்லாம் பாத்துட்டு இருக்காங்கன்னு மாப்பிளை வெக்கப் பட, அப்படினா என் டார்லிங்குக்கு நான் ஊட்டி விடுறேன்னு என் மாமா பையன் முன்னாடிப் போய் நிக்குறான். என் தங்கச்சி ஒருத்தி, அப்படினா அத்தானுக்கு நான் ஊட்டி விடுறேன்னு சொல்றா. எல்லாரும் பேசாம போய் சாப்பிடுங்கன்னு கூட்டத்துல ஒரு ஆள் அதட்டுன பிறகு தான் அடக்க ஒடுக்கமா எல்லாம் ஓடிப் போய் சாப்பிட உக்காந்தாங்க.

அப்பவும் விடாம, மாப்பிளையோட பிரெண்ட்ஸ் கிட்ட போய், இத சாப்பிடுங்க, இது நல்லாயிருக்கும், இத சாப்பிடாதீங்க, காரமா இருக்கும்னு பொண்ணுங்க எல்லாம் அக்கறையா சொல்லிக் குடுத்துட்டு இருந்தாங்க. ஹஹா இந்தியன் கேர்ள்ஸ் ஆர் வெரி ப்யூட்டிபுல்ன்னு ஒருத்தர் ஈஈ-ன்னு சிரிச்சுட்டு இருந்தார். ரியலி ஐ லைக் திஸ் மேரேஜ், டோன்ட் வொர்ரி, வி வில் டேக் கேர் ஆப் யுவர் சிஸ்டர்ன்னு ஒருத்தர் வாக்குறுதி குடுத்தார்.

ரொம்ப அலைச்சல் வேற இருந்ததால சாப்பிட்டதும் நான் டயர்ட்ல வீட்டுக்கு வந்துட்டேன். மறுவீடு காணப் போனவங்க, மாப்பிளை வீட்ல இருந்து கிளம்ப ராத்திரி பதினோரு மணி ஆகிடுச்சாம். பாவம் தான் பொண்ணும் மாப்பிளையும்...

இந்தா இன்னிக்கி அவங்களுக்கு விருந்து. நல்லா மூக்கு முட்ட சாப்ட்டுட்டு வந்ததால, அத பத்தி எழுத சோம்பலா இருக்கு...

இவ்வளவு நீளமா எழுதினா யார் படிப்பான்னு நீங்க கேக்குறதும் புரியுது, அதனால இத்தோட விட்டுட்டேன். பொழச்சுப் போங்க....

.

Saturday, 14 March 2015

சைட் அடித்தல் - ஒரு பிரதாப சரித்திரம்



அவன் அழகானவன்....

அதான் அழகானவன்னு சொல்லிட்டேன்ல அப்படின்னா கண்டிப்பா சைட் அடிச்சிருப்பேன்...
.....................................

நைட் சாப்பாட்டுக்கு கொத்துப் பரோட்டா கொண்டு வந்தப்ப நந்து தோனி பத்தி ரொம்பவே சிலாகிச்சுட்டு இருந்தா... கூடவே ஐ லவ் தோனி, ஹைய்யோ அவன் என்னா அழகுன்னு சிலிர்ப்பு வேற... முளைச்சு மூணு இலை விடல, அதுக்குள்ள இதுக்கு பேச்சைப் பாருங்க...
................................

கன்னாபின்னான்னு சைட் அடிக்குறதுல என் அம்மா கில்லாடி... அதுவும் அம்மா ஜடேஜாவோட பயங்கர ஃபேன். எனக்கு ஜடேஜா எல்லாம் நியாபகம் இல்லனாலும் அம்மா மூச்சுக்கு முன்னூறு தடவ ஜடேஜா பேரை சொல்லாம விட மாட்டா... எப்ப பாத்தாலும் என் கன்னத்த பாத்து, அப்படியே ஜடேஜா கன்னம் என் பொண்ணுக்குன்னு பச்சக் பச்சக்ன்னு முத்தம் குடுப்பா... அஞ்சு வயசுல எல்லாம் போமா, யாருக்கோ குடுக்க வேண்டிய முத்தத்த எனக்கு குடுக்குறன்னு சட்டுன்னு கைய வச்சு முத்தத்த துடச்சிடுவேன்...

நான் எய்த் படிக்குற நேரம் எல்லாம் அழகா (அது என்ன அழகுன்னு அம்மாகிட்ட தான் கேக்கணும், இங்க அழகுங்குறது ஒரு குறியீடு மட்டுமே) இருக்குற பசங்கள பாத்தா பையன் செம ஸ்மார்ட்ல... அவன் ஹேர் ஸ்டைல் பாரேன், ஹே அவன் டிரெஸ்ஸிங் சென்ஸ் பாரேன், ஸ்மார்ட்லன்னு தொணத்தொணத்துட்டே வருவா...

அம்மாவுக்கு இயற்கை பிடிக்கும், அழகு பிடிக்கும், அன்பு பிடிக்கும், நேசம் பிடிக்கும்.... எல்லாத்தையும் விட அவள் ஒரு குழந்தைத்தனமானவள்... அதனாலதானோ என்னவோ அப்பாவுக்கு அவள மட்டுமே ரசிக்கப் பிடிக்கும்...

நாங்க சேர்ந்து வெளில போறப்ப, அம்மா சைட் அடிச்சா, அப்பா உங்களுக்கு எந்த பொண்ணு அழகா இருக்குற மாதிரி தோணுதுன்னு கேப்பேன்.... எனக்கு எப்பவுமே உன் அம்மா மட்டும் தான் அழகுன்னு பதில் சொல்லுவார்... அம்மாவும் ஏய் என்னடி, என் புருசன மாத்தப் பாக்குறியான்னு எகிறுடுவா...

வேணாம் அன்னலெட்சுமி, பெருமாளுக்கு துரோகம் பண்ணாதன்னு நான் கலாய்ச்சா, ரெண்டும் ஜோடியா சேர்ந்துட்டு இத்துனூண்டு இருந்துட்டு பேச்சைப்பாருன்னு வலிய இழுத்துப் பிடிச்சு ஆளுக்கு ஒரு பக்கமா முத்தம் குடுப்பாங்க...
.........................................

எனக்கு அப்பா எல்லாம் சைட் அடிச்சாரான்னு இதுவரைக்குமே தெரியல... ஒருவேளை சைட் அடிக்குற உரிமை அப்பாவுக்கு மறுக்கப்பட்ருக்கலாம்.... லாம்... லாம்.... லாம்....

இந்த லாம்.... ஒரு குறியீடு, மறுக்கப்படலாம்ங்குறது யாருக்கும் சேர்த்துன்னு உங்க பார்வைக்கே விட்டுடுறேன்....



.

Sunday, 22 February 2015

சக்தி - என் உலகம்


இந்தா டைப் அடிச்சுட்டு இருக்கேன்ல, இந்த கீ-போர்ட் இருக்குல, இது மேல தான் சக்தி எப்பவும் ஏறி உக்காந்துட்டு இருப்பான். நான் டைப் பண்ணினா என் விரல்கள ஓடி வந்து கடிப்பான். எப்பவுமே குட் மார்னிங் ஸ்டேடஸ் போட அவன வலது கைல பிடிச்சு வச்சுட்டு இடது கையால தான் டைப் பண்ணுவேன்.

சக்தி - போன வருஷம் புது வருஷத்துல எனக்கு கிடச்ச கிப்ட் அவன்.

அவன் அம்மா ரெண்டு நாள் முன்னாடியே எங்க வீட்டு ஹால்-ல வந்து எங்க கண்ணு முன்னாலயே செத்து போய்ட்டாங்க. விசாரிச்சா அணில்களுக்கு எல்லாம் ஒரு வகை நோய் பரவிட்டு இருக்குறதாகவும், தோட்டத்துல இது மாதிரி நிறைய அணில்கள் செத்து செத்து விழுறதாவும் சொன்னாங்க.

எப்படியோ சக்தி என் கிட்ட வந்து சேர்ந்தான். அவனுக்கு பெயர் வச்சதே இங்க எல்லாரும் திருவிழா மாதிரி கொண்டாடினோம். குட்டிப் பய, முதல் நாளே கூட்டுக்குள்ள படுக்க மாட்டேன்னு என் கைய கெட்டியா பிடிச்சுகிட்டான். கஷ்டப்பட்டு தான் அவன கூட்டுக்குள்ள தூங்க வச்சேன்.

ஒரு ரெண்டு மூணு நாள் நந்து, அவங்க அம்மா எல்லாம் வந்து பாத்தாங்க. சின்ன பையன்ல, அவனுக்கு அப்ப ஓடி ஒளிய தெரியல. ஆனா அதுக்கப்புறம் யார் வந்தாலும் ஓடி போய் என்னோட பிரிண்டர்குள்ள ஒளிஞ்சுப்பான்.

அய்யய்யோ, அந்த பய பண்ற அநியாயம் சொல்லி மாளாது. எப்ப பாரு சேட்டை சேட்டை சேட்டை... ஒரு நாய்க்குட்டி என்னவெல்லாம் பண்ணுமோ அத்தனையும் இந்த பயலும் பண்ணுவான்.
சக்தி எப்பப் பாத்தாலும் வாய நல்லா தொறந்து ஹாவ்...ன்னு கொட்டாவி விடுவான். என் கை மேல ஏறி உக்காந்து நக்கி வச்சுட்டே இருப்பான். நான் கீ-போர்ட் தோட்டா ஓடி வந்து அசையுற விரல்கள பிடிச்சு கடிச்சு விளையாட வருவான்.

எலேய் கொஞ்சம் என்னை ப்ரீயா விடுடானா எங்க கேப்பான். அப்படியே லேப் டாப் பக்கத்துல போய் நின்னுட்டு அங்க இருந்தே என்னை பாத்து ஒரு முறை முறைப்பான். அப்புறம் ஓடி வந்து மடில ஏறி, பரபரன்னு முதுகு வழியா தோள்ல ஏறி, அங்க இருந்துட்டு காதுல ரெண்டு கையையும் வச்சுட்டு கம்மலை கடிச்சுட்டு இருப்பான்.

வெளில லேசா சத்தம் கேட்டா போதும், விருட்டுன்னு பாய்ஞ்சு போய் பிரிண்டர்க்குள்ள பதுங்கிடுவான். அவனுக்கு இங்க பிடிச்சதெல்லாம் நான் மட்டுமா தான் இருந்தேன். என்னை கண்டா ஓடி வந்துருவான். அவனோட வீரம் எல்லாம் என் கிட்ட தான்... அவனுக்கு பல் முளைக்க குறுகுறுன்னு வரும் போதெல்லாம் என்னோட தலை மேல ஏறி உக்காந்துட்டு முடிய கர்க் கர்க்ன்னு கடிச்சு துப்பிடுவான். விடுடா விடுடான்னு அவன புடிச்சு கீழ தூக்கிப் போட்டாலும் அடுத்த செகண்ட் மறுபடியும் என் தலைல இருப்பான். அப்புறம் என்ன நினைப்பானோ, முடிய வெட்டி விட்ட இடத்த எல்லாம் நக்கி குடுப்பான்.

இந்த சக்கப் பழத்துக்கு நானும் சக்தியும் போடுற சண்டை இருக்கே... பக்கி, எப்பவும் கூடவே இருக்குற அவன், சக்கப் பழத்த கண்டா மட்டும் அத தூக்கிட்டு பீரோ மேல போய்டுவான். அங்க நின்னுட்டு என்னை பாத்து கேலியா சிரிச்சுட்டு இருப்பான். குசும்பு புடிச்சவன்.

அவனுக்குன்னு ஸ்பெசலா ஆப்பிள், கிரேப்ஸ், கொறிக்க பாதாம் பருப்பு, நிலக்கடலை எது குடுத்தாலும் இந்த விசயத்துல நாங்க ரெண்டு பேருமே பிடுங்கி பறிச்சு திங்குரதுல போட்டி தான் போடுவோம். அவனுக்கு ஒரு ஆப்பிளை குடுத்துட்டு நான் ஒண்ணை எடுத்து கடிச்சா, அவன் என் தோள்ல ஏறி நான் கடிக்குற ஆப்பிள தான் கடிப்பான். பொறாமக்காரன்.

ஒரு நாலஞ்சு நாள் தான் அவன் கூட்டுக்குள்ள படுத்துருப்பான். அப்புறம் எப்பவும் என் முதுல தான் அவன் தூக்கம். அவனுக்காக புரண்டு கூட படுக்க முடியாம தூங்காம நைட் முழுக்க முழிச்சி கிடப்பேன். அப்புறம் அதவே பழகிடுச்சு. நான் அசைஞ்சா அவனும் அதுக்கேத்த மாதிரி அசைஞ்சு அட்ஜஸ்ட் பண்ணிப்பான்.

எப்ப பாத்தாலும் என் விரல கடிச்சுட்டு, அப்படியே தோள் மேல ஏறி காத கடிச்சி, கம்மல கடிச்சி, கொஞ்சம் அசந்தா மூக்கையும் கடிச்சி வைக்குற சக்தி, பாசமா நாய்க் குட்டி மாதிரி நக்கியும் வைப்பான்.

எனக்கும் அவனுக்கும் ரொம்ப சண்டை வந்தா மட்டும் கோவிச்சுட்டு லேப்டாப் பக்கத்துல போய் படுத்துப்பான். அங்க இருந்துட்டே அவன் பண்ற சேட்டைய பாத்தா கோபம் போய் சிரிப்பு வந்துரும். அப்புறம் என்ன, விருட்னு மறுபடியும் தோள்ல ஏறிப்பான்...

நான் காலேஜ் போய்ட்டா ஜன்னல் மேல குரங்கு மாதிரி தொத்திட்டு இருப்பான். இப்பவும் ஜன்னல்ல ஏதாவது அசைவு தெரிஞ்சா சக்தின்னு ஒரு செகண்ட் மனசு அதிரத்தான் செய்யுது. கூடவே அந்த பயல நினச்சு ஒரு புன்னகையும்....

Thursday, 19 February 2015

வற்றா நதி - சிறுகதைத் தொகுப்பு


வற்றா நதி – இத பத்தி இதுவரைக்கும் நான் மூச்சு கூட விடல. ஆனா இதோட மேக்கிங் ப்ளான் எப்ப ஆரம்பிச்சுதோ, அப்ப இருந்து கூட இருக்கேன். இதுல இருக்குற இருபத்தி ரெண்டு கதைகளும் புத்தக தயாரிப்புல இருக்கும் போதே நான் வாசிச்சுட்டேங்குரதால புக் கைல கிடைச்சதும், யாதுமாகியவளுக்கு ப்ரியமும் அன்புமாய் மு. கார்த்திக் புகழேந்தி அப்படிங்குற வார்த்தையையே ஒரு மாசத்துக்கு வெறிக்க வெறிக்க பாத்துட்டு இருந்துட்டேன் (புக் ரிலீஸ் டிசம்பர் இருபத்தி ஒண்ணு, எனக்கு புக் கைல கிடைச்சது ஜனவரி பத்து. என்ன ஒரு வேகம் பாருங்க).

அப்புறம் அதுல இருக்குற கதைகள பத்தி சொல்லனும்னா, ஒவ்வொரு கதையும் படிச்சுட்டு ரசிச்சு ரசிச்சு நான் கொண்டாடின கதைகள் தான் எல்லாமே. திருநெல்வேலில வச்சு, இந்த கதைய படிச்சுப் பாருன்னு கார்த்திக் சொன்னா முந்திரிகொட்டைதனமா நான் முதல்லயே படிச்சுட்டேன்னு சொல்லி திட்டு எல்லாம் வாங்கியிருக்கேன். லூசு, இது எடிட்டெட் வெர்சன், வர வர உனக்கு பொறுப்பும் இல்ல அக்கறையும் இல்லன்னு மண்டைல கொட்டும் வாங்கியிருக்கேன். அதனால ஒருவேளை வற்றா நதி-ல சில அடையாளக் கதைகள் நான் சரியா வாசிக்காம விட்டுருக்கலாம்... (என் மேல தப்பே இல்ல, இந்த கண்ணாடி தான் பிரச்சனையே... திட்டனும்னா என் கண்ணாடியை திட்டிக் கொள்ளவும்).

எனக்கும் கார்த்திக்குக்கும் வாக்குவாதங்கள் எல்லாம் வந்துச்சுன்னா அது “சிவந்திப்பட்டி கொலை வழக்கு” கதைல தான். நிறைய விவாதம் பண்ணியிருக்கேன் அதுல. அந்த கதைய வாசிச்ச வேகத்துல எனக்கு மனசே ஆரல. யார திட்டுறேன்னே தெரியாம நிறைய திட்டித் தீத்திருக்கேன். அப்புறம் வந்த கமண்ட்ஸ், திருப்பி கதைய எல்லாம் படிச்சுட்டு தான் நடக்குறத தான் சொல்லியிருக்கார், இங்க மெஸ்சேஜ் சொல்ல இடம் இல்ல தானேன்னு எனக்கு நானே சமாதானம் சொல்லியிருக்கேன். ரெண்டு நாள் என்னை கோபப்பட வச்ச கதை அது. அவ்வளவு தாக்கம்.

“அப்பாவும் தென்னை மரங்களும்”ல கார்த்திக் ஆந்தைகள் பத்தி சொல்லியிருப்பார். அதுவும் அதோட அருமை பெருமைகள எல்லாம் அடுக்கியிருப்பார். என் அப்பா அத எல்லாம் சொல்லித் தந்தது இல்லைனாலும் ஆந்தைகள் அப்பாவுக்கும் ரொம்ப பிடிக்கும். யாரு சொன்னா எங்கையா செத்துட்டார்ன்னு கார்த்திக் அதுல கெத்தா நிமிர்ந்து நிப்பாரு, அதே தான் நானும் சொல்லுவேன், எங்கப்பா சிங்கம்டே...

எங்களோட பழைய வீடு, அந்த வீட்ல ஒரு நிலை கதவு உண்டு. தம்பி எப்பவும் அந்த நிலைகதவுல தான் தொங்கிட்டு இருப்பான். எல்லாரோட வீட்லயும் இப்படி ஒரு நிலைக்கதவு கண்டிப்பா இருக்கும். அது பழைய நியாபகங்கள கண்டிப்பா தட்டி எழுப்பும். “நிலை கதவு” படிச்சா இப்படி தான் இப்படி தான், எங்க வீட்ல நானும் ____ம் ன்னு சொந்த கதைய நாமளும் ஆரம்பிச்சுடுவோம். இத தான நான் சொல்ல வந்தேன், அதுக்குள்ள இந்தாளு சொல்லிட்டாரேன்னு கண்டிப்பா பொறாம வரும்... ஏன்னா, எனக்கு வந்துச்சு.


இவர் எழுதின லவ் ஸ்டோரி படிச்சுட்டு இன்பாக்ஸ் பக்கமா ஒதுங்குன பொண்ணுங்க ஏராளாம். எல்லார் கிட்ட இருந்தும் இவர படாதபாடு பட்டு காப்பாத்த நான் பட்ட பாடு எனக்கு தான தெரியும்... “இதுக்கு மேல பச்சை, பிரிவோம் சந்திப்போம், கிறிஸ்டி ஒரு டைரி குறிப்பு, ஜெனி” கதைகள் பத்தி எதுவும் சொல்லத் தேவையில்லன்னு நினைக்குறேன். ஒவ்வொரு கதையும் தனிப்பட்ட முறைல ஹப்பா... என்னமா எழுதியிருக்க, செம, ஐயோ செல்லம் சான்சே இல்ல பின்னிட்ட போன்னு கால் பண்ணி சிலாகிச்சாலும் பக்கி ஒரு வேளை இவரே சைட் அடிச்சிருப்பாரோன்னு கொஞ்சம் கிலிய உண்டு பண்ணினது என்னவோ உண்மை. அவ்வளவு தத்ரூபம் (இந்த இடத்துல ஒரு சோக ஸ்மைலி எனக்கு மட்டும் நானே போட்டுக்குறேன் L )

ஆனாலும் “காற்றிலிடைத் தூறலாக” படிச்சதும், அப்படியே இல்லாத சட்டைக் காலர நானே தூக்கி விட்டுகிட்டேன். ஏன் தெரியுமா, அதுல வர்ற ஹீரோயின் கல்கி என்னை மாடலா வச்சு எழுதினது தான். நான் இம்பூட்டு நல்லவளா அப்படின்னு நானே பெரும பட்டுகிட்டேன்னா பாத்துக்கோங்களேன். அந்த கதை ரொம்ப நல்லா இருக்கு, சான்சே இல்லன்னு பெரிய பெரிய ரைட்டர்ஸ் எல்லாம் பாராட்டினாங்க மக்கான்னு கார்த்திக் சொன்னப்ப, அப்படியே காத்துல மிதக்குற மாதிரி இருக்கும். அதே மாதிரி “வணக்கத்துக்குரிய” படிச்சுட்டு பெரும தாங்கல. இத எல்லாம் கல்வெட்டுல பொரிக்கணும் அதுக்கு பதிலா தான் புக் போட்ருக்கு. பின்ன நாளைக்கு இவர் பேச்சு மாறிடக் கூடாதுல. இன்னொரு முக்கியமான விஷயம், அந்த கதைல அப்படி என்ன விசேசம்னு கேக்குறீங்களா, மாமனாருக்கு லெட்டர் எழுதினாராமாம், அதையே கதையாக்கிட்டார். படிச்சு பாருங்க, புரியும்.


இந்த பொங்கலோ பொங்கல் கதைய படிச்சதும், பாரு, இந்த பக்கி அப்பவே இப்படி, அதான் இப்பவும் ரசிகைகள் கூட்டம் இவருக்கு மொய்க்குதுன்னு செம கடுப்புல இருக்கேன். அதனால அத பத்தி நான் ஒண்ணும் சொல்ல மாட்டேன். நீங்களும் படிச்சுடாதீங்க, அப்புறம் உங்களுக்கும் கடுப்பு ஏறும், எப்படி எல்லாம் வாழ்ந்துருக்கான் பாருயான்னு...


“பற்றியெரியும் உலை” பத்தி நான் அதிகமா சொல்ல விரும்பல. காரணம், நீங்க அதுல ஆழ்ந்து வாசிச்சா உங்களுக்கே புரியும். நம்மளை பேசவே விடாம, ஒரு மாதிரி குற்ற உணர்ச்சியில தள்ளி விடுற கதை அது. மனசு படபடத்து என்ன பண்றதுன்னே தெரியலயேன்னு ஒரு தவிப்பு நாலு நாளுக்கு மனச பிசைஞ்சுட்டே இருக்கும். உங்களுக்கு குற்றவுணர்ச்சி வரவேனாம்னா அந்த கதைய படிக்காதீங்க, அதுவும் ரெண்டு தடவ படிச்சிடவே படிச்சிடாதீங்க.

இன்னும் நிறைய கதைகள். அத பத்தி எல்லாம் இன்னொரு நாள் சொல்றேன். இப்ப மூச்சு வாங்குது...


கடைசியா ஒண்ணு, இவர் கே.பி இல்ல கே.டி.... ஒவ்வொருத்தரோட பல்ஸ் அறிஞ்சி ஆள ஈசியா மயக்கிடுறாரு... நான் ரொம்ப ரொம்ப கேர்புல்லா இருக்கணும்... 

Tuesday, 17 February 2015

என் உலகம்


ரொம்ப நாள் அப்புறம் வீடு எல்லாம் ஒதுங்க வைக்குற வேலை. எல்லா ரூமும் ஈசியா தூசி தட்டி கழுவி விட முடிஞ்சுது, என்னோட ரூம் தான் அத்தனை பேரையும் திணறடிச்சிடுச்சு...

எல்லாருமே, இந்த மீனையும் குருவிகளையும் உன் அப்பா வளர்க்குற மத்த குருவிகளோட கொண்டு போய் விட்டுடுன்னு சொல்லிட்டாங்க. எல்லாரையும் ஒரு முறை முறைச்சுட்டு யாருமே வேணாம், நானே க்ளீன் பண்றேன்னு சொல்லி, நந்து ஹெல்ப்போட ஒரு வழியா என் ரூமை தலைகீழா புரட்டி ஏதோ சுமாரா க்ளீன் பண்ணி முடிச்சாச்சு.

நளனுக்கும் தமயந்திக்கும் ஏற்கனவே கூடு கட்ட வச்சிருந்த பானைய மாத்தி, புது பானை இன்னும் வசதியா வச்சாச்சு. தமயந்தி ஏற்கனவே ஒரு முட்டை போட்டு அது உடைஞ்சு போச்சு, அதனாலயே இப்போ கூடுதல் வசதி...

குறிஞ்சிக்கும் பிரபாவுக்கும் பழைய கூடு, ரெண்டு பேரும் ஜோடியா செட்டில் ஆயாச்சு. அதுவும் குறிஞ்சி என்னை போலவே கொஞ்சம் திமிர் பிடித்தது. ப்ரபாவ படாத பாடு படுத்திட்டு இருக்கு. வா, வா, இங்க வந்து உக்கார், ஹலோ எனக்கு இந்த இடத்த சுத்தம் பண்ணித் தான்னு ஒரே அலும்பு. ப்ரபா அலுக்காம அது சொல்ற வேலை எல்லாம் செய்யுது.

மந்தாகினி புது கூட்டுல யுவாவோட கொஞ்சம் ஓகே ரேஞ்ச்ல உக்காந்துட்டு இருக்கு. என் ரூம்ல அப்பாவி ஜோடிகள்னா அது இவங்க ரெண்டு பேரும் தான். கூடிய சீக்கிரம் பிள்ளை குட்டிகள் எல்லாம் பெத்துக்கணும்ன்னு வாழ்த்துவோம்...

மருதத்துக்கும் நெய்தலுக்கும் புதுசா தண்ணி மாத்தி, கூடவே உள்ள கொஞ்சம் மண் போட்டு, செடியும் நட்டு வச்சு அழகாக்கியாச்சு. ரெண்டு பேரும் பக்கத்து பக்கத்து மீன் தொட்டியில இருந்து சைட் அடிச்சுட்டு இருக்காங்க. அப்படியே இருக்கட்டும்...

அடுத்த மீன் தொட்டியில ஒரு மினி குளம் ரெடி. பச்சை பசேல்ன்னு பாசிகளோட, நத்தைகளும் ஊர்ந்துட்டு இருக்கு. கூடவே மருதம் நெய்தலோட பிள்ளை குட்டிகளும் நீந்திட்டு இருக்கு. எல்லாமே ரொம்ப குட்டியா இருக்குறதால எத்தனை குட்டிங்கன்னு தெரியல, ஆனாலும் அதுல வெள்ளையா ஒரு குட்டி வேற இருக்கு. அந்த வெள்ளை குட்டி சூப்பரா பெருசாகிடணும்ன்னு நந்து ப்ரே எல்லாம் பண்ணினா...

ஆக மொத்தம் என் ரூம் முழுக்க டூயட் ஒலிக்குது. கூடவே அதுங்க குளிச்சுட்டு லேப் டாப் முழுக்க தண்ணி தெளிச்சு விடுறாங்க...

இப்ப என் ரூமுக்கு வர்றவங்க எல்லாம், இவங்க எல்லாரும் பண்ற சேட்டை பாத்துட்டு நல்லா நேரம் போகுது உன் ரூம் வந்தான்னு பாராட்டிட்டு போறாங்க...


- ஹோம் ஸ்வீட் ஹோம்

Sunday, 15 February 2015

இயற்கை - என்றும் வரம்


என்னை எப்போ பாத்தாலும் நந்து கேக்குற ஒரு கேள்வி, “அது எப்படி அக்கா, உன்னால மட்டும் இந்த ப்ரகதிய ஈசியா அடக்க முடியுது? இந்த குருவிங்க உன்னை பாத்தா பயப்பட மாட்டேங்குது”ன்னு தான்.... 

அதுக்கு காரணம், நான் சின்ன வயசுல வாழ்ந்த சூழலா கூட இருக்கலாம்... 

ஆடு மாடுகள்ன்னு மட்டுமில்ல, எந்த உயிரினமா இருந்தாலும் எங்க வீட்ல கண்டிப்பா அடைக்கலம் உண்டு. ரொம்ப சின்னப் புள்ளையா இருந்தப்ப, (சுமார் பதினஞ்சு வருசத்துக்கு முன்னாடி) எங்க வீட்டை சுத்திலும் காடு தான் இருக்கும். ஒரு பக்கம் கொல்லாங்காடு, இன்னொரு பக்கம் பச்சை பசேல்ன்னு வயல், இன்னொரு பக்கம் மாந்தோப்பு, அது பக்கத்துல தென்னந்தோப்பு, அதுக்குள்ள சின்னதா ஒரு வீடுன்னு ஒரு தோப்பு வாழ்க்கை எங்களோடது. 

இந்த தோப்புகள்ல கிடைக்குற விளைச்சல்கள எப்பவுமே முழுசா பறிச்சு எடுத்தது கிடையாது அப்பா. ஏன் இப்படி பண்றன்னு யாராவது கேட்டா, இங்க இருக்குற மத்த உயிர்களும் சாப்பிடனும் இல்லையான்னு கேப்பார். காய்ச்சு தொங்குற கொய்யா பழங்கள தேவைக்கு மட்டுமே பறிச்சு சாப்பிடணும். மீதி எல்லாம் அணில்களுக்கும், கிளிகளுக்கும் தான். நான் எப்பவுமே அணில் கடிச்ச, கிளி கொத்தின பழங்கள மரத்து மேலயே அதுவும் அதுங்க மத்தியிலயே உக்காந்து சாப்பிடுறது தான் பழக்கம். ஆரம்பத்துல என்னை கண்டா தலைதெறிக்க ஓடவும் பறக்கவும் தான் செய்யும்ங்க, ஆனா போக போக நம்மள எல்லாம் ஒரு பொருட்டாவே மதிக்குறது இல்ல. என்னோட தல மேலயும், கால்லயும் உக்காந்து பழம் சாப்பிடுரதே அதுங்களுக்கு வேலையா போச்சு. 

கொய்யா மரத்து மேல உக்காந்து பாத்தா, பக்கத்துல தென்னந்தோப்புல தேங்கி நிக்குற தண்ணியில பூச்சி, புழு பிடிச்சி சாப்பிட வரும் கொக்குங்க வெள்ளை வெளேர்ன்னு தெரியும். கூடவே இடையிடைல தவுட்டு கொக்கும் இருக்கும். அப்புறம், அதிசயமா எப்பவாவது மீன் கொத்தி வேற வரும். இதுங்கள எல்லாம் வசியம் பண்ண ஒரு டெக்னிக் உண்டு. அது தான் குப்பைமேனி கீரை. எப்பவுமே நானும் தம்பியும் இந்த குப்பைமேனி கீரைய வேரோட பிடுங்கி எங்க பக்கத்துல வச்சுப்போம். அந்த வேரை எப்படியாவது எடுத்துடணும்ன்னு கொஞ்சம் கொஞ்சமா நம்ம கிட்ட ஒட்டி ஒட்டி வர ஆரம்பிச்சுடும். 

இதுங்க இப்படினா, பக்கத்து வீடு, மேல் வீடு, கீழ வீடுன்னு எல்லார் வீட்லயும் பூனைங்க இருக்கும். அதுங்களுக்கு குப்பைமேனி வேர்னா அவ்வளவு இஷ்டம். நம்ம மேல விழுந்து ஐஸ் வச்சு, செல்ல கடி கடிச்சுன்னு எப்படியாவது எங்ககிட்ட இருந்து அத புடுங்கிட்டு போய்டும். 

தோப்புக்குள்ள வளர்ந்து நிக்குற புற்கள  திங்க வர்ற காட்டு முயல்களும் உண்டு. வெள்ளை வெளேர்ன்னு எல்லாம் இல்லாம சாம்பல் கலர்லயும், செவல கலர்லயும் இருக்கும். தோட்டத்துல போடுற காய்கறிகள பறிச்சு தின்னுட்டு ஓடிடும். கிழங்கு வகைகள்னா கேக்கவே வேணாம். முயல் கேரெட் சாப்பிடும்னு புக்ல மட்டும் தான் நான் படிச்சிருக்கேன். ஆனா இங்க உள்ள முயல்கள் எல்லாம் முட்டைகோஸ் சாப்பிடுமே தவிர கேரெட் தின்னு நான் பாத்தது இல்ல. குட்டி குட்டி காட்டு முயல்கள் தான் எப்பவுமே ஜாக்கிரதையா இருக்கும். நம்ம பக்கம் எட்டிக்கூட பாக்காது. 

எங்க ஏரியால குயில்களும் உண்டு. காலை, மாலைன்னு நேரம்காலம் இல்லாம அங்கங்க குயில்கள் பாட்டு பாட கிளம்பிடும். நாங்க மட்டும் விடுவோமா என்ன, கூ.... கூ....ன்னு அதோட பாட்டுக்கு எசப் பாட்டு பாடுவோம். நானெல்லாம் ஒரு பாடகியா உருவெடுக்க இந்த குயில்கள் தான் காரணம். குயிலுக்கு அப்படி என்ன சாப்பாடு நாம குடுத்துற முடியும்? அதுக்கு தான் எங்க தோப்புல நாவல் மரங்கள் நின்னுச்சு. இந்த நாவல் மரத்துல தான் குயில் கூடு கட்டும். 


அடுத்து மண்ணுழுந்தி பாம்புங்க. கட்டையா உருண்டையா, விறகு கட்ட எடுக்க போகும்போது எல்லாம் உள்ள இருந்து நெளியும். ஐயோ பாம்புன்னு கதறாம, சூசூ....ன்னு விரட்டி விடுவோம். இந்த பாம்புக்கு பால் வச்சு வளக்கணும்ன்னு நான் ப்ளான் எல்லாம் வேற போட்ருக்கேன். ஒரு தடவ அசைய முடியாம கிடந்த பாம்ப அலேக்கா தூக்கி பால் கேனுக்குள்ள போட்ட பெருமை என்னையே சாரும். 

மண்ணுளுந்தி பாம்புனா தாங்க எனக்கு பயம் இல்ல, மத்தப்படி இந்த நல்ல பாம்பு, சாரை பாம்புன்னா ரொம்ப பயம். எப்ப எல்லாம் அதுங்க எதுக்க வருதோ அப்ப எல்லாம் அசையாம, பேஸ்மென்ட் கூட ஆடாம அப்படியே நிப்பேன். பாம்பு கண்ண விட்டு மறைஞ்சா போதும், விட மாட்டேனே, ஒரே பாய்ச்சலா பாய்ஞ்சு போய் ரூமுக்குள்ள கதவடச்சுட்டு அலறுவேன் பாருங்க, ஒரு அலறல்.... ஹிஹி... யாருக்கும் தெரியாது, நீங்களும் சொல்லிடாதீங்க... 

தோப்புக்குள்ள நிறைய  கரையான் புற்றுகள் உண்டு. கரையான் புற்றுக்குள்ள பாம்பு இருக்கும்னு பயமுறுத்தினாலும் தைரியமா கைய விடுரவ நான். அப்படியே கைய வெளில எடுக்கும் போது முட்டி வரைக்கும் கரையான் அப்பியிருக்கும். கடி தாங்க முடியாது. ஆனாலும் அத எல்லாம் பொறுத்துட்டு கெத்தா கரையான கொண்டு போற ஈக்காம்பெட்டிக்குள்ள போட்டு எடுத்துட்டு வருவோம். பின்ன, கோழி குஞ்சுகளுக்கு சாப்பிட குடுக்கணும்ல... 

அப்படியே ராத்திரி ஆகிட்டா, ஒரு நார் கட்டில எடுத்து வெளில போட்டு அப்பாவ படுக்க வச்சு, அப்படியே ஜம்முன்னு அவர் வயித்துல ஏறி உக்காந்து, கதை கேட்டுட்டு இருப்போம். திடீர்னு க்கும்..க்கும்ன்னு யாராவது முனங்குற மாதிரி சத்தம் கேக்கும். அப்போதான் அப்பா அந்த பறவைய காட்டித்தருவார். எங்க தோப்புல நாட்டு தென்னை மரங்கள் தான் ரொம்ப அதிகம். அதோட நடுப்பகுதியில பெரிய ஓட்டைகள் இருக்கும். அதுக்குள்ள இருந்து ஒவ்வொருத்தரா வெளில வருவாங்க அவங்க... அவங்கனா, அதாங்க, ஆந்தைங்க. ரசிச்சு பாத்தா, இந்த ஆந்தைங்க ரொம்ப அழகா இருக்கும்.  நான் அப்பா மேல ஏறி உக்காந்தா இந்த அம்மாவுக்கு எப்பவுமே பொறாமை தான். மொறச்சு பாக்குற அம்மா மூஞ்சிய விட அந்த ஆந்த மூஞ்சி அழகா இருக்குப்பான்னு எப்பவும் அம்மாவ வம்பிழுத்துட்டே நட்சத்திரங்கள எண்ணிகிட்டு, நிலவ ரசிச்சுட்டு, அப்பா நெஞ்சுல அப்படியே தூங்கிப் போறது தனி சுகம். 
  
போற போக்குல தண்ணிதொட்டி பக்கத்துல மதமதன்னு கும்பலா நத்தைங்க, கால்கள் மேல ஏறி ஓடுற பூரான், க்ராக் க்ராக்ன்னு கத்துற தவளைங்க, ஒரு மாதிரி பயத்தை உண்டு பண்ற மரவட்டை, செவல நிறத்துல அழகா சிறகு விரிச்சு, கலர்கலரா சைட் அடிக்க வச்சு, நம்மள பின்னாலயே ஓடிவர செய்யும் பட்டாம்பூச்சிங்க, மழை நேரம் வீட்டை நிறைக்கும் ஈசல்கள், ராத்திரி ஆனா கிரிச்கிரிச்ன்னு சத்தம் போடுற பூச்சி, வண்டு வகைகள், பளிச் பளிச்ன்னு வெட்டிட்டு போற மின்மினி பூச்சிகள், இளநி குடிக்க வரும் மரநாய்கள், கொஞ்சமா பயமுறுத்தும் செம்புவம், அங்கங்கே கூடு கட்டுற சிட்டுக்குருவி இப்படி எப்பவுமே எங்களோட உலகம் அழகாவே இருந்துருக்கு... 

இப்ப மட்டும் என்ன, நளன், தமயந்தி, குறிஞ்சி, ப்ரபா, மந்தாகினி, யுவா, மருதம், நெய்தல், கிரிஜா, ப்ரகதின்னு இப்பவும் அழகா தான் இருக்கு.... இது போக ஏகப்பட்ட எக்ஸ்ட்ரா எக்ஸ்ட்ராக்கள்.... சுத்தி முத்தி ரசிங்க பாஸ்.... வாழ்க்க தானா அழகாயிடும்... 

Thursday, 15 January 2015

பொங்கலோ பொங்கல்




வீட்ல பண்டிகைகள்ன்னு கொண்டாடி வருசகணக்கா ஆகிடுச்சு. ஏன் எதுக்குன்னு காரணங்கள் தேடிட்டு இருக்காம, அப்படி அமைஞ்சு போய்டுச்சுன்னே வச்சுக்கலாம். சின்ன வயசுல அவ்வளவு உற்சாகமா கொண்டாடுவோம். சொந்தம் பந்தம்னு எல்லாரும் எங்க வீட்ல தான் கூடுவாங்க. தீபாவளினா சின்னவங்க எல்லாரும் விடிய விடிய வெடி போட்டுட்டு இருப்போம். பெரியவங்க தீபாவளி பலகாரத் தயாரிப்புல ரெண்டு மூணு நாள் முன்னாடியே மூழ்கிடுவாங்க. முறுக்கு, அதிரசம், சீடை, உன்னியப்பம், முந்திரிகொத்து, போளி, லட்டு, மிக்சர், சிப்ஸ், பூந்தி, காரச்சேவு, தேன்குழல், ஜாங்கிரி, அல்வா, கேசரின்னு முடிவே இல்லாம லிஸ்ட் நீளும். அதுவும் கடைசி நாள் வடைகள், பாயசங்கள்ன்னு அதுலயே பல வகை வைப்பாங்க.

அதுவே பொங்கல்னா முந்தினநாளே புது ட்ரெஸ் எடுத்து ரெடியா வச்சுட்டு, கைல, கால்ல மருதாணி வச்சு அலங்கரிக்க ஆரம்பிப்போம். புது ட்ரெஸ் கண்டிப்பா ஒரு பாவாடை சட்டையா தான் இருக்கும். நாலு வருஷம் நானும் தாவணி போட்ட நியாபகம். பசங்க, எவ்வளவு குட்டியா இருந்தாலும் மல்லு வெட்டி மைனர் கெட்டப் தான். மஞ்சள் குலை, கரும்பு, காய்கறி, கிழங்கு வகைகள், பழங்கள் மண் பானை, பூஜை சாமான்ன்னு வீடே தெய்வீகமா இருக்கும். ஆனா அதுல ஒரு சிக்கல் உண்டு, காலைல நாலரைனா தண்ணி தெளிச்சு எழுப்பி விட்ருவாங்க. அப்போ தானே குளிச்சு முடிச்சு ரெடியாக முடியும். வெந்நீர் வேணும்னு அடம்பிடிச்சாலும் கிடைக்காது. அலேக்கா தூக்கிட்டு போய் மோட்டார் போட்டு புது தண்ணி புடிச்சு, அந்த தண்ணி தொட்டிக்குள்ள போட்டுட்டு வந்துடுவாங்க. வெடவெடன்னு வெறயல் கொஞ்ச நேரத்துல பழகிடும். அப்புறம் படபடன்னு ரெடியாகி, சூரியன் எட்டிப் பாக்குறப்ப பொங்கப் பானை பொங்கி அதை வரவேற்கும்.

நமக்கு குலவை எல்லாம் விட்டு பழக்கம் இல்ல, தம்பியும் அம்மாவும் விடுவாங்க. நாங்க எல்லாம் பொங்கலோ பொங்கல்ன்னு கோரஸ் பார்டிங்க. பொங்கல் பொங்கின உடனே அதுக்குள்ள சர்க்கரை தட்டுற பொறுப்பு என்னுது. தம்பி நெய் டப்பாவ கைப்பற்றிருவான். பக்கத்து வீட்டு பசங்க முந்திரி, கிஸ்மிஸ்ன்னு ஆளுக்கொரு தீனியை கைப்பற்றி உள்ள போடுவோம். இதுல நாலு பக்கமும் விறகு வச்சு தீ மூட்ட நாலு கைபுள்ளங்க வேற இருப்பாங்க. பொங்கல் நல்லா வெந்து, பதத்துக்கு வந்ததும் சுட சுட தலை வாழை இலைல வச்சு சூரியனுக்கு படைப்போம். கூடவே அஞ்சாறு வாழை இலை துண்டுல பொங்கல் எடுத்து வச்சு காக்காக்கும் வைப்போம். அந்த காலைலயும் காக்காங்க வரும்னா பாத்துக்கோங்களேன். இப்போ உள்ள காக்காய்ங்க சோம்பேறி போல... வீட்ல ஆறரைக்கு எழும்பி லைட்ட போட்டா ஏண்டி எங்கள எழுப்பி விடுறன்னு மொறைக்குதுங்க இந்த பின்ஞ்சஸ்...

அன்னிக்கி முழுக்க கரும்பு கடிச்சுட்டு, பொங்கல் தின்னுட்டு, கூடவே செய்து வச்ச எல்லா தின்பண்டங்களையும் பிடிச்சதா பாத்து பொறுக்கி பொறுக்கி திங்குறதுலயே வயிறு நிறைஞ்சிடும். அப்புறம் மதியம் ஆனா பருப்பு, சாம்பார், ரசம், மோர் வச்சு கூடவே அவியல், தொவரம், ஊறுகான்னு ஒரு பத்து கூட்டு வகையோட சாப்பாடு ரெடியா இருக்கும். அது மட்டுமா, சேமியா பாயாசம், அடை பாயாசம், பாசிப் பருப்பு பாயாசம்னு வகை வகையா பாயாசம் வேற.

நல்லா திம்போம், ஓடி புடிச்சு விளையாடுவோம், மறுபடியும் திம்போம், அப்பப்ப அலுப்பு தீர குட்டி குட்டி சண்டை, பட்டு பாவாடை, கொலுசு சத்தம் சகிதம் அது ஒரு சங்கீத நாளா இருக்கும். அம்மா தோள் கட்டி கிடக்குறதும், அப்பா கழுத்தை பிடித்து தொங்குறதும் தனி சுகம்.

சமீபத்துல தீபாவளி நேரத்துல தான் நான் முறுக்கு சுட்டேன் (சொன்னா நம்பணும், ஒரே ஒரு முறுக்கு, சுத்தினேன், ஆனா நல்லா வரலன்னு பிச்சு போட்டுட்டேன்). அப்புறம் அடுப்பு பக்கத்துல கூட போனதில்ல. இன்னிக்கி காலைல சோம்பலா தான் விடிஞ்சுது. கார்த்திக் தான் கூப்பிட்டு பொங்கல் வைக்கணும், போய் ரெடியாகிட்டு வான்னு சொன்னார். கார்த்திக் சென்னைல பொங்கல் பொங்க, நான் இங்க இருந்து கேட்டுட்டு தான் இருந்தேன். அப்புறம் மறுபடியும் தூக்கம்.

பத்தரை மணிக்கு அப்பா ரெடி ஆகிட்டியான்னு கேக்க, என்னப்பா விசயம்னு கேட்டேன். ஹோம்-ல போய் பசங்க கூட பொங்கல் வைக்கப் போறேன்னு நீ தானே சொன்னன்னு சொன்னதும், ஆமால, அப்படின்னு பதறி, அஞ்சே நிமிசத்துல வெளில வந்து அப்பா கூடவும் தம்பி கூடவும் வண்டியில ஏறிகிட்டேன்.

நாங்க ஹோம்க்கு போய் சேர்ரப்ப மணி பதினொண்ணே கால் ஆகிடுச்சு. நாங்க போனதும் அந்த ஐயா வாங்க வாங்கன்னு வாசல்லயே நின்னு கூப்பிட்டாங்க. லேட் ஆகிடுச்சுன்னு சாரி கேட்டுட்டு உள்ள எட்டிப் பாத்தேன். பிள்ளைங்க எல்லாம் சிரிச்சாங்க. ஆனாலும் ஏதோ ஒரு அந்நியத்தன்மை இருந்த மாதிரி ஒரு பீல். பின்ன, ரெண்டு வருசமா அந்த பக்கமே எட்டிப் பாக்கலனா?

மடமடன்னு சாமான் எல்லாம் கீழ இறக்கி வச்சு, பிள்ளைங்களுக்கு புது ட்ரெஸ் எடுத்து என்கிட்ட தந்து தம்பி குடுக்க சொன்னான். நிஜமாவே மனசுக்குள்ள கில்டி பீலிங்க்ஸ். இதே பசங்களுக்கு பொங்கல்னா என் காசுல தான் கரும்பு, பொங்கல் சாமான், பழங்கள்ன்னு வாங்கிட்டு போவேன். ட்ரெஸ் அப்பா எடுத்து தந்துடுவாங்க. ஆனா இப்போ நான் எதுவுமே செய்யல, ஆனா என்னை போய் அவங்க கிட்ட குடுக்க சொன்னாங்க. தயக்கமா ஆரம்பிச்சு போக போக கொஞ்சம் சகஜமாக ஆரம்பிச்சுட்டேன். தேங்க்ஸ் அக்கான்னு சொன்ன ஒரு பொடியன நன்றின்னு சொல்லுடான்னு சொன்னேன். நீ எப்பவும் தேங்க்ஸ் தான சொல்லுவன்னு கிண்டல் பண்றான். அட, பார்ரா...ன்னு சிரிக்க ஆரம்பிச்சவ தான். அப்புறம் என்ன, அவங்களோட ஒன்னுமண்ணா ஈசியா கலக்க ஆரம்பிச்சுட்டேன்.

உண்மைய சொல்லணும்னா எல்லார் பெயரும் மறந்த மாதிரி ஆகிடுச்சு. எத்தனை பேர்ன்னு எண்ணி பாத்தேன், பத்து பேர் தான் இருந்தாங்க. மூணு பேர் எங்கன்னு கேட்டா, ஒருத்திக்கு கல்யாணம் ஆகிடுச்சாம், ஒருத்தன் ஹாஸ்டல்ல தங்கி சிஸ்த் படிக்குறான், அங்க பொங்கல் கொண்டாடணும்னு அவனை விடலையாம், இன்னொரு குட்டி பாப்பா, அடாப்ட் பண்ணிட்டு போய்ட்டாங்களாம்.

ஒவ்வொருத்தரையும் கூப்பிட்டு தம்பி சாக்லேட் குடுத்துட்டு இருந்தான். பக்கி, தனியா வாங்கிட்டு வந்துருக்கான் பாருங்க, கிர்ர்ர்ர்.... ஒவ்வொருத்தர் கிட்டயும் உன் பேர் என்ன, என்ன படிக்குறன்னு கேட்டுட்டு இருந்தப்ப, நான் அத எல்லாம் கொஞ்சம் ரீ-கால் பண்ண ட்ரை பண்ணிட்டு இருந்தேன். முதல் வேலையா அவங்க பெயரை எல்லாம் நியாபகப் படுத்தி எழுதி வச்சிக்கணும். எப்படியும் அடுத்த தடவ போகும் போது பெயர் சொல்லித் தான் கூப்பிடணும்.

நட்டநடு வெயில்ல நாலு பக்கம் செங்கல் எடுத்து வச்சு, பானைக்கு மஞ்சளும் குங்குமமும் பூசி, அடுப்பு மூட்டி, பொங்கல் பொங்குறப்ப மணி பனிரெண்டரை. பெரிய பானையா இருந்ததால பொங்கலே மதியம் போதும் போதும்னு ஆகிடுச்சு. அவ்வளவு வயிறு முட்ட சாப்ட்டாச்சு.அப்புறம் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு, மதிய சாப்பாடு ரெண்டரைக்கு சாப்ட்டோம். சமையல் கூடத்துக்குள்ள நான் போகல, ஆனா தம்பி, அங்க இருந்த பெரியம்மா கூட சேர்ந்து சமையல்காரனாகிட்டான். அவன் இங்க வர்றது ரெண்டாவது தடவ தான். ஆனாலும் என்னமோ ரொம்ப தெரிஞ்சவன் மாதிரி சுத்திட்டு இருந்தது எனக்கு பொறாமையா இருந்துச்சு.

ஒரு வழியா போயிட்டு வரோம்டான்னு கைகாட்டிட்டு வண்டியில ஏறினோம். மனசு கொஞ்சம் ரிலாக்ஸ் ஆன மாதிரி பீலிங். ஆனாலும் பழைய சந்தோசங்கள் இன்னும் திருப்பி எடுக்க வேண்டியது நிறைய இருக்குன்னு புரிஞ்சுது. அடுத்த வருஷம், காலைல நாலரை மணிக்கே தண்ணி தொளிச்சு எழுப்பி விட்டு என்னை பொங்கல் வைக்க விரட்டணும். மண் பானை, இயற்கை காற்று, இளம் சூரியன்னு அனுபவிச்சே ஆகணும்.... கூடவே வயல் வரப்புல தழைய தழைய புடவை கட்டி நடந்து போற சுகத்த அனுபவிக்கணும்....



பொங்கலோ பொங்கல்....





Tuesday, 1 July 2014

திருவிழா பாக்க போவோமா?


 
இன்னிக்கி எங்க போறது?

பேசாம ஒரு திருவிழா கூட்டத்துக்குள்ள புகுந்துடுவோமா?

 நம்ம ஊருல திருவிழானாலே அசத்தல் தானே... இப்போ திருவிழா நடக்குதான்னு எல்லாம் கேக்கக்கூடாது, நாம போகணும்ன்னு முடிவெடுத்தாலே கண்டிப்பா திருவிழா நடக்கும்.


சரி, சரி, தாத்தா, பெரியப்பா, சித்தப்பா, அண்ணா, தம்பி, மாமா, மச்சான் எல்லாரும் வெள்ளை வெளேர்ன்னு வேஷ்டி கட்டிக்கோங்க. உங்க கிட்ட இருந்தா பட்டு வேஷ்டி கூட கட்டிக்கலாம். கழுத்துல மைனர் செயினு, விரல்ல அதிரசம் சைசுக்கு மோதிரம், வலது கைல வாட்சு, இடது கைல பிரேஸ்லெட்... ப்பாஆஆ... அசத்துறீங்க...

அட, இங்க பாருங்க, பெரியம்மா, சித்தி, மாமி, அக்கா, தங்கச்சி பாட்டி எல்லாம் நான் சொல்லாமலே ரெடி ஆகிட்டாங்க. அட, பாட்டி கழுத்துல பாம்படம் அசத்தல். தோள் வரைக்கும் காத வழிச்சு நீட்டி உருட்டி உருட்டி பாம்படம் போட்ருக்காங்க. சைஸ்ச பாத்த உடனே ரொம்ப கனமா இருக்கும்னு நினச்சீங்கனா ஐயாம் சோ சாரி, உள்ள மெழுகு வச்சு அடைச்சி வச்சிருக்காங்க. அடேங்கப்பா, சித்தி கழுத்துல அட்டியல பாருங்களேன், என்னா பெருசு. தங்கச்சி, அது என்ன, நெத்திச்சுட்டி டாலடிக்குது? அதுவும் சிகப்பு கல்லுல... இங்க நம்ம அக்கா மூக்குல வைர மூக்குத்தி... ஆள் ஆளுக்கு அசத்துறீங்க... பட்டுப்புடவை சரசரக்க வேகமா வாங்க....

ஹலோ, அங்க யாரு வந்தவங்கள வேடிக்கை பாக்குறது? போங்க சார், போய் திருவிழாவ வேடிக்கை பாருங்க. ரோஸ் கலர்ல பஞ்சு முட்டாய் இருக்கு, மஞ்ச, சிகப்பு, கருப்புன்னு கலர் கலரா சவ்வு முட்டாய் இருக்கு, சுடச்சுட தேன்குழல் ரெடி. இந்த பக்கம் வாங்க, வலது பக்கம் காரச்சேவு அடுக்கி வச்சிருக்காங்க, இடது பக்கம் இனிப்பு சேவு. ஹைய்யய்யோ அதென்ன, மஞ்சயா, உருண்ட உருண்டையா? அது பூந்திங்க. அப்படியேவும் சாப்பிடலாம், கொஞ்சம் பக்குவப்படுத்தி லட்டு பிடிச்சும் சாப்பிடலாம்.

அந்த கார வகைகள் எல்லாம் எங்க இருக்கு? அதோ, அந்த வருசைல இருக்கு. மிக்சர், சிப்ஸ், கிழங்கு வத்தல், ஹே, அதென்ன, கருப்பட்டி முட்டாய். எல்லாமே அசத்தல்.

இந்தாங்க, அண்ணே, பொம்பள புள்ளைங்கள பாக்காதீங்கண்ணே அவங்க பாட்டுக்கு, வளையல், ஜிமிக்கி, தோடு, சாந்து பொட்டு, நெயில் பாலிஷ், லிப்ஸ்டிக்ன்னு வாங்கி குவிச்சுட்டு இருக்காங்க. நீங்க வேணும்னா உங்க வீட்டு புள்ளைங்களுக்கு வாட்ச்சு, ஸ்டோரி புக், துப்பாக்கி, பலூன், யானை பொம்மை, குதிரை பொம்மை, கார் இப்படி ஏதாவது ஒண்ணு வாங்கி குடுங்க.

 சரி எல்லாரும் வாங்க, கொஞ்ச நேரம் ரங்கராட்டினம் சுத்தலாம். மயிலாட்டம், ஒயிலாட்டம்ன்னு வேடிக்கை பாக்கலாம். அங்க என்ன கூட்டம், அட, கபடி விளையாட்டு நடக்குது. கபடி, கபடி, கபடி..... ஹஹா.... கொஞ்ச நேரம் இங்க நின்னுட்டு அடுத்து சறுக்கு மரம் ஏறுரத பாக்க போகலாம். இல்லனா சின்ன புள்ளைங்களுக்கு முறுக்கு கடித்தல் போட்டியும், பலூன் உடைத்தல் போட்டியும் நடக்குது, அங்க போகலாம். என்னது, பாம்பு படமெடுத்து ஆடுறத பாக்க போகணுமா, ஹையய்யோ நான் வரல, எனக்கு பயம். நீங்க போயிட்டு வாங்க...

 ஹோய்.... அங்க பாருங்க, வான வேடிக்கை.... ஹைய் செமையா இருக்குல. இந்த சரவடி போடும் போது மட்டும் கொஞ்சம் காத பொத்திக்கணும். டம், டமால், டுமீல்... வீட்டுக்கு ஒரு துப்பாக்கியும் ரோல் பட்டாசும் வாங்கிட்டு போகணும். எல்லாரையும் ஹான்ட்ஸ் அப் சொல்லி சுட்டு சுட்டு விளையாடணும்...

 சரி, சரி, சாமி பல்லக்குல ஏறியாச்சு. எல்லாரும் கன்னத்துல போட்டுட்டு பக்தி பரவசத்தோட கும்பிட்டுக்கோங்க... எனக்கு உங்களுக்கு எல்லாம் சுத்தி காட்டின டயர்ட்... ரெஸ்ட் எடுக்க போறேன், வரட்டா....