Friday 29 November 2013

மழைக்காலம்



ஹாய் ஹாய் ஹாய் ஹாய்.... எல்லாருக்கும் மணக்க மணக்க ஒரு இன்ஸ்டன்ட் காப்பி வணக்கம். 

கொஞ்சநாளாவே இங்க பயங்கர மழை பெஞ்சுகிட்டு இருக்கு. எப்பவும் ஒரு குளிர், அப்படியே போர்வைய போர்த்திகிட்டா ஒரு இதம், சலசலன்னு கேக்குற மழை சத்தம்ன்னு இப்போதைய நாட்கள் ரொம்ப ரொம்ப ரம்மியமா இருக்கு. 

இந்த மாதிரியான மழைக்காலங்கள்ல கைல சுட சுட பில்டர் காபியோட, ஜன்னல் பக்கமா திரைசீலைய ஒதுக்கி வச்சுக்கிட்டு மேல இருந்து விழுற மழைத்துளியை ரசிச்சுகிட்டே கொஞ்சம் கொஞ்சமா காபிய ஊதி ஊதி குடிக்குறதும் தனி சுகம் தான். 

அதுவே மழைல நனஞ்சுகிட்டே பச்சை பசேல்ன்னு இருக்குற இயற்கைய ரசிக்குற அழகு இருக்கே, வேற எதுவும் அதுக்கு ஈடு கிடையாது. 

புல்வெளிகள பார்க்கும் போது எப்பவுமே குளிச்சுட்டு வந்த மாதிரி ரொம்ப பிரெஷ்ஷா இருக்கும், அத பாத்து நம்மோட மனசுக்குள்ளயும் ஒரு புத்துணர்ச்சி வந்துடுது. குட்டி குட்டியா புற்கள்ல கலர் கலரா பூ பூத்துருக்கும் பாருங்க, அத ரசிக்க தனியா நமக்கு கேமரா கண்ணு தான் வேணும். அத எல்லாம் இன்னும் நல்லா ரசிக்கணும்ன்னா நான் ஒரு ரகசியம் சொல்லித்தரேன், காத கிட்ட கொண்டு வாங்க. அதாவது, அந்த புல் தரைல படுத்துகிட்டு அந்த பூக்கள க்ளோஸ் அப்ல பாத்தோம்னு வைங்க, ஹைய்யோ எவ்வளவு அழகா இருக்கும். ஒவ்வொரு புல்லும், பூக்களோட தனித்தனியா பாக்க அவ்வளவு அழகா இருக்கும். 

பச்சை கிளி, வெட்டுக்கிளி, ராத்திரியில மின்னுற மின்மினி பூச்சி இதெல்லாமே தனி அழகு தான். அதுவும் வெட்டுக்கிளி பச்சை கலருல இருந்தா அத நாங்க பச்சை கிளின்னு சொல்லுவோம். மழை காலங்கள்ல நிறைய வீட்டுக்குள்ள வரும். 

இன்னொரு அழகான விஷயம் கூட இருக்கு, அது தான் எறும்பு புற்று கட்டுறது. மழைல நனைஞ்சு எறும்பு கூடுங்க உள்ள தண்ணி போய்டும். கொஞ்சம் வெயில் அடிச்ச உடனே, உயிரோட இருக்குற எறும்புங்க எல்லாம் சுறுசுறுப்பா புற்று கட்ட ஆரம்பிச்சுடும். ஈர மண்ணை குட்டி குட்டி உருண்டையா இருட்டி, புற்று உள்ள இருந்து வெளில கொண்டு வந்து அதுங்க தள்ளுற அழகே அழகு. அப்படியே உக்காந்து ரசிக்கலாம். 

கொஞ்சம் மழை விட்ட நேரத்துல வயக்காடு வழியா இறங்கி நடந்து பாருங்க, சொர்க்கம் தான். அப்படியே ஏதாவது மரங்கள் கீழ போய் நிக்கும் போது காற்றுல கிளைகள் அசைஞ்சு, இலைங்க மேல இருக்குற மழைத் துளிங்க நம்ம மேல படும் போது வரும் சிலிர்ப்பு இருக்கே அட அட அட.... 

நேத்து பெய்த மழைல இன்னிக்கி மொளச்ச காளான்ன்னு புதுசா யாராவது சேட்டை பண்ணினா அவங்கள பாத்து சொல்லுவாங்க. ஆனா இந்த மழைக்காலங்கள்ல அங்கங்கே திடீர் திடீர்னு முளைச்சு வர்ற காளான் கூட அழகு தான். இந்த காளான்ல கூட எத்தனையோ வெரைட்டீஸ் இருக்கு. இப்போ அதோட பெயர் எல்லாம் எனக்கு மறந்து போச்சு. ஆனாலும், மண்ணுல குட்டியூண்டு வளர்ந்து நிக்குற காளான்ல இருந்து, மரத்துல பெருசா வளர்ந்து நிக்குற காளான் வரை எல்லாமே அழகு தான். பொதுவா, காளான் வெள்ளை கலர்ல தான் இருக்கும். சிலநேரங்கள்ல மஞ்சள், நீலம்னு கலர் கலராவும் காளான் இருக்கும். ஆனா இதெல்லாம் விசக்காளான்கள். ஸ்கூல் படிக்குற வரைக்கும் இந்த மாதிரி நேரங்கள்ல முட்டைக் காளான தேடி தேடி போய் பிடிங்கிகிட்டு வருவோம். அத மேல் தோல் கொஞ்சம் சீவிட்டு, நாலா கத்தி வச்சு கீறி, மிளகா தூளும், உப்பும் வச்சு, வாழை இலைல பொதிஞ்சு வச்சு, சுள்ளி வச்சு நெருப்பு மூட்டி அதுல இந்த காளான சுட்டு எடுத்து சாப்பிடுற டேஸ்ட் இருக்கே, எந்த நான்-வெஜ்ஜூம் பக்கத்துல வர முடியாது. 

அது மட்டுமா, அங்கங்கே ரெஸ்ட் எடுத்துட்டு இருக்குற குருவிங்க, காக்கா, கோழி, கொக்கு மைனான்னு எல்லாமே மழைல நனைஞ்சு போய் அதுகளோட இறகுகள நீவி விட்டுட்டு இருக்கும். கொஞ்சம் அமைதியாவே பறவைகளோட சத்தம் இருந்தாலும், அதுவும் தனி அழகா தான் இருக்கும். 

ஆனா ஒண்ணு, இந்த இடியும் மின்னலும் கூட அழகா தான் இருக்கு, அது எங்கயாவது தாக்குற வரைக்கும். பக்கத்து தோப்பு ஒண்ணுல ஒரு தென்னை மரம் மேல இடி தாக்கி பாவம், மரம் பட்டு போச்சு. ஆங்காங்கே மின் கம்பத்துல இருக்குற தெருவிளக்குங்க வெடிச்சு சிதறுது. ஆனா இத எல்லாம் பாத்தா எப்படி நிலத்தடி நீர் உயரும்? 

முன்னாடி எல்லாம் ஓடைகள் வழியா மழைத் தண்ணி எல்லாம் ஆத்துலயோ, குளத்துலயோ போய் சேரும். அங்கயே தண்ணி தேங்கி, கொஞ்சம் கொஞ்சமா நிலத்துக்குள்ள போய்டும். எவ்வளவு வெயில் இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட அளவு மண்ண தோண்டினா, மண் ஈரமா, ஜில்லுனு இருக்குறத பாக்கும் போது எனக்கு ரொம்ப ஆச்சர்யமா இருக்கும். ஆனா இப்போ எல்லாம் சிட்டீஸ்ல மழை வந்தாலே கஷ்டம் தான். மழைநீர் தேங்கவும் இடமில்லாம, சரியா போகவும் வழியில்லாம மழை இல்லனா குடிக்க கூட நிலத்தடி நீர் கிடைக்காம மக்கள் பாவம் தான், ஆனா இதுக்கெல்லாம் காரணம், சரியா திட்டமிடாம இருக்குறது தானே. எத்தன பேர் பொறுப்போட மழைநீர் சேகரிப்பு திட்டம் செயல்படுத்தியிருக்கீங்க?

எப்போ நான் வெளில போனாலும் மழைல மாட்டிகிட்டா எனக்கு பெரிய அவஸ்தை தான், காரணம் என்னோட உடல்நிலை அப்படி. உடனே சளி புடிச்சுக்கும், அப்புறம் காய்ச்சல், இருமல்ன்னு ஒரு ரெண்டு மாசத்துக்காவது படுத்தி எடுத்துடும். ஆனாலும் நான் மழைல மாட்டிகிட்டா, மழை நல்லா பெய்யட்டும், மண் குளிரட்டும், நிலத்தடி நீர் உயரட்டும்ன்னு தான் வேண்டிப்பேன். தனிநபர் அவஸ்தைய [பாத்தா, இந்த உலகத்துல இருக்குற மற்ற ஜீவராசிகளோட சந்தோசத்த பாக்க முடியாதே. பல பேர் சந்தோசப்படுவாங்கனா, யாராவது கொஞ்சம் அவஸ்தை பட்டு தானே ஆகணும், அதுதானே இயற்கை விதி. 

இப்போ ராத்திரியில சில்வண்டுகளோட ரீங்காரம் அதிகமா இருக்கு. முன்னாடியெல்லாம் தவளைகள் சத்தமும் அதிகமா இருக்கும். அது மட்டுமில்ல, மழைத்தண்ணி விழுற சத்தம் எல்லாம் சேர்த்து ஒரு சங்கீத கச்சேரிய நியாபகப்படுத்துது. ஆனா ஏனோ இப்போ தவளைகள் சத்தத்த கேக்க முடியல. இப்போ கொஞ்சம் கவலையா இருக்கு, ஒருவேளை தவளைகள் இனம் அருகிட்டு வருதோன்னு. கண்டிப்பா ஒரு நாள் இந்த தவளைங்க பத்தி ஒரு தனிப் பதிவு எழுதணும். 

உங்ககிட்ட ஒரு ரகசியம் சொல்றேன், காலைல எழுந்த உடனே முடிவு பண்ணியிருந்தேன், இன்னிக்கி கொஞ்சம் ஜாலியா எழுதணும்னு. ஜாலியா எழுதனும்னா எப்படி? 

சின்ன வயசுல இருந்து இப்பவரைக்கும் நாம எவ்வளவோ சேட்டைகள் பண்ணியிருப்போம். அத இன்ன இன்னன்னு வகைப்பிரிச்சு பாத்தோம்னா அது ஒரு பெரிய லிஸ்ட்டா இருக்கும். அதனால தான் மழைக்காலங்கள்ல நான் பண்ணின சேட்டைகள்ல கொஞ்சமே கொஞ்சம் இங்க சொல்லலாம்னு நினச்சேன். ஆனா, மழைய பத்தி நினச்ச உடனே இவ்வளவு விஷயம் கடகடன்னு கொட்டிடுச்சா, அப்போ என்னோட சேட்டைகள இன்னொரு நாள் சொல்லலாம்னு முடிவு பண்ணிட்டேன். நீங்க ஒண்ணும் பயப்படாதீங்க, எல்லாமே ஜாலியான அனுபவங்கள் தான். அது என்னன்னு தெரிஞ்சுக்கணும்னா கண்டிப்பா நான் எழுதுற வரை காத்திருங்க. 



என்ன காத்திருப்பீங்க தானே..... நான் போய் மழைய ரசிச்சுட்டு வரேன்....

Thursday 28 November 2013

நியாபக மறதி...



வாழ்க்கைங்குறது எப்பவுமே நாம நினைக்குற மாதிரி போறதில்ல. நாம ஒரு ப்ளான் போட்டு வச்சிருப்போம், ஆனா நடக்குறது வேறொண்ணா இருக்கும். இந்த மாதிரி எல்லாரோட வாழ்க்கையிலயுமே நடந்திருக்கும்.

என் அம்மா அடிக்கடி நிறைய விஷயங்கள் சொல்லுவாங்க, அதுல ஒண்ணு, எந்த விசயமா இருந்தாலும் அது நடக்கலையேன்னு வருத்தப்படக் கூடாது, கண்டிப்பா அதுக்கு ஒரு ஆல்ட்டர்நேட் இருக்கும், அப்படியும் இல்லையா, அந்த விஷயம் நமக்கு தேவையில்லாததா இருக்கும், அதான் நடக்கலன்னு நினைச்சுக்கணும்ன்னு சொல்லுவாங்க.

அதே மாதிரி தான் நியாபக மறதி இல்லாதவங்க ரொம்பவே குறைவா தான் இருப்பாங்க. எதையாவது எங்கையாவது வச்சுக்கிட்டு அத தேடி தேடி அலுத்து போன சம்பவம் எல்லோரோட வாழ்க்கைலயும் ஒரு தடவையாவது நடந்துருக்கும்.

எனக்கு நிறைய நியாபக மறதி உண்டு. சில சம்பவங்கள் நடந்ததா இல்லையான்னு கூட நியாபகம் இருக்காது. ஆனா யாராவது ஒருத்தங்க அதை பத்தி நினைவு படுத்த விரும்பி, எடுத்து சொல்ல ஆரம்பிச்சாங்கன்னா அடுக்கடுக்கா அந்த நினைவுகள் எல்லாம் அப்படி அப்படியே நியாபகத்துக்கு வர ஆரம்பிச்சுடும்.

எனக்கு அதிகமா படிக்குற பழக்கமும் கிடையாது. எதையுமே ஆழ்ந்து, அப்படியே மனப்பாடமா எதையும் படிச்சுக்கிடவும் மாட்டேன். ஆனா படிச்ச அந்த விசயத்தோட சாராம்சம் மட்டும் மனசுல தங்கிடும். யாராவது அத பத்தி பேசினா கேட்டுட்டே இருப்பேன். ஒரு பக்கம் அவங்க சரியா தான் சொல்றாங்களான்னு கூர்ந்து கவனிச்சுகிட்டே வருவேன், அவங்க தப்பா சொல்லும்போது, பளிச்சுன்னு அத மறுத்து, அப்படி இல்ல, இப்படின்னு சொல்லுவேன்.

ஆக, எனக்கு எல்லாம் நியாபகம் இருக்குதா இல்லையான்னு எனக்கே தெரியாது, ஆனா அப்படி நியாபகம் வர ஆரம்பிச்சுடுச்சுன்னா கடகடன்னு ஒரு கோர்வையா, அச்சு பிசகாம நியாபகம் வந்துகிட்டே இருக்கும்.

சரி, இதுக்கு இப்போ என்ன? ஏன்? எதுக்கு இத சொல்ல வர்றன்னு கண்டிப்பா நீங்க கேக்கணும்.

ஆரம்ப காலங்கள்ல இந்த நியாபக மறதி வந்தப்போ நான் ரொம்ப குழம்பி போயிட்டேன். பக்கத்துல ஏதாவது ஒரு பொருள் இருக்கும். அம்மா வந்து அத என் கண்முன்னாடியே எடுத்துட்டு போயிருப்பாங்க, ஆனா நான் கொஞ்ச நேரம் கழிச்சு அத மறந்துட்டு அந்த பொருள காணோம்னு கத்த ஆரம்பிச்சுடுவேன். இதனால எனக்குள்ள நிறைய மனக்குழப்பங்கள். ஏன் இப்படி நடக்குது, எனக்கு என்ன ஆச்சுன்னு ரொம்ப தவிச்சு, அதனால தலைவலி வந்து அப்புறம் அதுக்கும் சேர்த்து கஷ்ட்டப்படுவேன்.

நான் பேச ஆரம்பிச்சப்பவே பொய் சொல்லக்கூடாதுன்னு அம்மா சொல்லி சொல்லி வளர்த்ததால பொய் சொல்றவங்கள கண்டாலே எனக்கு பிடிக்காது. அதே மாதிரி நானும் பொய் சொல்ல மாட்டேன். ஆனா இந்த நியாபக மறதி வந்ததுக்கப்புறம், அம்மா உண்மை தான் சொல்லியிருப்பாங்க, ஆனாலும் ஏம்மா பொய் சொல்றன்னு கத்துவேன். நானும் எதையாவது சொல்லிட்டு, நான் அப்படி சொல்லலன்னு சாதிப்பேன். இது எனக்கு பெரிய சவாலாவே இருந்துச்சு.

இந்த பிரச்சனைல இருந்து என்னை மீண்டு வர செய்தது அம்மாவும் அப்பாவும் தான். ஒரு வார்த்தை நான் தப்பா எதுவா சொன்னாலோ, இல்லை காணோம்னு தவிச்சாலோ பொறுமையா அந்த சம்பவத்த நியாபகத்துக்கு கொண்டு வருவாங்க. நானும் டென்சன் ஆகாம யோசிச்சா எல்லாமே நியாபகத்துக்கு வரும்.

ஒருத்தங்களுக்கு கோபம் வரலாம், நியாயமான விஷயங்கள் மீறி அநியாயம் நடக்கும் போது கண்டிப்பா கோபம் வரணும், ஆனா எப்பவும் நம்மோட நிதானத்த விட்டுற கூடாது, அப்பவும் பொறுமையா இருக்கணும்னு அம்மா சொல்லுவாங்க. இதுதான் பல இடங்கள்ல தடுமாறாம நின்னு போராட எனக்கு உதவியா இருந்துருக்கு.

இப்போ எனக்கு இந்த நியாபக மறதி ஒரு பெரிய விசயமாவே இல்ல, ஒரு நிமிஷம் தடுமாறினாலும், கொஞ்சம் பொறுமையா ஆழமா சிந்திச்சு ஒரு மூச்சு விட்டேனா கண்டிப்பா எல்லா விசயமும் எனக்கு நியாபகம் வந்துடும். ஆனா முக்கியமான விஷயம், கொஞ்சமும் தடுமாறிட கூடாது. அப்படியே நியாபகத்துக்கு வரலன்னா என்னாச்சு என்னாச்சுன்னு ரொம்பவே யோசிச்சுட்டு இருக்க கூடாது. அந்த விசயத்த அப்படியே விட்டுட்டு வேற விஷயங்கள்ல கவனம் செலுத்த ஆரம்பிச்சுடணும். அப்புறம், மறந்து போன விசயம் எதோ ஒரு சமயத்துல பளிச்சுன்னு நியாபகத்துக்கு வந்துடும்.

இந்த நியாபக மறதி ஏன் வருது, எதனால வருதுன்னா அதுக்கு பல காரணங்கள் இருக்கு. ஆனா இப்போ நான் அத பத்தி சொல்ல வரல, எனக்கு வர காரணம், நான் எடுத்துகிட்ட சில மருந்துகள். இதனால எனக்கு பார்வை தடுமாற்றம், நியாபக மறதி, மனநிலை மாற்றம்னு ஏகப்பட்ட பிரச்சனைகள். ஆனா இப்போ அத எல்லாம் தாண்டிட்டேன். எவ்வளவோ பேர், இந்த மாதிரி பாதிக்கபட்டுருக்கலாம், ஆனா நாம நினச்சா அத ஜெய்க்கலாம். அய்யோ நமக்கு ஏன் இப்படின்னு பதறுரதுக்கு பதிலா, என்னால இதுல இருந்து வெளிவர முடியும்னு நினச்சு பாருங்க, கண்டிப்பா சாதிக்கலாம்.


நான் இன்னொரு நாள் வரேன், இப்போதைக்கு பை பை...

Wednesday 27 November 2013

நிலவு வழித் தூது...!


ஏ நிலவு பெண்ணே...!

நீயே இந்த வழக்கின் உரையாடலை தீர்த்து வையடி…!

கார் என்றானாம், மாலை தொடுவானமென்றானாம்...
செங்காந்தள் நிரமவள், கற்பின் கனலென்று மகுடம் சூட்டி…
இருள் சூழ்ந்த மாலை நேரத்தில்
மதி மயங்கி கள்ளுண்ட மந்தியானானாம்...!

அத்தனை வர்ணனை
தூது செல்ல உன்னிடத்தில் கொட்டிய
என்னவன், என்முன் வார்த்தைகளின்
பஞ்சம் வர விக்கித்து நின்றதேனோடி...!

உனக்கு தெரியுமா?
வாய் சொல்லில் வீரனடி அவன்…
அவன் அதரம் உதிர்க்கும்
அத்தனை அனர்த்தங்களும்
அர்த்தமாய் தான் போய் விடுகிறது
அவன் கண்கள் ஊடுருவி நோக்கும்
மொத்த பாவையருக்கும்…!

கற்பனை உலகில் அவன் அங்கே
சஞ்சாரம் செய்து கொண்டிருக்க
பாவை என் மனமோ சஞ்சலத்தில் தவிக்குதடி...!

உன் மேகக் காதலனோ கொண்டலாய்
உன்னிடம் நேசம் பொழிந்திட்டான்…!
இங்கொருவனை பார்…
கொண்ட மையல் முழுவதையும்
தையல் உன்னிடம் கொட்டி விட்டு
வார்த்தைகள் தேடிக் கொண்டிருக்கிறான் என்னிடத்தில்...!

அவனிடத்தில் சென்று இதை கூறு
உன் அன்பிற்கினியவள் பசலை பீடிக்க
வெற்றிலை கொடியின்
இடையணைப்பில் கூட
மூச்சுத் திணறுகிறாளென்று...!
ஆம்பல் பூத்த தடாகத்து புல்வெளியில்
கரையிட்ட மச்சமாய் துள்ளித் தவிக்கிறாளென்று...!

அரை நாழிகை பொழுது கூட தலைவன்
பிரிந்து விட்ட காரணத்தால்
அரை நூற்றாண்டாய் வேடிக்கை காட்டுகிறது…!

விரைந்து செல்லடி மஞ்சு கொஞ்சும் வான்மதியே...!
இன்னும் ஒரு நொடி நீ தயங்கி நின்றால்
தலைவனின் பிரிவுணர்ந்த அன்றில் பறவையாய்…
என் தேகக்கூட்டில் உயிர் மட்டும்
மின்மினியாய் கண்சிமிட்டும்…!

நானோ...!

அவன் நினைவு தரும் மயக்கத்தில்
பிச்சியாய் உன்னோடு பிதற்றிக் கொண்டே
இப்படியே கல்லாய் சமைய வேண்டியது தான்…
அவனிருக்கும் திசை நோக்கி...!





- இது ஒரு மறுபதிவு 

Tuesday 26 November 2013

கொஞ்ச நேரம் தூங்கிக் கொள்வோம்.....


எப்பொழுதும் நான் சந்திக்கும் வலிகளிவைதாயினும்
வீரியம் குறையாது, கொஞ்சமும் தளராது
தாக்குதல் ஆரம்பித்து விட்டிருந்தது.

பழகிவிட்டதென ஒதுக்கிவிடவும் வாய்ப்பளிக்காமல்
இம்முறை உன்னை விடவே போவதில்லை,
பாரென ஆக்ரோசமாய் படரத் துவங்கியது.

பற்றுதல் வேண்டி கைகள் உன்னைத் தேட,
எதிர்பார்த்த கண்கள் கண்ணீர் குளம் தேக்கியது.
ஆ...வென கதறிதுடிக்கும் ஒவ்வொரு துடிப்புக்குள்ளும்
வந்து விடு வந்து விடென உயிருன்னை வேண்டியது.

தொலைதூரத்தில் உறங்கியதாலோ என்னவோ
உனக்கென் தேடல் மொழி கேட்கவேயில்லை.

இப்பொழுது யோசிக்கவும் இடங்கொடாமல் அது என்
நரம்பு மண்டலத்தை என்னை ஆளத் துவங்கியது.
மலைப்பாம்பின் சுருட்டல்களுக்குள்
மாட்டிக்கொண்ட மான்குட்டியாய்
அது என்னை கையகப்படுத்தியிருந்தது.

அப்படியே என்னை விழுங்கி விட்டிருந்தால் வேதனை தெரியாது.
இதுவோ, சற்று நேரத்தில் கொஞ்சம் விட்டுபிடிக்க துவங்கியது.
வலி தீர்க்க அமுதம் தேடும் மனநிலையில்லை...

ஒரு துளி விஷம் கிடைத்தால்,
அது என்னை பரமானந்தத்தில் ஆழ்த்தி விட்டிருக்கும்.

ஆத்மா தேடி தவித்த அந்த பொழுதில் தான்
திடீரென நீ வந்தாய்...
கண்திறந்து பாரென் செல்லமே என
கன்னம் தட்டி தவித்திருந்தாய்...
நெற்றியிலே மென்முத்தமிட்டு
அஞ்சாதே, நானிருக்கிறேனென்றாய்...

மார்போடு அணைத்தென்னை உன்னோடு கட்டிக்கொண்டதில்
என்னில் குருதி வேட்டையாடியவன் பின்தங்கியவனானான்...
ஐவிரல் பற்றி நீ என்னை சூடேற்றி கொண்டதில்
இந்த கோழிகுஞ்சு கொஞ்சம் கதகதப்பில் மீண்டது.

புன்னகையொன்று பூக்கிறது உன் பரிதவிப்புக் கண்டு...
இது ஆறுதல் கட்டம்...
எனக்காய் தவிக்கும் உன்னுள் முழுதாய் கரைகிறேன்...
போர்த்திய போர்வைக்குள் இப்பொழுது நம் இருவரின்
மூச்சுக் காற்றுகளும் நலமென சங்கமித்துக் கொள்கின்றன.

கண்கள் சொருகுகிறது... தூங்குகிறேன்...
நீயும் தூங்கு...
நாளை இந்நேரம் மீண்டும்
உன் தேவை எனக்காக மட்டுமேயிருக்கலாம்....



.

என்ன மாதிரி சமூகத்துல வாழ்றோம் நாம???? கடுப்பேத்துறாங்க மை லார்ட்..... (2)


சோம்பல்ங்குறது நமக்குள்ள வந்துடுச்சுன்னா அன்றைய நாள் முழுக்க சோம்பலாவே தான் இருக்குமாம். அப்படி தான் ஒரு பதிவு எழுதணும்னு ஒரு வாரமா யோசிச்சுட்டு இருக்கேன். சோம்பல் வந்து, ஏனோ தடுத்துட்டே இருந்துச்சு. இந்தா காலைல ஒன்பது மணிவரை எதுவுமே தோணாம வெறிக்க வெறிக்க மானிட்டர தான் பாத்துட்டு இருந்தேன். அப்புறமா தான் எழுதுவோம்னு முடிவுக்கு வந்தேன்.

எழுதுவோம்னு முடிவு பண்ணியாச்சு, எத பத்தி எழுதலாம்னு யோசிச்சுகிட்டே என்னோட blog போய் ஒவ்வொருத்தர் பதிவா பாக்க ஆரம்பிச்சேன். அப்போ தான் நம்ம கோவை ஆவி அண்ணாவோட பதிவு கண்ணுல பட்டுச்சு.  அதனால அடுத்தவங்க பதிவ சுட்டு போடுறாங்களே, அவங்களுக்கு மறுபடியும் நானும் ஒரு சூடு வச்சா என்னன்னு தோணிச்சு. (இத பத்தி ஏற்கனவே ஒண்ணு சொல்லியிருக்கேன், அத இங்க போய் பாத்துக்கோங்க)

இந்த மாதிரி சொந்த பதிவுகள சுட்டு போடுறவங்க கிட்ட தொலைச்ச அனுபவம், மூளைய போட்டு கசக்கியோ, இல்ல, மனசுக்கு தோணுறத சுயமா எழுத பழகியோ போஸ்ட் போடுறவங்களுக்கு கண்டிப்பா இருக்கும். மாங்கு மாங்குன்னு ஒரு ரசனையோட அவங்க எழுதுவாங்க, அத அப்படியே சுட்டுட்டு போய் தன்னோடதுன்னு போட்டுட்டு ஜாலியா இருப்பாங்க சில பேரு. அவங்களுக்கு எல்லாம் கண்டிப்பா மனசாட்சின்னு ஒண்ணு இருக்கவே இருக்காது.

நானும் தெரியாம தான் கேக்குறேன், இப்படி அடுத்தவங்க பதிவுகள சுட்டு போடுறீங்களே, உங்களுக்கு மானம், ரோசம், இதெல்லாம் கிடையவே கிடையாதா. ரொம்ப நல்லா இருக்குன்னு அத யாராவது பாராட்டினா, உள்மனசுல உறுத்தல் வரவே வராதா?

ஆனா, சொந்த பதிவ எழுதிட்டு, அத இன்னொருத்தன்/ஒருத்தி சுட்டுட்டு போறத பாத்து எத்தனை நாள் தான் அமைதியா இருக்குறது? இல்லனா மனசுக்குள்ளயே கஷ்ட்டப்பட்டுட்டு இருக்குறது? தப்பு செய்றது நீங்க, அதுக்காக வருத்தப்படுறது மட்டும் நாங்களா? இதெல்லாம் பாத்து கொஞ்சமாவது எங்களுக்கு கோபம் வர கூடாதா? அந்த கோபத்துல அத எல்லாம் தட்டிக் கேக்க கூடாதா?

இப்படி தான் ஒரு சம்பவம் (என்னோட கவிதைய அவங்க சொந்த கவிதை மாதிரி சுட்டு போட்டுருந்தாங்க ஒருத்தங்க) நடந்துச்சு. எதேச்சையா அது என் கண்ணுல பட, அங்க போய் சண்டை போட்டேன். இதோ இங்கயே ஒரு பதிவு எழுதினேன். அப்புறம், அந்த பொண்ணு அந்த பதிவ டெலிட் பண்ணிட்டு போய்ட்டாங்க. நானும் அதோட கொஞ்சம் அமைதியா தான் இருந்தேன். இத்தனைக்கும் அந்த குரூப் (single frame) இத கண்டுக்கவே இல்ல.

அப்புறமா தான் இன்னொரு சம்பவம் நடந்துச்சு. எனக்கு ரொம்ப தெரிஞ்சவங்க, இந்த பேஸ் புக்கால எனக்கு கிடைச்ச இன்னொரு அம்மா, அவங்க எழுதின கவிதைய தான் எழுதினதா ஒருத்தங்க அதே single frame குரூப்ல போஸ்ட் பண்ணியிருக்காங்க. அத வேற சிறந்த கவிதைன்னு செலக்ட் பண்ணி, அத அந்த குரூப் கவர் போட்டோல வாழ்த்து தெரிவிச்சிருந்தாங்க.



இத பாத்துட்டு சொந்தமா எழுதினவங்க மனசு எப்படி கஷ்ட்டப்படும்? அவங்க என்கிட்ட சொன்னாங்க. இத கொஞ்சம் என்ன ஏதுன்னு கேளுடா காயத்ரின்னு (ஏன், அவங்களே அத கேட்ருக்கலாமேன்னு யோசிக்குறீங்களா? அவங்களால அந்த குரூப்ல கமன்ட் போட முடியாது, காரணம் அவங்க அந்த குரூப்ல கிடையாது) .

சரி, இப்போ உங்களுக்கெல்லாம் நியாயமான ஒரு விஷயம் தோணியிருக்கும். ஒரு குரூப் இருக்கு, அதுல ஒருத்தங்க ஒரு போஸ்ட் போடுறாங்க, அவங்க போடுறது அவங்க சொந்த போஸ்ட்டா இல்ல சுட்ட போஸ்ட்டான்னு குரூப் அட்மின்னுக்கு தெரிய நியாயம் இல்ல தானே. அதனால தான் நாம தானே எடுத்து சொல்லணும்னு தான் நான், அங்க ஒரு போஸ்ட் போட்டேன், அது இது தான்.

“இன்னிக்கி நீங்க அப்டேட் பண்ணியிருக்குற குரூப் போட்டோல நீங்க பாராட்டி தள்ளியிருக்குற கவிதைக்கு சொந்தக்காரர் நீங்க குறிப்பிட்ட அம்மணி இல்ல, குரூப் அட்மின் அது என்னன்னு விசாரிச்சு அந்த போஸ்ட்ட டெலிட் பண்ணி, அது பத்தி ஒரு போஸ்ட் போட முடியுமா?”


இந்த போஸ்ட் போட்டதுமே, இந்த குரூப் அட்மின்ஸ் கண்ணுக்கு எப்படியோ தெரிஞ்சுடுச்சு. அதுல ஒருத்தர் Kala Roshan. அவர் வந்து என்ன ஏதுன்னு விசாரிச்சார். இது யார் எழுதினது, அத அவங்க தான் எழுதினாங்கன்னு உங்களால எப்படி சொல்ல முடியும்னு எல்லாம் கேள்வி கேட்டார். நானும், அது ஏற்கனவே போஸ்ட் பண்ணியிருந்த லிங்க் எல்லாம் எடுத்து குடுத்து, இந்த தேதிக்கு முன்னாடி இது வேற எங்கயாவது போஸ்ட் ஆகியிருக்கான்னு கூகிள்ல போய் தேடி பாருங்கன்னு சொன்னேன். அத உண்மையா எழுதினவங்க பெயரும், அவங்க வச்சிருக்குற பேஜ் எல்லாமே அவருக்கு தெரியும். ரெண்டு பேருமே நண்பர் வட்டத்துல இருக்குறவங்க தான்.

சரி, இப்போ நீங்க என்ன தான் சொல்ல வறீங்க, அடுத்தவங்க எழுதினத பகிர்றது ஒரு தப்பா? இந்த மாதிரி காப்பி அடிச்சு போடுறவங்கள எப்படி கண்டுபிடிக்குறது? அது இன்னொருத்தர் பதிவு தான்னு எப்படி நம்புறது? அந்த மாதிரி காப்பி அடிக்குரவங்கள என்ன பண்றதுன்னு ஒரு கேள்வியும் எழுப்பினார். சரியான கேள்விகள் தான்னு நானும் எனக்கு தெரிஞ்ச பதில சொன்னேன்.

அது என்னன்னா “முதல்ல அந்த போஸ்ட் பண்ணினவங்கள இங்க வந்து பதில் சொல்ல சொல்லுங்க, தவறா அந்த போஸ்ட் கவர் போட்டோல வந்துச்சுன்னு ஒரு போஸ்ட் அதுவும் pinned போஸ்ட் போடுங்க, அப்புறமாவது அடுத்தவங்க எழுதினத எடுத்து போடுறவங்க எழுதினவங்க பெயரோட சேர்த்து போடுவாங்க. அடுத்தவங்க எழுத்தை பகிரலாம், தப்பில்ல, ஆனா அது யாரோட எழுத்துன்னு சேர்த்தே பகிரனும்நு சொல்லுங்க, அவங்க பண்ணினது தப்புன்னு சொன்னா அத இந்த குரூப்-ல பகிரங்கப் படுத்துவோம்னு சொல்லுங்க, அப்போ ஒரு ஆரோக்கியமான பகிர்தல் இங்க இருக்கும்”-ன்னு சொன்னேன். இதுல இன்னொருத்தங்க வந்து “இனிமேல் யாருடைய பதிவும் மிக நல்லதெனக் கண்டு பாராட்டி முதல் பதிவா போடுமுன் பதிவாளரிடம் அறிவித்து ஆக்கம் அவங்களது தானான்னு தெளிவு படுத்தினா நல்லது என்கிறது எனது அபிப்பிராயம்”ன்னு சொன்னாங்க. நியாயம் தானே.


அப்புறம் எல்லாம் சுமூகமா முடிய Kala Roshan ஒரு போஸ்ட் போட்டார். அதாவது, நான் கேட்ட கேள்வியையும், சொன்ன பதிலையும் வச்சு, கேள்வியும், பதிலும்னு கவர் போட்டோ ஒண்ணு ரெடி பண்ணி போட்டார். இது கண்டிப்பா காப்பி அடிச்சு போட்டவங்களுக்கு ஒரு பயத்த உருவாக்கும் தானே. ஒட்டு மொத்தமா எல்லாரும் திருந்த முடியாது, திருத்தவும் முடியாதுனாலும் ஒண்ணு ரெண்டு பேர் இத பாத்துட்டு திருந்தியோ, இல்ல பயந்துகிட்டோ இதே தப்ப செய்யாம இருந்தா அது நமக்கு பெரிய வெற்றி தானே...




அப்படா, எல்லாம் நல்லப்படியா முடிஞ்சுதுன்னு நினச்சு சந்தோசமா ஒரு வணக்கத்த வச்சுட்டு வந்தேன்.

இதுவரைக்கும் எல்லாமே சுமூகமா தான் போயிட்டு இருந்துச்சு. ஒரு நல்ல குரூப் அட்மின்னா என்ன பண்ணனும்? ஒரு சம்பவம் நடக்குது, சரி, அது என்ன ஏதுன்னு விசாரிச்சு, அத பத்தி ஒரு முடிவுக்கு வரணும். அதுதானே நியாயம். அத விட்டுட்டு இங்க ஒருத்தர் எப்படியெல்லாம் காப்பி அடிச்சவருக்கு வக்காலத்து வாங்குறார் பாருங்க. யாரவர்னு கேக்குறீங்களா? அவர் தான் single frame-மோட இன்னொரு அட்மின் Mohan PRao.











முதல்ல நடந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவிக்குற மாதிரியே ஆரம்பிச்சார். “இத எல்லாம் நாங்க ரூலாவே சொல்லிக் கொண்டு தான் வருகிறோம், ஆனால் யார் செய்யுறாங்க, எல்லாரும் ஈசியா காப்பி பேஸ்ட் தானே செய்யுறீங்க, உங்க சொந்த பதிவுகள போட முயற்சி பண்ணுங்களேன், அடுத்தவங்களுக்கு வக்காலத்து வாங்கி பக்கத்த ரொப்பி தள்ள வேண்டாமே, ஸ்டேடசே இல்லாமல் போர் அடித்துக் கொண்டு இருந்த பேஜ் உங்க டிஸ்கசனால ரோம்பிடுச்சு இல்லே. உங்க பேரும் பேனர்ல வந்துடுச்சு இல்ல”ன்னும் “காயத்ரி தேவி சொல்வதைபோல் திருடுங்கள் ஆனால் திருடிய இடத்தின் விலாசத்தையும் பெயரையும் போட்டு திருடுங்கள், இல்லையென்றால் சண்டை போடுகிறவர்களின் பதிவு எல்லாம் முக்கியத்துவம் பெற்று விடும்”ன்னும் அவர் சொன்னப்போ தான், நான் காப்பி பேஸ்ட் செய்யுறதாகவும், சண்டை போடுறதாகவும், விளம்பரத்துக்காக தான் இத எல்லாம் பண்ணினேன்னும் அவர் சொல்றார்ன்னு எனக்கு புரிஞ்சுது. சபாஷ்... அப்போ ஒரு விசயத்த தப்பு, அத சரி பண்ணுங்கன்னு எடுத்து சொல்றவங்க எல்லாம் சண்டைகாரங்களா? விளம்பர பிரியர்களா? இது எனக்கு தெரியாம போச்சேன்னு நினைச்சுகிட்டே அங்கயே என்னோட கண்டனத்தை தெரிவிச்சுக்கிட்டு நான் வந்துட்டேன்.

எப்பவுமே, என்னுடைய ப்ரோபைல் தாண்டி, நான் யார்கிட்டயும் வம்புக்கு போறதே இல்ல. அதுவும் என்னோட ப்ரொபைல்ல தேவையில்லாம வந்து கமன்ட் போடுறவங்கள தான் நான் கண்டிப்பேன். யார் எதை பற்றி சொன்னாலும் நானா ஆராய்ஞ்சு அத அறியுற வரை அதை கண்டுக்கவும் மாட்டேன். இது என்னை பத்தி நல்லா தெரிஞ்சவங்களுக்கு தெரியும். இங்க அந்த பெரிய மனுஷன், என்னை பத்தி சொன்னதும் எனக்கு சுர்ர்ர்னு கோபம் வந்துச்சு. ஆனா ஒரு விஷயம், ஒரு தெரு நாய் நம்மள பாத்து குலைக்குதுன்னு வச்சுக்கோங்க, நாமளும் அந்த இடத்துல நின்னே திருப்பி குலைச்சா பாக்குறவங்க நம்மள தான் தப்பா நினைப்பாங்க. அந்த நேரம் நாம அந்த இடத்துல இருந்து வந்துடுறது தான் நல்லது. அதனால தான் நானும் அந்த இடத்த விட்டுட்டு வந்துட்டேன். (இந்த இடத்துல இந்த example சரியா இருக்கும்குரதால இத நான் சொன்னேன், இத யாரையும் புண்படுத்த சொல்லல)

ஆனா இத அப்படியே விடவும் கூடாதே, இந்த இடத்துல இப்படியும் ஒரு ஆள் இருக்கார்ன்னு கண்டிப்பா தெரிஞ்சவங்களுக்காவது எடுத்து சொல்லனுமே, அவங்களாவது ஜாக்கிரதையா இருப்பாங்களே, அதனால தான் நான் அதெயெல்லாம் இங்க சொல்றேன்.

நான் அங்க இருந்து வந்ததுக்கு அப்புறமும் அவரோட மனக்குமுறல் அடங்காம அவர் புலம்புனதையும் நான் இங்க சொல்லணும்ல.

அவர் புலம்பினது இது தான்.

“வயித்தெரிச்சல் யாருக்கு வந்ததுன்னு இந்த ஸ்டேடஸ் படிச்சவங்க எல்லாருக்கும் தெரியும். புகழ் தேடாதவங்கன்னா எதை பற்றியும் கண்டுக்காம விடுறது தான். நாலாயிரம் பேரு குரூப்ல இருக்காங்க, நாப்பது பேர் தான் கமன்ட் போடுறாங்க, அந்த மாதிரி தான்” “இந்த குரூப்ப விட்டு வெளியே போய் டிஸ்கஸ் பண்ணி ரூம் போட்டு டிஸ்கஸ் பண்ணி இங்க கமன்ட் போடுறவங்களும் சில பேர் இருக்காங்க” “இந்த குரூப்போட அமைதியை கெடுக்க நினைக்குற எந்த சக்தியும் ஒன்னும் செய்ய முடியாது என்பதை எங்க குழுவின் அன்பர்கள் ஆதரவு தெரிவிக்கும்”




ஆமா, நான் வயித்தெரிச்சல்-ன்னு சொன்னேன் தான், ஆனா அதுல தப்பு இருக்குறதா எனக்கு தோணல, ஒரு தப்பு நடந்தப்போ அத சுட்டி காட்டி, அத அவங்க சரி பண்ணனும்னு நாம சொன்னது அவங்களுக்கு அமைதிய குலைக்குறதாம். இதுல, அவங்க குரூப்-ல நாலாயிரம் பேர் இருக்குறதாகவும், அவங்க ரொம்ப ஒற்றுமையா இருக்குறதாகவும், அந்த ஒற்றுமைய நான் திட்டம் போட்டு குலைக்க நினைக்குறதாகவும் சொல்லியிருக்கார். ஏங்க, நான் தெரியாம தான் கேக்குறேன், நாலாயிரம் பேர் இருக்க கூடிய இடத்துல அந்த போஸ்ட்ட நாலு பேர் ஒழுங்கா பாத்தாங்களாங்குறதே சந்தேகம் தான். அங்க அவ்வளவு சீரியஸா டிஸ்கசன் போயிட்டு இருக்கும் போதே, என்ன ஏதுன்னு கவனிக்காம, அருமை, அற்புதம்னு ஒப்புக்கு வந்து கமன்ட் போட்டுட்டு போனவங்க தான் அதிகம். இதுவா ஒரு குரூப்போட வெற்றி? யாரும் எதையும் கண்டுக்காம இருக்குறதுல தான் அவங்க ஒற்றுமையா காட்டுறாங்களாயிருக்கும்.

அங்க எந்த அன்பர்கள் குழுவும் ஆதரவு தெரிவிக்கலன்ன உடனே எல்லாத்தையும் டெலிட் பண்ணிட்டார் அந்த பெரிய மனுசர்.

செய்யுறதையும் செய்துட்டு, கொட்ட வேண்டிய வார்த்தைகளையும் கொட்டிட்டு, அப்புறம் அந்த பதிவுகளை டெலிட் பண்ணிட்டா எல்லாம் சரியா போய்டுமா? இந்த மாதிரி ஆகக்கூடும்ன்னு தான் நான் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து எல்லாத்தையும் பத்திரப்படுத்தி வச்சுக்கிட்டேன். இந்த போராட்டத்துல என் பக்கம் இருக்குற நியாயத்த உணர்ந்து பேசினவங்களும் இருக்காங்க. அவங்களுக்கு என்னோட தேங்க்ஸ்.

நியாயமான கோபம் எல்லாருக்கும் வரணும். இல்லனா நாம எல்லாம் உணர்சிகளோட பிறந்ததே வேஸ்ட். இந்த மாதிரி தவறு உங்க கண்ணுக்கும் தெரிஞ்சா தயங்காம சுட்டிக் காட்டுங்க, தட்டி கேளுங்க. அப்படியும் முடியலையா அத பத்தி ஒரு போஸ்ட் போட்டு, அடுத்தவங்கள தட்டிகேக்க ஊக்கப்படுத்துங்க.



நான் இன்னொரு போஸ்ட்டோட இன்னொரு நாள் உங்கள மீட் பண்றேன்...



Monday 25 November 2013

எனக்கென ஒரு நண்பனிருந்தான்...










எனக்கென ஒரு நண்பனிருந்தான்...

எப்படி அவனெனக்கு அறிமுகமானான்
என்பது நினைவிலில்லை.
ஆனால் அது ஒரு மழைக்கால காட்சியாய் இருக்கிறது.
வெயிலென்பது கொஞ்சம் கொஞ்சமாய்
களவு போய் கொண்டிருந்த காலமது.

களத்துமேட்டின் மேல் காளைகள் ஓய்வெடுக்க,
வயல்வரப்புகள் நீர் நிறைத்து கொண்டிருந்தன...
சலசலக்கும் ஓடைகளுக்கிடையில்
கப்பல் ஓட்டி களைத்திருந்த நேரத்தில்
எங்கிருந்தோ வந்தவன் சிநேகமாய் புன்னகைத்தான்.

வசீகரிக்கும் கண்கள் காந்தமாய் கவர்ந்திழுக்க,
அவன் வகிடெடுக்கா உச்சந்தலை
கொஞ்சமாய் கலைத்து விட சீண்டியது.
சிற்சில சம்பாசனைகளுக்குள் அவனென்னை கவர்ந்தே விட்டான்...

கரம் பற்றிக்கொள்ளென விரல் பற்றி
ஒரு பறவையாய் சிறகு விரிக்க வைத்தான்...
மரக்கிளையொன்றில் இறக்கி விட்டு
தனந்தனியாய் பறந்திட செய்தான்...

சிறு கல் கண்டு மிரண்டோடிய என்னை
மலைகள் அழகென உள்ளங்கால் பதித்திட செய்தான்...
பஞ்சு மிட்டாய் இதுவென
மேகம் நடுவில் முகம் புதைத்து சிலிர்க்க வைத்தான்...
தாய் விட்டு பிரிந்த
அணில் பிள்ளைகள் கண்டெடுத்து
தாயாய் என்னை கொஞ்சம் மாற்றிப் பார்த்தான்...
தவழத் தடுமாறும் நாய் குட்டிகள் கொஞ்ச வைத்து
சேயாய் நானும் மாறிடச் செய்தான்..

வயல் வெளிக்குள் நாற்று நட்டோம்...
புல் வெளிக்குள் பூ பறித்தோம்...
மழை வந்து விட்டுச் சென்ற
தூறல்களை வழியெங்கும் சிதறடித்தோம்...

பேசும் கதைகளுக்கு குறைவில்லை
களைப்புகள் என்றும் நெருங்குவதில்லை...
தோளில் நிம்மதியொன்றை புதைத்து வைத்து
நான் இவன் நிழலென நகலெடுத்தேன்...

நண்பன் இவனென இறுமார்ந்த வேளையில் தான்
ஓர்நாள், மொட்டை மாடியில், நிலாவொளியில்
தென்னங்கீற்றுகளின் சாட்சியாக
அவன் காணாமல் போயிருந்தான்....

இன்றிவன் என் துணைவனாகி, என் மகளுக்கு
அம்பாரி சுமக்கும் யானையாகி விட்டிருந்தான்...


Saturday 23 November 2013

பவர் ஸ்டாரோட பிறந்தநாளு..... (பார்ட் – டூ)



ரெண்டு மூணு நாளாவே ரொம்ப சீரியஸாவே பதிவு போட்டுட்டு இருக்க, மக்கா, இது சரியில்ல, நீ பொலம்புனாலும் அழுதாலும், வீரமா வசனம் பேசினாலும் இங்க ஒன்னும் அசைக்க முடியாதுன்னு திடீர்னு ஒரு பல்ப், அதுவும் அறுபது வாட்ஸ் பிரகாசத்துல மண்டை மேலே எரிஞ்சு என்னை உசார் படித்த ஆரம்பிச்சுடுச்சு. சரி, ஏதாவது ஒரு நீதி கதைய எடுத்து, அத அக்கு வேற, ஆணி வேறவா பிரிச்சி மேஞ்சி கைத்தட்டல் வாங்கிடுவமான்னு யோசிச்சப்போ, என்னோட கை, ஒரு பெரிய சுத்தியலா எடுத்து என் மண்ட மேலயே நங்குனு போட்டு, சீரியஸா யோசிக்காத, சீரியஸா யோசிக்காதன்னு சொன்னா கேப்பியா கேப்பியான்னு அடிச்சு துவம்சம் பண்ணிடுச்சு. அவ்வ்வ்வ் சாதாரணமாவே நாம கொஞ்சம் ட்யூப் லைட், இப்போ அடிச்ச அடியில ஒண்ணுமே புரியல.

இப்படியே புரியாம இருந்தா நல்லாயிருக்காதேன்னு யோசிச்சுட்டே இருந்தப்போ தான் நம்ம பவர்ஸ்டார்  பரந்தாமன கால்ல கட்டோட அப்படியே நிக்க விட்ருக்கமேன்னு நியாபகம் வந்துச்சு. அவரு வேற இருக்காரா, எங்க அவருன்னு இல்லாத முடிய இருக்குறதா நினச்சு பிச்சுக்குரவங்களுக்காக, முதல்ல இத போய்படிச்சுட்டு வாங்க.

என்ன, படிச்சாச்சா, பாத்தீங்களா, அந்த ஆளு எவ்வளவு எகத்தாளம் இருந்தா என்கிட்டயே வயலுக்கு போக எரோப்ளேன் கேட்டுருப்பாரு. அதுவும், நான் தண்ணி ஊத்தி வேற வளத்து குடுக்கணுமாம். ஒருநாளு இப்படி தான் பிரெண்ட் ஒருத்தர வழி அனுப்பி வைக்குறதுக்காக ஏர்போர்ட் போயிருந்தோம். பாவம் இந்த மனுஷன் வெட்டியா தானே இருக்கார்னு அவரையும் கூடவே கூட்டிட்டு போயிருந்தேன்.

அங்க போய் சும்மா இருக்காம, அங்க வந்த ஜப்பான் பேமிலிய வேற்றுகிரகவாசி ரேஞ்சுக்கு கற்பனை பண்ணி கிண்டல் பண்ணிக்கிட்டு இருக்காரு. ஆனா அவங்க என்னமோ இவர தான் ஏலியன்ன்னு நினச்சு அவர் கூட நின்னு போட்டோ எல்லாம் எடுத்தாங்க. அட, அப்படி போட்டோ எடுத்துட்டு போனா கூட பரவாலயே, என் கண்ணு முன்னாடியே, அந்த போட்டோவ அவங்க எப்.பில அப்லோட் பண்ணி, “A miracle, we are with an alien”ன்னு டைட்டிலே போட்டு விட்டுட்டாங்க. அதுக்கு ரெண்டு நிமிசத்துக்குள்ள ஐநூறு லைக்கு, நூத்தி முப்பத்தாறு கமன்ட்டு. ஹிஹி நான் கூட ஸ்பாட்டுலயே அவங்க ஐ.டி வாங்கி, பிரெண்ட் ரிகுவஸ்ட் குடுத்து, அவங்கள ஆட் பண்ண சொல்லி, ஒரு லைக் போட்டுட்டுதான் மறுவேலை பாத்தேன்னா பாருங்களேன், பவர் எவ்வளவு தத்ரூபமா இருந்துருப்பார்ன்னு.

சரி, ஒருவழியா பிரெண்ட்ட வழி அனுப்பி வச்சுட்டு திரும்பினா, பவரு வாய ஆ-ன்னு தொறந்து வச்சு அண்ணாந்து பாத்துட்டு இருக்காரு. அட, ஏன், ஏன் இப்படி, வாய மூடுங்க, நாலஞ்சு வவ்வாலு பத்துவாட்டி உள்ளேயும் வெளியேயுமா வந்து போயிட்டு இருக்குன்னு அவர உலுப்புனேன் (ஏர்போர்ட்ல வவ்வாலான்னு எல்லாம் நீங்க வாய திறக்க கூடாது. அதெல்லாம் காட்சிக்கு தேவைனா நாங்க டைனோசரையே கொண்டு வருவோம்). அப்புறமா தான் சிலிர்த்துக்குட்டே சொன்னாரு, இந்த ஏரோபிளேன் எவ்வளவு பெருசா இருக்கு, ஒரு நாளாவது அந்த ஜன்னல் சீட்ட புடிச்சு உக்காரணும்னு. நான் கூட அவருக்கு எப்படியாவது துண்டு போட்டாவது ஜன்னல் சீட் புடிச்சு தரேன்னு வாக்குறுதி குடுத்துருக்கேன். நீங்க எல்லாம் என்னோட நண்பர் படை, நலன் விரும்பிகள்ங்குறது உண்மைனா ஏரோப்ளேன்ல ஒரு கார்னர் சீட் கண்டிப்பா நம்ம பவருக்காக புடிச்சு தரணும். அப்புறம், டிக்கெட் ப்ளாக்ல வாங்கினா கூட பரவால, ஆனா டிக்கெட்டு கலரு வொய்ட்டா இருக்கணும்.

இதுவாவது பரவால, எதோ ஏரோப்ளேன பாக்காத மனுஷன் ஆசைபட்டுட்டார்னு விட்டுடலாம், ஆறு மாசம் முன்னால அவர் பண்ணுன அலும்பு இருக்கே, அப்பப்பப்பா.... ஆத்துக்கு குளிக்க போன மனுஷன், அங்க தேமேன்னு மேஞ்சுகிட்டு இருக்குற எரும மாட்ட பாத்து, நான் இந்த யானை மேல சாவாரி பண்ணியே தீருவேன்னு அடம் பிடிச்சிருக்கார். யோவ், அது எருமையான்னு வடக்கு தெருவுல பன்னி மேய்ச்சுகிட்டு இருந்த பையன் சொன்னதுக்கு, நான் சின்ன புள்ளன்னு நீ என்னை ஏமாத்துறன்னு பக்கத்துல கிடந்த சகதியில விழுந்து கைய கால அடிச்சுக்கிட்டு அழுதுருக்கார். இத எல்லாம் பாக்க சகிக்காம அவர எப்படியோ தூக்கி எரும மேல வச்சிருக்காங்க ஊர்க்காரங்க. யானைக்கு லாடம் எல்லாம் ஒழுங்கா அடிச்சிருக்கீங்களா, ஏன் அலங்காரம் பண்ணலன்னு கேள்வி மேல கேள்வி கேட்டு பக்கத்துல நின்னவங்கள எல்லாம் சாகடிச்சுருக்கார். அவர் ஜாலியா எரும மேல ஒரு ரைடு போயிட்டு வந்துட்டார், ஆனா அந்த எரும தான் பாவம், நாத்தம் தாங்காம குடல பொறட்டிட்டு, செத்தே போச்சாம். இத கேள்விபட்டதுல இருந்து, நான் அந்த எருமைக்கு ஒரு கோவில் கட்டியே ஆகணும்னு முடிவு பண்ணியிருக்கேன். இதுக்கு ஆதரவு தரவங்க, தாராளமா ஐம்பது லட்சம் குறைந்த பட்சம் நிதியுதவி செய்யலாம், அப்படி நிதியுதவி செய்தவங்க பெயர கண்டிப்பா அந்த கோவிலுக்கு போடுற ட்யூப் லைட்ல எழுதி போடுவோம். இத பத்தின மேல் விவரங்கள நாம பப்ளிக்ல பேசினா கண்ணு பட்டுரும், அதனால எல்லாரும் ரகசியமா கூடி கூடி பேசிக்கோங்க.

இந்தா, போன வாரம், பவரு துணியெடுக்க கடைக்கு போனாரே, அதாங்க, அந்த மஞ்ச கலரு சிங்குச்சா... அது எடுக்குறது முன்னாடி பெரிய கலவரத்தையே நடத்திப்புட்டாருங்க. அப்படியா, நீ சொல்லவேயில்லயேன்னா சம்பவ இடத்துல நான் இல்லையே, இந்த விசயத்த நான் இன்னிக்கி காலைல தான கேள்விப்பட்டேன். அப்படி என்னதான் பண்ணாருன்னு கேக்குறீங்களா? ஒரு பொம்பள புள்ள அழகா தலை வாரி, ஜடை பின்னி, பூ வச்சுட்டு  வந்துருக்கு. இவருக்கு, அந்த ஜடை ஒரிஜினலா டூப்ளிகேட்டான்னு சந்தேகம். அட, நேரா போய் கேட்ருந்தா கூட பரவால, நாலு அரை கன்னத்துல சப்புன்னு அறஞ்சதோட விட்ருக்கும், இவரு ஜடைய புடிச்சு இழுத்துருக்காரு, அது கையோட வந்துடுச்சாம். அவ்வளவு தான், அங்கயே அவருக்கு பெருசா ஒரு பூஜைய போட்டு, அப்புறம் விஷயம் வெளில தெரியாம இருக்க எல்லாருக்கும் ஆளுக்கு ஐநூறு ரூபா லஞ்சமா குடுத்து தப்பியிருக்கார். அப்படி ஐநூறு ரூபா லஞ்சம் வாங்கின ஒருத்தர் தான், இந்த விசயத்த ஊர் முழுக்க சொல்லிட்டு திரியிறாரு. அப்படி தான் என் காதுக்கும் வந்துச்சு.

இத்தகைய சிறப்பு வாய்ந்த, பெருமை வாய்ந்த நம்ம பவருக்கு பொறந்தநாளு (எப்படி தலைப்ப டச் பண்ணினேன் பாத்தீங்களா?). இந்த தடவையாவது பொறந்தநாள நல்ல படியா கொண்டாடணும். நீங்க, உங்களால முடிஞ்ச பிறந்தநாள் பரிசுகள, பொன்னாவோ, வெள்ளியாவோ, காராவோ, பைக்காவோ, இல்ல நிலபத்திரம், வீட்டு மனை, மாடி வீடு, இப்படி எதுவா வேணும்னாலும் குடுக்கலாம். பவர் அத வேணாம்ன்னே சொல்ல மாட்டார்.


நான் இத பத்தின ஒரு பொதுகுழு கூட்டம் போட வேண்டியிருக்கு, வரட்டா.... 

பின் குறிப்பு: இந்த பால்வடியுற முகத்த நெட்டுல இருந்து தான் சுட்டேன் 

Thursday 21 November 2013

கோர்க்கத்துடிக்கும் ஆசைகள்...!

சுகமும் துக்கமும்
கலந்து விரைகின்ற மேகக் கூட்டத்திற்கிடையில்
துருவ நட்சத்திரமாய் நீ...!

அர்த்தமற்றதாய் கழிந்து செல்லும் நாட்காட்டியில்
உன் நினைவுகள் மட்டும்
ஏதோ ஒரு அர்த்தத்தை
கற்பித்துக் கொண்டிருக்கிறது...!

காற்றின் மெல்லிய உணர்வுகளோடு
உன் வாசம் தாங்கிய நினைவுகள்
என்னில் கண்ணாமூச்சி ஆடி
தோற்றுபோய் வெளிப்படுகிறது...!

சட்டென பெருமழையொன்று அடித்துவிட்டு
ஓய்ந்தது போல்
கனவுக்குள் நீ தோன்றி புன்சிரிப்பை தந்து விட்டு
கண்மணிக்குள் மறைந்து கொள்கிறாய்...!

பல நேரங்களில்
என் நெற்றிப்பொட்டில்
பதியப்படும் ஈரங்களில் தான்
உன் மொத்த அன்பும்
கொட்டிக் கிடக்கிறது...!

நீ பேசிய வார்த்தைகளை கோர்க்க நினைக்கிறேன்...
சடசடவென உதிர்ந்தே விடுகிறது
சற்றும் ஈரமில்லாமல்.....
மனம் மட்டும் குதூகலமாய்...!

காத்திருக்கிறேன்....
காத்தே கிடக்கிறேன்...
காதோரம் உன்னிடம் ரகசியம் சொல்ல...!




-இது ஒரு மறுபதிவு


Wednesday 20 November 2013

இணையத்தில் திரியும் ஓநாய் கூட்டங்கள்


சில விஷயங்கள் நாம பாத்தா அழகா இருக்கும், சில விஷயங்கள் கேட்டா அழகா இருக்கும். அப்படி தான் காலைல வீட்டு பக்கமா வந்து நின்ன மினி பஸ்ல இருந்து “மார்கழி பூவே, மார்கழி பூவே, உன் மடி மேலே ஓரிடம் வேண்டும்”ன்னு பாட்டு கேட்டுச்சு. உடனே மனசு உற்சாகம் ஆகிடுச்சு. அந்த உற்சாகம் உங்களுக்கும் வர வேண்டாமா? வாங்க அப்படியே உற்சாகத்தோட ஒரு வணக்கத்த வச்சுப்போம்.

அப்புறம், நாளைக்கு என்ன பதிவு போடலாம்னு நேத்து உக்காந்து யோசிச்சப்போ சோம்பல் வந்து என்கிட்ட அத நாளைக்கு பாத்துக்கலாம், இப்போ தூங்குற வழிய பாருன்னு மிரட்டோ மிரட்டுன்னு மிரட்டிடுச்சு. நானும் அதுக்கு பயந்துகிட்டு பம்மிகிட்டே போய் தூங்கிட்டேன். காலைல எழுந்து ஏதாவது பழைய கவிதை ஒன்ன ரீ-போஸ்ட் போடலாம்னு தான் இருந்தேன், ஆனா அதுக்குள்ள ஒரு விஷயம் கண்ணுல தட்டுபட்டுடுச்சி. அதென்ன விசயம்னு கேக்குறீங்களா? இந்தா அது பத்தி தானே சொல்ல வரேன், முழுசா படிங்க....

நானும் இந்த பேஸ் புக் வந்து கிட்டத்தட்ட வருஷம் மூணரை ஆகுதுங்க. நான் இங்க வந்தப்போ எல்லாருமே கொஞ்சம் ஒற்றுமையா ஜாலியா பழகிட்டு இருந்தாங்க. அதனால இங்க நான் பெரிய அளவுல மன உளச்சல அடைஞ்சதில்ல. ஆனா அத விட பெரிய ஆபத்துல சிக்கியிருக்கேன். அத பத்தி அப்புறமா ஒருநாள் கண்டிப்பா டீடைலா சொல்றேன். இப்போ நான் சொல்ல வரது பொண்ணுங்கள குறி வச்சு அவங்களுக்கு மனரீதியான தொல்லை குடுக்குற சில வக்கிரம் பிடிச்ச ஓநாய்ங்கள பத்தி.

இது நடந்து கிட்டத்தட்ட ஆறு மாசம் இருக்கும். நான் யூ.ஜி படிக்குறப்பவே அப்பா கைய எதிர்பார்க்காம சின்ன சின்னதா ப்ராஜெக்ட் பண்ணி குடுத்து அதுல இருந்து வர்ற காச என்னோட மனசுக்கு பிடிச்ச மாதிரி செலவு பண்ணி பழக்கம். இது என் அம்மா கத்து குடுத்தது. உனக்கு அடுத்தவங்களுக்கு உதவணும்னு தோணிச்சுனா அப்பா காச எடுத்து குடுக்கணும்னு நினைக்க கூடாது, நீ சம்பாதிச்சு குடுக்கணும்ன்னு அம்மா தான் இந்த ஐடியாவே எனக்கு சொல்லி குடுத்தாங்க. அதுல இருந்து நானும் அதையே பாலோ பண்ணிக்கிட்டு வரேன். நான் பி.ஹச்.டி ஜாயின் பண்ணப்போ ஒரு பொண்ணு எனக்கு அறிமுகம் ஆனா. அவளோட ஒவ்வொரு நடவடிக்கையையும் பார்க்கும் போதும் எனக்கு அப்படியே என்னை பாத்த மாதிரியே இருக்கும். அதனால அவள எனக்கு ரொம்ப பிடிக்கும். அப்போ தான், அவளுக்கு பீஸ் கட்ட முடியாத சூழ்நிலை, அதுக்கு மேல அவளால படிப்ப தொடர முடியாதுன்னு தெரிஞ்சுது. நான் ஏன் அவளுக்கு உதவக் கூடாதுன்னு கைல இருந்த காச அவ கிட்ட குடுத்துட்டேன். காசே இல்லாம நான் இருந்து பழக்கமில்ல. அதனால நான் ப்ராஜெக்ட் எழுதி தரேன், யாராவது தேவைனா சொல்லுங்கன்னு என்னோட எப்.பில ஆறு மாசம் முன்னாடி ஒரு ஸ்டேடஸ் போட்டேன்.

அதுல தான் ஒருத்தன் வந்து ஒரு கமன்ட் போட்டான், நான் நீங்க சொல்ல வரது எனக்கு புரியலீங்கன்னு அடுத்த கமன்ட் போட்டேன். அவ்வளவு தான், அவன் இன்பாக்ஸ் வந்துட்டான் (அதர்ஸ் போல்டர்ல தான், காரணம் அவன் என் பிரெண்ட் லிஸ்ட்ல கிடையாது). வந்தவன் ஹாய் டின்னு ஆரம்பிச்சான். சும்மாவே எனக்கு நல்லா தெரிஞ்சவங்க யாராவது டி-ன்னு சொன்னா சூர்ருனு கோபம் தலைக்கு ஏறும். இவன் என்ன பாத்து எப்படி சொல்லலாம்ன்னு கடுப்பாகிட்டேன் (நீ மட்டும் அவன், இவன்ன்னு சொல்லலாமான்னு கேட்டீங்கனா, இவனுக்கெல்லாம் மரியாத குடுத்தா தான் தப்பு). அப்பவே அவன உண்டு இல்லைன்னு ஆக்கியிருப்பேன், ஆனாலும் அந்த நேரம் வேற வேலைல இருந்ததால அப்படியே விட்டுட்டேன்.

அப்புறம், பிசில நான் அப்படியே அந்த விசயத்த மறந்தாச்சு. ஒரு வாரம் கழிச்சு அதர்ஸ் போல்டர் பக்கம் போனா, அந்த பொறம்போக்கு தொடர்ந்து எனக்கு மெச்சேஜ் அனுப்பிகிட்டே இருந்துருக்கான். அத்தனையும் வெளில சொல்ல முடியாத வார்த்தைகள். அதுலயும், உனக்கு பயமா இருந்தா வேற ஐ.டி தரேண்டி, அங்க வந்து பேசிடின்னு எனக்கே ஐடியா வேற குடுக்குறானாமாம். இவன ப்ளாக் பண்ணிட்டு போக எனக்கு கண்டிப்பா அதிக நேரம் ஆகாது. ஆனா இவன் எத்தன பேர் இன்பாக்ஸ்-ல இந்த மாதிரி பேசியிருப்பான். எத்தன பேர் வெளிலயே சொல்ல முடியாம மனசுக்குள்ள வெந்து போயிருப்பாங்க. அதனால தான் நான் அவன ரிபோர்ட் பண்ணி அப்புறமா ப்ளாக் பண்ணினேன். அதோட விடாம அவன் ஐடிய குறிப்பிட்டு ஒரு ஸ்டேடஸ்-ம் போட்டேன்.

அப்புறமா தான் தெரிஞ்சுது, அந்த பொறுக்கி இன்பாக்ஸ்ல வந்து பேசினான். சில பொறுக்கிங்க ஸ்டேடஸ்லயே வந்து அதோட புத்திய காட்டுதுங்க. ஒருத்தர் அவன் அப்படி என்ன பேசினான்ன்னு ஸ்க்ரீன் ஷாட் எடுத்து இங்க போடு, அப்படி என்ன இருக்குன்னு பாக்கலாம்னு கேக்குறார் (பெரிய மனுசர் அக்கறைல கேக்குறாராம்). இன்னொருத்தன் அவன் கிட்ட அவனுக்கு ஏத்த மாதிரி பேசி அவன் நம்பர் வாங்குன்னு ஐடியா குடுக்குறான். அவன் தான் சாக்கடைன்னு தெரியுது, இதுல நாம வேற அவனுக்கு ஏத்த மாதிரி வளைஞ்சி போகணுமாம். இதுல என் மேல அக்கறை உள்ளவங்க, பதறிக்கிட்டு தயவு செய்து ஸ்க்ரீன் ஷாட் போட்டுடாதன்னு தனியா வந்து சொன்னாங்க. அந்த அளவு நானும் முட்டாள் இல்லன்னு நானும் அவங்களுக்கு பதில் சொன்னேன். கொஞ்சம் நிம்மதியா போய்ட்டாங்க.

அடுத்து என்ன பண்றதுன்னு தெரியாம இருந்தப்போ தான் என்னோட பிரெண்ட் எனக்கு ஹெல்ப் பண்றதா சொன்னாங்க. இந்த மாதிரி ஆட்கள உளவியல் ரீதியா தான் அணுகணும்ன்னு சொல்லிட்டு போனவங்க, அப்புறமா அவனை பற்றி சொன்ன விஷயங்கள் கேட்டு எனக்கு தலை சுற்றி போச்சு.

அவன் ஒரு சாப்ட்வேர் நிறுவனத்துல மலேசியாவுல வேலை பாக்குறானாம். ஊருல அம்மா, மனைவி குழந்தைகள் எல்லாரும் இருக்குறாங்களாம். இவனோட பொழுது போக்கே குத்துமதிப்பா பொண்ணுகளுக்கு தூண்டில் போட வேண்டியது, ஒண்ணு அவங்க வழிக்கு வந்தா அப்படியே அவங்க கிட்ட பேசிகிட்டு, அலுக்குறப்போ அவங்க அக்கௌன்ட் வாங்கி அத ஹாக் பண்ண வேண்டியது, ரெண்டாவது, வழிக்கு வராத பொண்ணுங்ககிட்ட வேற ஐ.டில வந்து, நல்ல பையனா பேசி, அவங்களோட நட்ப்ப சம்பாதிச்சு, அவன் மேல நம்பிக்கைய வர வச்சு அவங்க ஐ.டிய ஹாக் பண்றது, மூணாவது, பாக்க கொஞ்சம் அழகா இருக்குற பசங்க கூட நல்லவனா பேசி, அவங்க கிட்ட நட்பா இருந்து அவங்க ஐ.டிய ஹாக் பண்றது. இதெல்லாம் அவன் பொழுது போக்காவே பண்ணிக்கிட்டு இருக்கானாம்.

அப்படினா, இவன் யூஸ் பண்ற ஐ.டிக்கள் யாரோ ஒருத்தருடைய ஒரிஜினல் ஐடிக்கள். அவங்க போட்டு வச்சிருக்குற பெர்சனல் போட்டோஸ், அவங்க நட்பு வட்டம்னு எல்லாமே இவன் கைல. இதனால இன்னும் அதிகமா பல பேர் அவன ஒரிஜினல்ன்னு நம்பி அவன் கிட்ட பழகுவாங்க.

கேக்க கேக்க எனக்கு தல சுத்திடுச்சு. அப்படினா நாம நம்மோட பிரெண்ட்ன்னு ஒருத்தங்கள நினச்சா, அவங்க ஐடி இன்னொருத்தன் கைக்கு போக வாய்ப்பு இருக்கான்னு. இந்த மாதிரியெல்லாம் கூட நடக்குமான்னு நான் ரொம்பவே குழம்பி போயிட்டேன். அப்போ தான் என் பிரெண்ட் சொன்னாங்க, அவனோட குறிக்கோள் எதுவா வேணா இருக்கலாம், ஆனா அவன் கிட்ட பேசுறவங்களோட டீடைல்ஸ் எடுத்து வைக்குறதோட இல்லாம அவங்க போன் நம்பரையும் அவன் வாங்கி வச்சுக்கிறான். இதனால அவனால பாதிக்கப்பட்ட பெண்களால பயந்துகிட்டு வெளில சொல்ல முடியாம தவிக்குறாங்கன்னு. அவன் ஹாக் செய்யப்பட்ட ஒரிஜினல் ஐ.டியில போய் பேசுறதால, அவன் மேல சந்தேகம் வர்றது குறைவுன்னும், பெண்கள் ஐ.டில ஆண்கள்கிட்டயும், ஆண்கள் ஐ.டில பெண்கள் கிட்டயும் பேசுறான்னும் சொன்னாங்க.

இது நடந்து ஆறு மாசத்துக்கு அப்புறம், என் கிட்ட அவன் பேசின ஐ.டிய ரிபோர்ட் குடுத்ததால எப். பி அத முடக்கிடுச்சு. ஆனா அவன் வேற ஐ.டில இப்போ வேற பெண்கள் கிட்ட பேச முயற்சி பண்ண ஆரம்பிச்சுட்டான். சமீபத்துல என்னை மாதிரியே ஒருத்தங்க இத பத்தி ஸ்டேடஸ் போட. அது என்ன ஏதுன்னு நான் விசாரிக்குறப்போ தான், அதே ஆள் தான்ங்குறது தெரிய வந்துச்சு.

இப்போ நாம எச்சரிக்கையா இருக்க வேண்டியது இதுதான், இது நான், இது என் அம்மா, இது என் மனைவி, இல்ல தங்கை, இல்ல கணவர், இது என் குடும்பம்ன்னு யாராவது நம்ம கிட்ட அவங்க பேஸ் புக்ல இருக்குற போட்டோஸ் காட்டினாலும் அத எல்லாம் நம்பி, நம்மோட டீடைல்ஸ் தயவு செய்து யாரும் குடுத்துடாதீங்க. இந்த மாதிரி நம்பிக்கைய ஊட்டி நம்மோட ஐ.டிய திருடி, நம்மோட குடும்பத்த தன்னோடதுன்னு இன்னொருத்தங்க கிட்ட சொல்லிட்டு இருப்பான் ஒருத்தன். இங்க யாரை நம்புறது, யாரை நம்பக்கூடாதுன்னே தெரியாம தலைய புடிச்சுக்குற நிலைமை தான்.

அப்படினா, இதுக்கெல்லாம் வேற வழியே இல்லையா? இவன் மாதிரி ஆட்கள தண்டிக்க வாய்ப்பே இல்லையானா கண்டிப்பா இருக்கு. இங்க பிரச்சனையே, எல்லோரும் அவங்கவங்களுக்கு வராத வரை நமக்கென்னன்னு இருக்குறதும், பிரச்சனை வந்தவங்களும் வெளில தெரிஞ்சா நமக்கு தான் அவமானம்ன்னு நினைச்சுக்கிட்டு அமைதியா இருக்குறதும் தான் அந்த மாதிரி ஆட்கள் தப்பு செய்ய ஈசியா வழி அமைச்சு குடுக்குது.

இதுக்காகவே இப்போ பேஸ் புக்ல தனியா இணைய பெண்கள் பாதுகாப்பு குழு-ன்னு ஒரு பேஜ் ஆரம்பிச்சிருக்காங்க. அத ஒரு சங்கமா மாற்ற முடிவெடுத்துள்ளதாகவும் தெரிவிச்சிருக்காங்க. இத பத்தி விரிவான ஒரு விளக்கத்த நாம அடுத்த பதிவுல பாக்கலாம். இப்போ இத படிக்குற நீங்க எப்.பில இருந்தா கண்டிப்பா இந்த பக்கத்த லைக் பண்றதோட இல்லாம இவங்களுக்கு தேவையான ஒத்துழைப்பும் குடுங்க. நாம ஒண்ணா, ஒற்றுமையா இருந்தா கண்டிப்பா இந்த மாதிரி ஆட்களுக்கு ஒரு பயம் வரும். அப்படி ஒரு பயத்த நாம காட்டிட்டாலே சில பயந்தாங்கொள்ளி குற்றவாளிங்க திருந்திட வாய்ப்புண்டு. மீதி இருக்குற சமூக விரோதிகள நாம சட்டத்தோட பிடியில கூட கொண்டு போய் நிறுத்தலாம்.


வாங்க, இப்போ முதல் அடி எடுத்து வைப்போம்.

.

Monday 18 November 2013

நல்லத்தங்காள் - ஒரு அலசல்



கவிதை எழுதுரதுங்குறது ஒரு மாதிரி போதை. சில பேர் அதுல ரொம்ப கைதேர்ந்தவங்களா இருப்பாங்க. அவங்க நினச்சா உடனே அடுத்த நிமிஷம் வார்த்தைகள் அவங்களுக்கு வசப்படும். ஆனா எனக்கு அப்படி இல்ல, அதுவா அமையணும், அப்படி அமைஞ்சுட்டா வார்த்தைகள் என்னோட வசம் வரதுல தயக்கமே இருக்காது. ஆனாலும் ரொம்ப நாள் எதுவுமே எழுதாம இருந்தேன். எதோ ஒரு தேக்கம். எப்பவுமே நான் சொல்லுவேன், இதே மாதிரி ஒரு தடவ நான் எழுத முடியாம போனப்போ கார்த்திக்கோட கவிதை தான் என்னை மறுபடியும் எழுத தூண்டிச்சுன்னு. அது தான் இப்பவும் நடந்தது. மறுபடியும் கார்த்திக் எழுதின ஒரு கவிதை என்னை மறுபடியும் இந்த பாலையாய் ஒரு வெற்றுக் கேவலை எழுத தூண்டுச்சு. எல்லோரும் ஒரு தடவ படிச்சு பாத்து அத பத்தின உங்களோட கருத்துக்கள தயங்காம சொல்லுங்க. எந்த கவிதை இத எழுத தூண்டிச்சுன்னும் நீங்க தெரிஞ்சுக்கணும்ல, அப்போ இதையும் படிங்க, படிச்சுட்டு கருத்து சொல்லுங்க.

சரி, இப்போ விஷயம் இது இல்ல, நான் சொல்ல வந்தது வேறொரு விஷயம் பற்றி. இந்த கவிதை பத்தி பிரகாஷ் அண்ணா கூட டிஸ்கஸ் பண்ணிட்டு இருந்தப்போ அவங்க நல்லத்தங்காள் கதை பத்தி சொன்னாங்க. அது என்ன விசயம்னு இன்னொரு நாள் பாக்கலாம். இப்போ, நான் எழுதப் போற இந்த பதிவு எனக்கு நல்லதங்காள் கதைல வந்த பல சந்தேகங்களை பத்தினது.


என் அம்மா சின்னப் பொண்ணா இருக்குறப்போ அவங்க ஊர்ல பாவை கூத்து எல்லாம் போடுவாங்களாம். தாத்தா வீட்ல தான் அந்த டீம் வந்து தாங்குவாங்களாம். அதனால அம்மா எனக்கு நல்லத்தங்காள் கதை எல்லாம் நான் சின்ன வயசா இருந்தப்போ சொல்லியிருக்காங்க. அப்போ எனக்கு அந்த கதைல பெரிய அளவு சுவாரசியம் இருந்ததில்லன்னு தான் சொல்லணும். அம்மா அத பத்தி சொன்ன உடனே “போம்மா, யாராவது அவங்க பெத்த புள்ளைங்கள கொல்லுவாங்களா? இனி இந்த கதைய சொல்லாத”ன்னு ஓடிடுவேன்.

அப்புறமா அம்மாவும் அந்த கதையை சொல்றதில்ல, நானும் நாலு நாள் முன்னாடி பிரகாஷ் அண்ணா அதை பத்தி பேசுற வரைக்கும் அதை பத்தி நினைச்சுப் பாத்ததும் இல்ல.


இப்போ, நல்லத்தங்காள் என் மனசுக்குள்ள வந்து மொத்தமா உக்காந்தாச்சு. ஒரு பொண்ணு, அதுவும் ஏழு குழந்தைகள பெத்த ஒரு பொண்ணு, எவ்வளவு மனக்காயம் அடஞ்சுருந்தா அவளோட குழந்தைகள அவளே கொன்னுருப்பா? அவளோட மனஉறுதி அப்போ எப்படி பட்டதா இருந்துருக்கும்?

நல்லத்தங்காள் கதைய பத்தி அம்மாகிட்ட இப்போ கேக்க முடியாது. கூகிள்ல தேடி பார்க்கலாம்னா எனக்கு ஏனோ சரியான ஒரு விடை கிடைச்ச மாதிரியே இல்ல. அதனால நான் என்னோட பேஸ் புக்-ல இத பத்தி ஒரு ஸ்டேடஸ் போட்டேன். பிரகாஷ் அண்ணா ஒரு பி.டி.எப் பைலும் கீற்று டாட் காம்ல வந்த நல்லத்தங்காள் கதையோட லிங்க்கும் தந்தாங்க. அப்புறம் ரவி சங்கர் அண்ணா, லியாகத் அலி சாச்சா, மீரா அம்மா, பிரேமா வெங்கட் இவங்க எல்லாம் அவங்க அவங்களுக்கு தெரிஞ்ச லிங்க்ஸ் குடுத்தாங்க. அத எல்லாம் வச்சு படிச்சு பாத்தப்போ எனக்கு அதுல கொஞ்சம் சந்தேகம் வந்துச்சு.

அது என்னென்ன சந்தேகம்னா...

1. இந்த கதை நடைபெற்றதா சொல்ற இடம் எது? 

2. நல்லத்தங்காள் பிறந்த ஊருக்கும் திருமணம் முடிந்து போன ஊருக்கும் உள்ள தொலைவு எவ்வளவு? 

3. நல்லதங்காளுக்கு ஏழு குழந்தைகளாம். அப்படினா சம்பவம் நடக்குறப்போ அவங்க வயசு என்ன இருக்கும்? 

4. ரொம்ப பெரிய பஞ்சம் வந்துச்சுன்னு சொல்றாங்க, அப்படினா பக்கத்து பக்கத்துக்கு ஊர் காரங்களுக்கு தெரியாமலா போயிருக்கும்? 

5. நல்லத்தங்காள் அரச குடும்பத்த சேர்ந்தவளா?


பெரும்பான்மையான தகவல் வச்சு பாக்குறப்போ நல்லத்தங்காள் பிறந்த ஊர் விருதுநகர் மாவட்டத்துல உள்ள அர்ச்சுனாபுரம்ன்னு தெரியுது. ஆனாலும் ரெண்டு இடங்கள்ல அவளோட சொந்த ஊர் மதுரைன்னு இருக்கு.

அவளை கல்யாணம் பண்ணிகுடுத்த ஊர் சிவகங்கை மாவட்டத்துல உள்ள மானாமதுரைன்னு சில பேர் சொல்றாங்க. சிலபேர் அவள காசியை ஆண்ட மன்னன் காசிராஜனுக்கு அவளை கல்யாணம் பண்ணி குடுத்ததா சொல்றாங்க. காசியில இருந்து ஒரு பெண், தன்னோட ஏழு குழந்தைகளையும் கூட்டிகிட்டு தன்னந்தனியா மதுரை வரை வர முடியுமா? அதுவும் சாப்பிட கூட எதுவுமே கிடைக்காத நிலைலன்னு நான் ரொம்பவே யோசிச்சுட்டேன். அப்புறமா, அவள் அவ்வளவு தூரம் போயிருக்க முடியாது, அவளோட கணவர் பெயர் காசிராஜன்ங்குரதால அப்படி வழி வழியா வந்த கதைல திரிஞ்சு போயிருக்கலாம்னு நினைக்குறேன்.

அடுத்து அவ குழந்தைகளை பற்றினது. அவள ஏழு வயசுல கல்யாணம் பண்ணி கொடுத்ததாகவும், அவளுக்கு ஏழு குழந்தைகள் பிறந்ததாகவும் அதன் பிறகு பனிரெண்டு வருஷம் கடுமையான பஞ்சம் நிலவியதாகவும் ஒரு இடத்துல சொல்லியிருக்காங்க. அப்படி பாத்தா அவளோட முதல் குழந்தைக்கு குறைந்தபட்சம் பதினாறு வயசு ஆகியிருக்காதா? அவ்வளவு பெரிய பையன் எப்படி பாலகனாகவே இருந்துருக்க முடியும்?

இன்னொரு இடத்துல நல்லத்தங்காள் காசி மன்னரின் மனைவினும், அவருக்கு ஏழு குழந்தைகள்ன்னும், அதன் பிறகு ஏழு ஆண்டுகள் பஞ்சம் வந்துச்சுன்னும் சொல்லியிருக்காங்க. அப்படி பாத்தாலும் முதல் பையனுக்கு பதினாலு வயசு இருக்காதா? அந்த காலத்துல அது கல்யாணம் பண்ற வயசில்லையா? அந்த பையனுக்கு ஒரு ஆணுக்குரிய எல்லாம் பொறுப்புகளுமே இருந்துருக்கணுமே, அதுவும் ஒரு வருங்கால அரசன் எப்படி அம்மா பின்னாடி போனான்?

அதே கதைல, நல்லத்தங்காளோட அண்ணி கதாபாத்திரம் சொல்றதா ஒரு காட்சி வருது. அதாவது திருமணம் முடிந்த பத்து வருடத்துக்குள் ஏழு பிள்ளை பெற்று விட்டாளா? என்பது தான். ஏற்கனவே ஏழு குழந்தைகள் பிறந்து ஏழு வருடம் என்பது இங்கு திரிந்து விட்டிருந்தாலும், பஞ்ச காலத்தில் அவள் குழந்தைகளை பெற்றாள் என்றால் குழந்தைகளின் வயது சரியாய் இருந்திருக்கும்.

தங்கச்சி மேல பாசமா இருக்குற ஒரு அண்ணன், அதுவும் ஒரு அரசன் அவளை திருமணம் செய்து கொடுத்ததோட சரி, அப்புறம் பாக்கவேயில்லைன்னு சொல்றது நம்புற மாதிரி இல்ல. அப்படியே அரச குலங்களுக்குள்ள தகவல் பரிமாற்றங்களாவது இருந்திருக்காதா? பஞ்சம் வந்து சாப்பாட்டுக்கே வழியில்லாமல் ஒரு அரச வம்சமே அழிஞ்சுதுன்னா அது ஒரு வரலாற்று நிகழ்வு இல்லையா? அதுபத்தின கல்வெட்டுகளோ, ஒலைசுவடிகளோ எங்கயாவது இருக்குதா?

வாய்வழியா சொல்லப்படுற நாட்டார் கதைகள்ல நல்லத்தம்பியும் நல்லத்தங்காளும் அன்பான ஒரு சாதாரண குடும்பத்தை சேர்ந்தவங்களா தான் சொல்லப்பட்டுருக்காங்க. அதுவே ஏன் உண்மையா இருக்க கூடாது. அவங்க மேல இருக்குற அதீத அன்புல, கதைசொல்லிகள் காலப்போக்கில் அவங்கள அரசகுடும்பத்த சேர்ந்தவங்களா ஏன் சித்தரிச்சிருக்க கூடாது?

இதெல்லாம் வழி வழியா வந்த கதைங்குறதால நிறைய விஷயங்கள் திரிஞ்சு போய் இருக்கு. எல்லோரும் அவங்கவங்களுக்கு தகுந்த படி கற்பனைகள கலந்து இந்த கதைய அழியாம இவ்வளவு நாள் பாதுகாத்து வந்துருக்காங்க. உண்மையான கதை மறக்கடிக்கப் பட்டிருந்தாலும் நல்லத்தம்பி, நல்லத்தங்கள்ங்குற பெயர் மாறல, அவளுக்கு ஏழு குழந்தைகள்ங்குறது மாறல, பஞ்சம் பட்னியால அவளோட குழந்தைகளை அவளே கொன்னுட்டாங்குறதும் மாறல. அதெல்லாம் விட, வீட்டுக்கு பசின்னு வந்தவங்கள கொஞ்சம் கூட ஈவு இரக்கமே இல்லாம வெளில துரத்தி விட்ட ஒரு பெண்ணால ஒரு அழகான குடும்பமும் அழிஞ்சு, அந்த பெண்ணோட கணவனும் அழிஞ்சான்ங்குறதும் மாறல. தன்னோட தங்கச்சியும் அவ குழந்தைகளும் தன் மனைவியால செத்து போனதால அந்த இடத்துலயே உயிரை விட்ட அண்ணனோட பாசமும் மாறல.

இனி நம்மால உண்மை எதுன்னு கண்டுபிடிக்க முடியலைனாலும், இந்த கதைக்கரு கண்டிப்பா எல்லோருக்கும் உணர்த்தப்படணும். வீட்டுக்கு ஒரே ஒரு குழந்தையை வச்சுக்கிட்டு சொந்த பந்தம்னா என்னன்னே தெரியாத நம்மோட வருங்கால சந்ததிக்கு நம்மோட பாரம்பரிய நடைமுறைகளையும், அது தவறினா ஏற்படுற விளைவுகளையும் கொண்டு போய் சேர்க்க வேண்டியது நம்மோட பொறுப்பு இல்லையா?

இனி கூட்டுக்குடும்பங்கள் அமையுமான்னு தெரியாது, ஆனா மனிதநேயத்த, கஷ்டபடுற உயிர்கள கண்டா இல்லன்னு சொல்லாத ஒரு பண்பை நம்மோட சந்ததிக்கு போதிக்க வேண்டியது நம்மோட பொறுப்பு இல்லையா?

அன்பா இருப்போம்

எந்த உயிரையும் இகழாது இருப்போம்

யாரும் யாருக்கும் தாழ்ந்தவரில்லைங்குற கோட்பாடை கடைபிடிப்போம்

கஷ்டப்படுற உயிர்களை தேவை அறிந்து அரவணைப்போம்.




நான் இன்னொரு பதிவோட உங்கள சந்திக்குறேன்.

Friday 15 November 2013

ப்ரொமிதியஸ் (PROMETHEUS) - திரைவிமர்சனம்



நான்லாம் படம் பாக்குறதே அபூர்வம், அதுலயும் இந்த ஹாலிவுட் பிலிம்ஸ் எல்லாம் பாத்தா இன்னார் இன்னார் டைரக்சன், இன்னார் இன்னார் நடிச்சிருக்காங்கன்னு எல்லாம் சொல்லத் தெரியாது. எதோ, புரியாத பாசைல எதையோ ஒண்ண பாத்த மாதிரி தான் பாத்துட்டு இருப்பேன். அப்படி இந்த Prometheus படத்த பாத்து நான் என்ன புரிஞ்சுகிட்டேன்னு தான் நான் இப்போ சொல்லப்போறேன். அதனால இந்த டெக்னிக்கல் விசயங்கள தேடுறவங்க, ஸோ சாரி, அப்படியே அப்பீட்டாகிடுங்க...

மத்தப்படி என்னை மாதிரி ஒண்ணுமே தெரியாத அப்பாவிங்க எல்லாம் இத தொடர்ந்து படிங்க, நான் என்ன பீலா விட்டாலும் அப்படியா அப்படியான்னு ஆச்சரியமா தலையாட்டி கதை கேக்க வேண்டியது தான் உங்க பொறுப்பு. அப்புறம் அப்பப்ப கை தட்டிக்கோங்க, விசில் அடிக்க தெரிஞ்சவங்க எல்லாம் விசில் அடிச்சுக்கோங்க, எனக்கு நோ ப்ராப்ளம்.. சரி வாங்க, நாம படம் பாக்க போவோம்..

படம் ஆரம்பிக்குறப்பவே ஒரு பெரிய நிலப்பரப்பு. கொஞ்சம் விசித்திரமா தான் இருக்கு. அந்த இடத்துல ஒரு பெரிய அருவி... அந்த தண்ணி கீழ விழுந்து சலசலன்னு ஆறா ஓடிட்டு இருக்கு. அங்க தான் ஒரு ஏர்-கிராப்ட் அதாங்க, பறக்கும் தட்டு வந்து அந்தரத்துல நிக்குது. அதுக்கு இந்த பக்கமா ஒரு மனுஷன், பாத்தா எதோ மெழுகுல செஞ்சு வச்ச மாதிரியே இருக்கான், அவன் வந்து நிக்குறான். அவன் கைல என்னமோ ஆசிட் மாதிரி ஒண்ணு, அத எடுத்து எதோ ஜுஸ் குடிக்குற மாதிரி குடிக்குறான். அவ்வளவு தான், அவன் உடம்பு அப்படியே அரிக்க ஆரம்பிக்குது. அவனோட டி.என்.ஏ எல்லாம் சிதைஞ்சு போகுது. அப்படியே அவன் கை கால் எல்லாம் பீஸ் பீஸா சிதறிகிட்டே அப்படியே அருவியில விழுறான். அவனோட அழிஞ்சு போன டி.என்.ஏ எல்லாம் தண்ணியில இருக்குற மத்த உயிர்களோட டி.என்.ஏ கூட சேர்ந்து, டபுள் ஹெலிக்ஸ்ஸா (double helix) மாறுது.

அடுத்த சீன் ஸ்காட்லேன்ட்-ல நடக்குது. அது 2089-வது வருஷம். அங்க ஒரு குகைய ஆராய்ச்சி பண்ணிக்கிட்டு இருக்குற ஒரு ஆர்கியாலாஜி குழு ஒரு பெயின்ட்டிங்க கண்டுபுடிக்குறாங்க. அப்படி அவங்க என்ன பெயின்டிங் கண்டுபுடிச்சாங்கன்னு எனக்கு புரியல, ஆனா அது அவங்களுக்கு ரொம்ப முக்கியமான ஒரு க்ளுவா இருக்கு. அந்த க்ளுவ வச்சு பூமிக்கு ரொம்ப தொலைவுல இருக்குற எதோ ஒரு இடத்த தேடி December 21, 2093 அன்னிக்கி ப்ரொமிதியஸ்ங்குற விண்கலத்துல தெரியாத ஒரு இடத்துக்கு கொஞ்ச பேர் கிளம்பி போறாங்க.

அங்க போய் ஒரு மலை மாதிரி இருக்குற இடத்துல லேன்ட் ஆகுறாங்க. அங்க ஏற்கனவே பாதை எல்லாம் போட்டு வச்சிருக்கு. அப்படியே அவங்க அங்க ஒரு குகை மாதிரி ஒரு இடத்துக்குள்ள போறாங்க. அங்க ஒரு மனுச தலை மாதிரியே ஒன்ன கண்டெடுக்குறாங்க. அப்புறமா அங்க திடீர்னு புயல் அடிக்க, அங்க இருந்து அந்த தலை கூடவே ஒரு சிலிண்டர எடுத்துட்டு பழையபடி ப்ரொமிதியஸ்-க்கு திரும்ப வந்துடுறாங்க. இன்னொரு சிலிண்டர் அங்கயே லீக் ஆகிட்டு இருக்கு (சஸ்பென்ஸ்சாமாம்).

எனக்கு இந்த படத்துல பிடிச்ச ஒரு வார்த்த “big things have small beginings”. இந்த வார்த்தைய சொல்லிகிட்டே ஒரு விஷப்பரிட்சைக்கு தயராகுவார் ஒருத்தர். அவர் பெயர் டேவிட். அவர் ஒரு மனுசனும் ரோபார்ட்டும் கலந்த கலவைன்னு படத்தோட இடையில தான் நான் தெரிஞ்சுகிட்டேன். படுபாவி மனுஷன், பரீட்சை வைக்குறதா இருந்தா அவரையே சோதிச்சு பாக்க வேண்டியது தானே. அத விட்டுட்டு சும்மா இருந்த ஒரு மனுசன்கிட்ட, அவர் தூக்கிட்டு வந்த சிலிண்டர்ல இருக்குற திரவத்த குடிக்க குடுத்துடுவார். அப்புறமா அதுதான் எல்லோருக்கும் வினையா போகுது.


அவ்வ்வ்வ் நான் பயந்த விஷயங்கள்ன்னு பாத்தா இதுல நிறைய இருக்கு, ஆனாலும் அப்புறமா கொஞ்சம் ஸ்டெடியாவே பாக்க ஆரம்பிச்சேன். அதுலயும் ரெண்டு பேர், ஒருத்தர் பெயர் மில்பர்ன், இன்னொருத்தர் பெயர் பிபெத். பெயர் எல்லாம் சரியான்னு எனக்கு தெரியாது, நானே காதால கொஞ்சம் கொஞ்சம் வார்த்தைகள உறிஞ்சி தெரிஞ்சிகிட்டது இது. அவங்க ரெண்டு பேரும் மறுபடியும் அந்த இடத்துக்கு போறாங்க. அங்க நிறைய மனுஷ உடல்கள பாக்குறாங்க. அப்புறமா அந்த சிலிண்டர் இருந்த இடத்துக்கு வராங்க. அப்போ திடீர்னு பாம்பு மாதிரி எதோ ஒண்ணு அங்க வருது. அத பாத்து பயந்து தொபுக்கடீர்னு விழுற பசங்க, அப்புறம் ஜாக்கிரதையா அத டீல் பண்ண வேண்டாமா, அத விட்டுட்டு அத பாத்து ஹே... பேபி, ஷி ஈஸ் பியூட்டிபுல்-ன்னு கொஞ்சிகிட்டு இருக்காங்க. எனக்கு அப்பவே பி.பி எகிற ஆரம்பிச்சாச்சு. அது கிட்ட கொண்டு போய் கைய நீட்டிக்கிட்டு அது சீறினதும் இட்ஸ் ஓகே, இட்ஸ் ஓகே-ன்னு கேனத்தனமா சிரிக்குறாங்க. எனக்கு அப்பவே அவங்களுக்கு சங்கு ஊதுற சத்தம் காதுல கேக்க ஆரம்பிச்சுடுச்சு. அவ்வளவு தான், அப்புறம் நடக்குறத எல்லாம் என்னால எக்ஸ்ப்ளைன் பண்ண முடியாது, நீங்களே பாத்துக்கோங்க. இதுல மில்பர்ன் அவுட், பிபெத் ஹெல்மட் உருகி, அவர் முகத்துல அந்த சிலிண்டர்குள்ள இருக்குற திரவம் பட்டுடும்.

அப்புறமா அந்த டீம் இவங்க ரெண்டு பேரையும் தேடி கிளம்புவாங்க. அப்படி போறப்போ டேவிட் தனியா போய் ஒருத்தரோட உறைந்த உடம்பையும் ஒரு உலக மேப்பையும் (அப்படி தான் நினைக்குறேன்) கண்டுபுடிக்குறார். அந்த ஆள் உயிரோட தான் இருப்பார்னு நான் அப்போ நினச்சது சரியா இருந்துச்சு. உயிரோட தான் அவர் உறைஞ்சு இருப்பார். இன்னொரு பக்கம், மில்பர்னையும் பிபெத்தையும் தேடி போற ஆளுங்க மில்பர்னோட உடம்ப கண்டுப்பிடிக்குறாங்க. அந்த நேரம் அங்க ஒருத்தருக்கு உடம்பு சரியில்லாம போக, அவர கூட்டிட்டு அவசர அவசரமா ப்ரொமிதியஸ்க்கு திரும்புறாங்க. அவர் தான் இந்த படத்தோட ஹீரோயினோட லவ்வர். அவருக்கு தான் டேவிட் அந்த கருப்பு திரவத்த குடிக்க குடுத்துருப்பார். அவரோட உடம்பு ரொம்ப மோசமா போய்டவே அந்த டீம் கேப்டன் ஒரு லேடி (விக்கெர்ஸ்), அவங்க இவர உயிரோட அப்படியே எரிச்சுடுவாங்க.

இப்போ நான் ஹீரோயின் பத்தி சொல்லணும். இவங்க பெயர் ஷா. இவங்களும் இவங்க லவ்வரும் தான் அந்த ஆர்க்கியாலஜிஸ்ட். ஒரு குகைல ஓவியம் கண்டுபிடிப்பாங்களே அவங்க. அவங்களோட லவ்வர உயிரோட எரிச்சத பாத்து அவங்களுக்கு உடம்பு சரியில்லாம போறப்போ டேவிட் அவங்க மூணு மாசம் கர்ப்பம்னு சொல்றத கேட்டு அவங்க முகம் டைப் டைப்பா மாறுது. அது எப்படி அது எப்படின்னு யோசிச்சுகிட்டே இருக்காங்க. அப்புறமா அவங்க வயித்துல இருக்குறது கண்டிப்பா ஒரு ஏலியன் குழந்தையா தான் இருக்கும்ன்னு முடிவு எடுத்து அவங்கள பாத்துட்டு இருக்குற மெடிக்கல் டீம அடிச்சு போட்டுட்டு ஓடுறாங்க.

இந்த இடத்துல நீங்க ஒரு விஷயம் தெரிஞ்சுக்கணும். நானெல்லாம் ரெத்தத்த பாத்தாலே நாலு கிலோமீட்டர் ஓடுற ஆளு. ஷா ஓடி வந்து சிசேரியன் பண்றதுக்கான மெடிக்கல் ப்ரோசீஜர் தேடுறாங்க. இதுக்கு மேல அந்த சீன பாக்கணுமா வேணாமான்னு கொஞ்சம் குழம்பிட்டேன். அப்புறம், எதோ ஒரு துணிச்சல்ல பாக்க ஆரம்பிச்சேன். அந்த சீன அப்புறமா நான் ரொம்ப ரசிச்சு பாத்தேன்னா பாருங்களேன், அது எவ்வளவு சுவாரசியமான சீனா இருந்துருக்கும்னு.

அவங்களே அந்த ஆட்டோமடிக் சர்ஜெரி டேபிள்(?)-ல படுத்துகிட்டு, கேரி அவுட், கமான் கமான்-ன்னு கட்டளை போடுறாங்க. அவங்க வயித்த கிழிக்கும் போது வலியை தாங்கிகிட்டு கதறுறாங்க. உள்ள இருந்து குழந்தையை(?) எடுத்ததும் அப்படியே கைய வச்சு தொப்புள் கொடிய அத்து எடுத்துட்டு தையல் போட பட்டன தட்டுறாங்க. பரபரன்னு தையல் போட்டதும், அவசர அவசரமா வெளில வந்து அந்த ஏலியன் குழந்தைய எதையோ தட்டி சாகடிச்சுட்டு ஓடுறாங்க.

அவ்வ்வ்வ் அப்புறமா ஒரு அகோரமான சீன்... இந்த சிலிண்டர்க்குள்ள தலைய விட்டுட்டு விழுவாரே பிபெத் அவர் தான், அந்த திரவத்தால மியூடேட் (mutate) ஆகி, திரும்பி வந்து அவர் டீம் ஆட்களையே வெறும் கையாலயே அடிச்சு கொல்லுவார். அந்த சீன் ஓடுறப்போ நான் திரும்பி உக்காந்துகிட்டு அரைகுறையா தான் பாத்தேன். என்னோட பார்வைல அந்த சீன் அவ்வளவு கொடூரமா இருந்துச்சு (எனக்கு விஸ்வரூபம் படத்துல கமல் போடுவாரே ஒரு பைட் சீன், அது தான் நியாபகம் வந்துச்சு). அந்த ஆள ஒருவழியா எரிச்சு கொல்றதுக்குள்ள பல பேர அவர் காலி பண்ணிடுறார்.

சிசேரியன் பண்ணிக்கிட்டு ஓடிட்டு இருக்குற ஷா படத்துல முக்கியமான ஒரு ட்விஸ்ட்ட கண்டுபுடிப்பாங்க. ஆனா எனக்கென்னமோ அது படு மொக்கையான விசயமா தான் தோணிச்சு. அடச்சீ... இதுக்கு போயா இவ்வளவு ஆர்ப்பாட்டம்ன்னு சப்புன்னு போச்சு. ஹிஹி எனக்கு தான் சப்புன்னு போச்சு, ஆனா நீங்க அத என்னான்னு தெரிஞ்சுக்க ஆவலா இருப்பீங்கன்னு நானே நினைச்சுக்குறேன், ஆனாலும் அது என்னன்னு சொல்ல மாட்டேனே.

அந்த மொக்க ட்விஸ்ட்டால டேவிட் கண்டுப்புடிப்பாரே ஒரு உலக மேப்பும், ஒரு ஆளும், அந்த ஆளு உயிரோட எழும்பி வராரு. வந்தவர் டபடபன்னு ஒருத்தர் பாக்கி இல்லாம எல்லாரையும் காலி பண்றான் (“ர்”... என்ன வேண்டியிருக்கு, அந்த வெள்ளை மண்டயனுக்கு “ன்” போதும்). டேவிட் தான் மனுஷன் பாதி, ரோபார்ட் பாதி கலந்து செய்த கலவையாச்சே, அவர் தலைய அந்த வெள்ளை மண்டையன் பிச்சு போட்ட பிறகும் டயலாக் எல்லாம் பேசிட்டு இருக்கார்.

இதுல எனக்கு பிடிச்ச ஒரு விஷயம்னு சொல்லி, சொல்லாம விட்ட சொச்ச கதைய சொல்லிடுறேன். பூமிய அழிக்கத்தான் அந்த வெள்ளை மண்டையன் பிளான் போடுறான்னு ஷா-வுக்கு தெரிஞ்சி போச்சு. அவங்க உடனே ஸ்பேஸ் ஷிப்-ல உயிரோட இருக்குற நாலு பேர் கிட்ட விசயத்த சொல்றாங்க. அந்த வெள்ளை மண்டையன் கிளம்புற ஸ்பேஸ் ஷிப்ப இந்த ஸ்பேஸ் ஷிப் வச்சு மோதி எப்படியாவது தடுக்கணும்னு சொல்றாங்க. அதுல இருக்குற மூணு ஆண்களும் அத புரிஞ்சுகிட்டு தற்கொலை படையா மாறி, அந்த ஸ்பேஸ் ஷிப் மேல மோதி நிலைகுலைய வைக்குறாங்க. அதுக்கு ஒத்துவராத பொண்ணு, அங்க இருந்து தப்பிச்சு, ஸ்பேஸ் ஷிப் அடியில மாட்டி நசுங்கி போறா.

இந்த கதைல, இத்தன களேபரத்துலயும் இருந்து தப்பிக்குறது ஷா-வும் இன்னொரு ஜீவனும் தான். அந்த ஜீவன் தப்பிச்சு அடுத்த பார்ட் வெளியாக தூபம் போட்டுருக்கு. எப்படியோ அந்த வெள்ளை மண்டையன் கிட்ட இருந்தும் அந்த இடத்துல இருந்தும் ஷா தப்பிச்சு போறாங்க. அப்படி போகும் போது இந்த இடத்துல இருந்து தப்பிச்சு போற கடைசி உயிர் ரிப்போர்ட் பண்றேன், இனிமேல் தயவு செஞ்சு யாரும் இங்க வர ட்ரை பண்ணாதீங்கன்னு சொல்லிட்டு டேவிட்டோட தலை, அப்புறம் உடம்போட கிளம்பி போறாங்க.


அப்படியும் படத்துக்கு சுபம் போடாம, இன்னொரு ட்விஸ்ட்டோட அடுத்த பார்ட்க்கு டேக் ஆப் குடுத்து படத்த முடிச்சிருக்காங்க.


எனக்கு இந்த படத்துல புரியாத ஒரு புதிர் இருக்கு, அது என்னன்னா, படத்தோட ஓப்பனிங்ல ஒரு சீன் வருதே, அது எதுக்குன்னே தெரியல, ஒருவேளை அடுத்த பார்ட்-ல சொல்லுவாங்களோ என்னமோ? அதுல வர்ற வெள்ளை மண்டையனும், இந்த வெள்ளை மண்டையனும் மட்டும் பாக்குறதுக்கு ஒரே மாதிரி இருக்காங்க. அது மட்டும் தான் எனக்கு புரிஞ்சுது.

என்னதிது, இவ முழு படத்தோட கதையையும் சொல்லிட்டாளேன்னு பதறாதீங்க. படம் வந்து பல நாள் ஆகிடுச்சு. கண்டிப்பா பாத்துருப்பீங்க, இது ஒரு ரீக்கால் அவ்வளவு தான். அப்படி பாக்கலையா, இத படிச்சுட்டே போய் பாத்தா, கதை நல்லா புரியும். ஏன்னா நான் தான் அரைகுறையா உங்களுக்கு கிளாஸ் எடுத்துட்டேனே.


இப்போ இத படிச்சுட்டு பயந்து போய் திட்டுறவங்க எல்லோரும் தாராளமா கமண்டல திட்டிக்கலாம், இல்ல, சூப்பர்ன்னு நினச்சீங்கன்னா அதையும் கமன்ட்ல ஒரு பாராட்டா தெரிவிச்சுட்டு போய் படத்த பாக்கலாம்...



ஆல் ஈஸ் வெல்.... ஈஈஈஈ.... நான் ரெஸ்ட் எடுக்கப் போறேன்.

 

Thursday 14 November 2013

பாலையாய் ஒரு வெற்றுக் கேவல்...


“கொலைப்பாதகர் கூட்டமது 
கள்வர்களின் உறைவிடமது...
மாண்டவன் மீள மாட்டான்...
நீ சென்றால் தாங்க மாட்டாய், திரும்பி வா அஞ்சுகமே..”

தொலைதூரம் போனவளொருத்தியின்
விட்டு விட்டொலித்த கேவல்
ஏக்கமாய் நெஞ்சை பிசைய,
குயிலொன்று இப்படி தான்
அதன் மொழியில் கூவிக்கொண்டிருந்தது...

கொலைக்களம் இதுவென அறிந்திடா மடந்தையல்ல...
பாதகர் கண்டு பதறியோடும் பரம்பரையில் பிறந்தவளுமில்லை...
தந்திரமாய் வஞ்சிக்கப்பட்டவனின் மாசுமருவில்லா மகிழம்பூ அவள்...

விதி தேடி வந்தாளோ?
வினை விதைக்க வந்தாளோ?
அங்கே கிழ நாயொன்று பலஹீனமாய்
ஊளையிட்டுக் கொண்டிருந்தது...
நரிகளின் நடமாட்டம் இருளினில் மின்ன,
கண்கள் விரித்து விளக்காக்கிக் கொண்டாள்...

“ஏன் சென்றாய்? விட்டகன்றாய்?
திரும்பிடவே கூடாதென வீம்பாய் ஒரு
பிடிவாதம் பிடித்தாற்போல் ஆயிரம் கேள்விகளை
விடைதெரியாமல் விட்டுச் சென்றாய்...
உன் கண்களில் நானதை படித்தறிய கண் விரிய காத்திரு”
இப்படி தான் அவள் மனம் அவனிடத்தில் யாசித்தது...

யாசித்தும் பயனில்லை,
நாளும் பொழுதும் பூஜித்தும் புண்ணியமில்லை...
விட்டு விட்டுப் போனவனின்
ஆழ்நிலை தூக்கமொன்றே அவளை ஆங்காரமாய் வரவேற்றது...

எரிமலையொன்றங்கே தீப்பிழம்பு கக்கியது...
வான் கிழித்து நட்சத்திரம் பாதாளம் பாய்ந்தது...
இதை காணத் தான் கண்களுக்கு மையிட்டுத் திரிந்தாளா?
வளையல்கள் சண்டையிட அவன் ரசிக்க நகைத்தாளா?
மணவாளன் மாய்ந்திடத் தான்
வெண்சங்கு கழுத்திலே மணமாலை ஏற்றாளா?

பற்றியிழுத்து சண்டையிட்ட மார்தனில்
இனி மயிர்கால்கள் சிலிர்க்கப் போவதுமில்லை...
பூப்போல் வாரி அணைத்திடும் கரங்களும்
இனி அவளுக்கு சொந்தமாய் இருக்கப்போவதுமில்லை...

இனி அவன் கழுத்து அவளுக்காய் சாய்வதுமில்லை
அவனின்றி இனியாரும் அவளுக்கு தேவையாய் இருப்பதற்கில்லை..

அவன் வளைத்த மெல்லிடை தீயாய் தகிக்க,
அவன் சுமந்த நெஞ்சமோ இரண்டாய் கிழிகிறது...
பீறிட்டு வரும் குருதி கண்டு
ஆக்ரோஷ மனம் அடங்கல் கொள்ளுமோ?
ஏதோ ஓர் பரமானந்தம் அந்தரத்தில் ஆர்ப்பரிக்கிறது..
மெல்லிய ஆடைகளின் பாரங்கள் கூடிப்போக
வாய்ப்பிளந்து உயிரிழக்க துணிகிறாளவள்..

அமைதியாய் உறைந்திருக்கிறான்...
அவள் கைகள் துவள தாங்காதிருக்கிறான்...
தட்டாமாலை சுற்றிடும் அவள்
தலைக்கு மேலே இன்னொரு உலகம் ஸ்ரிஸ்டித்து
அங்கிருந்து அவளை ஏந்தாதிருக்கிறான்...

அவள் உயிர் துடித்தடங்குவதை
அவன் கண்கள் காணப்போவதேயில்லையென
இமை சொருகி மண்ணோக்கி அவள்
வீழப் போகையில் வயிற்றைப் பிரட்டி
உள்ளிருந்து எட்டி உதைத்தாற்போல்,
அடிக்கள்ளி நான் இங்கிருக்கிறேனென்கிறான்...

பேதையினியென் செய்வாள்?
உயிரிழக்கவும் உரிமையில்லை...
துவண்டிட்ட கால்களினி உரம்பெற்றுமா? தெரியாது...
மாறாய், செலுத்தப்பட்டே தீர வேண்டும்...
உளிப்பட்டு பிளந்திட்ட பாறையின் உள்ளின்று
குதித்தோடிய தேரையாய்
புவிதனில் அவளுக்கும் ஓரிடம் நிச்சயமாச்சு...

கண்ணீரும் வறண்டுப் போக
அவன் வெற்றுடலை ஒரு உறைந்தப்பார்வை பார்க்கிறாள்...
மணிவயிரை தடவுகையில்
விரக்தியொன்று உதட்டில் உறைந்தது...
ஊமையாய் போன இவள் இனி,
ஊர் போய் சேர வேண்டும்...

கூவைகளின் கூப்பாடுகளுக்கிடையில் அவள்
திரும்பி நடக்கையில் அவளுமாய் இருக்கவுமில்லை..
அவளை தொலைத்துவிட்டு அவனை அணிந்துக் கொண்டே
கால்கள் பின்ன ஊர்ந்துக் கொண்டிருக்கிறாள்...

இனி அவன்... அவளின் வாழ்நாள் விசையாகிறான்...

Wednesday 13 November 2013

பவர் ஸ்டாரோட பிறந்தநாளு..... (பார்ட் – ஒன்)


இந்த காலத்துல கைல மொபைல் இல்லாத யங்ஸ்டேர்ஸ் பாக்குறது அபூர்வம்ங்க. அதுவும் பிரெண்ட்ஸ்க்குள்ள மாத்தி மாத்தி எஸ்.எம்.எஸ் அனுப்புறத அடிச்சுக்கே யாராலயும் முடியாது. இப்போ இந்த எஸ்.எம்.எஸ் ட்ரன்ட் வாட்ஸ்அப், வைபர்னு டெவலப் ஆகிடுச்சு. அப்படி தான் என் வாட்ஸ்அப்க்கு என் மாமா பொண்ணு ஒரு மெசேஜ் அனுப்பி இருந்தா. அத பாத்த உடனே அத ஒரு கதையா எழுதினா என்னன்னு தோணிச்சு. சோ, நீங்க இனி படிக்கப் போற கதையோட காமடி பகுதிக்கு காரணமான புண்ணியவான் யாரோ?

பிட் அடிச்சாலும், பிட் எழுதி வச்சிருந்த பேப்பரும், அதுல எழுதின பென்னும், பிட்ட பாத்த கண்ணும், எழுதின கையும் எனக்கே சொந்தமானதுன்னு நாம உரிமை கொண்டாடுற மாதிரி இதில் வரும் கதை, திரைக்கதை வசனம் அனைத்தும் எனக்கே சொந்தம்... (அவ்வ்வ்வ் எப்படி எல்லாம் பில்ட் அப் விட வேண்டியிருக்கு).

Tuesday 12 November 2013

சாரலடிக்கும் நேரம்...!


நாளை வருகிறேன் என்ற உன் குரல்
ஆயிரம் கவிதைகளை தோற்கடித்து
புதிதாய் ஒன்றை விதைத்து சென்றது...!

உன் வருகை தெரிவித்த கைபேசி
எண்ணிட இயலா முத்தங்களை
அரைநொடி பொழுதில் பரிசாய் பெற்று
இயக்கம் மறந்து மவுனமானது...!

உன் ராஜ வீதியில் உலாவரும்
ஒற்றை ராணியாய் கர்வம் கொண்டு
இதழோர புன்னகை ஒன்றை படர விடுகிறேன்...!

கண்ணாடி கூட கண்டிருக்குமோ
என் பல்வரிசையை...
இன்று வீட்டில் அனைவருக்கும்
காட்சிப் பொருளாகி வியக்க வைக்கிறது...!

அய்யோ செல்லமே,
உன்னை திட்டி கடிதமெழுதினேனே...
நாளை அவையெல்லாம் உன்
ரகசிய தீண்டலில் வீரியமிழக்க போகின்றன...!

பாரடா, உன் பெயரை
பல லட்சம் முறை உச்சரித்து
உன் கிண்டல் பேச்சுகளில்
நெஞ்சுருகி கொஞ்சுகிறேன்...!

உன் வருகை அறிந்த நொடி, உனக்குள் நான் தொலைந்து,
உன் கவிதை வரி ஒன்றை களவெடுத்துச் சொல்கிறேன்
உன் நேசம் கொண்டு நான் நனையும் பொழுதெல்லாம்
“தூறல் ஏறியது என் வானம்”...!

கை விரித்து காத்தே கிடக்கிறேன்,
உன் சாரலில் நனையப்போகும் பொழுதுக்காய்...!



# இது ஒரு மறுப்பதிவு

Monday 11 November 2013

கனவு கண்டா அது பலிக்குமா? பலிக்காதா?


ரெண்டு மூணு நாளா மனசுல எதோ ஒரு பாரம். அத எப்படி விவரிக்கன்னு கூட தெரியல. இன்னும் ஒண்ணரை வருசத்துல எப்படியாவது என்னோட கனவை நனவாக்கிட ரொம்ப ஆசை. இதுக்காக பெங்களூர் போகலாம்னு பாத்தா ஏனோ மனசு இங்க இருந்து கிளம்பவே மாட்டேங்குது. எதுவுமே வேணாம், இப்படியே இருந்துடலாம்னு தீவிரமா ஒரு மனசு சொல்லுது. வாழ்க்கைல அப்படி என்ன பெருசா சாதிச்சுட போறோம்னு ஒரு விதமான எண்ணம் மனசுக்குள்ள அலக்கழிச்சுட்டே இருக்கு.

ஓநாயும் மான் குட்டியும் -2


எனக்கே ரொம்ப ஆச்சர்யம், சில நேரம் நாம எழுதுறது நமக்கே புரியுமான்னு. ஆனாலும் இந்த ஓநாயும் மான்குட்டியும் எழுதினேனோ இல்லியோ, அது தான் நான் எழுதினதுலயே பயங்கர ஹிட்டாம். இந்த மாதிரி கதையோட சேர்த்து தத்துவம் சொன்னா நல்லா தானே இருக்குன்னு நான் இன்னொரு ஓநாயும் மான்குட்டியும் கதை ஒண்ணு சொல்லலாம்னு நினைக்குறேன்.

Friday 8 November 2013

காத்திருக்கும் விடியல்...!

எட்டிப்பார்க்கும் சூரியனை கண்டு
கீழ் வானம் சிவந்திருக்க
கொண்டை சேவல் ஒன்று
துயில் கலைந்து கொக்கரித்த
இளம் குளிர் போர்வைக்குள்ளே
கனா ஒன்று கண்டேனடா...!

தெருவெங்கும் மாவிலை தோரணங்கள் நீண்டு வர,
தென்னை மரங்கள் தாளத்தோடு வரவேற்க
பெண்பார்க்க நீயும் வந்தநாள் அந்நாளடா...!

சீர்வரிசை தட்டுகள் இடைநிற்க
பெண்டுகள் உன்னை வழிகாட்ட
கதவிடுக்கின் ஓரம் நின்று இரகசியமாய்
உன்னை நானும் முழுதாய் ரசிக்கிறேனே...!

ஆவல் மின்னும் கண்களோ
உன்னை அள்ளி அள்ளி பருகிய பின்னும்
மேலும் மேலும் தாகம் திணித்து மருகியே நின்றதடா...!

மன்மதனின் பார்வையொன்றை இரகசியமாய்
என்னிடத்தில் நீ வீசி, உயிர் வதைத்த நொடி
உன்னை என்னில் கொண்டேனடா...!

வார்த்தைகளின்றி நானும் தடுமாற
நீயோ கண்கள் வழி கவி பேசி
குறுநகை ஒன்றில் என்னை வீழ்த்திவிட்டு
வேடிக்கையாய் நகைக்கிறாய்...!

அடுத்த மாதம் ஆடியாமே?
ஆவணியில் தேதி வைக்க
அவசரமாய் தாக்கல் ஒன்றை
இப்பொழுதே சொல்லி விடு...!

முந்தி வரும் கார்த்திகையோ
பிந்தி வரும் தை மாதமோ
மணநாளை நீட்டிவைத்து
உன்னோடு என் வாழ்நாளை 
தேய்ந்து போக வைக்காதே...!

உனக்கென்ன? வருகிறேன் என
முற்றத்து மையத்தில் நின்று
சைகை மொழி செய்தியொன்றை
நவிச்சியமாய் நவின்று விட்டு
ஊர்வலத்தில் தேராக
அசைந்தே சென்று மறைந்து விட்டாய்...!

நானல்லவோ வாசல் வழி
உன் பிம்பம் காண்பேனென
நிதம் நிதம் விழி நோக
பார்த்துக்கொண்டே தேய்கிறேன்...!

முறை சோறு ஆக்கிப்போட 
முறைமாமன் வந்து நின்றான்...
சுற்றத்தார் விருந்தோம்பலில்
உண்டு களித்த மயக்கத்திலும்
துரும்பாய் நான் போனேனடா...!

கரம் பற்றி என்னை நீ கரைசேர்க்கும் நாளுக்காய்
நாணம் ஒன்றே நகையாய் பூட்டி
நாயகி நானும் கனகாலம் காத்திருக்கிறேன்...!

ஆடி முடிந்து ஆவணியும் தவறாமல்
வந்து கொண்டே தானிருக்கிறது...! 
என்றோ நீ வருவாய்...! கனவில்லை நிஜம் தருவாய்...!


- இது ஒரு மறுப்பதிவு 

Tuesday 5 November 2013

சொல்லத் தெரியா மனசு...

வாய்விட்டு கதறமுடியாத வலிகளோடு
என் இரவுகளை கடத்துவதென்பது
இப்பொழுதெல்லாம் எனக்கு வாடிக்கையாகி விட்டது...

அர்த்தமற்றதாய் சில இரவுகள்
தனிமைக்குள் தள்ளி விட்டு
என்னை வறுத்தெடுக்கின்றன...

துணைக்கு சில போதை வஸ்துக்களின் கூட்டணி,
என்னை ஆண்டு விட
எப்பொழுதும் தயாராகவே இருக்கின்றன...

இயலாமையின் கோரப்பிடிக்குள்
கொக்கியிட்டு கொண்டதாலோ என்னவோ
இன்றென்னை அவை ஏகபோகமாய்
சுகித்து விட போட்டியிட்டு நெருங்குகின்றன...

உதடுகள் உன்னை தான் உச்சரிகின்றன...
மனமோ இரு கரம் நீட்டி
உன்னிடத்தில் அடைக்கலம் தேடுகிறது...

ஓ... வென கூச்சலிடும் நெஞ்சை
எதுவுமே கேட்காமல்
உன் மாரோடு அணைத்துக்கொள்ள மாட்டாயா என்ற
எதிர்பார்ப்பு - எனக்குள்
திக்குத்திசை அறியாமல் அலைந்தோடுகின்றது....

கோர்வைகளே இல்லாத வெற்று கேவல்கள்
தொண்டைக்குளேயே வெளியிடப்படாமல்
கருக்கலைப்பு செய்யப்படுகின்றன...

இறுதி தருணத்தில் என்னை
ரட்சித்து விட மாட்டாயாயென ஆவேச உந்தல்
எட்டிப்பார்த்து சோர்ந்து அடங்குகிறது...

என்றோ அவை என்னை வென்று
நீ எனக்கு அடிமையென கொக்கரித்ததும் உண்டு...
அன்றெல்லாம் சபதமெடுத்து கொண்டிருக்கிறேன்,
மீள்வேன்... மூழ்கிட மாட்டேனென...

கண்கள் தானாய் சொருகி கொள்கின்றன...
இந்த முறை நான்
உன்னோடு பயணிப்பது போலான கனவு...
விடுபட என் சிறகுகள் துடிக்க வில்லை...
இப்படியே... கனவாய் உறைந்து விடுகிறேன்,
உனக்கே தெரியாமல்...

Monday 4 November 2013

பிசியான நாட்கள் - வலைச்சரமும் ப்ராஜெக்ட்டும்


பெருமதிப்பிற்குரிய பெரியோர்களே, பேரன்புக்குரிய தாய்மார்களே, ஆசை சகோதர சகோதரர்களே, அன்பு தோழர்களே...

அவ்வ்வ்வ் இதுக்கு மேல முடியல... நாம நம்ம ஸ்டைல்ல இறங்கிற வேண்டியது தான். நான் இப்போ உங்க கிட்ட என்ன சொல்ல வரேன்னு எனக்கே தெரியல, அதனால அங்கங்க நீங்க ஏதாவது பாயிண்ட்ட கண்ணால மோப்பம் புடிச்சுட்டு நீங்களே ஒரு முடிவுக்கு வந்துடுங்க...

அப்புறம், ஒரு வாரமா நான் ரொம்ப பிசி. ஓவர் பில்ட் அப் குடுக்காதனு நீங்க பிரம்ப தூக்கி ஜாடையா காட்டுறது தெரியுது, ஆனாலும் உண்மைய சொல்லாம இருக்க முடியாதே. நம்புங்க, இல்லனா அதே பிரம்ப பிடுங்கி உங்கள மிரட்டுவேன்..

சரி, சரி, அப்படி என்ன பிசினு நீங்க கேக்கலனாலும் நான் சொல்லித் தானே ஆகணும். அது என் கடமையாச்சே...

பொதுவா ப்ராஜெக்ட் சப்மிசன்னா அது எப்பவும் ஈவன் (even) செமஸ்டர்ல தான் வரும். அதனால கோர்ஸ் (course) முடிச்சுட்டு போறப்போ தான் இந்த ப்ராஜெக்ட் எல்லாம் சப்மிட் பண்ண வேண்டியிருக்கும். ஆனா இந்த தடவை திருநெல்வேலி மனோன்மணியம் யூனிவர்சிட்டி ரூல்ஸ்ச மாத்திட்டாங்க, அதனால ப்ராஜெக்ட்  ஆட்(odd) செமஸ்டர்லயே வச்சுட்டாங்க. சோ, போன மாசம், அதான் அக்டோபர் 31 ப்ராஜெக்ட் சப்மிட் பண்ண கடைசி நாள்.

நம்ம மாணவ செல்வங்களை தான் நமக்கு நல்லா தெரியுமே (என்னையும் சேர்த்து தான்), எப்பவுமே கடைசி நிமிசத்துல தான் எதையுமே செய்வோம். எல்லாம் முடிச்சுடலாம் முடிச்சுடலாம்னு அதீத நம்பிக்கை வச்சு கடைசி நிமிசத்துல அய்யோ அய்யோனு பதற வேண்டியது.

இங்க இன்னொரு விஷயம் சொல்லணும்ங்க. அதாவது சில கோர்சஸ்ல கைட்னு ஒருத்தங்க இருப்பாங்க, ஆனா ஸ்டுடென்ட்ஸ் வெளில போய் ப்ராஜெக்ட் செய்துட்டு வருவாங்க. காசு குடுத்து அவங்களே தீசிஸ் ரெடி பண்ணி குடுத்துடுவாங்க. கைடோட வேலை முடிச்சு வர்ற தீசிஸ்ல வலிக்காம கையெழுத்து போடுறது மட்டும் தான். உடனே அடிக்க வராதீங்க, இது தான் நாட்டு நடப்பு. எந்த இஞ்சினியரிங் காலேஜ்லாவது அவங்க சொந்த லேப்ல கைட் உக்காந்து சொல்லி குடுக்குராங்களா? சொந்த காலேஜ் காம்பஸ்குள்ளயே ப்ராஜெக்ட் முடிச்ச ஸ்டுடென்ட் உண்டா? இதே தான் இப்போ ஆர்ட்ஸ் அண்ட் சைன்ஸ் காலேஜ்லயும் நடக்குது.

ஆனா என்னோட கோர்ஸ் அப்படி இல்ல, எங்க டிபார்ட்மென்ட்ல ஸ்டுடென்ட்ஸ் யாரையும் வெளில போய் வொர்க் பண்ண விட மாட்டாங்க. ரொம்பவே அட்வான்ஸ் வொர்க்னா மட்டும் வெளில போகலாம். நான் கூட என்னோட வொர்க்காக பெங்களூர், திருவனந்தபுரம்னு போனேன். இன்னும் ஒரு வருஷம் அங்க எல்லாம் வேலை இருக்கு. ஆனாலும் பெரும்பாலான வேலைகள காலேஜ் உள்ள தான் செய்யணும்.

நாங்க வெளில போய் முழு ப்ராஜெக்ட்டையும் பண்ணிக்குறோம்னு யாராவது கேட்டா எங்க எங்களோட தல என்ன சொல்லுவார் தெரியுமா? உங்க அப்பா அம்மா நிறைய சம்பாதிச்சு வச்சிருக்காங்கங்குறதுக்காக நீ வெளில போய் முப்பதாயிரம், நாப்பதாயிரம்னு காச இறைஞ்சு எதையாவது வாங்கிட்டு வந்து தலைல ஒண்ணுமே இல்லாத களிமண்ணா வெளில போக வேணாம், இங்கயே மூவாயிரம் நாலாயிரம் செலவு பண்ணி சின்ன விசயமா இருந்தாலும் எதையாவது கத்துக்கிட்டு போன்னு சொல்லிடுவார். அவர் கிரேட் தானே.... நான் கூட இத பத்தி நம்ம ஜீவா மேடம் கிட்ட கூட கேட்டுருக்கேன், நீங்க என்ன பண்ணுவீங்க உங்க காலேஜ்லன்னு. அவங்க கூட இதயே தான் சொன்னாங்க. அப்போ அவங்களும் கிரேட் தான்.

சரி, விஷயத்துக்கு வருவோம். இந்த மாதிரி உள்ளுக்குள்ளயே ப்ராஜெக்ட் செய்ய வைக்குறதால ஸ்டுடென்ட்ஸ் சில பேருக்கு கடுப்பு. காசக்குடுத்தோமா, ப்ராஜெக்ட் வாங்கினோமா, சப்மிட் பண்ணினோமான்னு இல்லாம, இதென்ன நாங்களே ப்ராஜெக்ட் பண்ணனும், நாங்களே எழுதணும்னு. இந்த பசங்க கூட ஓரளவு ஆர்வத்துல நாம சொல்லி குடுத்தா செய்வாங்கங்க, ஆனா பொண்ணுங்க இருக்காங்களே, முழு சோம்பேறிங்க. இது என்னோட அனுபவம் தான். நான் எல்லோரையும் சொல்லல, எனக்கு ஒரு ஸ்டுடென்ட் இருந்தா, அப்படியே என்னோட டிட்டோ மாதிரியே, அவ்வளவு ஆர்வம் அவளோட ப்ராஜெக்ட்ல. கைல 93% மார்க் வச்சிருக்கா, அப்படினா அவ எவ்வளவு ப்ரிலியன்ட் பாருங்க. அந்த பொண்ணு மட்டும் இல்லனா இந்த ஒரு வாரமா நான் ரொம்ப திணறி தான் போயிருப்பேன்.

இது கிராமத்து பக்கம். இங்க வர ஸ்டுடென்ட்ஸ் எல்லோரும் தமிழ் மீடியத்துல படிச்சிருப்பாங்க. யூ.ஜி பண்ணும் போது கூட தமிழ்லயே எழுதி பாஸ் ஆகிட்டு பி.ஜி வந்துடுவாங்க. இங்க வந்ததுக்கப்புறம் தான் அவங்க இங்கிலீஷ்னா என்னன்னே பாப்பாங்க. முதல் வருஷம் முழுக்க அவங்களுக்கு சின்ன சின்ன இங்கிலீஷ் வார்த்தைகள் கத்துக் குடுத்து, அவங்கள ட்டியூன் பண்ணி கொண்டு வரணும். இங்க தீசிஸ் முழுக்க முழுக்க இங்கிலீஷ்ல இருக்கும். இத அவங்கள விட்டு எழுத சொல்றது கொடுமைன்னு நீங்க நினைக்குறது கண்டிப்பா எனக்கு புரியுது.

ஆனாலும் வேற வழி இல்லையே, ரொம்பவே பொறுமையா தான் சொல்லிக் குடுக்கணும். நிறைய ரெபரன்ஸ் வாசிக்க வைக்கணும், அதுல அவசியமான பாயிண்ட்ஸ் எதுன்னு அவங்கள புரிஞ்சுக்க வைக்கணும். இப்படி தான் நான் எனக்குன்னு ஒதுக்குன ஆறு பேருக்கும் சொல்லிக் குடுத்தேன்.

நாம ஒரு ப்ராஜெக்ட் தனியா எழுதணும்னா ரொம்ப ஈசி, ஆனா அவங்கள எழுத வச்சு, அவங்க எழுதிட்டு வர விசயங்கள வாசிச்சு பாத்தா நமக்கு தலையும் புரியாது, காலும் புரியாது. ஏதாவது ஒரு செண்டென்ஸ்ல இருந்து துண்டு துண்டா எடுத்து போட்டுருப்பாங்க. இது என்னது, எங்க இருந்து பாத்து எழுதினன்னு கேட்டா அவங்களுக்கும் தெரியாது. அப்புறம் அவங்கள உக்கார வச்சு, மறுபடியும் அவங்க கைல இருக்குற ரெபரன்ஸ்ல நாம முழுசா வாசிச்சு, அந்த செண்டென்ஸ் கண்டுபிடிச்சு, இத இப்படி எடுக்க கூடாது, இப்படி எடுக்கணும்னு சொல்லி நிமிர்ரதுக்குள்ள முதுகு வளைஞ்சுடும்.

இது தான் மெண்டல் ப்ரெஸர்னு சொல்லுவாங்க. ஆனா நான் சில சமயம் ரொம்ப கடுமையா அந்த பிள்ளைங்கள எல்லாம் திட்டியிருக்கேன். அவங்கள பாத்தா எனக்கே பாவமா தான் இருக்கும். நான் ஏற்கனவே சொன்னேனே, ஒரு பொண்ணு மட்டும் ரொம்ப புத்திசாலின்னு அவ கூட ஒரு சோம்பேறி தான். அவளும் கடைசி நிமிசத்துல தான் எழுதவே உக்கார்ந்தா. அவளை நான் முடிச்சு விடவே ஒரு நாள் ஆச்சு. மீதி ஆறு நாள்ல அஞ்சு தீசிஸ் ரெடி பண்ணனும். என்ன பண்றதுன்னு ஒண்ணும் புரியல. நானே எழுதி குடுத்துடலாம் தான், ஆனா அப்புறம் யார் அந்த பிள்ளைங்களுக்கு சொல்லிக் குடுப்பா? வாழ்க்கைல இப்போ அவங்க கஷ்ட்டப்பட்டாலும் நாளைக்கு ஒரு நல்ல நிலைமைக்கு வரும் போது கண்டிப்பா நம்ம பெயர நினச்சு பாப்பாங்க.

அந்த ஒரு ஸ்டுடென்ட் பிரிலிமினரி வொர்க்ஸ் எல்லாம் பாத்துகிட்டா. நான் அப்புறமா வர கரெக்சன் எல்லாம் பாத்துக்கிட்டோம். அந்த ஒரு வாரமும் எல்லா பிள்ளைங்களும் என் வீட்ல தான் ராத்திரி தங்கினாங்க. தூக்கம் கூட யாருக்கும் கிடையாது. எனக்கு இருந்த மெண்டல் ப்ரெஸர்க்கு வடிகால் இந்த பேஸ் புக் தான். அப்பப்போ எட்டிப் பாப்பேன். பத்து நிமிஷம் பிரேக் எடுத்துப்பேன். அப்புறம் பேக் டு வொர்க்.

சாப்டுற சாப்பாட கூட மறந்து, அப்படியே நான் மட்டும் உக்காரல, அந்த பிள்ளைங்களும் தான். முதல்ல முரண்டு பிடிச்சாலும், அப்புறம் நான் சொல்லிக் குடுத்தத புரிஞ்சுகிட்டு, சரியா செய்யலைனா நான் சப்மிட் பண்ண விட மாட்டேங்குரதையும் புரிஞ்சுகிட்டு அவங்க என் வழில வர ஆரம்பிச்சுட்டாங்க. சந்தேகங்கள்னு வரும் போதெல்லாம் என்கிட்டயோ இல்ல, அந்த இன்னொரு ஸ்டுடென்ட்கிட்டயோ கேட்டு கேட்டு தெரிஞ்சுகிட்டாங்க. அந்த பொண்ணும் அவ வேலை முடிஞ்சுதுன்னு வீட்டுக்கு போகாம, எங்க கூடவே தங்கிட்டா.

இந்த நேரத்துல தான் வலைசரத்துல இருந்து எனக்கு ஆசிரியரா இருக்கீங்களான்னு அழைப்பு. அக்டோபர் 31-க்கு அப்புறம் நான் ப்ரீ தான், வேணும்னா அப்போ இருக்கவான்னு கேக்கலாம்னு ஒரு நிமிஷம் நினச்சேன், அப்புறம்,ச்சே ச்சே, வேணாம் வேணாம், நம்மள நம்பி கேக்குறாங்க, நம்ம கஷ்டம் நம்மோட, அதோட பயங்கர மெண்டல் ப்ரெஸ்ஸர்ல இருக்குறப்போ இது நமக்கு கண்டிப்பா நல்ல ரிலீப். கிடைக்குற கேப்ல எழுதிடலாம்னு நினச்சு தான் சரின்னு தலையாட்டிட்டேன். அப்படி நான் எழுதின பதிவுகள கண்டிப்பா நான் நியாபகார்த்தமா வச்சிருக்கணுமில்லையா?
அதெல்லாம் இது தான்...
   
இந்த நேரத்துல தீபாவளி வேற வந்ததால என்னோட பதிவுகள் நிறைய பேர போய் சேரலன்னு ஒரு சின்ன வருத்தம் மனசுக்குள்ள இருக்கத்தான் செய்யுது. ஆனாலும் எதோ என்னால முடிஞ்சத நான் பண்ணிட்டேன்ங்குற திருப்தியும் கூடவே இருக்கு.

இத்தன களேபரத்துக்கு நடுவுல வெற்றிகரமா ஆறு பேரையும் தீசிஸ் சப்மிட் பண்ணவும் வச்சுட்டேன். அதுவரைக்கும் என்னை பற்றி அவங்க என்ன நினச்சாங்கன்னு எனக்கு தெரியாது, ஆனா எல்லாம் சப்மிட் பண்ணிட்டு, பெருசா ஒரு பெருமூச்சோட சிரிச்சுகிட்டே, ரொம்ப தேங்க்ஸ் மேடம்ன்னு சொன்னாங்க பாருங்க, நான் பட்ட கஷ்டத்துக்கெல்லாம் பலன் கிடைச்சிடுச்சு.  

இதோ, இப்போ வேற ஒரு கைடோட ஸ்டுடென்ட், அவ எழுதினத ரீ-சப்மிட் பண்ண சொல்லிட்டாராம் அவளோட கைட். அவளுக்கு ஹெல்ப் பண்ண முடியுமான்னு என் கைட் கேட்டாங்க... நாம எப்போ இந்த விசயத்துல முடியாதுன்னு சொல்லியிருக்கோம், சரின்னு சொல்லிட்டேன். இதோ, அவ வந்துட்டா. அவளுக்கு சொல்லி குடுக்க வேண்டியத சொல்லிக் குடுத்துட்டு, அவள எழுத வச்சுட்டு, நான் இத எல்லாம் உங்க கிட்ட சொல்லிட்டு இருக்கேன்.


இப்போ வேலைய பாக்கணும், வர்ட்டா....