Saturday 25 November 2017

மனிதம் எப்போ மலரும்?







Pink படத்துல ஒரு காட்சி வரும்.

ஃபலக் (Falak)ங்குற பெண் ஒரு வயசான ஆண் கூட relationship வச்சிருக்குறதாகவும், அதுக்காக அவ அவர்கிட்ட இருந்து காசு வாங்கினதாவும் சொல்லுவார் எதிர்தரப்பு வக்கீல். அதே மாதிரி அவர் கட்சிக்காரர்கிட்ட sexual relationship வச்சுக்க காசு வாங்கிட்டு, அவர தாக்கினார்ங்குறது குற்றசாட்டு.

அந்த குற்றசாட்டு உண்மை இல்லங்குறதால Falak துடிதுடிச்சு போவா. அதெல்லாம் பொய், நிஜமில்லன்னு அழுதுட்டே இருக்குறவ, ஒரு கட்டத்துல “ஆமா, நான் காசு வாங்கினேன், அதுக்கென்ன இப்ப? அதுக்காக அவன் கூட படுத்துட முடியுமா?”ன்னு கத்துவா.

அதோட அந்த குற்றசாட்டு ஒரு முடிவுக்கு வரும்.

அதே படத்துல குற்றவாளி ராஜ்வீர் பெண்கள குடிக்குறாங்க, அதனால அவங்க மோசமானவங்க, குடும்பத்து பொண்ணுங்க குடிக்க மாட்டாங்கன்னு சொல்லுவான். அவன் தங்கச்சி குடிக்குற போட்டோவ எடுத்து காட்டினதும் என் குடும்பத்த ஏன் அசிங்கப்படுத்துறீங்க, அது family party-ன்னு கதறுவான்.

சமீபத்திய தரமணி படத்துல ரெண்டு காட்சிகள் வரும்.

தன்னை மதிச்சு பாக்க வந்த ஆண்கிட்ட மனசுவிட்டு தன்னோட வேதனைகள பகிர்ந்துகிட்டு இருக்குற நேரம் பாத்து அவளோட புருஷன் உள்ள வந்துருவான். பதறிப்போய் அவன ஒழிச்சு வைப்பாங்க அந்தம்மா. ஆனாலும் புருஷன் கண்டுபுடிச்சிருவான். அவங்க character மேல பழி போட்டு தொடர்ந்து அவன் டார்ச்சர் பண்ண, ஒரு கட்டத்துல, “ஆமாடா, அவன் சூப்பரா பண்ணினான்”ன்னு சொல்வாங்க.

அதே மாதிரி தான் ஹீரோயின்கிட்ட அவளோட காதலன் சந்தேகப்பட்டு பழி போடுவான். அவளும் பொறுத்து பொறுத்து பாத்துட்டு “ஆமா. அப்படித்தான் பண்ணினேன்”ன்னு சொல்லுவா.

இதெல்லாம் படங்கள்ல வந்த சீன்ஸ். சம்மந்தப்பட்ட பெண்களை tension-னோட உச்சக்கட்டத்துக்கு கொண்டு போய் அவங்கள கதற வைக்குற சீன்ஸ். மத்தவங்கள குத்தம் சொல்லி சந்தோசப்படுற sadist மனோப்பான்மை இதுல வெளிப்படும். பதற்றமும் கோபமும் கண்ணீருமா இத அந்த பெண்கள் சொல்றப்ப நாம உச்சுக்கொட்டுறோம், பரிதாப்படுறோம், கண்ணீர் வடிக்குறோம்....

ஆனா நிஜத்துல ஒருத்தங்க மேல பழி போடுறப்ப, திரும்ப திரும்ப அவங்க character பத்தியே பேசுறப்ப, அசரம, கண்ணீர் விடாம, கதறாம, கோபப்படாம நக்கலா “ஆமாடே, அப்படித்தான். அப்படி ட்ரை பண்ணியும் ஒருத்தனும் வொர்த் இல்ல”ன்னு பதிலடி குடுத்தா, அப்போ என்ன பொம்பள இவன்னு நமக்கு சம்மந்தப்பட்ட பெண் மேல கோபம் வரும், தாக்குற எதிராளி ஹீரோவாகி போவான் அதானே. இதெல்லாம் ஒரு sadist மனப்பான்மை தவிர வேற என்ன?

நம்ம மனசு இந்த மாதிரியான வார்த்தைகளை கேட்டா ஒரு பொண்ணு அழணும், கண்ணீர் விடணும், ஆற்றாமைல நிலைகுலையணும்னே விரும்புது. அதுக்கு எதிரா ஒரு சம்பவம் நடந்தாலும் நம்மோட சாடிஸ்ட் மனோபாவம் அத ஒத்துக்குறதே இல்ல.

இதுக்கெல்லாம் காரணம் என்ன தெரியுமா?

ஒரு பொண்ணை, எல்லா கெட்ட வார்த்தையாலும் திட்டி, என்கூட வந்து படுடின்னு கூப்ட்டு, இன்னும் டாஷ் டாஷ் வார்த்தைகள் எல்லாம் சொன்னா, ஒரு சராசரி பொண்ணு என்ன செய்வா? பதறி துடிச்சு, முடங்கி போவா, இல்ல தற்கொலை பண்ணிப்பா... அது தான் நம்மோட பண்பாடு, கலாச்சாரம்.

ஆனா ஒரு பெண்ணை கருத்தியல் ரீதியா எதிர்க்காம கெட்ட வார்த்தைகள் பேசி அடக்கலாம்னு ஒரு சிலர் முயற்சி பண்ணினப்ப அவங்க அதே வார்த்தைகள திருப்பி எதிராளிய நோக்கி வீச, ஒரு பெண் இப்படி எல்லாம் பேசலாமான்னு பதற ஆரம்பிச்சாங்க.

ஒரு பெண்ணை முடக்க இந்த ஆயுதத்த தானே ஆண்கள் கையில எடுக்குறாங்க. அதுவே, ஆமாடா, நான் அப்படித்தாண்டான்னு சொன்னதும் இல்லாம, நானும் பலபேர்கிட்ட try பண்ணி பாத்துட்டேன், ஆனா ஒருத்தனும் வொர்த் இல்லன்னு அவனோட ஆண்மை மேல ஒரு அடி குடுத்து பாருங்க, ஆடிப் போவாங்க.

அதுக்கு மேல அவங்களால என்ன குற்றம் சாட்ட முடியும். அப்புறம் அவங்க செய்றது முழுக்க புலம்பல்கள், கழிவிரக்கம், சுயபட்சாதாபம் தான். ஒரே வார்த்தைகள திரும்ப திரும்ப சொல்லி புலம்புவாங்க. என்ன செய்தாலும் அடங்க மாட்டேங்குறாளேன்னு எரிச்சல் படுவாங்க. அடுத்து எடுத்து தாக்க அவங்ககிட்ட ஆயுதமும் இருக்காது.

எல்லாம் சரிதான், இப்படி ஒருத்தன் எறியுற சாக்கடைய எதுக்கு நாமளும் எடுத்து வீசணும்? அது நமக்கு தானே அசிங்கம்னு இப்ப தோணலாம்.

பெண்ணியம் பேசுறவங்களும், அவன் ஆண், அவன் ஆயிரம் பேர் கூட போகலாம், ஆனா ஒரு பெண் எப்படி அப்படி நடந்துக்க முடியும்ன்னு பதறுறாங்க. வெறும் வாய் வார்த்தைகளுக்கே ஏன் இத்தனை பதட்டம்?

ஆனா எத்தனை நாள் மவுனமாவே இருந்துட முடியும்? அப்படியே மவுனமா இருந்துட்டா மட்டும் சும்மா விட்டுட போறாங்களா என்ன? நாம மவுனமா இருக்குறது தானே அவங்களுக்கு advantage?

இப்போ இதெல்லாம் நமக்கு கலாச்சார பண்பாட்டு சீரழிவா தான் தெரியும். ஆனா அடங்கி கிடந்த ஒவ்வொரு பெண்ணும் பேச ஆரம்பிச்சா, கொஞ்சம் கொஞ்சமா ஒரு சமத்துவம் மலரும். இதுக்காக யாராவது ஒருத்தங்க எங்கயோ ஒரு விதைய போட்டு தானே ஆகணும்....

உடனே அப்படி ஒவ்வொரு பொண்ணும் வேற ஒரு ஆண் கூட போய் தான் சமத்துவம் மலரணும்னா அப்படி ஒரு சமத்துவமே எங்களுக்கு வேணாம்னு பதறாதீங்க.

பெண்ணியவாதிகளின் அடிப்படை கோரிக்கையே, விரும்பியவனுடன் உறவு கொள்வதுன்னு நிறைய பேர் புரிஞ்சு வச்சிருக்காங்க. அது அப்படி இல்ல, எப்போ ஒரு ஆண் ஒரு பெண்ணை புரிஞ்சுக்குறானோ அப்பவே அந்த பெண்ணுக்கான தேடல் சரியான விகிதத்துல நிறைவேற ஆரம்பிச்சுடும். நீங்களே புடிச்சு தள்ளினாலும், நான் எப்படி இருக்கணும்னு எனக்கு தெரியும்னு அவ கெத்தோட வீறு நடை போடுவா.

இங்க எண்ணங்கள் தான் பிழை, பதறுதல் தான் பிழை. அவங்கவங்க வாழ்க்கைய தீர்மானிக்க வேண்டியது நாம இல்ல, அவங்கவங்க தான்னு புரிஞ்சாலே போதும், நமக்கு பதறல் வராது. யாரையும் தப்பா எண்ணவோ பாக்கவோ தோணாது. யாரும் யாருக்கும் துரோகங்கள் செய்ய தோணாது...

புரிதல்களோட உள்ள இணைகள் தோன்ற ஆரம்பிக்கும்....

அவ்வளவே....




Tuesday 15 August 2017

“தற்கொலைக் கடிதம்” ஒரு பார்வை – கிருஷ்ண கோபால்



02/ 07/ 2017 இலைகள் இலக்கிய இயக்கத்தில் வாசிக்கப்பட்டது
.......................................................................................................................................

தமிழ் சிறுகதை உலகம் உலகச் சிறுகதைகளுக்கு இணையான பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியிருக்கிறது. புதுமைப்பித்தன் தொடங்கி ஜானகிராமன், சுந்தர ராமசாமி, அம்பை, ராம கிருஷ்ணன், ஜே.பி. சாணக்கியா, பாலசுப்பிரமணியம் பொன்ராஜ், எஸ்.செந்தில்குமார், எஸ்.ஜே.சிவசங்கர் வரையிலும் புதிது புதிதாய் எழுத்தாளர்கள் உருவாகிக்கொண்டே இருக்கிறார்கள். படைப்பாளிக்கான எழுத்துச்சுதந்திரம் பாதிக்கப்படும் வரை இந்த பாய்ச்சல் நிகழ்ந்துக் கொண்டேயிருக்கும்.

தமிழில் யதார்த்த எழுத்தின் காலம் முடிந்துவிட்டது என்றால் இல்லை. அதை விவாதத்திற்குள்ளாக்கி புரிந்துக்கொள்ள முயற்சிக்க வேண்டும். ஜீவாவின் கதை உலகம் என்னப் பேசுகிறது, அவரின் கதை மாந்தர்கள் யார், நவீன கதைச்சொல்லியாக இருக்கிறாரா இல்லையா, பாடுபொருள் என்ன என்பதைப் பற்றிப் பேசலாம்.

வலி, வேதனை, துயர், புறக்கணிப்பு, அன்பு, காதல், பாசம், கொண்டாட்டம், பழமை, மரபை விடாமை என உணர்வுகளின் சங்கமமாக அவரின் அக உலகம் பெண்ணின் வெளியாக கதையில் விரிவுக்கொள்கிறது.

இத்தொகுப்பில் மொத்தம் பெரியதும் சிறியதுமாக 20 கதைகள் இருக்கின்றன. இக்கதைகளில் நான் பொருட்படுத்தி பேசும் கதைகளாக கன்னிப்பூசை, சாகசப்பயணம், அப்பா, இருப்புக்குழி, ராக்காயி வீட்டு மருமக, மாதவன் சார் நலம் போன்ற கதைகளைச் சொல்வேன்.

சிறுகதைகளுக்கான வடிவம் வேறு, கதைக்கான வடிவம் வேறு. தற்கொலைக் கடிதம் தொகுப்பில் அனேகமாக எல்லாம் கதைகள் தான் ராக்காயி வீட்டு மருமவ மற்றும் சாகசப்பயணம் போன்ற கதைகள் சிறுகதையின் கூறுகளை சிறிது கொண்டிருப்பதாக நினைக்கிறேன்.

சில நேரங்களில் இது கதைகளா இல்லை சுயவரலாறா என்கிற சந்தேகம் உண்டு. பொதுவாக அனேக கதைகளில் ஆசிரியர் தன் வாழ்வில் எதிர்கொண்ட பிரச்சனைகளை அப்படியே இன்னொருவரிடம் சொல்லும் யுக்தியை தான் அதிகம் பயன்படுத்தியிருக்கிறார். இது பெரும்பாலும் ஒருவரின் கதைதான் என்கிறபோது சற்று சலிப்பு மேலிடுகிறது.

எழுத்தாளர் தன் சொந்த அனுபவங்களை எழுதக் கூடாதா என்றால் எழுதலாம். ஆனால் வேறு வேறு வடிவத்தில் கதைகள் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். உண்மையைச் சொன்னால் கதைகளில் உயிர் இருக்கிறது, உடல் இல்லை. இதை இப்படி வேண்டுமானால் சொல்லலாம், உள்ளடக்கம் உள்ளது, வடிவம் இல்லை எனலாம்.

ஜீவாவின் கதைகளில் எனக்கு பிடித்த அம்சமம் கதை வாசிக்க தடையில்லாத ஒரு ப்ளோவைதான் சொல்ல வேண்டும். அதுக் கூட பொது மொழிதான் என்றாலும் நாம் அதை ஏற்றுக் கொள்ளலாம். நினைத்ததை எழுத்தில் கொண்டு வந்துவிடும் மொழி ஆளுமை இருப்பதாகவே நம்புகிறேன். ஜீவாவின் வாழ்வின் அனுபவங்களை மதிக்க வேண்டும். அவர்தம் வாழ்வியல் சூழலுக்குள் அவரின் இடம் என்ன என்பது புரிகிறது.

பழமை மரபு மீது ஆசிரியருக்கு இருக்கும் ஈடுபாடும் மதிப்பையும் இருப்புக்குழி மற்றும் கன்னிப்பூசை கதைகள் சொல்லிச் செல்கிறது. வட்டார மரபை உயர்த்திப்பேசும் சிறுகதைகள் இவைகள் எனலாம். முதலில் கன்னி பூசை பற்றி விரிவாக பேசலாம்.

ஒரு குடும்பத்தில் உள்ள ஆணோ பெண்ணோ இறந்துப் போனால் அவர்களை தெய்வமாக நினைத்து வழிபடும் மரபு தென்புலத்தில் உண்டு. கன்னியாக வழிபடத் தொடங்கியதும் குடும்பத்தில் உள்ள ஒரு நபரின் மீது கன்னி வந்து குடும்பத்தில் உள்ள நல்லது கெட்டது சொல்லும். குடும்பத்தை வாழ வைக்கும் கன்னிக்கு தென்மேற்கு மூலை எனப்படும் கன்னி மூலையில் மேடை எழுப்பி, கன்னிக்கு பிடித்தமான பொருட்களை படையலிட்டு வருடத்திற்கொரு முறை பூசைக் கொடுப்பார்கள்.

கணேசன் மாமா சிறுவயதில் இறந்து விடுகிறார். அவரை கன்னியாக வழிபட தொடங்குகிறார்கள். குடும்பத்தில் உள்ள பிற மாமாமார்களுக்கு கல்யாணமாகிறது. கூட்டுக்குடும்பம் தனித்தனியே பிரிந்துச் செல்கிறது. கணேசன் மாமாவின் அண்ணன் நாராயணன். நாராயணனின் மனைவி சங்கரி. சங்கரி மீது கன்னித் தெய்வம் வந்து அருள் சொல்கிறது. குடும்ப பிரிவினை காரணமாக தனியே இருக்கிறார் நாராயணன் மாமா. கன்னிக்கு பூசை கொடுக்கும் போது சங்கரி மாமி மீது ஆராதனை வந்து தொலைவிலிருக்கும் வீட்டுக்கு வந்து விடுவாள். சிதறிப் போன கூட்டுகுடும்பத்தை எப்படி கன்னி தெய்வம் இணைத்து வைக்கிறது என்பது தான் கதையோட ஜீவனாக நான் கருதுகிறேன்.

அடுத்து இருப்புகுழி கதையைப் பற்றிச் சொல்லியாக வேண்டும். இருப்புகுழி என்பது அய்யா வழி மரபில் உள்ள ஒரு மரணச் சடங்கின் முக்கிய கூறு. இறந்து போன ஒருவர் ஊரில் முக்கிய நபராக இருக்கிறார். வயதானவர், மதிப்புமிக்கவர், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட கால் பெருவிரலை இழந்து சாக்ஸ் காலோடு அலைபவர். விரலை இழந்தவர் தன் மானத்தை இழந்ததை போல் நொந்துப் போகிறார். நோய் முற்றி ஒரு காலை எடுக்க வேண்டும் என்கிற சூழலில் காலை இழப்பதற்கு முன்பே இயல்பாக மரணம் அவரை தழுவிக் கொள்கிறது. இது சிறுகதையின் மேல் சரடு. இறந்து போனவரை இருப்புக் குழிக்குள் புதைத்து கல்லறை தோட்டம் அமைத்தார்கள் என்பது இன்னொரு சரடு.

பொதுவாக கிறிஸ்ட்டியானிட்டியின் பாதிப்பால் அய்யா வழியில் கூட இறந்தவரை புதைப்பதற்கு இருப்புக்குழி எடுத்துப் புதைக்க மெனக்கெடுவதில்லை. அவர்கள் படுக்கை நிலையிலுள்ள கல்லறைப்பெட்டியையே பயன்படுத்த தொடங்கி விட்டார்கள். ஏனெனில் அய்யாவழிக்காரர் ஒருவர் இறந்துவிட்டார் என்றால் உடனே அவரை சம்மண நிலையில் கால்களை மடித்து வைத்து, கைகளை மார்பு கூடோடு ஒட்டி, தவநிலையில் உக்கார வைத்து விடுவார்கள். இது துரிதமாக நடக்க வேண்டியப் பணி. சற்று தாமதித்தாலும் கைகால்களை நாம் நினைத்தப்படி நிமிர்த்தமுடியாது. உலகமயமாக்கலின் தாக்குதல் நிகழ்ந்தபின் மீடியாக்களின் பெருக்கத்தால் பொருள் மட்டுமே வாழ்க்கையில் முக்கியமென்றும், மனித மதிப்பீடுகள் வீழ்ச்சியடைந்தபின் எவருமே மரணசடங்கில் இருப்புக்குழி மரபை பேணுவதில்லை.

என் தாத்தாவையும் பாட்டியையும் இருப்புக்குழி அமைத்துதான் அடக்கம் செய்தார்கள். என் மாமா இறந்தபோது அவரை கிருஸ்டியானிட்டி முறைப்படி கல்லறைப் பெட்டியில் வைத்து அடக்கம் செய்தார்கள். இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் மாமா இறந்தது வெள்ளிக்கிழமை, அவரை அடக்கம் செய்தது சனிக்கிழமை. அடக்கம் செய்யும் போது ஊர்க்காரர்கள் சனிப்பிணம் தனியே போகக்கூடாது என்றுச் சொல்லி ஒரு சேவல் கோழியை உயிரோடு குழிக்குள் போட்டுப் புதைத்து விட்டார்கள். உயிர்பலிக்கு எதிரான அய்யாவழியில் சிறுதெய்வ வழிபாட்டின் மரபில் பின்பற்றப்படும் உயிர்பலியை இங்கே ஏற்றுக்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டது.

வாழ்வே ஒரு புதிர் நிறைந்தது. முரண்நகையோடுதான் இயங்குகிறது போலும். மரபு என்பது இனக்குழு வாழ்வில்தான் பராமரிக்கப்படுகிறது. ஜீவாவின் இருப்புக்குழி கதையில் இரண்டு விஷயங்கள் முரண் நகையாக தோன்றியது. ஒன்று இறந்து போன பெரியவரை வடக்குப்பார்த்து தவநிலையில் வீட்டிற்குள் வைத்திருக்கும் போது பக்கத்தில் பத்தி மணத்துக்கொண்டிருக்கிறது. இரண்டாவது இருப்புக்குழி அமைத்து சடலத்தை மூடியபின் மார்பிள் கல் கொண்ட கல்லறைத் தோட்டம் அமைத்தார்கள் என்று வருகிறது. இது பத்தி கொளுத்தி வைத்திருக்கிறது என்பது பிராமண மதமான இந்துமத மரபையும், கல்லறைதோட்டம் அமைத்தல் என்பது கிறிஸ்ட்டியானிட்டி மரபோடு தொடர்பும் கொண்டது. கால மாற்றம் இனக்குழுவாழ்வின் வீழ்ச்சி இவை எப்படி ஒரு பூர்வீக மரபை உடைத்து ஒரு நகலாக உருமாறுகிறது என்பதை கதை வழியே உணர முடிந்தது. இந்தத் தொகுப்பில் உள்ள முக்கியமான கதையாக நான் இதை உணர்கிறேன். இருப்புக்குழி கதையில் மிளிரும் முரண் நகை ஒரு பெரும் கலாச்சார மாற்றத்தை மறைமுகமாக குறிப்பிடுகிறது என்பது கதையின் சிறப்பம்சங்களில் ஒன்று.

பானிபூரியும் மசாலாபூரியும் ஒரு விளையாட்டான சிறுகதை தான். நவீன மனிதர்கள் தங்கள் உணவு வகைகளில் பல மாற்றங்களை விரும்புகிறார்கள். உலகமயமாக்கலுக்குப்பின் பிராய்லர் கோழிகளின் வருகை அது எப்படி உருவாக்கப்படுகிறது, அதன் சதை ஏன் இவ்வளவு மிருதுவாக இருக்கிறது, ஏன் இவ்வளவு சுவையாக இருக்கிறது என்கிற வரலாறுத் தெரியாமலேயே நம் தலைமுறைகள் தொடர்ந்து உட்கொண்டதன் விளைவு ஆண்மை குறைபாடு, பெண்கள் சீக்கிரமே பூப்பெய்தல், மாதவிடாய் கோளாறுகள், உடல் குண்டாகுதல் போன்ற செயற்கையான நோய்களுக்கு நாம் ஆளாகவேண்டியிருந்தது. இந்த உணவை உண்டதின் நீட்சியாகவே பரோட்டா, பானிப்பூரி, மசாலாப்பூரி போன்ற நம் கலாச்சாரத்திற்கு ஒத்துக் கொள்ளாத உணவு வகைகளை நான் உட்கொள்கிறோம். நான் குறிப்பிட்டது இந்த சிறுகதைக்கு வெளியே நிற்கிறது என்றாலும் இதைக் குறிப்பிட்டாகவேண்டியிருக்கிறது.

தற்கொலைக்கடிதம் கதை, கதையின் சாராம்சத்திலிருந்து சிறிதும் மாறாமல் அழுத்தமான வடிவமாக, இப்புத்தகத்தில் பிரசுரிக்கப்படாத பரோட்டாவுக்கு பின்னால் உள்ள ரகசியம் சிறுகதையில் அழுத்தமாக வெளிப்படுகிறது.

சாகசப்பெண் கதையில் கொடுமையான நோயிலிருந்து மீண்டு வரும் பெண் கார் ஓட்டுகிறாள், அப்பாவிடம் அன்பு கொண்டவளாக இருக்கிறாள். இக்கதையில் வாழ்வை எதிர்கொள்ளும் விதம் அலாதியானது.

ஒரு கேன்சர் நோய்க்கு மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்ளும் பெண் எப்படி அவளைப் போல் கேன்சர் ஆரம்ப நிலையில் இருக்கும் மனதளவில் சோர்ந்து போயிருக்கும் ஒருவருக்கு கவுன்சிலிங் கொடுக்கிறாள், எப்படி படிப்படியாக அவன் நம்பிக்கைக் கொண்டு சிகிச்சைப் பெறுகிறான், சிகிச்சைப் பெற்று அவன் குணமாகிறான் என்பதை உளவியல் பார்வையில் அணுகியிருக்கும் சிறுகதை இது.

கதாசிரியரின் பாடுபொருள் அனேகமாக குடும்ப உறவுகளைச் சார்ந்தே இயங்குகிறது. அப்பா, அம்மா, தம்பி, மாமா, மாமி, மாடுகளோடு உள்ள உறவுகள் என்றே நீள்கிறது. லெச்சுமி என்ற பசுமாடு கன்றுக்குட்டி ஈனும்போது நெஞ்சடியையும் தூக்கமின்மையும் கதாபாத்திரங்கள் உணர்ந்ததுபோல் வாசகனும் அந்த உணர்வை பெற வைத்தச் சிறுகதை.

பழம் நம்பிக்கையோடு பின்னிப்பிணைந்து வாழும் உறவுகள் கிராமத்து எளிமையான மனிதர்கள், ஒரு பெண் சுதந்திரப்பறவையாக ஊர்சுற்ற நினைக்கிறாள், அவளை அடக்கி வைக்க நினைக்கிறது குடும்பம். கட்டுப்பாட்டை உடைத்து இளங்கன்று பயமறியாது என்பது போல் திக்கற்று சுற்றுகிறாள். பட்டாம்பூச்சியை கண்டு குழந்தைப்போல் குதூகலிக்கிறாள், வழியில் நடந்து செல்லும் யானையைக் கண்டதும் மகிழ்வுக் கொள்கிறாள். கட்டியணைக்கத் துடிக்கிறாள். இப்படியாக பெண் வெளி தன் ஒடுக்கப்பட்ட சமூக அமைப்பிலிருந்து வெளியேறத் துடிக்கும் கதை பானிபூரியும் மசாலா பூரியும்.

இவ்வாறு பல கதைகளில் வெவ்வேறு பெயர் தாங்கி வரும் பெண் கதாபாத்திரம் ஆசிரியரே என்பதை கதை வாசிக்கும் போதே எளிமையாக உணர முடிகிறது. இந்த சிறுகதைகளை ஒன்றாக்கி சற்று கூடுதலான காலங்கள் எடுத்து ஒரு நாவல் எழுதியிருக்கலாமோ எனத் தோன்றுகிறது. நாவல் எழுதுவதற்கான ஒரு ப்ளோ எழுத்து மொழியில் ஜீவாவுக்கு கைகூடியிருக்கிறது என்றே நம்புகிறேன்.

ராக்காயி வீட்டு மருமவ கதை பெண்ணின் மாதவிடாய் பிரச்சனையைப் பற்றிப் பேசிப் போகிறது. சமீபத்தில் முகநூலில் மாதவிடாய் பற்றி ஒரு ஆணிடம் ஏன் பேசக்கூடாது என்ற கட்டுரையையும் இச்சிறுகதையோடு இணைத்துப்பார்க்கிறேன். இரண்டும் வெவ்வேறு தளம் என்றாலும் ஒரே பிரச்சனையைப்பற்றிப் பேசிச் செல்கிறது. பொதுவாக கதைகள் அனேகமாக பாதியிலேயே முடிந்து போய் விடுகிறதோ என்று நினைக்கிற அளவுக்குச் செல்கிறது. அது இன்னும் நீண்டுச் செல்லலாம். அதற்கான வெளி அக்கதைகளில் இருக்கிறது. நாம் சொல்ல வந்ததை சொல்லிவிட்டோம் என்கிற குழப்பம் ஆசிரியருக்கு இருப்பதாக உணர்கிறேன்.

கிட்டத்தட்ட எல்லா கதைகளிலும் ஆசிரியர் ஒளிந்திருந்து எல்லாவற்றையும் சொல்முறை யுக்தியிலும் நினைவோடை யுக்தியிலும் உரையாடுகிறார். ஆனால் சிறந்த சிறுகதையில் ஆசிரியர் யார் என்று வாசகன் கண்டுபிடிக்க இடம்கொடுக்க கூடாது என்பது என் எண்ணம்.

என்னுடைய கதைத்தொகுப்பை விமர்சனம் வைக்கின்ற அளவுக்கு தீவிரமாக எதுவும் இல்லையென்று ஒருமுறை சொல்லியிருக்கிறார் கதை ஆசிரியர் ஜீவா. ஆனால் எந்த ஒரு படைப்பாக இருந்தாலும் அது வெளியில் வந்ததும் அதுப்பற்றி ஒரு சரியான விமர்சனம் வந்தால்தான் ஆரோக்கியமாக இருக்கும் என்று நினைக்கிறேன். அப்பொழுது தான் படைப்பாளி அடுத்தக் கட்டத்திற்கு போக முடியும். படைப்பு ஆழமும் விரிவும் கொள்ளும். அதனால் விமர்சனத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இன்னும் கொஞ்சம் பொறுமையாக இந்தத் தொகுப்பை கொண்டு வந்திருக்கலாம் என்பது என்னுடைய எண்ணம். உங்களை சுற்றி இருந்தவர்கள் இதை உங்களிடம் சொல்லியிருக்கலாம். சற்று தாமதித்து கொண்டு வந்திருந்தால் இன்னும் சிறப்பாக பேசப்பட்டிருக்கும்.

தொடர்ந்து வாசியுங்கள், எழுதுங்கள், இதைவிடவும் சிறப்பான கதையை பதிவுச் செய்யுங்கள்.

இலக்கிய உலகிற்கு அடியெடுத்து வைத்து சிறுகதை தொகுப்பை கொண்டு வந்த உங்களுக்கு அன்பும் வாழ்த்தும்.

Saturday 4 March 2017

செல்ல சண்டைகள்




நாகர்கோவில்ல நடக்குற தேசிய புத்தக கண்காட்சிக்கு பொன்னீலன் சார் கூட போயிருந்தேன்...


காலேஜ்ல இருந்து வீட்டுக்கு வந்து, அவர கூப்பிட கிளம்பி போகவே ரொம்ப லேட் ஆகிடுச்சு. என்னை பாத்ததும் பொன்னீலன் சார் மனைவி, எம்மா நல்லா இருக்கியான்னு கேட்டதோட, கொஞ்சம் இரு, என்னை இருளப்பப்புரம் கோவில்ல இறக்கி விட்டுருவியான்னு கேட்டாங்க...


சரின்னு அவங்களையும் கார்ல ஏத்திகிட்டு, வர்ற வழில வர்சுவையும் ஏத்திகிட்டு கிளம்பினோம்.


சில நேரம் ரெண்டு பேர் பேசுறத வேடிக்கை பாக்குறதே அத்தன சந்தோசமா இருக்கும். அதுவும் முகவாய தோள்ல இடிச்சுக்குற மாதிரி செல்ல சண்டைகள் நடந்தா கேக்கவே வேணாம், செமையா வேடிக்கை பாக்கலாம்...


"இந்தா ஒரு ஜன்னல மட்டும் பூட்டிகிட்டு கோயிலுக்கு காணிக்க வைக்க ஒரு தேங்காயும் உரிச்சுகிட்டு இப்ப ஓடி வரேன்"ன்னு போனவங்கள கொஞ்ச நேரமா காணோம். ஒருவழியா அவங்க வந்ததும் "நம்ம ஊரு பொம்பளைங்க நேரம் காலம் பாக்க மாட்டாங்க"ன்னு சொல்லிகிட்டே பொன்னீலன் சார் கூடவே ஒரு பழமொழியும் சொன்னார்.


அதென்னமோ தெரியல, அந்த பழமொழி எனக்கு இப்ப மறந்து போச்சு. அடுத்த தடவ அவர பாக்குறப்ப நெனவு வச்சு அது என்னன்னு கண்டிப்பா கேக்கணும்.


"இன்னிக்கி பிள்ள வந்ததால என்னால கோயிலுக்கு போவ முடியுவு"ன்னு சிரிச்சுகிட்டே அவர சட்டைப்பண்ணாம கார்ல ஏறி உக்காந்தாங்க.


"நீ அந்த சிவன் கோயிலுக்கு போயிருக்கியாமா? ரொம்ப சிறப்பு வாய்ந்த கோவில் அது"ன்னு அவங்க கேட்டதும் எனக்கு கொஞ்சம் திணற ஆரம்பிச்சுது. பின்ன, நாம தான் எந்த கோவிலுக்கும் போக மாட்டோம்ல....


"இல்லல, நான் கோயிலுக்கெல்லாம் போறது இல்ல"ன்னு சொன்னேன். அதுக்குள்ள சாமி பத்தி பெருமையா அவங்களும், "நல்ல வேளை, நீ கோவிலுக்கு போக மாட்ட. இப்படியே இருமா"ன்னு இவரும் சொல்ல எனக்கு என்னோட பூட்டா, பூட்டி நியாபகம் வந்துச்சு...


பூட்டாவும் பூட்டியும் பாக்க எப்பவும் எலியும் பூனையுமா தான் இருப்பாங்க. ஆனா அவங்களுக்குள்ள ஒரு மெல்லிய காதல் ஓடிகிட்டே இருக்கும்.


சும்மா ஒருத்தருக்கொருத்தர் கிண்டல் பண்ணியும், நக்கல் பண்ணியும்.... அத எல்லாம் கூடவே இருந்து பாக்க அவ்வளவு ஜாலியா இருக்கும்.


அப்புறம் அவங்கள கோவில்ல இறக்கி விடுறப்ப தான் முதல் தடவையா அந்த கோவில பாத்தேன். நல்லா பெருசாவே கட்டியிருக்காங்க. எட்டிப் பாத்தா ஒரு சர்ச் வேற இருக்கு பக்கத்துலயே...


அதோட பிரம்மாண்டத்த பாத்து கொஞ்சம் மலைச்சு அங்க இருந்து ராஜாஸ் மால் போனோம்.


தன்னோட பேத்திய பாக்க நாளைக்கு பாண்டிச்சேரிக்கு போறதாகவும், அதனால பேத்திக்கு ஒரு பொம்மை வாங்கணும்னும் ஏற்கனவே பொன்னீலன் சார் சொல்லி இருந்தார்.


நான் கார் பார்க்கிங்லயே இருக்க, அவரும் வர்சுவும் போய் பொம்மை வாங்கிட்டு வந்தாங்க.


அங்க இருந்து கிளம்பி புக் ஃபேர் போய், கொஞ்ச நேரம் புத்தகங்கள புரட்டிட்டு இருக்குறப்ப ராம் வந்தார்.


அதென்னமோ தெரியல, எனக்கு இன்னமும் ஆட்கள பாத்தா சிநேகமா புன்னகைக்கவும், நல்லா இருக்கீங்களான்னு நலம் விசாரிக்கவும் வரவே மாட்டேங்குது. ஆனாலும் பேச்சுக்கிடைல எப்படியோ நானும் கொஞ்சம் பூந்துகிட்டேன்.


என்னோட சிறுகதை தொகுப்பு "தற்கொலைக் கடிதம்" பத்தி நிறைய பேர் அவருக்கு கால் பண்ணி பாராட்டினதா சொன்னார். அதுவும் புத்தகத்தோட தலைப்பு ரொம்ப அருமையா இருக்குன்னு சொன்னாங்களாம்.


கூடவே 2016 வருடத்துல "தெற்கு" விருதுகள் வழங்கும் விழாவுல சிறந்த சிறுகதைக்காக என்னோட சிறுகதை தொகுப்பு தேர்வாகி இருக்குறதாவும் சொன்னார்.


ஆக மொத்தம் நிறைய பேசி, ரெண்டே ரெண்டு புத்தகத்த வாங்கிட்டு அப்படியே கிளம்பி வர்ற வழியில பொன்னீலன் சாரோட மனைவியையும் கார்ல ஏத்திகிட்டு வந்தோம்.


இடையில, வர்சு சாக்லேட் வேணும்னு அடம்பிடிக்க, அவள கடைக்கு அனுப்பி வச்சுட்டு நாங்க கார்லயே உக்காந்து பேசிட்டு இருந்தோம்.


வர்சுவ எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. ரொம்ப தைரியசாலியா வளந்துருக்கான்னு சாரோட மனைவி சொன்னாங்க.


முன்னாடி இத விட டெரரா இருப்பா. இப்ப பொம்பள புள்ள அடக்க ஒடுக்கமா இருன்னு வீட்ல சொல்லிக்குடுத்து கொஞ்சம் அமைதி ஆகிட்டான்னு நான் சொன்னதும் தான் தாமதம், அப்படியே கோபத்துல வெடிச்சுட்டாங்க...


"பொம்பள புள்ளைங்க இன்னிக்கி காலத்துக்கு எங்க எல்லாம் போறாங்க, இங்க என்ன அடக்க ஒடுக்கமா இருக்கணும்மாம்ல, அதெல்லாம் வேணாம், அவ நல்ல தைரியசாலியா தான் வளரணும்"ன்னு பொரிஞ்சி தள்ளிட்டாங்க...


தெய்வ நம்பிக்கையோட கோவில் கோவிலா போற ஒரு டிபிக்கல் குடும்ப பெண்ணான அவங்களுக்குள்ள இப்படி ஒரு புரட்சியாளர் இருப்பார்ன்னு நான் நினைக்கவேயில்ல...


ஹாஹா..... சரியான ஜோடிங்க தான் ரெண்டு பேரும்....


அப்புறம், வர்சு ஒரு கராத்தே kid -ன்னு அவங்களுக்கு எடுத்து சொல்லி, அவ செய்ற ரவுடியிசத்த எல்லாம் சொன்னதும் அவங்களுக்கு அவ்வளவு சந்தோசம்... "எனக்கு இந்த புள்ளைய ரொம்ப பிடிச்சிருக்குமா"ன்னு சொல்றப்ப அவங்க வாயெல்லாம் பல்லு....


அவங்க ரெண்டு பேரையும் இறக்கி விட்டுட்டு வர்றப்ப வர்சு சொன்னா "அந்த தாத்தா நிஜமாவே கிரேட் தெரியுமா?"


நான் ஏன்னு கேட்டேன்...


"அவர் பேத்திக்காக பார்பி பொம்மை வாங்கிக் குடுக்குறார். பேத்தி என்ன கேட்டாலும் வாங்கி குடுக்குறார்ல, அப்ப அவர் கிரேட் தான"ன்னு சொன்னா.


"அந்த பேத்தி வயசு என்ன தெரியுமா"ன்னு திருப்பி கேட்டேன்.


"தெரியலயே"ன்னா...


"மெடிக்கல் காலேஜ் first year student"ன்னு சொன்னதும் "ஆஆஆஆ"ன்னு வாய பொளந்தவ தான், வீட்ல அவள இறக்கி விடுற வர மூடல.


ஆக, ஒரு மாபெரும் எழுத்தாளரோடு பயணிக்குறத விட அவர் குடும்பத்தோட பயணிக்குறது அத்தன சுவாரஸ்யமா இருக்கு....


இன்னும் இன்னும் எங்க பயணம் தொடர்ந்துகிட்டே தான் இருக்கப்போகுது....

Monday 20 February 2017

தொடுதல் பழக்குவோம்



எந்த பக்கம் திரும்பினாலும் மனசுக்கு அச்சுறுத்துற மாதிரி தான் செய்திகள் வந்துட்டு இருக்கு. இதெல்லாம் பாக்குறப்ப மனசுக்குள்ள ஒரு மாதிரியான பயம் வர்றத தடுக்கவே முடியல.

மூணு வயசு, அஞ்சு வயசு குழந்தைங்க எல்லாம் எப்படி தான் சில பேரோட கண்ணுக்கு போகப் பொருளா தெரியுறாங்களோ புரியல....

ரொம்ப சுதந்திரமா வளந்தவன்னு பெருமையா நினைச்சுப்பேன் சில நேரம். ஆனா இப்ப தான் தெரியுது நானெல்லாம் ஏதோ ஒரு பாதுகாப்பு வளையத்துக்குள்ள ரொம்ப ரொம்ப ஜாக்கிரதையா பொத்தி பொத்தி வளர்க்கப் பட்டுருக்கேன்ன்னு...

எனக்கு தெரிஞ்ச ஆண்கள் ஒரு சகமனுசியா தான் பெண்கள நடத்தி இருக்காங்க. ஒரு கூட்டுக் குடும்பத்துக்குள்ள வாழ்ந்த வாழ்க்கை எவ்வளவு வரம் வாங்கி வந்ததுன்னு புரிய ஆரம்பிக்குது எனக்கு.

எங்க பாத்தாலும் பெண்கள் அப்படி இருக்கணும், ஆண்கள் அப்படி நடந்துக்கணும்ங்குற மாதிரியான கருத்துக்கள பாத்து பாத்து சலிப்பா இருக்கு. பயமா இருக்கு, அத செய்யாத, அடக்கி வை-ன்னு சொல்ற அத்தன வார்த்தைகளும் எனக்கு அசூயையா இருக்கு.

அதுக்காக நம்ம வீட்ல நடக்காத வரைக்கும் நாம பத்திரமா தான் இருக்கோம்னும் அசால்ட்டா விட்டுற முடியாது.

பாலியல் ரீதியான அச்சுறுத்தல்கள் பெருகி வர்ற இந்த நேரத்துல, நமக்கு எது தேவைங்குற புரிதல் முதல்ல வேணும்னு நினைக்குறேன்....

பொம்பள புள்ளைகிட்ட அப்படி இரு, இப்படி இரு, ஜாக்கிரதையா இருன்னு சொல்றதோ, ஆம்பள பசங்ககிட்ட பொண்ணுங்கள தொடாதன்னு சொல்றதோ இன்னும் ஒரு அச்சுறுத்தலான மனநிலைக்கு தான் கொண்டு போகும்ன்னு நான் நினைக்குறேன்...

எத பாத்தாலும் சந்தேகத்தோடவும் விரக்தியோடவும் பாத்துகிட்டு இருந்தா அதுக்கப்புறம் வாழ்ந்து தான் என்ன பிரயோஜனம்?

அதுக்கு பதிலா பாலியல் ரீதியா பாகுபாடு இல்லாத ஒரு சமூகத்த நாம உருவாக்க முயற்சிக்கலாம்....

பள்ளிகள்ல ஆண் பெண் குழந்தைகள பிரிச்சி உக்கார வைக்காம கலந்து உக்கார வைக்கலாம். ஒருத்தருக்கொருத்தர் பாராட்டுற நேரம் கை குடுத்துக்குறது, தோள் தட்டிக்குறது மாதிரியான நண்பர்களுக்குள்ள நடக்குற தொடுதல்கள அனுமதிக்கலாம், encourage பண்ணலாம்...

இந்த தொடுதல்கள் மூலமா இவங்க நம்மோட சக மனுசி, மனுஷன், நமக்கும் இவங்களுக்கும் வித்யாசம் கிடையாதுங்குற எண்ணம் குழந்தைகள அறியாமலே அவங்களுக்குள்ள புகுந்துடும்...

நாம கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் இது தான்....

எத நாம செய்யக் கூடாதுன்னு சொல்றமோ அத தான் பிள்ளைங்க செய்ய நினைப்பாங்க. ஒரு ஆர்வமும் குறுகுறுப்பும் அதுல தான் வரும். அதுக்கு மாறா, ஆண், பெண் நட்பு தப்பேயில்லன்னு சின்ன வயசுலயே புரிய வச்சுட்டா bad touch-க்கு உள்ளாகுற குழந்தைக்கு தானே வித்யாசம் புரிய ஆரம்பிக்கும். மெது மெதுவா bad touch பத்தி அவங்க மனசுல புரிய வைக்கலாம்... அப்படியே ஜாக்கிரதை உணர்வுகளையும் அவங்க புரிய ஆரம்பிச்சுடுவாங்க...

ஆணும் பெண்ணும் சக மனுசங்களா பழகுறது உளவியல் ரீதியா சரின்னு தோணினாலும் விஞ்ஞான ரீதியா இது சரியா வருமா? ஒரு ஆணையும் பெண்ணையும் கலந்து பழக விட்டா அவங்களுக்குள்ள காமம் சுரக்காம இருக்க வாய்ப்பு இருக்கான்னு ஒரு கேள்வி எழலாம்.

அதுக்கு என்னோட பதில் இது தான். உளவியல் ரீதியா ஒரு ஆணும் பெண்ணும் பாலின வேறுபாடு பாக்காம பழக ஆரம்பிச்சுட்டாலே அவங்களுக்குள்ள மனக் கட்டுப்பாடுங்குறது தானா வந்துடும். பாக்குற எல்லா ஆண்கள் மேலயும், அல்லது பெண்கள் மேலயும் காமம் பெருக்கெடுத்து ஓட வாய்ப்பே இல்ல.

அப்படி யாருக்கோ யார் மேலயோ ஈர்ப்பு வந்துச்சுனா அவங்களால அத எந்தவித கூச்சமும் இல்லாம வெளிப்படையா கேக்க முடியும். அப்படி கேக்குறப்ப பெண் “No” சொன்னா அத அந்த ஆண் சுலபமா புரிஞ்சுப்பான். அத ஒரு “take it easy”யா அவனால ஏத்துக்க முடியும். அந்த பெண்ணை கட்டாயப்படுத்தி அவள அடையணும்னு நினைக்க மாட்டான்.

எப்படி ஒரு பெண்ணுக்கோ அல்லது ஆணுக்கோ தன்னை பாலியல் ரீதியா நெருங்குரவங்ககிட்ட “NO” சொல்ல உரிமை இருக்கோ, அதே அளவு “YES” சொல்லவும் உரிமை இருக்கு. அத நாம புரிஞ்சுக்க தான் வேணும். ஏத்துகிட்டு தான் ஆகணும். காமமும் காதலும் தனிமனித சுதந்திரம். அடுத்தவங்கள காயப்படுத்தாத, அடுத்தவங்களுக்கு தீமை குடுக்காத, அடுத்தவங்கள புரிஞ்சுக்குற எந்த காதலும் காமமும் சரி தான்.


மறைச்சு வைக்கப்படுற காமம் தான் எதயாவது செய்து அத அடைஞ்சே ஆகணும்னு பிடிவாதம் பிடிக்க வைக்குது. தைரியம் உள்ளவன் பெண்களை கற்பழிக்குறான், கோழை குழந்தைகள சீரளிக்குறான். இதுல ரெண்டு வகையினருமே கடைசில உண்மை வெளில வந்துடக் கூடாதுன்னு கொலையும் பண்ணிடுறாங்க.

தங்களோட உணர்வுகள பரிமாறிக்க, கலந்து ஆலோசனை பெற வழியே இல்லாத ஒரு தனித்து விடப்பட்ட சமுதாயம் தான் உயிர்களோட மதிப்பும் உணர்வும் தெரியாம விளையாடிகிட்டு இருக்குங்குறது தான் உண்மை. இயந்திர உலகத்துல கூட்டு குடும்ப வாழ்க்கை சிதறி போனது கூட ஒரு காரணமா இருக்கலாம். அதனால தான் சொல்றேன், குழந்தைகள் அதிகநேரம் செலவிடுற பள்ளிகள்ல ஆண் பெண் சமத்துவத்த அங்கீகரிக்கலாம்.

அத விட்டுட்டு, ஆண்கள் அத்தனை பேரும் வெட்கப்படணும், வேதனைப்படனும், ஆண்கள் அத்தனை பேரும் மோசமானவர்கள், கருவிலயே ஆண்களை அழிக்கணும்ங்குற மாதிரியான பொங்குதலோ, ஒரு பையன இப்படி வளத்தது அவன் தாயோட தப்பு, அவன் இப்படி இருந்தா அவன் அம்மா எப்படி பட்டவளா இருப்பாங்குற இழிநிலை ஆராய்ச்சிகளோ தேவையே இல்ல...

ஒரே ஒரு விசயத்த எல்லாரும் புரிஞ்சுகிட்டா சரி....

ஆணில்லாம பெண் இல்ல, பெண் இல்லாம ஆண் இல்லவே இல்ல. ஒருத்தருகொருத்தர் வடிகாலா இருந்தே ஆகணும். அத சரியானபடி புரிதல்களோட இருக்கணும்ங்குறது மட்டும் தான் இப்போதைய வேண்டுதல் எல்லாமே....


Sunday 12 February 2017

பாம்பும் நானும்



"நம்ம வீட்ல பாம்பு இருக்கு தெரியுமா?"ன்னு கேட்டுகிட்டே வந்தான் ராஜீவ்...

"ஐ, பாம்பா... சூப்பர், எங்க பாத்த?"ன்னு கேட்டேன்...

"உன் கார் முன்னால தான் ஊந்து போயிட்டு இருந்துச்சு"ன்னான்...

எனக்கு சாயங்காலமா பீச் போவமான்னு தங்கச்சி கேட்டது நியாபகம் வந்துச்சு. ஒரு கும்பலா போய் சில பல செல்ஃபிக்கள் எடுக்கணும்னு ப்ளான்.

கார் கண்ணாடி எல்லாம் ஏத்தி விட்டுருக்கான்னு தெரியல. இந்த எருமைங்க யார் ஏறினாலும் ஒழுங்கா கண்ணாடிய பூட்டுறதும் இல்ல, கதவ சரியா லாக் பண்றதும் இல்ல.

நிறைய தடவ அவசர அவசரமா கிளம்பி காலேஜ் போறப்ப, இதுக்காகவே நான் வண்டிய இடைல நிறுத்தி கதவ ஒழுங்கா லாக் பண்ண வேண்டியிருக்கும்...

இவன் வேற பாம்பு பாத்தேன்னு சொன்னானா, எனக்கு பாம்பு காருக்குள்ள இருந்து, சாயங்காலம் நாங்க வண்டிய எடுத்துட்டு போயிட்டு இருக்குறப்ப, திடீர்னு அது முன்னால வந்து தரிசனம் தந்தா எப்படி இருக்கும்னு கற்பனை எல்லாம் ஓட ஆரம்பிச்சிடுச்சு.



ஏற்கனவே இப்படி தான், காலேஜ்ல லேப்க்குள்ள பாம்பு வந்துரும்னு லேப் அசிஸ்டென்ட் பயந்தப்ப எனக்கு மட்டும் ஒரே சந்தோசமா இருந்துச்சு.

"தாத்தாகிட்ட வீட்டை சுத்தி இருக்குற செடி எல்லாம் வெட்ட சொல்லிட்டேன். இப்ப ஆள் வந்துருவாங்க"ன்னு அவன் குரல் கேட்டதும் தான் கற்பனை குதிரை என்னை தூக்கி வாரி போட்டுட்டு ஓடி போச்சு...

"என்னது, செடிய வெட்டப் போறாங்களா?"ன்னு அதிர்ச்சியில நான் அப்படியே ஷாக் ஆகிட்டேன்...

"பின்ன, பாம்பு வந்தா பயமா இருக்காதா, அதான் அந்த பிச்சி செடி, ரோஜா செடி எல்லாம் வெட்டிற சொல்லிட்டேன்"ன்னான்....

அவன் அதோட விடல, "இந்த காக்டெயில், finches எல்லாத்தையும் தூக்கி வெளில பறக்க விட சொல்லிட்டேன். அதோட நாத்ததுக்கு தான் பாம்பு வீட்டுக்கு வருது"ன்னு கூலா சொன்னான்.

எனக்கு பி.பி எல்லாம் கோக்குமாறா எகிற ஆரம்பிச்சுது.

"ஒரு செடிய வளர்த்து கொண்டு வர்றது எவ்வளவு கஷ்டம் தெரியுமா, இப்படி அருவா எடுத்து ஒரே வெட்டுல வெட்டணும்னு சொல்றியே, ஒரு உயிரோட அருமை தெரியுமாடா உனக்கு"ன்னு கத்த ஆரம்பிச்சுட்டேன்...

"பாம்பை பாத்தேன்னு சொன்ன, நான் எவ்வளவு சந்தோசப்பட்டேன் தெரியுமா? இன்னிக்கி ஒரு பாம்பு நம்மளால பாக்க முடியுதா, இயற்கை எல்லாம் இப்படியே அழிஞ்சு போயிட்டு இருந்தா கடைசில வெட்ட வெளில சுடுற சூரியன்ல நீயும் நானும் கரிஞ்சு தான் போகணும்:ன்னு படபடன்னு பொரிஞ்சு தள்ளிட்டேன்.

மொபைல் எடுத்து அப்பாவுக்கு கால் பண்ணி வெட்ட வேணாம்னு சொல்லிறலாம்னா அப்பா கால் அட்டென்ட் பண்ணவே இல்ல. அப்புறம் அண்ணனுக்கு கூப்ட்டு விசயத்த சொல்லி, "அப்பாகிட்ட செடிங்ககள வெட்ட வேணாம்னு சொல்லுண்ணே... வீட்டுக்கு வந்தாலே தனிமைல வெறிச்சுன்னு இருக்குற எனக்கு தொணையா இருக்குறது இந்த செடிங்களும் பறவைங்களும் தான். அதுகளும் இல்லனா எனக்கு பைத்தியமே பிடிச்சுடும்"ன்னு அழுதுட்டேன்...

"அதெல்லாம் நீ பயப்படாத, பாம்பு வந்தா இப்ப என்ன, எப்பவும் செடி மூட்டுக்குள்ளயா நாம போய் இருக்கோம். நான் சித்தப்பாகிட்ட சொல்றேன், சித்தப்பா சும்மா ராஜீவ சமாதானப் படுத்த சொல்லி இருக்காரு, அப்படி எல்லாம் பண்ண மாட்டாரு"ன்னு அவன் சொன்னதுக்கு அப்புறம் தான் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆனேன்...

நிஜமாவே யாருமே இல்லாத தனிமை எவ்வளவு கொடுமையா இருக்கும்னு அனுபவிச்சு பாத்தா தான் தெரியும். காலேஜ்ல இருந்து வீட்டுக்கு வந்தாலே, அங்க நமக்குன்னு யாரு இருக்காங்குற நெனப்பு அவ்வளவு இம்சையா இருக்கும். கிட்டத்தட்ட ஒரு ஜெயில் மாதிரின்னு தான் சொல்லணும்.

நிறைய பேரு கேப்பாங்க, எப்படி இப்படி தன்னந்தனியா உன்னால இருக்க முடியுது, பேசாம உன் அப்பாகூட போய் இருக்க வேண்டியது தானே"ன்னு. அதுக்கு நான் இப்படியே இருந்துடுவேன்னு பதில் சொல்லிடுவேன்.

அப்பப்ப வர்ற கிளிகள் சத்தம், கீச் கீச்ன்னு கத்துற அணில்கள் சத்தம், குயில், காக்கான்னு எல்லாரோட சத்தமும் தான் எனக்கு ஐ லவ் யூ சொல்லிகிட்டே இருக்கும்.

பாக்யா அடிக்கடி சொல்லுவா, உங்க வீட்ல உருப்படியா இருக்குற விசயமே அந்த பிச்சி செடிங்க தான்னு.... அது உண்மை தான். காரை கொண்டு வந்து பார்க் பண்ணினாலே, பச்சை பசேல்ன்னு அதோட செழுமையும், வெள்ளை வெள்ளையா பூத்து கிடக்குற பறிக்காத பூவும், கூடவே வர்ற வாசமும் மனசுக்கு அப்படி ஒரு இதம். சிகப்பு, மஞ்சள், வெள்ளைன்னு அப்பப்ப மொட்டு விடுற ரோஜாக்கள பாத்தா அது ஒரு பெருமை. சந்தோசம். "ஹாய் டா பசங்களா, நல்லா இருக்கீங்களா"ன்னு ஒரு விசாரிப்பு விசாரிக்க தோணும்.

கதவ தொறந்துட்டு ஹால் உள்ள வந்தா இரை கேட்டு கண்ணாடிய முட்டிக்கிட்டு நிக்குற மீன்கள பாத்தா ஒரு சிரிப்பு வரும். "இந்தா வந்துட்டேன்"ன்னு அதுக்கு ரெண்டு இரை எடுத்து போட்டுட்டு இருக்குறப்பவே ப்ரித்வி கழுத்தை ஒரு பக்கமா சாய்ச்சு என்னை பாத்துகிட்டே "க்க்க்க்கேஏஏஏ"ன்னு ஒரு குரல் குடுப்பான். நாமளும் எதிர்குரல் அவன் குரல் மாதிரியே குடுக்கணும். நல்ல மிமிக்கிரி ப்ராக்டிஸ்... சம்யூ குறுகுறுன்னு என்னையே பாத்துட்டு இருப்பா... இவங்க தான் என்னோட காக்டெயில். அவங்கள பாத்து சிரிச்சு ரசிச்சுட்டு என்னோட ரூமுக்குள்ள நுழைவேன்.

அங்க எனக்கு எப்பவும் துணையா இருக்குறது finches. உங்களுக்கு புரியணும்னு தான் finchesன்னு சொன்னேன். மத்தப்படி, அவங்க தான் என்னோட போர்ப்படை தளபதிகள். யுவா, கயல், நவீன், மிருதுள், பாரதி, நளன், தமயந்தின்னு அவங்க பேரு.

இப்படி ஒரு உலகத்துல வாழ்ந்துட்டு இருக்குற என்கிட்ட வந்து செடிய வெட்டப் போறோம், பறவைங்கள விரட்டப் போறோம்னு விளையாட்டா சொன்னா கூட டென்சன் வருமா வராதா?

"நீ சின்னப் புள்ளைல பாம்பு பின்னால தொரத்திகிட்டு ஒடுவியாம், உண்மையா?"ன்னு ராஜீவ் அடுத்த கேள்வி கேட்டான்.


அதென்னடா சின்னப்புள்ளையிலன்னு சொல்ற, இப்பவும் பாம்பு பின்னால ஓட ஆசை தான், ஆனா உடல்நிலை ஒத்துழைக்க மாட்டேங்குறதேன்னு மனசுல  நினைச்சுகிட்டே "ஆமா... எனக்கு எல்லா உயிர்களுமே ரொம்ப புடிக்கும். அதுங்க கூட பழகுறதும் நேசிக்குறதும், பேசுறதும் ஒரு சாகசம். உனக்கு புரியாது. நீ என்னடான்னா ஒரு பாம்பை பாத்ததுக்கு பயந்து நடுங்கி, இப்படி எல்லாத்தையும் அழிக்கணும்னு அழிசாட்டியம் பண்ணிட்டு வந்துருக்க"ன்னு மூக்கை பிடிச்சு இழுத்தேன்.

"ஏன் எனக்கு இதெல்லாம் தெரியல"ன்னு கேட்டான்.

"நேசிக்க ஆரம்பி, அதுக்கும் வலிக்கும், அதுக்கும் ஏதாவது பிடிக்கும், அதுக்கும் மனசுன்னு ஒண்ணு இருக்கும்ன்னு நீ புரிஞ்சுகிட்டாலே அதுங்க கூட பேச ஆரம்பிச்சுடலாம்"னு சொன்னேன்.

"ரொம்ப மொக்கப் போடாத"ன்னு சொல்லிட்டு போய்ட்டான்... இப்ப பழையபடி தனிமை.

"க்க்க்க்கேஏஏஏ, ரூம்ல என்ன பண்ணிட்டு இருக்க"ன்னு ப்ரித்வி இந்தா கூப்டுறான்....

Monday 6 February 2017

சவாதி அண்ணன் - வேர்களை தேடி



மூத்தம்மாவ பாக்க வீட்டுக்கு போயிருந்தேன்...

அம்மா அப்பாவ நல்லா வச்சு காப்பாத்தணும்னு சவாதி அண்ணன் ஆச ஆசையா கட்டின வீடு அது...

நான் போனதுமே, பரபரன்னு ஓடி வந்து கதவ தொறந்தாங்க....

"ஏ மக்ளே, சோமா இருக்கியா? வா மோளே, பாத்து வா, மெதுவா வா..."ன்னு பரவசத்தோடயே வரவேற்றாங்க...

"ஒண்ணுமில்ல மூத்தம்மா, நம்ம குடும்பத்துல உள்ள அத்தன பேர் பத்தின விவரங்களையும் தேடிட்டு இருக்கேன்... அதுல பெண் வாரிசுங்கள பத்தின குறிப்புகள் இல்ல, அதான் உங்ககிட்ட கேட்டுட்டு போவலாம்னு வந்தேன்" நேரா விசயத்துக்கு வந்துருந்தேன்...

அதென்னவோ, எப்படி இருக்கீங்க, நல்லா இருக்கீங்களா?ன்னு யார பத்தியும் குசலம் விசாரிக்குற பழக்கம் எனக்கு வரவே மாட்டேங்குவு...

அப்படியே ஒவ்வொரு விபரமா கேட்டுகேட்டு பேப்பர்ல எழுதிட்டு இருந்தேன்.

மூத்தம்மாவுக்கு நிரம்ப சந்தோசம். பல கதைகளும் பேசினதுக்கு அப்புறம் பேச்சு சவாதி அண்ணன் பத்தி திரும்பிச்சு...

அவன் பேரு கனக சபாபதி. எனக்கு அவன் சவாதி அண்ணன்.

இங்க பொதுவா எல்லார் வீட்லயும் show case இருக்கும். அண்ணனோட show case ரொம்ப பெருசு. ஒரு பெரிய சுவர் முழுக்க show caseசா மாத்தி வச்சிருந்தான். அதுல புத்தகங்கள தவிர வேற எதுவும் இருக்கவும் இருக்காது...

என்னோட புத்தகம் ஒண்ண எடுத்துட்டு போயிருந்தேன். அண்ணனுக்கு தான் புத்தகம் பிடிக்கும்ல மூத்தம்மா, அதான் கொண்டு வந்தேன், இது அவனுக்குன்னு அத மூத்தம்மாகிட்ட குடுத்தேன்...

அந்த புத்தக அலமாரியில இருந்த சில புத்தகங்கள எடுத்து பாத்தேன். அம்மா அப்பாவ பாராமரிக்குற முறைகள அடிகோடு போட்டு வச்சிருக்கான்...

பின்ன இந்த பய ஏன் இப்படி திடீர்னு செத்துப் போனான்னு தொண்டைக்குள்ள துக்கம் அடைக்க ஆரம்பிச்சுது...

கணவன் மனைவி சண்டை, சந்தேகம், மனநிலை பாதிப்புன்னு ஆளாளுக்கு பேச விட்டுட்டு அவன் பாட்டுக்கு போய் சேர்ந்துட்டான்...

அவன் செத்து போனதுக்கு யாரு வேணா ஆயிரம் காரணம் சொல்லலாம், ஆனா அந்த உண்மை அவனுக்கும், அவன் கூடவே எரிஞ்சி போன அண்ணிக்கும் தான் தெரிஞ்சிருக்கும்...

"அவன் அப்படி போனான்னு நினைக்கல மோளே, அவன் நேரம் போகணும்னு இருக்கு, போய்ட்டான்... உன் அண்ணி இருக்காளே, அவளும் ஒரு வார்த்த சொல்லல. என் முன்னால தான் ரெண்டு பேரும் உள்ள போனாங்க, கதவடைச்சுகிட்டாங்க. அவனுக்கு கொல்லாங்கொட்டை தவுத்து குடுத்துட்டு இருந்த சத்தம் கூட கேட்டுச்சு. அத தின்னுகிட்டு இருக்கும் போது தான் இப்படி ஒரு சம்பவம் நடந்து போச்சு"ன்னு சொன்னப்ப மூத்தம்மா கண்ணுல கண்ணீரே இல்ல. எல்லாமே வத்தி போயிருக்கும்.

நின்ன இடத்துலயே நின்னு எரிஞ்சி செத்துப் போனான் அண்ணன். யாரையும் பழி சொல்லாம, வீரப்பா அதிகார தோரணைலயே பதில் சொல்லிட்டு அண்ணியும் செத்து போனாங்க.

"உன் அண்ணன் போனப்ப உன் மூத்தப்பா கொஞ்சமும் கலங்கல. இன்னிக்கி போகலனா இன்னொருநாள் தனியா போயிருப்பான், இப்ப தொணைக்கு பொண்டாட்டியையும் கூட்டிட்டு போயிட்டான்னு மட்டும் சொல்லுவார்" மூத்தம்மா மூத்தப்பா பத்தி சொன்னாங்க. அண்ணன் செத்த ஒரு வருசத்துல மூத்தப்பாவும் செத்துப் போய்ட்டார்...

"இந்த வீட்ல தனியா இருக்க உங்களுக்கு பயமா இல்லையா மூத்தம்மா"ன்னு கேட்டா, "நான் தனியா எல்லாம் இல்ல மோளே, அதான் உன் அண்ணன் கூட தானே இருக்கான். எனக்கு ஏதாவது பிரச்சனைனா அவன் இப்பவும் வந்து நிப்பான்"ன்னு சொன்னாங்க.

அவனுக்கு பிடிக்காத எதுவும் அந்த வீட்ல நடக்கவே முடியாது. அவன் நடக்க விடவும் மாட்டான். மூத்தமாவ நல்லா கவனிக்கணும்ன்னு வீட்டு வேலை செய்ற கோமதி பாட்டிகிட்ட கனவுல வந்து அடிக்கடி சொல்லுவானாம்.

மூத்தப்பா சாகுறதுக்கு முன்னாடி லீவ் போட்டுட்டு போன நர்ஸ் கனவுல போய் அப்பாவுக்கு உடம்பு சரியில்ல, உடனே எங்கப்பாவ போய் கவனிங்கன்னு சொல்லி இருக்கான்... ஆச்சர்யமா இப்பவும் பாப்பா சித்தி (நர்ஸ்) சொல்ற விஷயம் இது...

ஆமா, நம்புறவங்க நம்பட்டும், நம்பாதவங்க நம்ப வேணாம், ஆனா அண்ணன் இன்னமும் இங்கயே தான் இருக்கான். அதுவும் பொண்டாட்டியோட சந்தோசமாவே இருக்கான்...

Tuesday 31 January 2017

தற்கொலைக் கடிதம்- Review



என்னோட புத்தகத்துக்கு வந்த ஒரு review இது.....
......................................

வணக்கம் மேடம்.

உங்களின் தற்கொலைக்கடிதம் புத்தகம் படித்த ஒரு சாதாரண மனிதன் நான்.

எனக்கு review எல்லாம் எழுதத்தெரியாது.

தமிழ் தட்டச்சும் தகராறுதான்.

புத்தகம் படிக்கப்படிக்க மனதில் தோன்றியதை எழுதுகிறேன்.

Thursday 26 January 2017

புத்தக வெளியீட்டு விழா - தற்கொலைக் கடிதம்




நாள்: 22/01/2017 (ஞாயிறு)

இடம்: தமிழ் அரங்கம்

நேரம்: மாலை 4.30
…………………………………………………………..

இந்த நாளையும் இடத்தையும் நேரத்தையும் என்னால எப்பவுமே மறக்க முடியாது. காரணம், அன்னிக்கி தான் என்னோட முதல் சிறுகதை தொகுப்பு “தற்கொலைக் கடிதம்” வெளியாகின நாள்.

அதென்னமோ தெரியல, உடம்பு சரியில்லாததாலோ என்னவோ ரொம்ப லேட்டா தான் கிளம்பினேன். ஏற்கனவே பொன்னீலன் சார் என்னை காணோம்னு போன் வேற பண்ணிட்டார். அவசர அவசரமா கிளம்பி அவர கூட்டிட்டு விழா நடக்குற இடத்துக்கு போனப்ப மணி அஞ்சு. அதிகமான பேர் வரலைனாலும் சொந்த பந்தங்கள், நட்புகள், அப்பா, மாமான்னு எல்லாரும் முன்கூட்டியே அங்க உக்காந்துட்டு இருக்காங்க.


விழா நாயகி நீ, இப்படி லேட்டா வரலாமான்னு கேட்டுகிட்டே படபடன்னு மேடைல கூப்ட்டு உக்கார வச்சுட்டாங்க. எனக்கு ஒரே பயம். என்னடா இது, வந்த உடனே மேடைல ஏத்திட்டாங்களேன்னு. அப்பாவும் மேடைக்கு வருவார்ன்னு பாத்தா, அவர் கீழே உக்காந்துட்டு இருந்தார். சரிதான், ஆள் மேல வர மாட்டேன்னு அடம்பிடிச்சிருப்பார்ன்னு நினைச்சுகிட்டேன்.

.....................................................................

புத்தகம் ரெடி ஆனதுமே உடனே வெளியீட்டு விழா வச்சுடணும்ன்னு ரொம்ப துடிச்சேன். ஆனா பதிப்பாளர் ஜெபா தான் ஜனவரி இருபத்தி ரெண்டை தேர்வு செய்தார். அந்த நாள்ல தான் பொன்னீலன் சார் ப்ரீயா இருப்பார்ன்னு சொன்னார். நமக்கு நாள் கிழமை எல்லாம் முக்கியம் இல்ல, ஆனா பொன்னீலன் சார் வந்தே ஆகணும்ன்னு அடம். அதனால சரின்னு சொல்லிட்டேன். நூல் ஆய்வுரை சாகித்ய அகாடமி யுவ புரஸ்கார் அவார்ட் வாங்கின மலர்வதி பண்ணினா நல்லா இருக்கும்னு ஜெபா விருப்பபட்டார்.


திடீர்னு ஒருநாள் ஜெபா, நம்ம program கூடவே இன்னொருத்தர் புக்கும் ரிலீஸ் பண்ணலாம்னு இருக்கோம். நீங்க என்ன சொல்றீங்கன்னு கேட்டார். எனக்கு திடீர்னு என்ன சொல்லன்னு தெரியல. அன்னிக்கி சாயங்காலமே ஜெபாவும் ராமும் வீட்டுக்கு வந்து, இப்படி வைக்குறதால நமக்கு நல்லது தான். முத்தலக்குறிச்சி காமராசு சார் நிறைய புத்தகங்கள் எழுதினவர். அவர் கூட நம்மோட புத்தகத்த வெளியிடுறது ரொம்ப நல்லதுன்னு புரிய வச்சாங்க. வேலைகள் மளமளன்னு நடக்க ஆரம்பிச்சுது.

........................................................

இரண்டு புத்தகங்களோட வெளியீட்டு விழா இது.

முதல் புத்தகம் “தற்கொலைக் கடிதம்” நான் எழுதினது. இன்னொன்னு முத்தலக்குறிச்சி காமராசு சார் எழுதின “எனது பயணங்கள்” நூல்.

இரண்டு புத்தகங்களையும் வெளியிட்டது எழுத்தாளர் பொன்னீலன். தற்கொலைக் கடிதத்த பெற்றுக் கொண்டது சாட்சாத் என்னோட அப்பா, ஸ்ரீதரன் குமாரபெருமாள். நூல் ஆய்வுரை செய்தது எழுத்தாளர் மலர்வதி. எனது பயணங்கள பெற்றுக் கொண்டது டாக்டர். ச. மனக்காவல பெருமாள். அவரோட நூலை ஆய்வு செய்தவர் எழுத்தாளர் குமரி எழிலன்.

தலைமை: யுத்தப்பிரசங்கி ஜாண்முறே

வரவேற்புரை: கடிகை ஆன்றனி

முன்னிலை: வழக்கறிஞர். இராதாகிருஷ்ணன்

வாழ்த்துரை: ஜே.இ. ஜெபா

நன்றியுரை: கார்த்திக் புகழேந்தி

விழா ஏற்பாடு: திரிவேணி இலக்கிய சங்கமம்


நிகழ்ச்சி சரியா அஞ்சு மணிக்கு ஆரம்பிச்சு எட்டே காலுக்கு முடிஞ்சுது. நானெல்லாம் புத்தகம் எழுதுவேனா அப்படிங்குற சந்தேகம் இருந்ததால கடிகை ஆன்றனி என்னை பத்தி என்ன சொல்லன்னு தெரியாம பாவம் நிறைய சமாளிச்சார். புத்தகத்தோட தலைப்பு பத்தி தான் அதிகமா கேட்டாங்க, எப்படி ஒரு எதிர்மறை தலைப்பை வைக்க முடிஞ்சுதுன்னு.

ராம் பேசுறப்ப, இந்த புத்தகத்த நான் தான் எடிட் பண்ணினேன். அதுக்கு என்ன தலைப்பு வைக்கன்னு தெரியாம இருந்தப்ப மனசுல தோணினது தான் இந்த தலைப்புன்னு சொன்னார்.

முத்தலக்குறிச்சி காமராசு சார் ஏற்கனவே மேடைல இருந்தவங்களுக்கு அறிமுகம் ஆனவர்ங்குறதால அவர பத்தின நிறைய விஷயங்கள் பேசினாங்க. அவர் எழுதின புத்தகங்கள், சாதனைகள்ன்னு நிறைய சொன்னாங்க. அதனால என்னோட புத்தகத்த பத்தியும் விழாவ பத்தியும் நான் இங்க சொல்லிக்குறேனே. முத்தலக்குறிச்சி காமராசு சார் என்னை மன்னிக்கணும்.

.............................................

பொன்னீலன் சார் பேச ஆரம்பிச்சப்ப தான் நான் கொஞ்சம் நிமிர்ந்து உக்காந்தேன். மேடைல இருந்தவங்கள்ல நமக்கு அவர மட்டும் தான தெரியும். என்னோட புத்தகத்த கைல வச்சுட்டு பக்கத்துக்கு பக்கம் அவர் குறிப்பு எழுதி வச்சிருந்தார். மெல்ல எட்டிப் பாத்தேன், என்ன எழுதி இருக்கார்ன்னு. ஆனா எதுவுமே தெரியல. மேடைல பேசுறப்ப, இந்த புத்தகத்த பத்தி பேச நிறைய விஷயம் இருக்குன்னு ஆரம்பிச்சு, முதல் கதை கன்னி பூஜை பத்தி பேச ஆரம்பிச்சார். பேச ஆரம்பிச்சார்ன்னு சொல்றத விட வரிவரியா வாசிக்க ஆரம்பிச்சார். இது தான் உன் மொழி. யாராலயும் சொல்ல முடியாத மொழின்னு பாராட்டினார். அதோட “இறந்து போன கன்னி பெண்களுக்கு பூஜை செய்வாங்க, ஆனா கன்னியா இறந்த ஒரு ஆணுக்கு நடக்குற பூஜையை நீ தான் முதல் முதல்ல பதிவு பண்ணியிருக்க”ன்னு சொன்னப்ப நான் என்னோட சித்திகள், மாமாக்கள் முகத்த கவனிச்சேன். அவங்க முகத்துல ஒரு பெருமிதம். பின்ன, எங்க வீட்ல நடக்குற கன்னி பூஜைய தான நான் எழுதி இருந்தேன். அப்புறமா, “இருப்புக் குழி” சிறுகதை பத்தி பேசினார். “அன்புள்ள ராமையாவுக்கு” எழுதின கடிதத்த பாராட்டித் தள்ளினார். நான் வாயடைச்சு போய் எல்லாத்தையும் கவனிச்சுட்டு இருந்தேன்.



அடுத்ததா என்னோட நூலை ஆய்வு செய்த எழுத்தாளர் மலர்வதி என்ன சொல்லுவாங்களோன்னு பதட்டத்தோட இருந்தேன். ஆனா எடுத்ததுமே “தற்கொலைக் கடிதம்” பத்தி பேச ஆரம்பிச்சு என் பதட்டத்த தணிச்சுட்டாங்க. “எனக்கு வாழணும். மனசுல இருக்குற வெறி அடங்க அடங்க வாழணும்”ன்னு நான் எழுதி இருந்தத குறிப்பிட்டு அவ்வளவு தான், இது தான் மொத்த சாராம்சமும்ன்னு சொன்னாங்க. அப்பா பத்தி எழுதி இருந்தத குறிப்பிட்டு, தன்னோட பூனை குட்டி நியாபகம் வந்ததாகவும், தீனிப் பண்டாரங்கள் படிச்சுட்டு கருவாட்டுக் குழம்ப பத்தி பேசினாங்க. மொத்தத்துல நிறைய பாராட்டினாங்க. ஒரு மாதிரி நான் காத்துல மிதந்துட்டு இருந்ததால அதெல்லாம் இங்க என்னால எழுத்துல குடுக்க முடியல.

ஜெபா பேசுறப்ப, என்னோட மனைவி தலைவலிக்குதுன்னு இப்ப சொன்னா எனக்கு பதறுது. அது தான் இந்த புத்தகத்தோட வெற்றின்னு சொன்னார். ஜெபா, அடுத்த முறை உங்க மனைவி தலைவலிக்குதுன்னு சொன்னா கண்டிப்பா நீங்க அவங்க பக்கத்துல இருப்பீங்க. எனக்கு தெரியும்.

........................................

நிகழ்ச்சி முடிஞ்சதும் எல்லாரும் வந்து கைக்குடுத்தாங்க. என்னோட மாமா, மாமி, சித்தின்னு ஒட்டு மொத்த குடும்பமும் சந்தோசமா கிளம்பி போனாங்க. எனக்கு அது தான் வெற்றியா தோணிச்சு.

சொக்கலிங்கம் சார் நான் ரொம்ப நல்லா பேசினேன், மனசுல இருக்குறத யதார்த்தமா பேசினேன்னு சொன்னார். இந்த இடத்துல என்னையும் அவங்கள்ல ஒருத்தியா மதிக்குற “கலை இலக்கிய பெருமன்ற”த்துக்கு என்னோட நன்றிய கண்டிப்பா நான் சொல்லியாகனும்.

.......................................

இந்த பதிவ எழுதிட்டு இருக்கும் போது இந்தா இப்ப தான் பொன்னீலன் சார்கிட்ட இருந்து போன்....

கால் அட்டென்ட் பண்ணி "ஹலோ"ன்னு சொன்னதுமே "எம்மா உன் புத்தகத்துக்கு ஏகப்பட்ட வரவேற்பு இருக்கு"ன்னு சொன்னார். குரல்ல அவ்வளவு உற்சாகம்...

"மனக்காவல பெருமாளே உன்னோட புத்தகத்துல அஞ்சு காப்பி வேணும்னு சொன்னாராம். இப்படியே உன் புக் வித்து தீர்க்குது. உன்கிட்ட இருக்குற மொழி அப்படிப்பட்டது"ன்னு பாராட்டினார்.

"எழுத்துலகத்தில் நீ அங்கீகரிக்கப்பட்டு விட்டாய்"ன்னு அவர் சொல்றது எல்லாம் சாதாரணமான விசயமா என்ன?

"இனி நீ படிபடியா உன்னை முன்னேற்றி உன் மொழிய உன் ஊருக்குள்ள இழுத்துட்டு வா. வேற எவனும் சொல்ல முடியாத மொழிக்கு போயிரு. அந்த மொழில நீ நின்னுட்டா ஒருத்தராலயும் நிக்க முடியாதுல"ன்னு சொன்னப்ப நன்றி சொன்னேன்.

"நன்றி எல்லாம் வேணாம் மா. நீ ஆரம்பி"ன்னு சொல்லிட்டு அடுத்த கூட்டங்களுக்கு கண்டிப்பா கூட்டிட்டு போறேன்மான்னு சொல்லி போன வச்சார்.

இதுக்கு மேல வேறென்ன வேணும்?

................................................................


கொசுறு தகவல்: அன்னிக்கி மொத்தமா வித்த என்னோட புத்தகத்து எண்ணிக்கை அறுபது

புத்தகத்தை வாங்க தொடர்பு கொள்ள வேண்டிய ஆன்லைன் முகவரி: http://www.marinabooks.com/detailed?id=5%200280

http://www.wecanshopping.com/products/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D.html


 

Friday 13 January 2017

சென்னை புக் ஃபேர்: - தற்கொலைக் கடிதம் review



நான் blog எழுதுறது, பேஸ்புக்ல page வச்சிருக்குறது எதுவும் என் நெருங்கிய சொந்தங்களுக்கு தெரியவே தெரியாது...

சொந்தக்காரங்க யார் ஐடி கண்ணுல பட்டாலும் block பண்ணிட்டு, facebook-கா அப்படினா என்னதுன்னு அவங்ககிட்டயே திருப்பி கேப்பேன்...

ஆனா முதல் தடவையா துணிச்சலோட என்னோட எழுத்துக்கள ஒரு சிறுகதை தொகுப்பு புத்தகமா போடலாம்ன்னு முடிவெடுத்து, நானாவே தான் எழுத்தாளர் பொன்னீலன்Bhaktavatsalan Ponneelan சார்கிட்ட போய் காமிச்சேன்.

படிச்சு பாத்துட்டு நிறைய பாராட்டினார். அவரே அதுக்கான அணிந்துரையும் எழுதி குடுத்து, அத எப்படி புத்தகமாக்குறதுன்னு வழி முறையும் காட்டித் தந்தார்.

அவரோட வழிகாட்டுதல்ல என்னோட புத்தகம் வெளிவந்து இப்ப சென்னை புக் ஃபேர்ல விற்பனைக்கும் வந்துடுச்சு.

என்னதான் துணிச்சலோட நான் இத எல்லாம் செய்தாலும் சொந்தக்காரங்க மத்தியில எனக்கு எந்த விதமான ரியாக்சன் இருக்குமோன்னு பயந்துட்டே இருந்தேன்...

அதனால தான் யார் கண்ணுலயும் என்னோட புத்தகத்த காட்டாம எல்லாத்தையும் அல்மாராவுல வச்சு பூட்டி வச்சேன்...

அப்படி இருக்குறப்ப தான் என் மாமா பொண்ணு என்கிட்ட என் புத்தகத்த படிக்க கேட்டா. பயம் தான், என் எழுத்த படிச்சுட்டு என்ன சொல்லுவாங்களோன்னு. ஆனாலும் ஏதோ ஒரு துணிச்சல்ல எடுத்து குடுத்தேன்...

புத்தகத்த முழுசா படிச்சுட்டு அவ குடுத்த review இனி....
______________________________

ஒரு வித்யாசமான உணர்ச்சிகள புரிஞ்சுக்குற மாதிரி ஒரு புக் அண்ணி. நம்ம ஊரு ஸ்டைல படிக்குறது ரொம்ப சுவாரஸ்யமா இருந்துச்சு.

சிரிப்பு, அழுகை ரெண்டையும் ஒரே புத்தகத்துல கொண்டு வந்துட்டீங்க. நம்ம ஊருல இருக்குற specialities-சும் வித்தியாசமான விதத்துல சொல்லியிருக்கீங்க. என்னோட generation-கே இதெல்லாம் தெரியல...

Food items- ச சாப்பிடுறது மட்டும் இல்லாம அதையும் தாண்டி.... ரொம்ப சுவாரஸ்யம்.

உங்கள சின்ன வயசுல இருந்து தெரிஞ்சதால உங்களோட பார்வை & எண்ணங்கள், மாமா, அத்தை எல்லாரையும் உங்க எழுத்துக்கள்ல புதுசா உணர முடிஞ்சுது...

உங்க மேல இன்னும் பெரிய மரியாதை வந்துருக்கு.

கதைகள்ல என்னோட favorites by order.... 2,5,1,13,20,10,14,17

மத்த எல்லா கதைகளும் பிடிச்சிருந்துச்சு. ஆனா இதெல்லாம் என்னோட உணர்ச்சிய வெளிப்பட வச்சது...

12-ல நீங்க சொல்லியிருக்குற திமிரான உணர்ச்சி பூர்வமான காதல் கலக்கல்...

இந்த review -லாம் சொல்றதுக்கு எனக்கு தகுதி இருக்குதானு எனக்கு தெரியாது. but சொல்லலனா என் மனசு கேக்காது.

உங்கள் அடுத்த புத்தகத்திற்காக காத்திருக்கிறேன்....
______________________________

இத படிச்சதும் நிஜமா எனக்கு கண்ணுல தண்ணி வந்துடுச்சு... அப்படியும் என்னால நம்ப முடியாம "அப்போ துணிஞ்சு அடுத்த புக் ரெடி பண்ணலாம்ல. பயந்துட்டே இருந்தேன்"ன்னு கேட்டேன்...

"கண்டிப்பா அண்ணி. நம்ம ஊரு ஸ்டைல்ல எங்கள மாதிரி பிள்ளைகளுக்கு தெரியாத விசயத்த வித்யாசமான கண்ணோட்டத்துல சுவாரஸ்யமா சொல்ல ரொம்ப கஷ்டம். அத எதார்த்தமா படிக்கவும் உணரவும் முடியுது. இன்னும் எதிர்பார்ப்பு கூடியிருக்கு. கண்டிப்பா ரெடி பண்ணுங்க, நாங்க இருக்கோம்"ன்னு சொன்னா.
_______________________

அவ குடுத்த review தைரியத்துல நான் இன்னும் சத்தமா உங்களுக்கு எல்லாம் சொல்லிக்குறேன்....

சென்னை புக் ஃபேர்ல என்னோட புத்தகம் கிடைக்குற அரங்குகள்

புதினம் புக்ஸ் : ஸ்டால் எண் 35B
நூலகம் பேசுகிறது: ஸ்டால் எண் 409
வீ கேன் புக்ஸ்: ஸ்டால் எண் 536

___________________________

என்னை பத்தி எதுவுமே தெரியாத போதும் துணிச்சலா இந்த புத்தகத்த அழகா வடிவமைச்சு, அச்சிலேற்றி குடுத்துருக்குற J.e. Jebha-வுக்கும் உறுதுணையா இருந்த Ram Thangam- அவர்களுக்கும் என்னோட நன்றி.

Thursday 5 January 2017

தலைகால் புரியாத தருணம் - தற்கொலைக் கடிதம்



நாலு பேரு நாலு வார்த்த நல்லதா சொன்னா நம்ம மனசுக்குள்ள வர்ற சந்தோசமே தனி. என்னதான் புகழ்ச்சிக்கு மயங்கக் கூடாதுன்னு சொன்னாலும் நம்மள தூக்கி கொண்டாடவும் சில உறவுகள் வேணும் கண்டிப்பா... சோர்ந்து போற நேரத்துல எல்லாம் அவங்க வார்த்தைகள் தான் நமக்கு உற்சாக டானிக்...

நம்மோட நலன் விரும்பிகள நாம தேர்வு செய்ற விதம் ரொம்ப அவசியம். நாம எது செய்தாலும் சரின்னு சொல்றவங்க சில பேரு இருப்பாங்க. கிட்டதட்ட கண்மூடித்தனமா நம்மள நம்புறவங்க அவங்க. அவங்களோட அன்பு மெய்சிலிர்க்க வைக்கும், அதே நேரம் நிறைய கூச்சத்தையும் தயக்கத்தையும் குடுக்கும். என்ன இவங்க இப்படி பாராட்டுறாங்க, இதுக்கெல்லாம் நாம வொர்த் இல்லையே அப்படின்னு மனசுக்குள்ள ஒரு பயம் எட்டிப் பாக்கும். இவங்கள எல்லாம் நான் தள்ளி நின்னே அன்பு செய்வேன். நிறைய அன்பு செய்வேன், அவங்க பாராட்டினா கூச்சத்தோட ஒரு ஓரமா ஒதுங்கிடுவேன்...

இன்னொரு வகை உண்டு. நாம செய்ற செயல் அவங்கள ஈர்க்கலன்னா அப்படியே கடந்து போய்டுவாங்க. அதே நேரம், அவங்களுக்கு பிடிச்சிருந்தா ஒரு வார்த்தை பாராட்டாம போக மாட்டாங்க. அப்படி ஒருத்தர் வெற்றி விடியல் சீனிவாசன் சார். மனுஷன் நச்சுன்னு ஒரு கமன்ட் தான் போடுவார், அத பாத்தாலே ஜிவ்வுன்னு மனசுக்குள்ள ஒரு சந்தோசம் எட்டிப்பாக்கும் பாருங்க... அத எல்லாம் எழுத்துல விவரிக்கவே முடியாது.

அடுத்தது, நாம செய்ற நல்ல விசயங்கள பாராட்டவும், தப்பு செய்தா நச்சுன்னு குட்டவும் செய்ற தோழமைகள். Academic side –ல எனக்கு அப்படி ரெண்டு பேர் வாய்ச்சிருக்காங்க. ஆள் பெரிய ஆள், multitalented- ன்னு பாராட்டவும் செய்வாங்க, லூசாப்பா நீயி, உனக்கு அறிவே கிடையாதான்னு பளிச்சுன்னு கேட்டுறவும் செய்வாங்க.

ஒரு விஞ்ஞானியாகணும்ன்னு கண்ட கனவெல்லாம் சாத்தியமேயில்லன்னு ஆனதுக்கப்புறம், எழுத்துப் பக்கம் என் கவனம் திரும்பிய போது, பாராட்டவும் குட்டவும் சரியான ஒரு ஆள் இல்லாம நிறைய திணறியிருக்கேன். இங்க இருக்குற நட்புக்கள் எல்லாம் எனக்கு உற்சாகத்த மட்டுமே குடுக்குறவங்களா அமைஞ்சு போய்ட்டாங்க. யார்கிட்ட போய் என் நிறை குறைகள கேக்குறதுன்னு புரியவும் இல்ல.

ஏன்னா, குறைகள் சொல்லணும்னே நிறைய பேர் இருப்பாங்க. அவங்க வார்த்தைகளுக்கும் கருத்துக்களுக்கும் மதிப்பு கொடுத்தோம்னா நம்மோட வீழ்ச்சி ஆரம்பிச்சிடுச்சுன்னு அர்த்தம். அதே நேரம், நாம நல்லா இருக்கணும்ன்னு நம்மோட குறைகள சுட்டிக் காட்டுறவங்க இருப்பாங்க. அவங்க தான் நம்மோட வரம். அவங்கள விட்டுடவே கூடாது. ஏதோ ஒரு தருணத்துல மனசு வலிச்சாலும் எதார்த்தத்த புரிஞ்சுக்குற பக்குவத்த நாம வளத்துக்க இவங்க பக்கபலமா இருப்பாங்க.

வட்டார வழக்குல தான் எழுதுறேன் அப்படின்னு நான் நம்பிட்டு இருந்த நேரத்துல, “எம்மா, நேத்து ரொம்ப நேரம் உன்னை பத்தி தான் பேசிட்டு இருந்தேன், ரொம்ப ரொம்ப நேரம்... நல்லா எழுதுற, ஆனா உன்கிட்ட ஒரு கொற இருக்கு. உன் ஊரு மொழி இருக்கே, அது ஒலகத்துல எந்த இடத்துலயும் இல்லாதது, நீ அத தவற விட்டுருக்க. வட்டார மொழிய படி, அத பிடி, அத எழுது” அப்படின்னு பொன்னீலன் ஐயா சொன்னதுக்கப்புறம் தான் ஆஹா இப்படி தான ஒரு மனுசன தேடிட்டு இருந்தேன்-ன்னு ஒரே சந்தோசமாகிடுச்சு.

“என்னைப் பத்தி அப்படி என்ன பேசுனீங்க”ன்னு கேக்க ஆச தான். ஆனாலும் என்னவோ ஒரு தயக்கம் தடுத்துடுச்சு. எல்லாமே வெளியீட்டு விழா அன்னிக்கி கேக்கத் தானே போறேன்னு மனச தேத்திகிட்டேன்.

“இந்த நிமிஷம், இந்த நொடி வரைக்கும் எனக்கு பயமாவே இருக்கு. நான் எழுதினத மக்கள் ஏத்துக்குவாங்களாங்குற ஒரு உதறல் மனசுக்குள்ள இருந்துகிட்டே இருக்கு. பயத்துல கையெல்லாம் நடுங்கிட்டு இருக்கு. என்னோட புத்தக வெளியீட்டு விழாவுல நீங்க பேசப் போறத கேட்டு தான் என்னை பத்தி நானே ஒரு முடிவுக்கு வர முடியும்” அப்படின்னு சொல்லிட்டு வேற என்ன பேசன்னு கூட தெரியாம வார்த்தைகளற்று நின்னுட்டேன்.

“அந்த பயம் இருக்கத்தானே செய்யும். இது உன்னோட பிரசவம்ல. பிரசவ நேரத்துல ஒரு தாய்க்கு எவ்வளவு பயம் இருக்கும். அந்த பயம் தான் உனக்கும் இருக்கு. போக போக பழகிடுவ. அனுபவங்கள ஆசானா எடுத்துக்கோ”ன்னு ஆறுதலும் சொன்னார்.

புத்தகம் ரொம்ப நல்லா வந்துருக்கு. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. என்ன, அந்த ஒவ்வொரு கதை ஆரம்பத்துலயும் வர்ற டிசைன் கருப்பா இருக்கு. அத வெள்ளையா போட்டுருக்கலாம், சரி, அடுத்த புத்தகத்துல சரி பண்ணிப்போம்” அப்படினார்.

நீ எழுதணும்ன்னு வந்துட்ட. இனி நீ நிறைய புத்தகங்கள படிக்கணும், அப்ப தான் ஒவ்வொருத்தரும் என்னென்ன கண்ணோட்டத்துல எழுதுறாங்கன்னு உனக்கு பிடிபடும். அத தொடர்ந்து உனக்குன்னு ஒரு பாணிய பிடிச்சுக்கோ, நீ நல்லா வருவ”ன்னார்.

நான் சொன்னேன் “எனக்கு புத்தகங்கள படிக்குறத விட மனுசங்கள படிக்கணும்னு ஆச. நேரடியா அந்த மக்களோட கலந்து இருக்கணும்னு ஆச”ன்னு சொன்னேன்.

“எம்மா, இது பெரிய விஷயம். நீ தாராளமா செய்”ன்னு சொன்ன ஆசீர்வாதத்த பிடிச்சுட்டு கொஞ்சமாவது மேல வரணும்னு ஒரு ஆச துளிக்க ஆரம்பிச்சிடுச்சு.

கடைசியா கிளம்பும் போது என் புத்தகத்த அவர் கைல குடுத்து, உங்களோட “ஆட்டோகிராப்” வேணும். எழுதி குடுங்கன்னு கேட்டேன்.

அவர் எழுதினது இது தான்....

“பொட்டல் வட்டாரத்தில் என் தொடர்ச்சியாக வளரும் இனிய படைப்பாளி Dr. ஜீவாவுக்கு

- அன்புடன் பொன்னீலன்

4-1-2017