Monday 29 August 2016

விக்கி டோனார் (Vicky donor) - திரைவிமர்சனம்



படம்: விக்கி டோனார். ரொம்ப நாள் முன்னால இந்த படம் பாத்தேன். அப்பவே மனசுல ஒரு தாக்கத்த உண்டாக்கின படம். ஆனா ஏனோ அத பத்தி எழுதாம விட்டு போய்டுச்சு.

வழக்கம் போலவே எனக்கு ஹீரோ பேரு, ஹீரோயின் பேரு எதுவும் தெரியாது. அதுவும் நன்மைக்கே. கதை மாந்தர்களா மட்டுமே அவங்கள என்னால பாக்க முடிஞ்சி, கதையோட ஒன்றி போக அதுவும் ஒரு காரணம்.

கதை ரொம்ப சிம்பிள்.

எந்த விதமான கமிட்ஸ்மென்ட்லயும் சிக்கிக்க விரும்பாத ஹீரோ. ஆர்ப்பாட்டமே இல்லாம அவன் காதலிக்குற பொண்ணு, அவனயும் தன்னோட வயசான மாமியாரையும் பராமரிக்குற அவனோட அம்மா, அல்ட்ரா மாடர்னா யோசிக்குற அவனோட பாட்டி. இவங்கள சுத்தி நடக்குறது தான் கதை.

கதாநாயகன் விக்கி ஒரு கொடையாளி. அதனால அவனுக்கு கிடைக்குற பணம், அப்புறம் அதனால அவன் படுற கஷ்டம், அதுக்கு பிறகு அவன் நிலைமை என்னன்னு சொல்றது தான் படம்.

சரி, கதாநாயகன் என்ன கொடையாளினு சொல்லலயே, அவன் ஒரு ஸ்பேர்ம் அதான் விந்து கொடையாளி.

படம் ஆரம்பிக்குறப்பவே டாக்டர் கிட்ட இன்னும் தன்னோட மனைவி ஏன் கற்பமாகலன்னு விவாதம் புரியுற கணவனை காட்டுறாங்க. ஒரு குழந்தை எப்படி உருவாகுதுன்னு டாக்டர் அவங்களுக்கு விளக்குற காட்சி எல்லோருக்கும் சேர்த்து தான்.

இந்த படத்துல மக்களோட பேராசையையும் கூட சொல்லி இருக்காங்க. சச்சின் போல பையன் வேணும், ஐஸ்வர்யா போல பொண்ணு வேணும்னு இன்னைய காலக் கட்டத்துல குழந்தை பெத்துக்குரத கூட கமேர்சியல் ஆக்கிடுறாங்க.

தான் ஒரு டைவேர்சி, முதல் ராத்திரியே வீட்டை விட்டு வந்துட்டேன்னு சொல்ற ஹீரோயின் ஆய்ஸ்மா கிட்ட விக்கி சொல்ற பதில் எனக்கு பிடிச்சிருந்துச்சு. அவனுக்கு அவ யாரா, எப்படி இருந்தாலும் பரவால, சிங்கிளா இருந்தாலும் ஓகே, டபுளா இருந்தாலும் ஓகே, டைவேர்ஸ் ஆகியிருந்தாலும் ஓகே. “உன்னை பாத்த நிமிசத்துல இருந்து நீ இல்லாம வாழ முடியாதுன்னு தோணிச்சு. நீ எப்படி இருந்தாலும் ஓகே. உன்னை பாக்கும் போதெல்லாம் உன்னோட புன்னகைக்கு நான் பொறுப்பா இருக்கணும்னு தோணிச்சு. நீ என் கூட இல்லாத பொழுதுகள் நகரவே இல்ல”ன்னு அவன் சொல்ற இடம் சூப்பர்.

நான் இந்த படத்துல ரொம்ப ரசிச்சது ரெண்டு வித்யாசமான இனங்களோட பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள், பிடிவாதங்கள். ஹீரோ பஞ்சாபி, ஹீரோயின் பெங்காலி. ஒருத்தங்கள பத்தி இன்னொருத்தங்க வச்சிருக்குற கருத்துகள், எண்ணங்கள், எல்லாம் தாண்டி எப்படி ரெண்டு குடும்பமும் ஒண்ணா இணையுதுன்னு சொல்ற இடங்கள் எல்லாமே நான் ரொம்ப ரசிச்சேன். அதுவும் அந்த கல்யாண சீன்ஸ் அசத்தல்.

ஒரு பஞ்சாபி பையன எல்லாம் மருமகனா என்னால ஏத்துக்க முடியாதுன்னு காச் மூச்ன்னு கத்துற அப்பாகிட்ட கூலா பக்கத்துல வந்து “அவன எப்போ மீட் பண்ண போறீங்க”ன்னு ஆய்ஸ்மா கேக்குறது அசத்தல். அது கண்டிப்பா ஒரு டிப்பிகல் அப்பாவையும் மகளையும் நம்ம கண்ணு முன்னால நிறுத்திடும். அவ அப்படி கேட்டதும் பக் பக்னு வாயடைக்குறவர் தான், அடுத்த சீன் ஒபென்னிங் ஹீரோ வீட்ல எல்லாரும் காப்பி குடிக்குற சீன் தான். டைரக்டர் டச். அடுத்து பெரிய சண்டை நடக்கும்னு நினைக்குற நம்ம எதிர்பார்ப்புல பூச்சாண்டி காட்டிடுறார்.

பிடிச்ச, ரசிச்ச டயலாக்ஸ்னு பாத்தா, நிறைய இருக்கு. ஆனாலும் “அடுத்தவங்களுக்கு விந்து குடுக்குறது, யாருனே தெரியாத குழந்தைங்களுக்கெல்லாம் அப்பா ஆகுறது எல்லாம் நம்ம கலாச்சாரத்துல ஒத்துக்க முடியுமா நீங்களே சொல்லுங்க”ன்னு விக்கியோட அம்மா, அவன் பாட்டி கிட்ட கேக்குறப்ப, “அதெல்லாம் என்னால சொல்ல முடியல, ஆனா ஒரே ஒரு விஷயம் சொல்ல முடியும். குழந்தை இல்லாத எத்தனையோ பேருக்கு இன்னிக்கி குழந்தை இருக்குதுனா அதுக்கு காரணம் விக்கி”ன்னு அவங்க சொல்ற இடம் சூப்பர்.

இன்னொரு இடம், தன்கிட்ட தான் ஒரு ஸ்பேர்ம் டோனர்னு ஏன் சொல்லலன்னு கோவிச்சுட்டு போற ஆய்ஸ்மாவ பாத்து அவ அப்பா கேள்வி கேக்குற இடம். “இப்ப பிரச்சனை அவன் உன்கிட்ட இத மறைச்சான்ங்குறதா, இல்ல நீ அம்மா ஆக முடியல, அவன் அப்பா ஆகிட்டான்ங்குறதா?ன்னு கேட்டு அவள அப்படியே நிலைகுலைய வைக்குறார்.

அதே மாதிரி மாமியாருக்கும் மருமகளுக்கும் உள்ள அந்த கெமிஸ்ட்ரி. அல்ட்ரா மாடனா யோசிக்குற மாமியார், மாமியாருக்காகவும் மகனுக்காகவும் மாடா உழைக்குற மருமகள். ரெண்டு பேரும் சேர்ந்து உக்காந்து தண்ணியடிச்சுட்டு பேசுற இடம் எல்லாமே அவங்க ஒருத்தர் மேல ஒருத்தர் வச்சிருக்குற ஒட்டுதல காட்டுது. இதுவே தமிழ் படங்கள்ல காட்டியிருந்தா என்னாகியிருக்கும்ங்குற யூகத்த உங்ககிட்டயே விட்டுடுறேன்.

உங்கம்மா குடிப்பாங்களான்னு கேக்குற ஆய்ஸ்மாகிட்ட, “அப்பாவோட மரணத்துக்கு பிறகு, அவங்க ரொம்ப தனிமைல வாடினாங்க. அவங்க ஸ்ட்ரெஸ் போக ஒண்ணோ ரெண்டோ பெக் அடிச்சு பழகிட்டாங்க”ன்னு சொல்ற இடமாகட்டும், “கல்யாணம் ஆகி நீ ஒரு தடவ கூட செக்ஸ் வச்சுக்கலையா”ன்னு ஆய்ஸ்மாகிட்ட ஆச்சர்யமா கேக்குற இடமாகட்டும், ஆய்ஸ்மாவுக்கு குழந்தையே பிறக்காதுன்னு தெரிஞ்சதும் அவன் காட்டுற முகபாவமாகட்டும், விக்கி தான் எப்பவும் கூல்ங்குறத நிரூபிச்சுகிட்டே இருப்பான். அதே மாதிரி கல்யாணத்துக்கு முன்னாடி விக்கிய எதிர்க்குற ஆய்ஸ்மாவோட அப்பா, அப்புறம் மருமகனுக்கு காட்டுற சப்போர்ட் அசத்தல்.

இந்த விந்து கொடை அளிக்குறது எல்லாமே அறிவியல் சார்ந்த விஷயம், அதுல தப்பே இல்லன்னு புரிய வைக்க எடுக்கப்பட்ட படம். அதுல பலவிதமான கருத்துக்கள். இது ஹிந்தி படம்ங்குறதாலயோ என்னவோ, இதுல விந்து வேணும்னு கேட்டு வர்ற எல்லாம் ஜோடிகளுமே ரொம்ப தைரியமா கிளினிக் வராங்க. அதுலயும் பெண்கள் முகங்கள்ல ஒரு நிமிர்ந்த பார்வை, தெளிந்த கண்ணோட்டம் தெரியுது. எனக்கு விந்து தேவை, இத விந்து வங்கில வாங்கிக்குறதுல தப்பேயில்ல அப்படிங்குற சரியான கண்ணோட்டத்த இந்த படத்துல அவங்க நடத்தைகள் மூலமாவே டைரக்டர் காட்டிடுறார்.

டாக்டர் கிளினிக்ல குழந்தைகளோட கூடியிருக்குற ஐம்பத்தி மூணு குடும்பங்களையும் பாத்து “அவங்க எல்லாரும் சந்தோசமா இருக்காங்க, அவங்களோட குடும்பம் குழந்தைகளோட முழுமையா இருக்கு, ஆனா எனக்கு ஏன் அப்படி ஒரு முழுமை இல்ல”ன்னு ஆயிஸ்மா சோகத்தோட ஒரு கேள்வி கேக்குறா. “இதோ நீ கேக்குற இதே கேள்விய தான் இங்க கூடி இருந்த எல்லாருமே ஒரு காலத்துல கேட்டாங்க. இதே உணர்வு தான் அவங்களுக்கும் இருந்துச்சு. ஆனா விக்கி அவங்க வாழ்க்கைல வந்த பிறகு அவங்க வாழ்க்கையே சந்தோசமா மாறிடுச்சு. ஏன்னா இந்த குழந்தைகள் எல்லாம் விக்கியோட விந்துல இருந்து உருவாக்கப்பட்டவை”ன்னு டாக்டர் சொன்னப்ப விக்கியும் ஆய்ஸ்மாவும் காட்டுற உணர்ச்சி, கண்ணீர் எல்லாம் நமக்கும் தொத்திக்குது. நாலு வருசத்துல அம்பத்து மூணு குழந்தைங்க. அடேங்கப்பா....

இந்த படத்தோட க்ளைமாக்ஸ் அப்படி இருந்துருக்கலாம், இப்படி இருந்துருக்கலாம்னு நானா பல யூகங்கள யோசிச்சுட்டே இருந்தேன். ஆனா நாம நினைச்ச கிளைமாக்ஸ் எல்லாம் படத்துல வைக்க முடியாதுல, சரி விடுங்க, டைரக்டர் வச்ச க்ளைமாக்ஸ்கே ஓகே சொல்லிடுவோம். ஆனாலும் ஆய்ஸ்மாவுக்கு குழந்தை பிறக்காதுங்குறதால ஒரு வாடகை தாய் மூலமா குழந்தை பெத்துகிட்டதா முடிச்சி இருந்துருக்கலாம். ஏன்னா, ஆய்ஸ்மாவோட கருக்குழாய்கள்ல தான் அடைப்பு இருக்கும். அவளால ஒரு ஆரோக்கியமான கரு முட்டையை உருவாக்க முடியுமே. இப்படி ஒரு க்ளைமாக்ஸ் வச்சிருந்தா, விந்து கொடை, வாடகை தாய் ரெண்டையும் ஆதரிச்ச மாதிரி இருந்துருக்கும்.

ரொம்ப நாள் முன்னால தமிழ்ல வாடகை தாய் பத்தி ஒரு படம் வந்ததா ஒரு நியாபகம். ஆனா அது என்ன படம்னு பெயர் நியாபகத்துல இல்ல. கடைசியில புருசன விட்டுட்டு அந்த குழந்தையோட அவ போறதா படம் முடியும். நம்மோட லெவல் எல்லாம் இவ்வளவு தான் யோசிக்க முடியுது. புருசன காப்பாத்த பணம் வேணும். அதுக்காக வேற வழியே இல்லாம ஒரு குழந்தைய வயித்துல சுமக்குறா. ஆனா முடிவு, யார காப்பாத்த அவ அத செய்வாளோ அவனே அவள ஏத்துக்க மாட்டான். இதயே ஒரு பாசிட்டிவ் முடிவா குடுத்துருந்தா எவ்வளவு நல்லா இருந்துருக்கும்? “விக்கி டோனார்” அப்படி ஒரு பாசிட்டிவான படம்.

Sunday 28 August 2016

பொது கழிப்பறை - public toilet




ஒரு வருஷம் ஆகிப் போச்சு நாப்கின் பத்தி நான் எழுதி. கிட்டத்தட்ட நிறைய பேர் கிட்ட இருந்து நிறைய பாசிட்டிவ் கருத்துகள், விமர்சனங்கள். இப்போ ரெண்டுமூணு நாளா மறுபடியும் அத ஷேர் பண்ண ஆரம்பிச்சிருக்காங்க. எல்லாம் மார்க்கோட “ஆன் திஸ் டே” மார்க்கத்தால தான். தேங்க்ஸ் டு மார்க்.

இது பத்தி எழுதணும் எழுதணும்னு நானும் ஒரு வாரமா நினச்சுட்டு தான் இருக்கேன், ஆனா இருக்குற சோம்பேறித்தனம் எழுத விடுறதே இல்ல. ஆனா பாருங்க, நேத்து விகடன்ல வந்த நியூஸ் இன்னிக்கி என் கண்ணுல பட்டுச்சு “மாணவர்களே கட்டிய கழிப்பறை – மலைக்க வைத்த மனித நேயம்”ங்குற தலைப்புல.

இதுக்கு முன்னாடியே ப்ரெண்ட்ஸ் சில பேரு பேசிட்டு இருக்குறப்ப இந்த பப்ளிக் டாய்லட் பத்தி கொஞ்சம் எழுதேன்னு கேட்டாங்க. இந்த கழிப்பறை பத்தி எல்லாம் எனக்கு பேச தகுதி இருக்கா இல்லையான்னு சரியா தெரியல, ஏன்னா அதிகமா நான் வீட்டை விட்டு வெளில போறதே இல்ல. அதோட, பொது இடங்கள்ல இருக்குற கழிப்பறைகள் எல்லாம் பயன்படுத்தினதே இல்ல, ஒரு ரெண்டு மூணு சம்பவங்கள் தவிர்த்து.

எனக்கு தெரிஞ்சி முதலாவது சம்பவம் ஒரு பஸ்ஸ்டாண்ட்ல வச்சு நடந்துச்சு. கூட வந்த ப்ரெண்ட்ஸ் எல்லாம் அவசரம்னு போனாங்களேன்னு நானும் போனேன். பக்கத்துலயே போக முடியல, அவ்வளவு நாத்தம். மூக்க புடிச்சுட்டு உவ்வேன்னு எட்டிப் பாக்காமலே ஓடி வந்துட்டேன். கண்டிப்பா எட்டிப்பாத்துருந்தா அலங்கோலம் தான். இதுல பப்ளிக் டாய்லெட்ல சில வாசகங்களும் போன் நம்பர்களும் வேற மூஞ்ச சுளிக்குற மாதிரி இருக்குமாம்.

அடுத்ததா மென்சஸ் பிரச்சனை வந்தப்ப அதுக்காக ஸ்கேன் பண்ண போயிருந்தோம். இந்த ஸ்கேன் உடம்புல வேற எந்த பகுதினாலும் ஈசியா எடுத்துரலாம், ஆனா இந்த வயித்துல, அதுவும் கர்ப்பப்பைல எடுக்குறது எல்லாம் கர்ண கொடூரம். வயிறு முட்ட தண்ணி குடிச்சிருக்கணும். அதுவும் கர்ப்பப்பை முழுக்க தண்ணி நிரம்பி நிக்கலனா ரிபோர்ட் ஒழுங்கா வராது. கஷ்டப்பட்டு எப்படியோ ஸ்கேன் எடுக்க ஒத்துழைச்சு வெளில வந்தா, ஒரு அடி கூட நகர முடியாது. அப்படியே அங்கயே பாத்ரூம் போய்ட்டா என்னன்னு தோணும். அட, அங்கேயாவது பாத்ரூம் எல்லாம் சுகாதாரமா இருக்குமான்னு பாத்தா அதுவும் கிடையாது.

அதுக்காக நான் ஸ்கேன் செண்டர்கள குறை சொல்றேன்னு அர்த்தம் கிடையாது. எனக்கு நேர்ந்த அனுபவம் வேற. ஸ்கேன் செண்டர் மாடியில. பாத்ரூம் கீழ இருந்துச்சு. அதுவும் கொஞ்ச தூரம் ஒரு சந்துக்குள்ள வேற போகணும். பாத்ரூம் எல்லாம் போகாம அப்படியே வீட்ல போய் பாத்துக்கலாமான்னு யோசிக்க கூட முடியல, காரணம் அவ்வளவு அவஸ்த்தை. சரின்னு தத்தி தாவி பாத்ரூம் போய், கதவ தொறந்தா, உவேக்... அப்படியே மூத்திர வாடை.

வேற வழியே இல்லன்னு உள்ள மெல்ல எட்டிப்பாத்தா, யாரோ ஆய் போயிட்டு அரைகுறையா தண்ணி விட்டுட்டு அப்படியே போயிருக்காங்க. உள்ள கால் கூட எடுத்து வைக்க முடியாத நிலைமை. ஆனா அங்கயே தண்ணி, விளக்குமாறு எல்லாம் இருந்துச்சு. பாத்து பதமா கால் எடுத்து வச்சு, முதல்ல தண்ணிய பாத்து பாத்து விட்டு, அப்புறம் விளக்குமாறு எடுத்து லேசா கழுவி விட்டு, எல்லாம் கிளீன்ன்னு ஆனதுக்கு அப்புறம் தான் என்னால நிம்மதியா பாத்ரூமே போக முடிஞ்சுது.

இதுல இருந்து நான் சொல்ல வர்ற விஷயம் என்னன்னா, சில பொது கழிப்பறைகள், பள்ளிகள்ல தண்ணி வசதியே இருக்காது. இங்க தாராளமா தண்ணி வசதி இருந்தும் உள்ள காலடி எடுத்து வைக்க முடியல. அட, நாம போன ஆய நாமளே கழுவக் கூடாதாக்கும். நமக்கு காரியம் முடிஞ்சுதா, ரைட்டு, அடுத்தவன் எப்படி போனா நமக்கென்னங்குற மனோபாவம். எனக்கு அன்னிக்கி விளக்குமாறு எடுத்து கழுவி விட ஒரு நிமிஷம் கூட ஆகி இருக்காது. சுத்தம் ஆகிடுச்சு. இப்படியே கிடக்கட்டும் ஒண்ணுக்கு தானே போகணும்னு நினச்சு நானும் அப்படியே மூக்க புடிச்சு போயிட்டு வந்துருந்தா இன்னும் நாறி இருக்கும். அதுக்காக எல்லாரும் பப்ளிக் டாய்லெட்ட கழுவுங்கன்னு நான் சொல்லல. நீங்க போனா, தண்ணி வசதி எல்லாம் இருந்தா, சுத்தமா கழுவி விட்டுட்டு வாங்கன்னு தான் சொல்றேன்.

அப்புறம், நான் எல்லாரையும் மொத்தமா எல்லாம் குறை சொல்லல. நிறைய பேருக்கு இந்த சமூக அக்கறை இருக்கத் தான் செய்யுது. ஏன், நான் போன பாத்ரூம்ல எனக்கு முன்னால பாத்ரூம் போயிட்டு வந்த ஆணுக்கு கூட அந்த சமூக அக்கறை இருந்துருக்கு. அதனால தான் அவர் ஆய் போயிட்டு தண்ணி விட்டுட்டு போயிருக்கார். ஆனா அவருக்கு எப்படி தண்ணி விடணும்னு தெரியல. ஒரு பக்கெட் தண்ணியையும் அப்படியே அது மேல வேகமா விட்டு எல்லாத்தையும் சிதறடிச்சுட்டு போயிருக்கார். பாத்ரூம் நாறிடுச்சு.

நான் பிறந்து வளர்ந்தது, இருக்குறது எல்லாமே கிராமம் தான். அப்போ எல்லாம் டாய்லெட்ங்குற வார்த்தையே யாருக்கும் தெரியாது, அப்புறம் எங்க டாய்லெட்ல போக? எல்லாம் திறந்தவெளி புல்கலைக்கழகம் தான். வீட்ல சொல்லிட்டு போகணும்னா “அம்மா நான் பூமிக்கு உரம் போடப் போறேன்”ன்னு சொல்லிட்டு போக வேண்டியது தான்.

அப்படி தான் ஒருநாளு வீட்ல சொல்லிட்டு வாழைத் தோப்புக்குள்ள ஒதுங்கி இருந்தேன். ஏழு எட்டு வயசுல கை துறுதுறுப்பு சும்மா இருக்காதே. ஒரு குச்சிய எடுத்து பக்கத்துல இருந்த கரையான் புற்றை நோண்டிகிட்டு இருந்தேன். திடீர்னு உள்ள இருந்து ஒண்ணு சீறிக்கிட்டு வந்துச்சு பாருங்க.... அரண்டு, மெரண்டு அங்க இருந்து ஓட்டம் புடிச்சவ தான், அப்புறம் கொஞ்ச நாள் அம்மா முந்தானைய புடிச்சுகிட்டே தான் எங்கயும் வெளில போறது.

அதுக்கப்புறம் அந்த ஜந்துவ தோட்டத்துல அரசல்புரசலா பாத்து அப்பப்ப ஹாய் சொல்லி இருந்தாலும், ஆய் போகணும்னா எங்க ஆயா துணை வேணும். இதுனால எங்க அம்மாவுக்கும் பாட்டிக்கும் என்னால ஏகப்பட்ட டார்ச்சர். ஆக, ஒரு பாம்பினால் எங்க வீட்ல பாத்ரூம் கட்டியே ஆகணும்னு நிலைமை உருவாகிச்சு.

அப்பா கொஞ்சம் யோசிச்சு, ரெண்டு பாத்ரூம் கட்டலாம்னும், ஒண்ணு வீட்டுக்கு உள்ளேயும், இன்னொன்னு வெளியேயும்னு முடிவு பண்ணினார். ரெண்டு பாத்ரூம் இருந்தாலும் எல்லாரும் பொதுவா ஒரே பாத்ரூம தான் யூஸ் பண்றது. இதுல கொஞ்ச நாள் எனக்கு வித்யாசம் தெரியல. ஏன்னா நான் எழுந்து வர எப்படியும் காலைல எட்டு மணி ஆகிடும். அம்மா அதுக்குள்ள பாத்ரூம் எல்லாம் நல்லா கிளீன் பண்ணி போட்ருவா.

அப்போ நான் அஞ்சாவது படிச்சுட்டு இருந்தேன்னு நினைக்குறேன். திடீர்னு ஒருநாள் சீக்கிரமே எழுந்து பாத்ரூம் போன நான் அலற ஆரம்பிச்சுட்டேன். அவ்வளவு அசிங்கம். எல்லா இடமும் சிதறி கிடக்கு. “யார் போனா, வந்து கிளீன் பண்ண சொல்லுங்க”ன்னு அலறல். சத்தம் கேட்டு எட்டிப் பாத்த அப்பா, “நான் தான் போனேன், நல்லா தண்ணி விட்டுட்டு தான் வந்தேன், அலறாத”ன்னு சொல்ல, அப்ப தான் இவங்க எல்லாம் எப்படி தண்ணி விடுறாங்கன்னு புரிஞ்சுகிட்டேன்.

அப்புறமா அப்பாவ தனியா வெளி பாத்ரூம் துரத்தி விட்டது எல்லாம் தனி கதை. தம்பிய தனியா கூப்ட்டு, பாத்ரூம் எப்படி யூஸ் பண்ணனும், எப்படி சிதறாம தண்ணி விடணும்னு டியூசன் எடுத்தது எல்லாம் தனியோ தனிக்கதை. ஆக, இத நான் ஏன் சொல்ல வர்றேன்னா, பாத்ரூம் எப்படி யூஸ் பண்றதுன்னு கூட தெரியாமலே இன்னமும் சிலபேர் இருக்கத் தான் செய்றாங்க. நாம என்ன பண்றோம்னு எல்லாரும் ஒரு தடவ யோசிச்சுப் பாத்துக்குறது நல்லது.

ரொம்ப சமீபத்துல என்னோட ப்ரென்ட் ஒருத்தி தன்னோட பையன பக்கத்துல இருக்குற அரசாங்க பள்ளியில சேர்த்துருக்குறதா சொன்னா. அஞ்சு வயசு ஆகிடுச்சு, இன்னமும் வாயத்தொறந்து பேசல. இங்க சேர்த்தா நல்லா இருக்கும்னு சொன்னாங்க, சேர்த்தேன், இப்ப பரவால, ரெண்டு மூணு வார்த்தை பேசுறான். முன்னாடி ரொம்ப சேட்டை பண்ணுவான், இப்ப பொறுப்பா அவனே பல்லு விளக்குறான்ன்னு அவ பெருமையா சொன்னா. ஆனாலும் உற்றாரும் உறவினரும் இப்படி ஒரு ஸ்கூல்லயா சேர்ப்பன்னு தினமும் கேட்டு ரொம்ப டார்ச்சர் பண்றாங்களாம். நமக்கு தான் அடுத்தவங்க என்ன பண்றாங்க, ஏது பண்றாங்கன்னு பாத்து, அதுல ஆயிரம் நொரநாட்டியம் சொல்றது தான் அல்வா சாப்டுற மாதிரி ஆச்சே.

சரி, இப்ப இந்த டாபிக் கீழ, இந்த விஷயம் ஏன் வந்துச்சுன்னு சொல்றேன். அவ அந்த ஸ்கூல அவ்வளவு சிலாகிச்சு சொன்னாலும், வருத்தப்படுற ஒரு விஷயம் ஒண்ணு இருக்கு. அது தான் அங்க இருக்குற டாய்லெட். பக்கத்துல போனாலே நாறுது. பையனால அங்க நிம்மதியா போக முடியல. பலநாள் உக்காந்த இடத்துலயே பயந்து போயிடுறான். இல்லனா அடக்கி வச்சுட்டு வீட்ல வந்து அவஸ்த்தப்படுறான்னு சொன்னா.

“இதுக்கெல்லாம் என்ன தான் வழி”ன்னு கேட்டேன். இப்ப நாங்களே பாத்ரூம் கிளீன் பண்ண தேவையான சாதனம் எல்லாம் வாங்கி குடுத்து, அத கழுவி விடவும் ஒரு ஆள் வைக்கலாம்னு முடிவு பண்ணி இருக்கோம். பையன் இப்ப பேச ஆரம்பிச்சுட்டான். அவன் நடவடிக்கைகளும் மரியாதையா மாறி இருக்கு. இந்த பாத்ரூம்க்காக அத எல்லாம் இழக்க நாங்க தயாரா இல்லன்னு சொன்னா. அதோட, மத்த பிள்ளைங்களும் நிம்மதியா பாத்ரூம் போவாங்களேன்னு அவ சொன்னப்ப நிஜமாவே பெருமையா இருந்துச்சு. அவ நினைச்சிருந்தா மத்தவங்க பேச்சை கேட்டுட்டு ஒரு ஹை-டெக் ஸ்கூல்ல கொண்டு போய் சேர்த்துருக்க முடியும். ஆனா அவ பையனுக்காக ஒரு ஸ்கூல் சூழ்நிலையையே மாத்தி இருக்கா.

இப்ப நான் காலைல படிச்ச நியூஸ்சுக்கு வர்றேன். தன்னோட நண்பனுக்காக நாகப்பட்டினத்துல மாணவர்களால ஒரு கழிப்பறைய கட்ட முடிஞ்சுச்சுனா, தன்னோட மகனுக்காக ஒருத்தி ஸ்கூல் பாத்ரூம்ம கிளீன் பண்ற பொறுப்ப எடுத்துருக்கானா, நம்மால முடிஞ்ச அளவு நாம ஏன் பண்ண முடியாது? அட, அட்லீஸ்ட் நாம போற பொது கழிப்பறையையாவது கொஞ்சம் சுத்தமா வச்சுக்க முடியாதா?

இன்னும் நிறைய எழுதலாம் தான். ஆனா அதெல்லாம் இன்னொரு நாள் பாத்துக்கலாம். இன்னமும் ஒதுங்க ஒரு கழிப்பறை இல்லாம ஆத்தங்கரை, குளத்தங்கரை, ரோட்டு பக்கம்னு ஒதுங்குற ஜனங்க எவ்வளவோ பேர் இருக்காங்க. கிராமம் தாண்டி நகரம்னு வந்தா அவசரத்துக்கு ஒதுங்க மண்ணு கூட கிடையாது. முதல்ல கிளீன் இந்தியான்னு சொல்ற நம்ம அரசாங்கம் ஸ்டெப்ஸ் எடுக்குதோ இல்லையோ, நாம ஏதாவது ஸ்டெப்ஸ் எடுக்கலாம். இதுக்கு என்னென்ன பண்ணலாம்னு ஆக்கபூர்வமா நாம யோசிக்க ஆரம்பிச்சாலே அடுத்தகட்ட செயல்முறை சுலபமா இருக்கும்.

Thursday 25 August 2016

வெறும் முத்தமென்று நினைத்தாயா?





அதை வெறும் முத்தமென்று நினைத்தாயா?

என் கோபம், வெறுப்பு,
ஆற்றாமை அத்தனையையும்
கூர்முனை கொண்டு குத்தி கிழித்து விட்டது...

உன் முத்தம் ஒவ்வொன்றாய் என்னை
சேர்ந்த பொழுது நான்
சில்லு சில்லாய் உடைந்து கொண்டிருந்தேன்...

முத்தமிட்டு நீ அப்பால் சென்றதும்
ஓ-வென நான் வெடித்து சிதறியதை
நீ அறிவாயா?

என் உணர்வுகள் கட்டப்பட்டுள்ளன...

என் கண்கள் பொய்யாய் மலர
கற்றுக் கொண்டுள்ளன...

உன் முன் எவ்வகை உணர்வை
காண்பிப்பதென்ற எந்த தெளிவையும்
எடுக்க முடியாதவளாய் நான்
சித்தம் கலங்கி நிற்கின்றேன்...

உன்னிடம் கேட்பதற்கோ என்னிடம்
ஏராளமாய் கேள்விகள்
கொட்டிக் கிடக்கின்றன...

கண்சிவந்து கோபப்பார்வை பார்த்து
நான் அவற்றையெல்லாம் உன்
கண்பார்த்து கேட்க வேண்டும்...

ரவுத்திரம் கொண்டு உன்னை
அடித்து தாக்கும் ஆத்திரமெனக்கு...

இருந்தும் என்ன பயன்?

என் கண்ணீரின் காரணகர்த்தாவாகிய
நீ தான் இந்த முத்தங்களையும் இட்டு சென்றாய்...

உன் மேல் நான் கோபமாய் இருக்கிறேன்...

உன் தலை மயிர் பற்றி
உன்னை ஆவேசமாய் பிடித்து தள்ள வேண்டும்...

என் கோபங்கள் அத்தனையும் சேர்த்து
உன்னோடு மல்லுகட்ட வேண்டும்...

ஆவி சேர அணைத்து உன்னை
முத்தத்தாலயே சாகடிக்க வேண்டும்...

எத்தகைய கொடுங்கோலன் நீ?

செய்வதெல்லாம் செய்து விட்டு
ஒரே ஒரு முத்தத்தால்
மொத்தமாய் என்னை வீழ்த்தி
மீண்டுமென்னை பேதையாக்கி விடுகிறாய்...

இருக்கட்டும்...

இந்த முத்தங்களின் போதை தெளியட்டும்...

நான் கோபமாய் வருகிறேன்,
இரு கைகள் கொண்டு கன்னம் பொத்தி 
உன்னை மீண்டும் சந்திக்க....

Tuesday 16 August 2016

அன்புள்ள சூர்யாவுக்கு



சூர்யா,

நீ என் பையன். உனக்கு இப்ப பதினோரு வயசு. ஆனா அந்த வயச மீறுன மெச்சூரிட்டி உனக்கு உண்டு. இந்த லெட்டர் நான் எழுத வேண்டிய அவசியமே இல்ல. ஆனாலும் எழுதுறேன். ஏன் தெரியுமா?

எத்தனையோ பெத்தவங்க அவங்க பிள்ளைங்களுக்கு செய்றது எல்லாமே தியாகம்னு நினச்சு தான் செய்றாங்க. பிள்ளைங்களுக்காகவே செய்றாங்க. ஆனா எப்பவும் உனக்காக இவ்வளவு கஷ்டப்பட்டேன்னு சொல்லாம விட்டுடுறாங்க. இதனால தான் அவங்க படுற கஷ்டம் எல்லாமே பெத்த பிள்ளைங்களுக்கு தெரியாமலே போய்டுது.

எனக்கு தெரியும், நான் அம்மான்னு உனக்கு எந்த கடமையும் செய்யல. ஏன்னா, அதுக்கான பொறுப்பு எனக்கு அளிக்கப்படல. நீங்க என் கூட தான் இருக்கணும்னு நான் ஆசைப்பட்டப்ப எல்லாமே கைமீறி போய்டுச்சு. அது ஏன், எப்படின்னு உனக்கு கண்டிப்பா தெரியப்படுத்துவேன்.

மொவனே, எனக்கு உன்னையும் உன் அக்காவையும் கண்டா பயம். எப்படி உன் அப்பாவ பாத்து நான் நடுங்குவேனோ அப்படியான ஒரு பயம்.

அடுத்தவங்கள அதிகாரப்படுத்தி, காயப்படுத்துற எந்த குணமும் கடைசி வரைக்கும் நிலைக்கப் போவதே இல்ல மொவனே. உன் அம்மா, அதான் நான், யாரையும் காயப்படுத்துனது இல்ல, ஆனா உன் தாத்தாவோட அதிகாரத்தோட வாழ்ந்தவ. அவ கிட்ட எது வேணா இல்லாம போயிருக்கலாம், ஆனா தன்மானம்னு ஒண்ணு நிறைய இருந்துச்சு. ஆனா அத எல்லாத்தையும் உங்க கிட்ட நான் இழந்துட்டேன். எனக்கு பெத்த பிள்ளைங்க கூட வேணாம்னு நான் முடிவுக்கு வந்ததே இதனால தான்.

இத படிக்குறப்ப உனக்குள்ள ஒரு ஏளனம் எழலாம். உங்க கிட்ட நான் எவ்வளவோ அவமானப்பட்டுட்டேன். இன்னிக்கி உச்சகட்டமா அப்படி ஒரு அனாதைத்தனத்தோட நான் ரோட்டுல நின்னேன்.

உனக்கு தெரியுமா, பத்து வயசுல உனக்கு இருக்குற இந்த சுதந்திரம் முப்பது வயசுல உன் அம்மாவுக்கு இல்ல. என்னை இன்னமும் சின்னப்புள்ளையா நினச்சு வீட்டுக்குள்ள பூட்டி வைக்குற என் அப்பா. ஏதோ ஒரு காலம் விடியும், என்னிக்காவது நானும் சுதந்திரமா வாழுவேன், வாழணும்ங்குற ஆசையோட தான் ஒரு வேலைக்காக ஓடி ஓடி அப்ளிகேசன் போட்டுட்டு இருந்தேன்.

அப்ளிகேசன்னா ரொம்ப சாதாரணமா நினைச்சுடாத. எப்போ நான் வேலை தேட ஆரம்பிச்சேனோ அப்ப தான் நான் என்னையே புதுசா புரிஞ்சுகிட்டேன்.

உனக்கு அம்மாவ பத்தி என்ன தெரியும்? அவளுக்கு ஒண்ணுமே தெரியாது, அவ ஒரு லூசு, அவ ஒரு பைத்தியக்காரி, ஆங், முந்தாநேத்து சொன்னியே சூனியக்காரி, இதெல்லாம் தானே.

ஆனா நான் சொல்லட்டுமா உன் அம்மா யாருன்னு?

வாழ்க்கைல எத்தனையோ அவமானப்படுத்தல், போராட்டங்களுக்கு இடையில அவ ஒரு டாக்டரேட். பி.ஹச்.டி முடிச்சவ.

இதுவரைக்கும் தான் கஷ்டப்பட்டு படிச்சத எல்லாம் ரொம்ப சுலபமா எல்லாரும் புரியுற மாதிரி மூணு புக் எழுதினவ.

அவ இதுவரைக்கும் இன்டர்நேசனல் அளவுல வெளியிட்ட ஆராய்ச்சி கட்டுரைகள் இருபத்தி ஒன்பது.

ஒன்பது தடவ இண்டர்நேசனல், நேசனல் கான்பரென்ஸ்ல மேடையேறி பேசி இருக்கா.

ஏழு கான்பரென்ஸ் படிக்குற காலங்கள்ல கலந்துகிட்டு இருக்கா.

தான் வேலை பாத்த காலேஜ்ல ஒரு நேசனல் கான்பரன்ஸ், ரெண்டு மாவட்ட அளவு நிகழ்ச்சிகள் முன்ன நின்னு நடத்தி இருக்கா.

எடிட்டர் பதவியையும் அவ விட்டு வைக்கல. அவ காலேஜ் மேகசீன் எடிட்டர் அவ தான். அது மட்டும் இல்ல, வேலை பாத்த காலேஜ்ல அவ அட்மிசன் கமிட்டி மெம்பர். இன்னும் சொல்றேன் கேளு, அவ டிபார்ட்மென்ட் ஹச்.ஓ.டி அவ தான்.

ஸ்கூல், காலேஜ் லெவல்ல அவ வாங்குன பரிசுகள் பெரும்பாலும் எல்லாமே முதல் பரிசுகள் தான். கிட்டத்தட்ட பதினேழு பரிசுகள். எல்லாமே பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, சிறுகதைகளுக்கு வாங்கினது தான். இதுல யூனிவேர்சிடி அளவுல இளைய சமுதாயம் பத்தி எழுதின கட்டுரைக்கு முதல் பரிசு, கன்னியாகுமரி மாவட்ட அளவுல எட்டாவது படிக்குறப்பவே அவ எழுதின சிறுகதைக்கு முதல் பரிசு.

அவளுக்கு எத்தனை ப்ரெண்ட்ஸ் உண்டுன்னு உனக்கு தெரியுமா? அவள ரொம்ப ரொம்ப நேசிச்ச ப்ரெண்ட்ஸ் அவங்க எல்லாரும்.

நேத்து என் மாணவி ஒருத்தி உன் கிட்ட என்னை பத்தி சொன்னாளே, “உன் அம்மா தான் எங்க எல்லாருக்குமே ரோல் மாடல்”ன்னு. நீ கூட நக்கலா இவளா, இத நான் நம்ப மாட்டேன்னு சொன்னியே, ஆனா அது தான் உண்மை சூர்யா.

என் ப்ரெண்ட்ஸ், எனக்கு பாடம் கத்து குடுத்த ஆசிரியர்கள், என் ஸ்டுடென்ட்ஸ் எல்லாருமே என்னை தான் ரோல் மாடலா சொல்லுவாங்க.

உன் அம்மாவுக்கு பயம்னா என்னனே தெரியாது தெரியுமா? தனி ஆளா குத்த வர்ற கோவில் கிடாவுல இருந்து மிரண்டு வர்ற மாடு வரைக்கும் அடக்குவா. அவளுக்கு பறவைகள், விலங்குகள் பாசம் புரியும். அதோட பாஷை புரியும்.

இப்படி எல்லாம் இருந்த உன் அம்மா இன்னிக்கி ஒரு உதவாக்கரையா இருக்க யார் காரணம் சூர்யா?

இந்த ஆணாதிக்க சமூகம்.

முப்பத்தாறு வயசுலே படம் பாத்தல. அதுல ஒரு கேள்வி வருமே, ஒரு பெண்ணோட எக்ஸ்பயரி டேட்ட முடிவு பண்ணுறது யாருன்னு?

அப்படி தான் என்னோட எக்ஸ்பயரி டேட்ட முடிவு பண்ணினது மூணு பேரு.

முதல்ல காசுக்காக மட்டுமே என்னை கட்டிகிட்ட உன் அப்பா. என்னை பைத்தியக்காரியாக்கி அத்தன சொத்தையும் சுருட்டிடணும்னு பக்காவா ப்ளான் போட்டு, கடைசி கட்டத்துல வெறி புடிச்சு இன்னமும் என்னை கொலை பண்ண சுத்தி சுத்தி வர்றவன்.

அடுத்து, காசு பணத்த இழந்துடுவோம்னு பயந்து உன் அப்பா கிட்ட இருந்து என்னை மீட்டு, எங்க அவனால என்னோட உயிருக்கு ஆபத்து வந்துடுமோன்னு என்னை பூட்டி வச்ச என் அப்பா. அவருக்கு இந்த சமூகத்தின் மேலான பயம்.

அடுத்ததா நீ.

உனக்கு கண்டிப்பா நியாபகம் இருக்காது, ஆனா எனக்கு இருக்கு. நீ, நான், அக்கா மூணு பேருமே மெத்தைல படுத்துக்கிட்டு நம்மோட ஆசைகள் என்ன என்னனு பெரிய பெரிய கனவுகளோட பேசிப்போம். நமக்கு இந்த உலகத்தையே சுத்தி வர ரொம்ப ஆசை. சாதாரண மக்களோட மக்களா கலந்து வாழ ஆசை. எல்லோரையும் நேசிக்க ஆசை. இப்ப வரைக்கும் என்னோட ஆசைகள் இவ்வளவே தாண்டா மொவனே.

ரெண்டு பிள்ளைகள வளர்க்க முடியாதுன்னு என்னை வளர்த்தவங்க கிட்டயே உன்னை தூக்கி குடுத்தது என்னோட தப்பு. சூர்யா, உன்னை விட்டுருக்க கூடாது மொவனே. உன் அக்காவையும் உன் தாத்தாகிட்ட விட்டுருக்க கூடாது. இப்போ உங்கள மீட்டெடுக்கவே முடியாத பாவி ஆகிட்டேன்.

இன்னிக்கி நடந்த சம்பவம் தான் என்னை இத எழுத வைக்குது. நான் வேலை தேடி அப்ளிகேசன் போட்டுட்டு இருக்கேன்னு சொன்னேன் இல்லையா, அதனால எனக்கு ஏகப்பட்ட மன உளைச்சல், உடல் வலி. எல்லாம் சேர்ந்து தான் என் உடல்நிலைய ரொம்ப படுத்திடுச்சு. எத்தனையோ நாள் என்னை அறியாமலே மயங்கி விழுந்துருக்கேன். என் உடல் நிலை பத்தி உனக்கு தெரியப்படுத்தாம போனது என்னோட தப்பு தான். ஆனாலும் ஒரு நாள் நீ இருக்குறப்ப மயங்கி விழுந்தப்ப நடிக்குறேன்னு சொன்ன. அதெப்படி உன்னால அவ்வளவு அழகா நடிக்க முடியுதுன்னு நக்கல் பண்ணின. சரி அத எல்லாம் விடு.

நான் ரொம்ப அவசரமா வெளில போக வேண்டியது இருந்துச்சு. கதவ தொறந்து விடச் சொல்லி உனக்கு நான் போன் பண்ணினேன். ஆமா, ஒரு அம்மாவா இருந்தும், எனக்கு என்ன தேவை, எனக்கு எவ்வளவு காசு வேணும்ன்னு நான் உங்க கிட்ட தான் கெஞ்சி கேக்கணும். என்னோட தேவை அவசியமா இல்லையா, எனக்கு காசு கொடுக்கலாமா வேணாமா, என்னை வீட்டை விட்டு திறந்து விடலாமா வேணாமான்னு முடிவெடுக்குற எல்லா அதிகாரமும் இருந்தது உன் கையில. உன் தாத்தா, அதான் என் அப்பா அப்படி தான் உன்னை பழக்கி வச்சிருக்கார். ஏன்னா, வீட்டுக்கு அடுத்த ஆம்பிள்ளை நீ தானாம். நீ தான் அம்மாவ இனி கவனிச்சுக்கணுமாம்.

நான் உன்னை கூப்ட்டுகிட்டே இருக்கேன். அப்ளிகேசன் அனுப்ப எனக்கு கடைசி நாள். கட்டுகட்டா ஜெராக்ஸ், பிரிண்ட் அவுட் எல்லாமே எடுத்தாகணும். நீ வரவே இல்ல. அப்படி நீ இந்த நேரம் வீட்டை விட்டு வெளில போக வேணாம்னு கோபமா சொல்லி போனை வச்சிடுற.

பின் வாசல் வழியா தட்டு தடுமாறி போய், அவ்வளவு பெரிய கேட்டை தொறந்து நான் வெளில ரோட்டுல நின்னப்ப என் நிலை, உங்க நிலை எல்லாம் நினச்சு ஓ-ன்னு அழுதேன் சூர்யா. பெத்த பிள்ளைங்க கூட எனக்கு இல்ல சூர்யா.

எனக்கு பயமா இருக்குடா. எல்லாருமே நல்லா இருக்கணும்னு ஆசைப்படுவேன். அத்தனைபேருக்கும் நான் புத்திமதி சொல்லுவேன். ஆனா என் பிள்ளை நீ இப்படி தாறுமாறா நடந்துக்குறத நினச்சு எதுவுமே செய்ய முடியாம கைய பிசஞ்சுகிட்டு இருக்கேன்.

உனக்கு என் மேல மிகப்பெரிய கோபம் இருக்கலாம்.

என்னை சூனியக்காரின்னு சொல்லலாம்.

ஒரு அம்மாவுக்கான எந்த பொறுப்பையும் நான் செய்யலன்னு சொல்லலாம்.

ஆனா உன் அம்மாவுக்கு தெரிஞ்ச சூர்யா, அவ கைய விட்டு போய்ட்டான். அவ கிட்ட காசுக்காகவும், தன்னோட தேவைகள நிறைவேத்திக்குறதுக்காகவும் மட்டுமே வருவான். அவனுக்கு சைக்கிள் வேணுமா அம்மாகிட்ட வருவான், மீன் வேணுமா அம்மா கிட்ட வருவான், இன்னும் என்னென்ன வேணுமோ அத எல்லாம் வாங்க அம்மாகிட்ட வருவான். எப்போ எல்லாம் அவளால அத அவனுக்கு குடுக்க முடியலையோ அப்போ எல்லாம் அவ அவனுக்கு சூனியக்காரி ஆகிடுவா. இத்தனைக்கும் அவன் வயசு பதினொன்னு.

ஆனா ஒண்ணே ஒண்ணுடா மொவனே,

இந்த உலகத்துல கோழைகளும், பயந்தாங்கொள்ளிகளும் வாழவே முடியாது. அவங்கள இன்னும் அடிமைப்படுத்தி வைக்கவே இந்த சமூகம் மட்டுமில்ல பெத்த பிள்ளைங்களும் விரும்புவாங்க.

டேய், இதுவரைக்கும் நான் கஷ்டப்படுறேன்னு யார்கிட்டயும் புலம்பினதே இல்லடா. சாக கிடந்த கதை எல்லாம் கூட ஒரு சாகசமா தான் எல்லாருக்கும் சொல்லிட்டு வந்துருக்கேன். இப்பவும் அதே தான். இத எல்லாம் நான் ஒரு சாகசமா தான் எடுத்துக்கப் போறேன். ஆனாலும் உன்னால ஒரு கணம் நான் நிலைகுலைஞ்சு நின்னது உனக்கு தெரியணும்ல, அதுக்கு தான் இந்த லெட்டர்.

ஒரே ஒரு எடுத்துக்காட்டு சொல்றேன் சூர்யா. ஒவ்வொரு உடல் உறுப்பா நான் இழந்துட்டு வந்தாலும், என்னோட கணையத்த நான் இழந்த நேரம், வீட்ல வந்து உக்காந்துட்டு இருந்தேன். நீ என் வயித்துல எட்டி உதச்ச. தையல் விட்டு என் குடல் எல்லாம் வெளில தெரிஞ்சுது. அப்போ கூட காலைல தினமும் ஆஸ்பத்திரி போய் மருந்து போட்டுட்டு, அதே வயித்தோட சேலை கட்டிக்கிட்டு வேலைக்கு ஓடுவேன். வீட்டுக்கு வந்து ஐ என் குடல் தெரியுது பாருன்னு டார்ச் அடிச்சு பாத்து சிரிப்பேன். வாழ்க்கை அவ்வளவே தாண்டா மவனே, கஷ்டம்னு நினச்சா கஷ்டம், சாகசம்னு நினச்சா சாகசம்.

நீ ஒரு அற்புதமான குழந்தை தெரியுமா? உன்கிட்ட நிறைய திறமைகள் உண்டு. அத எல்லாம் பாத்து நான் மலைச்சு போயிருக்கேன். நீ நல்லா வரணும் சூர்யா.

இப்ப கூட நான் உங்ககிட்ட இருந்து தப்பிச்சு போக நினைக்குறதுக்கான காரணம் ரொம்ப சிம்பிள்.

நாளைக்கு இவ என் அம்மான்னு நீங்க நெஞ்சு நிமிர்த்தி நிக்கணும். நிக்க வைப்பேன்.

Saturday 13 August 2016

செல்பியும் காதலும்




நான் என்னையே கொண்டாடத் தொடங்கியிருக்கிறது ஒரு எட்டு மாசமா தான். எப்பவுமே என் மேலயோ என் உருவம் மேலயோ நான் அக்கறை எதுவும் எடுத்துகிட்டதேயில்ல. ஆனா வழக்கத்துக்கு மாறா இப்பல்லாம் செல்பியா எடுத்து தள்ளிகிட்டு இருக்கேன்.

இந்த மூஞ்சிய அந்த கோணத்துல எடுத்தா நல்லா இருக்குமோ, இந்த கோணத்துல எடுத்தா நல்லா இருக்குமோன்னு வித விதமான செல்பிக்கள் அதெல்லாம். அதெல்லாம் பத்தாதுன்னு, வித விதமா எடிட் பண்ணி அத வேற ரசிக்க ஆரம்பிச்சிருக்கேன்.

இந்தா ரெண்டு நாள் முன்னால எந்த விதமான எடிட்டும் பண்ணாம இருக்குற மூஞ்சிய அப்படியே வாட்ஸ் அப்ல அப்லோட் பண்ற அளவு தைரியம் வந்திருக்கு.

இந்த தைரியத்துக்கு பின்னணியில அவ இருந்தா. ஆமா, நான் அவளுக்கு செய்த துரோகம் ஒண்ணு என்னை கூனி குறுகி போக வச்சிருந்துச்சு. அதுல இருந்து வெளிவரவே முடியாத அளவு குற்ற உணர்ச்சியில அழுதுகிட்டே இருந்தேன். அப்ப தான் முதல் முதலா நான் அப்லோட் பண்ணியிருந்த என்னோட போட்டோ ஒன்னை வாட்ஸ் அப்ல பாத்துட்டு அவ கிட்ட இருந்து அந்த மெஸ்சேஜ் வந்துருந்துச்சு. “அசத்துற அக்கா, அடி தூள்”னு. “அடியே செல்லமே, லவ் யூ, உம்மா”ன்னு பதில் அனுப்பி வச்சுட்டு கொஞ்சம் கொஞ்சமா நான் உடைஞ்சு அழ ஆரம்பிச்சிருந்தேன். அதுல எனக்கான குற்ற உணர்ச்சி கரைஞ்சுகிட்டே வந்துச்சு.

இந்த கண்களும், கன்னங்களும், கூடவே அந்த தலைமுடியும் எந்த விதமான கவனிப்பாரும் இல்லாம எப்படியோ சிதஞ்சி போய் இருந்துச்சு. கண்ணாடியே பாக்க மறந்த மூஞ்சிய தடவி பாத்தா சொரசொரப்பு. ஆங்காங்கே கருப்பு திட்டுக்களோட இருந்த மூஞ்சிய கொஞ்ச நேரம் வருடிட்டே இருந்தேன். திடீர்னு நான் அழகா இருக்குற மாதிரி தோண ஆரம்பிச்சுது.

அதோட கூடப்பொறந்தவளோட உற்சாக முகம். நீ என் அக்காக்கா. உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும்னு சொன்ன அவ வார்த்தைகள். எனக்கே நான் ரொம்ப ரொம்ப அழகா தெரிய ஆரம்பிச்சேன். ஆமா, நான் நிஜமாவே ரொம்ப அழகி தான். யார் இல்லன்னு சொன்னது?

இந்த செல்பி மோகம் எனக்கு அவளால தான் வந்துச்சு. ஒவ்வொரு தடவையும் புதுசு புதுசா போட்டோ எடுத்து போடுறப்பவும் “அழகி”ங்குற எழுத்து உற்சாக குரலா என் காதுல வந்து விழும். கூடவே சில பல டிப்ஸ்களும்.

இப்படி தான் நேத்து உள்ளது உள்ளபடி ஒரு போட்டோவ அப்லோட் பண்ணியிருந்தேன். “பொட்டு எங்கக்கா? பொட்டு வச்சு போட்டோ போடு”ன்னு கட்டளை அந்த பக்கம் இருந்து.

நான் எடுக்குற போட்டோவுல எல்லாம் என் நெத்தியில இருக்குற பொட்டு எப்பவுமே போட்டோஷாப் செய்யப்பட்டது தான். ஆமா, நான் நெத்தியில பொட்டே வைக்குறது கிடையாது.

இந்த பொட்டு நான் ஏன் வைக்க மாட்டேங்குறதுக்கு எல்லாம் ஒரு ப்ளாஸ்பேக் இருக்கா இல்லையான்னு தெரியாது, ஆனா எனக்குன்னு ஒரு நண்பன் இருந்தான்.

.......................................

நம்ம சொந்த வீட்டுக்குள்ள வந்து உக்காந்துக்கிட்டு நம்மள பாத்து ஒருத்தர் “வாங்க, வாங்க”ன்னு வரவேற்றா எப்படி இருக்கும்? எனக்கு அப்படி தான் இருந்துச்சு என் அப்பா மேனேஜ்மென்ட்ல இருந்த காலேஜ்லயே வந்து என்கிட்டயே “ஹாய் ஐயம் ஸோ அண்ட் ஸோ. வெல்கம் டு அவர் டிபார்ட்மென்ட்”ன்னு கை பிடிச்சு குலுக்கின போது.

எனக்கு அவன பிடிச்சுதா இல்லையான்னு தெரியாது, ஆனா அவன் பெயர் பிடிச்சு இருந்துச்சு. அந்த ஸோ அண்ட் ஸோ பெயர் தான் எந்த தயக்கமும் இல்லாம அவனுக்கு கைகுடுக்க வச்சுது.

அதுக்கப்புறம் பெரும்பாலும் நாங்க ஒண்ணாவே தான் சுத்திட்டு இருப்போம். பொண்ணுங்க எல்லாம் அவன மாதவன் மாதவன்னு தான் கூப்டுவாங்க. அவனுக்குமே அந்த திமிரு உண்டு, நாம ரொம்ப அழகா இருக்கோம்னு. அடிக்கடி அதட்டி வைப்பேன், சினிமா மோகத்துல மிதக்காதன்னு.

அவன் பிறந்தநாளுக்கு அவனையே வரைஞ்சு குடுக்கப் போறேன்னு நான் சொன்னப்ப விழுந்து விழுந்து சிரிச்சான். அடேய், நான் ஏதோ சுமாரா வரைவேன்டான்னு கெஞ்சி எல்லாம் பாத்தேன். ஒரே ஒரு போட்டோ குடுடான்னு அவன் பின்னால அலைஞ்சேன். ம்ஹும், பய அசரவே இல்ல. அவன் அம்மா தான் அதான் போட்டோ கேக்குறால, குடேன்ன்னு சொன்னாங்களாம். ஒருவழியா போட்டோ கிடைச்சிடுச்சு.

ரெண்டு நாள் தூங்காம உக்காந்து அவன வரைஞ்சேன். அம்மா வேற திட்டிப் பாத்துட்டு ஓய்ஞ்சு போய்ட்டா. கடைசியா அவன் பிறந்தநாளுக்கு காலேஜ்ல எல்லார் முன்னாலயும் கேக் வெட்டி, என் கிப்ட்ட பிரிச்சி பாத்தவன் அசந்துட்டான். ஹே... ஹேன்னு ஒரே கூச்சல். தேங்க்ஸ்டி, தேங்க்ஸ்டின்னு அம்பது தடவையாவது சொல்லி இருப்பான். அப்ப என்னை ரெண்டு கண்களும், அவன ரெண்டு கண்களும் கண்காணிச்சத நாங்க கவனிக்கவே இல்ல.

ரொம்ப வளவளன்னு அறுக்காம நேரே விசயத்துக்கு வரேன். வழக்கமா காலேஜ்ல நான் நடுவுல உக்காந்துட்டு இருந்தேன்னா, வலது பக்கம் அவனும் இடது பக்கம் அவளுமா உக்காந்து இருப்பாங்க.

நடுவுல என்னை வச்சுகிட்டு, எனக்கே தெரியாம கிட்டத்தட்ட ஒரு வருசமா அதுங்க ரெண்டும் கண்ணும் கண்ணும் நோக்கிட்டு இருந்துருக்குதுங்க. விஷயம் தெரிய வந்தப்ப எனக்கு ஒரே அதிர்ச்சி தான். அடேய், எரும எரும இப்படி போய் மாட்டிகிட்டியேடான்னு அவன குனிய வச்சு குமுறனும் போல இருந்துச்சு. ஆனா, “எங்க அவள வேணாம்னு நீ சொல்லிருவியோன்னு தான் உன் கிட்ட விசயத்த சொல்லவே இல்ல. நீ மட்டும் நோ சொல்லி இருந்தா உன் நட்பையே நான் தூக்கி போட்ருப்பேன்”ன்னு அவன் சொன்னதும் நான் அமைதியாகிட்டேன். காதல், எங்க யார்கிட்ட எப்படி வரும்னு சொல்லவே முடியாதுல.

எனக்கு அவளோட முந்தைய ரெண்டு காதல் பத்தி தெரியும். ரொம்ப ஈசியா அன்புக்கு அடிமையாகுற அவ குணம் தெரியும். அத விட அவளுக்கு எது ரொம்ப ரொம்ப பிடிக்கும்னும் தெரியும். அதனாலயே அந்த காதல் அவங்களுக்குள்ள செட் ஆகாதுன்னும் தெரியும்.

திடீர்னு ஒரு நாள் கால் பண்ணி இருந்தான். இன்னும் ஒரே வாரத்துல உனக்கு ஒரு குட் நியூஸ் சொல்றேன்னு. அடுத்த நாளே அவள் அப்பாவும் என் அப்பாவும் பிசினஸ் மூலமா தெரிஞ்சவங்கங்குற முறைல அவ கல்யாண பத்திரிக்கை எங்க வீடு தேடி வந்துச்சு.

கல்யாணத்துக்கு போயிட்டு வந்த அப்பா, “பொண்ணு முகத்துல என்னமா ஒரு லெட்சுமி களை. சிரிச்ச முகம். மாகாலெட்சுமி மாதிரி இருக்கா”ன்னு சொன்னப்ப நான் புன்னகை புரிஞ்சுகிட்டேன். அப்புறம் ஒரு நாள் அவன் அவ எப்படி இருக்கான்னு என் கிட்ட விசாரிச்சு தெரிஞ்சுகிட்டான்.

..............

நான் அந்த பொட்டு விசயத்த அப்படியே விட்டுட்டு என்னென்னவோ பேசிட்டு இருக்கேன்ல, அப்பவே சொன்னேனே, ரெண்டு கண்கள் என்னை கவனிச்சுட்டே இருந்துச்சுன்னு. இப்ப நாம அந்த கண்களுக்கு சொந்தக்காரனுக்கு வருவோம்.

கிட்டத்தட்ட ஒரு வருஷம் இவன் என்னை தூரமா இருந்தே கவனிச்சுட்டு வந்தவன். நான் சொன்னேனே என் வலது பக்கம் அவன், இடது பக்கம் அவள்ன்னு, இவன் எப்பவும் எனக்கு எதிர நேரே உக்காந்துட்டு இருப்பான்.

ரெண்டாம் வருஷ தொடக்கத்துல தான் நான் இவன கவனிக்க ஆரம்பிச்சேன். இவன் கூட நெருங்கவும் ஆரம்பிச்சேன். “அடேய்”ன்னு அதட்டலா கூப்ட்டு, எங்களோட அரட்டைல இவனையும் வம்படியா சேர்த்துப்பேன்.

ஒரு நாள் கவிதைன்னு எதையோ ஒண்ணை கிறுக்கிகிட்டு வந்து நீட்டினான். வாங்கி படிச்சுட்டு ஒண்ணும் புரியல போன்னு திருப்பி குடுத்தேன். கோபமா அத கசக்கி குப்பைல எறிஞ்சான்.

ஒரு நாள் எல்லோரும் உக்காந்து பேசிட்டு இருக்குறப்ப அவ சொன்னா என்ன வேணா செய்வேன்னு சொன்னான். பக்கத்துலயே ப்ராக்ட்டிக்கலுக்காக வச்சிருந்த பேக்டீரியா கலவை இருந்துச்சு. எடுத்து குடிடான்னேன். எந்த தயக்கமும் இல்லாம குடிச்சுட்டான்.

யாருக்கு எல்லாம் தண்ணி அடிச்சி பழக்கம் உண்டுன்னு ஒரு நாள் பார்மசி க்ளாஸ்ல சார் கேட்டப்ப, இவன் மட்டும் தான் எழுந்து நின்னு, நான் அடிப்பேன், ஆனா இப்ப விட்டுட்டேன்னு என்னை பாத்துகிட்டே சொன்னான்.

அம்மை வந்து பதினஞ்சு நாளா நான் காலேஜ் பக்கம் போகலன்னதும் அவன் தாடி வளத்துட்டு திரிஞ்சதாவும், எனக்காக தினமும் கோவிலுக்கு எல்லாம் போய் பிரார்த்தனை பண்ணினதாகவும் கேள்விப்பட்டேன். நான் லீவ் முடிஞ்சி போனப்ப அவன காணோம். மறுநாள் உள்ளங்கைல திருநீறு கொண்டு வந்து நீட்டினான். முதல் வருஷம் கோவில் பிரசாதம்னு நான் குடுத்த அரவணைய தொடவே மாட்டேன்னு அடம் பிடிச்சவன், எதுக்காக எனக்காக கோவிலுக்கு போனான்னு அப்ப கூட நான் புரிஞ்சுக்க விரும்பல.

நான் அவன் கூட தோள்ல கைபோட்டு திரிஞ்ச காலம் எல்லாம் தூரமா நின்னு புன்னகையோட பாத்துட்டு நின்னவன் இவன். கொஞ்சமே கொஞ்சம் இவன் மேல எனக்கும் ஏதோ பூக்க தொடங்கின நேரம் ஒரு நாள் எனக்கும் காதலுக்கும் ஏழாம் பொருத்தம்னு புரிஞ்சுகிட்டேன்.

இந்த பையன உனக்கு பிடிச்சிருக்கான்னு அப்பா கேட்டப்ப, இல்லப்பா, இவனுக்கும் எனக்கும் செட் ஆகாது, நீங்க வேற பையன பாருங்கன்னு சொல்லிட்டேன்.

காரணம் கேட்ட அப்பாவுக்கு, அவன் மதத்த காரணமா காட்டிட்டு நான் மவுனமாகிட்டேன்.

அப்ப இருந்து இப்ப வரைக்கும் நான் பொட்டு வச்சதே இல்ல.

அந்திம ஆசைகள்



அந்திம காலம்
நெருங்கி விட்டதை
புத்தி உணர்த்திக் கொண்டே இருக்கிறது...

உன்னைப் பார்க்காமலே என்
இறுதி யாத்திரை துவங்கி விடுமென
எச்சரிக்கை மணி
ஒலிக்கத்துவங்கி விட்டது...

அன்றொரு நாள்
நான் கண்ட கனவொன்றை உனக்கு
நினைவுறுத்த விரும்புகிறேன்...

என்னை காண வந்து என்
கல்லறையை நீ வருடி விட்டது
போலமைந்த கனவு அது...

உன் கண்களில் ஈரம் துளிர்த்ததாவென்ற
தெளிந்த சித்திரம்
என்நினைவிலில்லை...

ஆயினும் நீ
அழுதிருக்க கூடும்...

நீர்கோர்த்து வீங்கிருக்கும்
என் விரல்களை சற்று
எட்டிப்பாரேன்...

நீ வருடிய விரல்களே தான்.
ஏனோ திறன்களற்று ஏக்கத்தோடு
மீண்டும் உன் கை வருட
காத்துக் கிடக்கின்றன...

ஒரு வேளை நீயென்னை
மீண்டுமொருமுறை சந்திக்க
நேராமலே கூட போகலாம்.

அன்றென் கடைசி ஏக்கம்
எதுவென அறிந்து கொள்ள நீ
தவிப்பாயென தெரியுமெனக்கு...

இதோ உயிலினை போல்
உனக்காக இங்கென் ஆசைகளை
செதுக்கி வைக்கிறேன்.

உன்னை மீண்டும் மீண்டும்
கண்டுவிட வேண்டுமென்ற
பேராவல் எனக்கு...

ஆவி கலங்க சேர்த்தணைக்க வேண்டுமுன்னை...

பின்பு பெருங்குரலெடுத்து ஒரு அழுகை...

என் மொத்தமும் நீ தானென
உன்னோடு ஒரு வாழ்க்கை...

உன் கண்கள்....
உன் உதடுகள்...
உன் விரல்கள்...
உன் மார்பு...
உன் இதழ் முத்தம்...
மொத்தமாய்...

Thursday 11 August 2016

கபாலி - நான் உணர்ந்தது





அந்த நாள் எனக்கு நல்லா நியாபகம் இருக்கு. ரொம்ப பரபரப்பா கிளம்பி, டிக்கட் கிடைக்காதுன்னு எல்லாரையும் அலற விட்டு, கடகடன்னு டிக்கெட் வாங்கிட்டு தியேட்டர் உள்ள போய் உக்காந்து சுத்தி முத்தி பாத்தா, உள்ள இருந்தது மொத்தமே பதினோரு பேரு. அதுலயும் நாங்க மட்டுமே ஆறு பேர் இருந்தோம். அந்த படம் – கோச்சடையான்.

நேத்தும் அந்த நாளுக்கு கொஞ்சமும் பரபரப்பு குறையாத நாளு. அஞ்சே காலுக்கே போய்டணும், இல்லனா பார்க்கிங் இடம் கிடைக்காது, படத்துக்கு டிக்கெட் கிடைக்காதுன்னு நானா ஸெல்ப் பரபரப்பு அடஞ்சுகிட்டேன். ஆறு மணியாகியும் கிளம்பாதவங்களுக்கு எல்லாம் போன் போட்டு, போச்சு, போச்சு, இன்னிக்கி படம் பாக்கவே முடியாதுன்னு சாபம் எல்லாம் போட்டேன்.

ஆறே காலுக்கு தியேட்டருக்கு வெளில காலடி எடுத்து வச்சா, ஒரு காக்கா, ஈ, பூனை கூட அந்த இடத்துல இல்ல. ஒருவேளை இன்னிக்கி ஷோ கிடையாதோன்னு மலங்க மலங்க முளிச்சவள கைத்தாங்கலா கூட்டிட்டு போய் ஒரு சீட்ல உக்கார வச்சாங்க. இதுல சீட் நம்பர் வேற பாத்து உக்காரணுமாம். போன நாலு பேரோட, வேற யார் தலையாவது தெரியுதான்னு பரிதவிப்போட தேட ஆரம்பிச்சேன். ஹப்பாடி, எனக்கு முன்னாடி நாலஞ்சு சீட் தள்ளி ஒரு ரெண்டு பேரு உக்காந்துட்டு இருந்தாங்க...

...................................................

ஆக, மொத்தத்துல படம் ஒரு மொக்கை அப்படின்னு நான் சொல்லுவேன்னு உடனே முடிவு பண்ணிடாதீங்க. ஏன்னா படம் ஆரம்பிச்ச வேகத்துல நான் அப்படி தான் முடிவு பண்ணி வச்சிருந்தேன். யோவ், என்னையா இன்ட்ரோ சீன் அது? ஒரு உப்பு, மொளகா காரம் எதுவும் இல்லாம டொய்ங் டொய்ங் டொய்ங்னுகிட்டு.... ரஜினா யார் தெரியுமா? அவர் எப்படி பட்ட மாஸ் தெரியுமா? அவருக்கு எப்படி பட்ட இன்ட்ரோ குடுக்கணும் தெரியுமா?

அந்த பறவைய தொறந்து விட்டாரே, அப்படியே படபடன்னு அத்தன கூண்டோட கதவையும் தொறந்து விட வேணாமா? ஹே, தலைவருடான்னு நாங்களும் கை தட்டி இருப்போம்ல...

சரி, விடுங்க, என் கவல எனக்கு. ஆனா நான் க்ளாஸ் எடுக்குறப்பவே பிள்ளைங்ககிட்ட புலம்புற விஷயம் இது. நான் ரொம்ப சுயநலமா இருக்கேன். என் வீட்ல பறவைய அடச்சு வச்சி வளர்க்குறேன். அந்த பாவத்த போக்கிக்க, அதுகள வெளில தொறந்து விட்டா அதால வாழ முடியாதுன்னு எனக்கு நானே சாக்கு போக்கு சொல்லிக்குறேன்னு.

இந்த படத்துல ரஜினி என் செவுட்டுலயே அறையுற மாதிரி சொல்லிட்டார், வெளில போய் பொழச்சுக்குறது அதுங்க சாமார்த்தியம், ஆனா அடைச்சு மட்டும் வைக்க கூடாது, அது வெளில கஷ்டப்படுறத விட கொடுமையானதுன்னு. உண்மை தானே.

......................................

அப்புறம், படம் பாக்குறப்ப ஐயோ இந்த சீன் மொக்க, அந்த சீன் படு மோசம்னு எல்லாம் மனசுக்குள்ள நிறைய ஹிண்ட்ஸ் எடுத்து வச்சிருந்தேன். அப்படியே படம் முடிச்சு வந்ததும் நம்ம எழுத்துல அதெல்லாம் பெரிய சூரி மாதிரி காட்டிடணும்னு நினைச்சுகிட்டே வந்தேனா, படம் நீண்டுகிட்டே போக போக எல்லாமே மறந்து போச்சு. இப்ப எனக்கு என்ன எழுதன்னு தெரியலயே....

.............................................

எனக்கு ஒரு சந்தேகம்டே, தமிழ் நேசன் கூட நம்மாளு எத்தன காலம் இருந்தாரு? எத்தன நாள்ல அவரு பெரிய ஆளா வந்தாருன்னு. ஏன்னா, பிளாஷ் பேக் ஆரம்பிச்சு, தமிழ்நேசன் கூட போறப்பவே அந்த புள்ள மாசமா இருக்கு. அதுவும் ரஜினி சார்ஜ் எடுத்தப்ப அது வயிறு பானை சைஸ்ல இருக்கு. ஐ மீன், வாட்ஐ மீன், அது பிரசவ காலத்துலயே தான் இருக்கு. முன்னாடி எல்லாம் தமிழ் சினிமாவுல ஒரே பாட்டுல ஹீரோ பெரிய ஆளா வந்துடுவார். இங்க புதுசா, ஒரே ஒரு பெரிய வயித்த காட்டிகிட்டே ஹீரோவ டானா மாத்திடுறாங்க.

ஆனா சும்மா சொல்லக்கூடாது, அந்தப் புள்ள குமுதவல்லி அழகு, நடிப்பு எல்லாம் செம. குட்டி குட்டி டயலாக்ஸ் தான். ஆனாலும் அந்த பார்வை, அந்த புன்னகை, அடியே திமிர் புடிச்சவளே...

நாலு நாள் முன்னாடி தான் எனக்கு திடீர்னு படையப்பா நியாபகம் வந்துச்சு. மின்சார கண்ணாபாட்டுல “ஒரு ஆணுக்கு எழுதிய இலக்கணம் உன்னிடத்தில் கண்டேன், என் பாதத்தில் பள்ளிக் கொள்ள உனக்கொரு அனுமதி தந்தேன்”ன்னு ரம்யா கிருஷ்ணன் பாடுறப்ப செம கெத்தா இருக்கும். நான் இப்படியான ஆணை தான் விரும்புறேன். அவனை ஆளுறது தான் என் பெண்மைக்கு அழகுன்னு சொல்ற விதம் எல்லாம் அத்தன அட்டகாசம். இங்க குமுதவல்லி அதே திமிரோட தான் திரியுறா. பாரேன், எப்படி பட்ட ஆணை நான் ஆண்டுக்கிட்டு இருக்கேன்னு.

..............................................

ஆங், சொல்ல மறந்துட்டேனே, யார்யா அது ஜீவா? உடனே அட்டகத்தி தினேஷ்ன்னு மொக்க போட்ராதீங்க, ஆளு செம கலக்கல். ரஜினிய பாத்ததும் ஒரு மாதிரியா தலைய குனிச்சுகிட்டு, கண்ண அங்கயும் இங்கயும் உருட்டிகிட்டு, ஒரு மாதிரி வெறப்பா நிக்குற ஸ்டைல் ஆகட்டும், முந்திரி கொட்டை மாதிரி பாய்ஞ்சு பாய்ஞ்சு யாரும் ரஜினிய நெருங்க விடாம தடுக்குற ஸ்டைல் ஆகட்டும் ஆளு கொன்னுட்டாரு.

...................................................

அப்புறம் அந்த பொண்ணு. டானுக்கே டான். ஐ மீன் அவ்ளோ பெரிய ரஜினிய கொல்ல வர்ற புள்ள. அந்த புள்ள எப்படியா இருக்கணும்? சும்மா டாம் டீம்ன்னு நின்னு பின்னி பெடலெடுக்க வேணாமா? ஆரம்பத்துல அத காட்டுன தோரணைய அப்படியே டம்மி பீஸ் ஆக்கிட்டீங்களே மக்கா. ஐயோ அப்பா, ஐயோ அப்பான்னு பயந்துகிட்டே இருக்கு. நான் இருக்கேன்பா உனக்கு, நான் இருக்குறப்ப எவனும் உன்னை தொட முடியாதுன்னு தில்லா திமிரோட இருந்துருக்க வேணாமா அது. அடப்போங்கப்பா, பொண்ணுனா இப்படி தான்ன்னு சொல்லிட்ட மாதிரி இருக்கே.

...................................................

எனக்கு படங்கள்ல இந்த சண்டை காட்சிகள், கொலை பண்ற சீன்ஸ் எல்லாம் வந்தா வயித்த கலக்கிடும். கண்ண அங்க இங்க திருப்பி, அத பாக்காம அட்ஜஸ்ட் பண்ணிடுவேன். என்னமோ அப்படியே வளந்துட்டேன்னா, ஆனா பாருங்க, இந்த படத்துல க்ளைமாக்ஸ் சீன தான் வச்ச கண்ணு எடுக்காம பாத்துகிட்டே இருந்தேன். ஏன்னா, மொத்த படத்துலயும் அதுல தான் ரஜினி மாஸா தெரிஞ்சாரு. பட்டு பட்டுன்னு துப்பாக்கிய எடுத்து அவர் சுடுற ஸ்டைல் இருக்கே... (ஆக, கதைல உயிர்விட்ட கேரக்டர்கள் என்னை மன்னிக்க) கலக்கல்டா, ரஜினிடா, கபாலிடா... இன்னும் நிறைய டா.... டா.... டா... டா....

............................................

இன்னும் வேற ஏதாவது சொல்லணுமான்னு தெரியலயே.... கொஞ்சம் யோசிக்கலாம்னு பாத்தாலும் துப்பாக்கிய எடுத்து ரஜினிய பொட்டு பொட்டுன்னு சுட்டுடுராங்களே...

ஆங், இருங்க, நான் இந்த சமூகத்துக்கு கருத்து ஏதாவது சொல்லாம போய்ட்டா தப்பாகிடாதா?

படம் முடிச்சுட்டு வர்றப்ப எனக்குள்ள ஏகப்பட்ட குழப்பங்கள். ஏன், படம் நல்லா தான இருக்கு. ஆனா ஏன் நமக்கு பிடிக்கல, இதுல எத நாம குறை சொல்ல முடியும்? நம்ம இஷ்டத்துக்கு அவங்க படம் எடுக்க முடியுமா? அவர் பெஸ்ட் தானே அவர் குடுத்துருப்பார்ன்னு ஏகப்பட்ட யோசனைகள். இங்க நான் அவர் அவர்ன்னு சொன்னது டைரக்டர்ன்னு எடுத்துக்கோங்க. நிஜமாவே நல்ல ஒரு முயற்சி தான். நான் இந்த இடத்துல அமிதாப்ப வச்சு பொருத்தி பாத்தேன். பிக்கு மாதிரியான படங்கள்ல கூட அமிதாப் எவ்வளவு அழுத்தமா பொருந்தி போய்டுறார். அதே மாதிரி இந்த படத்துல ஏன் ரஜினி பொருந்தி போக கூடாது?

வேற ஒண்ணுமே இல்ல, ரஜினினா நமக்கு ஒரு எதிர்பார்ப்பு, அவர் இப்படி தான் இருக்கணும், அவர் இப்படி தான் இன்ட்ரோ ஆகணும், அவர் இப்படி தான் ஸ்டைலா பாக்கணும்ன்னு எல்லாம் நமக்குள்ள ஒரு ஸ்கெட்ச் போட்டு வச்சிருக்கோம். அதுல இருந்து நம்மால மீள முடியல. இது ஆரம்பம் தான, போக போக இப்படி ஒரு ரஜினிய பழகிப்போம்னு நம்புறேன். ஆக மொத்தத்துல ரஜினி படம்னு நினச்சு பாக்கப் போனா பல்ப் தான். அதே நேரம் அந்த இடத்துல வேற யாரையாவது பொருத்தி பாத்தா, படம் ஓகே. இன்னொரு தடவ பொறுமையா உக்காந்து படத்த பாக்கணும். வித்யாசமான ரஜினிய ரசிக்க கத்துக்கணும்.

..............................................



திடீர்னு ரஜினிய இப்படி எல்லாம் ஏத்துக்க நமக்கு மனசு வருமா என்ன?

இந்தா பிக்கு படத்துல அமிதாபுக்கு இருந்த மாதிரி ரஜினிக்கு மலசிக்கல் இருக்குன்னு சொன்னா நாம ஒத்துப்பமா? அட, இத எழுதுன இந்த நிமிஷம் அந்த கேரக்டர் ரஜினி பண்ணினா எப்படி இருக்கும்னு யோசிச்சு பாத்தேன். செம. என் பார்வைல ரஜினி சரியா பொருந்துறார். யாராவது ஒரு டைரக்டர் பிக்குவ தமிழ்ல எடுத்து, அதுல ரஜினிய நடிக்க வைங்க சார், உங்களுக்கு புண்ணியமா போகும்.

...............................................................


ஹலோ டைரக்டர் சார்,

அதென்னங்க சார், படத்துல தமிழன், தமிழ் அப்படி இப்படின்னு செம தீம் வச்சிருக்கீங்க, ஆனா அந்த பாட்டு எல்லாம் கேளுங்க, எல்லாருமே நாக்கை கடிச்சுட்டு தான் பாடவே ஆரம்பிக்குறாங்க. த்த... த்த...ன்னு கட்ட நாக்குலயே பாடுறாங்க. அவங்க நாக்குல எதாச்சும் வசம்பு தடவி விட்ருக்க கூடாதா? பாவம்ல தமிழ். எமெர்ஜன்சி வார்ட்ல இருக்கு, போய் கொஞ்சம் அத காப்பாத்த ட்ரை பண்ணுங்க....

காபாலிக்கு தான் போதை மருந்து கடத்துற பழக்கம் இல்லையே, அப்புறம் எப்படி அவரோட ஸ்கூல் கேம்பஸ்குள்ளயே, அதுவும் அவர் கண் எதிர்லயே அந்த பொண்ணுக்கு போதை மருந்து சப்ளை செய்யப்படுறத கண்டிக்காம பாத்துக்கிட்டே இருக்கார்?

அப்புறம், அந்த ப்ளாஷ் பேக்லயே நீங்க சொல்ல வந்த கருத்துக்கள சொல்லி இருக்கலாம், சும்மா சும்மா, கோட் கோட்னே பேசுறீங்களா, எனக்கே அந்த கோட்ட கிழிச்சி எறிஞ்சுட்டு பைத்தியக்காரி ஆகிடலாம் போல இருந்துச்சு. இந்த தமிழன்ங்குற தீம் இருக்கே.... அய்யய்யோ, இன்னும் சொல்லணும் போல இருக்கே, ஆனா இந்த இணைய போராளிகள் பொங்கிடக் கூடாதே... அதனால நான் பேசாம பாப்கார்ன் சாப்பிடவே போய்டுறேன்....

........................................

கட்ட கடைசியா ஒண்ணு, படம் முடிச்சுட்டு வெளில வந்தப்ப, கூட வந்த பொடிசுங்க ரியாக்சன கவனிச்சேன். இந்த பீசா சாப்ட்டுட்டு காக்கா முட்டைங்க ரெண்டு பேரும் ஒரு ரியாக்சன் விடுவாங்களே, சேம் ரியாக்சன், சேம் டயலாக்....

........................................

ஆமா, நான் இப்ப என்ன தான் சொல்ல வரேன், படம் நல்லா இருக்கா இல்லையா? அது தெரியாம தான நானே அப்பவே போறேன்னு போறேன்னு எண்டு கார்ட் போட்டும் இங்கனயே சுத்திகிட்டு இருக்கேன்....

.................................