Sunday 25 March 2012

பார்க்குமிடமெல்லாம் நீ

நான் உன்னை
என் கண்களுக்குள்
சிறை வைத்தபின்...
நீ...
என் கண்களை
உனக்குள்
சிறை வைத்தாய்...
"பார்க்குமிடமெல்லாம் நீ...."


Saturday 24 March 2012

சிட்டுக்குருவியின் இறுதியாத்திரை


ஒடித்து வைக்கப்பட்ட குச்சியில்
ஓட்ட வைக்கப்பட்ட எனக்கோர்
வரமொன்று கிடைத்தது...
ஒரு நாள் உலகை சுற்றி வர.....

விரைத்து போன இறகுகளோடு
ஆவலோடு விரைகின்றேன்
என் சந்ததி தேடி.....
பச்சை மரம் தேடி அலைந்தேன்
என் விருப்பமின்றி மின் அலைக்கரங்கள் 
என்னை அணைக்கத் துடித்தன ....

கொஞ்சி குலாவிய கொல்லைபுறம்
நினைவில் வர வேகம் அதிகரித்தேன்....
அதிசய உலகமாய் கட்டிடங்கள் கண்சிமிட்ட
மாடங்களிலாவது என் சொந்தம் காண்பேனோ?
தேடி தேடி அலைந்தது தான் மிச்சம்....

என்னை கண்டு விட்ட மழலை ஒன்று
ஆர்வத்தோடு பொக்கை வாய் திறக்க
அட! சிட்டுக்குருவி....
அப்பொழுதும் கல்லெறிகிறான் மனிதன்...

இறைவன் தவறிழைத்தானா? இல்லை
அவன் படைத்தவன் தவறிழைத்தானா?
அழித்து விட்டான், கூடவே
விரைந்தும் வருகிறான் அழிதல் தேடி...

மிரட்சியோடு திரும்பி பார்க்கிறேன்
வெற்றுடல் பாதுகாத்த பெட்டகத்தை
ஆசையும் ஏக்கமும் நெஞ்சில் தாக்க
மனம் வெறுமையாய் கூறியது
“இனி மீண்டும் பிறக்க மாட்டேன்” .........

நீண்ட அலைச்சலூடே
ஒன்றை மட்டும் அறிந்து கொண்டேன்...
என்னை துரத்தும் வல்லூறு இன்றில்லை
கண்ணுக்கு புலப்படாத எமன்
கதிர்வீச்சில் ஏறி வருகிறான்...
என் சந்ததி மட்டுமில்லை
என் எதிரியை கூட காணோம்...

நரம்புகள் பின்னிய ....


நரம்புகள் பின்னிய
சதை கூடாய்தான்
இருந்தது
என் தேகம்...
நீ....
காதல் சுடரை
ஏற்றும் வரை...

Sunday 18 March 2012

நீ வருவாயென....

கார்முகில் சூழ்ந்த அந்த
மழை நாளில் அவனை சந்தித்தேன்...
வெட்கமறியாத என் உதட்டில்
குறு நகையொன்று மின்னலென பூத்தது...

இந்திரன் சந்திரன் என
புகழ்ந்திட மனமில்லைதான்...
ஆனால், இவன் கிடைக்கவில்லையென
வான்மகள் கண்ணீர் உகுத்தாளோ...


பட்டென கரம் பிடித்தான்...
பற்றிய கை விடவில்லை நான்...
பற்றி விட்ட கொடியாய் நாங்கள்
பற்றற்ற வாழ்க்கை துறந்தோம்...


இடியொன்று பேரிரைச்சலோடு
இறங்கி கொண்டிருந்தது
இடியாய் என்மனம் துடிப்பதறியாமல்...

இதயம் வருடும் இன்னிசை நீயென்றான்...
இதய கூட்டில் சிறையிட்டாய் என்றேன்...
உனக்கென உயிர் தந்தேன் என்றான்...
என் உயிரை பறித்து விட்டாய் என்றேன்...

மின்னலாய் வந்தான்
மின்னலென மறைந்தும் போனான்...
என்நேசம் கொண்டு
எத்தேசம் சென்றானோ???


என்றோ எழுதி விட்ட கவிதையொன்றின்
உயிர் துடிப்பாய் இவன்...
முளை விட துடிக்கும் காளானாய்
ஒவ்வொரு மழை நாளும்
அவன் வருகைக்காக நான்...

Friday 16 March 2012

நீயும் நானும்....

நீ சொல்வாய் என நானும்...
நான் சொல்வேன் என நீயும்...
நீயும் நானும் மட்டுமில்லை
வார்த்தைகளும் எதிரெதிர் துருவங்களாய்....

Sunday 11 March 2012

உன்னை காணாத தருணங்களில்


உன்னை காணாத தருணங்களில்
நிலவுக்கும் காய்ச்சல் வருகிறது...

Thursday 8 March 2012

தொலைந்து போன இதயம்...




தொலைந்து போன இதயம்...
இதயம் தொலைத்த சிரிப்பு... 

வானத்து தேவதைகள்....


வானத்து தேவதைகள் கொண்டு வந்த பொக்கிசமா?
ஹார்மோன்கள் படைத்து விட்ட ரோஜாபூவிதழோ?        
தானாக சிதறி வரும் பன்னீர் துளி முத்தங்களோ
உன்னழகை காண்பதற்கே கண் கோடி போதாதே....

இப்படிக்கு காதல்...

உன்னில் நான்
உணர்ந்து கொண்டது
காதல் தான்...
ஆம்...
என் தந்தையின் காதலை
உன்னில் உணர்ந்தேன்
என் தாயின் காதலை
உன்னில் சுவாசித்தேன்
உன் தோள் சாயும் போது
என்னை உணர்ந்தேன்
உன் மார்பில் தூங்கும் போது
என்னை மறந்தேன்
வாழ்வின் இறுதி வரை
உன் காதல் வேண்டும்
நம் சந்ததியினரும் நம் காதலை
காதலிக்க வேண்டும்
அவர்களும் காதலர்களாய்,
கையோடு கை கோர்த்து
அடுத்த தலைமுறைக்கு
நம் காதலை சுமந்து செல்லட்டும்
என் தோழனே.....

வெண்பஞ்சு சிசு...

உன் பிஞ்சு கரங்களில்
ஒரு வெண்பஞ்சு சிசு...
காந்த பார்வையில் அடிக்கும்
ஆயிரம் அன்பலை...
சொல்லாமல் சொல்கிறது
உந்தன் கண்கள்....
என் உற்ற தோழியடி நீ....
குழந்தையாகி போகிறேன்
உன்னருகில் நானிருந்தால்....

Wednesday 7 March 2012

என் தோழியே...!!!


ஆடைகளில்லை உன் நாகரீகம்...
வாய் பேச்சில் இல்லை உன் வீரம்....
மதிக்கெட்டு திரிவதில்லை உன் புரட்சி...
அடக்குவதில் இல்லை உன் அறிவு...
அடங்கி விடுவதில் இல்லை உன் பொறுமை...

அன்புக்கும் நீ தான்
பண்புக்கும் நீ தான்
பொறுமைக்கும் நீ தான்
ஆளுமைக்கும் நீ தான்

அக்னி குழம்பாய் கொதிக்காதே
அக்னி குஞ்சென விழித்தெழு...
விம்மி விம்மி வெந்து விடாதே
வெறுமை போக்க மறந்து விடாதே...

உரிமை குரல் கொடுப்பவன் சகோதரன்
உறவாய் அமைந்தவன் மைந்தன்....
உறவை சுமப்பவன் கணவன்
தோழில் சுமந்தவர் தந்தை...
எல்லாம் சேர்ந்தவன் நண்பன்...

அடக்கி ஆளவும் நினைக்காதே
அடங்கி விடவும் துணியாதே....
ஆணவம் உனை சேர நினைக்காதே
அன்பால் ஆண்டு விடலாம் மறவாதே...

பாரதி கண்டானாம் புதுமை பெண்ணை
நீயேன் காணவில்லை உன்னை...
பார் போற்ற வேண்டுமென்று கூறவில்லை
ஆயினும், பாரினில்
உனக்கென நீ வேண்டும் உணர்ந்து கொள்... 

உனக்குள் இருக்கும் மழலை....


உனக்குள் இருக்கும் மழலை
எனக்குள் இருக்கும் மழலையை

தட்டியெழுப்பியது ......  

உன்னாலான...


உன்னாலான கண்ணீர் மட்டுமல்ல,
உன்னாலான புன்னகை கூட இன்று
என்னுள் கண்ணீர் சிந்துகிறது .... 

நன்றி என்ற ஒற்றை சொல்லில்....


நன்றி என்ற ஒற்றை சொல்லில்
பிரித்து விட்டான்
நாம் என்னும் ஒற்றை உயிரை.....  

எந்நேரமும்.......


எந்நேரமும்
எனக்குள் இருக்கும்
உன் நினைவுகள்...
எனக்குள் என்னையே
விதைத்து செல்கின்றன.. 

Tuesday 6 March 2012

அம்மா ...


நீ...
என் முதல் அழுகையிலிருந்து
இன்றைய சிரிப்பு வரை
உன் அணைப்பு கொடுத்த சுகந்தம்...
என் கண் அசைவிலேயே
என் குட்டி குட்டி ஆசைகள்
குட்டி குட்டி மிரட்சி
எல்லாம் அறிந்து அணைத்துக் கொள்வாய்....

நீ....
என் சிறு புன்னகையிலும்
என் சிறு வெட்கத்திலும்
பெரிதாய் மகிழ்வாய்....
என் சிறு விசும்பலிலும்
பதறியே கண்ணீர் துடைப்பாய்....
என் கோபத்தை
உன் புன்னகை அடக்கி வைக்கும்....

நீ...
எனக்குயிர் கொடுத்த என்னுயிர்
வாழ்கை கற்று கொடுத்த குரு
சிற்றுயிரைக் கூட மதிக்க வைத்தவள்
காதலை காதலிக்க வைத்தவள்
கடவுளை பூஜிக்க வைத்தவள்
உயிராய் எனக்குள் நிறைந்தவள்
என்னை எனக்கே அறிமுகப்படுத்தியவள்

என்னவளே
என்னுயிர் தாயே
உன் அன்புக்கு ஈடான
அன்பு என்று ஏதும் உளதோ?
தேடி தான் பார்கிறேன்
தேடிக் கொண்டே இருக்கிறேன்...
எத்தனை ஜென்மம் தேடுவேன்...!!!
நீயே எனக்கு சேயாய் ஆகும் வரையோ?

Sunday 4 March 2012

கருவின் தாலாட்டு....

என்ன பாவம் செய்து விட்டேன்
நீ என்ன பாவம் செய்து விட்டாய்?
உலகம் விடியுமுன்னே
என் விடியல் அழித்து விட்டாய்...
(என்ன பாவம் .....)

கொட்டி விடும் தேளாக
கட்டியவன் கைவிரிக்க...
கொடும்பனியில் தூங்க வைத்தாய்
உனக்குள்ளே கொள்ளியும் வைத்தாய்...

மாமியார் வசைப்பாட
நாத்தனார் துதிப்பாட...
சாவு மணி அடித்து விட்டாய்
சத்தமின்றி முடித்து விட்டாய்...

கொள்ளி கண்ணு உனை வதைக்க
கள்ளிப்பால் கொடுத்தாயோ?
நெஞ்சுக்குள்ளே ஈரம் வற்றி
நெல்மணிகள் கொடுத்தாயோ?
(என்ன பாவம் .....)

கண்ணே என் கண்மணியே
இனியொரு ஜென்மம் வேண்டும்...
நீயும் வந்து மலராக 
என் மடியில் ஜெனிக்க வேண்டும்...

நீ மறந்த தாலாட்ட
நானுனக்கு பாட வேண்டும்...
தாய்மாமன் சீராட்ட
என் மடியில் தூங்க வேண்டும்....

சுவர்க்கம் சென்று வந்து
மீண்டும் பிறந்திடுவேன்....
தாய்பால் கொடுத்து உன்னை
மாரோடு அணைத்திடுவேன்...
(என்ன பாவம் .....)

தொப்புள் கொடி உறவே நீ
கலங்காமல் கண்ணுறங்கு....
ஆராரோ ஆரிரரோ
அம்மா நீ கண்ணுறங்கு....
ஆராரோ ஆரிரரோ
என் உயிரே நீ கண்ணுறங்கு.....

தொலைந்ததை தேடி....


தனியாகவே சென்று கொண்டிருக்கிறேன்
மனம் ஏனோ தொலை தூர பயணம் செய்கிறது...
எங்கிருந்தோ ஒரு வெறுமை
இரத்தம் வெளியேற்றி உள்புக பார்க்கிறது...

காற்றின் மெல்லிய ஈரப்பதத்தினூடே
சுவாசம் தொலைத்த மூடு பனியாய் நான்...
தடதடக்கும் ரெயில் வண்டியின்
படபடக்கும் தண்டவாளமாய் நான்...

எதை நோக்கி செல்கிறேன்? தெரியவில்லை
எதற்க்காக செல்கிறேன்? தெரியவில்லை
என்ன வேண்டும் எனக்கு? தெரியவில்லை
என்ன இல்லை எனக்கு? தெரியவில்லை

தூரத்தில் ஒரு மின்விளக்கோ
இதோ அணைய போகிறேன் என்றது...
பக்கம் வந்த மின்மினியோ
விடாதே முயன்று பார் என்றது

ஆயாசமாய் அண்ணாந்தேன்
விண்மீன் கூட்டங்கள் கண்சிமிட்டின
நீந்துகின்ற மேகக்கூட்டங்கள்
என்னிடமோ கண்ணாமூச்சி விளையாடின...

பொழிந்து விட்ட மழையின் தூறலில்
உயிர்பிக்க துடிக்கும் விதையாய் நான்...
பூமி தாயின் மடி பிளந்து
ஆங்காரமாய் மீண்டும் நானே நான்...

என் தேவதை.........


ருவில் கூட நான் எட்டி உதைத்தேனாம்,
அப்படியும் என்னை அடைகாத்தாய்
பிஞ்சு விரல்களால் உன் கன்னம் கிழித்தேனாம்
உன் உதடுகளால் எனக்கு ஒத்தடமிட்டாய்
இப்போ நீ ஒரு தேவதையாம்
தேவதைகளுக்கு சிறகுகளும் உளதே
உன் பாச சிறகில் பதுங்கிட இடம் தா......

காதலோடு தோழமை செய்வோம்!!!!!!!!!


நட்பின் முதல் பக்கம் நீ என்றாய் !!!
ஏன் நண்பா இன்று அந்த பக்கம் இல்லை?
படித்து படித்து செல்லரித்து விட்டதா?
இல்லை அலுத்து விட்டது என 
கிழித்து விட்டாயா?
செயற்கையாய் கூட இயற்கையாய்
இருக்க முடியவில்லை உன்னிடம் !!!
உன்னிடம் வேண்டுவது 
காதல் பிச்சை இல்லை,
என் தோழமை பிச்சை !!!
இறைஞ்சுவதை விட 
இறப்பது மேல் என்பேன், 
ஆனால்???
உன்னிடமோ இரஞ்சுவதை தவிர
வேறெதுவும் அறியேன்...
வா நண்பா, காதலோடு தோழமை செய்வோம்...

எனக்குள் நான்.... !!!

ஆளரவமற்ற அந்த கொடிய இரவின் 
ஆழ்ந்த தனிமையில்...
என்னை நானே கேட்டுக் கொண்டேன்...
எனக்குள் என் தனிமை
தன் தனிமையை தொலைத்துக் கொண்டிருந்தது ....

எல்லா இரவுகளும் என்னை கேட்கின்றனவா?
இல்லை...
நான் அவைகளை கேட்கிறேனா?
எனக்கே தெரிந்த பதில்...
ஆனால் தெரியாத பதிலும் அதுவே...

என்னை தவிர இங்கு யாருமில்லை...
என்னை மட்டுமே உணர்ந்த உயிர்...
இன்று இருளோடு இருளாய்...
என்றும் என் நினைவில்...
என் தனிமையில்...
என் இரவுகளில்...
என் சந்தோஷத்தில்...
என் துக்கத்தில்...

எந்த நொடி என்னை பயமுறுத்தியதோ...
எந்த நொடி என்னை மறக்க சொன்னதோ...
எந்த நொடி சம்பவிக்க கூடாதோ ...
சம்பவிக்கவே கூடாத அந்த நொடி
என்னை அனுபவிக்க வைத்தவள்....

மவுனமாய் பேசி செல்கிறாள்...
மர்மமாய் புன்னகைக்கிறாள் ...
எனக்குள் நானே தொலையும் அந்த நொடி...
கண் மூடி என்னை அழைத்து செல்கிறாள்...
கண் திறந்தே என்னை தூங்கவும் வைக்கிறாள்...
இவள் தான் நானோ???

என்னில் கலந்து விட்டவள் நீ...

அம்மா....
உயிர் விட்டால் உயிர் வேண்டும்மென எனை பெற்றாயோ?
உன் உறவுக்கு உயிர் கொடுக்க எனை பெற்றாயோ?
இல்லை உன் உயிருக்கு காவலாய் எனை பெற்றாயோ?

பெற்றவுடன் உன் கடமை துவங்கி விட்டாய்...
உச்சி மோர்ந்து எனை நீயே அணைத்துக் கொண்டாய்...
இரவெல்லாம் எனக்காக கண்விழித்தாய்...
உன் உதிரம் எனக்கெனவே தாரை வார்த்தாய்...

கட்டெறும்பு கடித்த போதும் உனையழைத்தேன்...
கத்தி என்னை பதம்பார்த்தும் உன்னை நினைத்தேன்...
அமுதூட்டும் நேரத்திலும் உன்னை வாசித்தேன்...
காதலின் நேசத்திலும் உன்னை உணர்ந்தேன்...
இதோ உன் வாசம் இப்பொழுதும் என்னில் சுவாசிக்கிறேன்...

என்னில் கலந்து விட்டவள் நீ...
என் உதிரத்தின் ஒவ்வொரு துளியிலும் நீ...
என் சுவாசத்தின் ஒவ்வொரு வெளிப்பாடும் நீ ...
என் இதயத்தின் ஒவ்வொரு துடிப்பும் நீ...
என் சிந்தனையின் சூத்ரதாரி நீ...
உன்னின் மறு உருவம் நான்...

நீ... என் அம்மா.... எனக்கே எனக்கான அம்மா ......