Wednesday 26 December 2012

சங்கமிக்கும் பார்வைகள் (கடற்காதல் ) ...!

நினைவிருக்கிறதா உனக்கு?
பாய்மர கப்பல்கள் அணிவகுத்த நாள் ஒன்றிலே
உனக்கும் எனக்குமிடையில் நடந்த பார்வை பரிமாற்றங்கள்?

வேடிக்கை மும்முரத்தில் தோழிகள் பின்தங்க
எற்பாடு பொழுதிலே தனித்து விடப்பட்டு
தவிப்போடு தயங்கியே நானும் நடந்து வந்தேன்…!

துவைத்தறியா மேலாடை ஒன்றும்,
தலையிலே முண்டாசுமாய் நீ…

உன்னோடும் உன் வலையோடும் மோதிப்பார்த்து
வென்று விட்ட சுறா ஒன்று விட்டுச்சென்ற மிச்சங்களை
பொறுக்கி வலையென பின்னிக்கொண்டிருந்தாய்...!

என் சலங்கை ஒலியிலே கவனம் கலைந்து
இழையொன்று தவறிவிட
சுருக்கென கோபக்கனலை என்மீது வீசி நின்றாய்...!
ஒன்றுமறியாத நானோ என்னவோ ஏதோவென பதறித்தவிக்க
என் கண்களில் உவர்நீர் எட்டிப்பார்த்தது...!

என் கண்ணீர் கண்டதாலோ என்னவோ நானறியேன்,
வருணன் மழை அள்ளிச் சொரிந்தான்... நானோ
உன் முன் முழுதாய் நனைந்து நின்றேன்...!

ஒற்றை புருவம் தூக்கி அபிநயம் பிடித்து
நீ சிரித்த அந்த சிரிப்பில்
என் உதட்டோர புன்னகையை
உடனடியாய் களவாடிக் கொண்டாய்...!

உன் கூர்விழி அம்புகளால் என் இதயம் கிழித்து
உன் இதயம் உள்வைத்து என்னில் புதைந்து
என்னை உனக்காய் மாற்றியமைக்கிறாய்...!

தொலைத்து வந்த தோழியர்
மதி தொலைத்த என்னை கண்டெடுத்து
கைப்பிடித்து நகர்த்தி விட்டனர்...

நான் கடைக்கண் பார்வையொன்றை
உன்னிடத்தில் காவல் விட்டு
இதயமிழந்து புன்னை மர நிழலொன்றில்
என்றும் உனக்காய் தவமிருக்கத் துவங்கினேன்...!

உன்னில் நான் தொலைந்தேனென நான் நினைத்திருக்க
நீயோ என் விழி சொல்லும் சேதிக்காய்
கடல் காகம் தூது விட்டு கல்லுப்பின் மேல்
ஒற்றைக்கால் தவமிருந்திருக்கிறாய்...!

கார், கூதிர், முன்பனி, பின்பனியென
பெரும்பொழுதுகளும் கரைந்துவிட
இளவேனிற்லொன்றில் மீண்டும் நமக்குள் பார்வை சங்கமம்...!

தோழியொருத்தி விளரி இசைக்க என்னை மறந்து
உன்நினைவில் கானமிசைத்து கொண்டிருக்கிறேன் நான்...!
குறுகுறுக்கும் பார்வையொன்றில் எண்ணம் தடுமாற
என் கூந்தல் தாழையும் சரிந்தது...!

உன்முன் நான் இன்று என் முதுகுகாட்டி நிற்கிறேன்,
இருந்தும் முதுகோரம் உன் பார்வை வீச்சொன்றினால்
நாணம் கொள்ளச் செய்கிறாய்...!

இப்பொழுதல்லவா தெரிகிறது
மீன் பிடிக்க நீ வலை வீசும் போதெல்லாம்
என்னையல்லவோ தூண்டில் புழுவாய் துடிக்க விட்டிருக்கிறாய்...!

கடலலையில் வலை வீசி பழகிய நீ,
என் எண்ண அலைகளில் நீச்சல் கற்றுக் கொள்கிறாய்...!

இத்தனை பரவசங்கள் என்னுள் உன்னால்...
இன்று மூச்சுத்திணற வைத்து வேடிக்கை காட்டுகின்றன...!

எத்தனை பொழுதுகள் கழிந்தாலென்ன?
பாரேன், கடைக்கண் பார்வை வீசியறியா
கேணியொன்றின் தவளையாய் இருந்த என்னை
உன் காதல் சாம்ராஜ்யத்துள் பதுக்கி விட்டு
ஒன்றுமறியா குழந்தை போல்
அப்பாவியாய் ஒரு பார்வை பார்ப்பதை?

ஆனாலும் உனக்கு நினைவிருக்கிறதா?
நினைவு கிடக்கையில் கழிந்திடா பொழுதொன்றாய்
இன்னனும் நம் பார்வைகளின் சங்கமம் மோதிக்கிடப்பதை...!


Saturday 22 December 2012

மோகன கானம்....!


எங்கோ தோன்றிய ஒளி வட்டமாய் நீ...
என் பார்வை பறித்து வசியம் வீசி செல்கிறாய்...!
உன்னால் சுழலவிட்ட பம்பரமாய்
நான் உன்னை சுற்றியே நினைவிழந்து போகிறேன்...!

உன்னை கண்ட நிமிடம் நான்
ஆர்ப்பரிக்கும் அலைக்குள் சிக்கிக் கொண்டேன்...!
நீயோ தெளிந்த நீரோடை ஒன்றில்
என் மனமென்னும் மீன் கொத்திச் செல்கிறாய்...!

நான் போகும் பாதையில் பூக்களின் திசைமாற்றி
என் சுவாசம் முழுவதும்
நறுமண வாசம் வீசி செல்கிறேன்...!
எனக்கே தெரியாமல் என்னை ஊடுருவி சென்று
எப்படி ஆக்கிரமித்தாய் நீ?

மென்மை ஒன்றை உன்னில்
நான் கண்டவளுமில்லை...
அஹிம்சை ஒன்றை
உன்னிடத்தில் அறிந்தவளுமில்லை...!

உன் தோள் கண்டு உன்னோடு
மோகித்து விடவுமில்லை...
குரலோசை கேட்டு
உனக்காக சஞ்சலித்து விடவுமில்லை...!

இரவின் கரங்களுக்குள்
அடங்க மறுக்கும் நான்
உன் முரட்டு நெஞ்சத்துள்
புகுந்து விட துணிகிறேன்...!

கட்டுக்கடங்கா திசையெல்லாம்
சுழலும் காற்றாய் நான்...
சிறைபட்டு உன்னை
சிறையெடுக்க விரைகிறேன்...!

ஊர்க்குருவி ஒன்று கூவும் இசைகேட்டு
நீ கண் விழிக்கும் முன்னே
உன்னில் மூழ்கி விட முனைகிறேன்...!

தடைக்கல்லென என் நடைபாதை நுழைந்தவனே
கேள்விக்குறியாய் நீ மாறி பின்
பதிலே நீயுமாய் பதிந்து விட்ட கதை அறிவாயோ?

உன் கண்சிமிட்டல்களுக்குள்
தொலைந்து போன என்னை
தேடி தேடி மறுகுகிறேன்
நீ என்னுள் தொலைந்ததே அறியாமல்...!

Sunday 16 December 2012

உணராத பந்தம் இவள்...!

நீ இல்லாத என் நாட்கள் கிழித்தெறிந்த
காலண்டராய் கழிந்து கொண்டே இருக்கின்றன...
குளிரில் நடுங்கும் என் துவண்ட மேனியோ
இதுவரை உன் அணைப்பினை உணர்ந்ததே இல்லை...!

உன் முத்தங்களை பெற்றறியா முகத்திலோ
நாய்களின் எச்சில்கள்
ஏக்கம் தீர்த்துப் போகின்றன...!

திடீரென சூழ்ந்துக்கொள்ளும்
வெறுமைக்குள் புதைந்துக் கொண்டு
எதையோ தேடுவதைப்போல் தேடியிருக்கிறேன்...
நீ எப்படிப்பட்ட உணர்வளிப்பாய் என்றே தெரியாமல்...!

யோசித்து யோசித்து பார்க்கிறேன்,
எப்பொழுதெல்லாம் உன்னை நான்
உச்சரித்துப் பார்த்திருக்கிறேன் என்று...!

பசித்த வயிற்றோடு தெருத்தெருவாய்
சுற்றிய நாட்களில் கூட
“ஐயா காசு குடுங்க பசிக்குது” என்றே
கேட்டு பழகியிருக்கிறேன் நான்...!

சோறில்லையென விரட்டப்படும் போதும்
தெருவோர குப்பைத்தொட்டிகளில்
கண்கள் அலைபாய்ந்தே பழகி விட்டன...!

மாற்றுடுப்பு வேண்டுமென
மனம் தேடும் பொழுதெல்லாம்
மாடிவீட்டு கொடிகளை
அண்ணாந்து பார்த்து ஏங்கியிருக்கிறேன்...!

காய்ச்சல் வந்து வாய்க்குழறும் போதுகூட
வடிவில்லா ஒலியெழுப்பி
வெப்பத்தாக்குதலை எதிர்க்கொண்டு
பழகி விட்டேன் நான்...!

பருவம் எய்திய நாளில்
மிரட்சியோடு தேடியிருக்கிறேன்
அதுவும் உன்னை தான் என்றே அறியாமல்...!

வெறித்தப் பார்வை ஒன்றே
எப்பொழுதும் முந்தி நிற்கிறது
தாய் மடி முட்டும் கன்றுகளை பார்க்கும் பொழுதெல்லாம்...!

என் நிலையின் காரணகர்த்தா
விதியென நான் ஏற்றுக்கொள்வதுமில்லை...
நீதானென்று சபித்து விடவும் துணியவில்லை...!
என்னை ஜனனித்து நீ மரணித்துப் போனாயோ
இல்லை ஆகாது என வீசிவிட்டு சென்றாயோ?
தொலைத்துவிட்டு தினம் தேடி தேடி வேதனிக்கிறாயோ?

உனக்கென அடையாளமெதையும்
நீ எனக்காக விட்டுச்சென்றவளில்லை…
உன் குணம் பற்றிய எதிர்பார்ப்போ
நிலைப்பாடு பற்றிய பரிதவிப்போ
என்றுமே எனக்குள் சஞ்சலத்தை புகுத்தியதில்லை...!

நீ யாராய் இருந்தால் என்ன?
எனக்கு நீ அன்னியமானவள்...!

சூல் கொண்ட பெண்கள் கண்களுக்குள்
விழும்போதெல்லாம் வினோத ஜந்துவை
பார்ப்பது போல் வெறித்து விட்டு
பயணம் தொடர்கிறேன் நான்...!


Tuesday 4 December 2012

மாறாதிந்த மருதக் காதல்...!

சலசலத்து ஓடும் பொய்கை கரையிலே
நாரைகளும் அன்றில்களும்
தத்தம் பெடைகள் நிமித்தம்
அளவளாவிக் கொண்டிருந்தன…!

துள்ளிக்குதிக்கும் மீன்கள் பிடிக்க
அங்கே தாவிக் குதித்தது நீர்நாயொன்று…
எருமை கிடாக்கள் ஆற்றுநீர் பருக
அடைக்கலமாக ஒதுங்கியது தாரா கூட்டம்…!

இப்படியான...
முன்பனி காலத்தின் வைகறை பொழுதினிலே,
வயல் சூழ் மருதமொன்றின் நிலாவொளியில்
தன்னிலை மறந்து களித்திருந்தனர்
நெல்லரித்த தலைவியும்,
கிடாவிட்ட தலைவனும்…!

தலைவியின் பால் மாறா
மையல் கொண்ட தலைவன்
அவள் முகம் தாங்கி இங்ஙனம் வினவுகிறான்...!

தாமரை முகத்தாளே…!
தாவும் மரையின் மிரட்சியை கண்களில் கொண்டவளே…
கட்டுக்கடங்கா காளையென தறிகெட்டு திரிந்திருந்தேன்…
பாவை உன்னை கண்ட நொடி அடைந்து விட மோகம் கொண்டேன்…
மையல் விழி தையலே உன்னை சூழ்ச்சியால் கொய்ய விழைந்தேன்…
இட்டுகதைகள் பலபேசி உன்னை என்மடியில் வீழ வைத்தேன்…
மன்னிப்பாயா அஞ்சுகமே,
எத்தருணம் உன்னை என்னில் தருவித்ததென
தகுந்த காரணங்கள் உரைப்பாயோ?

மையிட்ட கண்ணுக்கு சொந்தக்காரி
காரிருள் கொண்டைக்காரி
கலகம் விளைவிக்கா தாபத்தோடு
தன் தலைவன் மடி சாய்ந்து கொட்டுகிறாள் வார்த்தைகளை…!

நீ ஐராவதமேறிய இந்திரனும் இல்லை,
கிரகங்கள் பீடிக்கும் சந்திரனும் இல்லை…
கற்பில் சிறந்த இராமனுமில்லை,
அழகில் சிறந்த மன்மதனுமில்லை…
வீரம் சொரிந்த அபிமன்யூ இல்லை,
விவேகம் நிறைந்த தருமனுமில்லை…
கலகம் புரியும் நாரதனுமில்லை,
காரணங்கள் வேண்டா கடவுளுமில்லை…

நீ ஊரனாய் இருந்திருந்தால் உன்பால்
எனதன்பு சாய்ந்து விடுமென சிந்தையில் சிந்தித்தாயா?
இல்லவே இல்லை கண்ணாளா…!
நீ வேந்தனே ஆயினும்
என்விழி வீச்சு உன் பக்கம் சாய்ந்திடாது...
பின் வேறென கவர்ந்ததென வினவுகிறாயோ?

சொல்கிறேன் கேள்...

ஆநிரை சூழ் நின் உலகிலே
நின் தனித்தன்மை ஒன்று கண்டேன்
யாதெனில் உனக்கு நிகர் நீயாய் நின்றாய்
கயல்விழியாள் எனக்கு எல்லாமுமாய் நிறைந்து நின்றாய்
நெஞ்சத்து பாசறையில் நீயே முழுதுமாய் என்னைக் கொண்டாய்
காரணங்கள் இனி கேட்டிடாதே,
காமுறுவோம் காலமெல்லாம்…!

கயமொன்றில் மலர்ந்திருந்த ஆம்பலும் வெட்கியது,
கழநியின் மேல் செந்நெல்லும் தலை தாழ்ந்தது,
இவர்களின் மாறா காதல் கண்டு...!

Monday 3 December 2012

திருடா...!


என் கனவு பிரதேசத்தில் 
கன்னமிட்டு நுழைந்து
தூக்கம் திருடி சென்றாயே திருடா…!

விழி வீசும் அம்புகளை தடுத்தே நான்
தனித்திருந்தேன்
வீச்சுத் திசைமாற்றி
எப்படி நீ குறுகுறுத்தாய்... திருடா...!

மனமென்னும் விசித்திரத்துள்
கனல் ஒன்று வைத்திருந்தேன்...
அசராமல் நீயும்
எப்படி அதை தீண்டி நின்றாய்... திருடா...!

லப் டப் கூச்சலிலிடும் இதயத்தில்
தரம்பிரித்து அடுக்கி வைத்தேன் ஏக்கங்களை ...
நான்கு அறைகளிலே எவ்வறையை
கள்ளமிட்டாய்… திருடா?

சின்ன சின்ன ஆசைகளுடன்
பெருங்கோட்டை ஒன்று கட்டிவைத்தேன்
என் மன்னவனாய் அனுமதியின்றி
எங்ஙனம் நீ குடியேறினாய்... திருடா?

சுவரும் வாசலும் இல்லா உணர்வுக்குள்
கள்ளச்சாவி போட்டு எதை திறந்தாய் திருடா?

சடசடவென கொட்டும் வார்த்தைகள் அனைத்தையும்
மொத்தமாய் அள்ளி
நிசப்தத்தை மட்டும் விட்டுச் செல்கிறாயே திருடா...!

உன் குண்டு கண்களுக்குள்
காந்தம் ஒளித்து வைத்து
என் நெற்றிப்பொட்டில்
வசியம் வீசுகிறாயே திருடா...!

கழுத்தோரம் மயிலிறகாய் இம்சித்து
புன்னகையை இதழ்களுக்கு பரிசளித்து
அவஸ்தையை அள்ளித்தெளித்து விட்டு
மறைந்து விடுகிறாயே திருடா...!

மொத்தமாய் என்னை திருடிக்கொண்டு
யாதுமறியாததுபோல் முகம் நோக்குகிறாயே திருடா...!

இனியும் நீ திருடக் கூடாதென்கிறேன்,
சரியென திருடிக்கொண்டே
தலையசைக்கிறாய் திருடா...!


Friday 30 November 2012

பித்துக்குளி மனம்...!

நடுநிசி தாண்டி நீண்டுக் கொண்டிருக்கிறது
உனக்கும் எனக்குமான ஊடலும் கூடலும்...!

சுவற்று பல்லியின் தடதடக்கும் சத்தம்
என்னை அரைமயக்கத்திலிருந்து விடுவிக்க செய்கிறது...!

உன்னைப்பற்றிய நியாபகங்கள்
தெளிவில்லாத புகைமூட்டமாய் என்னை சுற்றி
என் மூச்சு திணறவைத்து வேடிக்கை காட்டுகின்றன...!

நீ யார்? எப்படிபட்டவன்? எங்கிருக்கிறாய் நீ?
உன் குணம் தான் என்ன?
நல்லவனா? கெட்டவனா?
இதுவரை நான் யாதுமறியேன்...!

எங்கிருந்து வந்து
திடீரென என் மன சஞ்சலத்துள்
முழுதாய் நிறைத்துக்கொண்டாய்?

என்னை உன்னிடத்தில் ஈர்த்தது என்ன?
யோசித்து யோசித்துப் பார்க்கிறேன்...
விடைகள் சிறிதும் இரக்கமின்றி
தலைக்குள் தட்டாமாலை சுற்றுகின்றன...!

உன்னை பற்றிய நியாபக அலைக்குள்
வெறுப்புகளே அதிகம் மண்டிக்கிடக்கின்றன...!
பிடிக்கவில்லை என்று சொல்ல
ஆயிரம் காரணம் தெரிந்த எனக்கு
உன்னை நேசிக்க காரணமே இல்லாமல் போனதேனோ?

விருப்பக்காரணங்கள் ஏதுமின்றி
உன் இதயச்சுவரை உரசிப்பார்த்தவன்
எப்படி நானாயிருக்க முடியுமென்று
கேள்விகள் கேட்டுத்துளைத்தெடுக்கிறாய்...!
உன்னால் மீண்டும் கீறப்பட்டு ரணமான மனதில்
அதிகமாகவே இன்னும் வியாபிக்க துவங்குகிறாய்...!

யார் “டீ” போட்டு அழைத்தாலும்
அவர்களுடன் கலிங்கப்போர் நடத்தும் நான்,
அதை உச்சரிக்காத உன் உதடுகளை வெறுக்கிறேன்...!

“எங்கடி போயிட்ட” என்ற
உன் தவிப்பில் காதல் உணரும் நான்,
“சொல்லுங்க” என்ற உன்
மறுவார்த்தையில் மிரண்டு தான் போகிறேன்...!

என்னை தவிக்கவிடுவதன்
காரணங்கள் கேட்டாலும் சொல்லுவதில்லை
“இவன் இப்படித்தான்” என
உதடு பிதுக்கி கைகள் விரிக்கிறாய்...!

விரித்த உன் கைகளுக்குள்
அடைக்கலம் தேடி நான் தவித்திருக்க...
மறுபடி “வாடி என் தங்கமே” என அணைத்துக்கொள்கிறாய்...!

மனக்கண்ணாடியில் உன்னை நான்
பார்த்துக்கொண்டிருக்கிறேன்...
என்னைப் பற்றிய உன் எண்ணம் என்னவென கேட்கிறாய்...!
“உன்னை எனக்கு பிடிக்கவில்லை
அதை விட அதிகமாக பிடித்திருக்கிறது”
பித்துக்குளியாய் பிதற்றிக்கொண்டிருக்கிறேன் நான்...!

Saturday 17 November 2012

பயமறியா விடியல்...!


எங்கோ ஒலிக்கும் ஒரு ஈனஸ்வரம்
மயிர்க்கூச்சரிய செய்கிறது...!
உயிர் நேசம் வேண்டும் குரல்கள்
திசையறியா வகையில் தோன்றி பரிதாப முகம் காட்டுகின்றன...!

வெள்ளையுடுப்பு தேவதைகள் விரைந்துக் கொண்டிருக்கிறார்கள்...
கால்களில் சிறகு பூட்டி...!
அவர்களின் வேகம் மிஞ்சி
தடதடவென கடந்து செல்கிறது சக மனிதனின் உயிர்...!

க்ரீச்சிடும் ஸ்ரெச்சர் சத்தத்திலும் தொலைந்து போன
என்னையே தேடிக் கொண்டிருக்கிறேன் நான்...!
தனிமை புதிதில்லையென்றாலும் குறுகலாய்
கட்டப்பட்ட கைகள் என் மார்பு கூட்டுக்குள்
பாதுகாப்புத் தேடி அலைகின்றன...!

என்னை பற்றிய தேடல் ஒன்றில்
எனக்குள் இருக்கும் நான் விழித்துக்கொள்கிறேன்...!
நான் யார்? எதற்காக பிறந்தேன்?
என்ன சாதித்தேன்? என்ன சாதிக்கப் போகிறேன்?
நிச்சயித்து விட்ட பயணத்தில் தொக்கி நிற்கும் கேள்விகளாய் இவைகள்...!

செல்லும் பாதையின் தூரமோ அறிந்திட இயலாது...
ஆனால் பயணிக்கும் ஒவ்வொரு அடியிலும்
டெட்டால் வாசம் மீறிய ஆன்காலஜி வார்டுக்குள்
புன்னகை பூக்களை விதைத்துச் செல்லவே ஆசைப்படுகிறேன்...!

நாளை விடியாமல் போய் விடுமோ
என்று பயந்தே கண்விழித்திருக்கும் கண்கள் மத்தியில்
விடிந்து விட்டதாய் ஆதவனும் திரைசீலை விலக்கி
அறிவித்துவிட்டு போகிறான்...!

என் விடியல் வெளியே காத்துக்கொண்டிருக்க...
அதைநோக்கி மெதுவே அடியெடுத்து வைக்கிறேன் நான்…!


Monday 12 November 2012

நீயாகி போகின்றாய்...!

என் சிந்தைக்குள் சல்லி வேறாய் 
புகுந்தென்னை சுக்குநூறாய் உடைத்தவனே ..
உன் ஆணிவேராய் வீற்றிருந்தேன்,
அறியாமல் நீ போனதேனோ?

சலனித்தறியாத தெளிர் நீராய்
நானிருந்தேன்... குட்டைக்குள் புகுந்து விட்ட
களிர் ஒன்றாய் சஞ்சலத்தை புகுத்தி விட்டாய்...!

வண்ணத்து பூச்சியென
வான்வெளியில் பறந்திருந்தேன்...
தேன் சுவைக்கும் வண்டாகி
என் இறகுகளை சிறையெடுத்தாய்...!

கற்றாழை காட்டுக்குள்ளே
வழிதெரியாமல் தவித்திருந்தேன்...
கட்டுவீரியன் புகுந்ததுபோல்
புகுந்தென் கண்கள் கவர்ந்து கொண்டாய்…!

பாலைவனம் நடுவே
பாவை என் முகம் நோக்கி
புழுதி காற்றை இறைத்து விட்டு
வெண்சாமரமும் வீசுகின்றாய்...!

வெள்ளை புறாவென உன்னை சரணடைய
பறந்தே வந்த என்னை...
போர்முனையில் நிற்க வைத்து
வேடிக்கை காட்டுகிறாய்...!

காரொன்று பொழிவது போல் 
பொழிந்து விட்டு
கானல் அதுவென 
காதோரம் கிசுகிசுக்கிறாய்...!

வார்த்தை ஜாலத்தால்
வான் முழம் அளப்பவனே...
என்னையே இழந்து நிற்கிறேன்
உன்முன் நிராயுதபாணியாய்...!

சில்லிட வைக்கும் தூறலாய் நான் சிலிர்ப்பதாகட்டும்
வெந்தணல் மேனியாய் நான் துடிப்பதாகட்டும்
எல்லாவற்றிக்குமான காரணகர்த்தா
நீயே... நீயேயென எங்கும் நீயாகி போகின்றாய்...!

Saturday 10 November 2012

புன்னகை மறந்த தருணங்கள் ...!

இரவின் நீளம் நீண்டுக் கொண்டே போகிறது
என்னை பற்றிய உன் நினைவு
தொலை தூரம் போய் விட்டதால்...!

‎"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""''தொல்லை பேசியாய்" தொலைபேசி,
உன் அழைப்பு இன்றி…
முள் படுக்கையில் தவம் செய்கிறது…!

லெட்சியமில்லாத வாழ்க்கை ஒன்றை
உன் பாராமுகம் பரிசளித்து
கிங்கரனாய் சிரிக்கிறது…!

மழலை விட்டொழிந்த பந்தைப்போலே
என்னை நீ விட்டெறிந்து சென்று விட்டாய்...!
நானோ சிறகொடிந்த பறவையொன்றாய்
போக்கிடமின்றி தவிக்கிறேன்...!

நீயில்லாத கனவுகள் வெற்று காகிதம் போல...
கிறுக்கபடாத உன் நினைவுகள் அங்கே
செதுக்கி செல்கிறது என் இதயத்தை...!

பேசவே தெரியாமல் என் மவுனங்கள்
உன்னோடு பேசிக்கொண்டிருக்கின்றன...!
உன்னோடு கைகோர்த்த தருணங்கள்
இன்னும் விலகாமல் பிசிறாய் நினைவில்...!

வசந்தத்தில் ஓர் நாள் அடித்தோய்ந்த
புயலாய் நீ... என் நினைவுகள் புகுந்து
இளமை வதம் செய்கிறாய்...!

ஆர்ப்பரிக்கும் ஆழிப்பேரலையாய் நீ...
ஆக்ரோஷ அலைகளின் நடுவே
சன்னமாய் ஒலிக்கிறது என் விசும்பல்...!

உனக்கான என் சோகங்களை
சிறு புன்னகையுடனே கடந்து செல்கிறேன்...!
இட்ட மை இட்டபடி இருக்க
கரைகிறது என் கண்ணீர் உனக்காக...!

Friday 9 November 2012

கோர்க்கத்துடிக்கும் ஆசைகள்...!

சுகமும் துக்கமும்
கலந்து விரைகின்ற மேகக் கூட்டத்திற்கிடையில்
துருவ நட்சத்திரமாய் நீ...!

அர்த்தமற்றதாய் கழிந்து செல்லும் நாட்காட்டியில்
உன் நினைவுகள் மட்டும்
ஏதோ ஒரு அர்த்தத்தை
கற்பித்துக் கொண்டிருக்கிறது...!

காற்றின் மெல்லிய உணர்வுகளோடு
உன் வாசம் தாங்கிய நினைவுகள்
என்னில் கண்ணாமூச்சி ஆடி
தோற்றுபோய் வெளிப்படுகிறது...!

சட்டென பெருமழையொன்று அடித்துவிட்டு
ஓய்ந்தது போல்
கனவுக்குள் நீ தோன்றி புன்சிரிப்பை தந்து விட்டு
கண்மணிக்குள் மறைந்து கொள்கிறாய்...!

பல நேரங்களில்
என் நெற்றிப்பொட்டில்
பதியப்படும் ஈரங்களில் தான்
உன் மொத்த அன்பும்
கொட்டிக் கிடக்கிறது...!

நீ பேசிய வார்த்தைகளை கோர்க்க நினைக்கிறேன்...
சடசடவென உதிர்ந்தே விடுகிறது
சற்றும் ஈரமில்லாமல்.....
மனம் மட்டும் குதூகலமாய்...!

காத்திருக்கிறேன்....
காத்தே கிடக்கிறேன்...
காதோரம் உன்னிடம் ரகசியம் சொல்ல...!


காத்திருக்கும் விடியல்...!

எட்டிப்பார்க்கும் சூரியனை கண்டு
கீழ் வானம் சிவந்திருக்க
கொண்டை சேவல் ஒன்று
துயில் கலைந்து கொக்கரித்த
இளம் குளிர் போர்வைக்குள்ளே
கனா ஒன்று கண்டேனடா...!

தெருவெங்கும் மாவிலை தோரணங்கள் நீண்டு வர,
தென்னை மரங்கள் தாளத்தோடு வரவேற்க
பெண்பார்க்க நீயும் வந்தநாள் அந்நாளடா...!

சீர்வரிசை தட்டுகள் இடைநிற்க
பெண்டுகள் உன்னை வழிகாட்ட
கதவிடுக்கின் ஓரம் நின்று இரகசியமாய்
உன்னை நானும் முழுதாய் ரசிக்கிறேனே...!

ஆவல் மின்னும் கண்களோ
உன்னை அள்ளி அள்ளி பருகிய பின்னும்
மேலும் மேலும் தாகம் திணித்து மருகியே நின்றதடா...!

மன்மதனின் பார்வையொன்றை இரகசியமாய்
என்னிடத்தில் நீ வீசி, உயிர் வதைத்த நொடி
உன்னை என்னில் கொண்டேனடா...!

வார்த்தைகளின்றி நானும் தடுமாற
நீயோ கண்கள் வழி கவி பேசி
குறுநகை ஒன்றில் என்னை வீழ்த்திவிட்டு
வேடிக்கையாய் நகைக்கிறாய்...!

அடுத்த மாதம் ஆடியாமே?
ஆவணியில் தேதி வைக்க
அவசரமாய் தாக்கல் ஒன்றை
இப்பொழுதே சொல்லி விடு...!

முந்தி வரும் கார்த்திகையோ
பிந்தி வரும் தை மாதமோ
மணநாளை நீட்டிவைத்து
உன்னோடு என் வாழ்நாளை 
தேய்ந்து போக வைக்காதே...!

உனக்கென்ன? வருகிறேன் என
முற்றத்து மையத்தில் நின்று
சைகை மொழி செய்தியொன்றை
நவிச்சியமாய் நவின்று விட்டு
ஊர்வலத்தில் தேராக
அசைந்தே சென்று மறைந்து விட்டாய்...!

நானல்லவோ வாசல் வழி
உன் பிம்பம் காண்பேனென
நிதம் நிதம் விழி நோக
பார்த்துக்கொண்டே தேய்கிறேன்...!

முறை சோறு ஆக்கிப்போட 
முறைமாமன் வந்து நின்றான்...
சுற்றத்தார் விருந்தோம்பலில்
உண்டு களித்த மயக்கத்திலும்
துரும்பாய் நான் போனேனடா...!

கரம் பற்றி என்னை நீ கரைசேர்க்கும் நாளுக்காய்
நாணம் ஒன்றே நகையாய் பூட்டி
நாயகி நானும் கனகாலம் காத்திருக்கிறேன்...!

ஆடி முடிந்து ஆவணியும் தவறாமல்
வந்து கொண்டே தானிருக்கிறது...! 
என்றோ நீ வருவாய்...! கனவில்லை நிஜம் தருவாய்...!


Thursday 8 November 2012

கனவுக்கு உயிர் கொடு...!

கரம் பற்றி அக்னி வலம் வந்து
என் வாழ்க்கை உள்வட்டதுள்
புகுந்து விட வரமொன்று கேட்பவனே...!

உன்னிடத்தில் நான் கேட்க
வரமொன்றும் வசமில்லை, மாறாக
வாழ்க்கையொன்று உள்ளது...!

எப்படி பட்ட வாழ்க்கை என
என்னோடு பயணித்து அறிந்து கொள்ள
வருகிறாயா?

வா....!

அதோ பச்சையம் இழந்து விட்ட
புதராய் மண்டிய நிலமொன்றை
ஆடுகள் மேய்கின்றனவே...!
அதை தாண்டிய எச்சில் காடுகள்
மிச்சமாய் நம்மை வரவேற்கின்றன...!

அங்கே…

பொறாமை சூழ்ந்த கண்கள் இல்லை...
புறம் பேசும் உதடுகள் இல்லை...
பொய்மை உரசும் செவிகள் இல்லை...
வஞ்சனை நினைக்கும் இதயமில்லை...

ஆதலால்...

மனித சஞ்சாரமற்ற அந்த அத்துவான
கானகதுள் புதிதாய் நம் சந்ததியொன்றை
ஆணிவேராய் பதியம் செய்வோம்...!

ஆம்...!

சுயம் ஒன்றை தொலைத்து விடா
சுயம்பு லிங்கங்களாய் அவர்கள்...!

மரித்து விட்ட மனிதம் அறியா
மகத்துவ மானிடராய் அவர்கள்...!

மோகன்ஜாதாரோ எல்லோரா மிஞ்சிய
நாகரீக பகலவனாய் அவர்கள்...!

அவர்களோடு...

சிந்துவெளி நாகரீகத்தின் ஆற்றுப் படுகையின் மேல்
மதங்களில்லா புது உலகை ஸ்ரிஸ்டிப்போம்...!

நான், எனது, மட்டுமில்லாது நாம் நமது என்ற
வார்த்தை பிரவாகங்கள் தாண்டிய
புத்தம்புது சிந்தனையை விதைப்போம்...!

பகிர்ந்தளிக்கும் விதியினை பிரபஞ்சம் தாண்டி
பரப்பி விட செய்வோம்...!

அடக்குமுறைகளும் ஆளுமைகளும்
பயணித்தறியா புதிய பாதையொன்றில்
தேசம் கடந்து நேசம் பரப்ப செய்வோம்...!

இவையெல்லாம்...

நடந்தேற இயலா கனவுகளாய் மரித்தே போகுமென
கூச்சலிடும் மானிடர் மத்தியில்

நான்...

நாளைய விடியலை காண்கிறேன்
உந்தன் துணையோடு...!


Tuesday 23 October 2012

நிலவு வழித் தூது...!

ஏ நிலவு பெண்ணே...!

நீயே இந்த வழக்கின் உரையாடலை தீர்த்து வையடி…!

கார் என்றானாம், மாலை தொடுவானமென்றானாம்...
செங்காந்தள் நிரமவள், கற்பின் கனலென்று மகுடம் சூட்டி…
இருள் சூழ்ந்த மாலை நேரத்தில்
மதி மயங்கி கள்ளுண்ட மந்தியானானாம்...!

அத்தனை வர்ணனை
தூது செல்ல உன்னிடத்தில் கொட்டிய
என்னவன், என்முன் வார்த்தைகளின்
பஞ்சம் வர விக்கித்து நின்றதேனோடி...!

உனக்கு தெரியுமா?
வாய் சொல்லில் வீரனடி அவன்…
அவன் அதரம் உதிர்க்கும்
அத்தனை அனர்த்தங்களும்
அர்த்தமாய் தான் போய் விடுகிறது
அவன் கண்கள் ஊடுருவி நோக்கும்
மொத்த பாவையருக்கும்…!

கற்பனை உலகில் அவன் அங்கே
சஞ்சாரம் செய்து கொண்டிருக்க
பாவை என் மனமோ சஞ்சலத்தில் தவிக்குதடி...!

உன் மேகக் காதலனோ கொண்டலாய்
உன்னிடம் நேசம் பொழிந்திட்டான்…!
இங்கொருவனை பார்…
கொண்ட மையல் முழுவதையும்
தையல் உன்னிடம் கொட்டி விட்டு
வார்த்தைகள் தேடிக் கொண்டிருக்கிறான் என்னிடத்தில்...!

அவனிடத்தில் சென்று இதை கூறு
உன் அன்பிற்கினியவள் பசலை பீடிக்க
வெற்றிலை கொடியின்
இடையணைப்பில் கூட
மூச்சுத் திணறுகிறாளென்று...!
ஆம்பல் பூத்த தடாகத்து புல்வெளியில்
கரையிட்ட மச்சமாய் துள்ளித் தவிக்கிறாளென்று...!

அரை நாழிகை பொழுது கூட தலைவன்
பிரிந்து விட்ட காரணத்தால்
அரை நூற்றாண்டாய் வேடிக்கை காட்டுகிறது…!

விரைந்து செல்லடி மஞ்சு கொஞ்சும் வான்மதியே...!
இன்னும் ஒரு நொடி நீ தயங்கி நின்றால்
தலைவனின் பிரிவுணர்ந்த அன்றில் பறவையாய்…
என் தேகக்கூட்டில் உயிர் மட்டும்
மின்மினியாய் கண்சிமிட்டும்…!

நானோ...!

அவன் நினைவு தரும் மயக்கத்தில்
பிச்சியாய் உன்னோடு பிதற்றிக் கொண்டே
இப்படியே கல்லாய் சமைய வேண்டியது தான்…
அவனிருக்கும் திசை நோக்கி...!

Monday 15 October 2012

யாரிவன்???

மவுனங்கள் மட்டுமே வீழ்ந்துகிடக்கும்
ஆள் இல்லா கானகத்துள்
தனித்து விடப்பட்ட சிறு தும்பியாய் நான்...!

வழிபோக்கர் யாருமில்லா தடங்கள் மீது திடீரென
தோன்றும் சலசலப்பாய்
எங்கிருந்தோ ஒலிக்கிறது அவனின் குரல்...!

ஹெல்லோ என்கிறான்...!

யாரிவன்? இவனுக்கும் எனக்கும்
என்ன பந்தம்?

கொட்டும் மழையாய் அவன்
குரலின் ஈர்ப்பு
வைத்திருக்கும் என்னை
அத்தனை புத்துணர்ச்சியாய்...!

என்னிடத்தில் அவன் காட்டும் அலட்சியம்
ரகசியமாய் காட்டிக்கொடுக்கும்
என்மேல் அவனுக்கான அக்கறையை...!

நான் சீண்டி விளையாடவும்
மனம் நிறைந்து சிரிக்கவும்
திட்டித் தீர்க்கவும், கொட்டிக் குமுறவும்
என்னை நான் முழுதாய் உணரவும்
எனக்கென இறைவன் படைத்த
விளையாட்டு பொம்மையிவன்...!

சோலைக்குள் நான் துயிலும் நாட்களெல்லாம்
காணாமல் போகின்றவன்
வெறுமை சூழ்ந்த அடுத்த நொடி
“என்னாச்சுடி” என எட்டிப் பார்க்கிறான்...!

என் ஒரே ஒரு குரலுக்கு ஓடி வருகிறான்
எனக்காக பதறுகிறான்
என் கண்ணீர ஏந்துகிறான்
நான் சிரிக்கும் அடுத்த நொடி “பை”யென
கையசைத்து விட்டு
வெடுக்கென ஓடி விடுகிறான்...!

கொல்லும் தனிமையை கவி எழுதி வதைத்து விடு,
காத்திருக்கிறேன் என்றவன்
அதை படிக்க போவதில்லையென அவனும் அறிவான்
அவனை அறிந்த நானும் அறிவேன்...!

இதோ அவனுக்கான என் கவியும்
என்னோடு சேர்ந்து தனிமையில்...!


Monday 17 September 2012

திமிர் பிடித்த காதல்காரியும் அவளுக்கே சொந்தமான கவிதைக்காரனும்...!

திரட்டிய மீசைக்குள்
திமிரடங்கா பாரதியின்
நெஞ்சம் தன் வேலி எனக்கொண்டவன்...!

தோற்கப் பிடிக்காத
விழுப்புண் குழந்தையவன்...!
போதுமென்று நின்றுவிடாத
அகராதியில் அவன் பெயரிருக்கும்...!

சவால்களின் ருசியறிந்தவன்...!

உன் ஆணவமான ஆண்மை பிடிக்கும்...!
அரிந்து செல்லும் ஒற்றை வினாடி
பார்வையின் கூர்மை பிடிக்கும்...!
உன் மௌனம் சிந்தும் வார்த்தைகள் பிடிக்கும்...!
உன் கண்களில் தெறிக்கும் அந்த திமிர் பிடிக்கும்...!

என்னில் உன்னை விழ வைக்கிறேன்...
சாவாலுக்குள் நுழைவாயாயென
விரல் சொடுக்கி கண்நோக்கினாள் காதல்காரி...!



என்னில் உணர்ந்ததை
எழுத்தில் விளம்பும் காதல்காரி...

எண்ணத்தில் விளைந்ததை வார்த்தைக்குள்
அறுவடையாக்கும் காரிகைக்காரி..!
விரல் சொடுக்கி விசிலடிக்கும் 
திமிருக்குச் சொந்தக்காரி...!

பால் பேதமெல்லாம் யாதுமறியாத
பயமறியா இளங்கன்று..!
எதிர்த்து நின்று நேருக்கு நேர்
மல்லுக்கட்டும் வீம்புக்காரி...!



வீண் பேச்சு வம்பர்களின் வம்புகளை
நெருப்பு துண்டங்களாய்
எரிக்கத் துணியும் துணிச்சல்காரி...!

தோற்கப் பிடிக்காத தென்கடல்
சீமையின்... பிடிவாதக்காரி...!

நீ திமிர் பிடித்தவள்...!
நான் திமிருக்கு திமிர்பிடித்தவன்..!
தீர்த்துகொண்டு அறிவித்துக்கொள் 
யார் வென்றாரென...!
மோதல் கட்டம்...! 
மோகமாய் போகுமென அறியாதவராய்...!



வடக்கும் தெற்கும் வஞ்சிப்பதேது..!
மாறாய் கொஞ்சிக்கொண்டது...!

விலக்கும் விசையெல்லாம் காந்தப்புலம் மாறினால்
ஈர்த்துப்போகுமென.. எழுதி வைத்த அறிவியல்...!
அவளுக்கும் அவனுக்கும் விதிவிலக்காமல்...!
வேடிக்கை காட்டியே போனது...!

இங்கே எதிரெதிர் துருவங்களாய்
வார்த்தைகள் முட்டிக்கொண்டிருக்க
காதல்காரியும் கவிதைக்காரனும்
கவிதைக்குள் கனமழையாய் நனைந்து கிடக்க..!

ஆதவனின் கரங்களுக்கு ஈரம் துவட்ட நேரமில்லை..
அடங்க மறுத்த வெண்ணிலவு
பிறையானபோதும்...
ஒளிந்துகொண்டே வேவு பார்க்க..!
ஆளில்லா கானகம்,
காதல் ஊற்றினால் செழித்துக்கிடக்க..!
ஆடுகள் மேயும் அருகம்புல்லாய்ப்போனாள் காதல்காரி..!




அதிகாலை நேரத்திலே
பெரும் ஊடல் ஒன்றின் முற்றுப்புள்ளியாய்
காதலின் மடியிலே கவிதைக் குழந்தை பிறந்தது,
மாறாத் திமிரோடு...!

என்னிடத்தில் உன்னை ஈர்த்தக்கதை
யாதென உரைப்பாயா?
கண்கள் காணும் திசையெல்லாம்
கவிதைக்காரனின் வார்த்தைகளை
கவர்ந்திழுக்க தயாராகிறாள் காதல்காரி...!

உன் கண்கள் சிந்திய கண்ணீர் என்னை கரைக்கவில்லை...!
கண்ணாடி துறந்த உன் கண்கள் கரைத்ததடி...!
அழுது சாதிக்கும் உன் பிடிவாதம் வெல்லவில்லை
எதிர்த்து நின்று நீ அடுக்கிய கேள்விகளில் சாய்த்ததடி...!

யாருனக்கு பெயர் வைத்தார்?
அநேகமாய் ஓர் வரலாற்றுப்பிழைக்கு
காரணமாய் அவரிருக்கக்கூடும்...!
முன்னோ பின்னோ அடை மொழி கூட்டி...!
ஜெகபாரதி , யுகபாரதி என்றல்லவா
உன்னில் பெயரிட்டிருக்க வேண்டும்..!

அத்தனை திமிரும் மொத்தமாய் உன்னிடம்...!

“ச்சீ” யென ஒன்றை வார்த்தையில் தெறிக்கும், கோபம்!
சிலிர்க்கவைக்கும்..

எத்தனை திட்டி உன்னை விலக்க நினைத்தாலும்
என்னை இறுக்கிப் பிடித்த உன் திமிர்...
அதுவே... உனக்குள் என்னை மூழ்கடித்த திமிர்...!

“போடி” என்றவுடனே ஓடி ஒளிந்துக்கொள்ளும் நீ...
சேவல் கூவுமுன்னே காலை சுற்றிட வருவாய்...!

இருக்கும் நான்கு இதய அறைக்குள்
எவ்வறையில் ஒளித்திட்டாய் என்னை?
இப்படி பூனைக் குட்டியாய் எனை மாற்றி
உன்னை சுற்றி வர செய்கிறாயே?

பெருமூச்சு விட்டவனின் கழுத்தைக் கட்டி
நெற்றியில் முத்தமிட்டவள்
தொடர்கிறாள் மீதிக் கதை...!

எனக்கு பிடித்த உன்னை பட்டியலிடவா?

உன் மேல் உனக்குண்டான கர்வம்...!
நான் உனக்கு சொந்தமானவள்
என்ற திமிர்...! தனித்துவமாய்...தரணி ஆளும் தன்னிகரில்லா தலைவனாய்..
எண்ணிச்சிலாகிக்கும் உன் திமிர்...!
வசீகரிக்கும் கவிதைக்காரனாய் திமிர்...!

நீ திமிர் பிடித்தவனா?

அந்த போர்வைக்குள் இருக்கும்
முரட்டுக் குழந்தையடா நீ...!
உன் முகத்தில் ஒரு திமிர் இருக்கும்...!
உற்று நோக்கினால் ஆயிரம் ஏக்கங்களின்
இருட்டுப்பக்கம் அதில் பூட்டப்பட்டுக் கிடக்கும்...!

கவிதைக்காரா... யாரிடத்தும் அக்கறையில்லையென
உன் வாய் சொல்லலாம்...!
ஆனால்... உன் நேசத்துள் வீழ்ந்தவர்கள்
மேலான அக்கறை உன் இதயச் சுவர்களில்
மோதி வெளிவரத் துடிக்கும் மாயம் அறிவாயா?

உன் திமிருக்குள் ஒளிந்திருக்கும் என் மேலான
நேசம் அறியாதவளா நான்?

பிரியமானவளே...! என்னுள் நீ முழுதாய்
நிறைந்தாய்யென அறிவித்தால் தான் அறிவாயா?
ஒற்றைகல் உப்பின் அளவு பிடிக்குமடி உன்னை...!
அதனிலிருக்கும் ஓராயிரம் அணுக்களும்
உன்னை என்னுள் விதைத்துச் செல்லும்...!

அழக்கூடாதடி நீ...! உன் கண்கள் சிந்தும்
கண்ணீர்த்துளிகளின் ஒற்றை துளியில் கூட
என் நேசம் சுமந்த உப்பிருக்கும்...!

இவர்களின் உரையாடல் நீண்டு கொண்டேயிருக்க
திமிருக்கும் திமிர் பிடித்த அதன் வேலிக்குமிடையில்
காதல் ஒன்றும் புரியவில்லை சரிதான் போ..!
என சலித்தோய்ந்து உறங்கி விட்டது...!

விடியலுக்கு சற்று முன்.....!

Sunday 16 September 2012

நான் இடி...!

அடக்கி விட துணிந்து
ஆதிக்கம் செலுத்த முயல்பவர்களுக்கு
உரசி செல்லும் மின்னலாய் நான்...!

இடித்து பேசி ருசி கண்டவர்களின்
இடிகள் தாங்கும் இடிதாங்கியாய் நான்...!

வஞ்சகர்களின் வஞ்சனைகளை
எதிர்க்க துணிந்த இடியாகவும் நான்...!

அன்பால் நேசக்கரம்
நீட்டுபவர்கள் மத்தியில்
உருகி உருகி பொழியும்
மழையாய் நான்...!

என் பாசம் வேண்டும் நெஞ்சத்துக்கு
அதன் நகல் கொடுக்கும் அச்சாய் நான்...!

வரைமுறைகளுக்கு உட்பட்ட
கவிதைகளின் எல்லைக்குள்
கட்டுப்படா காற்றாய் நான்...!

என்னையே நேசிக்கும் எனக்கு
என் சுவாசமாகவும் நான்...!

Saturday 15 September 2012

எனக்குள் ஏனோ தடுமாற்றம்...!

கலைந்து விழும் கற்றை முடி
நடுவே சிக்கிக் கொண்ட ஐவிரல்களாய்
உன் இதயத்து அறைகளில்
பூட்டி வைத்து தடுமாறச் செய்கிறாய்...!

என் கண்கள் சிந்தும்
கண்ணீர் துளி ஒவ்வொன்றையும்
காதல் செய்தே கொல்லப் பார்க்கிறாய்...!

உன் நினைவலைகளால் என்னை சுருட்டி, 
உன்னில் என்னை மூழ்கடித்து 
என் சுவாசம் தடுத்து 
மூச்சிரைக்க வைக்கிறாய்...!

செல்லச் சிணுங்கல்களும்
சீண்டும் உதட்டோர புன்னகையும்
கலந்து தந்தே கெஞ்சப் பார்க்கிறாய்...!

மோனப் பார்வையால் கிறங்கடித்து
கண்வழி ஊடுருவி
மீசை முடி குறுகுறுக்க
கிச்சு கிச்சு மூட்டியே கொஞ்சப் பார்க்கிறாய்...!

பூக்கள் உதிரும் நந்தவனத்தில்
பூவாய் மாறி ஸ்பரிசித்து
என்னை நினைவிழக்கச் செய்தே
மிஞ்சப் பார்க்கிறாய்...!

என்னுள் நீ புகுந்து ஆழ்மனம் தரிசிக்க
நீ நானாகவும், நான் நீயாகவும்
மாற்றி மாற்றி தடுமாற வைத்து
உன் காலடி சுற்றும் பூனைகுட்டியாய்
உருமாற வைக்கிறாய்...!

Friday 14 September 2012

அப்பா...!

இல்லத்தின் அரசனாயினும்
அரசியின் சிறு சிறு கண்ணசைவில்
புரிதலும் இசைதலுமாய் கட்டுண்டு
இல்லம் காத்த மனையாளன்...!

நேசித்த மனையாளை
நேசம் தவிர்த்து வேறெதையும்
அனுபவிக்க வைக்காதவர்...!

“அம்மா”வென முதல் வார்த்தை
மிழற்றிய போது தாயுமானவராய்
கர்ப்பப்பை சுமந்து நின்றவர்...!

செல்ல மகளின் இடுப்பில்
அரைஞாண் கயிறு பூட்டி
கிச்சு கிச்சு மூட்டி
புளங்காகிதம் அடைந்த இல்லத்தரசன்...!

முதலடி எடுத்து வைத்து
நடைப் பழக தடுமாறி தத்தளித்த போது
சுட்டு விரல் கொடுத்து
நடைப்பழக்கிய அன்பு அப்பா...!

இவரது செல்ல முத்தங்களும்
அவசிய கண்டிப்புமாய்
உப்பு மூட்டை தூக்கிய நாட்களெல்லாம்
இன்னமும் நீண்டுக் கொண்டேதானிருக்கின்றன...!

Thursday 13 September 2012

இன்னுமோர் அக்னி பிரவேசம்...!

இதோ நான் இறந்து விட்டதாக
ஊர் சொல்கிறது...!

அவர்களுக்கு தெரியுமா?
உயிரை திரியாக்கி
என்னையே விறகாக்கி
என் காதலை வளர்த்துக் கொண்டிருக்கிறேன் என்று...!

உன்னையே உறவாக எண்ணிய நாள் முதல்
நம்பிக்கையை ஆழ் மனதில் விதைத்து
உன்னை நான் பயிரிட்டக் கதை அவர்களுக்கு தெரியுமா?

இதயம் துளைத்து முளைவிட்ட உன்னை
உதிரமாய் பதியம் செய்த கதை தான்
ஊர் அறியுமா?

என் காதலை உரமாய் போட்டு
வளர்த்து விட முனைந்த உன்னில்
களையாய் ஒருத்தி தோன்றிய
நாள் தான் காலம் மறக்குமா?

வேலிப் படரும் உன் கரங்களென்னவோ
மாற்றான் தோட்டத்தில்... வேர் என்னவோ
இன்னும் என்னுள் பிடுங்கி எறியவே
முடியா உறுதியாய்... உனக்குள் உறுத்தவில்லையா?

நீ மீண்டு வருவாயென்ற நம்பிக்கை
உன் மேல் நான் கொண்டதாய் இருக்கலாம்...
ஆனால்... என் நம்பிக்கையின் வீரியம்
என்னையே அழித்த கதை நீ அறிவாயா?

அக்னி வலம் வந்து கைபிடிப்பாய் என்றிருந்தேன்...
இதோ அணைக்க வேண்டிய உன் கரங்கள்
திசைமாறித் தழுவியதால்
அக்னி என்னை அணைக்க
உன்னுள் பிரவேசிக்க துவங்கி விட்டேன்...!

ஆம்... அங்கே எரிந்துக் கொண்டிருப்பதென்னவோ
என் உடல் தான்... ஆனால் மனமல்லவோ
தகித்துக் கொண்டிருக்கிறது...!

Tuesday 11 September 2012

குறிஞ்சி மலர்கள்... !!!

வெளியே சருகு சலசலக்கும் ஓசை கேட்டது. ஜன்னல் திரையை நீக்கி எட்டி பார்த்தேன். சுப்பன் உலர்ந்த சருகுகளை கூட்டிக்கொண்டிருந்தான். இவனுக்கு ஒரு ஐம்பத்திரண்டு வயதிருக்குமா? இப்பவே முதுமை இவனை இப்படி அரவணைத்து கொண்டதே, கையில் இருந்த டிரான்ஸ்பர் ஆர்டரை பார்த்தவாறே மெதுவாக கண் மூடினேன்.

நான் சிவகலா. இந்த அருமைநாயகன்பட்டிக்கு இரண்டு வருடத்துக்கு முன் கிராம அதிகாரியாக மாற்றலாகி வந்தேன். பாரதிராஜாவின் செழுமையான கிராமமாக இல்லாவிட்டாலும் அந்த குளக்கரையும், வாழை தோப்பும் மனதுக்கு இதமாக இருக்கும்.ஆனால் வாழை மரங்கள் அடிக்கடி கண்ணீர் விடும். ஆமாங்க, இங்கு ஜாதி கலவரம் வெகுசாதாரணம். எடுத்தவுடன் வாழைகளைத் தான் வெட்டுவார்கள். இந்த இரண்டு வருடங்களில் பலகலவரங்களை நான் பார்த்திருந்தாலும் நான் பார்த்த அந்த முதல் கலவரம் ..... அந்த நான்கு குருத்துகள்.... இன்னும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் மறக்காது.

இங்கு வந்த புதிதில் நேரம் போகவில்லை எனில் குளக்கரையில் தான் அமர்ந்து படம் வரைவது வழக்கம். அன்றும் அப்படிதான் படம் வரைந்து கொண்டிருந்தேன். ஆணும் பெண்ணுமாய் நான்கு பேர் சிரித்தபடி ஓடி வந்து கொண்டிருந்தார்கள்.

'அட. செல்லியும் வர்றா போலிருக்குதே' தலை தூக்கி பார்த்தேன்.

செல்லி சுப்பனின் மகள். இந்த கிராமத்து தேவதை. எண்ணை வழியும் தலையோடு இருந்தாலும் செல்லி செல்லிதான்.

"அக்கா அக்கா, இவங்க என்னோட பிரண்ட்ஸ். இவ ஸ்டெல்லா, இவன் டேவிட், அப்புறமா இவன் அப்துல்லா".

"நீங்க இதே கிராமமா" எனக்கு சந்தேகமாக இருந்தது. ஏனெனில் இவர்களை நான் இதுவரை பார்த்தது இல்லை".

"ஆமாக்கா, டேனியல் கேள்விபட்டிருப்பீங்களே, நாங்க ரெண்டு பேரும் அவரோட பசங்கதான். கோயம்புத்தூர்ல ஹாஸ்டல்ல தங்கி பி.எஸ்சி. அக்ரிகல்ச்சர் படிச்சுட்டு இருக்கோம். எங்க கிளாஸ்மேட் தான் அப்துல்லா, இந்த வருஷம் ஊருக்கு நானும் வர்றேன்னு சொன்னான், கூட்டிட்டு வந்துட்டோம்..."

அப்துல்லாவை பார்த்தேன். அவன் ஆர்வத்தோடு நான் வரைந்திருந்த பாரதத்தாயையே பார்த்துக்கொண்டிருந்தான்.

"அப்துல் படிப்பில் எப்படி" எதையாவது கேட்க வேண்டுமே என கேட்டேன்.

"தப்பு பண்றீங்கக்கா" திடுக்கிட்டு அவனை நோக்கினேன்

"பாரதத்தாயோட நெத்தியில பொட்டு இல்ல பாருங்க"

"நான் இன்னும் வரைந்து முடிக்கவில்லை அப்துல்"

"முடிக்கா விட்டாலும் பரவில்லை, ஆனால் முதல்ல அவ நெத்தியில பொட்டு வைங்க. பொட்டு இல்லாம அவ நல்லா இல்லை"

"சிகப்பு கலர் இப்போ என்கிட்ட இல்லப்பா, பாரு, சுத்தமா துடைச்சு வச்சிருக்கேன்" டப்பியை எடுத்து காட்டினேன்.

அவன் விரல்கள் வாஞ்சையோடு பாரதத்தாயை வருடிக்கொடுத்தன.

"நீங்க என்னதான் சமாதானம் சொன்னாலும் என்னால அத ஏத்துக்க முடியாதுக்கா, பொண்ணுங்களுக்கு பொட்டுங்குறது சின்ன அகல் விளக்குல எரியுற தீபம் மாதிரி. அது இருந்தாதான் அழகு".

"இவன் எப்பவும் இப்படிதான், நம்ம நாட்டையோ இல்லை நம்ம பாரம்பரியத்தையோ யாராவது குத்தம் சொன்னா இவனுக்கு பொறுக்காது. உடனே லெக்டர் அடிக்க ஆரம்பிச்சுடுவான்" ஸ்டெல்லா முதன் முறையாக வாய் திறந்தாள்.

எனக்கு அவர்களில் அப்துல்லா தனியாக தெரிந்தான். சிறிது நேரம் அமைதியாகஇருந்தேன்.

"ஆமா, செல்லி எப்படி உங்களுக்கு பிரெண்டானா?"

"நாங்க அஞ்சாங்கிளாஸ் வரைக்கும் ஒண்ணாதான் படிச்சோம். அப்புறமா நாங்க கோயம்புத்தூர் போயிட்டோம் . செல்லிய அவங்கப்பா மேற்கொண்டு படிக்கச் வைக்கல. நாங்க வெளியூர்ல படிச்சிகிட்டு இருந்தாலும் செல்லிக்கு அடிக்கடி லெட்டர்போடுவோம், அப்துல்லாவும் செல்லிக்கு பேனா நண்பன் ஆகிட்டான்".

"நேரம் ஆச்சு , நாங்க கிளம்புரோம்கா " செல்லி ஏனோ அவசரபட்டாள்.

"ஏய் அப்துல், கிளம்புப்பா" உரிமையோடு கை பிடித்து இழுத்தாள்.

"அக்கா, பாரதமாதாவுக்கு உடனே பொட்டு வச்சுடுக்கா " அவன் இன்னும் தன் சுயநினைவுக்கு திரும்ப வில்லை போலும். கிளம்ப மனமில்லாமல் திரும்பி திரும்பி பார்த்தான்.

அந்த இடத்தை விட்டு எட்டடி கூட வைத்திருக்கமாட்டர்கள். அதற்குள் நாற்பது, ஐய்பது பேர் திபுதிபுவென ஓடி வந்தனர். அவர்கள் கையில் வீச்சரிவாள், வேல்கம்பு.

நான் முதன்முறையாக மிரண்டு நண்பர்களை நோக்கினேன். அவர்கள் முகத்தில் எந்த சலனமும் இல்லை.

"பிடிங்கடா, விட்டுடாதீங்க" ஒரு முரட்டு குரல். யாரென திரும்பி பார்த்தேன். பெரிய மீசையோடும் முரட்டு உருவத்தோடும் டேனியல் நின்று கொண்டிருந்தார்.

அடியாட்கள் செல்லியும், அப்துல்லாவையும் பிடித்து கொண்டார்கள். டேனியல் அப்துல்லாவிடம் திரும்பினார்.

"இங்க பாருப்பா, இந்த ஊருல வேத்து ஜாதிகாரனோ, இல்ல வேத்து மதத்துகாரனோ வரணும்னா என்ன மாதிரி பெரிய மனுசங்கிட்ட அனுமதி வாங்கணும். எம்புள்ளைங்க கூட்டிட்டு வந்ததால உன்ன ஒண்ணும் செய்யல, மரியாதையா உடனே பெட்டிய தூக்கிட்டு ஓடி போய்டு" டேனியலின் குரலில் கடுமை இருந்தது.

"நிறுத்துங்கப்பா, இவன் எங்கள்ள நம்பி வந்திருக்கான், இவன நாங்க போக விடமாட்டோம்" ஸ்டெல்லாவும் கத்தினாள்.

"சும்மா வாய மூடு கழுத. டாய், இந்த செல்லிக்கு மொட்ட போட்டு ஊர் நடுவுல கட்டுங்கடா"

"அப்பா, அவ ரொம்ப நல்லா பொண்ணு, அவ என்ன தப்பு செய்தான்னு அவளுக்கு மொட்ட போடசொல்றீங்க?"

"என்ன பண்ணுனாளா? ஏண்டா, கீழ்சாதிகார நாயி அவ, அவளுக்கு பெரிய வீட்டு பசங்க பழக்கம் கேக்குதோ? இன்னும் ஏண்டா பாத்துகிட்டு இருக்கீங்க, போய் ஆக வேண்டியதை பாருங்க" இப்போது டேனியல் வெறியின் உச்சியிலேயே இருந்தார். செல்லியை பிடித்திருந்தவர்களின் பிடி இறுகியது. அவள் இப்போது அவர்கள் பிடிக்குள் கோழிகுஞ்சாக வெடவெடத்தாள்.

"அவள விடுங்க" கதறும் நண்பர்களோடு நானும் கத்தினேன்.

"ஐயா, எம்புள்ளைய விட்டுடுங்கயா வாழ வேண்டிய பச்சை மண்ணுயா" சுப்பன் டேனியலின் காலடியில் கதறியழுததை பார்க்க பரிதாபமாக இருந்தது.

"நம்ம சாதி புள்ளைய இவனுக மொட்ட அடிச்சுருவானுகளா, அதையும் பாத்ருவோம்லே" செல்லிக்கு ஆதரவாக சில இளவட்டங்கள் குதித்தனர்.

அப்புறம் என்ன நடந்தது என்று என்னால் எழுத்தில் வடிக்க இயலவில்லை, சுற்றும்முற்றும் பார்த்தேன். வாழை மரங்கள் குளத்து நீரில் பிணமாய் மிதந்தன. சிலர்வலியில் துடித்து கொண்டிருந்தனர். சிலர் கத்தகூட இயலாமல் மயங்கி கிடந்தனர். இவங்க நாலு பேரும் எங்கே? என் கண்கள் அங்கும் இங்கும் அலைமோதி அவர்கள் மேல்நிலைத்தது.

நால்வரும் கைகளை இணைத்திருந்தனர் . ஐயோ, இதென்ன! அவர்கள் பிஞ்சுக்கரங்களிலிருந்து இரத்தம் வழிகிறதே!

"நிறுத்துங்க" நான் வாயை திறப்பதற்குள் அவர்களே கத்தினார்கள். அவர்களின் பலமான பலமுறை கத்தல்களுக்கு தாமதமாக பலன் கிடைத்தது. அனைவரும் சண்டையை நிறுத்திவிட்டுஅவர்களை நோக்கினார்கள்.

"ஜாதி, மதம்னு அலையுறீங்களே, யாருக்கு வேணும் உங்களோட இந்த சாக்கடை. இதோ, ஓடிகொண்டிருக்கிற ரத்தத்துல எது மேல்சாதி ரெத்தம், எது கீழ் சாதி ரெத்தம்னு உங்களால சொல்ல முடியுமா? ம் சொல்லுங்கடா!..."

ஸ்டெல்லாவின் முழக்கத்தோடு அவர்கள் கரங்கள் உயர்ந்தன. பட்டன ஒரு சொட்டுத்தெறித்து பாரத தாயின் நெத்தியில் விழுந்தது. தெறித்த ரெத்தம் வழியாமல் இருக்க என் கைவிரல்களால் தடுத்துக் கொண்டேன். இந்த அப்துல்லாவுக்கு என்ன ஒரு பார்வை. அவன் என்னைப் பார்த்து சிரித்தான். நீண்ட நேரம் கழித்து தான் தாயை பார்க்கும் குட்டியின் பரவசம் அவன் முகத்தில் ஒளிர்ந்தது.

கலவரக்கூட்டம் இப்போது நண்பர்களையே பார்த்துக் கொண்டிருந்தது. பின்னர் என்ன நினைத்ததோ கலைந்து சென்றது. இந்த இளம் வீரர்களை எதிர்க்க அவர்களுக்கு துணிவில்லையோ என்னவோ?அதன் பிறகு எப்படி வீட்டுக்கு வந்தேன் என தெரியவில்லை. என் அருகில் பாரதமாதா நெற்றியில் தன் மைந்தர்கள் வைத்த திலகத்தோடு சிரித்துக் கொண்டிருந்தாள்.

செல்லி கையில் கட்டோடு மெதுவாக உள்ளே வந்தாள். "வா செல்லி, உன்னோட ப்ரண்ட்ஸ் எல்லாம் எங்கே காணோம்?" என் கண்கள் அங்கும்இங்கும் அலைந்து அவர்களை தேடியது.

"அவங்க போய்டாங்கக்கா. இனி எப்போதான் அவங்கள நேர்ல பாக்க போறேனோ" சொல்லும் செல்லியை ஆராய்ந்தேன். அவள் முகத்தில் துளி வருத்தமும் இருந்ததாக தெரியவில்லை. 

"ஏன் செல்லி, உனக்கு வருத்தமே இல்லையா?" என்னால் கேக்காமல் இருக்க முடியவில்லை.

"வருத்தம்தான்க்கா. ஆனா என்ன செய்றது. எங்களால ஊரு ரெண்டுபட்டு நின்னா நல்லாவா இருக்கும். என்ன! எப்போ கலவரம் வந்தாலும் ரெண்டு மூணு உசிரு போகும். ஆனா இந்த தடவ யாரும் போய் சேரல. அந்த வகைல கொஞ்சம் சந்தோசம்".

இவர்கள் எப்படி இதையெல்லாம் இவ்வளவு சுலபமாக எடுத்துக் கொள்கின்றனர். அவளிடமே கேட்டேன்.

"அக்கா, இந்த சமுதாயம் சீக்கிரமா மாறணும்னு நாம நினைக்க கூடாது. அதுக்குகாலமாகும். எங்க தலைமுறைல இல்லனாலும் எங்க புள்ளைங்க காலத்திலாவது மாறும்.அதுவரைக்கும் நாங்க காத்திருப்போம்".

"இனிமே நீங்க நாலுபேரும் எப்போதான் சந்திப்பீங்க"

"வழக்கம் போல லெட்டர்ல தான் "

பேசிய செல்லிய நான் ஆச்சர்யமாக பார்த்தேன். இவர்கள் என்ன நட்புக்கு ஒரு உதரணமா? பனீரெண்டு வருசத்துக்கு ஒருமுறை பூக்கும் குறுஞ்சி மலர்களை விட இவர்களின் நட்பு சிறந்த மலரோ?

அதற்கு பிறகு செல்லியை நான் எவ்வளவோ முறை சந்தித்தேன். நண்பர்களிடம் வருகிற கடிதங்களை காட்டுவாள். சுகமான நினைவுகளை அசைப்போட்ட நான் மெதுவே கண் விழித்துப் பார்த்தேன். சுப்பன் இப்போது சருகுகளை சாக்கு பையில் கட்டி தோளில் சுமந்துக் கொண்டிருந்தான். கிராமங்களில் ஏழைகளுக்கு சருகுதானே அக்னி பகவானை தாரை வார்க்கும் அட்சயபாத்திரம்.

"சுப்பா! செல்லி வீட்ல இருந்தா கொஞ்சம் வர சொல்றியா?"

"சரி தாயி! உடனே வர சொல்லுதேன்" சுப்பன் போய் விட்டான்.

இப்பவே கிளம்பினா தான் நேரத்தோட திருநெல்வேலி போய் சேர முடியும். துணிமணிகளை அடுக்க ஆரம்பித்தேன். நான் வரைந்த ஓவியங்களை எடுக்கையில் பாரதமாதா. அவள் கண்களில் எனக்கு அப்துலா தெரிந்தான். அவளை மார்போடு அணைத்தவாறு நாற்காலியில் சரிந்தேன். ஏதோ சொல்ல முடியாத உணர்ச்சிகளின் கலவைகள் என்னை அரித்தன. கண்கலங்கியவாறு நிமிர்ந்தேன். வாசல்படியில் செல்லி நின்றிருந்தாள்.

"வா செல்லி"

"ஊருக்கு புறப்பட்டுடீங்களாக்கா? எங்களயெல்லாம் மறந்துற மாட்டீங்களே"

"மறக்கற முகமா உங்களோடது? என் கண்கள் பனித்தன.

"செல்லி, உனக்கு உன் நண்பர்களை மீண்டும் பார்ப்போம்குற நம்பிக்கை இருக்கா?"

"நிச்சயமா இருக்குக்கா"

"அப்படின்னா இந்த தாயை அப்துல்கிட்ட குடுத்துரு" செல்லியிடம் கையளிக்கும் போது மனதுக்குள் தைரியம் பிறந்தது.

நிச்சயம் இந்த கிராமம் ஒருநாள் அமைதி பூங்காவாக, ஜாதி, மதம்ங்குற சச்சரவு இல்லாமல் மாறத்தான் போகுது. அதற்கு முதல் புள்ளியாய் இந்த சின்னஞ்சிறுசுகள் கிளம்பி விட்டனரே. வண்டிக்கு நேரமாகவே வேகவேகமாக புறப்பட ஆயத்தமானேன். என் மனத்திரையில் நான்கு நண்பர்களும் குறுஞ்சி மலர்களாய் சிரித்தனர்.