Saturday 22 December 2012

மோகன கானம்....!


எங்கோ தோன்றிய ஒளி வட்டமாய் நீ...
என் பார்வை பறித்து வசியம் வீசி செல்கிறாய்...!
உன்னால் சுழலவிட்ட பம்பரமாய்
நான் உன்னை சுற்றியே நினைவிழந்து போகிறேன்...!

உன்னை கண்ட நிமிடம் நான்
ஆர்ப்பரிக்கும் அலைக்குள் சிக்கிக் கொண்டேன்...!
நீயோ தெளிந்த நீரோடை ஒன்றில்
என் மனமென்னும் மீன் கொத்திச் செல்கிறாய்...!

நான் போகும் பாதையில் பூக்களின் திசைமாற்றி
என் சுவாசம் முழுவதும்
நறுமண வாசம் வீசி செல்கிறேன்...!
எனக்கே தெரியாமல் என்னை ஊடுருவி சென்று
எப்படி ஆக்கிரமித்தாய் நீ?

மென்மை ஒன்றை உன்னில்
நான் கண்டவளுமில்லை...
அஹிம்சை ஒன்றை
உன்னிடத்தில் அறிந்தவளுமில்லை...!

உன் தோள் கண்டு உன்னோடு
மோகித்து விடவுமில்லை...
குரலோசை கேட்டு
உனக்காக சஞ்சலித்து விடவுமில்லை...!

இரவின் கரங்களுக்குள்
அடங்க மறுக்கும் நான்
உன் முரட்டு நெஞ்சத்துள்
புகுந்து விட துணிகிறேன்...!

கட்டுக்கடங்கா திசையெல்லாம்
சுழலும் காற்றாய் நான்...
சிறைபட்டு உன்னை
சிறையெடுக்க விரைகிறேன்...!

ஊர்க்குருவி ஒன்று கூவும் இசைகேட்டு
நீ கண் விழிக்கும் முன்னே
உன்னில் மூழ்கி விட முனைகிறேன்...!

தடைக்கல்லென என் நடைபாதை நுழைந்தவனே
கேள்விக்குறியாய் நீ மாறி பின்
பதிலே நீயுமாய் பதிந்து விட்ட கதை அறிவாயோ?

உன் கண்சிமிட்டல்களுக்குள்
தொலைந்து போன என்னை
தேடி தேடி மறுகுகிறேன்
நீ என்னுள் தொலைந்ததே அறியாமல்...!

No comments:

Post a Comment