Saturday 17 November 2012

பயமறியா விடியல்...!


எங்கோ ஒலிக்கும் ஒரு ஈனஸ்வரம்
மயிர்க்கூச்சரிய செய்கிறது...!
உயிர் நேசம் வேண்டும் குரல்கள்
திசையறியா வகையில் தோன்றி பரிதாப முகம் காட்டுகின்றன...!

வெள்ளையுடுப்பு தேவதைகள் விரைந்துக் கொண்டிருக்கிறார்கள்...
கால்களில் சிறகு பூட்டி...!
அவர்களின் வேகம் மிஞ்சி
தடதடவென கடந்து செல்கிறது சக மனிதனின் உயிர்...!

க்ரீச்சிடும் ஸ்ரெச்சர் சத்தத்திலும் தொலைந்து போன
என்னையே தேடிக் கொண்டிருக்கிறேன் நான்...!
தனிமை புதிதில்லையென்றாலும் குறுகலாய்
கட்டப்பட்ட கைகள் என் மார்பு கூட்டுக்குள்
பாதுகாப்புத் தேடி அலைகின்றன...!

என்னை பற்றிய தேடல் ஒன்றில்
எனக்குள் இருக்கும் நான் விழித்துக்கொள்கிறேன்...!
நான் யார்? எதற்காக பிறந்தேன்?
என்ன சாதித்தேன்? என்ன சாதிக்கப் போகிறேன்?
நிச்சயித்து விட்ட பயணத்தில் தொக்கி நிற்கும் கேள்விகளாய் இவைகள்...!

செல்லும் பாதையின் தூரமோ அறிந்திட இயலாது...
ஆனால் பயணிக்கும் ஒவ்வொரு அடியிலும்
டெட்டால் வாசம் மீறிய ஆன்காலஜி வார்டுக்குள்
புன்னகை பூக்களை விதைத்துச் செல்லவே ஆசைப்படுகிறேன்...!

நாளை விடியாமல் போய் விடுமோ
என்று பயந்தே கண்விழித்திருக்கும் கண்கள் மத்தியில்
விடிந்து விட்டதாய் ஆதவனும் திரைசீலை விலக்கி
அறிவித்துவிட்டு போகிறான்...!

என் விடியல் வெளியே காத்துக்கொண்டிருக்க...
அதைநோக்கி மெதுவே அடியெடுத்து வைக்கிறேன் நான்…!


4 comments:

  1. நல்ல சிந்தனை வரிகள்...

    படித்து முடிப்பதற்குள் மருத்துவமனையின் டெட்டால் வாசம் வீசியது...

    ReplyDelete
  2. கேசவராஜ் ரங்கநாதன்28 October 2013 at 07:36

    நல்ல படைப்பு காயத்ரி மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்!!! :)

    ReplyDelete
  3. கேசவராஜ் ரங்கநாதன்28 October 2013 at 07:36

    நல்ல படைப்பு காயத்ரி மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்!!! :)

    ReplyDelete
  4. என் விடியல் வெளியே காத்துக்கொண்டிருக்க...
    அதைநோக்கி மெதுவே அடியெடுத்து வைக்கிறேன் நான்…!//

    நல்ல விடியல்.

    ReplyDelete