Thursday 13 September 2012

இன்னுமோர் அக்னி பிரவேசம்...!

இதோ நான் இறந்து விட்டதாக
ஊர் சொல்கிறது...!

அவர்களுக்கு தெரியுமா?
உயிரை திரியாக்கி
என்னையே விறகாக்கி
என் காதலை வளர்த்துக் கொண்டிருக்கிறேன் என்று...!

உன்னையே உறவாக எண்ணிய நாள் முதல்
நம்பிக்கையை ஆழ் மனதில் விதைத்து
உன்னை நான் பயிரிட்டக் கதை அவர்களுக்கு தெரியுமா?

இதயம் துளைத்து முளைவிட்ட உன்னை
உதிரமாய் பதியம் செய்த கதை தான்
ஊர் அறியுமா?

என் காதலை உரமாய் போட்டு
வளர்த்து விட முனைந்த உன்னில்
களையாய் ஒருத்தி தோன்றிய
நாள் தான் காலம் மறக்குமா?

வேலிப் படரும் உன் கரங்களென்னவோ
மாற்றான் தோட்டத்தில்... வேர் என்னவோ
இன்னும் என்னுள் பிடுங்கி எறியவே
முடியா உறுதியாய்... உனக்குள் உறுத்தவில்லையா?

நீ மீண்டு வருவாயென்ற நம்பிக்கை
உன் மேல் நான் கொண்டதாய் இருக்கலாம்...
ஆனால்... என் நம்பிக்கையின் வீரியம்
என்னையே அழித்த கதை நீ அறிவாயா?

அக்னி வலம் வந்து கைபிடிப்பாய் என்றிருந்தேன்...
இதோ அணைக்க வேண்டிய உன் கரங்கள்
திசைமாறித் தழுவியதால்
அக்னி என்னை அணைக்க
உன்னுள் பிரவேசிக்க துவங்கி விட்டேன்...!

ஆம்... அங்கே எரிந்துக் கொண்டிருப்பதென்னவோ
என் உடல் தான்... ஆனால் மனமல்லவோ
தகித்துக் கொண்டிருக்கிறது...!

No comments:

Post a Comment