Thursday 6 September 2012

மனிதம் பிறந்த தருணம்


"டேய் ரமேஷ், இன்றைக்கு ஈவினிங் கிளாஸ் உண்டா டா"

தோளில் தொங்கிய புத்தகப் பையை சுமக்க முடியாமல் சுமந்தவளாய் கேட்டாள் உதயா.

"ஆமாடா, மாத்ஸ் சார் கிளாஸ் வச்சிருக்காரு"

"இரு, அப்பாக்கு போன் பண்ணிட்டு வரேன்"

இவர்கள் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள். தங்கள் பள்ளியின் தேர்ச்சி விகிதம் அதிகரிக்க பள்ளி நடத்துனர்கள் கண்டுபிடித்த இந்த அரிய கண்டுபிடிப்பு தான் இந்த கோச்சிங் கிளாஸ். இதுவே மாணவர்களுக்கிடையில் ஒரு நெருக்கத்தை ஏற்படுத்த உதவும் சந்தர்பமாகவும் அமைகிறது பெரும்பான்மையான நேரங்களில். இதனை பள்ளி நடத்துனர்கள் அறிந்தனரோ இல்லையோ உதயாவும் அவள் நண்பர்களும் நன்கு அறிந்து வைத்திருந்தனர். இங்கு நண்பர்கள் என்று குறிப்பிடப்படுபவர்கள் உதயா, கலா, வடிவேலு, மூர்த்தி, அனு, சுரேஷ், மற்றும் ஸ்டீபன். முதன்முதலில் அடிதடியில் ஆரம்பித்த இவர்கள் நட்பு பின் பிரிக்க முடியாத இழையாய் இறுகி விட்டிருந்தது.

தினமும் பள்ளி விட்டதும் இரண்டு மணி நேர கோச்சிங் கிளாஸ். ஆசிரியர் இல்லாத முதல் ஒரு மணி நேரம் வீண் அரட்டை, சண்டை, மைதானத்தில் விளையாட்டு நண்பர்களின் கலந்துரையாடல் என்று நீண்டு கொண்டிருக்கும். நெருக்கமான நண்பர்கள் இன்னும் நெருக்கமாக, தங்களை மேலும் மேருகேற்றுவதற்கும் சீரழிவதற்கும் இது ஒரு களமாய் அமைந்தது.

எல்லா பிள்ளைகளையும் போல விளையாட்டுதனமாய் இருந்த இந்த நண்பர்கள் வாழ்வில் திருப்புமுனையாக வந்தது தங்கநாடாச்சி மிஸ். கிண்டலும் கேலியுமாய் இருந்த இவர்களை இனம் கண்டு வலுகட்டாயமாக பள்ளியின் சாரணர் இயக்கத்தில் சேர்த்து விட்டார். அங்கும் இவர்களின் கொட்டம் அடங்கியதில்லை.

மலை சார்ந்த குக்கிராமம் ஒன்றில் முகாமிட்டுருந்தனர் "நமச்சிவாயா பள்ளி " மாணவர்கள். மூர்த்தி ஜடையை பிடித்து இழுத்ததினால் அவனிடமிருந்து விலகி ஓடி எதன் மீதோ முட்டிக் கொண்டு நின்றாள் உதயா. நிமிர்ந்து பார்த்து அதிர்ந்து போன அவள் கண்ணில் பட்டது ஒரு கிழவி. சர்க்கரை நோயால் பீடிக்கப்பட்டு காலொன்று அழுகிய நிலையில் ஈக்களோடு போராடிக் கொண்டிருந்தாள் அவள். உடல் முழுக்க அருவருப்போடு துள்ளியெழுந்தவள் ஓடிச் சென்று வாந்தி எடுத்தாள். உடல் முழுவதும் ஆரம்பித்த நடுக்கம் ஒரு வித இயலாமையோடு வெறுப்பில் முடிந்தது.

தோளின் மீது ஒரு கை விழ வீலென அலறியவளின் பேயறைந்த முகம் பார்த்து விழுந்து விழுந்து சிரித்தான் மூர்த்தி. நண்பர்கள் அனைவரும் சூழ்ந்துக்கொள்ள அவர்களிடையே வேடிக்கை பொருளாய் மாறி போயினர் உதயாவும் கிழவியும்.

"இப்படியெல்லாம் பண்ண உங்களுக்கு வெக்கமாயில்ல" தங்கநாடாச்சி மிஸ்சின் ஆக்ரோசமான குரல். பம்மியபடி விலகி ஓடினர் நண்பர்கள்.

அணைந்து விடுவேன் என்று பயம் காட்டிக்கொண்டிருந்த விளக்கில் விழுந்து உயிர் விட்டுக் கொண்டிருந்த விட்டில் பூச்சிகளையே வெறித்துக்கொண்டிருந்தான் மூர்த்தி. அவன் கண்முன் உயிரோடு அந்த கிழவி அழுகி கொண்டிருந்தாள். அருகில் படுத்திருந்த ஸ்டீபன் எதோ கனவு கண்டு பெண்ணை போல் வெக்கப்பட்டு கொண்டிருந்தான்.

இரவு முழுவதும் புரண்டு கொண்டிருந்தவன் ஆதவன் உதயமாகுமுன் உதயாவின் முன் சென்று நின்றான்.

"உதயா என் கூட வா"

"எங்கடா"

"வா, சொல்றேன்"

"டேய், இருங்கடா, நானும் வரேன்" கை பிடித்து இழுத்து செல்லும் அவன் பின்னால் ஸ்டீபனும் ஓடுகிறான்.

"இந்த பாட்டியை பாருங்கடா பாவமாயில்ல" குளிரில் தெரு நாயோடு நடுங்கி கொண்டிருந்தவளின் முன் மண்டியிட செய்தான். புழு தின்று கொண்டிருந்த காலில் துணி சுத்தியிருந்தாலும் அதன் வெளியிலும் புழுக்கள் செத்துக்கிடந்தன.

"வாங்க நாம சுத்தம் பண்ணுவோம்". உதயாவிற்கு இது புதிது. ஏழைகள் என்றால் எட்டி நின்று பார்த்ததோடு சரி, அவர்களோடு பழகுவது என்பது கனவில் கூட நடவா விஷயம். சற்றே ஒதுங்கி நின்று கொண்டாள். கண்களை சுருக்கி ஒருவித அவஸ்தையோடு நடப்பவைகளை கவனிக்கலானாள்.

"பாட்டி"

சலனமில்லாமல் சுருண்டிருந்த பாட்டியை சற்று நேரம் பார்த்திருந்த ஸ்டீபன் ஓடிச் சென்று ஒரு கையில் டீயும், மறு கையில் பன்னுமாய் திரும்பி வந்தான். கிழவியின் அருகிலமர்ந்து அவளை நெருக்கமாய் அணைத்தவாறே டீயை கையளித்தான்.

"பாட்டி, உங்க புண்ணை கொஞ்சம் துடைச்சி விடுறோம், வலிக்கும், பொறுத்துக்கோங்க"

கையோடு கொண்டு வந்த டெட்டால், பஞ்சு இத்யாதிகளால் சுத்தம் செய்ய ஆரம்பித்த மூர்த்தியையும், கிழவியை அணைத்திருந்த ஸ்டீபனையும் வைத்த கண் எடுக்காமல் நோக்கி கொண்டிருந்தவள் நண்பனுக்கு தன்னுதவி தேவையோ என்ற எண்ணம் மனதில் தாக்க புழுக்கள் நெளிந்து கொண்டிருந்த அந்த குச்சி காலை மெதுவாய் பற்றலானாள்.

மெல்ல மெல்ல கிழக்கு வெளுக்க ஆரம்பித்தது. நண்பர்களும் ஓன்று கூட ஆரம்பித்தனர். தூரத்தில் தங்கநாடாச்சி மிஸ்சின் உதடு நடப்பவைகளுக்கும் தனக்கும் சமந்தமில்லாததுபோல் ஒரு மெல்லிய புன்னகையை சிதற விட்டுக் கொண்டிருந்தது. பூமி சுழற்சியின் அந்த ஒரு தருணம் இந்த நண்பர்களின் வாழ்வை புரட்டிப் போட்டிருந்தது. மனிதம் இங்கு பிறந்தது. பற்றியெரியும் நெருப்பில் தெளிக்கப்படும் தண்ணீர்த் துளிகள் போல இவர்களின் நட்பில் பிறர் துன்பங்களும் தூற்றல்களும் ஆவியாக துவங்கின.

No comments:

Post a Comment