Tuesday 5 February 2013

முதல் ஸ்பரிசம்...!

இது உனக்கும் எனக்குமான
முதல் ஸ்பரிசம்…!

உன்னை என்னிடத்தில்
கையளித்தவன் முகத்தை பாரேன்…
தான் ஆண்மகனென்று நிரூபித்த திமிர்…
ஒற்றை கண்ணடித்து
என்னை பரவசமாய் பார்க்கிறான்…!

உன் பிஞ்சு தீண்டல்,
உன்னை பதியம் செய்தவனின் செல்ல சீண்டல்
இரண்டும் சேர்ந்து
உலகம் மறக்க வைக்கிறது என்னை…!

நம்மை தவிர
நம்மை சுற்றி இருந்தவர்கள்
மாயமாய் மறைகிறார்கள்…!

உன் பிஞ்சு விரல் பற்றுகிறேன் ஆசையாய்...
அதே நேரம் ஈரம் உணர்கிறேன் நெற்றியில்…!

உன்னை அணைத்த நான்...
நம்மை அணைத்த அவன்...
உன்னோடு அவன் மார் சாயும் போது
முதுகில் படர்கிறது எனக்கான நிம்மதி…!

எத்தனை ஜென்மம் காத்திருந்தேனோ
உன் பிஞ்சு முகம் காண..!

உன்னை முத்தமிட மனம் தவிக்கிறது,
என் முரட்டு உதடுகள்
உன்னை காயப்படுத்தி விடுமோயென
தயக்கம் எட்டிப்பார்க்கும் முன்
என்னவனின் முரட்டு மீசை
உன்னை அழுத்தமாய் கொஞ்சத் துவங்குகிறது…!

சட்டென என்னுள் எட்டிப்பார்த்தது பொறாமையா?
வெடுக்கென அவன் தலை மயிர் பற்றி இழுக்கிறேன்...!

அப்படியே சாய்ந்து
என் கழுத்திலும் முத்தமிடுகிறான்…
இந்த நிமிடம், இந்த நொடி,
அவனின் காதல், அவனின் காதல் பரிசாய் நீ...!

அன்பு மகளே... உணர்ந்துகொள்,
இது காமமில்லை, காமம் தாண்டிய பந்தமடி நீ...
சுவாசித்துக்கொள்...
நமக்கான பந்தம் இதுதானென்று...!

எங்களின் காற்றுப் புகா இடைவெளிக்குள்
புகுந்து விட்டவள் நீ…
இன்னும் இன்னும் எங்கள் பந்தம்
ஈர்த்துக் கொள்ள காந்த விசையாய் ஜனித்தவள் நீ…!

கட்டுக்கடங்கா ஆசையோடு
களைத்திருக்கும் கண்களால் உன்னையே
பருகி கொண்டிருக்கிறேன் நான்…
நீயோ, என்னிடத்தில் சேர்ந்து விட்டேனென
நிம்மதியாய் ஒரு செல்ல கொட்டாவி விடுகிறாய்...!

என் உள்ளங்கை பற்றி இதமாய் அழுத்துகிறான்
உன்னை விதைத்தவன்...
அப்படியே உன் வாயில் வழிந்த எச்சில் தொட்டு
ரசித்து சுவைக்கிறான் திருடன்…!

உன்னைக் காட்டி நான் அவனை தவிர்ப்பதும்..
உன்னை கொஞ்சி அவன் என்னை வெறுப்பேத்துவதும்
தொடரும் நிகழ்வுகளாய் என்றென்றும்...!

செல்ல கோபங்களும் போலி முறைப்புகளும்
இனி வழிநடத்திச் செல்லட்டும்
நம் வாழ்க்கை சுவாரசியங்களை...!

No comments:

Post a Comment