Thursday 15 January 2015

பொங்கலோ பொங்கல்




வீட்ல பண்டிகைகள்ன்னு கொண்டாடி வருசகணக்கா ஆகிடுச்சு. ஏன் எதுக்குன்னு காரணங்கள் தேடிட்டு இருக்காம, அப்படி அமைஞ்சு போய்டுச்சுன்னே வச்சுக்கலாம். சின்ன வயசுல அவ்வளவு உற்சாகமா கொண்டாடுவோம். சொந்தம் பந்தம்னு எல்லாரும் எங்க வீட்ல தான் கூடுவாங்க. தீபாவளினா சின்னவங்க எல்லாரும் விடிய விடிய வெடி போட்டுட்டு இருப்போம். பெரியவங்க தீபாவளி பலகாரத் தயாரிப்புல ரெண்டு மூணு நாள் முன்னாடியே மூழ்கிடுவாங்க. முறுக்கு, அதிரசம், சீடை, உன்னியப்பம், முந்திரிகொத்து, போளி, லட்டு, மிக்சர், சிப்ஸ், பூந்தி, காரச்சேவு, தேன்குழல், ஜாங்கிரி, அல்வா, கேசரின்னு முடிவே இல்லாம லிஸ்ட் நீளும். அதுவும் கடைசி நாள் வடைகள், பாயசங்கள்ன்னு அதுலயே பல வகை வைப்பாங்க.

அதுவே பொங்கல்னா முந்தினநாளே புது ட்ரெஸ் எடுத்து ரெடியா வச்சுட்டு, கைல, கால்ல மருதாணி வச்சு அலங்கரிக்க ஆரம்பிப்போம். புது ட்ரெஸ் கண்டிப்பா ஒரு பாவாடை சட்டையா தான் இருக்கும். நாலு வருஷம் நானும் தாவணி போட்ட நியாபகம். பசங்க, எவ்வளவு குட்டியா இருந்தாலும் மல்லு வெட்டி மைனர் கெட்டப் தான். மஞ்சள் குலை, கரும்பு, காய்கறி, கிழங்கு வகைகள், பழங்கள் மண் பானை, பூஜை சாமான்ன்னு வீடே தெய்வீகமா இருக்கும். ஆனா அதுல ஒரு சிக்கல் உண்டு, காலைல நாலரைனா தண்ணி தெளிச்சு எழுப்பி விட்ருவாங்க. அப்போ தானே குளிச்சு முடிச்சு ரெடியாக முடியும். வெந்நீர் வேணும்னு அடம்பிடிச்சாலும் கிடைக்காது. அலேக்கா தூக்கிட்டு போய் மோட்டார் போட்டு புது தண்ணி புடிச்சு, அந்த தண்ணி தொட்டிக்குள்ள போட்டுட்டு வந்துடுவாங்க. வெடவெடன்னு வெறயல் கொஞ்ச நேரத்துல பழகிடும். அப்புறம் படபடன்னு ரெடியாகி, சூரியன் எட்டிப் பாக்குறப்ப பொங்கப் பானை பொங்கி அதை வரவேற்கும்.

நமக்கு குலவை எல்லாம் விட்டு பழக்கம் இல்ல, தம்பியும் அம்மாவும் விடுவாங்க. நாங்க எல்லாம் பொங்கலோ பொங்கல்ன்னு கோரஸ் பார்டிங்க. பொங்கல் பொங்கின உடனே அதுக்குள்ள சர்க்கரை தட்டுற பொறுப்பு என்னுது. தம்பி நெய் டப்பாவ கைப்பற்றிருவான். பக்கத்து வீட்டு பசங்க முந்திரி, கிஸ்மிஸ்ன்னு ஆளுக்கொரு தீனியை கைப்பற்றி உள்ள போடுவோம். இதுல நாலு பக்கமும் விறகு வச்சு தீ மூட்ட நாலு கைபுள்ளங்க வேற இருப்பாங்க. பொங்கல் நல்லா வெந்து, பதத்துக்கு வந்ததும் சுட சுட தலை வாழை இலைல வச்சு சூரியனுக்கு படைப்போம். கூடவே அஞ்சாறு வாழை இலை துண்டுல பொங்கல் எடுத்து வச்சு காக்காக்கும் வைப்போம். அந்த காலைலயும் காக்காங்க வரும்னா பாத்துக்கோங்களேன். இப்போ உள்ள காக்காய்ங்க சோம்பேறி போல... வீட்ல ஆறரைக்கு எழும்பி லைட்ட போட்டா ஏண்டி எங்கள எழுப்பி விடுறன்னு மொறைக்குதுங்க இந்த பின்ஞ்சஸ்...

அன்னிக்கி முழுக்க கரும்பு கடிச்சுட்டு, பொங்கல் தின்னுட்டு, கூடவே செய்து வச்ச எல்லா தின்பண்டங்களையும் பிடிச்சதா பாத்து பொறுக்கி பொறுக்கி திங்குறதுலயே வயிறு நிறைஞ்சிடும். அப்புறம் மதியம் ஆனா பருப்பு, சாம்பார், ரசம், மோர் வச்சு கூடவே அவியல், தொவரம், ஊறுகான்னு ஒரு பத்து கூட்டு வகையோட சாப்பாடு ரெடியா இருக்கும். அது மட்டுமா, சேமியா பாயாசம், அடை பாயாசம், பாசிப் பருப்பு பாயாசம்னு வகை வகையா பாயாசம் வேற.

நல்லா திம்போம், ஓடி புடிச்சு விளையாடுவோம், மறுபடியும் திம்போம், அப்பப்ப அலுப்பு தீர குட்டி குட்டி சண்டை, பட்டு பாவாடை, கொலுசு சத்தம் சகிதம் அது ஒரு சங்கீத நாளா இருக்கும். அம்மா தோள் கட்டி கிடக்குறதும், அப்பா கழுத்தை பிடித்து தொங்குறதும் தனி சுகம்.

சமீபத்துல தீபாவளி நேரத்துல தான் நான் முறுக்கு சுட்டேன் (சொன்னா நம்பணும், ஒரே ஒரு முறுக்கு, சுத்தினேன், ஆனா நல்லா வரலன்னு பிச்சு போட்டுட்டேன்). அப்புறம் அடுப்பு பக்கத்துல கூட போனதில்ல. இன்னிக்கி காலைல சோம்பலா தான் விடிஞ்சுது. கார்த்திக் தான் கூப்பிட்டு பொங்கல் வைக்கணும், போய் ரெடியாகிட்டு வான்னு சொன்னார். கார்த்திக் சென்னைல பொங்கல் பொங்க, நான் இங்க இருந்து கேட்டுட்டு தான் இருந்தேன். அப்புறம் மறுபடியும் தூக்கம்.

பத்தரை மணிக்கு அப்பா ரெடி ஆகிட்டியான்னு கேக்க, என்னப்பா விசயம்னு கேட்டேன். ஹோம்-ல போய் பசங்க கூட பொங்கல் வைக்கப் போறேன்னு நீ தானே சொன்னன்னு சொன்னதும், ஆமால, அப்படின்னு பதறி, அஞ்சே நிமிசத்துல வெளில வந்து அப்பா கூடவும் தம்பி கூடவும் வண்டியில ஏறிகிட்டேன்.

நாங்க ஹோம்க்கு போய் சேர்ரப்ப மணி பதினொண்ணே கால் ஆகிடுச்சு. நாங்க போனதும் அந்த ஐயா வாங்க வாங்கன்னு வாசல்லயே நின்னு கூப்பிட்டாங்க. லேட் ஆகிடுச்சுன்னு சாரி கேட்டுட்டு உள்ள எட்டிப் பாத்தேன். பிள்ளைங்க எல்லாம் சிரிச்சாங்க. ஆனாலும் ஏதோ ஒரு அந்நியத்தன்மை இருந்த மாதிரி ஒரு பீல். பின்ன, ரெண்டு வருசமா அந்த பக்கமே எட்டிப் பாக்கலனா?

மடமடன்னு சாமான் எல்லாம் கீழ இறக்கி வச்சு, பிள்ளைங்களுக்கு புது ட்ரெஸ் எடுத்து என்கிட்ட தந்து தம்பி குடுக்க சொன்னான். நிஜமாவே மனசுக்குள்ள கில்டி பீலிங்க்ஸ். இதே பசங்களுக்கு பொங்கல்னா என் காசுல தான் கரும்பு, பொங்கல் சாமான், பழங்கள்ன்னு வாங்கிட்டு போவேன். ட்ரெஸ் அப்பா எடுத்து தந்துடுவாங்க. ஆனா இப்போ நான் எதுவுமே செய்யல, ஆனா என்னை போய் அவங்க கிட்ட குடுக்க சொன்னாங்க. தயக்கமா ஆரம்பிச்சு போக போக கொஞ்சம் சகஜமாக ஆரம்பிச்சுட்டேன். தேங்க்ஸ் அக்கான்னு சொன்ன ஒரு பொடியன நன்றின்னு சொல்லுடான்னு சொன்னேன். நீ எப்பவும் தேங்க்ஸ் தான சொல்லுவன்னு கிண்டல் பண்றான். அட, பார்ரா...ன்னு சிரிக்க ஆரம்பிச்சவ தான். அப்புறம் என்ன, அவங்களோட ஒன்னுமண்ணா ஈசியா கலக்க ஆரம்பிச்சுட்டேன்.

உண்மைய சொல்லணும்னா எல்லார் பெயரும் மறந்த மாதிரி ஆகிடுச்சு. எத்தனை பேர்ன்னு எண்ணி பாத்தேன், பத்து பேர் தான் இருந்தாங்க. மூணு பேர் எங்கன்னு கேட்டா, ஒருத்திக்கு கல்யாணம் ஆகிடுச்சாம், ஒருத்தன் ஹாஸ்டல்ல தங்கி சிஸ்த் படிக்குறான், அங்க பொங்கல் கொண்டாடணும்னு அவனை விடலையாம், இன்னொரு குட்டி பாப்பா, அடாப்ட் பண்ணிட்டு போய்ட்டாங்களாம்.

ஒவ்வொருத்தரையும் கூப்பிட்டு தம்பி சாக்லேட் குடுத்துட்டு இருந்தான். பக்கி, தனியா வாங்கிட்டு வந்துருக்கான் பாருங்க, கிர்ர்ர்ர்.... ஒவ்வொருத்தர் கிட்டயும் உன் பேர் என்ன, என்ன படிக்குறன்னு கேட்டுட்டு இருந்தப்ப, நான் அத எல்லாம் கொஞ்சம் ரீ-கால் பண்ண ட்ரை பண்ணிட்டு இருந்தேன். முதல் வேலையா அவங்க பெயரை எல்லாம் நியாபகப் படுத்தி எழுதி வச்சிக்கணும். எப்படியும் அடுத்த தடவ போகும் போது பெயர் சொல்லித் தான் கூப்பிடணும்.

நட்டநடு வெயில்ல நாலு பக்கம் செங்கல் எடுத்து வச்சு, பானைக்கு மஞ்சளும் குங்குமமும் பூசி, அடுப்பு மூட்டி, பொங்கல் பொங்குறப்ப மணி பனிரெண்டரை. பெரிய பானையா இருந்ததால பொங்கலே மதியம் போதும் போதும்னு ஆகிடுச்சு. அவ்வளவு வயிறு முட்ட சாப்ட்டாச்சு.அப்புறம் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு, மதிய சாப்பாடு ரெண்டரைக்கு சாப்ட்டோம். சமையல் கூடத்துக்குள்ள நான் போகல, ஆனா தம்பி, அங்க இருந்த பெரியம்மா கூட சேர்ந்து சமையல்காரனாகிட்டான். அவன் இங்க வர்றது ரெண்டாவது தடவ தான். ஆனாலும் என்னமோ ரொம்ப தெரிஞ்சவன் மாதிரி சுத்திட்டு இருந்தது எனக்கு பொறாமையா இருந்துச்சு.

ஒரு வழியா போயிட்டு வரோம்டான்னு கைகாட்டிட்டு வண்டியில ஏறினோம். மனசு கொஞ்சம் ரிலாக்ஸ் ஆன மாதிரி பீலிங். ஆனாலும் பழைய சந்தோசங்கள் இன்னும் திருப்பி எடுக்க வேண்டியது நிறைய இருக்குன்னு புரிஞ்சுது. அடுத்த வருஷம், காலைல நாலரை மணிக்கே தண்ணி தொளிச்சு எழுப்பி விட்டு என்னை பொங்கல் வைக்க விரட்டணும். மண் பானை, இயற்கை காற்று, இளம் சூரியன்னு அனுபவிச்சே ஆகணும்.... கூடவே வயல் வரப்புல தழைய தழைய புடவை கட்டி நடந்து போற சுகத்த அனுபவிக்கணும்....



பொங்கலோ பொங்கல்....





7 comments:

  1. வணக்கம்
    அருமையான பகிர்வு. இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள் த.ம 2
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. சொல்லிச் சென்ற விதம் நேரடியாக நிகழ்வுகளைப்
    பார்ப்பது போன்ற உணர்வைத் தந்தது
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    இனிய பொங்கல் திரு நாள் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. பொங்கல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. இனிமை...

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  5. அருமையான பதிவு. தங்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. இனிய நினைவுகள்.

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

    ReplyDelete