Saturday 16 May 2015

கன்னி பூஜை - 2



நேத்து ஒரு முக்கியமான நாள். ஆமா, கணேசன் மாமாவுக்கு கன்னி பூஜை.

வழக்கமா பூஜை எங்களோட பூர்வீக வீட்ல தான் நடக்கும். ஆனா இந்த வருஷம் அந்த வீட்டை புதுபிச்சு வாடகைக்கு குடுத்துட்டதால எங்க வச்சு நடக்க போகுதுன்னு யோசிச்சுகிட்டே இருந்தேன். ஆனா யார் கிட்டயும் கேக்கல.

சாயங்காலம் ஆறு மணிக்கு கிளம்புறேன்னு சொல்லிட்டு நல்லா தூங்கிட்டேன். பட்டுன்னு முழிப்பு வந்தப்ப மணி ஏழு. மாமாவ பாக்கப் போறோம், இப்படியே கிளம்பிட்டா நல்லாயிருக்காதேன்னு குளிச்சி முடிச்சி கிளம்ப ஏழரை ஆகிடுச்சு.

என்ன ஒரு அதிசயம்... கன்னி பூஜை மூத்த மாமா வீட்ல வச்சு. மூத்த மாமா குடும்பத்துல எல்லாருக்கும் பெரியவர். சமீபத்துல ஹார்ட் அட்டாக் வந்து, அதி அற்புதமா பெரிய போராட்டத்தோட மீண்டவர். அதனாலதானோ என்னவோ மாமி மனசு மாறி இந்த பூஜைக்கு சம்மதிச்சிருக்கணும்.

இதுல என்ன அதிசயம்னு கேக்குறீங்களா? மாமி எப்பவுமே எங்க குடும்பத்தோட ஒட்ட மாட்டாங்க. யார் கிட்டயும் பேசவும் மாட்டாங்க. யார் வீட்டுக்கும் வரவும் மாட்டாங்க. வருசா வருஷம் கன்னி பூஜை நடந்தா மட்டும் எதோ சக்தி அவங்கள பூஜை நடக்குற இடத்துக்கு இழுத்துட்டு வந்துடும்.

ஆனா இந்த வருஷம் அந்த பிரச்சனையே இல்லையே. பூஜையே அவங்க வீட்ல தானே.

நான் அங்க போனப்ப வாசல்ல பிள்ளைங்க பாண்டி விளையாடிகிட்டு இருந்தாங்க. இன்னும் கொஞ்ச பேர் கண்ணாமூச்சி விளையாட, யார் பின்னால ஒளியலாம்ன்னு இடம் தேடிட்டு இருந்தாங்க.

வாசல்லயே மாமி உக்காந்துட்டு இருந்தாங்க. என்னைக் கண்டதும், சொன்ன முதல் வார்த்தை, “வாமா, சாப்டுறியா”ன்னு தான்.

நாம தான், சாப்பாடுனாலே எங்க சாப்பாடு, எங்க சாப்பாடுன்னு கேக்குற ஆளாச்சே, எல்லாரும் சாப்பிட்டாச்சான்னு கேட்டேன். இனி தான் எல்லாரும் சாப்பிடப் போறாங்க. நீயும் போய் சேர்ந்துக்கோன்னு சொன்னதும், அப்ப நிலா சோறு இல்லையான்னு சித்தி ஒருத்தங்கள பாத்துக் கேட்டேன்.

அதெல்லாம், உங்க அம்மா இருக்குறப்ப எல்லாருக்கும் வரசி குடுப்பா. இப்ப யாருக்கு அந்த பொறுமை இருக்குன்னு கேட்டதும், ஏன் நான் இல்லையா, சாப்பாட்ட எடுத்துட்டு வாங்க, இன்னிக்கி என் கையால தான் எல்லாருக்கும் சாப்பாடுன்னு சொன்னேன்.

விளையாடிட்டு இருந்த பசங்க எல்லாம் போட்டது போட்ட படி இருக்க, என் பக்கத்துல ஓடி வந்துட்டாங்க. ஒருத்தன் சட்டுன்னு என் கால்ல விழுந்து, தெய்வமே, நாங்களே சாப்ட்டுக்குறோம், எங்கள கொன்னுராதன்னு கையெடுத்து கும்புடுறான். உடனே கும்பலா எல்லாரும், ஆமா தெய்வமே, எங்கள விட்ருங்கன்னு ஒரே கோரஸ்...

கிர்ர்ர்ர்... இதுக்காகவே ஒருத்தரையும் விடப் போறதில்லன்னு மாமி கிட்ட, மாமி, வாங்க கிட்சனுக்குள்ள போவோம். இன்னிக்கி எல்லாருக்கும் என் கையால தான் சாப்பாடுன்னு சொல்லி விடு விடுன்னு கிட்சனுக்குள்ள போய்ட்டேன்.

சொல்ல மறந்துட்டேனே, இங்க யாருக்குமே நம்மள தொரத்துரவங்க வீட்ல இருக்கோம்ங்குற எண்ணமே இல்ல. எல்லாரும் என்னவோ அவங்கவங்க வீடு மாதிரி சகஜமா இருக்காங்க. ஏன், மாமியே கூட வாசல்லயே நின்னு, வாங்கன்னு கூப்ட்டுட்டு இருக்காங்க. மாமி இருக்காங்களேன்னு கூட பாக்காம அவங்கள இடிச்சுட்டு கண்ணாமூச்சி விளையாடுற பசங்க ஓடிட்டு இருக்காங்க. ஏன், நானே கொஞ்சமும் தயங்கல, உரிமைய கைல எடுத்துக்கிட்டேன்.

சரி, விஷயத்துக்கு வருவோம், கிட்சனுக்குள்ள புகுந்த நான், முதல்ல சோறு எங்க இருக்குன்னு கேட்டேன். அது ஒரு பெரிய பானைல இருந்துச்சு. ஒரு ஆப்பை கொண்டு வாங்க மாமின்னு சொல்லி, ஆப்பைய வாங்கி, சோத்தை எடுத்து ஒரு குத்துப்போனில போட்டு, என்னவெல்லாம் குழம்பு இருக்குன்னு கேட்டேன். பருப்பு, சாம்பார், ரசம் மூணும் இருக்குன்னு சொன்னாங்க. பருப்புக் குழம்பு வேணாம், மீதி ரெண்டையும் கொண்டு வாங்கன்னு சொல்லி, அதையும் வாங்கி சோத்துக்குள்ள விட்டேன்.

நாரத்தங்கா தீயல் பாத்தாலே நல்லா இருந்துச்சு. செம மணம். “தீயலுக்கு கருப்பட்டி போட்டீங்களோ மாமி”ன்னு கேட்டதும், “ஆமா, இல்லனா ரொம்ப கசக்கும்ல”ன்னு மாமி சொல்லிட்டே அவியலயும் எடுத்து தந்தாங்க. பப்படம் எங்கன்னு கேட்டா, இளைய மாமி அப்ப தான் அடுப்ப படபடன்னு பத்த வைக்குறாங்க. பொறிச்சு வச்சத எல்லாம் பிள்ளைங்க தின்னுட்டாங்க, இந்தா இப்ப பொறிச்சுடுறேன்னு சமாதானம் வேற.

சரி, பப்படம் மெதுவா ரெடி ஆகட்டும்னு நான் அவியலயும் நாரத்தங்கா தீயலயும் சோத்துக்குள்ள கொட்டி, கைய நல்லா கழுவிட்டு, சோத்துக்குள்ள விட்டு பிசைய ஆரம்பிச்சேன். பதமா பிசைஞ்சு ஒரு பெரிய உருண்டை உருட்டி நிமிரவும், கால்ல விழுந்தானே அந்த பக்கி முதல் ஆளா கைய நீட்டிகிட்டு நிக்கான். முதல் உருண்டை அவனுக்கு தான் வேணுமாம். “இன்னும் பப்படம் போடலல”ன்னு நான் சொன்னதுக்கு, “சும்மா குடு அண்ணி, உன் கையால எது குடுத்தாலும் நல்லா தான் இருக்கும்”னு கண்ணடிக்குறான். கிர்ர்ர்ர்... இன்னொரு சித்தி அவன் தலைய புடிச்சு உலுப்பி, “உனக்கு அவள கிண்டல் பண்ணலனா தூக்கம் வராதாலே”ன்னு கேக்க, எல்லாரும் ஒரே சிரிப்பு. நான் அந்த உருண்டைய அவனுக்கே குடுத்துட்டேன். வாங்கிட்டு “தேங்க்ஸ் அண்ணி”ன்னு ஓடிட்டான்.

அப்புறம் பப்படம் போட்டு வரசி, எல்லாருக்கும் உருண்டை பிடிச்சி குடுக்க ஆரம்பிச்சேன். கிட்டத்தட்ட மூணு நேரம் சோறு, கறி, கூட்டுன்னு எல்லாத்தையும் போட்டு வரசி வரசி குடுக்க குடுக்க தீந்துகிட்டே இருக்கு. அப்பா, மாமாக்கள், மாமிக்கள், சித்திங்க, சித்தப்பாங்க, பசங்கன்னு எல்லாரும் சாப்பிட்டாச்சு. தம்பி அந்த நேரம் அங்க இல்ல, அவன் மட்டும் தப்பிச்சுட்டான். எல்லாம் சரி, யாருலே எனக்கு சோறு வரசி தருவா? எல்லாம் அப்பப்ப ஒரு உருண்டை நானே சாப்ட்டுகிட்டேன். ரெண்டாவது மாமா என் கைல ஆயிரம் ரூபாய குடுத்து, வச்சுக்கோன்னு சொன்னாங்க. எதுக்கு மாமான்னு கேட்டேன், சந்தோசமா இருக்கேண்டான்னு தலைய தடவுனாங்க.

அதுக்குள்ள ரூபாய படக்குன்னு பிடிங்கிட்டு போய்டுச்சு ஒரு பக்கி. கூட்டத்துக்குள்ள யாருன்னு பாக்குறதுக்குள்ள ஒரு சலசலப்பு. நேரம் ஆச்சு, போய் படயல போடுங்கன்னு.

நான் ஹால்ல தான் இருந்தேன். என்னென்ன படைச்சாங்கனு பாக்கல. கண்டிப்பா கக்கன் இருக்கும். அது போக பலகாரம், பாயாசம், பஞ்சாமிர்தம், பானகாரம், புட்டாமிர்தம் முக்கியம். அப்புறம் இந்த அவல், பொறி, பழ வகைகள், இளநின்னு பெரிய லிஸ்ட் இருக்கும். எல்லாரும் அவங்கவங்க வேலைல மூழ்கிப் போக நான் கொஞ்சம் ஹால்ல உக்காந்து சூப்பர் சிங்கர் பாக்க ஆரம்பிச்சேன்.

மணி பதினொண்ணு. திடீர்னு சத்தம் கேட்டுச்சு. படையல் ரெடி ஆகிட்டு இருக்கும் போதே மாமி மேல கணேசன் மாமா வந்துட்டாங்க. மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க, கிட்சனுக்குள்ள வச்சே ஓ-ன்னு அழ ஆரம்பிச்சுட்டாங்க. கை கால் எல்லாம் வெட்டி வெட்டி இழுக்குது. தரையோட தரையா கிடந்து அங்கயும் இங்கயுமா தவழ்றாங்க. கையாலயே எல்லாரையும் ஆவேசமா விலக்கி விட்டுட்டு, பிடிக்க போனவங்கள எல்லாம் பிடிச்சு தள்ளி விடுறாங்க. அப்புறம் அவங்களே தவழ்ந்து தவழ்ந்து படையல் இருந்த இடத்துக்கு போய்ட்டாங்க.

படையல் இருந்த இடத்துக்கு போனதும், அங்க தீபாராதனை காட்ட மூணு இடத்துல சூடம் கொளுத்தி வச்சிருந்தாங்க. அத அப்படியே கைல எடுத்து அவங்களே ஆக்ரோசமா படையலுக்கு சுத்தி காட்டினாங்க. அப்படியே சூடத்த கீழ வச்சு, அது மேல கமந்து நின்னு, அந்த வாசத்த சுவாசிச்சாங்க. அப்புறம் கக்கன் வச்சிருந்த கிண்ணிய எடுத்து நல்லா மூச்சை இழுத்து விட்டு வாசம் எடுத்தாங்க. அப்புறம் பலகாரம், பாயாசம், பழங்கள்ன்னு ஒண்ணொண்ணா வாசம் பிடிச்சாங்க. கடைசியா அங்க இருந்த மல்லிகைப் பூவ எடுத்து நெஞ்சோட அணைச்சு வச்சு, கொஞ்ச நேரம் இழுத்து இழுத்து வாசம் பிடிச்சாங்க. அப்படி அவங்க செய்தப்ப ஒரு ஆக்ரோசம் தெரிஞ்சுது. இதெல்லாம் என்னோடதுன்னு ஒரு ஆர்வம் தெரிஞ்சுது. இடைல இடைல ஹக் ஹக் ன்னு விக்கலோட ஒரு சிரிப்பு வேற. கண்ண மூடிட்டே, எல்லாத்தையும் லயிச்சு, ரசிச்சு, அனுபவிச்சாங்க.

இத எல்லாம் பாத்துட்டு ரொம்ப பொடிசுங்க எல்லாம் ஓ-ன்னு பயத்துல அழ ஆரம்பிச்சுட்டாங்க. ஏலே, நான் வந்துருக்கேன், அழறத நிறுத்துன்னு முதல் வார்த்தை. கப்புன்னு எல்லாம் அழுகைய நிறுத்திட்டு மலங்க மலங்க முளிக்குதுங்க.

எல்லாரும் கூடி இருந்த கூட்டத்த விலக்கி யாரையோ தேடினாங்க. நானும் அக்காவும் தள்ளி நின்னு எட்டிப் பாத்துட்டு இருந்தோம். முதல்ல அக்காவ கைக்காட்டி பக்கத்துல கூப்ட்டாங்க.

அக்கா போனதும், அவளுக்கு வாய் நிறைய கக்கன் ஊட்டி, தலை நிறைய எண்ணெய குளிர குளிர வச்சு, பூ எடுத்து குடுத்து, கூடவே கொஞ்சம் பஞ்சாமிர்தம், பலகாரம், பாயாசம் எல்லாம் வழிய வழிய கைல அமுக்கி, தலைல கை வச்சுட்டே, இருபத்தி ஒன்பது வயசுல தான் இவளுக்கு கல்யாணம் நடக்கும், அதுவரைக்கும் புள்ளைய யாரும் தொல்லைப் பண்ணக் கூடாது, வார்த்தையால சுடக் கூடாதுன்னு எல்லாரையும் பாத்து கண்ண உருட்டிட்டே சொன்னாங்க. அப்படினா இன்னும் மூணு வருசத்துக்கு பேச்சிலர் லைப் என்ஜாய்க்கா ன்னு நான் சத்தமாவே சொன்னேன். உடனே, நீ இங்க வான்னு கூப்ட்டாங்க.

பக்கத்துல போனேன். படையல்ல அவ்வளவு ஐட்டம்ஸ் இருக்கு, எனக்கு ஒரே ஒரு மாம்பழத்த கைல குடுத்து, கக்கன் ஊட்டி விட்டு, தலைல எண்ணெய் வச்சு, உனக்கு நான் வேலை தருவேன். பறந்து போய்ட்டே இரு. சந்தோசமா இருன்னு சொல்லிட்டு, கொஞ்ச நேரம் அமைதியா இருந்தாங்க. சரி, அவ்வளவு தான்னு நான் எழுந்தேன். படக்குன்னு கைய புடிச்சு, அழுதுட்டே “ரொம்ப கவனமா இரு மக்கா”ன்னு சொன்னாங்க. அதெல்லாம் நான் இருப்பேன்னு சொன்னதும், கூட்டத்த பாத்து, புள்ளைய கலங்க விட்ராதீங்கலே, அது அழுதா எனக்கு தாங்காதுன்னு சொன்னாங்க. இப்ப யாருமே அவள அழ வைக்கலன்னு மாமா சொன்னதும், “அழ வைச்சிராதன்னு தானாலே சொன்னேன்”னாங்க. எனக்கு ரொம்ப ஆச்சர்யமா இருந்துச்சு. படையல்ல அத்தன பொருள் இருந்தும், ஒரே ஒரு மாம்பழத்த மட்டும் எனக்கு குடுக்க வேண்டிய அவசியம் என்ன? அப்படினா அம்மா என்கிட்ட இருக்கான்னு தானே அர்த்தம்.

அப்புறமா ஒவ்வொருத்தரயா கூப்பிட்டு ஒவ்வொருத்தருக்கும் ஏதாவது ஒண்ணு சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க. குடி குடின்னு குடிச்சு சீரளியுற மாமாவ பாத்து, அங்க இருந்த தென்னம்பூவ எடுத்து ரெண்டு அடி குடுத்து, உன்ன தாம்லே என்னால மாத்த முடியல, ஆனா உன் புள்ளைங்கள பாத்தியா, நல்லா வருவாங்கலேன்னு சொன்னாங்க. தம்பிய கூப்ட்டப்ப அவன் பொறுமையா பக்கத்துல உக்காந்து, இன்னும் ஏதாவது வேணுமா, அடுத்து நாங்க என்னப் பண்ணணும்னு அக்கறையா விசாரிச்சான். நாங்க சின்ன பசங்க, எங்களுக்கு என்ன பண்ணனும்னு எதுவும் தெரியாது, பெரியவங்க, நீங்க தான் சொல்லிக் குடுக்கணும், கண்டிப்பா கேட்டுக்குறோம்னு சொன்னான். கேக்குறேன் மக்கா, உங்க கிட்ட கேக்காம வேற யார் கிட்ட கேக்கப் போறேன்னு அவனுக்கு கக்கன் ஊட்டி விட்டாங்க.

கடைசியா, அப்பாவையும் மூணாவது மாமாவையும் பாத்த உடனே கட்டிப் பிடிச்சு, உச்சி மோந்து, குடும்பத்து தூணுங்கலேன்னு ஆக்ரோசமா சிரிச்சாங்க.

நான் இருக்கேன் மக்கா உங்களுக்கு எல்லாம். இந்த கொடி வாட எப்பவும் விட மாட்டேன். தெருதெருவா அலைஞ்சேன்லே, இருக்க ஒரு வீடு இல்லாம, எனக்குன்னு ஒரு இடம் மட்டும் தாங்கலே, என்னை இப்படி அலைய விடாதீங்கன்னு சொல்லும் போது கணேசன் மாமா கண்ணு கலங்கிடுச்சு. பசிச்சுதுலே, சரி, என் பழைய இடத்துக்கு போய்டலாம்னு அங்கப் போனேன், அங்க எல்லாரும் புதுசா இருக்காங்கலே, என்ன பண்றதுன்னே தெரியாம தெரு தெருவா அலைஞ்சேன்ன்னு சொன்னாங்க.

கூடவே, பாத்தீங்களாலே, எப்படி இங்கயே வந்துட்டேன்னு. இனி நான் இங்க தாம்லே இருக்கப் போறேன், இந்த இடம் சுத்தமா இல்லலே, சுத்தம் பண்ணி வைங்கன்னு கட்டளை போட்டாங்க. பெரிய மாமாவும் இந்த இடத்த இனி நீயே எடுத்துக்க. நான் எல்லாம் சரி பண்ணி தரேன்னு சொன்னாங்க.

அதுக்குள்ள கணேசன் மாமா ஓன்னு ஒரு சத்தம், வயிறெல்லாம் குளுந்துடுச்சு மக்கா. ரொம்ப சந்தோசமா இருக்கேன். என் மக்கள எல்லாரையும் பாத்துட்டேன். பின்னாலயே வருவேன்லே, உங்களுக்கு எதுவும் ஆக விட மாட்டேன். தனியான்னு எனக்கு எதுவும் செய்ய வேணாம்லே, எல்லாரும் சேர்ந்து கூடி எனக்கு படையல் போடுங்க மக்கான்னு சொல்லிட்டு இளநி, தண்ணின்னு மடக் மடக்னு குடிக்க ஆரம்பிச்சுட்டாங்க. கொஞ்ச நேரத்துலயே வலிப்பு வந்த மாதிரி உடம்ப முறுக்கி, பக்கத்துல சித்தியும் மாமியும் தாங்கி பிடிக்க, அப்படியே பொத்துன்னு கீழ விழுந்தாங்க.

பூஜை எல்லாம் முடிஞ்சு தனியா வந்து உக்காந்தப்ப எனக்கு ஒரு விஷயம் புரிஞ்சுது, ஆன்மாவா இருந்தாலும் அவங்களுக்குன்னு ஒரு இடம் வேணும்னு. கணேசன் மாமா தெருதெருவா இடம் இல்லாம அலைஞ்சேன்னு சொன்னப்ப நான் அழுதுட்டேன். இந்த குலத்தையே கட்டிக்காக்குற மாமாவுக்கு இந்த நிலையான்னு.

அப்புறம், படையல் எல்லாம் எல்லாரும் எடுத்து சாப்பிட்டுட்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தப்ப மணி ஒண்ணு. மனசு சந்தோசமா இருந்தாலும், ஒரு பாரம் அழுத்திட்டே இருக்கு. மாமாவுக்கு ஏதாவது செய்யணும்ன்னு தோணிகிட்டே இருக்கு.


.

3 comments:

  1. padithan neglthan. ganesh mamavukum, amavukum aduthia pravi ilaya? kakan apdina ena?

    ReplyDelete
    Replies
    1. கக்கன்-னா நல்ல முத்தின தேங்காய துருவி, பிழிஞ்சி, பால் எடுத்து பெரிய விரிஞ்ச அண்டாவுல விட்டு கிளருவாங்க. நல்லா சூடானதும், பால் எண்ணெய்யாவும் கக்கனாவும் மாறும். அந்த கக்கன் ரொம்ப டேஸ்டா இருக்கும்.

      மாமாவுக்கும் அம்மாவுக்கும் மறுபிறவி இல்லையான்னு கேட்டா என்னால எப்படி பதில் சொல்ல முடியும்? ஒரு வேளை அவங்க கடமை இன்னும் முடிஞ்சிருக்காது

      Delete