Thursday 13 August 2015

செக்ஸ் கல்வி – எப்படி இருக்கணும்?


லேப்டாப் பார்மட் குடுத்த இடத்துல இருந்து கிடைக்கவே இல்ல. மொபைல்ல பேஸ்புக் வர்றது கடுப்பா இருக்குங்குறதால அதிகமா இன்பாக்ஸ் பக்கம் எட்டிப் பாக்குறது இல்ல. எதேச்சையா இன்னிக்கி பாக்கும் போது மகேஷ் ஒரு லிங்க் குடுத்து, அக்கா இத படிங்கன்னு மெசேஜ் அனுப்பி வச்சிருந்தான்.

லிங்க் கிளிக் பண்ணி என்னன்னு பாத்தா, இந்த வார “வலைச்சரம்”ல என்னைப் பற்றிய அறிமுகம். வலைச்சரத்துல அறிமுகப்படுத்தப்படுறது புதுசு இல்லனாலும் இந்த வாரம் என்னை பற்றி எஸ்.பி.செந்தில் குமார் அண்ணா எழுதியிருந்தது கொஞ்சம் யோசிக்க வச்சது. இதுவரைக்கும் எல்லாருமே என்னோட எழுத்துக்கள பாராட்டியிருந்தாலும் இவர் தான் என்னை துணிவான பெண்னு சொல்லியிருக்கார். பாலியல் கல்வியை ஒரு பக்கம் கொண்டு வரலாமா வேணாமான்னு ஒரு பக்கம் விவாதம் நடந்துகிட்டு இருக்குற நேரத்துல அத நான் அமைதியா செயல்படுத்திட்டு வரேன்னு சொல்லியிருந்தார்.

வழக்கமா என்னோட எழுத்துக்கள் யாரையும் புண்படுத்தாம படிச்சா ஜாலியா சந்தோசமா உணர்ந்துட்டு போய்டணும்ங்குற ரேஞ்ச்க்கு தான் இருக்கும். எந்த புள்ளியில இருந்து என்னோட எழுத்துக்கள் இந்த மாதிரி மாற ஆரம்பிச்சதுன்னு சொல்லத் தெரியல. ஆனா, ஒரு விசயத்துல நான் தெளிவா இருக்கேன். என்னோட பதிவு உணர்சிகள தூண்டுற மாதிரி இருந்துடக் கூடாது, புத்தியை தூண்டுறதா தான் இருக்கணும்னு. நான் இப்படி எழுத என்னோட அம்மா பெரிய இன்ஸ்பிரேசனா இருந்தா. எத்தனை பேருக்கு இப்படி ஒரு அம்மா கிடைப்பான்னு தெரியல. அதனால தான் என்னோட அம்மாவையும், அவ வளர்ப்புல வளர்ந்த என்னையும் உங்க முன்னால நிறுத்தி, உங்கள் குழந்தைகள சுதந்திரமா சிந்திக்க விடுங்கன்னு கேட்டுட்டு இருக்கேன்.

எல்லா குழந்தைகளுமே அவங்கவங்க ப்ரெண்ட்ஸ் மூலமாவோ இல்ல, வீட்ல அம்மா அப்பா தனியா இருக்கும் போதோ பாத்துட்டு தான் தங்களோட உலகம் தவிர்த்து இன்னும் என்னவோ நடக்குதுன்னு புரிய ஆரம்பிக்குறாங்க. அப்படி தான் நான் எய்த் படிக்கும் போது பிரெண்ட் ஒருத்தி குழந்தை எப்படி பிறக்கும் தெரியுமான்னு கேட்டு காதுக்குள்ள குசுகுசுன்னு சில விசயங்கள சொன்னா. அதோட, இந்த விசயத்த பத்தி பசங்க கிட்டயோ இல்ல வேற யார் கிட்டயுமே கேக்க கூடாது, இது அவ்வளவு பெரிய டாப் சீக்ரெட்ங்குற ரேஞ்ச்ல பில்ட் அப் வேற.

அத கேட்ட நிமிசத்துல இருந்து ஒரு மாதிரி அருவெறுப்பு. இப்படி எல்லாம் நடக்குமா, கண்டிப்பா நடக்காது, இந்த புள்ள என்னவோ பொய் சொல்லுதுன்னு தான் திரும்ப திரும்ப மனசுக்குள்ள சொல்லிகிட்டேன். வீட்டுக்கு வந்த உடனே அம்மா கிட்ட ஓடிப் போய் “அம்மா, அம்மா, இந்த மாலதி என்னென்னமோ சொல்றா, அதெல்லாம் தப்பு தான, அப்படி எல்லாம் நடக்காது தான”ன்னு தலையும் இல்லாம வாலும் இல்லாம படபடன்னு பொரிஞ்சு தள்ளிட்டேன்.

“ஏய், ஏய் பொறு, அப்படி அவ என்ன சொன்னா?”ன்னு அம்மா கேட்டதுக்கு அப்புறம் தான் “அம்மா, மாலதி சித்திக்கு கல்யாணம் ஆச்சுல, அவ சொல்றா, பஸ்ட் நைட்ல இப்படி எல்லாம் நடக்கும், அப்ப தான் குழந்தை பிறக்கும்னு. அதெல்லாம் பொய் தான”ன்னு கேட்டுட்டு அம்மா பொய் தான்னு சொல்லணும்னு எதிர்பார்ப்போட அம்மாவையே பாத்துட்டு இருந்தேன்.

அம்மா சிரிச்சுட்டே என் தோள் பிடிச்சு சோபால உக்கார வச்சா. முட்டிப் போட்டு என் முன்னால உக்காந்துட்டு என் கண்ணையே பாத்துட்டு இருந்தா. அப்புறமா, நம்ம வீட்ல கோழி எப்படி முட்டை போடுதுன்னு கேட்டா. சேவல் கொத்தினா தானமா முட்டைப் போடும்ன்னு சொன்னேன். கொஞ்சம் யோசிச்சுட்டு சரி வேற சொல்றேன், மாடு எப்படி சினை பிடிக்கும்?ன்னா. டாக்டர் வந்து ஊசிப் போடுவாங்கன்னேன். க்ளுக்ன்னு சிரிச்சுட்டா.

எனக்கு செம கோபம். “ம்மா, நான் என்ன கேக்குறேன், நீ என்ன சொல்லிட்டு இருக்க, இப்ப எதுக்கு சிரிச்ச”ன்னு. “இல்ல, உனக்கு `புரிய வைக்குற மாதிரியான உதாரணத்த நான் சொல்லலல, அத நினச்சு சிரிச்சேன்னு சொல்லிட்டே, எல்லாத்தையும் விடு. நம்ம வீட்டுல ஆடு எப்படி சேர்த்து விடுவாங்க, கிடா என்னப் பண்ணும்?

அது வரைக்கும் அத எல்லாம் பாத்துருந்தாலும் ஜஸ்ட் லைக் தட், ஆடு சேர்த்து விட்டா தான் குட்டிப் போடும்னு கடந்து போயிருக்கேன். இப்ப தான் யோசிக்க ஆரம்பிச்சேன். அப்ப சேவல் கூட அப்படி தான் பண்ணுதா. எல்லாருமே அப்படி தானா?

“அதே தான், இது தான் இயற்கை. நீ சின்னப் பொண்ணு, இப்போதைக்கு இது தெரிஞ்சுகிட்டா போதும், அதுக்காக சந்தேகம் வரக் கூடாதுன்னு இல்ல, என்ன சந்தேகம்னாலும் அம்மா கிட்ட கேட்டுக்கலாம்” அம்மா தலைய செல்லமா கலைச்சு விட்டுட்டு போய்ட்டா.

அதுக்கப்புறம் அதுக்கான தெளிதல்கள் புரிதல்கள்ன்னு வர ஆரம்பிச்சப்ப, நான் சரியா தான் சிந்திக்குறேனான்னு அம்மா கிட்ட கேட்டுப்பேன். (இந்த காலத்துல இப்படி ஒரு கேள்விய எதிர்கொள்ற அம்மாக்களுக்கு விளக்கம் குடுக்க கஷ்டம் தான், பாவம் கோழிய பக்கட் சிக்கனா தான் பாத்துருப்பாங்க, ஆடு, மாடுனா மட்டன். அவ்வளவு தான். உயிரோட பாக்குறதே அபூர்வம்ங்குரப்ப அத தாண்டி அதுகளோட வாழ்வியல் முறைகள எங்க உத்துப் பாக்குறது?)

“மாடு கூட காளை கூட சேர்ந்தா தான் குட்டிப் போடும், ஆனா நம்ம வீட்ல மட்டும் எப்படி டாக்டர் ஊசி போட்டா மாடு சினையாகுது?” –இந்த கேள்வி எழுந்ததுக்கு பலனா, ஒரு உயிர் உருவாகுரதுக்கு ஆணும் பெண்ணுமாய் ரெண்டு பேரும் இணையுறது காரணம் இல்ல, ஆனா அவங்க உடல்ல இருக்குற சினை முட்டையும், விந்துவும் தான் காரணம்னு புரிஞ்சுது. அப்பவே என்னோட தேடல் விஞ்ஞானம் நோக்கி நகர ஆரம்பிச்சுடுச்சு.

க்ளாஸ்ல எல்லாரும் அப்பவும் பஸ்ட் நைட் பத்தி ஆச்சர்யப்பட்டுட்டு இருக்குற நேரத்துல நான் டெஸ்ட் ட்யூப் பேபி பத்தி சிலாகிச்சுட்டு இருப்பேன்.

அப்ப தான் பக்கத்து வீட்ல ஒரு அக்காவுக்கு குழந்தை இல்லன்னு ரொம்ப நாள் வருத்தப்பட்டுட்டு இருந்தாங்க. நான் அம்மா கிட்ட போய், அவங்களுக்கு தான் கல்யாணம் ஆகிடுச்சுல, அப்ப அவங்களும் அவங்க ஹஸ்பன்டும் அப்படி பண்ணுவாங்கல, அப்புறம் ஏன் குழந்தை பிறக்கலன்னு கேட்டேன். அதுக்கப்புறம் தான் அதையெல்லாம் தாண்டி, ஒரு குழந்தை உருவாகுறதுல இருந்து பிறக்குறது வரைக்கும் நிறைய சிக்கல்கள கடந்து வரணும்னு புரிஞ்சுகிட்டேன்.

மேட்டிங் (mating) மட்டுமே ஒரு குழந்தையை பிறக்க வைக்குறதுக்கான தகுதியாகி விடாது. அதுக்கான சரியான நேரம்ன்னு ஒண்ணு இருக்கு. அதுக்கு முன்னால ஆண் பெண் ரெண்டு பேரும் உடல் அளவுல முழு வளர்ச்சி அடைஞ்சிருக்கணும். ரெண்டு பேருமே வயசுக்கு வந்துருக்கணும். ஒரு பொண்ணோட உடம்புல நடக்குற மாதாந்திர சுழற்சி தான் அவள தாயாகுற பக்குவத்துக்கு தயார் படுத்தும். ஆண்களோட உடம்புல கோடி கணக்குல விந்தணுக்கள் இருக்கு. ஆனா பெண்ணுக்கு ஒரு மாசம் ஒரே ஒரு முட்டை தான் உருவாகுது (சிலநேரம் அதிகம் இருக்கும்). அதுவும் சரியான நாள்ல விந்தணுக்கள எதிர்கொள்ளலனா அழிஞ்சு போய்டுது.

வீட்ல மாடுகளாகட்டும் ஆடுகளாகட்டும், சினை பிடிக்குற நாட்கள்ல ரொம்ப ரெஸ்ட்லஸ்சா இருக்கும். யூரின் போற இடத்துல வெள்ளையா மாசியடிக்கும். ம்மா... ம்ம்மான்னு அடிக்குரல்ல அது கத்துறத பாத்தே அது எதுக்காக கத்துதுன்னு கண்டுப் பிடிச்சிடுவாங்க. இந்த நாட்கள்ல சேர்த்து விட்டா தான் அதுக்கு சினை பிடிக்கும். அப்படி இருக்கும் போது அதுவே தானே பெண்களுக்குமாவும் இருக்கணும். பெண்களுக்கும் ஹீட் பீரியட் இருக்கு. அந்த நேரத்துல அவங்க உடம்புல மாறுதல் வரும். பீரியட்ஸ் வந்த ஏழுல இருந்து இருபத்தி ஓரு நாட்களுக்குள்ள பெண்களோட உடல் அமைப்பை பொறுத்து இந்த நாள் மாறுபடும். இது கிட்டத்தட்ட மூணு நாள் நீடிக்கும் (வித்யாசங்கள் உண்டு). இந்த நேரம் முழு வளர்ச்சி அடைஞ்ச முட்டை கருக்குழாய்ல வந்து விந்துக்காக காத்திருக்குது. செக்ஸ்சுவல் ஆர்ஜ் (செக்ஸ் பசின்னு கூட வச்சுக்கலாம்) இந்த நேரம் பெண்களுக்கு அதிகமாகுது. இதனால அவங்களுக்கு தங்களோட இணை மேல ஆசை அதிகமாகுது.

ஆசைகளை வெளிப்படுத்துற பக்குவமோ, இல்ல துணிச்சலோ பெண்களுக்கு இல்லாம போயிடுது. இந்த சமூக கட்டமைப்பு அப்படியானதா அமைஞ்சு போயிடுது. அப்படியும் மறைமுகமா வெளிபடுத்துற பெண்கள் இருக்க தான் செய்றாங்க. சில பேர் வேற வழியில்லாம கோபமா அத வெளிப்படுத்துறாங்க. தன்னோட தேவைகள புரிஞ்சுக்காத கணவன் மேல எரிஞ்சி எரிஞ்சி விழுறாங்க. ஆனா பெண்களோட இந்த உணர்ச்சிகள எத்தனை கணவர்கள் புரிஞ்சுப்பாங்கன்னு தெரியாது. அவங்களுக்கு தேவ இல்லனா மனைவியை திரும்பி கூட பாக்குறது இல்ல. மாசத்துல அந்த மூணு நாட்களும் மனைவியை உதாசீனப்படுத்தினா அப்புறம் எத்தனை முறை முயற்சித்தாலும் எப்படி குழந்தை பிறக்கும்?

கருக்குழாய் அடைப்பு, மாத விடாய் பிரச்சனைகள், விந்துக்களோட வீரிய பிரச்சனை, விந்துக்களோட எண்ணிக்கை பிரச்சனைன்னு குழந்தை உருவாக தடையா இருக்குற பிரச்சனைகள்ன்னு இத தாண்டி பேச வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கு. ஆனா அதெல்லாம் இன்னொரு நாள் சொல்லணும்னு தோணுற நேரத்துல சொல்றேன். இப்ப நான் தலைப்புக்கு வர்றேன்.

செக்ஸ் கல்வி அவசியமா இல்லையான்னு கேட்டா, அத சரியான முறைல புரிஞ்சு, மாணவர்களுக்கு சொல்லிக் குடுக்குற பக்குவம் முதல்ல ஆசிரியர்களுக்கு வரணும்னு சொல்லுவேன். வெறும் புத்தகத்த வாசிச்சு அதுல இருக்குறத விளக்கிட்டு போற கல்வி முறை மாணவர்களுக்கு தேவை இல்ல. அத சமுதாய கட்டமைப்புகளோடும், உணர்வுகளோடும் சம்மந்தப்படுத்தி, குடும்பத்த எப்படி சரியான முறைல வழிநடத்தணும்னு சொல்லிக்குடுக்க தெரிஞ்சா செக்ஸ் கல்வி, இன்றைய தலைமுறை குழந்தைகளுக்கு ரொம்ப ரொம்ப அவசியமான ஒண்ணு.

சமீபத்துல ஒருத்தங்களோட போன்ல பேசிட்டு இருந்தேன் (சம்மந்தப்பட்டவங்க இத பார்க்க நேர்ந்தா என்னை தப்பா எடுத்துக்காதீங்க). அப்ப சமீபத்துல வயசுக்கு வந்த அவங்க பொண்ணு ஏதோ சந்தேகம் கேட்டா. பாரேன், அவ இப்படி எல்லாம் கேள்வி கேக்குறா, பெரியவ தான் ஏண்டி இப்படி எல்லாம் கேக்குறன்னு அதட்டி வைக்குறான்னு சொன்னாங்க. அப்ப நான் அவங்க கிட்ட சொன்னது இது தான். புள்ளைய கேள்வி கேக்காதன்னு அடக்கி வைக்காதீங்க. அவளுக்கு வர்ற சந்தேகத்த அவ வேற யார் கிட்ட போய் கேப்பா? நாம அடக்கி வச்சா ப்ரெண்ட்ஸ் கிட்ட போய் கேப்பா. அங்க அவளுக்கு சரியான வழிகாட்டுதல் கிடைக்கும்னு என்ன நிச்சயம்? இதுக்கு நாமே பக்குவமா அவளுக்கு புரிய வைக்கலாமேன்னு. வயசுக்கு வந்த பொண்ணுக்கு வர்ற சந்தேகத்த தீர்க்குறதுல இருந்து, அவளோட பயத்த போக்குறது, சுத்தமா எப்படி இருக்குறதுங்குற வரைக்கும் சொல்லிக் குடுக்க வேண்டியது அம்மாவோட கடமை தானே.

நான் படிச்சது மெட்ரிக்குலேசன்ங்குறதால டென்த்-லயே ஆண் பெண் உடல் பகுதிகள், பெண்களுக்கு வர்ற பீரியட்ஸ், ஆண்களுக்கு நடக்குற மாறுதல்கள், கரு எப்படி உருவாகுது, கருத்தடை சாதனம் ஏன் உபயோகப்படுத்தணும்னு எல்லாமே புக்ல இருந்துச்சு. ஆனா அத சரியா சொல்லிக் குடுக்க சரியான ஆசிரியர் இல்ல. நாங்களே தான் படிச்சுக்க வேண்டியதா போச்சு. ஆனா அம்மா இருந்ததால குரூப் ஸ்டடி போட்டு சந்தேகத்த தீர்த்துக்குற அளவு துணிச்சலா இருந்தோம். அப்புறம் ஸ்டேட் சிலபஸ்ல ப்ளஸ் டு போனப்பவும் இதே பாட முறைகள் தான் இருந்துச்சு. ஆனா அந்த நேரம் நாங்க அத விட பலமடங்கு பிரச்சனைகள தெரிஞ்சுக்குற அளவு முன்னேறி இருந்தோம்.

இப்ப சமீபத்துல யூ.ஜி பிள்ளைங்களுக்கு க்ளாஸ் எடுக்கப் போனப்ப குழந்தை எப்படி பிறக்குதுன்னு ஒரு கேள்விய கேட்டேன். எல்லாருமே ஒருத்தர் மூஞ்சிய பாத்து நமட்டு சிரிப்பு சிரிக்குற அளவு தான் இருந்தாங்க. இந்த கேள்வி கேக்குறதே தப்புங்குற ரேஞ்ச்ல தான் இருந்துச்சு அவங்களோட புரிதல்கள். அப்படினா ப்ளஸ் டூ-ல இந்த பாடத் திட்டம் இருந்தும் ஏன் பிள்ளைங்க இதப் பத்தி பேச தயங்குறாங்க?

கொஞ்சம் கொஞ்சமா அவங்க தயக்கத்த போக்கி பேச வச்சா, குழந்தை பிறக்குறது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் ஏற்படுற செக்ஸ் பீலிங்க்ஸ்னால தான் குழந்தை பிறக்குது. அது செக்ஸ் சம்மந்தப் பட்ட விஷயம்ன்னு பதில் வருது. ஒரு குழந்தை இல்லாம எத்தனையோ பேர் இந்த சமூகத்துல பல கேள்விகளையும் பிரச்சனைகளையும் எதிர்கொள்றாங்க. கல்யாணம் ஆகி மூணு மாசம் ஆகிட்டாலே இன்னுமா எதுவும் விசேசம் இல்லன்னு கேக்க ஆரம்பிச்சுடுறாங்க. இந்த மாதிரியான கேள்வி கேக்குறதே தப்புன்னு எப்ப அவங்க புரிஞ்சுக்க போறாங்க. அது அவங்க உணர்வுகள காயப்படுத்துனு ஒரு சின்ன விசயம் கூடவா தெரியாம போயிடுது? நான் பிள்ளைங்களுக்கு சொல்றது இது தான், ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் குழந்தை இல்லாம போறதுக்கு பல காரணங்கள் இருக்கு. அதுல மூக்கை நுழைச்சு அவங்கள காயப்படுத்துறது அநாகரீகம். ஒரு குழந்தை பிறந்தா மட்டுமே கணவன் மனைவிங்குற அங்கீகாரம் கிடைக்கும்ங்குற கட்டமைப்பை உடைச்சு எறியனும்னு. உடல் சார்ந்த க்ளாஸ் எடுக்கப் போற நீ இப்படி மனம் சார்ந்த பிரச்சனைகள பேசுறது சரிதானா, சிலபஸ்ல என்ன இருக்கோ அத நடத்திட்டு போக வேண்டியது தானேன்னு என் கோ-ரிசர்சர் ஒருத்தி ஒரு நாள் என் கிட்ட கேட்டா.

இந்த விசயங்கள தெரிஞ்சுக்க பிள்ளைங்களுக்கு சிலபஸ் தேவையில்ல. கூகிள தட்டினா போதும். ஆனா இந்த மாதிரியான மன உணர்வுகள அவங்களுக்கு யார் சொல்லிக் குடுப்பா. அவுட் ஆப் சிலபஸ்னு நினைச்சாலும் சரி, நான் இப்படி தான் இருப்பேன், இப்படி தான் சொல்லிக் குடுக்கப் போறேன்னு சொல்லிட்டேன்.

செக்ஸ் கல்வி எப்பவுமே வெறும் உடல் சார்ந்ததா இருக்க கூடாது, மனம் சார்ந்தும் இருக்கணும்ங்குறது தான் என்னோட நிலைப்பாடு, அத தான் நான் க்ளாஸ் எடுக்குற வரைக்கும் செயல்படுத்திட்டும் இருப்பேன். பெண் மனச ஒழுங்கா புரிஞ்சுக்குற ஆணால தான் அவள் உடலையும் மனசையும் புண்படுத்தாம ஆள முடியும். அதே தான் பெண்ணுக்கும். தன்னோட இணையின் தேவை அறிஞ்சி, ஒருத்தருக்கொரத்தர் விட்டுக் குடுத்தும் தட்டிகுடுத்தும் வாழுற தாம்பத்தியத்துல குழந்தை ஒரு பிரச்சனையே இல்ல.

இதெல்லாம் எப்படி எழுதுறீங்க காயத்ரி, உங்களுக்கு கூச்சமாவோ, தயக்கமாவோ இருக்காதா, எழுதுறதுக்கு முன்னால இப்படி தான் எழுதணும்னு எதுவும் முடிவு எடுத்து வச்சுப்பீங்களான்னு என் கிட்ட ஒருத்தங்க கேட்டாங்க. எனக்கு இத பத்தி சொல்ல எப்பவுமே கூச்சமோ தயக்கமோ வந்ததே இல்ல, இதெல்லாம் தப்புன்னு தோணுறதும் இல்ல. என்னைக் கேட்டா இதெல்லாம் ரொம்ப சாதரணமா பேசிக்க வேண்டிய விஷயம். எழுத ஆரம்பிச்சா எந்த விதமான தயக்கமும் இல்லாம அந்த நேரம் மனசுக்குள்ள இருக்குறத கடகடன்னு எழுதிடுறேன். அதனால தானோ என்னவோ பலநேரம் எங்கயோ ஆரம்பிச்சு என்னோட பதிவு எங்கயோ போய் முடிஞ்சு போயிடுது. ஒரு டீன் ஏஜ் வயசு பசங்க இத பத்தி தேடுறப்ப அவங்களளோட உணர்ச்சிய தூண்டாம, புத்தியை என்னோட பதிவு தூண்டிச்சுனா அது தான் என்னோட எழுத்தின் வெற்றின்னு சொல்லுவேன்.


மறுபடியும் பாக்கலாம்.

.

8 comments:

  1. நம் நாட்டு மக்களுக்கு கேற்ற மிக நல்ல விளக்கம். அருமையான கட்டுரை பாராட்டுக்கள். இங்குள்ள பள்ளிகளில் 5 ஆம் வகுப்பிலே செக்ஸ்கல்வியை சொல்லிதருகிறார்கள். ஆனால் அதை செக்ஸ்கல்வி என்று இங்கு அழைப்பத்தில்லை. அதை ஹெல்த் சைன்ஸ் என்று அழைக்கிறார்கள். செக்ஸ் என்று சொல்லுவதைவிட உடல் சம்பந்தமான கல்வி என்று சொல்லுவதுதான் சிறந்தது அல்லவா?

    ReplyDelete
  2. பாதைகளைத் தேர்ந்தெடுக்காமல் வகுத்துக் கொண்டு இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. முதலில் வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்! மிகவும் துணிச்சலாகவும், எளிமையாகவும் உங்கள் கருத்துக்களை எடுத்துவைப்பதில் சிறந்தவர் தாங்கள். நாப்கின் பற்றிய பதிவு, இந்த பதிவு அனைத்துமே எல்லோருக்குமே பயனளிக்கும் பதிவுகள். இளவயதில் தவறான வழிகாட்டுதல் பெரிய தவறுகளை ஏற்படுத்திவிடும். உங்களின் இந்த பதிவுகள் பதின்ம வயதினருக்கு பெரும் வழிகாட்டியாக இருக்கும். தொடருங்கள்! நன்றி!

    ReplyDelete
  4. பாதைகளைத் தேர்ந்தெடுக்காமல் வகுத்துக் கொண்டு இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. பாலியல் கல்வி இப்படித்தான் இருக்க வேண்டும். வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. Great ma'am!!! You are on right track!!! go on!!!

    ReplyDelete
  7. தங்கள் கருத்தை முற்றிலும் ஏற்றுக் கொள்கிறேன் ! மிகவும் நாகரீகமான நடை!

    ReplyDelete
  8. சிறப்பான பதிவு ....
    குழந்தைகளுக்கு வழிகாட்ட முதலில் நாம் தெளிவாக வேண்டும் ..
    உங்கள் சிறப்பான பணி தொடர்ந்து எங்களுக்கு வழிகாட்டடும் ....

    ReplyDelete