Thursday 20 August 2015

பொறாமைகளின் இரவு


மழைத்துளிகளாய் மனம்
குதூகலிக்கிறது பார்த்தி...

இன்று நீ வரப் போகிறாய்...
அதுவும் நீண்ட ஒரு பிரிவுக்கு பின்...

காதுகளை தீட்டி வைத்துள்ளேன்
சருகுகளின் மேல் விழும்
சாரலின் லயம் மீறி
உன் காலடி ஓசை கேட்குமென்று...

அப்பப்பா, இந்த இரவுக்கு தான்
எத்தனை பொறாமை என்னோடு...
பாரேன், உன்னை கண்ணில் காட்டுவேனா என்று
கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருக்கிறது...

பார்த்தி, சில்வண்டுகள் கூட
சிலுசிலுத்து அடங்கி விட்டன...
அதோ அந்த பன்னீர் ரோஜா
உனக்காகவே இரவில் மலர்வதாய்
சபதம் பூண்டிருக்கிறது...

வந்து விட்டாயா பார்த்தி,
இரு, இரு, அப்படியே
முன்னால் வந்து நிற்காதே...

கொஞ்சம் ஒளிந்து கொள்...
உனக்கான இந்த இரவின் தவிப்பை
இன்னும் கொஞ்சம் அனுபவித்துக் கொள்கிறேன்...
நீயும் ஆசுவாசப் படுத்திக் கொள்...

அதன்பின் அதோ,
அந்த மழைத்துளிகள்
பன்னீர் ரோஜா,
சில்வண்டுகள்,
அடர் இருள் அத்தனையும்
பொறாமையால் பொசுங்கட்டும்...

4 comments:

  1. காத்திருப்பின் சுகம் கவிதையில் மிளிர்கிறது! அருமை!

    ReplyDelete
  2. கொடுத்துவைத்த பார்த்தி:)

    ReplyDelete
  3. பார்த்தி மீது என்ன ஒரு ஏக்கம் கவிதை ரசித்தேன்.

    ReplyDelete