Sunday 19 June 2016

கானகன் - நாவல் ஒரு சிலாகிப்பு



சின்ன வயசுல நான் அப்பாகிட்ட அடிக்கடி கேக்குறது “எனக்கு யானை குட்டி, புலி குட்டி, சிங்கக் குட்டி எல்லாம் வாங்கி தாங்கப்பா. நான் அத எல்லாம் வளப்பேன்”ன்னு தான்.

எப்பவும் சேட்டை செய்துகிட்டு எதையாவது வம்பு பண்ணிக்கிட்டு நான் சீறிகிட்டு பாக்குறப்ப எல்லாம் “அவ கண்ண பாரு, அப்படியே புலியோட கண்ணு. சும்மாவா பொட்ட புலிலா அவ”ன்னு அம்மா சொல்லுவா.

வீட்டுக்கே அடங்காம தனி ராஜாங்கம் நடத்திட்டு இருந்த அப்பா யானையாம். அவர் புள்ள நான் புலி.

இருபது வயசோட தொடக்கத்துல எனக்கு நிறைய தேடல் இருந்துது. அது கிட்டத்தட்ட ஒரு அடங்காத தாகம் மாதிரி எனக்குள்ள தகிச்சுகிட்டே இருந்துச்சு. வாழ்க்கைல எனக்கு எல்லாம் கிடச்சதா எல்லோரும் சொல்லிக்கிட்டு இருந்த நேரம் என் மனசு அதையும் தாண்டி என்னவோ வேணும்னு சொல்லிகிட்டே இருந்துச்சு. இன்னிக்கு வரைக்கும் எனக்கு அது புரியாத புதிராவே தான் இருந்துட்டு இருந்துச்சு.

ஜெயமோகனின் “காடு” படிச்சப்ப கொஞ்சமாய் எனக்கு என்ன வேணும்னு புரிய ஆரம்பிக்க, லெக்ஷ்மி சரவணக்குமாரோட “கானகன்” அத எனக்கு முழுசா உணர்த்துன மாதிரி இருக்கு.

என்னோட சின்ன வயசுல என்னை தொடர்ந்து சில கனவுகள் தொரத்திகிட்டே இருந்துச்சு. ஒண்ணு, ஒரு பெரிய மாட்டுக் கூட்டம். அதோட கொம்புகள்ல நான் மாட்டிகிட்டு அலைக்கழிஞ்சுகிட்டே இருப்பேன். போக போக அந்த கனவு எனக்கு ரொம்ப பிடிச்சுப் போக, மாட்டு கொம்புல பயணம் பண்றது ஒரு சாகசம்ன்னு பெருமையா நினைக்க ஆரம்பிச்சேன். இன்னொன்னு, வீட்டை சுத்தி உலவுற காட்டு மிருகங்கள். நிஜத்துல அப்பாகிட்ட நான் வாங்கி கேட்ட விலங்குகளை எல்லாம் அப்பா கனவுல எனக்கு வாங்கி குடுத்தது. பயம் கலந்த பிரமிப்போட நான் அந்த விலங்குகள் மத்தியில வேடிக்கை பாத்துகிட்டே நிப்பேன்.

புத்தகங்கள கைல வச்சுகிட்டு அதோட வாசத்த முகர்ந்து பாக்குறது ஒரு தனி சுகம்னு இப்பல்லாம் எனக்கு புரிய ஆரம்பிச்சிருக்கு. கானகன் நாவல் படிச்ச உடனே என்னையறியாம அந்த புத்தகம் எங்கேன்னு கண் தேட ஆரம்பிச்சுது. எனக்கு அத வாசம் பிடிச்சு அந்த யானையையும் புலியையும் தழுவி கிடக்க ஆசை. ஆனா பாருங்க, என் துரதிஷ்டம், நான் படிச்சது pdfல. கானகனை வாசிக்க சொல்லி பரிந்துரைத்த நண்பனுக்கும் கேட்ட உடனே ஆன்லைன்ல பி.டி.எப். வாங்கி அனுப்பி வைத்த நண்பருக்கும் முதல்ல என் நன்றி. ஆனாலும் இன்னொரு தடவ அத புத்தகமா கைல வாங்கி தடவி பாக்கணும்.

என் வீட்டு விலங்குகள் பத்தின சுவாரசியங்களையும், அவைகளுக்கு இருக்குற உணர்வுகளையும் விவரிச்சு நான் விலங்குகளுக்கு நெருக்கமானவள்ன்னு சொன்னா சட்டுன்னு யாரும் அவ்வளவு எளிதா நம்பினது இல்ல. இவளான்னு புருவம் தூக்கி பாக்குறத உணர்ந்துருக்கேன். விலங்குகளை யாராவது வசியப்படுத்த முடியுமா? அதுகளுக்கு அவ்வளவு யோசிக்குற சக்தி இருக்கா? விலங்கு எப்பவும் விலங்கு தானே, நினச்ச நேரத்துல நாம வெட்டி சாப்பிடதானே அதெல்லாம் வளர்க்குறோம்னு கேப்பாங்க. எந்த விலங்கா இருந்தாலும் அதுக்கிட்ட பேச நமக்கு ஒரு பாஷை உண்டு. அது கண்களால பேசுற பாஷை. அத நாம எதுவுமே செய்ய மாட்டோம்னு அதுக்கு நாம குடுக்குற தன்னம்பிக்கை பாஷை. நான் உன்னை நேசிக்குறேன்னு சொல்ற பாஷை. அந்த உலகம் தனித்துவமானது, அத புரிஞ்சுகிட்டா கண்டிப்பா அதுல இருந்து மீண்டு வர மனசே வராது.

அப்படி தான் எனக்கு “கானகன்”னோட காட்டுக்குள்ள போயிட்டு மீண்டு வரவே முடியல.

இந்த நாவலுக்கு கிடைத்த விருது பத்தி எல்லாம் எல்லாரும் பேசிட்டு இருக்காங்க. எனக்கு அதுல சுவாரசியம் இல்ல. காரணம் நான் அது பத்தி எதுவுமே அறியாதவ. அதனால அதோட பெருமைகள் கூட எனக்கு தெரியாமலே போயிருக்கும். எனக்கு அதப் பத்தி எந்த கவலையும் இல்ல. ஆனா இந்த நாவல் எனக்குள்ள நிறைய கேள்விகள எழுப்பிச்சு. இந்த நாவல்ல வர்ற சில கதாபாத்திரங்கள் இப்படி எல்லோரும் இருந்துட்டா எத்தன நல்லாயிருக்கும்னு தோண வச்சுட்டே இருக்காங்க.

ஒரு இன மக்களோட வாழ்வாதாரத்த பத்தின நாவல் இதுன்னு பேஸ்புக்ல எங்கயோ ஒரு இடத்துல படிச்சேன். ஆனா அத பத்தி மட்டுமேயான நாவலா கண்டிப்பா எனக்கு தெரியல. இந்த நாவல் ஒரு இனத்த விவரிக்க கூடியதா இருக்கலாம், ஆனா அதையும் மீறி நிறைய விசயங்கள சொல்லிட்டு போகுது.

எனக்கு விலங்குகளோட வாழ்வியல பத்தியும் அதோட குணாதிசயங்கள பத்தியும் தெரிஞ்சுக்க பேராவல் உண்டு. இந்த நாவல் அந்த வகைல எனக்கு நிறைய தீனி போட்ருக்கு. விலங்குகளுக்கு உணர்வுண்டு. மனிதனை விட ஒரு தேர்ந்த வாழ்க்கை நெறியை வகுத்து அதுக்கு ஏத்தாற்போல வாழும் விலங்குகள உணர்வுகளே இல்லாத மனுசனால கண்டிப்பா புரிஞ்சுக்க முடியாது. இந்த நாவல்ல கதைமாந்தர்கள் வழியா விலங்குகள அழகா புரிய வைக்குறார் லக்ஷ்மி சரவணக்குமார்.

செனை மானை சுட்ட ஜெமீந்தார் முதல் கொண்டு இதுல வர்ற கதைமாந்தர்கள் ஒவ்வொருத்தரும் அவங்கவங்க பங்களிப்ப நிறைவாவே செய்துட்டு போய்டுறாங்க. காட்டையே தன்வசப்படுத்திய சடையனும், அவன் மகன் வாசியும் கூட எல்லாரையும் போல ஒரு கதாபாத்திரங்களா தான் வாழ்ந்துட்டு போறாங்க. காரணம், ஒவ்வொரு கதைமாந்தர்களையும் கதைக்கான அவங்களோட பங்களிப்பையும் அழகா செதுக்கி இருக்கார் நாவலாசிரியர். எனக்கு இதுல முரண்பட்டு தெரிஞ்ச விஷயம் தங்கப்பனோட குணாதிசயம். ஆரம்பத்துல ஒரு புலிய சுடுறப்ப அவனுக்கு வேட்டை மேல பெரிய ஆர்வம் இல்லன்னு சொல்லப்படுது. வேட்டை மேல இருந்த தாகத்தால தான் செல்லாயி அவன் கூட போனான்னு சொல்லப்படுது. கடைசில அவன் ஒரு கொடூரமான வேட்டைக்காரனா மாறிப் போயிடுறான். எது எப்படி இருந்தாலும் இந்த குழப்பம் எல்லாம் தூக்கி வீசப்பட வேண்டியவை. வீசியாச்சு.

அவ்வளவு மட்டும் தானா இந்த நாவல்ல இருக்கு. இல்லவே இல்ல. நாம பேசத் தயங்குற, ச்சீன்னு ஒதுக்குற விஷயங்கள் நிறைய இருக்கு இந்த நாவல்ல. அதுவும் ஒரு அழகியலோட! இது தான் வாழ்க்கை, இப்படி தான் வாழணும்னு நமக்கு பாடம் எடுக்குற மாதிரி.

ஒருத்தனுக்கு மூணு பொண்டாட்டினு சொல்றத வேணா இந்த சமூகம் ஏத்துக்கும். ஒருத்திக்கு ரெண்டு புருஷன்னு சொன்னா இந்த சமூகம் ஏத்துக்குமா என்ன?

பொண்டாட்டி மேல அளவு கடந்த ப்ரியம் வச்சிருக்குற சடையன், அவன் மேல அதே அளவு ப்ரியம் வச்சிருக்குற செல்லாயி அதை விட அதிகமா தங்கப்பன் மேல ப்ரியம் வைக்குறா. தங்கப்பனோட வாழ்ந்துட்டு இருந்தாலும் சடையனையும் அவ காதலிக்க தவறல. “உனக்கு ரெண்டு அப்பா”ன்னு பெருமையா தன்னோட மகள் கிட்ட அவ அறிமுகப்படுத்தி வைக்குறா. தங்கப்பன விட்டு விலகவும் முடியாது, அதே நேரம் சடயனையும் அவ கூட வச்சிருக்கணும்ங்குற அவளோட ஆசைக்கு ஒரு சபாஷ்.

மூணு பொண்ணுங்க ஒரு இடத்துல இருந்தா அங்க சண்டை வராம இருக்காது. ஆனா இங்க தங்கப்பனோட மூணு பொண்டாட்டிகளும் அவ்வளவு ஒத்துமையா இருக்காங்க. அதுவும் சடையனுக்கும் செல்லாயிக்கும் பிறந்த வாசி மேல தங்கப்பனோட மத்த ரெண்டு பொண்டாட்டிகளான மாரிக்கும் சகாயராணிக்கும் கொள்ளை அன்பு. இப்படி பட்ட குணாதிசயம் கொண்டவர்கள நாவல்ல மட்டும் தான் பாக்க முடியுமோ?

தங்கப்பன் கூடவே சுத்துற அன்சாரிக்கு தன்னை விட பலமடங்கு அதிக வயசுள்ள சகாயராணி மேல ஆசை. ஒரு கட்டத்துல சகாயராணி அன்சாரி கூட போக முடிவெடுத்து மாரி கிட்ட சொல்றப்ப, “நீயும் தான் இத்தன காலம் தங்கப்பனுக்கு மாடா உழச்சிட்ட, இனியாவது சந்தோசமா இரு”ன்னு அவ வழியனுப்பி வைக்குறா. “இப்பவும் நான் தங்கப்பன நேசிக்குறேன், ஆனாலும் நானும் மனுசி தானே”ன்னு சகாயராணி சர்வசாதாரணமா ஒரு கேள்விய வீசி விட்டு போறா. அன்சாரி கூட வாழ்ந்துட்டு தங்கப்பனுக்கு செய்ய வேண்டிய பணிவிடைகள்லயும் அவ கொறை வைக்கல.

அதே மாதிரி தான் இதுல வர்ற ஆண் கதாபாத்திரங்களும். சடையனுக்கும் செல்லாயிக்கும் பிறந்த வாசியை தன்னோட வாரிசா பாக்குற தங்கப்பன் ஆகட்டும், தான் நேசிச்ச பெண் தன்னோட அண்ணனை விரும்புறான்னு தெரிஞ்சதும் மனச தேத்திக்குற கட்டையனாகட்டும் எல்லாருமே இம்மியளவு கூட பிசகாம நம்ம மனசுல ஒட்டிக்கறாங்க.

சகாயராணிக்கும் அன்சாரிக்கும் இடைல ஏற்பட்ட உறவு தங்கப்பனுக்கு தெரியுமா தெரியாதான்னு நாவலாசிரியர் தெளிவுப்படுத்தல. ஆனாலும் அவனுக்கு தெரிஞ்சாலும் தன்னை ஒண்ணும் சொல்ல மாட்டான்னு சகாயராணி மூலமா உணர்த்துறார். அதே மாதிரி தான் தங்கப்பனுக்கு அன்சாரி மேல கரிசனம் அதிகமாகிப் போகுது. அன்சாரி இடத்துல சகாயராணிய பாத்துட்டு ஒரு புன்னகையோட கடந்து போறான்.

இங்க எத்தனை பேர் அடுத்தவங்க அந்தரங்கம் மேல ஆர்வம் காட்டாம இருக்கோம்? நமக்கு வேண்டியதெல்லாம் அடுத்த வீட்டு வம்பு தான். நீ இப்படி தான் இருக்கணும் அப்படி தான் இருக்கணும்னு ஆளாளுக்கு ஆலோசனைகள சொல்ல வந்துடுவாங்க. அவங்களுக்கு எல்லாம் செருப்படி குடுக்காமலே தன்னோட கதாபாத்திரங்கள் மூலமா யோசிக்க வச்சிருக்காரோ நாவலாசிரியர்ன்னு எனக்கு ஒரு கேள்வி வருது.

இங்க யாரும் யார் குடியையும் கெடுக்கல, யாரும் யாரையும் கட்டாயப்படுத்தல. அவரவருக்கு தேவையான வாழ்க்கைய அவரவர் வாழ்ந்துகிட்டே இருக்காங்க எந்த விதமான மன கசப்புகளுக்கும் இடம் குடுக்காம.

ஒரு விஷயம் சொல்லாம இருக்க முடியல, காடு நாவலோட கதாநாயகியான நீலி வெறும் கதாபாத்திரமா தான் என் கண்ணுக்கு தெரிஞ்சா. அவ ஒரு உயிருள்ள அழகு சிலை அவ்வளவே. அதனால தான் அவளோட முடிவு சட்டுன்னு இருந்தாலும் பெருசா மனச பாதிக்கல. ஆனா இங்க செல்லாயி, மாரி, சகாயராணி, குயிலம்மாள் மட்டுமில்லாம, வாசிய முதல் முதலா அனுபவிக்கும் ஜெமீந்தார் மனைவி, தங்கப்பன் தேடிப் போய் அவனை ஆளும் பெண்னு எல்லா கதாபாத்திரங்களும் நம்ம கூடவே வாழ்ந்துட்டு போய்டுறாங்க.

காதலும் காமமும் இல்லா வாழ்க்கை அர்த்தமற்றது. அந்த காட்டைப் போல அழகானவை. ரெண்டுமே கொண்டாடப்பட வேண்டியவை. துவேசிக்கப்பட வேண்டிய அவசியமே இல்ல.
......................................




பின்குறிப்பு: நாவல் வாசிக்க ஆரம்பிச்ச நேரம் எனக்கு நெருடியது எழுத்துப்பிழைகளும் அவசியம் இல்லாத இடங்கள்ல வர்ற முப்புள்ளிகளும். இதுல கொஞ்சம் கவனம் செலுத்தி இருந்தா இன்னும் அதிகமா சந்தோசப்பட்டுருப்பேன்.

5 comments:

  1. ஜெயமோகனின் காடுதான் நீங்கள் முழு புத்தகத்தையும் வாசித்து எழுதும் முதல் விமர்சனம்
    சொல்ல்லிருந்தீங்க. அதுவே நல்லா எழுதி இருந்தீங்க.
    அதைவிடவும் ஒரு படி மேளே கானகன் விமர்சனம் இருப்பதா எனக்கு தோணுது!

    பல புத்தகங்கள் வாசிச்சு எழுதுபவரைப் போல நீங்கள் உள்வாங்கி எழுதிய விதம்
    அருமை...

    தொடர்ந்து புத்தகம் வாசித்து, எழுதும்
    இந்த புதிய அவதாரம்
    தொடர வாழ்த்துக்கள் அக்கா.

    ReplyDelete
  2. hi mam, if possibl, please send the text or word document format of such novels in unicode format

    ReplyDelete
  3. சுவாரஸ்யமான விமர்சனம்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  4. நல்ல விமர்சனம். இதுவரை படித்ததில்லை. படிக்கத் தூண்டுகிறது உங்கள் பதிவு.

    ReplyDelete
  5. கானகம் e-book எந்த பதிப்பாளரின் தளத்தில் விலைக்கு வாங்க முடியும் என்று தெரிவிக்கவும். நன்றி. -கிரிஷ்

    ReplyDelete