Saturday 16 July 2016

மூன்றாம் நதி - என் பார்வையில்




எழுதுறத நான் கிட்டத்தட்ட நிறுத்திட்டேன்னு தான் சொல்லணும். எப்பவாவது திடீர்னு மனசுக்கு தோணினத எழுதி ப்ளாக்ல மட்டும் போஸ்ட் பண்ணிட்டு இருக்குற நேரம் மகேஷ் தான் அத படிச்சுட்டு அவனோட கருத்துக்கள அடிக்கடி சொல்லுவான். சொல்லப்போனா கிட்டத்தட்ட அவன் ஒரு கிரியாயூக்கி மாதிரி. நிறைய சோர்ந்து இருக்குறப்ப எல்லாம் அக்கா, வித்யாசமா ட்ரை பண்ணுங்க அக்கா, நல்லா எழுதி இருக்கீங்க அக்கான்னு எதையாவது சொல்லி உற்சாகமூட்டிகிட்டே இருப்பான்.

அப்படி தான் ஒருநாள் அவன் கிட்ட பேசிட்டு இருக்குறப்ப மூன்றாம் நதி பத்தி பேச்சு வந்துச்சுன்னு நினைக்குறேன். சரியா நியாபகம் இல்ல. அப்புறம் ஒரு நாள் மூன்றாம் நதிக்கு தன் நண்பன் எழுதின விமர்சனம் ஒண்ணை எனக்கு படிக்க தந்திருந்தான். அத படிச்சிட்டு மகேஷ் கிட்ட எனக்கு மூன்றாம் நதி படிக்க கிடைக்குமான்னு கேட்டேன்.

நான் இதுக்கு முன்னால படிச்ச நாவல்களோட ஆசிரியர்கள் பற்றி எனக்கு எந்த பரிட்சயமும் இல்ல. ஆனா வா. மணிகண்டன் அப்படி கிடையாது.

மூணு வருஷம் முன்னால முதல் முதலா ப்ளாக் ஒண்ணு ஆரம்பிக்கணும்னு நான் முடிவு பண்ணினப்ப மகேஷ் கிட்ட தான் உதவி கேட்டேன். ப்ளாக் ஆரம்பிச்சாலும் அடுத்து என்ன பண்ணனே தெரியாம முழிச்சுட்டு இருந்தப்ப ஒவ்வொரு படியா ஒவ்வொரு விசயத்தையும் பொறுமையா அவன் தான் எனக்கு கத்துக்குடுத்தான்.

வெறும் கவிதைகள மட்டும் தான் அந்த நேரம் போஸ்ட் பண்ணிட்டு இருந்தேன். அப்ப தான் சிலரோட ப்ளாக் லிங்க் எல்லாம் குடுத்து, இவங்க எழுதினதையும் படிங்க அக்கா, அதனால உங்களுக்கு ஒரு ஐடியா கிடைக்கும்னு சொல்லி அவன் குடுத்த முதல் ப்ளாக் லிங்க் வா. மணிகண்டனோடது. அப்போ இருந்து அவரோட ப்ளாக் என்னோட பாலோஅப் லிஸ்ட்ல இருக்கு.

நான் அவரோட எல்லா போஸ்ட்டும் படிப்பேன்னு பொய் சொல்ல விரும்பல. காரணம் வாசிக்குறதே எனக்கு பிடிக்காம இருந்துச்சு அப்போ. அது ஒரு அயர்ச்சிய குடுத்துச்சு. அந்த சூழ்நிலைல கூட அப்பப்ப வா. மணிகண்டனோட ப்ளாக் படிப்பேன். அவரோட நிசப்தம் அறக்கட்டளை பத்தியும் தெரிய வந்துச்சு. அப்பப்ப அவர் போஸ்ட்கு கமன்ட் போட நினச்சாலும் கிட்டத்தட்ட ரெண்டு வருஷம் முன்னாடி அதுல அந்த ஆப்சனே இல்ல. அதனால சைலென்ட்டா வாசிச்சுட்டு போயிருக்கேன்.

மகேஷ் எப்போ எல்லாம் என்கிட்ட போன்ல பேசுவானோ அப்ப எல்லாம் வா. மணிகண்டனை பத்தி ஒரு வார்த்தையாவது பேசாம விட மாட்டான். அவர் மேல அவனுக்கு பெரிய மதிப்பு உண்டுன்னு எனக்கு ரொம்ப நாள் முன்னாலயே புரிஞ்சுச்சு. அவரோட அறகட்டளை, வாசகர்கள் அவர் மேல வச்சிருக்குற நம்பிக்கைனு ஓயாம பேசுவான்.

ஒரு புத்தகம் போடணும் மகேஷ்னு நான் சொன்னப்பவும் வா. மணிகண்டன் போஸ்ட் லிங்க் ஒண்ணை எடுத்து குடுத்து இத படிங்க அக்கான்னு சொல்லுவான். எதுக்கு எடுத்தாலும் அவர உதாரணமா கொண்டு வந்து நிறுத்தாம விட்டது இல்ல மகேஷ். அப்படி தான் எனக்கு மூன்றாம் நதி புக் கிடைக்குமான்னு நான் கேட்டதும் என் கிட்ட இருக்கு அக்கா, நானே அனுப்பி வைக்குறேன்னு சொல்லி ஒரு நாலு புத்தகமும் (மூன்றாம் நதி, மசால் தோசை 38 ரூபாய், பறக்க எத்தனிக்கும் ஒற்றை இறகு, ஆவிப்பா) பத்து திருப்பதி லட்டும் வச்சு அனுப்பிட்டான். கிட்டத்தட்ட ஒன்னரை நாளுக்குள்ள அது என் கைக்குள்ள கிடைச்சதுல அவனுக்கு ஒரே ஆச்சர்யம். எனக்கு தான் திருப்பதி லட்டு ஒன்னே ஒண்ணு கிடைச்ச வருத்தம். பார்சல் வீட்டுக்கு வந்து, அப்புறமா என் கைக்கு வந்து சேருறதுக்குள்ள அப்பா எல்லாத்தையும் காலி பண்ணிட்டார்.

சரி விடுங்க, நான் நாவல பத்தி பேச வந்துட்டு இன்னும் ஆரம்பிக்கவே இல்ல பாருங்க.

இன்னிக்கி மதியம் தான் புத்தகத்த கைல எடுத்தேன். எனக்கு அந்த அட்டை வடிவமைப்பே வித்யாசமா பட்டுச்சு. முதல்ல பட்டுன்னு பிடிபடல, ஆனா என்னமோ வித்யாசமா இருக்கே இருக்கேன்னு திருப்பி திருப்பி பாத்துட்டு இருந்தேன். அப்புறமா திடீர்னு தடவி பாக்கனும்னு தோணிச்சு. அட, கருப்பு அட்டைல நீல கலர்ல ஒரு பொண்ணோட அவுட்லைனும், மூன்றாம் நதின்னு எழுத்தும் ஸ்டிக்கர் ஒட்டி இருக்காங்க. எனக்கு அது ரொம்ப வசீகரமா இருந்த மாதிரி தோணிச்சு.

இந்த நாவல் விளிம்பு நிலை மனிதர்கள் பற்றியதுன்னு முன்னுரை படிச்சு தெரிஞ்சிகிட்டேன். “பெரும் வேட்டைக் காடான இந்த உலகம் அவர்களைத் துரத்தித் துரத்தி வேட்டையாடிக் கொண்டிருக்கிறது” – முன்னுரைல இருந்த இந்த வார்த்தை எவ்வளவு சத்தியமானது.

சமீப காலமா எனக்குள்ள ஒரு யதார்த்தம் பிடிபட்டு அதிக வலியை குடுத்துகிட்டே இருக்கு. வா. மணிகண்டன் சொன்ன மாதிரி இந்த உலகம் ஒரு வேட்டைக் காடு. ஆனா இங்க விளிம்பு நிலை மனிதர்கள் மட்டும் தான் இரையாகுறாங்கன்னு சொல்ல முடியாது. எல்லாருக்குள்ளேயும் ஒரு வன்மம் இருக்கு. சந்தர்ப்பங்கள் கிடைக்குற நேரத்துல எல்லாம் அத பயன்படுத்தி வேட்டையாடி தன்னோட வன்மங்கள தீத்துக்குறாங்க மக்கள்.

ரெண்டு நாள் முன்னாடி தான் போஸ்ட் டாக்டோரியல் பெல்லோஷிப்க்காக ஒரு மெடிக்கல் சர்டிபிகேட் வாங்க அரசு மருத்துவமனைக்கு போக வேண்டிய சந்தர்ப்பம் வந்துச்சு. பெரும் கூட்டம். டோக்கன் குடுத்தவர் ஈவு இரக்கமே இல்லாம ஒவ்வொருத்தரையும் வார்த்தையால காயப்படுத்திட்டு இருந்தார். அவங்களோட ஊனத்த குத்திக்காட்டி போ போ, அப்புறம் வான்னு துரத்திட்டு இருந்தார். நாலு கால்ல தவழ்ந்து வந்து ஏமாற்றத்தோட திரும்பி தயங்கி தயங்கி தடுமாறிட்டு இருந்த ஒரு மனுசனை வச்ச கண்ணு எடுக்காம பாத்துகிட்டே இருந்தேன். எனக்கு இந்த மாதிரியான இடங்கள் தன்னம்பிக்கையை குலைக்கும் இடங்கள்ன்னு அங்க இருந்து ஒதுங்கியே இருப்பேன். என்னையும் ஒரு வயசான அம்மா “ஏம்மா நொண்டி, ஆயிரம் ரூபாய்க்கா வந்த”ன்னு கேட்டார். என் படிப்பு, என் அதிகாரம், என் சுதந்திரம், என் வீம்பு எல்லாம் தரைமட்டமான இடம் அது. அப்போ அவர் என்னை பார்த்த பார்வைல ஒரு குத்தல் இருந்துச்சு. அப்பவே அவர நாலு வார்த்தை கேப்பமான்னு நினச்சேன். அந்த இடத்துல ஒரு சலசலப்ப உருவாக்க நான் விரும்பல. முறைச்சு பாத்துகிட்டே இருந்தேன்.

என் கதைய விடுவோம், அந்த டோக்கன் குடுக்குறவர் ஒரு கட்டத்துல எழுந்து வெளில போக வேண்டிய கட்டாயம் வந்துச்சு. அவர் எழுந்து நடந்தார். அதுவும் கக்கத்துல ரெண்டு கட்டைகள் உதவியோட. அதிகாரங்கள் கைல இருந்தா யார வேணா காயப்படுத்தலாமா? ஒரு கணம் அந்த நாலு கால் மனுசன பாத்துட்டு அப்புறம் டோக்கன் குடுத்தவர் மேல குத்திட்டு நின்ன என்னோட பார்வை அவர காயப்படுத்தி இருக்கணும். என்னை ஏறிட்டுப் பாத்துட்டு தலைய குனிச்சுகிட்டார். யார் மேல இருந்த வன்மத்த இவர் இவங்க கிட்ட எல்லாம் காட்டிட்டு இருக்காரோ தெரியல. ஆனா என்னோட பார்வைக்கு பிறகு அவரோட அணுகுமுறைல ஒரு மாற்றம் தெரிஞ்சுச்சு. அடுத்து வந்த வயசான பாட்டிகிட்ட அவரே குனிஞ்சு என்ன விவரம்னு கேட்டு எழுதிட்டு, ஒரு ஓரமா அவங்க உக்கார இடமும் ஒதுக்கி குடுத்தார். இப்படி வேட்டையாடுற குணம் ஒவ்வொருத்தருக்குள்ளயும் இருந்துகிட்டு தான் இருக்கு.

எனக்கு சென்னை, ஹைதராபாத், பெங்களூர்ன்னு எந்த பெரு நகரங்களோட பரிச்சயமும் இல்ல. அதனாலயே அங்க வாழ்ற விளிம்பு நிலை மனிதர்கள் பத்தின எந்தவிதமான எண்ண ஓட்டங்களும் இல்ல. இந்த மென்பொருள் நிறுவனங்கள், கேளிக்கை விடுதிகள் பற்றி கூட எனக்கு எந்த பிரக்ஞையும் கிடையாது. உண்மைய சொன்னா எனக்கு யார் மேலயும் எந்த பரிதாபமும் கிடையாது.

எனக்கு இந்த நாவல படிச்சப்ப ஒரு பெண்ணோட வாழ்க்கை மேலோட்டமா சொல்லப்பட்டுருக்குன்னு தான் மனசுல பட்டுச்சு. மகேஷ் பேசும் போது சொன்னான், “அய்யோ, அது பயங்கரம். அந்த பொண்ணு எப்படி எல்லாம் கஷ்டப்படுறா”ன்னு. இல்ல மகேஷ், எனக்கு இதுல எந்த கஷ்டமும் கண்ணுல தெரியல. காரணம் ஒரு பெண்ணோட கஷ்டம் எந்த இடத்துலயும் ஆழமா சொல்லப்படலங்குறது என்னோட கருத்து. ஆசிரியர் கூட சொல்லி இருக்கார் “இருந்தாலும் துளி தயக்கம் ஏதோவொரு மூலையில் எட்டிப் பார்த்தப்படியே இருக்கிறது”ன்னு. அந்த தயக்கம் வேற எதுவும் இல்ல, சம்பவங்கள விவரிச்ச முடிஞ்ச அவரால அவளோட உணர்வுகள விவரிக்க முடியலன்னு நான் நினைக்குறேன்.

என்னை கேட்டா, பவானியோட வாழ்க்கைல வந்த எந்த சந்தர்ப்பமும் அவள கீழ் நோக்கி தள்ளாது. அவ எந்த சூழ்நிலையிலயும் வாழ, தன்னை பொருத்திக்குற ஒரு ஆத்மாவா தான் என் கண்ணுக்கு தெரியுறா. சித்திகிட்ட இருந்து கிடைக்குற வசவு சொல் அவள தற்கொலைக்கு தூண்டுது. அதே நேரம் வருணோட நட்பு அவள அதுல இருந்து காப்பாத்துது. இதெல்லாம் இன்னும் ஆழமா சொல்லி இருக்கலாம். வாழ்க்கையோட ஒவ்வொரு நகர்வுலயும் பவானி வாழ்ந்துகிட்டே தான் இருக்கா. அதனால அவளோட கணவன் இறப்பு கூட “இதுவும் கடந்து போகும்” வகை தான். அவ அவளையே செதுக்க அவளுக்கு கிடைச்ச அடுத்த சந்தர்ப்பம் அதுன்னு எனக்கு தோணுது. கண்டிப்பா பவானி அவ குழந்தைய அநாதையா விட மாட்டா. இந்த வேட்டை உலகத்துல தன்னையும் தன்னோட குழந்தையையும் கண்டிப்பா அவ பொருத்திப்பா.

பெண்ணோட உணர்வுகள் தான் இங்க குறையுதுன்னு சொன்னேனே தவிர, சம்பவங்கள விவரிச்சிருக்குற விதம் பயங்கரம். லிங்கப்பா உடம்பு எரிஞ்சி, கரிஞ்சி விழுறத விவரிச்ச விதம், பால்காரர் கொலைய விவரிக்குற இடம் எல்லாம் அப்படியே காட்சிய கண் முன்னால கொண்டு வந்து நிறுத்திடுது. லிங்கப்பாவோட பவானியோட கடைசி பயணமும் கண் கலங்க வைக்குது. அந்த இடத்துல பவானியோட மனச, உணர்வ கொஞ்சம் ஆழமா சொல்லி இருக்கார் ஆசிரியர்.

பவானிக்காக இந்த நாவல்னு சொன்னா அத என்னால ஏத்துக்க முடியாது. இதுல முழுக்க முழுக்க ஆண்களோட கதை தான் சொல்லப்பட்டுருக்கு. அதுல முதலும் பத்தொன்பதாம் அத்யாயம் தவிர்த்து, பவானி ஒரு அங்கம் அவ்வளவே தான்.

பஞ்சம், கொலை, அதிகாரம், கம்யூட்டர் வர்க்கம்ன்னு ஆசிரியர் விவரிக்குற எல்லாமே யதார்த்தத்த உணர்த்துது. ஒரு நகரம் எப்படி தன்னோட கிளைகளை பரப்பி மனிதாபிமானம், சுகாதாரம் எல்லாத்தையும் அழிக்குது, எப்படி அது தன்னை இன்னொரு நிலைக்கு தயார் படுத்திக்குதுன்னு எல்லா விசயங்களையும் அழகா அடுக்கி இருக்கார் பா. மணிகண்டன். அத படிச்சுட்டு நாம இங்க சொகுசா இருக்கோமோன்னு ஒரு குற்ற உணர்ச்சி என் மனசுல வராம இல்ல. கடைசியா இந்த குற்ற உணர்ச்சி நான் பி.ஜி படிக்குறப்ப மும்பைக்கு இண்டஸ்ட்ரியல் விசிட் போனப்ப ஏற்பட்டுச்சு. அந்த அனுபவம் பத்தி இன்னொரு நாள் கண்டிப்பா எழுதணும்.



மூன்றாம் நதி – ஒரு பெண் அப்படிங்குற காரணத்தால இன்னும் இந்த நாவல்ல என்னோட எதிர்பார்ப்பு அதிகமா இருந்துருக்கலாம். அதனால கொஞ்சம் ஏமாற்றம்னு தான் சொல்லணும். மத்தப்படி எனக்கு தெரியாத ஒரு இடத்துல நின்னுகிட்டு மூச்சு முட்டின உணர்வு இத படிச்சதும். நகரம் பழகிக்கணும்.

3 comments:

  1. அருமையான விமர்சனப் பகிர்வு... வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. சிறந்த திறனாய்வுப் பார்வை

    ReplyDelete
  3. Dear madam. really nice riview and super discriptions. your real life experiences made your riview as more powerfull.

    ReplyDelete