Saturday 13 August 2016

செல்பியும் காதலும்




நான் என்னையே கொண்டாடத் தொடங்கியிருக்கிறது ஒரு எட்டு மாசமா தான். எப்பவுமே என் மேலயோ என் உருவம் மேலயோ நான் அக்கறை எதுவும் எடுத்துகிட்டதேயில்ல. ஆனா வழக்கத்துக்கு மாறா இப்பல்லாம் செல்பியா எடுத்து தள்ளிகிட்டு இருக்கேன்.

இந்த மூஞ்சிய அந்த கோணத்துல எடுத்தா நல்லா இருக்குமோ, இந்த கோணத்துல எடுத்தா நல்லா இருக்குமோன்னு வித விதமான செல்பிக்கள் அதெல்லாம். அதெல்லாம் பத்தாதுன்னு, வித விதமா எடிட் பண்ணி அத வேற ரசிக்க ஆரம்பிச்சிருக்கேன்.

இந்தா ரெண்டு நாள் முன்னால எந்த விதமான எடிட்டும் பண்ணாம இருக்குற மூஞ்சிய அப்படியே வாட்ஸ் அப்ல அப்லோட் பண்ற அளவு தைரியம் வந்திருக்கு.

இந்த தைரியத்துக்கு பின்னணியில அவ இருந்தா. ஆமா, நான் அவளுக்கு செய்த துரோகம் ஒண்ணு என்னை கூனி குறுகி போக வச்சிருந்துச்சு. அதுல இருந்து வெளிவரவே முடியாத அளவு குற்ற உணர்ச்சியில அழுதுகிட்டே இருந்தேன். அப்ப தான் முதல் முதலா நான் அப்லோட் பண்ணியிருந்த என்னோட போட்டோ ஒன்னை வாட்ஸ் அப்ல பாத்துட்டு அவ கிட்ட இருந்து அந்த மெஸ்சேஜ் வந்துருந்துச்சு. “அசத்துற அக்கா, அடி தூள்”னு. “அடியே செல்லமே, லவ் யூ, உம்மா”ன்னு பதில் அனுப்பி வச்சுட்டு கொஞ்சம் கொஞ்சமா நான் உடைஞ்சு அழ ஆரம்பிச்சிருந்தேன். அதுல எனக்கான குற்ற உணர்ச்சி கரைஞ்சுகிட்டே வந்துச்சு.

இந்த கண்களும், கன்னங்களும், கூடவே அந்த தலைமுடியும் எந்த விதமான கவனிப்பாரும் இல்லாம எப்படியோ சிதஞ்சி போய் இருந்துச்சு. கண்ணாடியே பாக்க மறந்த மூஞ்சிய தடவி பாத்தா சொரசொரப்பு. ஆங்காங்கே கருப்பு திட்டுக்களோட இருந்த மூஞ்சிய கொஞ்ச நேரம் வருடிட்டே இருந்தேன். திடீர்னு நான் அழகா இருக்குற மாதிரி தோண ஆரம்பிச்சுது.

அதோட கூடப்பொறந்தவளோட உற்சாக முகம். நீ என் அக்காக்கா. உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும்னு சொன்ன அவ வார்த்தைகள். எனக்கே நான் ரொம்ப ரொம்ப அழகா தெரிய ஆரம்பிச்சேன். ஆமா, நான் நிஜமாவே ரொம்ப அழகி தான். யார் இல்லன்னு சொன்னது?

இந்த செல்பி மோகம் எனக்கு அவளால தான் வந்துச்சு. ஒவ்வொரு தடவையும் புதுசு புதுசா போட்டோ எடுத்து போடுறப்பவும் “அழகி”ங்குற எழுத்து உற்சாக குரலா என் காதுல வந்து விழும். கூடவே சில பல டிப்ஸ்களும்.

இப்படி தான் நேத்து உள்ளது உள்ளபடி ஒரு போட்டோவ அப்லோட் பண்ணியிருந்தேன். “பொட்டு எங்கக்கா? பொட்டு வச்சு போட்டோ போடு”ன்னு கட்டளை அந்த பக்கம் இருந்து.

நான் எடுக்குற போட்டோவுல எல்லாம் என் நெத்தியில இருக்குற பொட்டு எப்பவுமே போட்டோஷாப் செய்யப்பட்டது தான். ஆமா, நான் நெத்தியில பொட்டே வைக்குறது கிடையாது.

இந்த பொட்டு நான் ஏன் வைக்க மாட்டேங்குறதுக்கு எல்லாம் ஒரு ப்ளாஸ்பேக் இருக்கா இல்லையான்னு தெரியாது, ஆனா எனக்குன்னு ஒரு நண்பன் இருந்தான்.

.......................................

நம்ம சொந்த வீட்டுக்குள்ள வந்து உக்காந்துக்கிட்டு நம்மள பாத்து ஒருத்தர் “வாங்க, வாங்க”ன்னு வரவேற்றா எப்படி இருக்கும்? எனக்கு அப்படி தான் இருந்துச்சு என் அப்பா மேனேஜ்மென்ட்ல இருந்த காலேஜ்லயே வந்து என்கிட்டயே “ஹாய் ஐயம் ஸோ அண்ட் ஸோ. வெல்கம் டு அவர் டிபார்ட்மென்ட்”ன்னு கை பிடிச்சு குலுக்கின போது.

எனக்கு அவன பிடிச்சுதா இல்லையான்னு தெரியாது, ஆனா அவன் பெயர் பிடிச்சு இருந்துச்சு. அந்த ஸோ அண்ட் ஸோ பெயர் தான் எந்த தயக்கமும் இல்லாம அவனுக்கு கைகுடுக்க வச்சுது.

அதுக்கப்புறம் பெரும்பாலும் நாங்க ஒண்ணாவே தான் சுத்திட்டு இருப்போம். பொண்ணுங்க எல்லாம் அவன மாதவன் மாதவன்னு தான் கூப்டுவாங்க. அவனுக்குமே அந்த திமிரு உண்டு, நாம ரொம்ப அழகா இருக்கோம்னு. அடிக்கடி அதட்டி வைப்பேன், சினிமா மோகத்துல மிதக்காதன்னு.

அவன் பிறந்தநாளுக்கு அவனையே வரைஞ்சு குடுக்கப் போறேன்னு நான் சொன்னப்ப விழுந்து விழுந்து சிரிச்சான். அடேய், நான் ஏதோ சுமாரா வரைவேன்டான்னு கெஞ்சி எல்லாம் பாத்தேன். ஒரே ஒரு போட்டோ குடுடான்னு அவன் பின்னால அலைஞ்சேன். ம்ஹும், பய அசரவே இல்ல. அவன் அம்மா தான் அதான் போட்டோ கேக்குறால, குடேன்ன்னு சொன்னாங்களாம். ஒருவழியா போட்டோ கிடைச்சிடுச்சு.

ரெண்டு நாள் தூங்காம உக்காந்து அவன வரைஞ்சேன். அம்மா வேற திட்டிப் பாத்துட்டு ஓய்ஞ்சு போய்ட்டா. கடைசியா அவன் பிறந்தநாளுக்கு காலேஜ்ல எல்லார் முன்னாலயும் கேக் வெட்டி, என் கிப்ட்ட பிரிச்சி பாத்தவன் அசந்துட்டான். ஹே... ஹேன்னு ஒரே கூச்சல். தேங்க்ஸ்டி, தேங்க்ஸ்டின்னு அம்பது தடவையாவது சொல்லி இருப்பான். அப்ப என்னை ரெண்டு கண்களும், அவன ரெண்டு கண்களும் கண்காணிச்சத நாங்க கவனிக்கவே இல்ல.

ரொம்ப வளவளன்னு அறுக்காம நேரே விசயத்துக்கு வரேன். வழக்கமா காலேஜ்ல நான் நடுவுல உக்காந்துட்டு இருந்தேன்னா, வலது பக்கம் அவனும் இடது பக்கம் அவளுமா உக்காந்து இருப்பாங்க.

நடுவுல என்னை வச்சுகிட்டு, எனக்கே தெரியாம கிட்டத்தட்ட ஒரு வருசமா அதுங்க ரெண்டும் கண்ணும் கண்ணும் நோக்கிட்டு இருந்துருக்குதுங்க. விஷயம் தெரிய வந்தப்ப எனக்கு ஒரே அதிர்ச்சி தான். அடேய், எரும எரும இப்படி போய் மாட்டிகிட்டியேடான்னு அவன குனிய வச்சு குமுறனும் போல இருந்துச்சு. ஆனா, “எங்க அவள வேணாம்னு நீ சொல்லிருவியோன்னு தான் உன் கிட்ட விசயத்த சொல்லவே இல்ல. நீ மட்டும் நோ சொல்லி இருந்தா உன் நட்பையே நான் தூக்கி போட்ருப்பேன்”ன்னு அவன் சொன்னதும் நான் அமைதியாகிட்டேன். காதல், எங்க யார்கிட்ட எப்படி வரும்னு சொல்லவே முடியாதுல.

எனக்கு அவளோட முந்தைய ரெண்டு காதல் பத்தி தெரியும். ரொம்ப ஈசியா அன்புக்கு அடிமையாகுற அவ குணம் தெரியும். அத விட அவளுக்கு எது ரொம்ப ரொம்ப பிடிக்கும்னும் தெரியும். அதனாலயே அந்த காதல் அவங்களுக்குள்ள செட் ஆகாதுன்னும் தெரியும்.

திடீர்னு ஒரு நாள் கால் பண்ணி இருந்தான். இன்னும் ஒரே வாரத்துல உனக்கு ஒரு குட் நியூஸ் சொல்றேன்னு. அடுத்த நாளே அவள் அப்பாவும் என் அப்பாவும் பிசினஸ் மூலமா தெரிஞ்சவங்கங்குற முறைல அவ கல்யாண பத்திரிக்கை எங்க வீடு தேடி வந்துச்சு.

கல்யாணத்துக்கு போயிட்டு வந்த அப்பா, “பொண்ணு முகத்துல என்னமா ஒரு லெட்சுமி களை. சிரிச்ச முகம். மாகாலெட்சுமி மாதிரி இருக்கா”ன்னு சொன்னப்ப நான் புன்னகை புரிஞ்சுகிட்டேன். அப்புறம் ஒரு நாள் அவன் அவ எப்படி இருக்கான்னு என் கிட்ட விசாரிச்சு தெரிஞ்சுகிட்டான்.

..............

நான் அந்த பொட்டு விசயத்த அப்படியே விட்டுட்டு என்னென்னவோ பேசிட்டு இருக்கேன்ல, அப்பவே சொன்னேனே, ரெண்டு கண்கள் என்னை கவனிச்சுட்டே இருந்துச்சுன்னு. இப்ப நாம அந்த கண்களுக்கு சொந்தக்காரனுக்கு வருவோம்.

கிட்டத்தட்ட ஒரு வருஷம் இவன் என்னை தூரமா இருந்தே கவனிச்சுட்டு வந்தவன். நான் சொன்னேனே என் வலது பக்கம் அவன், இடது பக்கம் அவள்ன்னு, இவன் எப்பவும் எனக்கு எதிர நேரே உக்காந்துட்டு இருப்பான்.

ரெண்டாம் வருஷ தொடக்கத்துல தான் நான் இவன கவனிக்க ஆரம்பிச்சேன். இவன் கூட நெருங்கவும் ஆரம்பிச்சேன். “அடேய்”ன்னு அதட்டலா கூப்ட்டு, எங்களோட அரட்டைல இவனையும் வம்படியா சேர்த்துப்பேன்.

ஒரு நாள் கவிதைன்னு எதையோ ஒண்ணை கிறுக்கிகிட்டு வந்து நீட்டினான். வாங்கி படிச்சுட்டு ஒண்ணும் புரியல போன்னு திருப்பி குடுத்தேன். கோபமா அத கசக்கி குப்பைல எறிஞ்சான்.

ஒரு நாள் எல்லோரும் உக்காந்து பேசிட்டு இருக்குறப்ப அவ சொன்னா என்ன வேணா செய்வேன்னு சொன்னான். பக்கத்துலயே ப்ராக்ட்டிக்கலுக்காக வச்சிருந்த பேக்டீரியா கலவை இருந்துச்சு. எடுத்து குடிடான்னேன். எந்த தயக்கமும் இல்லாம குடிச்சுட்டான்.

யாருக்கு எல்லாம் தண்ணி அடிச்சி பழக்கம் உண்டுன்னு ஒரு நாள் பார்மசி க்ளாஸ்ல சார் கேட்டப்ப, இவன் மட்டும் தான் எழுந்து நின்னு, நான் அடிப்பேன், ஆனா இப்ப விட்டுட்டேன்னு என்னை பாத்துகிட்டே சொன்னான்.

அம்மை வந்து பதினஞ்சு நாளா நான் காலேஜ் பக்கம் போகலன்னதும் அவன் தாடி வளத்துட்டு திரிஞ்சதாவும், எனக்காக தினமும் கோவிலுக்கு எல்லாம் போய் பிரார்த்தனை பண்ணினதாகவும் கேள்விப்பட்டேன். நான் லீவ் முடிஞ்சி போனப்ப அவன காணோம். மறுநாள் உள்ளங்கைல திருநீறு கொண்டு வந்து நீட்டினான். முதல் வருஷம் கோவில் பிரசாதம்னு நான் குடுத்த அரவணைய தொடவே மாட்டேன்னு அடம் பிடிச்சவன், எதுக்காக எனக்காக கோவிலுக்கு போனான்னு அப்ப கூட நான் புரிஞ்சுக்க விரும்பல.

நான் அவன் கூட தோள்ல கைபோட்டு திரிஞ்ச காலம் எல்லாம் தூரமா நின்னு புன்னகையோட பாத்துட்டு நின்னவன் இவன். கொஞ்சமே கொஞ்சம் இவன் மேல எனக்கும் ஏதோ பூக்க தொடங்கின நேரம் ஒரு நாள் எனக்கும் காதலுக்கும் ஏழாம் பொருத்தம்னு புரிஞ்சுகிட்டேன்.

இந்த பையன உனக்கு பிடிச்சிருக்கான்னு அப்பா கேட்டப்ப, இல்லப்பா, இவனுக்கும் எனக்கும் செட் ஆகாது, நீங்க வேற பையன பாருங்கன்னு சொல்லிட்டேன்.

காரணம் கேட்ட அப்பாவுக்கு, அவன் மதத்த காரணமா காட்டிட்டு நான் மவுனமாகிட்டேன்.

அப்ப இருந்து இப்ப வரைக்கும் நான் பொட்டு வச்சதே இல்ல.

6 comments:

  1. ரொம்ப அருமை....
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. அருமை. பாராட்டுகள்.

    ReplyDelete
  3. எங்கோ தொடங்கி எங்கோ முடிந்திருக்கிறது. பொட்டின் ரகசியம் புரிந்தது.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. புரிய கூடாதுன்னு தான் வித்யாசமா எழுதுவோம்னு எழுதினேன். புரிஞ்சிடுச்சா?

      Delete