Tuesday 16 August 2016

அன்புள்ள சூர்யாவுக்கு



சூர்யா,

நீ என் பையன். உனக்கு இப்ப பதினோரு வயசு. ஆனா அந்த வயச மீறுன மெச்சூரிட்டி உனக்கு உண்டு. இந்த லெட்டர் நான் எழுத வேண்டிய அவசியமே இல்ல. ஆனாலும் எழுதுறேன். ஏன் தெரியுமா?

எத்தனையோ பெத்தவங்க அவங்க பிள்ளைங்களுக்கு செய்றது எல்லாமே தியாகம்னு நினச்சு தான் செய்றாங்க. பிள்ளைங்களுக்காகவே செய்றாங்க. ஆனா எப்பவும் உனக்காக இவ்வளவு கஷ்டப்பட்டேன்னு சொல்லாம விட்டுடுறாங்க. இதனால தான் அவங்க படுற கஷ்டம் எல்லாமே பெத்த பிள்ளைங்களுக்கு தெரியாமலே போய்டுது.

எனக்கு தெரியும், நான் அம்மான்னு உனக்கு எந்த கடமையும் செய்யல. ஏன்னா, அதுக்கான பொறுப்பு எனக்கு அளிக்கப்படல. நீங்க என் கூட தான் இருக்கணும்னு நான் ஆசைப்பட்டப்ப எல்லாமே கைமீறி போய்டுச்சு. அது ஏன், எப்படின்னு உனக்கு கண்டிப்பா தெரியப்படுத்துவேன்.

மொவனே, எனக்கு உன்னையும் உன் அக்காவையும் கண்டா பயம். எப்படி உன் அப்பாவ பாத்து நான் நடுங்குவேனோ அப்படியான ஒரு பயம்.

அடுத்தவங்கள அதிகாரப்படுத்தி, காயப்படுத்துற எந்த குணமும் கடைசி வரைக்கும் நிலைக்கப் போவதே இல்ல மொவனே. உன் அம்மா, அதான் நான், யாரையும் காயப்படுத்துனது இல்ல, ஆனா உன் தாத்தாவோட அதிகாரத்தோட வாழ்ந்தவ. அவ கிட்ட எது வேணா இல்லாம போயிருக்கலாம், ஆனா தன்மானம்னு ஒண்ணு நிறைய இருந்துச்சு. ஆனா அத எல்லாத்தையும் உங்க கிட்ட நான் இழந்துட்டேன். எனக்கு பெத்த பிள்ளைங்க கூட வேணாம்னு நான் முடிவுக்கு வந்ததே இதனால தான்.

இத படிக்குறப்ப உனக்குள்ள ஒரு ஏளனம் எழலாம். உங்க கிட்ட நான் எவ்வளவோ அவமானப்பட்டுட்டேன். இன்னிக்கி உச்சகட்டமா அப்படி ஒரு அனாதைத்தனத்தோட நான் ரோட்டுல நின்னேன்.

உனக்கு தெரியுமா, பத்து வயசுல உனக்கு இருக்குற இந்த சுதந்திரம் முப்பது வயசுல உன் அம்மாவுக்கு இல்ல. என்னை இன்னமும் சின்னப்புள்ளையா நினச்சு வீட்டுக்குள்ள பூட்டி வைக்குற என் அப்பா. ஏதோ ஒரு காலம் விடியும், என்னிக்காவது நானும் சுதந்திரமா வாழுவேன், வாழணும்ங்குற ஆசையோட தான் ஒரு வேலைக்காக ஓடி ஓடி அப்ளிகேசன் போட்டுட்டு இருந்தேன்.

அப்ளிகேசன்னா ரொம்ப சாதாரணமா நினைச்சுடாத. எப்போ நான் வேலை தேட ஆரம்பிச்சேனோ அப்ப தான் நான் என்னையே புதுசா புரிஞ்சுகிட்டேன்.

உனக்கு அம்மாவ பத்தி என்ன தெரியும்? அவளுக்கு ஒண்ணுமே தெரியாது, அவ ஒரு லூசு, அவ ஒரு பைத்தியக்காரி, ஆங், முந்தாநேத்து சொன்னியே சூனியக்காரி, இதெல்லாம் தானே.

ஆனா நான் சொல்லட்டுமா உன் அம்மா யாருன்னு?

வாழ்க்கைல எத்தனையோ அவமானப்படுத்தல், போராட்டங்களுக்கு இடையில அவ ஒரு டாக்டரேட். பி.ஹச்.டி முடிச்சவ.

இதுவரைக்கும் தான் கஷ்டப்பட்டு படிச்சத எல்லாம் ரொம்ப சுலபமா எல்லாரும் புரியுற மாதிரி மூணு புக் எழுதினவ.

அவ இதுவரைக்கும் இன்டர்நேசனல் அளவுல வெளியிட்ட ஆராய்ச்சி கட்டுரைகள் இருபத்தி ஒன்பது.

ஒன்பது தடவ இண்டர்நேசனல், நேசனல் கான்பரென்ஸ்ல மேடையேறி பேசி இருக்கா.

ஏழு கான்பரென்ஸ் படிக்குற காலங்கள்ல கலந்துகிட்டு இருக்கா.

தான் வேலை பாத்த காலேஜ்ல ஒரு நேசனல் கான்பரன்ஸ், ரெண்டு மாவட்ட அளவு நிகழ்ச்சிகள் முன்ன நின்னு நடத்தி இருக்கா.

எடிட்டர் பதவியையும் அவ விட்டு வைக்கல. அவ காலேஜ் மேகசீன் எடிட்டர் அவ தான். அது மட்டும் இல்ல, வேலை பாத்த காலேஜ்ல அவ அட்மிசன் கமிட்டி மெம்பர். இன்னும் சொல்றேன் கேளு, அவ டிபார்ட்மென்ட் ஹச்.ஓ.டி அவ தான்.

ஸ்கூல், காலேஜ் லெவல்ல அவ வாங்குன பரிசுகள் பெரும்பாலும் எல்லாமே முதல் பரிசுகள் தான். கிட்டத்தட்ட பதினேழு பரிசுகள். எல்லாமே பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, சிறுகதைகளுக்கு வாங்கினது தான். இதுல யூனிவேர்சிடி அளவுல இளைய சமுதாயம் பத்தி எழுதின கட்டுரைக்கு முதல் பரிசு, கன்னியாகுமரி மாவட்ட அளவுல எட்டாவது படிக்குறப்பவே அவ எழுதின சிறுகதைக்கு முதல் பரிசு.

அவளுக்கு எத்தனை ப்ரெண்ட்ஸ் உண்டுன்னு உனக்கு தெரியுமா? அவள ரொம்ப ரொம்ப நேசிச்ச ப்ரெண்ட்ஸ் அவங்க எல்லாரும்.

நேத்து என் மாணவி ஒருத்தி உன் கிட்ட என்னை பத்தி சொன்னாளே, “உன் அம்மா தான் எங்க எல்லாருக்குமே ரோல் மாடல்”ன்னு. நீ கூட நக்கலா இவளா, இத நான் நம்ப மாட்டேன்னு சொன்னியே, ஆனா அது தான் உண்மை சூர்யா.

என் ப்ரெண்ட்ஸ், எனக்கு பாடம் கத்து குடுத்த ஆசிரியர்கள், என் ஸ்டுடென்ட்ஸ் எல்லாருமே என்னை தான் ரோல் மாடலா சொல்லுவாங்க.

உன் அம்மாவுக்கு பயம்னா என்னனே தெரியாது தெரியுமா? தனி ஆளா குத்த வர்ற கோவில் கிடாவுல இருந்து மிரண்டு வர்ற மாடு வரைக்கும் அடக்குவா. அவளுக்கு பறவைகள், விலங்குகள் பாசம் புரியும். அதோட பாஷை புரியும்.

இப்படி எல்லாம் இருந்த உன் அம்மா இன்னிக்கி ஒரு உதவாக்கரையா இருக்க யார் காரணம் சூர்யா?

இந்த ஆணாதிக்க சமூகம்.

முப்பத்தாறு வயசுலே படம் பாத்தல. அதுல ஒரு கேள்வி வருமே, ஒரு பெண்ணோட எக்ஸ்பயரி டேட்ட முடிவு பண்ணுறது யாருன்னு?

அப்படி தான் என்னோட எக்ஸ்பயரி டேட்ட முடிவு பண்ணினது மூணு பேரு.

முதல்ல காசுக்காக மட்டுமே என்னை கட்டிகிட்ட உன் அப்பா. என்னை பைத்தியக்காரியாக்கி அத்தன சொத்தையும் சுருட்டிடணும்னு பக்காவா ப்ளான் போட்டு, கடைசி கட்டத்துல வெறி புடிச்சு இன்னமும் என்னை கொலை பண்ண சுத்தி சுத்தி வர்றவன்.

அடுத்து, காசு பணத்த இழந்துடுவோம்னு பயந்து உன் அப்பா கிட்ட இருந்து என்னை மீட்டு, எங்க அவனால என்னோட உயிருக்கு ஆபத்து வந்துடுமோன்னு என்னை பூட்டி வச்ச என் அப்பா. அவருக்கு இந்த சமூகத்தின் மேலான பயம்.

அடுத்ததா நீ.

உனக்கு கண்டிப்பா நியாபகம் இருக்காது, ஆனா எனக்கு இருக்கு. நீ, நான், அக்கா மூணு பேருமே மெத்தைல படுத்துக்கிட்டு நம்மோட ஆசைகள் என்ன என்னனு பெரிய பெரிய கனவுகளோட பேசிப்போம். நமக்கு இந்த உலகத்தையே சுத்தி வர ரொம்ப ஆசை. சாதாரண மக்களோட மக்களா கலந்து வாழ ஆசை. எல்லோரையும் நேசிக்க ஆசை. இப்ப வரைக்கும் என்னோட ஆசைகள் இவ்வளவே தாண்டா மொவனே.

ரெண்டு பிள்ளைகள வளர்க்க முடியாதுன்னு என்னை வளர்த்தவங்க கிட்டயே உன்னை தூக்கி குடுத்தது என்னோட தப்பு. சூர்யா, உன்னை விட்டுருக்க கூடாது மொவனே. உன் அக்காவையும் உன் தாத்தாகிட்ட விட்டுருக்க கூடாது. இப்போ உங்கள மீட்டெடுக்கவே முடியாத பாவி ஆகிட்டேன்.

இன்னிக்கி நடந்த சம்பவம் தான் என்னை இத எழுத வைக்குது. நான் வேலை தேடி அப்ளிகேசன் போட்டுட்டு இருக்கேன்னு சொன்னேன் இல்லையா, அதனால எனக்கு ஏகப்பட்ட மன உளைச்சல், உடல் வலி. எல்லாம் சேர்ந்து தான் என் உடல்நிலைய ரொம்ப படுத்திடுச்சு. எத்தனையோ நாள் என்னை அறியாமலே மயங்கி விழுந்துருக்கேன். என் உடல் நிலை பத்தி உனக்கு தெரியப்படுத்தாம போனது என்னோட தப்பு தான். ஆனாலும் ஒரு நாள் நீ இருக்குறப்ப மயங்கி விழுந்தப்ப நடிக்குறேன்னு சொன்ன. அதெப்படி உன்னால அவ்வளவு அழகா நடிக்க முடியுதுன்னு நக்கல் பண்ணின. சரி அத எல்லாம் விடு.

நான் ரொம்ப அவசரமா வெளில போக வேண்டியது இருந்துச்சு. கதவ தொறந்து விடச் சொல்லி உனக்கு நான் போன் பண்ணினேன். ஆமா, ஒரு அம்மாவா இருந்தும், எனக்கு என்ன தேவை, எனக்கு எவ்வளவு காசு வேணும்ன்னு நான் உங்க கிட்ட தான் கெஞ்சி கேக்கணும். என்னோட தேவை அவசியமா இல்லையா, எனக்கு காசு கொடுக்கலாமா வேணாமா, என்னை வீட்டை விட்டு திறந்து விடலாமா வேணாமான்னு முடிவெடுக்குற எல்லா அதிகாரமும் இருந்தது உன் கையில. உன் தாத்தா, அதான் என் அப்பா அப்படி தான் உன்னை பழக்கி வச்சிருக்கார். ஏன்னா, வீட்டுக்கு அடுத்த ஆம்பிள்ளை நீ தானாம். நீ தான் அம்மாவ இனி கவனிச்சுக்கணுமாம்.

நான் உன்னை கூப்ட்டுகிட்டே இருக்கேன். அப்ளிகேசன் அனுப்ப எனக்கு கடைசி நாள். கட்டுகட்டா ஜெராக்ஸ், பிரிண்ட் அவுட் எல்லாமே எடுத்தாகணும். நீ வரவே இல்ல. அப்படி நீ இந்த நேரம் வீட்டை விட்டு வெளில போக வேணாம்னு கோபமா சொல்லி போனை வச்சிடுற.

பின் வாசல் வழியா தட்டு தடுமாறி போய், அவ்வளவு பெரிய கேட்டை தொறந்து நான் வெளில ரோட்டுல நின்னப்ப என் நிலை, உங்க நிலை எல்லாம் நினச்சு ஓ-ன்னு அழுதேன் சூர்யா. பெத்த பிள்ளைங்க கூட எனக்கு இல்ல சூர்யா.

எனக்கு பயமா இருக்குடா. எல்லாருமே நல்லா இருக்கணும்னு ஆசைப்படுவேன். அத்தனைபேருக்கும் நான் புத்திமதி சொல்லுவேன். ஆனா என் பிள்ளை நீ இப்படி தாறுமாறா நடந்துக்குறத நினச்சு எதுவுமே செய்ய முடியாம கைய பிசஞ்சுகிட்டு இருக்கேன்.

உனக்கு என் மேல மிகப்பெரிய கோபம் இருக்கலாம்.

என்னை சூனியக்காரின்னு சொல்லலாம்.

ஒரு அம்மாவுக்கான எந்த பொறுப்பையும் நான் செய்யலன்னு சொல்லலாம்.

ஆனா உன் அம்மாவுக்கு தெரிஞ்ச சூர்யா, அவ கைய விட்டு போய்ட்டான். அவ கிட்ட காசுக்காகவும், தன்னோட தேவைகள நிறைவேத்திக்குறதுக்காகவும் மட்டுமே வருவான். அவனுக்கு சைக்கிள் வேணுமா அம்மாகிட்ட வருவான், மீன் வேணுமா அம்மா கிட்ட வருவான், இன்னும் என்னென்ன வேணுமோ அத எல்லாம் வாங்க அம்மாகிட்ட வருவான். எப்போ எல்லாம் அவளால அத அவனுக்கு குடுக்க முடியலையோ அப்போ எல்லாம் அவ அவனுக்கு சூனியக்காரி ஆகிடுவா. இத்தனைக்கும் அவன் வயசு பதினொன்னு.

ஆனா ஒண்ணே ஒண்ணுடா மொவனே,

இந்த உலகத்துல கோழைகளும், பயந்தாங்கொள்ளிகளும் வாழவே முடியாது. அவங்கள இன்னும் அடிமைப்படுத்தி வைக்கவே இந்த சமூகம் மட்டுமில்ல பெத்த பிள்ளைங்களும் விரும்புவாங்க.

டேய், இதுவரைக்கும் நான் கஷ்டப்படுறேன்னு யார்கிட்டயும் புலம்பினதே இல்லடா. சாக கிடந்த கதை எல்லாம் கூட ஒரு சாகசமா தான் எல்லாருக்கும் சொல்லிட்டு வந்துருக்கேன். இப்பவும் அதே தான். இத எல்லாம் நான் ஒரு சாகசமா தான் எடுத்துக்கப் போறேன். ஆனாலும் உன்னால ஒரு கணம் நான் நிலைகுலைஞ்சு நின்னது உனக்கு தெரியணும்ல, அதுக்கு தான் இந்த லெட்டர்.

ஒரே ஒரு எடுத்துக்காட்டு சொல்றேன் சூர்யா. ஒவ்வொரு உடல் உறுப்பா நான் இழந்துட்டு வந்தாலும், என்னோட கணையத்த நான் இழந்த நேரம், வீட்ல வந்து உக்காந்துட்டு இருந்தேன். நீ என் வயித்துல எட்டி உதச்ச. தையல் விட்டு என் குடல் எல்லாம் வெளில தெரிஞ்சுது. அப்போ கூட காலைல தினமும் ஆஸ்பத்திரி போய் மருந்து போட்டுட்டு, அதே வயித்தோட சேலை கட்டிக்கிட்டு வேலைக்கு ஓடுவேன். வீட்டுக்கு வந்து ஐ என் குடல் தெரியுது பாருன்னு டார்ச் அடிச்சு பாத்து சிரிப்பேன். வாழ்க்கை அவ்வளவே தாண்டா மவனே, கஷ்டம்னு நினச்சா கஷ்டம், சாகசம்னு நினச்சா சாகசம்.

நீ ஒரு அற்புதமான குழந்தை தெரியுமா? உன்கிட்ட நிறைய திறமைகள் உண்டு. அத எல்லாம் பாத்து நான் மலைச்சு போயிருக்கேன். நீ நல்லா வரணும் சூர்யா.

இப்ப கூட நான் உங்ககிட்ட இருந்து தப்பிச்சு போக நினைக்குறதுக்கான காரணம் ரொம்ப சிம்பிள்.

நாளைக்கு இவ என் அம்மான்னு நீங்க நெஞ்சு நிமிர்த்தி நிக்கணும். நிக்க வைப்பேன்.

11 comments:

  1. தங்கள் எண்ணங்களை வரவேற்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. ஆஹா, இதுல எண்ணம் எல்லாம் இல்ல, கஷ்டம் தான். பலபேர் இப்படி தான் கஷ்டப்பட்டுட்டு இருக்காங்க.

      Delete
  2. 36 வயதினிலே வர்சன் ரெண்டுக்கு கச்சிதமாக பொருந்தும்
    கடிதம்/கதை இந்த பதிவு!
    ரசித்தேன் அக்கா!

    ReplyDelete
    Replies
    1. தேங்க்ஸ் மகேஷ். ஆனா ஜெயக்கலனாலும் இந்த மாதிரியான விஷயங்கள் நடக்க கூடாது.

      Delete
  3. is it a true story or just imagination letter mam?

    ReplyDelete
    Replies
    1. உண்மையான கதை தான். பலபேர் வீட்ல இப்படி தான் நடக்குது

      Delete
  4. really heart touching ொரு மகணாய் ென் தாயை நான் ெப்படி நடத்துகிரேன் ென்று ிதயத்தை ாராய்ந்து பார்க்கவைத்த பதிவு.

    ReplyDelete
    Replies
    1. நானெல்லாம் யோசிச்சு பாத்தா எங்கம்மாவ ரொம்ப மோசமா தான் நடத்தி இருக்கேன். மட்டம் தட்டி பேசி இருக்கேன். இப்ப நினச்சா உண்மைலயே அழுகை வருது. முதல்ல நாம திருந்தனும்

      Delete
  5. அருமை... அழகான நடையில் நல்லதொரு பகிர்வு.

    ReplyDelete
  6. நான் ஆன்லைன் ஷாபிங் எதுவும் பண்ணினது இல்லையே. அட, ஷாபிங் போறதே அபூர்வம் தான். இருந்தாலும் தகவலுக்கு நன்றி

    ReplyDelete