Tuesday 13 December 2016

தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றமும் நானும்



போன வாரத்துல திடீர்னு ஒரு போன் கால்.

“எம்மா, தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் சார்பா பத்தாம் தேதி ஒரு மீட்டிங் இருக்கு. அதுக்கு போய்ட்டு வாயேன்”ன்னு சொன்னது சாட்சாத் எழுத்தாளர் பொன்னீலன் தான்.

“ஏதாவது மீட்டிங் போனா என்கிட்டயும் சொல்லுங்க, நானும் வரேன்”ன்னு நான் தான் அவர்கிட்ட சொல்லி வச்சிருந்தேன்.

“சரி, நான் போறேன், அது எங்க நடக்குது”ன்னு நான் கேட்டதும், “நீ போறியனா என்னெயும் கூட்டிட்டு போய்டேன், நானும் உன்கூட வந்துடுறேன்”ன்னார்.

“ஹப்பாடா, நல்லவேளை, வழி தெரியாம நாகர்கோவில்ல திணற வேணாம், தப்பிச்சோம்”ன்னு மனசுல நினச்சுட்டே, “ஐயோ கண்டிப்பா கூட்டிட்டு போறேன், எத்தன மணிக்கு உங்கள கூப்ட வரணும்”ன்னு விவரம் எல்லாம் கேட்டுகிட்டேன்.

அவர்கிட்ட சொன்ன மாதிரியே அஞ்சு மணிக்கு அவர் வீட்டு வாசல்ல போய் நிக்க, அவர் கூட அவர் மனைவியும் வந்தார். ஏற்கனவே ரெண்டு மூணு நாள் அவர் வீட்டுக்கு போயிருக்குறதால அவங்க கூடவும் நல்ல அறிமுகம். அதுவும் பத்து நாள் முன்னால வீட்டுக்கு போனப்ப அவங்க போட்டு தந்த டீ பிரமாதம். பொன்னீலன் சாருக்கு குடுக்காம நாங்க மட்டும் குடிச்சுட்டு வந்துருந்தோம்.

“சுசீந்திரம் தாணுமாலையன் சுவாமி கோவிலுக்கு போறா, அவள செட்டிகுளத்துல இறக்கி விடணும்மா”ன்னு இவர் சொன்னதும் பரஸ்பரம் சிரிச்சுகிட்டே சரின்னு தலையாட்டிகிட்டேன். கார்ல வர்றப்ப ரோடும், அத உடச்சி போட்டுருக்குற விதத்தையும் பத்தி தான் பேசிகிட்டே வந்தோம். அவங்கள இறக்கி விட்டுட்டு நாங்க அப்படியே டதி ஸ்கூல் பக்கத்துல இருந்த ஓய்வு பெற்றோர் சங்கம் இருந்த இடத்துக்கு போனோம்.

அது சா. தேவதாஸ் அவர்களோட இரண்டு நூல்கள் பத்தின கருத்தரங்கம்.

தலைமை கவிஞர் நட. சிவக்குமார்.

சா. தேவதாசோட “கால்வினோ கதைகள், கட்டுரைகள், நேர்முகம்” புத்தகத்த விவரிச்சு ஹச். முஜீப் ரஹ்மானும், “மரண தண்டனையின் இறுதி தருணங்கள்” பற்றி சிவசங்கர் எஸ்.ஜே அவர்களும் பேசினாங்க. கடைசியா உரை சா. தேவதாஸ்.

கவிஞர் நட. சிவகுமார் பேசினப்ப கால்வினோ கால்வினோனு நிறைய பேசினார். கால்வினோவோட ரெண்டு குட்டி கதைகளையும் சொன்னார். கால்வினோவோட காதலன்னும், அவர படிச்சி வாழ்ந்தவன்னு பெருமையா பேசினார். ஹச். முஜீப் ரஹ்மானுக்கும் அவருக்கும் உள்ள நட்பை பத்தி பேசினார். கால்வினோ இல்லனா தன்னோட மூளை செத்துப் போயிருக்கும்னு சொன்னார். நிஜமாவே எனக்கு அவர் சொன்ன ரெண்டு கதைகளோட முடிவுல என்ன சொல்ல வந்தாங்கன்னு புரியவே இல்ல. என்னை மாதிரி ஆட்களுக்கு அவங்க இவ்வளவு பரவசப்பட்டு சிலாகிச்ச கால்வினோவோட அருமைகள கொஞ்சம் புரிய வச்சிருக்கலாம்.

ஹச். முஜீப் ரஹ்மான் பேசினப்ப, எவ்வளவு தான் நாம இதிகாசங்கள படிச்சிருந்தாலும் உலக இலக்கியம் படிச்சா தான் ஒரு விரிவான பார்வை கிடைக்கும்னு சொன்னார். கால்வினோவ தெரிஞ்சுக்கணும்னா க்யூபாவ அறிஞ்சிருக்கணும், லத்தீன் மொழிய அறிஞ்சிருக்கணும், லத்தீன் பாரம்பரியத்த அறிஞ்சிருக்கணும், இத்தாலிய அறிஞ்சிருக்கணும், இத்தாலிய எழுத்தாளர்களை அறிஞ்சிருக்கணும், அப்ப தான் கால்வினோ பத்தி அறிஞ்சிக்க முடியும்னு சொன்னார்.

ரியலிசம் என்னும் எதார்த்தவாதம் சமூகத்தில் உள்ளதை உள்ளப்படி காட்டுற விதம். ரியோ-ரியலிசம் விளிம்பு நிலை மக்களை காட்டுகின்ற முறை. இதுல இலத்தீன் அமெரிக்க பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் ஒரு புதிய மாய யதார்த்தம்ங்குற முறையை பயன்படுத்தி உலகத்துக்கு அறிமுகப்படுத்தினவர் கால்வினோ. அதனாலேயே இத்தாலிய வரலாற்றில் கால்வினோ ரொம்ப முக்கியமானவர்னு ஹச். முஜீப் ரஹ்மான் சொன்னார்.

கால்வினோ கதைகள, புத்தகங்கள நாலு பக்கத்துக்கு மேல யாராலும் படிக்க முடியாதுன்னு அடிக்கடி சொல்லிட்டே இருந்தார். ஏன்னா அந்த முறையே ஒரு அதிர்ச்சிகரமான முறையாம். இப்படியான முறைல கதை சொன்னா அத எப்படி வாசகர்கள் ஏத்துக்குவாங்கங்குற கேள்வி ஆசிரியருக்கு இருந்துருக்கணும், ஆனா அந்த காலகட்டத்துல லத்தீன் அமெரிக்க நாடுகள் அமெரிக்காவோட ஏகாதிபத்தியத்தால நிறைய பாதிக்கப்பட்டதுனும், அப்படி பாதிச்சதால தான் வித்யாசமான கதைகள் எல்லாம் அமைஞ்சதுனும், மேற்கத்திய நாடுகள் இலக்கிய தரங்கள்ல சிறந்து விளங்கினதால அவங்களால அத புரிஞ்சுக்க முடிஞ்சுதுனும் சொன்னார்.

அரசுக்கு எதிரான, ஸ்தாபனங்களுக்கு எதிரான கதைகள கால்வினோ நேரடியா சொல்லாம மாற்று விஞ்ஞான முறை மூலமாகவும் விர்சுவல் பிக்சன் மூலமாகவும் வேற முறைகள்ல சொல்ல ஆரம்பிக்குறார். இத ஏகாதிபத்தியத்துக்கு எதிரான அவருடைய குரலா பதிவு செய்றார். அவர் எந்த மாதிரியான எழுத்தாளர், அவருடைய தேடல்கள் என்னவா இருந்துச்சுங்குற விவரங்கள் எல்லாமே சா. தேவதாசோட “கால்வினோ கதைகள், கட்டுரைகள், நேர்முகம்” புத்தகத்த படிச்சதுக்கு அப்புறம் தான் புரிய ஆரம்பிச்சதுனும், கால்வினோவோட இன்னும் நெருக்கமாக இந்த புத்தகம் உதவிச்சுன்னும் ஹச். முஜீப் ரஹ்மான் தெரிவிச்சார்.

அடுத்து “மரண தண்டனையின் இறுதி தருணங்கள்” பற்றி சிவசங்கர் எஸ்.ஜே பேச வந்தார். மனுசர் நிஜமாவே நிறைய சுவாரஸ்யங்களோட பேசினார். பாக்தாத் அழகி ஒருத்தியை காதலிக்குற மூணு பேர் பத்தின கதை சொன்னார். காதலனோட வேலை காதலிச்சுட்டே இருக்குறது தான். அத தவிர்த்து மாயாஜாலங்களை செய்பவன் காதலனாக முடியாதுன்னு சொன்னார். ஒரு மரண தண்டனை கைதி எப்படி தப்பிக்குறார், எப்படி வீட்டுக்கு போறார், கடைசி காட்சியில தூக்குல போடப்படுறார் அப்படிங்குற ஒரு குறும்படம் பத்தி சொல்லிட்டு, “மரண தண்டனையின் இறுதி தருணங்கள்” பற்றி பேச ஆரம்பிக்குறார்.

அந்த புத்தகத்துல பதினோரு கட்டுரைகள் இருக்குறதாவும் மரணத்தண்டனைக்கான சட்டத் திருத்தத்துக்கான அவசியம் பத்தியும் பேசினார். பேரறிவாளன், யாகூப் மேனன் பற்றி பேசி, மரணத் தண்டனையை எதிர்த்து முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றிய அவசியத்த எடுத்து சொன்னார்.

பிறப்பும், இறப்பும் யாராலயும் முன்பதிவு செய்யவே முடியாது. ஆனா தனியறைல அடைக்கப்பட்ட, மரணம் நிச்சயிக்கப்பட்ட ஒருவனின் மனநிலை என்னவாயிருக்கும்?. சிவசங்கர், ஒரு பத்து நிமிஷம் தனித்துவிடப்பட்ட தன்னோட சொந்த அனுபவத்த சொல்லி, அது எத்தனை கொடுமையானதுன்னு உணர வச்சார். மனிதன் ஒரு சமூக பிராணி, இந்த விலங்குக்குள்ள பல விலங்குகள் இருக்கும். இப்படியான மனுசன மறுபடியும் ஒரு விலங்கு நிலைக்கு கொண்டு போறது தான் மரணத்தண்டனை, ஆயுள் தண்டனைய விட மிக கொடுமையானது மரணத் தண்டனைனு விவரிச்சார்.

இன்னிக்கி இந்தியாவுல ஜாதி அடிப்படையான தண்டனைகள் தான் அதிகம்னும், கொடுக்கப்படுற தண்டனைகள்ல 94 சதவிதத்த தலித் மக்களும், பாட்டாளி மக்களும் தான் அனுபவிக்குறாங்கன்னு புள்ளி விவரங்கள் சொன்னார்.

இந்திய இறையாண்மைக்கு எதிரான விசயங்கள், பயங்கரவாத தாக்குதல், கூட்டு மனசாட்சின்னு மரண தண்டனைக்கு ஆதரவா பேசுறவங்க சொல்லலாம், ஆனா தண்டனைகள் குடுத்துட்டா மட்டும் குற்றங்கள் குறைஞ்சிடுமா? அப்படின்னு கேள்விகள் கேட்டுட்டு, இங்கிலாந்துல நூற்று அம்பது திருடர்கள பொதுவெளில தூக்குல போடுறப்ப, வேடிக்கை பாக்க வந்த மக்கள்கிட்டயே திருடின திருடர்கள் பத்தி சொல்லி, அதனால குற்றங்கள் தண்டனைகளால ஒரு போதும் குறைக்க முடியாதுன்னு சொன்னார்.

சா. தேவதாஸ் கடைசியா பேசினப்ப, கால்வினோவோட பள்ளி நாட்கள்ல முசோலினி சர்வாதிகாரியா இருந்ததாகவும் அவர கிண்டல் பண்ணி கால்வினோ ஒரு கவிதை எழுதினதாகவும், இளமை காலத்துல பாசிசத்துக்கு எதிரா தன் நண்பனோட சேர்ந்து இயங்கினதாவும் சொன்னார். மக்கள் மேல தனக்கிருந்த அக்கறையையும் நலனையும் வேறு கலைவடிவங்கள்ல சொல்ல முடியாத நிலைல எழுத்து மூலமா, புனைவுகள் மூலமா, இலக்கியம் மூலமா குடுத்ததால கால்வினோவ தனக்கு ரொம்ப பிடிக்கும்னு சொன்னார்.

அடுத்ததா, “மரண தண்டனையின் இறுதி தருணங்கள்” பத்தி பேசுறப்ப, ஒரு சட்டவாதி எடுக்க வேண்டிய ஒரு விசயத்த ஒரு இலக்கியவாதி ஏன் எடுக்கணும்னா ஒரு அரசியல் சார்ந்த பிரச்சனைய ஒரு இலக்கியவாதி கைல எடுக்குறப்ப அவங்களால அத வேற கோணத்துல அணுக முடியும்னு சொன்னார்.

தீவிரவாத செயல்கள எடுத்துகிட்டா கூட, பலம் உள்ளவங்க தப்பிச்சிடுவாங்க, அப்பாவிகளும், நேரடி சம்மந்தம் இல்லாதவங்களும் தான் பாதிக்கப்படுறாங்க. மனித உரிமை அடிப்படைல மரணத்தண்டனை என்பது இருக்க கூடாது. ஏன்னா, அது குற்றவாளிக்கு எந்த வித சந்தர்ப்பமும் தர்றது இல்ல. அவன ஒரு நல்ல மனுசனா மாறுறதுக்கு வாய்ப்பு குடுக்காம அரசு கொலை செய்து விடுது. மனித உரிமையை ஆதரிக்குற எல்லா நாடுகளும் மரண தண்டனைய எதிர்க்குது. இந்த நேரத்துல மரணதண்டனைய ஆதரிக்குறது சரியில்லங்குறது தான் ஒரு இலக்கியவாதியோட பார்வைன்னு சொல்லி உக்காந்தார்.

கூட்டம் முடிஞ்சதும் ஒவ்வொருத்தருகொருத்தர் அறிமுகம் பண்ணிகிட்டாங்க. பொன்னீலன் சார் எனக்கு நிறைய பேரை அறிமுகப்படுத்தி வச்சார். ஆனா முதல் சந்திப்புங்குறதால தலையசைச்சு சிரிக்க மட்டும் தான் என்னால முடிஞ்சுது.

இந்த கூட்டத்துல வந்தவங்கள்ல மொத்தமே ரெண்டு பெண்கள் தான். ஒண்ணு நான். இப்ப தான் எட்டிப்பாக்கவே செய்துருக்கேன். இன்னொருத்தங்க உஷா தேவி. அவங்களும் இந்த கூட்டத்துக்கு இப்ப தான் முதல் தடவையா வந்துருக்காங்களாம். மலையாளத்துல மூணு புத்தகம், தமிழ்ல ரெண்டு புத்தகம் எழுதி முடிச்சாச்சு. அதுவும் அவரோட “பள்ளத்தில் இருக்கும் வீடு” சிறுகதை தொகுப்புக்கு கலை இலக்கிய பெருமன்றம், புதுகோட்டை சார்பா விருது கிடைச்சிருக்கு.

மொத்தத்துல கூட்டம் கலைஞ்சு, கார்ல ஏறி வீட்டுக்கு வந்துட்டு இருந்தப்ப நிறைய பிரமிப்பு. இறை நம்பிக்கை, கூட்டம் பத்தின அலசல்ன்னு பேசி களைச்சு, பொன்னீலன் சார அவர் வீட்ல இறக்கி விட்டப்ப, “உனக்கு ஒரு புது உலகத்த அறிமுகப்படுத்தி இருக்கேன். அத நீ கூர்ந்து கவனிச்சுக்கோ. இதுல உனக்கு தேவையானத மட்டும் கிரகிச்சுட்டு, மத்தத சேமிப்புல வை”ன்னு சொல்லிட்டு வீட்டுக்குள்ள போனார்.

அடுத்தடுத்து இன்னும் என்னோட பயணத்த தொடரணும்ன்னு முடிவு எடுத்துட்டு நானும் வீட்டுக்கு வந்து சேர்ந்தேன்.





2 comments:

  1. பொன்னீலன் ஐயா கூட பயணம்... ஆஹா கொடுத்து வைத்தவர் நீங்கள்.
    கல்லூரியில் படிக்கும் போது தமிழ்நாடு கலையிலக்கியப் பெருமன்றத்தில் இருந்தேன். அப்போது ஐயா எங்க ஊர் கலையிலக்கியப் பெருமன்ற விழாவுக்கு வருவார். எங்களுடன் மிகுந்த அன்புடன் பேசுவார்... ஏன்னா நாங்க அவருக்கு மிகவும் பிடித்த பழனி இராகுலதாசன் அய்யாவின் வளர்ப்புக்கள். எனது முதல் கவிதை தாமரையில் வெளிவந்தபோது எனக்கு தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதியிருந்தார்... ஐயாவைப் பார்க்கும் போது கேட்டதாகச் சொல்லுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பா சொல்றேன்.

      Delete