Wednesday 12 June 2019

ஜீவாவின் துர்கா மாதா - எனது பார்வையில்... கவிப்பூரணி

என்னோட நாவலோட word format மகேஷ்கிட்ட குடுத்து படிச்சிட்டு கருத்து சொல்லுமானு கேட்டுருந்தேன்.
அவன் அத அவன் நண்பர்களோட பகிர, இப்போ அவன் நட்பு கவி பூரணி அத படிச்சிட்டு ரிவியூ எழுதி அனுப்பி இருக்காங்க.
என் நாவலுக்கு வந்த முதல் ரிவியூ இது. படிச்சதும் அவ்ளோ சந்தோசம் எனக்கு. 

நல்ல உற்சாகமான வார்த்தைகளோடு துவங்குகிறது இந்நாள்....
...................


Novel என்ற ஆங்கிலச் சொல் ‘புதுமை’யைக் குறிப்பதாகும். அந்த சொல்லிற்கு ஏற்றார்போலவே தோழி ஜீவா அவர்களால் எழுதப்பட்ட ‘துர்கா மாதா’ எனும் இந்த நாவல் நான் இதுவரை படித்திருப்பதில் மிகவும் புதுமையான கதைக்களத்தையும் தற்கால நடைமுறையைக் குறித்த மிக வித்தியாசமான மற்றும் ஆழமான பார்வையையும் கொண்டு ஒரு புரட்சிகரமான படைப்பாக வெளிவந்திருக்கிறது.


எனக்கு தோழி ஜீவா அவர்களை அறிமுகம் செய்து அவர்களது வலைத்தளத்தில் வெளிவந்த‘பாலியல் கல்வி’ தொடரையும் படிக்கத் தூண்டியது தம்பி திருப்பதி மஹேஷ்தான். அந்த தொடர் குறித்தே எனது கருத்துக்களை எழுதி ஜீவா அவர்களுக்கு மின்னஞ்சலாவது அனுப்பிவிட வேண்டுமென மிகவும் ஆர்வத்தோடு இருந்தேன். சில காரணங்களால் அது நடைபெறாமலே போய்விட்டது. அவர்களது ‘தற்கொலைக் கடிதம்’ புத்தகம் கூட என்னிடம் இருக்கிறது. அதற்கும் கூட என்னுடைய கருத்துக்களைச் சொல்லிவிட எண்ணி இருந்தேன். இன்னும் படித்த பாடுதான் இல்லை. ஆனால், அதைவிடவும் ஒரு பெரிய ப்ராஜெக்ட்டில் அவர்களது எழுத்து குறித்ததான எனது பார்வையை முன்வைக்க நல்லதொரு வாய்ப்பு மீண்டும் தம்பி மஹேஷ் மூலமே கிடைத்திருக்கிறது. ‘துர்கா மாதா’ எனும் இந்த நாவலையும் அவரே என்னிடம் கொடுத்து நேரம் கிடைக்கையில் படிக்கும்படி சொல்லி இருந்தார்.

தன்னுடைய முதல் நாவலை இவ்வளவு குறுகிய காலத்தில் சிறப்பானதொரு படைப்பாக அமைப்பது என்பது எல்லோருக்கும் சாத்தியம் கிடையாது. ஆனால் தோழி ஜீவாவிற்கு அது மிக நன்றாகவே தன்னுடைய ஆர்வத்தோடும் பலரது துணையோடும் சாத்தியமாகி இருப்பதற்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

 முன்னுரையைப் படிக்கும் போதே படைப்பு பற்றிய ஆர்வமும் எதிர்பார்ப்பும் மாற்றங்களை எதிர்நோக்கும் ஒரு பெண்ணாக எனக்குள் எழுந்திருந்தது.
பொதுவாகவே நாவல்கள் என்றதும் ஒரு சாதாரணமான அல்லது ஒரு பாமர வாசகியாக நான் எப்போதூமே கதைக்கருவைவிட கதையைத்தான் அதிகம் எதிர்பார்ப்பது வழக்கம். படிக்கும் மகிழ்விற்காக மட்டும் படிப்பதுதான் எனது மனப்போக்கு. ஆனால் முதல் முறையாக இந்த நாவலின் முன்னுரையைப் படித்த போது கதைக்கருதான் இந்த நாவல் படிப்பதற்கே ஒரு பெரிய உந்துதலைக் கொடுத்தது என்பேன்.

முழு படைப்பையும் வாசித்தாகிவிட்டது. ஒரு த்ரில்லர் படம் போல சீட் நுனியில் உட்கார வைத்து மிக மிக அழுத்தமான பெண்ணியம் பேசி இருக்கிறார் எழுத்தாளர்.
பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் சமீப காலத்தில் மிக அதிகமான அளவில் தலை தூக்கி இருப்பதற்கான ஆணி வேர் காரணங்களாக பணபலம், முதலாளித்துவம், நுகர்வு கலாச்சாரம், அரசியல், சமூகப்போக்கு என்று பலதரப்பட்ட விசயங்களை மிகத் தெளிவாகவும் துல்லியமாகவும் நடைமுறையைப் படம் பிடித்துக் காட்டி இருக்கிறார். பெரும்பாலும் இறந்தகால படைப்புகளையே படித்து வந்த எனக்கு, இந்த நிகழ்காலப் படைப்பு படிப்பதற்கு ஸ்வாரஸ்யமாக மட்டுமல்லாமல் சிந்திக்கவும் தூண்டுகோலாய் அமைந்திருக்கிறது.

2 இடங்களை மிகவும் குறிப்பிட்டுப் பாராட்டியே ஆக வேண்டும் என்று எனக்குத் தோன்றிய விசயங்களை இங்கே பகிர விழைகிறேன்.
பாலியல் வன்முறைகளுக்கான காரணங்களை அலசி ஆராய்ந்து அதை விவரித்திருக்கும் இடம் மிகச் சிறப்பு. அதன்பின்னர், good touch bad touch பற்றி துர்கா முன்வைப்பதாக ஆசிரியர் முன்வைத்த இடம் சபாஷ். safe zone என்ற பெயரில் நமது சமு்தாய அமைப்புதான் காமம் குறித்தான தூண்டுதலைப் பிள்ளைகளிடம் உருவாக்குகிறது என்பதும் சுமை ஆகிவிட்ட கல்வி முறை பற்றியும் மறந்து போய்விட்ட விளையாட்டுலகம் பற்றியும் பெற்றோர்களாலும் ஆசிரியர்களாலும் புறக்கணிக்கப்படும் குழந்தைகள் உலகம் குறித்தும் மிகச் சிறப்பாக மனோதத்துவ முறையில் நடைமுறைக்கேற்ற பரந்துபட்ட பார்வையை வைத்திருக்கிறார் ஆசிரியர். குழந்தைகளைக் குழந்தைகளாகப் பார்க்காத ஒரு சமுதாய அமைப்பில் நிச்சயம் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை அந்த சமூகமேதான் திணித்து அதன் விளைவாக அவர்களைப் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக வழிவகுக்கிறது என்பதை சிறப்பாக அணுகி இருப்பதோடு பள்ளிக்கூடங்கள் குழந்தைகளைக் குழந்தைகளாக இருக்க அனுமதிக்கும் ஒரு இடமாக இருக்க வேண்டும் என்பதையும் மிகவும் ஆணித்தனமாகக் கூறி இருக்கிறார்.

இப்போது கதைக்கு வரலாம். புலம்பெயர்ந்து தமிழகம் வந்து பிழைப்புத் தேடும் தன் மாநிலத்தவர் படும் துன்பங்களை நேரடியாக தானே அனுபவித்துப் பார்த்து அவர்களது உணர்வுகளைப் புரிந்து அவர்களைப் பாதுகாக்க ஏதாவது ஒரு வழி செய்ய வேண்டும் என்ற தவிப்போடு வரும் ஒரு ஜார்கண்டியப் பழங்குடிப்பெண்ணான துர்கா சந்திக்கும் போராட்டமே இப்புதினத்தின் சுருக்கமான கதைக்களம். கதாநாயகி துர்காவை மிகவும் எளிமையான துணிச்சலான, குரும்புக்காரத்தனமான மற்றும் அன்பு வாய்ந்த இயல்பான பெண்ணாகப் படைத்திருப்பது சிறப்பு. அநேகம் பெண்கள் காணும் சுதந்திரக் கனவை துர்காவைப் பார்த்ததில் நிஜத்தில் கண்ட திருப்தி எனக்கு.

சு்டரொளி, நிஷா மற்றும் மருத்துவர் கதாப்பாத்திரங்களும் கதைக்கு பலமூட்டின. என்னவோ தெரியவில்லை, இதை வெறும் கதையாக மட்டும் என்னால் ஏதோ கடந்துவிட்டு போக முடியாது என்று தோன்றுகிறது. படித்துவிட்டு சுடச்சுட எழுதித் தீர்க்க வேண்டும் என்பதுபோல் ஏதோ தோன்றுகிறது. ஆனால் அவை கூட வார்த்தைகள் கொண்டு சொல்லுவது மிகக் கடினம்தான். உணர்வுப்பூர்வமாக எங்கேயோ மிகவும் ஆழமாகத் தொட்டுவிட்டீர்கள் ஜீவா.
பழமைவாதத்தை பெண்களால் வெறுக்க மட்டுமே முடிகிறதே தவிர, அதிலிருந்து எப்படி அவர்களுக்கான வாழ்வை அவர்களே தேர்ந்தெடுப்பது என்று புரியாமல் அந்த பழமைவாதத்திலேயே ஊறிப்போய்விடுகிறார்கள் என்று எதார்த்தத்தை சுதந்திர உணர்வை நேசிக்கும் பெண்களின் ப்ரதிநிதியாக எடுத்துரைத்திருக்கிறீர்கள். அருமை...

அதே போல் குடும்ப சூழ்நிலைகளால் எப்படி பாலியல் தொழிலில் பெண்கள் தள்ளப்படுகிறார்கள் என்பதை சஞ்சனா மற்றும் மகா பாத்திரங்களின் வாயிலாகப் பேசி இருக்கிறார். வட மாநிலத்தவர் நம் ஊரில் சந்திக்கும் ப்ரச்சனைகள் அல்லது நமது ஆட்கள் அவர்கள் குறித்து முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் போன்றவற்றை எல்லாக் கோணங்களிலும் இயல்பாக அலட்டலில்லாமல் சொல்லி இருக்கிறார். ஒரு பக்கம் பிழைப்பு தேடி வந்து அடிமைப்பட்டிருப்பவர்கள், மறுபக்கம் வடக்கிலிருந்து இங்கு வந்து அதிகாரம் செலுத்துபவர்கள் என்று வட மாநிலத்தவரின் இரு துருவங்களையும் கதை படம் பிடித்துக் காட்டுவது நேர்மை.

பெரும்பாலும் கதைகளில் வரும் காதல் கூட மிகவும் பழமைவாத சாயப்பூச்சான possessive - ஆகவே இருக்கும். ஆனால், துர்கா ரியாஸ் காதல் மிகவும் வெளிப்படையாகவும் சு்தந்திரமானதாகவும் இருந்தது குறித்து மகிழ்ச்சி. கதையில் ஒரு சமுதாயத்தின் இயக்கத்திலிருக்கும் ஏறக்குறைய எல்லா அம்சங்களும் இடம் பெற்றிருந்ததோடல்லாமல் அன்றாட வாழ்வில் நடக்கும் சிறு சிறு விசயங்கள் கூட அழகாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது.

மொத்தத்தில் ஒரு நல்ல படைப்பைப் படித்த மகிழ்ச்சி மட்டுமல்லாது ஒரு நல்ல ஆழமான பார்வையும் பொறுப்பும் கொண்ட துணிச்சலான, நேர்மையான பெண் எழுத்தாளரின் உணர்வை உணர்ந்த திருப்தி இந்த நாவலைப் படிக்கும் ஒத்த சிந்தனாவாதிகளுக்கு ஏற்படும் என்றுதான் சொல்ல வேண்டும். என் சிற்றறிவிற்கு எட்டிய வரையில் பாரதியார், ஜெயகாந்தன் வரிசையில் ஜீவாவின் துணிச்சல் பாராட்டிற்குரியது. இந்த நாவல் நிறைய பெண்கள் படிக்கும்படியாக சேர வேண்டும் என்பதும் தோழி ஜீவா மென்மேலும் பல படைப்புக்களைத் தமிழ் இலக்கிய உலகிற்குத் தர வேண்டும் என்பதும் அவரை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு துணிச்சல் மிக்க பெண் எழுத்தாளர்கள் மென்மேலும் சுதந்திரமா்க எழுத்துலகிற்கு வர வேண்டும் என்பதும் எனது ஆசை. hats of to you jeeva... வாழ்த்துக்கள்.

1 comment: