Sunday 17 February 2013

நானிங்கு நீயோ?

ஆழ்நிலை தவமாய்
கணினித்திரையில் உன் விரல்கள்
பரபரப்பாய் இயங்கி கொண்டிருக்க…
உன் சிந்தனை சிதறல்களை
உயர்த்திய புருவங்களோடு
கழுத்தை கட்டிக்கொண்டு ரசிக்கிறேன் நான்...!

அதெப்படி?
வார்த்தைகளின் கோர்வைகள்
உன்னிடத்திலே மயக்கம் கொண்டு
அப்படி கிறங்கிப்போய் கிடக்கின்றன?

நீ நினைத்த மாத்திரத்தில்
நினைத்த உருவத்துள் சுலபமாய்
கூடு விட்டு கூடு பாய்ந்து விடுகிறாய்...!
நானோ என்னிடத்திலும்
கொஞ்சம் கவனம் வையென
காது கடித்து என் பக்கம் திருப்புகிறேன்...!

கிழக்கே கரம் விரிக்கும்
கதிரவனும் தோற்றான் போ...
உன் பார்வை அனலினிலே
நெருங்கி வந்து எரிந்து சாம்பலாக
நானொன்றும் சாதாரணமானவளா என்ன?

இறந்த சாம்பலுக்குள்ளிருந்தே
மேலெலும் பீனிக்ஸாய்
என்னையே உயிர்ப்பித்துக் கொண்டுன்
மடியில் அமர்வேன் நான்...!

கைகள் மாலையாய் கோர்த்திருக்க
கெஞ்சும் கிள்ளையாய்
ஒரு அரைப்பார்வை பார்கிறேன் நான்...
ம்ஹும்... அசைவில்லையே உன்னிடத்தில்...!
கோபத்தின் வீரியம் மட்டும்
உதட்டோர சுளிப்பில்
பனிகட்டியாய் உருகிக் கொண்டிருக்கிறது...!

ஓய்வெடுக்கா கரங்களினால்
என் கரம்பற்றி உன் நெஞ்சில் பதிக்கிறாய்...
இதென்ன?
உன் விரலசைக்கும் வேகத்திலே வீழும்
உன் சுயம், கோபம், காதல்,
பொறுப்பு, நேர்மை, கனிவு என
அத்தனை கலவைகளுக்கும்
நானே பிம்பமாகி போகிறேன்?

ஆயுளும் முடிந்துவிட்டால் தான் என்ன?
ஆகாயம் இருக்கும் வரை வாழ்ந்திருப்போமென
பக்கத்து வீட்டு வானொலியும்
நமக்காகவே அறிவித்துக்கொண்டிருக்கிறது...!

1 comment: