Sunday 3 March 2013

வேண்டும் ஒரு உயிர்சாசனம்...!

நானும் யோசித்து கொண்டுதான் இருக்கிறேன்…
விரக்தியும் சோர்வுமில்லாத ஒரு கவிதையை
எழுதி விட வேண்டுமென்று...!

எழுதி விடலாம் தான்...

மூச்சடக்கி தத்தளிக்க வைக்கும்
உணர்வலைகளுக்கு மத்தியில்
பற்றிக்கொள்ள கிடைத்த சிறு மரத்துண்டாய்
நீ என்னோடு தனித்திருந்தால்...!

இத்தனை நாள் காதலில்
எத்தனை நாள் உன்
அருகாமையை வேண்டி நின்றேன் என்று
உண்மையாய் நீ என்னை புரிந்து கொண்டிருந்தால்...!

உன்னை மறந்து என்னோடு
லயித்துக்கிடந்த நாட்களெல்லாம்
மீண்டுமொருமுறை என்றில்லாமல்
ஆயுளுக்கும் தொடருமென உயிர்சாசனம்
எழுதி விட்டு இறுதிவரை காத்திருந்தாயென்றால்...!

எத்தருணங்களிலும் எனக்கான சந்தோசங்களை
நான் இழந்து விடுவதில்லை...
ஆனாலும் உன்னை மட்டுமே
சுவாசித்துக் கொண்டிருக்கிறேன் என்று
எப்படி புரிய வைப்பேன் உன்னிடம்?

உன் சுகம் மட்டுமே பெரிதாய் தெரிகிறதே,
என் நிலை யோசித்தாயா என்று...
சடுதியும் சிந்திக்காமல் கேட்டாயே ஒரு கேள்வி...
இதையே நானும் திருப்பி கேட்டால்?

எங்கிருந்து கற்றுக்கொண்டாய்? என்னிடத்தில்
பொய் சொல்லலாம் என்னும் வித்தையை?
மறந்து விட்டாயே... உன்னை விட
உன்னை அதிகமாய் அறிந்தவள் நான் தானென்று...!

அத்தனையும் அடக்கி விடத்தான் துடிக்கிறேன்...
அடக்கப்பட்ட நெஞ்சுக்குள் ஆக்சிஜன் புறம் தள்ளி
சிகப்பணுக்கள் கைப்பற்றி வெடித்துச் சிதறுகிறது,
அணுஅணுவாய் உன்மேல் நான் கொண்ட காதல்...!

அர்த்தங்களும் அனர்த்தங்களும் உள்ளிருப்பு செய்வது,
உமிழப்படுவதற்கு முன்பு வரை மட்டுமே தான்...
என்னை காணாது இத்தனை தவிக்கும் நீ...
நான் இல்லாது போனால் என்ன செய்வாய்
என்று எதிர்க்கேள்வி எழுப்புகிறாய்...

உன்னுள் புகைந்து கொண்டிருக்கும் எரிமலை குன்றுகளோ
நெருப்பு லாவாக்களை அள்ளி வீசுகின்றன...
எனக்குள் தகித்திருக்கும் இயலாமை மேகங்களோ
கண்ணீர் துளிகளை பேய் மழையாய் பொழிகின்றன...!

தவித்திருக்கும் நேரத்தில் உன் தோள் தேடுகிறேன்...!
இன்னொருமுறை வதைத்து விடாதே...
உன்னிடத்தில் மட்டும் முருங்கையின் வலிமையை கொள்கிறேன்...
உன் பயணத்தில் சகபயணியாய் எனக்கொரு வரம் கொடு...
என் உயிரோடு உறவாடி கவிதையாக பயணிக்கிறேன்...!

No comments:

Post a Comment