Friday 26 February 2016

மிருதன் - திரைவிமர்சனம்



ராஜாஸ்மால்ல உக்காந்து செத்துப்போன பக்கெட் சிக்கனும் இத்துப்போன பர்கரும் சாப்ட்டுட்டு இருந்தோம். அடுத்து எப்படி நேரத்த போக்குறதுன்னு புரியாம திடீர்னு அங்கயே ஒரு படம் பாக்கப் போலாம்னு முடிவாச்சு. எனக்கு படம் கொஞ்சம் ஜாலியா இருந்தா நல்லாயிருக்குமேன்னு தோணிச்சு. ஆனா இருக்குற மூணு தியேட்டர்ல என்னென்ன படம் ஓடுதுன்னே பாக்காம டக்குன்னு மிருதன் வித்யாசமா இருக்காம், அங்கப் போவோம்னு சொல்ல, சரின்னு தலையாட்டிட்டேன்.

தியேட்டர்க்குள்ள பத்து நிமிசத்துக்கு முன்னாடியே எண்டர் ஆகி, தேமேன்னு வெள்ளை ஸ்க்ரீனையே வெறிச்சுட்டு இருந்தப்ப பின்னால இருந்து அதென்னவோ சோம்பி படமாம், ஜெயம் ரவி சோம்பியா மாறிடுவாராம் அப்படின்னு ஆச்சர்யமான குரல்கள் கேட்டுட்டு இருந்துச்சு. சரிதான், அப்படி என்னதான் இருக்குன்னு பாக்கலாம்னு சீட்ல சாஞ்சு உக்காந்தாச்சு.

படம் ஆரம்பிக்குறப்பவே பயோ ஹசார்ட் ஏத்திட்டு வந்த லாரில இருந்து ஒரு ட்ரம் உருண்டு வெளில விழுது. அதுல என்னவோ வைரஸ் இருக்கு. அத ஒரு நாய் சாப்ட்டுடுது. சாப்ட்ட அஞ்சோ பத்தோ நிமிசத்துல அது உடம்பெல்லாம் மாறி, வெறிப்புடிச்சு, ஒருத்தர கடிக்க, அவர் அடுத்த ஆள கடிக்கன்னு, மளமளன்னு வைரஸ் தாக்கின மனுசங்க பெருக ஆரம்பிக்குறாங்க.

கமலோட தசாவதாரம் வந்தப்பவே எனக்கு கொஞ்சம் நெருடல குடுத்த ஸ்கிரிப்ட் அது. எந்த வைரஸ் இவ்வளவு வேகமா பெருகும்னு தெரியல. சரி, எப்படியோ பெரிகிடுச்சு. இவங்க காமிக்குற ஸ்பீடுக்கு அந்த வைரஸ் பெருகியிருந்தா ரெண்டே நாள்ல மொத்த மக்கள் தொகையும் காலி ஆகியிருக்கணும்.

சரி, அதெல்லாத்தையும் விடுங்க, இந்த கேள்விய அங்க வச்சே கேட்டதுக்கு, லாஜிக் எல்லாம் பாத்து ஓவர் ஸ்மார்ட் ஆகப் பாக்காதன்னு திட்டு விழுந்துச்சு.

ஆனா, நிஜமாவே அந்த அஞ்சோ பத்தோ நிமிஷங்கள் கொஞ்சம் பயமாவே தான் இருந்துச்சு. அம்மாவ கடிச்ச புருசன ரூமுக்குள்ள தள்ளி பூட்டிட்டு அம்மாவுக்கு என்னாச்சோன்னு பதட்டத்தோட ஓடி வந்து அம்மாவ தூக்கினா அம்மா வெறியோட பொண்ணு மேல அம்மா பாய, எதிர்பாத்ததுதான்னாலும் குப்புன்னு அய்யய்யோன்னு மனசு பதறுறத தடுக்க முடியல.

அம்மாகிட்ட இருந்து தப்பிச்சு ரோட்டுக்கு ஓடி வரப் பொண்ண அங்க நிக்குற ஆண்கள் சில பேரு வேட்டையாட நினைக்குறாங்க. ஏண்டா, அதுவே பயந்து ஓடி வருது, ஒரு பொண்ண விட மாட்டீங்களாடான்னு மனசு கேக்காமலும் இல்ல. ஆனா நான் உக்காந்துட்டு இருந்த சீட்டுக்கு பின்னால மாட்டிகிட்டானுங்க நல்லா வேணும்னு குரல் கேட்டதும், அப்போ அவனுங்க ரேப் பண்ணி தான் மாட்டிக்கணுமானு தலைல அடிக்கணும்னு நினச்சேன், ஆனா அடிக்கல.

அப்புறம் ஜெயம் ரவி. ட்ராபிக் போலிஸ். ஒரு பொண்ண பாக்குறார், உடனே லவ்ல விழுறார். ஆனா அந்தப் பொண்ணு இன்னொருத்தருக்கு நிச்சயமானது தெரிஞ்சதும் செம கடுப்புல திரியுறார். இவர லவ் பண்ணலன்னு லெக்ஷ்மி மேனன் கிட்ட ஜெயம் ரவி நடந்துக்குற விதம் வெறுப்ப தான் குடுக்குது. அந்த முன்னாள் காதலியே பாட்டுத் தேவ தானா? அதான் அந்த பொண்ணு காதலிக்கவே இல்லையே, அப்புறம் எப்படி முன்னாள் காதலி ஆக முடியும்?

ஜெயம் ரவிக்கும் மந்திரிக்கும் நடந்த சண்டை கொஞ்சம் ரசிக்க வச்சுது. என்ன தான் அமைதியா இருந்தாலும் கூட வேலைப் பாக்குறவருக்கு ஒரு பிரச்சனைனா உடனே இறங்கி மந்திரி தொண்டர்கள அடிச்சது செம.

இனி அடுத்து என்னன்னு யோசிக்குறதுக்குள்ள ஊருக்குள்ள எமர்ஜென்சி டிக்ளேர் பண்ணிடுறாங்க. ஜெயம் ரவி கைலயும் அவர் பிரெண்ட் கைலயும் ஆளுக்கொரு துப்பாக்கி கிடைக்குது. அதுக்கப்புறமா ரெண்டு பேரும் படம் முழுக்க டொப்பு டொப்புன்னு சுட்டுகிட்டே இருக்காங்க. இதுல ஜெயம் ரவி குறி பாத்துச் சுட, அவர் நண்பர் கன்னாபின்னான்னு சுட்டுட்டு “ஜஸ்ட் மிஸ் மாப்ள”ன்னு கேனத்தனமா சிரிக்குறார். அந்த இடத்துல எல்லாம் கைத்தட்டல் தியேட்டர்ல பறக்குது.

அதுவும் ஒரு தடவ ஒரு வைரஸ் மனுஷன் ஜெயம் ரவிய கடிக்க வர, தப்பிக்க வேற வழியே இல்லன்னு நாம எல்லாம் கண்ணு முழி பிதுங்க பாத்துட்டு இருக்குறப்பவே அந்த நோயாளிய டொப்புன்னு சுட்டு வீழ்த்திடுறாரு அவர் பிரெண்ட். அடடேன்னு நாம கொஞ்சம் ஆச்சர்யப்பட்டுருக்க மாட்டோம், அதுக்குள்ள அவர்கிட்டயிருந்து அவரோட பேவரைட் டயலாக் “ஜஸ்ட் மிஸ் மாப்ள”ன்னு வரும். சரியா தானடா சுட்டன்னு ஜெயம் ரவி மாதிரியே நாமளும் கேட்டா, நான் அங்க சுட்டேன், குண்டு இங்க பட்டுடுச்சுன்னு சொல்லி நம்மள குபீர்னு சிரிக்க வச்சுடுறார்.

ஆனாலும் க்ளைமாக்ஸ்க்கு கொஞ்ச நேரம் முன்னாடி அவர் காலை வைரஸ் மனுஷன் ஒருத்தன் பிடிச்சு இழுக்க, எப்படியோ ஜெயம் ரவி காப்பாத்திடுவார். அவர் பேண்ட்ல உள்ள ரத்தக்கறைய பாத்துட்டு, “ஒரு வேளை என்னை அது கடிச்சிருந்தா வலிக்காம சுட்டு கொன்னுரு மாப்ள”ன்னு சொல்லிட்டே துப்பாக்கிய குடுக்குறப்பவும், காயம் எதுவும் இல்லன்னு தெரிஞ்சதும் “ஜஸ்ட் மிஸ் மாப்ள”ன்னு சொல்றப்பவும் நம்மள கண் கலங்க வச்சிடுறார்.

எனக்கு இந்த படத்துல ஏகப்பட்ட சந்தேகங்கள் இருக்கு. ஊட்டி முழுக்க வைரஸ் பரவியிருக்கு, யாரும் ஊரை விட்டு வெளில போகக் கூடாது, அப்படி போக விட்டா வைரஸ் பரவிடும்னு தடை போடுது அரசாங்கம். அப்படி தடைய மீறி போறதுல ஒரு டாக்டருக்கு காயம் இருக்குன்னு தெரிஞ்சதும் அவர வண்டியில இருந்து கீழ தள்ளி விட்டுடுறாங்க. ஆனா கோவைக்கு இந்த டாக்டர் குழு போய் சேர்ந்ததும் எப்படி அத்தன பேரும் வைரஸ் மனுசங்களா மாறி போயிருந்தாங்க? அவ்வளவு வேகமாவா கடிக்குறாங்க?

ஆரம்பத்துல மீட்டிங் போட்டு போலிஸ் கைல துப்பாக்கிய குடுக்குற போலிஸ் டிபார்ட்மென்ட் அப்புறம் எங்க போச்சுனே தெரியல. அந்த வைரஸ் மனுசங்களுக்கு எல்லாம் தண்ணிய கண்டா பயம்னு லெக்ஷ்மி மேனனுக்கும் ஜெயம் ரவிக்கும் மந்திரிக்கும் ஆரம்பத்துலயே தெரியும், ஆனா அவங்க ஏன் இத போலிஸ் டிபார்ட்மென்ட்கோ இல்ல அரசாங்கத்துக்கோ சொல்லவேயில்ல?

ஊருக்குள்ள மொத்தப்பேரும் வைரசால பாதிக்கப்பட, ஹீரோவும் அவர் சகாக்களும் மட்டும் தப்பிச்சுட்டு இருக்காங்க. அதுவும் அவங்கள எல்லாரையும் தனிமனுசனா ஜெயம் ரவி மட்டும் தான் காப்பாத்துறார்.

மொத்தத்துல சொதப் சொதப்ன்னு சொதப்பியிருக்குற படத்துல க்ளைமாக்ஸ் கொஞ்சம் ஓகே.

அதெப்படி ஜெயம் ரவி அத்தன பேரையும் ஒத்த ஆளா அடிச்சுப் போட்டுட்டு லெக்ஷ்மி மேனன காப்பாத்துறார்னு மனசுக்குள்ள சந்தேகம் வராம இல்ல. அடப்போமா, இத்தன நேரமும் அவர் மட்டும் தானே போராடிட்டு இருக்கார், இதெல்லாம் லாஜிக் பாக்க கூடாதுன்னு என் மனசாட்சியே என்னை அடக்கி வச்சதால, அத தூக்கி அப்படி ஓரமா வச்சுட்டு க்ளைமாக்ஸ் சீன ரசிக்க ஆரம்பிச்சேன்.

பெத்த அப்பா, கட்டிக்கப் போறவன் முதல்கொண்டு அத்தன பேரும் கைவிட்ட நிலைல யாருடா இவன், நம்மள காப்பாத்த வர்றான்ன்னு ஆச்சர்யமா லெக்ஷ்மி மேனன் பாக்குறது ரசிக்குற மாதிரி இருந்துச்சு. இவன் தன்னை காதலிச்சிருக்கான்னு தெரிய வர்றப்ப அவங்க முகத்துல காட்டுற பாவனைகள் சூப்பர்.



மொத்தத்துல சென்னைய நோக்கி வைரஸ் தாக்கின மிருதன் வந்துட்டு இருக்கானாம். சென்னை மக்கள் மட்டுமில்ல நாமளும் கொஞ்சம் அலெர்ட்டா இருந்துக்கனும். அட்லீஸ்ட் பார்ட் டூ-வையாவது கொஞ்சம் லாஜிக்கோட எடுங்கயா.

4 comments:

  1. வணக்கம்
    விமர்சனம் மிக அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்.
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. ஆமா... இந்தப் படத்தை தூக்கி வச்சி ஆடுறானுங்க...
    சும்மா சுட்டுக்கிட்டே இருக்கானுங்க...
    ரொம்ப கடுப்பாகிப் போச்சு....

    ReplyDelete
  3. நல்ல விமர்சனம்! நன்றி!

    ReplyDelete