Thursday 9 August 2012

விலங்கின ஒப்புமை உனக்கில்லை...!

இன்முகம் காட்டி நட்புச் சோலைக்குள்
கானலென புகுந்திட்ட நீ...
மறு முகம் காட்டுகிறாய்...
காதல் உனக்கு வேடிக்கையென...!

ஏமாற்றி கைவிடுதல் உனக்கென்ன
அங்கீகார முத்திரையா?
பெண்ணினம் உனக்கென்ன
கொத்தடிமை சாசனமா?

கண்வழி நோக்கி காரிகை
கைப்பற்றும் நீ
காணா தேசத்தின் மன்மதனென
பிரகடனம் செய்கிறாய்...!

வேடமிட்டு நேசமென
கபட நாடகம் ஆடும் நீ
உனக்கொரு நேசத்தை
எங்கனம் பெறுவாய்?

புகழ் வேண்டுமென
உருகி உருகி காதல் போற்றும் நீ
உன் வக்கிர மனத்திரையில்
துகிலுரித்தே பார்க்கிறாய் பாவையரை...!

விலங்கின ஒப்புமை கூட
உனக்கு இங்கு பொருத்தமில்லையடா
கயவனென உனக்கே நீயும்
பச்சையும் குத்திக் கொண்டாய்...!

தற்பெருமை பேசித்திரிகிறாயே
அறிய மறுத்ததேனோ
உன் வீட்டு பாவையரும்
அடுத்தவன் வாய் அவலென்று...!






2 comments:

  1. இத்தனைக்காட்டம் யார் மீதோ..!
    இணைய உலகில்
    இன்முகங்கள் அனைத்தும்
    இனிமையானதுமல்ல..
    இயலாமைத்தனத்தை
    இப்படியா
    இளித்துரைப்பது...
    இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண..
    இன்முகங்காட்டி
    இடம்விலகல் நன்றே..!

    கவியாடல் சுபம்....

    -கவிதைக்காரன்

    ReplyDelete
  2. ஒவ்வொரு வரியும் சாட்டையடி...

    கோபம் வேண்டாமே... நன்றி...

    ReplyDelete