Friday 14 September 2012

அப்பா...!

இல்லத்தின் அரசனாயினும்
அரசியின் சிறு சிறு கண்ணசைவில்
புரிதலும் இசைதலுமாய் கட்டுண்டு
இல்லம் காத்த மனையாளன்...!

நேசித்த மனையாளை
நேசம் தவிர்த்து வேறெதையும்
அனுபவிக்க வைக்காதவர்...!

“அம்மா”வென முதல் வார்த்தை
மிழற்றிய போது தாயுமானவராய்
கர்ப்பப்பை சுமந்து நின்றவர்...!

செல்ல மகளின் இடுப்பில்
அரைஞாண் கயிறு பூட்டி
கிச்சு கிச்சு மூட்டி
புளங்காகிதம் அடைந்த இல்லத்தரசன்...!

முதலடி எடுத்து வைத்து
நடைப் பழக தடுமாறி தத்தளித்த போது
சுட்டு விரல் கொடுத்து
நடைப்பழக்கிய அன்பு அப்பா...!

இவரது செல்ல முத்தங்களும்
அவசிய கண்டிப்புமாய்
உப்பு மூட்டை தூக்கிய நாட்களெல்லாம்
இன்னமும் நீண்டுக் கொண்டேதானிருக்கின்றன...!

2 comments:

  1. மிக மிக ரசிக்கும்படி இருந்தது... வாழ்த்துக்கள்...

    /// “அம்மா”வென முதல் வார்த்தை
    மிழற்றிய போது தாயுமானவராய்
    கர்ப்பப்பை சுமந்து நின்றவர்...! /// Super

    ReplyDelete