Monday 27 August 2012

யாரோ யாரிவரோ...!

என் கல்லூரி வாழ்க்கை
ஆரம்பித்த போது துவங்கியது
எனக்கும் அவருக்குமான பந்தம்...!

வழக்கமாக நான் செல்லும் சாலை வழியே
கால்களையே துணையாக்கி வேக வேகமாக
நடை பயிலும் அறுபதை தாண்டிய முதியவர் அவர்...

எங்கு செல்கிறார் நானறியேன்,
எப்போது திரும்புவார்? அதுவும் அறியேன்...
ஆனால்... தினம் தினம்
அவர் பயணம் ஒரே இலக்கை நோக்கி...

சவரம் செய்யப்படா தாடி
நெஞ்சு குழி தாண்டி நீண்டிருக்க...
தலைவாரி வகிடெடுக்க வழியில்லாமல்
பாலைவனம் ஒன்று
தலை மேலே தோன்றியிருக்க...
இடது தோளிலே ஒரு பை...
வலது கையிலோ நீண்ட நெடிய ஒரு குச்சி...!

அந்த தாடிக்குள் ஒளிந்திருக்கும்
கதை என்னவென்று நான் அறியேன்...
ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்...
அது சவரம் செய்ய காசில்லாமல்
வளர்ந்து கொண்டே செல்கிறது...!

எண்ணை வளம் காணா
வட்ட நிலாவாய் அவர் முன்வழுக்கை
அழகாகவே தோன்றியது எனக்கு...!

என்னதான் இருக்குமென்ற
ஆவல் கூட தோன்றவிடாமல்
அழுக்கு படிந்ததாய் அந்த பை
நிரந்தர கர்ப்பம் தாங்கி
அவர் தோள் வழியே சவாரி செய்யும்...!

அவரின் நடை பயணத்திற்கு பாதைவகுத்து
புதிதாய் ரோடு போட்டு
அவர் நடையின் வீரியத்தை கம்பீரமாக்கும்
அவர் கூடவே நடைபயிலும் அந்த குச்சி...!

அவர் உண்பாரா? யார் அவருக்கு உணவளிப்பர்?
தொக்கி நின்ற கேள்விக்கொரு
விடை கிடைத்தது ஓர் நாள்...!

வெளிர் நரை மூதாட்டி ஒருவர்
பழயென கழிதலை அலுமினிய தட்டில்
ஊற்றி பசியாற்றிக் கொண்டிருந்தார்,
அருகிலேயே தன் முறை வருமென
முறைத்துக் கொண்டே ஒரு நாலு கால் ஜீவன்...!

தினமும் நான் அவரை கடந்து செல்கையில்
திரும்பி பார்ப்பதும், பரஸ்பரம் புன்சிரிப்பமாய்
கடந்து சென்றது எங்கள் மூன்று வருட பந்தம்...!

காலத்தின் ஓட்டத்திலே உறவுகள் அறுந்ததாய்
விடுபட்டு போனது என் கல்லூரி மட்டுமல்ல
கூடவே நான் தினமும்
ரசித்த அந்த பெரியவரும் தான்...!

இரண்டு வருட இடைவெளியில் மீண்டும்
அதே பாதையில் பயணிக்க துவங்கி
ஆறு மாதமாய் நானும் அவரை காணாமல் தேடியலைய
இதோ என் வீட்டு வாசலை வேகமாய் கடக்கிறார் அவர்...!


1 comment: