Monday 25 June 2012

அக்றிணையில் ஒரு நேசம்...!


அக்றிணையில் ஒரு நேசமென
தலைப்பிட்டு காத்திருந்தேன்
கவியொன்று படைக்க...!

கண்முன் வந்து சென்றது
நேற்று தெருவோரம்
பார்த்த பூனைக்குட்டி...!
மியாவ்வென மிழற்றியபடியும்
அகதியாய் இருப்பிடம் தேடியபடியும்...!

ஆசையாய் அணைத்துக் கொண்டே
அதற்கோர் ஆதரவை
வேண்டிய ஆசை மகள்
மனம் கலங்கலாகாதென
தலையசைத்திருந்தேன் நானும்...!

கண்டெடுத்த பூனைக்குட்டி
காணாமல் போனதென
காலை முதல் அரற்ற துவங்கியிருந்தாள்
என் உதிரத்தில் உதித்தவள்...!

கண்கள் குளமாகி அழுதுதழுது
தேம்பிய அவள் முகம் பார்த்து
எனக்குள் எதுவோ பிசைய துவங்கியது...!

அட! திடீரென அவள் கையில்
தொலைந்து போன பூனைக் குட்டி...!

“ஏண்டா விட்டுட்டு போன?”
வண்டியில அடிபட்டா நசுங்கி
போய் செத்திருப்ப...
நாயும் கடிச்சிருந்தா
நார் நாரா கிளிஞ்சிருப்ப...

வாய் புலம்பல் தொடர்ந்த படி
ஒரு கையால் பிடித்துக் கொண்டு
மறுகையால் அது மிரள
தலை மேலே ஒரு குட்டு...!
மறுநிமிடம் வலிக்குமென பதறி
அடித்த இடம் தடவியபடி
தொடர்ந்து கொண்டிருந்தது அவள் புலம்பல்...!

ஏன் அழுகிறாள்? எதற்கு அடிக்கிறாள்?
புரியாமலே அவள் மடி சுருண்டது
பூனைக் குட்டி, அடைக்கலம் தேடி...!
கண்டுகொண்டேன் நானும்
அக்ரிணையில் ஒரு நேசத்தை...!


2 comments: