Saturday 23 November 2013

பவர் ஸ்டாரோட பிறந்தநாளு..... (பார்ட் – டூ)



ரெண்டு மூணு நாளாவே ரொம்ப சீரியஸாவே பதிவு போட்டுட்டு இருக்க, மக்கா, இது சரியில்ல, நீ பொலம்புனாலும் அழுதாலும், வீரமா வசனம் பேசினாலும் இங்க ஒன்னும் அசைக்க முடியாதுன்னு திடீர்னு ஒரு பல்ப், அதுவும் அறுபது வாட்ஸ் பிரகாசத்துல மண்டை மேலே எரிஞ்சு என்னை உசார் படித்த ஆரம்பிச்சுடுச்சு. சரி, ஏதாவது ஒரு நீதி கதைய எடுத்து, அத அக்கு வேற, ஆணி வேறவா பிரிச்சி மேஞ்சி கைத்தட்டல் வாங்கிடுவமான்னு யோசிச்சப்போ, என்னோட கை, ஒரு பெரிய சுத்தியலா எடுத்து என் மண்ட மேலயே நங்குனு போட்டு, சீரியஸா யோசிக்காத, சீரியஸா யோசிக்காதன்னு சொன்னா கேப்பியா கேப்பியான்னு அடிச்சு துவம்சம் பண்ணிடுச்சு. அவ்வ்வ்வ் சாதாரணமாவே நாம கொஞ்சம் ட்யூப் லைட், இப்போ அடிச்ச அடியில ஒண்ணுமே புரியல.

இப்படியே புரியாம இருந்தா நல்லாயிருக்காதேன்னு யோசிச்சுட்டே இருந்தப்போ தான் நம்ம பவர்ஸ்டார்  பரந்தாமன கால்ல கட்டோட அப்படியே நிக்க விட்ருக்கமேன்னு நியாபகம் வந்துச்சு. அவரு வேற இருக்காரா, எங்க அவருன்னு இல்லாத முடிய இருக்குறதா நினச்சு பிச்சுக்குரவங்களுக்காக, முதல்ல இத போய்படிச்சுட்டு வாங்க.

என்ன, படிச்சாச்சா, பாத்தீங்களா, அந்த ஆளு எவ்வளவு எகத்தாளம் இருந்தா என்கிட்டயே வயலுக்கு போக எரோப்ளேன் கேட்டுருப்பாரு. அதுவும், நான் தண்ணி ஊத்தி வேற வளத்து குடுக்கணுமாம். ஒருநாளு இப்படி தான் பிரெண்ட் ஒருத்தர வழி அனுப்பி வைக்குறதுக்காக ஏர்போர்ட் போயிருந்தோம். பாவம் இந்த மனுஷன் வெட்டியா தானே இருக்கார்னு அவரையும் கூடவே கூட்டிட்டு போயிருந்தேன்.

அங்க போய் சும்மா இருக்காம, அங்க வந்த ஜப்பான் பேமிலிய வேற்றுகிரகவாசி ரேஞ்சுக்கு கற்பனை பண்ணி கிண்டல் பண்ணிக்கிட்டு இருக்காரு. ஆனா அவங்க என்னமோ இவர தான் ஏலியன்ன்னு நினச்சு அவர் கூட நின்னு போட்டோ எல்லாம் எடுத்தாங்க. அட, அப்படி போட்டோ எடுத்துட்டு போனா கூட பரவாலயே, என் கண்ணு முன்னாடியே, அந்த போட்டோவ அவங்க எப்.பில அப்லோட் பண்ணி, “A miracle, we are with an alien”ன்னு டைட்டிலே போட்டு விட்டுட்டாங்க. அதுக்கு ரெண்டு நிமிசத்துக்குள்ள ஐநூறு லைக்கு, நூத்தி முப்பத்தாறு கமன்ட்டு. ஹிஹி நான் கூட ஸ்பாட்டுலயே அவங்க ஐ.டி வாங்கி, பிரெண்ட் ரிகுவஸ்ட் குடுத்து, அவங்கள ஆட் பண்ண சொல்லி, ஒரு லைக் போட்டுட்டுதான் மறுவேலை பாத்தேன்னா பாருங்களேன், பவர் எவ்வளவு தத்ரூபமா இருந்துருப்பார்ன்னு.

சரி, ஒருவழியா பிரெண்ட்ட வழி அனுப்பி வச்சுட்டு திரும்பினா, பவரு வாய ஆ-ன்னு தொறந்து வச்சு அண்ணாந்து பாத்துட்டு இருக்காரு. அட, ஏன், ஏன் இப்படி, வாய மூடுங்க, நாலஞ்சு வவ்வாலு பத்துவாட்டி உள்ளேயும் வெளியேயுமா வந்து போயிட்டு இருக்குன்னு அவர உலுப்புனேன் (ஏர்போர்ட்ல வவ்வாலான்னு எல்லாம் நீங்க வாய திறக்க கூடாது. அதெல்லாம் காட்சிக்கு தேவைனா நாங்க டைனோசரையே கொண்டு வருவோம்). அப்புறமா தான் சிலிர்த்துக்குட்டே சொன்னாரு, இந்த ஏரோபிளேன் எவ்வளவு பெருசா இருக்கு, ஒரு நாளாவது அந்த ஜன்னல் சீட்ட புடிச்சு உக்காரணும்னு. நான் கூட அவருக்கு எப்படியாவது துண்டு போட்டாவது ஜன்னல் சீட் புடிச்சு தரேன்னு வாக்குறுதி குடுத்துருக்கேன். நீங்க எல்லாம் என்னோட நண்பர் படை, நலன் விரும்பிகள்ங்குறது உண்மைனா ஏரோப்ளேன்ல ஒரு கார்னர் சீட் கண்டிப்பா நம்ம பவருக்காக புடிச்சு தரணும். அப்புறம், டிக்கெட் ப்ளாக்ல வாங்கினா கூட பரவால, ஆனா டிக்கெட்டு கலரு வொய்ட்டா இருக்கணும்.

இதுவாவது பரவால, எதோ ஏரோப்ளேன பாக்காத மனுஷன் ஆசைபட்டுட்டார்னு விட்டுடலாம், ஆறு மாசம் முன்னால அவர் பண்ணுன அலும்பு இருக்கே, அப்பப்பப்பா.... ஆத்துக்கு குளிக்க போன மனுஷன், அங்க தேமேன்னு மேஞ்சுகிட்டு இருக்குற எரும மாட்ட பாத்து, நான் இந்த யானை மேல சாவாரி பண்ணியே தீருவேன்னு அடம் பிடிச்சிருக்கார். யோவ், அது எருமையான்னு வடக்கு தெருவுல பன்னி மேய்ச்சுகிட்டு இருந்த பையன் சொன்னதுக்கு, நான் சின்ன புள்ளன்னு நீ என்னை ஏமாத்துறன்னு பக்கத்துல கிடந்த சகதியில விழுந்து கைய கால அடிச்சுக்கிட்டு அழுதுருக்கார். இத எல்லாம் பாக்க சகிக்காம அவர எப்படியோ தூக்கி எரும மேல வச்சிருக்காங்க ஊர்க்காரங்க. யானைக்கு லாடம் எல்லாம் ஒழுங்கா அடிச்சிருக்கீங்களா, ஏன் அலங்காரம் பண்ணலன்னு கேள்வி மேல கேள்வி கேட்டு பக்கத்துல நின்னவங்கள எல்லாம் சாகடிச்சுருக்கார். அவர் ஜாலியா எரும மேல ஒரு ரைடு போயிட்டு வந்துட்டார், ஆனா அந்த எரும தான் பாவம், நாத்தம் தாங்காம குடல பொறட்டிட்டு, செத்தே போச்சாம். இத கேள்விபட்டதுல இருந்து, நான் அந்த எருமைக்கு ஒரு கோவில் கட்டியே ஆகணும்னு முடிவு பண்ணியிருக்கேன். இதுக்கு ஆதரவு தரவங்க, தாராளமா ஐம்பது லட்சம் குறைந்த பட்சம் நிதியுதவி செய்யலாம், அப்படி நிதியுதவி செய்தவங்க பெயர கண்டிப்பா அந்த கோவிலுக்கு போடுற ட்யூப் லைட்ல எழுதி போடுவோம். இத பத்தின மேல் விவரங்கள நாம பப்ளிக்ல பேசினா கண்ணு பட்டுரும், அதனால எல்லாரும் ரகசியமா கூடி கூடி பேசிக்கோங்க.

இந்தா, போன வாரம், பவரு துணியெடுக்க கடைக்கு போனாரே, அதாங்க, அந்த மஞ்ச கலரு சிங்குச்சா... அது எடுக்குறது முன்னாடி பெரிய கலவரத்தையே நடத்திப்புட்டாருங்க. அப்படியா, நீ சொல்லவேயில்லயேன்னா சம்பவ இடத்துல நான் இல்லையே, இந்த விசயத்த நான் இன்னிக்கி காலைல தான கேள்விப்பட்டேன். அப்படி என்னதான் பண்ணாருன்னு கேக்குறீங்களா? ஒரு பொம்பள புள்ள அழகா தலை வாரி, ஜடை பின்னி, பூ வச்சுட்டு  வந்துருக்கு. இவருக்கு, அந்த ஜடை ஒரிஜினலா டூப்ளிகேட்டான்னு சந்தேகம். அட, நேரா போய் கேட்ருந்தா கூட பரவால, நாலு அரை கன்னத்துல சப்புன்னு அறஞ்சதோட விட்ருக்கும், இவரு ஜடைய புடிச்சு இழுத்துருக்காரு, அது கையோட வந்துடுச்சாம். அவ்வளவு தான், அங்கயே அவருக்கு பெருசா ஒரு பூஜைய போட்டு, அப்புறம் விஷயம் வெளில தெரியாம இருக்க எல்லாருக்கும் ஆளுக்கு ஐநூறு ரூபா லஞ்சமா குடுத்து தப்பியிருக்கார். அப்படி ஐநூறு ரூபா லஞ்சம் வாங்கின ஒருத்தர் தான், இந்த விசயத்த ஊர் முழுக்க சொல்லிட்டு திரியிறாரு. அப்படி தான் என் காதுக்கும் வந்துச்சு.

இத்தகைய சிறப்பு வாய்ந்த, பெருமை வாய்ந்த நம்ம பவருக்கு பொறந்தநாளு (எப்படி தலைப்ப டச் பண்ணினேன் பாத்தீங்களா?). இந்த தடவையாவது பொறந்தநாள நல்ல படியா கொண்டாடணும். நீங்க, உங்களால முடிஞ்ச பிறந்தநாள் பரிசுகள, பொன்னாவோ, வெள்ளியாவோ, காராவோ, பைக்காவோ, இல்ல நிலபத்திரம், வீட்டு மனை, மாடி வீடு, இப்படி எதுவா வேணும்னாலும் குடுக்கலாம். பவர் அத வேணாம்ன்னே சொல்ல மாட்டார்.


நான் இத பத்தின ஒரு பொதுகுழு கூட்டம் போட வேண்டியிருக்கு, வரட்டா.... 

பின் குறிப்பு: இந்த பால்வடியுற முகத்த நெட்டுல இருந்து தான் சுட்டேன் 

9 comments:

  1. ஹா... ஹா... பவர் ஸ்டார் வாழ்க....!

    ReplyDelete
    Replies
    1. ஆமா, ஆனா இவர் blog பவர்ஸ்டார் அண்ணா

      Delete
  2. நகைச்சுவையும் நல்லா வருது உங்களுக்கு

    ReplyDelete
    Replies
    1. தேங்க்ஸ் உங்க பாராட்டுக்கு

      Delete
  3. Rumbo serious padika arumbichan aparam than theriythu unga kusumbu!!!

    ReplyDelete
    Replies
    1. ஹலோ, எப்பவும் சீரியஸ்னா எப்படி?

      Delete
  4. இந்தக் கதை எப்பங்க முடியும்.. ;-)

    ReplyDelete
    Replies
    1. இத முடிக்காம அப்படியே விட்டுட்டா என்னன்னு யோசிக்குறேன்

      Delete
  5. வணக்கம்
    பவர் ஸ்டார் வாழ்க.........பகிர்வு அருமை வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete