Monday 25 November 2013

எனக்கென ஒரு நண்பனிருந்தான்...










எனக்கென ஒரு நண்பனிருந்தான்...

எப்படி அவனெனக்கு அறிமுகமானான்
என்பது நினைவிலில்லை.
ஆனால் அது ஒரு மழைக்கால காட்சியாய் இருக்கிறது.
வெயிலென்பது கொஞ்சம் கொஞ்சமாய்
களவு போய் கொண்டிருந்த காலமது.

களத்துமேட்டின் மேல் காளைகள் ஓய்வெடுக்க,
வயல்வரப்புகள் நீர் நிறைத்து கொண்டிருந்தன...
சலசலக்கும் ஓடைகளுக்கிடையில்
கப்பல் ஓட்டி களைத்திருந்த நேரத்தில்
எங்கிருந்தோ வந்தவன் சிநேகமாய் புன்னகைத்தான்.

வசீகரிக்கும் கண்கள் காந்தமாய் கவர்ந்திழுக்க,
அவன் வகிடெடுக்கா உச்சந்தலை
கொஞ்சமாய் கலைத்து விட சீண்டியது.
சிற்சில சம்பாசனைகளுக்குள் அவனென்னை கவர்ந்தே விட்டான்...

கரம் பற்றிக்கொள்ளென விரல் பற்றி
ஒரு பறவையாய் சிறகு விரிக்க வைத்தான்...
மரக்கிளையொன்றில் இறக்கி விட்டு
தனந்தனியாய் பறந்திட செய்தான்...

சிறு கல் கண்டு மிரண்டோடிய என்னை
மலைகள் அழகென உள்ளங்கால் பதித்திட செய்தான்...
பஞ்சு மிட்டாய் இதுவென
மேகம் நடுவில் முகம் புதைத்து சிலிர்க்க வைத்தான்...
தாய் விட்டு பிரிந்த
அணில் பிள்ளைகள் கண்டெடுத்து
தாயாய் என்னை கொஞ்சம் மாற்றிப் பார்த்தான்...
தவழத் தடுமாறும் நாய் குட்டிகள் கொஞ்ச வைத்து
சேயாய் நானும் மாறிடச் செய்தான்..

வயல் வெளிக்குள் நாற்று நட்டோம்...
புல் வெளிக்குள் பூ பறித்தோம்...
மழை வந்து விட்டுச் சென்ற
தூறல்களை வழியெங்கும் சிதறடித்தோம்...

பேசும் கதைகளுக்கு குறைவில்லை
களைப்புகள் என்றும் நெருங்குவதில்லை...
தோளில் நிம்மதியொன்றை புதைத்து வைத்து
நான் இவன் நிழலென நகலெடுத்தேன்...

நண்பன் இவனென இறுமார்ந்த வேளையில் தான்
ஓர்நாள், மொட்டை மாடியில், நிலாவொளியில்
தென்னங்கீற்றுகளின் சாட்சியாக
அவன் காணாமல் போயிருந்தான்....

இன்றிவன் என் துணைவனாகி, என் மகளுக்கு
அம்பாரி சுமக்கும் யானையாகி விட்டிருந்தான்...


18 comments:

  1. வணக்கம்

    நிலாவொளியில்
    தென்னங்கீற்றுகளின் சாட்சியாக
    அவன் காணாமல் போயிருந்தான்................என்ன வரிகள் கவிதையின் வரிகள் மனதை கவர்ந்துள்ளது.. மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. உங்க வாழ்த்துக்கு நன்றி :)

      Delete
  2. வணக்கம்
    தமிழ் மணத்தில் வாக்கு 1போட்டாச்சி....

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. ஓட்டு போட்டதுக்கும் தேங்க்ஸ் அண்ணா

      Delete
  3. wonderful.
    another doctorate in Literature too.

    subbu thatha.

    ReplyDelete
    Replies
    1. ஹஹா தேங்க்ஸ் தாத்தா...

      Delete
  4. கவிதையில் ரசிக்க வைக்கும் கதை... பாராட்டுக்கள்...

    ReplyDelete
    Replies
    1. தேங்க்ஸ் அண்ணா, உங்க பாராட்டுக்கு

      Delete
  5. இன்றிவன் என் துணைவனாகி, என் மகளுக்கு அம்பாரி சுமக்கும் யானையாகி விட்டிருந்தான்...//// pidicha varikal akka...

    kathai kavithai vadivil sonna vitham nalla irukku akka.

    ReplyDelete
  6. தெரிவு செய்து எடுத்த முத்துக்களை கோர்த்து வருவிக்கப்பட்ட முத்து மாலைபோல் வார்த்தையினை தெரிவு செய்து வருவித்த கவியும் உள்ளிருக்கும் கதையும் அழகு தோழி ...

    ReplyDelete
    Replies
    1. ஹ்ம்ம் தேங்க்ஸ், உங்க வருகைக்கும், கருத்து பதிவிற்கும்

      Delete
  7. இன்று துணைவனானவனை , நண்பனிலிருந்து மாறாமல் வைத்துக்கொள் தோழி.... அருமை வரிகள்...

    ReplyDelete
  8. துணையான நண்பன்! முடிவில் அழகாக மிளிர்ந்தது கவிதை! சிறப்பான படைப்பு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. உங்க வாழ்த்துக்களுக்கு தேங்க்ஸ்

      Delete
  9. //கரம் பற்றிக்கொள்ளென விரல் பற்றி
    ஒரு பறவையாய் சிறகு விரிக்க வைத்தான்...
    மரக்கிளையொன்றில் இறக்கி விட்டு
    தனந்தனியாய் பறந்திட செய்தான்...//////

    என்னை அதிகமாக பாதித்த வரிகள் இவை... கூடவே பறந்து கொண்டே இருந்தாலும் சுய சிந்தனைகள் காணாது போகும். இங்கோ, தனியாய் பறக்க விட்டு அழகு பார்த்த நண்பன் கிடைத்தது இந்த கதைநாயகியின் பாக்கியம்

    ReplyDelete
    Replies
    1. தேங்க்ஸ் மேடம்... ரொம்ப சரியா சொன்னீங்க

      Delete