Tuesday, 23 October 2012

நிலவு வழித் தூது...!

ஏ நிலவு பெண்ணே...!

நீயே இந்த வழக்கின் உரையாடலை தீர்த்து வையடி…!

கார் என்றானாம், மாலை தொடுவானமென்றானாம்...
செங்காந்தள் நிரமவள், கற்பின் கனலென்று மகுடம் சூட்டி…
இருள் சூழ்ந்த மாலை நேரத்தில்
மதி மயங்கி கள்ளுண்ட மந்தியானானாம்...!

அத்தனை வர்ணனை
தூது செல்ல உன்னிடத்தில் கொட்டிய
என்னவன், என்முன் வார்த்தைகளின்
பஞ்சம் வர விக்கித்து நின்றதேனோடி...!

உனக்கு தெரியுமா?
வாய் சொல்லில் வீரனடி அவன்…
அவன் அதரம் உதிர்க்கும்
அத்தனை அனர்த்தங்களும்
அர்த்தமாய் தான் போய் விடுகிறது
அவன் கண்கள் ஊடுருவி நோக்கும்
மொத்த பாவையருக்கும்…!

கற்பனை உலகில் அவன் அங்கே
சஞ்சாரம் செய்து கொண்டிருக்க
பாவை என் மனமோ சஞ்சலத்தில் தவிக்குதடி...!

உன் மேகக் காதலனோ கொண்டலாய்
உன்னிடம் நேசம் பொழிந்திட்டான்…!
இங்கொருவனை பார்…
கொண்ட மையல் முழுவதையும்
தையல் உன்னிடம் கொட்டி விட்டு
வார்த்தைகள் தேடிக் கொண்டிருக்கிறான் என்னிடத்தில்...!

அவனிடத்தில் சென்று இதை கூறு
உன் அன்பிற்கினியவள் பசலை பீடிக்க
வெற்றிலை கொடியின்
இடையணைப்பில் கூட
மூச்சுத் திணறுகிறாளென்று...!
ஆம்பல் பூத்த தடாகத்து புல்வெளியில்
கரையிட்ட மச்சமாய் துள்ளித் தவிக்கிறாளென்று...!

அரை நாழிகை பொழுது கூட தலைவன்
பிரிந்து விட்ட காரணத்தால்
அரை நூற்றாண்டாய் வேடிக்கை காட்டுகிறது…!

விரைந்து செல்லடி மஞ்சு கொஞ்சும் வான்மதியே...!
இன்னும் ஒரு நொடி நீ தயங்கி நின்றால்
தலைவனின் பிரிவுணர்ந்த அன்றில் பறவையாய்…
என் தேகக்கூட்டில் உயிர் மட்டும்
மின்மினியாய் கண்சிமிட்டும்…!

நானோ...!

அவன் நினைவு தரும் மயக்கத்தில்
பிச்சியாய் உன்னோடு பிதற்றிக் கொண்டே
இப்படியே கல்லாய் சமைய வேண்டியது தான்…
அவனிருக்கும் திசை நோக்கி...!

Monday, 15 October 2012

யாரிவன்???

மவுனங்கள் மட்டுமே வீழ்ந்துகிடக்கும்
ஆள் இல்லா கானகத்துள்
தனித்து விடப்பட்ட சிறு தும்பியாய் நான்...!

வழிபோக்கர் யாருமில்லா தடங்கள் மீது திடீரென
தோன்றும் சலசலப்பாய்
எங்கிருந்தோ ஒலிக்கிறது அவனின் குரல்...!

ஹெல்லோ என்கிறான்...!

யாரிவன்? இவனுக்கும் எனக்கும்
என்ன பந்தம்?

கொட்டும் மழையாய் அவன்
குரலின் ஈர்ப்பு
வைத்திருக்கும் என்னை
அத்தனை புத்துணர்ச்சியாய்...!

என்னிடத்தில் அவன் காட்டும் அலட்சியம்
ரகசியமாய் காட்டிக்கொடுக்கும்
என்மேல் அவனுக்கான அக்கறையை...!

நான் சீண்டி விளையாடவும்
மனம் நிறைந்து சிரிக்கவும்
திட்டித் தீர்க்கவும், கொட்டிக் குமுறவும்
என்னை நான் முழுதாய் உணரவும்
எனக்கென இறைவன் படைத்த
விளையாட்டு பொம்மையிவன்...!

சோலைக்குள் நான் துயிலும் நாட்களெல்லாம்
காணாமல் போகின்றவன்
வெறுமை சூழ்ந்த அடுத்த நொடி
“என்னாச்சுடி” என எட்டிப் பார்க்கிறான்...!

என் ஒரே ஒரு குரலுக்கு ஓடி வருகிறான்
எனக்காக பதறுகிறான்
என் கண்ணீர ஏந்துகிறான்
நான் சிரிக்கும் அடுத்த நொடி “பை”யென
கையசைத்து விட்டு
வெடுக்கென ஓடி விடுகிறான்...!

கொல்லும் தனிமையை கவி எழுதி வதைத்து விடு,
காத்திருக்கிறேன் என்றவன்
அதை படிக்க போவதில்லையென அவனும் அறிவான்
அவனை அறிந்த நானும் அறிவேன்...!

இதோ அவனுக்கான என் கவியும்
என்னோடு சேர்ந்து தனிமையில்...!


Monday, 17 September 2012

திமிர் பிடித்த காதல்காரியும் அவளுக்கே சொந்தமான கவிதைக்காரனும்...!

திரட்டிய மீசைக்குள்
திமிரடங்கா பாரதியின்
நெஞ்சம் தன் வேலி எனக்கொண்டவன்...!

தோற்கப் பிடிக்காத
விழுப்புண் குழந்தையவன்...!
போதுமென்று நின்றுவிடாத
அகராதியில் அவன் பெயரிருக்கும்...!

சவால்களின் ருசியறிந்தவன்...!

உன் ஆணவமான ஆண்மை பிடிக்கும்...!
அரிந்து செல்லும் ஒற்றை வினாடி
பார்வையின் கூர்மை பிடிக்கும்...!
உன் மௌனம் சிந்தும் வார்த்தைகள் பிடிக்கும்...!
உன் கண்களில் தெறிக்கும் அந்த திமிர் பிடிக்கும்...!

என்னில் உன்னை விழ வைக்கிறேன்...
சாவாலுக்குள் நுழைவாயாயென
விரல் சொடுக்கி கண்நோக்கினாள் காதல்காரி...!



என்னில் உணர்ந்ததை
எழுத்தில் விளம்பும் காதல்காரி...

எண்ணத்தில் விளைந்ததை வார்த்தைக்குள்
அறுவடையாக்கும் காரிகைக்காரி..!
விரல் சொடுக்கி விசிலடிக்கும் 
திமிருக்குச் சொந்தக்காரி...!

பால் பேதமெல்லாம் யாதுமறியாத
பயமறியா இளங்கன்று..!
எதிர்த்து நின்று நேருக்கு நேர்
மல்லுக்கட்டும் வீம்புக்காரி...!



வீண் பேச்சு வம்பர்களின் வம்புகளை
நெருப்பு துண்டங்களாய்
எரிக்கத் துணியும் துணிச்சல்காரி...!

தோற்கப் பிடிக்காத தென்கடல்
சீமையின்... பிடிவாதக்காரி...!

நீ திமிர் பிடித்தவள்...!
நான் திமிருக்கு திமிர்பிடித்தவன்..!
தீர்த்துகொண்டு அறிவித்துக்கொள் 
யார் வென்றாரென...!
மோதல் கட்டம்...! 
மோகமாய் போகுமென அறியாதவராய்...!



வடக்கும் தெற்கும் வஞ்சிப்பதேது..!
மாறாய் கொஞ்சிக்கொண்டது...!

விலக்கும் விசையெல்லாம் காந்தப்புலம் மாறினால்
ஈர்த்துப்போகுமென.. எழுதி வைத்த அறிவியல்...!
அவளுக்கும் அவனுக்கும் விதிவிலக்காமல்...!
வேடிக்கை காட்டியே போனது...!

இங்கே எதிரெதிர் துருவங்களாய்
வார்த்தைகள் முட்டிக்கொண்டிருக்க
காதல்காரியும் கவிதைக்காரனும்
கவிதைக்குள் கனமழையாய் நனைந்து கிடக்க..!

ஆதவனின் கரங்களுக்கு ஈரம் துவட்ட நேரமில்லை..
அடங்க மறுத்த வெண்ணிலவு
பிறையானபோதும்...
ஒளிந்துகொண்டே வேவு பார்க்க..!
ஆளில்லா கானகம்,
காதல் ஊற்றினால் செழித்துக்கிடக்க..!
ஆடுகள் மேயும் அருகம்புல்லாய்ப்போனாள் காதல்காரி..!




அதிகாலை நேரத்திலே
பெரும் ஊடல் ஒன்றின் முற்றுப்புள்ளியாய்
காதலின் மடியிலே கவிதைக் குழந்தை பிறந்தது,
மாறாத் திமிரோடு...!

என்னிடத்தில் உன்னை ஈர்த்தக்கதை
யாதென உரைப்பாயா?
கண்கள் காணும் திசையெல்லாம்
கவிதைக்காரனின் வார்த்தைகளை
கவர்ந்திழுக்க தயாராகிறாள் காதல்காரி...!

உன் கண்கள் சிந்திய கண்ணீர் என்னை கரைக்கவில்லை...!
கண்ணாடி துறந்த உன் கண்கள் கரைத்ததடி...!
அழுது சாதிக்கும் உன் பிடிவாதம் வெல்லவில்லை
எதிர்த்து நின்று நீ அடுக்கிய கேள்விகளில் சாய்த்ததடி...!

யாருனக்கு பெயர் வைத்தார்?
அநேகமாய் ஓர் வரலாற்றுப்பிழைக்கு
காரணமாய் அவரிருக்கக்கூடும்...!
முன்னோ பின்னோ அடை மொழி கூட்டி...!
ஜெகபாரதி , யுகபாரதி என்றல்லவா
உன்னில் பெயரிட்டிருக்க வேண்டும்..!

அத்தனை திமிரும் மொத்தமாய் உன்னிடம்...!

“ச்சீ” யென ஒன்றை வார்த்தையில் தெறிக்கும், கோபம்!
சிலிர்க்கவைக்கும்..

எத்தனை திட்டி உன்னை விலக்க நினைத்தாலும்
என்னை இறுக்கிப் பிடித்த உன் திமிர்...
அதுவே... உனக்குள் என்னை மூழ்கடித்த திமிர்...!

“போடி” என்றவுடனே ஓடி ஒளிந்துக்கொள்ளும் நீ...
சேவல் கூவுமுன்னே காலை சுற்றிட வருவாய்...!

இருக்கும் நான்கு இதய அறைக்குள்
எவ்வறையில் ஒளித்திட்டாய் என்னை?
இப்படி பூனைக் குட்டியாய் எனை மாற்றி
உன்னை சுற்றி வர செய்கிறாயே?

பெருமூச்சு விட்டவனின் கழுத்தைக் கட்டி
நெற்றியில் முத்தமிட்டவள்
தொடர்கிறாள் மீதிக் கதை...!

எனக்கு பிடித்த உன்னை பட்டியலிடவா?

உன் மேல் உனக்குண்டான கர்வம்...!
நான் உனக்கு சொந்தமானவள்
என்ற திமிர்...! தனித்துவமாய்...தரணி ஆளும் தன்னிகரில்லா தலைவனாய்..
எண்ணிச்சிலாகிக்கும் உன் திமிர்...!
வசீகரிக்கும் கவிதைக்காரனாய் திமிர்...!

நீ திமிர் பிடித்தவனா?

அந்த போர்வைக்குள் இருக்கும்
முரட்டுக் குழந்தையடா நீ...!
உன் முகத்தில் ஒரு திமிர் இருக்கும்...!
உற்று நோக்கினால் ஆயிரம் ஏக்கங்களின்
இருட்டுப்பக்கம் அதில் பூட்டப்பட்டுக் கிடக்கும்...!

கவிதைக்காரா... யாரிடத்தும் அக்கறையில்லையென
உன் வாய் சொல்லலாம்...!
ஆனால்... உன் நேசத்துள் வீழ்ந்தவர்கள்
மேலான அக்கறை உன் இதயச் சுவர்களில்
மோதி வெளிவரத் துடிக்கும் மாயம் அறிவாயா?

உன் திமிருக்குள் ஒளிந்திருக்கும் என் மேலான
நேசம் அறியாதவளா நான்?

பிரியமானவளே...! என்னுள் நீ முழுதாய்
நிறைந்தாய்யென அறிவித்தால் தான் அறிவாயா?
ஒற்றைகல் உப்பின் அளவு பிடிக்குமடி உன்னை...!
அதனிலிருக்கும் ஓராயிரம் அணுக்களும்
உன்னை என்னுள் விதைத்துச் செல்லும்...!

அழக்கூடாதடி நீ...! உன் கண்கள் சிந்தும்
கண்ணீர்த்துளிகளின் ஒற்றை துளியில் கூட
என் நேசம் சுமந்த உப்பிருக்கும்...!

இவர்களின் உரையாடல் நீண்டு கொண்டேயிருக்க
திமிருக்கும் திமிர் பிடித்த அதன் வேலிக்குமிடையில்
காதல் ஒன்றும் புரியவில்லை சரிதான் போ..!
என சலித்தோய்ந்து உறங்கி விட்டது...!

விடியலுக்கு சற்று முன்.....!

Sunday, 16 September 2012

நான் இடி...!

அடக்கி விட துணிந்து
ஆதிக்கம் செலுத்த முயல்பவர்களுக்கு
உரசி செல்லும் மின்னலாய் நான்...!

இடித்து பேசி ருசி கண்டவர்களின்
இடிகள் தாங்கும் இடிதாங்கியாய் நான்...!

வஞ்சகர்களின் வஞ்சனைகளை
எதிர்க்க துணிந்த இடியாகவும் நான்...!

அன்பால் நேசக்கரம்
நீட்டுபவர்கள் மத்தியில்
உருகி உருகி பொழியும்
மழையாய் நான்...!

என் பாசம் வேண்டும் நெஞ்சத்துக்கு
அதன் நகல் கொடுக்கும் அச்சாய் நான்...!

வரைமுறைகளுக்கு உட்பட்ட
கவிதைகளின் எல்லைக்குள்
கட்டுப்படா காற்றாய் நான்...!

என்னையே நேசிக்கும் எனக்கு
என் சுவாசமாகவும் நான்...!

Saturday, 15 September 2012

எனக்குள் ஏனோ தடுமாற்றம்...!

கலைந்து விழும் கற்றை முடி
நடுவே சிக்கிக் கொண்ட ஐவிரல்களாய்
உன் இதயத்து அறைகளில்
பூட்டி வைத்து தடுமாறச் செய்கிறாய்...!

என் கண்கள் சிந்தும்
கண்ணீர் துளி ஒவ்வொன்றையும்
காதல் செய்தே கொல்லப் பார்க்கிறாய்...!

உன் நினைவலைகளால் என்னை சுருட்டி, 
உன்னில் என்னை மூழ்கடித்து 
என் சுவாசம் தடுத்து 
மூச்சிரைக்க வைக்கிறாய்...!

செல்லச் சிணுங்கல்களும்
சீண்டும் உதட்டோர புன்னகையும்
கலந்து தந்தே கெஞ்சப் பார்க்கிறாய்...!

மோனப் பார்வையால் கிறங்கடித்து
கண்வழி ஊடுருவி
மீசை முடி குறுகுறுக்க
கிச்சு கிச்சு மூட்டியே கொஞ்சப் பார்க்கிறாய்...!

பூக்கள் உதிரும் நந்தவனத்தில்
பூவாய் மாறி ஸ்பரிசித்து
என்னை நினைவிழக்கச் செய்தே
மிஞ்சப் பார்க்கிறாய்...!

என்னுள் நீ புகுந்து ஆழ்மனம் தரிசிக்க
நீ நானாகவும், நான் நீயாகவும்
மாற்றி மாற்றி தடுமாற வைத்து
உன் காலடி சுற்றும் பூனைகுட்டியாய்
உருமாற வைக்கிறாய்...!

Friday, 14 September 2012

அப்பா...!

இல்லத்தின் அரசனாயினும்
அரசியின் சிறு சிறு கண்ணசைவில்
புரிதலும் இசைதலுமாய் கட்டுண்டு
இல்லம் காத்த மனையாளன்...!

நேசித்த மனையாளை
நேசம் தவிர்த்து வேறெதையும்
அனுபவிக்க வைக்காதவர்...!

“அம்மா”வென முதல் வார்த்தை
மிழற்றிய போது தாயுமானவராய்
கர்ப்பப்பை சுமந்து நின்றவர்...!

செல்ல மகளின் இடுப்பில்
அரைஞாண் கயிறு பூட்டி
கிச்சு கிச்சு மூட்டி
புளங்காகிதம் அடைந்த இல்லத்தரசன்...!

முதலடி எடுத்து வைத்து
நடைப் பழக தடுமாறி தத்தளித்த போது
சுட்டு விரல் கொடுத்து
நடைப்பழக்கிய அன்பு அப்பா...!

இவரது செல்ல முத்தங்களும்
அவசிய கண்டிப்புமாய்
உப்பு மூட்டை தூக்கிய நாட்களெல்லாம்
இன்னமும் நீண்டுக் கொண்டேதானிருக்கின்றன...!

Thursday, 13 September 2012

இன்னுமோர் அக்னி பிரவேசம்...!

இதோ நான் இறந்து விட்டதாக
ஊர் சொல்கிறது...!

அவர்களுக்கு தெரியுமா?
உயிரை திரியாக்கி
என்னையே விறகாக்கி
என் காதலை வளர்த்துக் கொண்டிருக்கிறேன் என்று...!

உன்னையே உறவாக எண்ணிய நாள் முதல்
நம்பிக்கையை ஆழ் மனதில் விதைத்து
உன்னை நான் பயிரிட்டக் கதை அவர்களுக்கு தெரியுமா?

இதயம் துளைத்து முளைவிட்ட உன்னை
உதிரமாய் பதியம் செய்த கதை தான்
ஊர் அறியுமா?

என் காதலை உரமாய் போட்டு
வளர்த்து விட முனைந்த உன்னில்
களையாய் ஒருத்தி தோன்றிய
நாள் தான் காலம் மறக்குமா?

வேலிப் படரும் உன் கரங்களென்னவோ
மாற்றான் தோட்டத்தில்... வேர் என்னவோ
இன்னும் என்னுள் பிடுங்கி எறியவே
முடியா உறுதியாய்... உனக்குள் உறுத்தவில்லையா?

நீ மீண்டு வருவாயென்ற நம்பிக்கை
உன் மேல் நான் கொண்டதாய் இருக்கலாம்...
ஆனால்... என் நம்பிக்கையின் வீரியம்
என்னையே அழித்த கதை நீ அறிவாயா?

அக்னி வலம் வந்து கைபிடிப்பாய் என்றிருந்தேன்...
இதோ அணைக்க வேண்டிய உன் கரங்கள்
திசைமாறித் தழுவியதால்
அக்னி என்னை அணைக்க
உன்னுள் பிரவேசிக்க துவங்கி விட்டேன்...!

ஆம்... அங்கே எரிந்துக் கொண்டிருப்பதென்னவோ
என் உடல் தான்... ஆனால் மனமல்லவோ
தகித்துக் கொண்டிருக்கிறது...!