Showing posts with label குடிப்பழக்கம். Show all posts
Showing posts with label குடிப்பழக்கம். Show all posts

Wednesday, 24 June 2015

ராமையாவுக்கு - எழுதுகிறேன் ஒரு கடிதம்



ராமயாவுக்கு,

அன்புள்ள ராமையாவுக்குன்னு தொடங்கலாமான்னு ரொம்ப நேரம் யோசிச்சேன். சின்ன வயசுல நீங்க தான் என்னை மாருலயும் தோளுலயும் தூக்கி வளத்தீங்களாம், அம்மா சொன்னா. அப்படியும் எனக்கு உங்கள அன்புள்ளன்னு சொல்ல மனசு வரல.

காரணம் நீங்களே தான். பதினஞ்சு வருஷம் கழிச்சு இப்பத் தான் சொந்த ஊருக்கு வர்றேன். இங்க யாருக்குமே என்னை தெரியாதுன்னு நினச்சுட்டு தான் வந்தேன். ஆனா தூரத்துல இருந்து பாத்ததுமே நீங்க என்கிட்ட ஓடி வந்தீங்க. உங்க முகத்துல அப்படி ஒரு சந்தோசம். தாயி, நல்லாயிருக்கியா தாயின்னு என் ரெண்டு கையையும் புடிச்சுகிட்டீங்க. உங்க உடை எல்லாம் அவ்வளவு அழுக்கு. வெத்தல போட்டு குதப்பி குதப்பி பல் எல்லாம் வெத்தல கறை. போதாதுக்கு வாய்ல இருந்து வாய்நீர் வேற ஒழுகிட்டு இருந்துச்சு.

இதுக்காகவா என்னை அன்புள்ளன்னு சொல்ல நீ யோசிக்குறன்னு நீங்க கேக்கலாம். இல்ல, நிச்சயமா இல்ல. உடம்புல அழுக்கு இருந்தாலும் மனசுல அப்பழுக்கத்த ஜனங்க நீங்க எல்லாம்னு எனக்குத் தெரியும். ஆத்துலயும் கொளத்துலயும் ஊரான் வீட்டு அழுக்க எல்லாம் அடிச்சு தொவைக்குற ஜனங்க நீங்க. உங்கள அழுக்குன்னு நான் எப்படி ஒதுக்க முடியும்?

பின்ன எதுக்கு என்னைப் பாத்ததும் மேலோட்டமா ஒரு சிரிப்பு மட்டும் சிரிச்சுட்டு கைய இழுத்துட்டு ஒதுங்கி போனன்னு கேக்குறீங்களா? ரெண்டு நாள் கழிச்சு ஊருக்கு புறப்பட்டப்ப தூரமா நீங்க கைல துண்ட வச்சுட்டு என்னையே எட்டி எட்டிப் பாத்தப்ப படக்குன்னு மூஞ்சிய திருப்பிக்கிட்டு ஏன் கார்ல ஏறிப் போனேன்னு கேக்குறீங்களா?

அதுக்கும் காரணம் நீங்களே தான். உங்க உருவம் என்னை ஒரு நொடி உருக்குலைய வச்சது உண்மை தான். திடீர்னு ஒரு அந்நிய ஆடவர் என் கைய புடிச்சா எனக்கு அதிர்ச்சியா இருக்குமா இருக்காதா? ஆனா இதெல்லாம் ஒரு காரணமே இல்ல. திகைச்சாலும் புரிஞ்சுகிட்டு சந்தோசமா உங்கள பாத்து சிரிச்சிருப்பேன்.

ஆனா உங்க மேல அடிச்சுது பாருங்க குப்புன்னு ஒரு நாத்தம், என் இத்தன வருஷ வாழ்க்கைல நான் உணர்ந்திடாத நாத்தம் அது. குடலை பிரட்டிகிட்டு வந்துடுச்சு. விட்டா எங்க அங்கயே வாந்தி எடுத்துருவனோன்னு தான் உடனே அங்க இருந்து வந்துட்டேன்.

அதுக்காகத் தான் உங்க மேல அன்பு இல்லாம போய்டுச்சுன்னு எல்லாம் இல்ல. அன்னிக்கி முழுக்க அம்மா நீங்க முட்ட வந்த மாட்டுகிட்ட இருந்து என்னை காப்பாத்தினதையும் அதனால கீழ விழுந்து உங்க கை முறிஞ்சு போன விசயத்தையும் கதைகதையா சொன்னா. பாம்புனா கூட பயமே இல்லாம பிடிச்சு தூக்குவேனாமே, பச்சப் பாம்பும் தண்ணி பாம்பும் நீங்க தான் பிடிச்சுட்டு வருவீங்கன்னு அம்மா சொன்னா. என் காலுல நீங்க மாட்டி விட்ட கொலுசு தான் ரொம்ப நாளைக்கு இருந்துச்சாம். பாப்பா படிச்சு பெரிய டாக்டராகணும்னு கனவெல்லாம் கண்டீங்களாமே. ஆனா ஒண்ணு ராமையா, நான் டாக்டராகி எம்.ஜி.ஆர் மாதிரி முதலமைச்சர் ஆகணும்னு கனவு கண்ட ஒரே ஆள் நீங்களா தான் இருக்க முடியும். ஹஹா.

ராமையா, உங்கள பத்தின விஷயங்கள் எல்லாமே எனக்கு சந்தோசத்த தான் குடுத்துச்சு. அன்னிக்கி சாயங்காலம் மட்டும் நான் அவள பாக்காம இருந்துருந்தா இந்நேரம் உங்க தோள்ல தொங்கி பழைய நினைவுகள புதுபிச்சிருப்பேனோ என்னவோ?

அவ உங்க பொண்ணாமே. பதினெட்டு வயசு இருக்குமா அவளுக்கு. அதுக்குள்ள கண்டாங்கி கட்டிக்கிட்டு கைல ஒரு புள்ளையோட ஒருத்தன்கிட்ட மிதி வாங்கிட்டு இருந்தா. கேட்டா அவ புருசனாம். ஏன் ராமையா, நீங்களும் தான அப்ப அந்த இடத்துல இருந்தீங்க. அவன் போட்டு அந்த அடி அடிக்குறான், நீங்க எல்லாம் விதின்னு வாய்ல துண்ட பொத்திகிட்டு அம்மாகிட்ட வந்து அழுதுட்டு நிக்குறீங்க. அந்த நொடி உங்கள பாத்து எனக்கு ஆத்திரம் வந்துச்சு.

நான் என்ன தாயி பண்றதுன்னு என்கிட்ட கேக்காதீங்க, இப்படி தான குடிச்சு குடிச்சு ஒதைச்சு உங்க பொண்டாட்டி படக்கூடாத இடத்துல பட்டு அல்பாயுசுல போய் சேந்துருக்காங்க. அப்பயாவது திருந்துனிங்களா நீங்க? வயசுப் புள்ளைய வீட்ல வச்சிருக்க கூடாதுன்னு பத்தாங்க்ளாஸ் பரிச்ச எழுத போன புள்ளைய புடிச்சி இந்த குடிகாரனுக்கு கட்டி வச்சிருக்கீங்க.

அவன் குடிகார நாயின்னு தெரிஞ்சும் கல்யாணம் ஆனா திருந்திருவான்னு அவன் தலைல இந்த புள்ளைய கட்டியிருக்கீங்க. ஏன்யா, தெரியாம தான் கேக்குறேன், நீங்க எல்லாம் பரிசித்து பாக்கவா பொம்பள புள்ளைங்க எல்லாம் பிறப்பெடுத்துருக்கோம்? பெத்த புள்ளைய வச்சு காப்பாத்த துப்பில்லனாலும் பரவால, அத பாழும்கிணத்துல தள்ளி விட எப்படியா மனசு வந்துச்சு? அதுவும் மனசாட்சியே இல்லாம எல்லாம் அவ விதி, பொறந்த பொறப்புன்னு அவ மேலயே பழி போடுறீங்க?

நான் ஒருத்தி உங்கள பாத்து மூஞ்சிய திருப்பிகிட்டது தான் உங்களுக்கு குறைச்சலா போய்டுச்சாக்கும். கண் எல்லாம் கலங்கி தூரமா நான் மறையுற வரைக்கும் பாத்துகிட்டே இருந்தீங்க. ஆனா ராமையா, நீங்க அழுதது என் கண் முன்னால நிக்குது. என்ன இருந்தாலும் என்னை தூக்கி வளத்த மனுஷன் இல்லையா. அதனால தான் இத எல்லாம் உங்ககிட்ட சொல்லனும்னு தோணிச்சு.

உங்க பொண்ணு அழுறது உங்க மனச உறுத்தவே இல்லயா. மனசுக்குள்ள ஆயிரம் வருத்தம் இருக்கு அதான் குடிக்குறேன்னு சப்பக் கட்டு கட்டாதீங்க. அந்த பய தான் குடியால சீரழிஞ்சு உங்க பொண்ணையும் சீரளிக்குறான்னா நீங்களும்ல குடிச்சி குடிச்சி அவ வாழ்க்கைய சீரளிக்குறீங்க. என்ன பாக்குறீங்க?

பாசம்குறது தூக்கி வளத்த புள்ளைய பாத்து அவ பகட்டா திரியுறத பாத்து சந்தோசப்படுறது இல்லயா, பெத்து வளத்த புள்ள நல்ல துணி போடணும், நாலெழுத்து படிக்கணும், சீண்டுறவன அவ ஏறி மிதிக்கணும்னு நினைக்குறது தான்.

முதல்ல அந்த வீணாப்போன குடிய தூக்கிப் போட்டுட்டு எம்புள்ளய ஏண்டா அடிக்குற நாயேன்னு அவன ஒரு வார்த்த கேளுங்க. குடிய விட்டுட்டு வாடா, எம்புள்ளைய வாழ அனுப்புறேன்னு அவன் கிட்ட சொல்லுங்க. திருந்தினா திருந்தி வரட்டும். இல்லனா கவலையே படாதீங்க, அவன் கிட்ட அடியும் ஒதயும் வாங்கிட்டு அந்த புள்ள அணுஅணுவா செத்துப் போறதுக்கு உங்க வீட்ல வந்து மகாராணியா வாழ்ந்துட்டு போய்டலாம்.

ஒரு பொண்ணுக்கு நல்ல புருஷன் அமைஞ்சா நல்லது, ஆனா எல்லாருக்கும் அப்படி அமையுறது இல்லையே. ஒரு பாவிய கட்டிக்கிட்டு காலம்பூரா கஷ்டப்படணும்ன்னு அவசியமே இல்ல. புருஷன் மட்டும் ஒரு பொண்ணுக்கு உலகமும் இல்ல. அவளுக்கு ஒண்ணும் நாலு கழுத வயசும் ஆகிடல. இன்னும் பால் மணம் மாறாத அந்த பச்ச கைல இன்னொரு குழந்தை. கொடுமையா இருக்குயா.

என் மேல இன்னும் அன்பும் பாசமும் இருந்தா திருந்தி வாங்க. அப்பாவோட போன் நம்பர் உங்ககிட்ட இருக்கும்னு நம்புறேன். இல்லனா மாமாகிட்ட வாங்கிக்கோங்க. உங்க போனுக்காக காத்திருக்கிறேன். அதுல சந்தோசமா உங்க பொண்ணு குரலை தான் நான் முதல்ல கேக்கணும்.

கவலையே படாதீங்க, அவ என் தங்கச்சி. அவள படிக்க வைக்க வேண்டியது என் பொறுப்புன்னு எல்லாம் நான் சொல்ல மாட்டேன். புள்ளைய பெத்தது நீங்க, நீங்க தான் அவள நல்லா பாத்துக்கணும். சம்பாதிக்குற காச சேர்த்து வைக்கப் பாருங்க. அவள படிக்க வைங்க. நல்ல உத்தியோகத்துல இருத்தி அழகு பாருங்க. அவ புள்ளைய வளர்த்தெடுக்குற தெம்பு அவளுக்கு வரணும். அதுக்கு என்னென்ன வழிகாட்டணுமோ அத எல்லாம் நான் காட்டுறேன்.

எப்படி வாழணும்னு நான் கத்துக் குடுக்குறேன் உங்களுக்கு. முதல்ல அந்த பாழாப்போன குடிய மறந்து தொலைங்க.

அன்பெல்லாம் இப்ப இல்ல. வந்தா பாத்துக்கலாம்.

- ப்ரார்த்தனா


.

Monday, 2 February 2015

குடி குடியை கெடுக்கும்...



நேத்து மதியம் சாப்ட்டுட்டு ரெஸ்ட் எடுத்துட்டு இருந்தேன். ஏற்கனவே உடம்பு சரியில்லன்னு சொல்லியிருந்ததால வீட்ல யாரும் டிஸ்டர்ப் பண்ணல. திடீர்னு ஒரு குரல் என் ரூம் பக்கத்துல ஒலிச்சுது. நான் பாப்பாவ பாக்கணும், பாத்துட்டு தான் போவேன்னு. பாட்டி அவளுக்கு உடம்பு சரியில்ல, ரெஸ்ட் எடுக்குறான்னு சொன்ன பிறகும் கேக்கல. நான் உடனே மெதுவா எழுந்து கதவைத் திறந்தேன்.

ஒரு ஆள் நின்னுட்டு இருந்தார். கூடவே பாட்டி. அப்பா ஹால்ல சோபால உக்காந்துட்டு இருக்காங்க.

“பாப்பா, நல்லா இருக்கியாமா, என் பேர் பால்ராஜ்மா. இங்க தான்மா நம்மூருல டீக்கடை வச்சிருக்கேன். நீ வெளில போகும்போது பாப்பேன் பாப்பா, ஆனா பேச எல்லாம் வாய்ப்பு கிடைக்கல. வர்ற ஞாயிற்று கிழமை தங்கச்சிக்கு (அவர் பொண்ணுக்கு) நிச்சயதார்த்தம் வச்சிருக்கேன் பாப்பா. நீ கண்டிப்பா வரணும். வந்து நான் எப்படி ஏற்பாடு எல்லாம் பண்ணியிருக்கேன்னு பாக்கணும்”ன்னு சொன்னார். அவர் கிட்ட அப்படி ஒரு ஆர்வம். ஆளை முழுங்குற மாதிரி பாக்குறாங்கன்னு சொல்வாங்களே, அப்படி தலை முதல் கால் வரைக்கும் என்னை பாத்து பாத்து சந்தோசப்படுறார்.

எனக்கு ஒரே குழப்பம். யாருடா இந்த ஆளு, சம்மந்தமே இல்லாம நம்மள பாப்பா பாப்பாங்குறார், அப்பா வேற பாத்து புன்னகைச்சுட்டே இருக்கார்ன்னு. இதுல அவர் பொண்ணு நிச்சயதார்த்தத்த வேற நான் எதுக்கு போய் பாக்கணும்ன்னு சுத்தமா புரியல.

நின்னுட்டேயும் இருக்க முடியல, சரி இந்தாளு விட மாட்டார் போலன்னு மெதுவா ஹால்ல போய் அப்பா பக்கத்துல உக்காந்துட்டு நீங்களும் உக்காருங்கன்னு சொன்னேன்.

இல்ல, பரவாலமா, எனக்கு நேரம் ஆச்சு, மத்த வீடுகளுக்கும் போய் எல்லாருக்கும் அழைப்பு வைக்கணும்ன்னு சொல்லிட்டே, பாப்பாவுக்கு என்னை தெரியுதான்னு கேட்டார். நான் இல்ல தெரியலன்னு சொன்னதும், அதானே உனக்கு தெரியாது, அப்போ நீ ரொம்ப சின்ன கொழந்தை, ஆனா எனக்கு தெரியும், என்னோட வாழ்க்கைல வெளக்கு ஏத்தி வச்சவமா நீன்னு சொன்னதும் எனக்கு ஒரே குழப்பம்.

அப்பாவ பாக்குறேன், சரி, அப்பாகிட்ட கேட்டா நல்லாயிருக்காதுன்னு அவர் கிட்டயே அப்படி என்ன பண்ணினேன்னு கேட்டேன்.

நீ அப்போ ரொம்ப சின்னக் கொழந்த பாப்பா, தெருவுல உன் வயசு புள்ளைங்களோட விளையாடிட்டு இருப்ப. நான் ஒரு மொடாக் குடிகாரன். அன்னிக்கி குடிச்சுட்டு கருமம் ஒடம்புல ஒட்டுத் துணி கூட இல்லாம கிடந்துருக்கேன். சுத்தமா முடியல பாப்பா. வர்றவன் போறவனெல்லாம் காறித் துப்புறான். எட்டிட்டு சவுட்டிப் போட்டு போனவனும் உண்டு. அப்ப நீ தான் பாப்பா வீட்ல இருந்து ஒரு சீலத் துணி கொண்டு வந்து போர்த்தி விட்ட. என்கிட்ட தண்ணி வேணுமான்னு கேட்ட. ஆனா அப்புறம் என் பொண்டாட்டி வந்து கூட்டிட்டு போய்ட்டா. அம்மா இருந்தா சொல்லியிருப்பாங்க. என் பொண்டாட்டி புள்ளையோட அம்மா கிட்ட தான் வந்து அழுதேன். புத்தியோட பொழச்சுக்கன்னு அறிவுரை சொன்னாங்க பாப்பா. உங்க மாமன் பெரியய்யா கிட்ட சொல்லி கடை வைக்க உதவி பண்ணுனதே நம்ம தாயி தான் பாப்பா. அன்னியோட அந்த கருமத்த உட்டவன் தான் பாப்பா. இன்னிக்கி என் புள்ளைக்கு நல்ல நெலமைல கல்யாணம் கட்டிக் குடுக்கப் போறேன். நான் நல்லா வந்தத உங்க கிட்ட எல்லாம் காட்டணும்ன்னு ஆச பாப்பான்னு சொல்லிட்டே போனார்.

எனகென்னமோ அம்மா தான் நிறைய அட்வைஸ் பண்ணியிருப்பான்னு தோணிச்சு. சின்ன புள்ளைல அப்படி நான் என்ன செய்துருக்க முடியும்?

உங்க பொண்ணு என்ன படிச்சிருக்காங்கன்னு கேட்டேன். ஏதோ டீச்சராம்ல, அதுக்கு படிச்சிருக்கா பாப்பா, அடுத்த தடவ வேலைக்கு ஆள் எடுக்கும் போது இவளுக்கும் கிடச்சிருமாம்ல, இப்ப நம்ம பெரிய தாத்தன் ஸ்கூல்ல தான் வாத்திச்சியா இருக்கான்னு சொன்னார்.

மனசுக்குள்ள சந்தோசமா இருந்துச்சு. அவர அனுப்பிட்டு ரூமுக்குள்ள வந்தப்ப எதுவுமே செய்யலனாலும் என்னமோ சாதிச்சுட்ட மாதிரி அப்படி ஒரு கெத்து வந்துச்சு. தன்னாலயே சிரிப்பும் கண்ணீரும் சேர்ந்துடுச்சு.

படுத்துட்டே யோசிச்சு பாக்க ஆரம்பிச்சேன். இந்த குடியும், போதையும் எத்தன குடும்பங்கள சீரழிச்சு போட்ருக்கு? குடிக்குற எத்தனை பேருக்கு அவங்க வீட்டு புள்ள குட்டிங்க வாழ்க்கையோட அவங்க விளையாடுறது தெரியும்? குடிக்கும் போது அத எல்லாம் நினச்சு பாத்தா ஒரு மிடறு உள்ள இறங்குமா என்ன?

ஸ்கூல் படிக்குறப்ப பிரெண்ட்ஸ் எல்லாம் சேர்ந்து கிராமம் கிராமமா சுத்தியிருக்கோம். பெரும்பாலும் எங்க நோக்கம் ரெத்த தானமும், எய்ட்ஸ் அவேர்னஸ்சும் தான்னாலும் இந்த மாதிரி நிறைய ஆட்கள கடந்து வந்துருக்கோம். குடிச்சு குடிச்சு குடல் அழுகி, வாழத் தெரியாம பொண்டாட்டியவே தொழிலா மாத்தி வாழ வேண்டிய அவல நிலையையும் பாத்துருக்கோம், நடு ரோட்டுல பையன தூக்கி போட்டு அடிச்சு உதச்சு, அவன் ஸ்கூல் பீச பிடிங்கிட்டு போற அப்பனையும் பாத்துருக்கோம். குடி போதைல ரோட்டுல அடிபட்டு நாயை விட கேவலமா செத்துக் கிடந்தவங்கள பத்தி கேள்வியும் பட்ருக்கோம். எங்கப்பன் எல்லாம் செத்தா தாண்டா எங்களுக்கு நிம்மதின்னு பிஞ்சு மனசு கதறுனத கேட்ருக்கோம்.

நாங்கெல்லாம் சொல்லி எந்த ஆளும் திருந்துன மாதிரி எனக்கு நியாபகம் இல்ல. ஆனா அந்த வகைல பால்ராஜ் ஒரு சாதனை மனுஷன் தானே... அந்த மனுஷன் வீட்டு கல்யாணத்துக்கு போகாம வேற எந்த வீட்டு கல்யாணத்துக்கு போகப் போறோம்?

இந்த நேரத்துல குடி பத்தி நான் எழுதின கவிதைய உங்க கிட்ட ஷேர் பண்ணிக்கனும்னு தோணிச்சு...

இதோ அந்த கவிதை....

அப்பா ப்ளீஸ்ப்பா.....
..........................................................
நீயெல்லாம் ஏன்ப்பா குடிக்குற?
குடிச்சுட்டு வந்து அம்மாவ போட்டு அடிக்குற...
அம்மா பாவம்லப்பா, நமக்காக தானே
அடுத்த வீட்ல போய் பத்து பாத்திரம் தேச்சுட்டு வருது.

அடுத்தவங்க கிட்ட ஏச்சும் பேச்சும் வாங்கிட்டு
அவங்களுக்கு மாடா ஒழச்சுட்டு
அவங்க குடுக்குற காச பாத்து பாத்து
வீட்டுக்கு கொண்டு வந்தா
நீ அத புடிங்கிட்டு போய் குடிச்சுட்டு வர...

நான் ஏன்ப்பா உனக்கு பொண்ணா பொறந்தேன்?
பொட்ட புள்ளைய பெத்து போட்டுருக்கா
சிறுக்கினு அப்பவும் அம்மாவ தான் திட்டுற...

என்கிட்ட நீ பாசமா தான் இருக்க,
ஆனா குடிச்சுட்டு வந்தா
புள்ளனு கூட பாக்காம
பொட்டச்சிக்கி எதுக்கு படிப்புன்னு
எட்டில ஒதைக்குற...

போன பரிட்சையிலயாவது அந்த கோபிய முந்திட்டு
நான் முதலாவதா வரணும்னு நினைச்சேன்.
என் புத்தகத்த எல்லாம் கிழிச்சு போட்டுருந்தா கூட
ஒட்டி வச்சி படிச்சிருப்பேன்,
நீ தீயில போட்டு கருக்கிட்ட.

பள்ளி கூடத்துல நான் தான் நல்லா பாடுறேனாம்
பெரிய பாட்டுக்காரியா வருவன்னு சார்மார்
எல்லாம் சொல்றாங்க...
இப்போ நடந்த பாட்டு போட்டியில
நான் தான் பஸ்ட்...
கலக்டர் முன்னால பாட சொன்னாங்க...
ஆனா பாக்க நீ வரலயேப்பா...

நம்ம சங்கீதா அப்பா
அவள சந்தைக்கு கூட்டிட்டு போய்
கேட்டதெல்லாம் வாங்கி குடுப்பாராம்...
கத கதயா சொல்றா...

போன மாசம் திருவிழாவுக்கு
பெரியப்பா கூட எனக்கு பலூன் வாங்கி தந்தாரு,
நடேசன் மாமா தேன்குழல் வாங்கி தந்தாரு...
நீ என்ன எங்கயுமே கூட்டிட்டு போனது இல்ல,
ஆசையா என்ன தூக்கி தட்டாமால சுத்தினதில்ல...

ஆனாலும் அப்பா, நீ அப்பப்போ வாங்கிட்டு வருவியே
அந்த முட்ட போண்டா, வாழக்கா பஜ்ஜி, பரோட்டா...
அதெல்லாம் நீ பக்கத்துல உக்காந்து
தின்னுடி ராசாத்தி னு சொல்லுறப்போ
எனக்கு எப்படி இருக்கும் தெரியுமா?

கண்ணுல இருந்து தண்ணி வருதுப்பா,
எனக்கு எங்கப்பா தான் ஒலகமேனு
கூட்டாளிங்க கிட்ட எல்லாம் ஓடி போய்
சொல்லணும் போல இருக்கும்.

நீ ஏன்ப்பா அப்படியே இருந்துர கூடாது. உன்ன நான்
படிச்சு பெரிய ஆபீசர் ஆகி
ராஜா மாதிரி வச்சுப்பேன்ப்பா...

உன் மடியில படுத்து தூங்கணும்,
உன் கழுத்த கட்டிக்கிட்டு
அந்த ராமாயியக்கா பசங்க
என்ன கிண்டல் பண்ணின கதை சொல்லணும்.
நீ மட்டும் அவங்கள ஓட ஓட விரட்டினா
நான் விழுந்து விழுந்து சிரிப்பேனே...

அப்பா, குடிக்க மட்டும் செய்யாதப்பா.
நீ குடிச்சுட்டு வந்துபுட்டா
உங்கண்ணுக்கு புள்ளையா தெரிய மாட்டேங்குறேன்...
கழுத கழுதனு என்னைய கழுதைய விட கேவலமா நினைக்குற...

உன்கிட்ட சொல்ல வேண்டியத எல்லாம்
சுவர பாத்தும் வானத்த பாத்தும் தான்
சொல்ல வேண்டியதா இருக்கு...
அப்பா, ப்ளீஸ்ப்பா......