Monday 30 December 2013

இது என் அம்மா...



என்னடா இவ, மாம்பழத்தோட படம் போட்டுருக்காளேன்னு சாதாரணமா நினைச்சுடாதீங்க. காரணம், இது என் அம்மா...

ஆமா, அம்மாவே தான். என்னை பத்து மாசம் சுமந்து பெத்த அம்மாவே தான். அதெப்படின்னு கேக்குறீங்களா?

இந்த பழம் பழுத்து வந்தது ஒரு சாதாரண மரத்துல இருந்து இல்ல. என் அம்மாவோட சரீரம், இந்த பூமி சுழற்சியினால பதபடுத்தப் பட்டு, அவளோட ஒவ்வொரு அணுவும் உரமா, உயிரா வேர் வழி பரவி, அழகா கிளையா, இலையா, இளந்தளிரா மாறி, பருவத்தோட பூவாகி, பிஞ்சாகி, காயாகி, இப்போ கனியாகி இருக்கா...

அம்மா பத்தி இன்னும் சந்தேகம் இருந்தா இத பாத்து தெரிஞ்சுக்கோங்க...

அப்புறம், இன்னொரு விஷயம் என்னன்னா, இது மாம்பழ சீசனே இல்ல. ஆனாலும் இந்த நேரம் காய்த்ததால மழைல கொஞ்சம் மாட்டிகிட்டு. அதனால அணில்கள், மற்ற மர விலங்குகள், பறவைங்கன்னு எல்லாரும் சாப்பிட்டு போக மொத்தமே அஞ்சு பழம் தான் கிடைச்சதா சித்தப்பா கொண்டு வந்து தந்துட்டு போனாங்க...

இங்க உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லணும், அன்னிக்கி முழுக்க (29/12/13) மனசு கொஞ்சம் அலைபாஞ்சுட்டே இருந்துச்சு. ராத்திரி முழுக்க தூக்கம் இல்லாம, எதையோ நினச்சு குழம்பிட்டு, எதுவுமே தப்பாகிட கூடாதுன்னு பிரார்த்தனை பண்ணிகிட்டே இருந்துச்சு. சாயங்காலம், எங்க தென்னந்தோப்புல தாவி தாவி விளையாடிட்டு, அதுகளோட வாழ்வாதாரத்த சந்தோசமா வச்சிக்கிட்டு இருந்த அணில்ல ஒண்ணு வீட்டுக்குள்ளயே வந்து என் கண்முன்னாடியே துடிதுடிச்சி உயிர விட்டுடுச்சு. எல்லாமா சேர்ந்து என்னை மொத்தமா சோர்வடைய செய்தப்போ தான் சித்தப்பா அம்மாவ கொண்டு வந்து என்கிட்ட சேர்த்தாங்க.

இத விட வேற என்ன நிரூபணம் வேணும்க, அம்மா என் கூடவே தான் இருக்கான்னு சொல்றதுக்கு. நேத்து கார்த்திக் இன்னொரு விஷயம் சொன்னார், உன் அம்மா அவங்க ஆயுள உனக்கு குடுத்துருக்காங்கன்னு. அது எத்தனை உண்மையான வார்த்தைன்னு என்னை முழுசா அறிஞ்சவங்களுக்கு தெரியும்....

இப்போ நான் வாழுற இந்த ஒவ்வொரு நொடியும் என் அம்மாவோட ஆயுள் தான்...

அம்மாவுக்கு எப்பவுமே இயற்கை மேல தணியாத காதல். அத விட தணியாத காதல் அப்பா மேல இருந்துச்சு. என்கிட்ட ஒருத்தர் கேட்டாரு, அம்மா பத்தி மட்டுமே எழுதுறீங்களே, அப்பா பத்தி ஏன் எழுதலன்னு. எனக்கு எழுத தோணலங்குறது தான் நிஜம். காரணம், எப்போ எல்லாம் நான் காதல உணர்றேனோ, எப்போ எல்லாம் அமைதிய உணர்றேனோ, எப்போ எல்லாம் அஹிம்சைய உணர்றேனோ, அப்போ எல்லாம் நான் அவங்க ரெண்டு பேரையுமே உணர்றேன். இங்க, அம்மாங்குற வார்த்தைக்குள்ள ரெண்டுபேருமே அடங்கிடுறாங்க. அம்மா எனக்கு அவ ஆயுசை குடுத்தா, அப்பா, எனக்கு அவளோட அருகாமையை குடுக்குறார். இத தவிர எனக்கு வேற என்ன சொல்றதுன்னு தெரியல...


இந்தா, ஒரு மாம்பழம் மிச்சம் இருக்கு, இந்த அப்பாவ தின்ன விட்ற கூடாது... நான் போய் ஒரு தடை உத்தரவு போட்டுட்டு வர்றேன்....



.

டைரியின் ஆட்டோகிராப்...


வருஷ கடைசி... எல்லாரும் அவங்கவங்க ஆட்டோகிராப்ப திரும்ப பாத்துக்குறாங்க. நான் கூட திரும்பி பாக்க ஏதாவது ஆட்டோகிராப் இருக்கான்னு யோசிச்சு பாத்தேன், இந்த ஆட்டோகிராப் வாங்குறதே பெரிய ஆட்டோகிராப் தானேன்னு அத பத்தி சொல்ல முடிவு பண்ணிட்டேன்.

அது ஒரு அழகிய டென்த் ஸ்டான்டர்ட் பருவம். டென்த் எக்ஸாம் ஆரம்பிக்குறது முன்னாடி என்னோட கிளாஸ் மேட்ஸ் எல்லாரும் கைல ஆள் ஆளுக்கு ஒரு ஆட்டோகிராப் புக்கோட அலைஞ்சுட்டு இருந்தாங்க. நமக்கு இதுல எல்லாம் ஏனோ சுத்தமா நம்பிக்கையே இல்ல. அதுலயும் எங்க கேங்க் கொஞ்சம் அராத்து பார்ட்டிங்க கூட... இந்த ஆட்டோக்கிராப் வாங்குறவங்கள எல்லாம் கடுமையா நக்கல் பண்ணிட்டு ஜாலியா திரிஞ்சுட்டு இருந்தோம்.

அப்போ தான் என் கேங்க்ல இருந்த ரபீக் ஒரு ஆட்டோக்கிராப் புக்க கொண்டு வந்து நீட்டினான். அந்த பக்கி கண்ணு எல்லாம் வேற கலங்கி போய் இருந்துச்சு. எதுக்குமே அசராத நாங்க எல்லாம் ஒரு நிமிஷம் அரண்டு போய் உக்காந்து இருந்த குட்டிசுவர் மேல இருந்து படார்ன்னு கீழ குதிச்சுட்டோம் (நாங்க உக்காந்து இருந்தது ஒரு சமாதி. பாவம் யாரையோ அங்க புதைச்சு எங்கள எல்லாம் அவர் தூக்கி சுமந்துட்டு இருந்தாரு. போர் அடிச்சா அது மேல ஏறி உக்காந்து தான் அரட்டையே அடிச்சுட்டு இருப்போம்). எங்க கேங்க்ல கலான்னு ஒருத்தி உண்டு. அவ தான் ஓடி போய் லூசாடா நீ, ஆட்டோக்கிராப் வாங்குறது நம்ம பிரெண்ட்ஷிப்புக்கே அவமானம்ன்னு சட்டைய புடிச்சு உலுக்குறா. பாவம், என்ன நினைச்சானோ கண்ண தொடச்சுகிட்டே திரும்பி போய்ட்டான். அதுவரைக்கும் கலகலன்னு இருந்த எங்க டீம் அப்படியே ஸ்லோமோசன்ல பீல் ஆகி, திரும்பி நடக்க ஆரம்பிச்சுட்டோம்.

அப்புறம் சாயங்காலமா வீட்ல வழக்கம் போல அரட்டை கச்சேரி நடத்திட்டு இருந்தப்போ அந்த பயல பத்தியே எல்லாரும் பேசிட்டு இருந்தோம். எதோ ஒரு சோகம் எல்லார் மனசுலயும் குடியிருக்க ஆரம்பிச்சுடுச்சு. நிஜமாவே நாம எல்லாம் பிரிஞ்சிருவோமோன்னு பயம். அப்போ தான் அம்மா சொன்னாங்க, இதெல்லாம் வாழ்க்கைல அடுத்தடுத்து வர்ற கட்டங்கள். எல்லாத்தையும் பேஸ் பண்ணனும். நீங்க ஒண்ணா இருக்க போற நேரம் வேணும்னா மாறலாம், ஆனா அன்பு இருக்கும்தானேன்னு.

அடுத்த நாள் எல்லார் கைலயும் ஆட்டோகிராப் நோட். நான் மட்டும் தான் வெறும் கைய வீசிட்டு போயிருந்தேன். அங்க போய் தான் அடடா, நாமளும் அப்பாகிட்ட ஒண்ணு வாங்கி கேட்டுருக்கலாமோன்னு தோணிச்சு. சரி, நாளைக்கு கொண்டு வரலாம்ன்னு முடிவு பண்ணி, எல்லாருக்கும் ஆட்டோகிராப் நோட்ல எழுதி குடுத்து அப்படியும் இப்படியுமா ஒரு நாள் கடந்து போச்சு. அப்பா வேற அன்னிக்கி பாத்து மாடு பிடிக்க எங்கயோ தூரமா போய்ட, எனக்கு ஆட்டோகிராப் நோட் வாங்கி தர யாருமே இல்ல.... அவ்வ்வ்வ்....

அப்புறம் அம்மா, ஒரு டைரி எடுத்து தந்தாங்க. இத கொண்டு போன்னு சொல்லி. அத வாங்கிட்டு போய் ஒருத்தி கைல குடுத்து, எல்லார்கிட்டயும் ஆட்டோகிராப் வாங்கி தந்துருன்னு குடுத்துட்டேன் (பின்ன, நாமளே போய் கேட்டா நம்ம கெத்து என்ன ஆகுறது?)

என்னோட டைரி ஒருத்தர் கைல இருந்து அடுத்தவர் கைக்குன்னு மாறி மாறி போய் சாயங்காலமா என்கிட்ட திரும்பி வந்துச்சு. அந்த நாள்க்கு அப்புறம் ஸ்டடி ஹாலிடேஸ். அடுத்து எக்ஸாம் அன்னிக்கி தான் எல்லாரும் மறுபடியும் பாக்க முடியும்ன்னு டாட்டா காட்டிட்டே எல்லாரும் கிளம்பி வந்தாச்சு. ஆனாலும் எங்க கேங்க் தான் யார் வீட்லயாவது ஒண்ணா தானே இருப்போம். அந்த தைரியத்துல அன்னிக்கி ஒருத்தி வீட்ல மீட்டிங்ன்னு பிக்ஸ் பண்ணிட்டு வீட்டுக்கு வந்தாச்சு.

வீட்டுக்கு வந்ததும் டைரி எங்க, டைரி எங்கன்னு பரபரத்தது அம்மா தான். என்னை கூட படிக்க விடாம பேக்ல இருந்தே பிடிங்கிட்டாங்க. அப்புறம் நானும் அம்மா மடில படுத்துகிட்டே படிக்க ஆரம்பிச்சேன்.

சில பேர், யூ ஆர் ஸோ ஸ்வீட், டோன்ட் பார்கட் மீ ன்னு வழக்கமான பார்முலால கிறுக்கி இருந்தாங்க. ஒருத்தன், இனியாவது அம்மாவ கஷ்ட்டப்படுத்தாத, அப்பா காச வீணாக்காதன்னு அட்வைஸ் மழை பொழிஞ்சிருந்தான். ஒருத்தி நீ பெரிய லாயரா வரணும்ன்னு எழுதி இருந்தா. மூர்த்தி, நீ ஒரு டாக்டரா வரணும்ன்னு ஆசைபட்டுருந்தான். அப்புறம் ஒண்ணு நீ ஒரு இஞ்சினியரா வரணும்னு வாழ்த்தி இருந்துச்சு. எனக்கு இப்போ ஒரே குழப்பம், நான் வருங்காலத்துல அப்படி என்னவா வர்றதுன்னு.

அப்படியே புரட்டிட்டு இருந்தப்போ யாரோ ஒரு பக்கி (அது யாருன்னு சரியா தெரியல, மறந்து போச்சு) நீ வருங்காலத்துல உன் புருசனோட சந்தோசமா இருக்கணும்ன்னு எழுதி வச்சிருந்துச்சி.

எனக்கு அவ என்னை அவமானபடுத்திட்ட மாதிரி ரோசம் பொத்துகிட்டு வந்துச்சு. எல்லார் முன்னாடியும் என்ன நிக்க வச்சு எல்லாரும் கைதட்டி சிரிக்குற மாதிரி இருந்துச்சு. காரணம், அப்போ எல்லாம் இந்த லவ், கல்யாணம்ங்குற வார்த்தை எல்லாமே எங்கள பொறுத்த வரை பேட் வேர்ட்ஸ். என்னோட பி.பி, சுகர் எல்லாம் உச்சத்துக்கு போய், அப்படியே ஒரு பத்ரகாளியா மாறி எப்படி அவ இப்படி எழுதலாம்ன்னு கோபத்துல டைரிய கிழிக்க போனேன். அம்மா உடனே அத என்கிட்ட இருந்து பிடுங்கி, அவ சரியா தான் சொல்லியிருக்கான்னு சொல்லிட்டு டைரிய தூக்கிட்டு போய்ட்டாங்க. அம்மா மேல வந்த கோபத்துல சாப்ட கூட செய்யாம அப்படியே பிரெண்ட் வீட்டுக்கு போயிட்டேன்.

அன்னிக்கி முழுக்க மூட் அவுட், அப்புறம் வழக்கம் போல கலாட்டா, கொஞ்ச நாள்ல எக்ஸாம்ன்னு நாள் ஓடியே போய்ட்டுது.

ஆனா கடைசி வர ஆட்டோகிராப் எழுதி குடுக்காமலும், வாங்காமலும் ஒரு ஜீவன் இருந்துச்சுன்னு அப்புறமா ஒருநாள் தெரிஞ்சுது.. அது தான் கலா... கடைசி வர ஒரு சொட்டு கண்ணீர் கூட விடாம அவ கெத்தா கிளம்பி போய்ட்டா. அப்புறம் ரெண்டு வருசத்துல கல்யாணம் ஆகி, ரெண்டு புள்ளைங்களுக்கு அம்மாவும் ஆகி, இப்போ தான் தட்டு தடுமாறி பி.ஜி செகண்ட் இயர் படிச்சுட்டு இருக்காளாம். இது கிளை கதை.


அந்த டைரிய அதுக்கப்புறம் நான் பாக்கவே இல்ல, கண்டிப்பா எங்கயாவது கும்பலோட கும்பலா எதோ ஒரு வீட்ல இருக்கத்தான் செய்யும். அம்மா கண்டிப்பா அத ரொம்ப பத்திரமா வச்சிருப்பாங்க. ஒருநாள் பொறுமையா உக்காந்து தேடணும்.

Monday 16 December 2013

திருடா...!



என் கனவு பிரதேசத்தில் 
கன்னமிட்டு நுழைந்து
தூக்கம் திருடி சென்றாயே திருடா…!

விழி வீசும் அம்புகளை தடுத்தே நான்
தனித்திருந்தேன்
வீச்சுத் திசைமாற்றி
எப்படி நீ குறுகுறுத்தாய்... திருடா...!

மனமென்னும் விசித்திரத்துள்
கனல் ஒன்று வைத்திருந்தேன்...
அசராமல் நீயும்
எப்படி அதை தீண்டி நின்றாய்... திருடா...!

லப் டப் கூச்சலிலிடும் இதயத்தில்
தரம்பிரித்து அடுக்கி வைத்தேன் ஏக்கங்களை ...
நான்கு அறைகளிலே எவ்வறையை
கள்ளமிட்டாய்… திருடா?

சின்ன சின்ன ஆசைகளுடன்
பெருங்கோட்டை ஒன்று கட்டிவைத்தேன்
என் மன்னவனாய் அனுமதியின்றி
எங்ஙனம் நீ குடியேறினாய்... திருடா?

சுவரும் வாசலும் இல்லா உணர்வுக்குள்
கள்ளச்சாவி போட்டு எதை திறந்தாய் திருடா?

சடசடவென கொட்டும் வார்த்தைகள் அனைத்தையும்
மொத்தமாய் அள்ளி
நிசப்தத்தை மட்டும் விட்டுச் செல்கிறாயே திருடா...!

உன் குண்டு கண்களுக்குள்
காந்தம் ஒளித்து வைத்து
என் நெற்றிப்பொட்டில்
வசியம் வீசுகிறாயே திருடா...!

கழுத்தோரம் மயிலிறகாய் இம்சித்து
புன்னகையை இதழ்களுக்கு பரிசளித்து
அவஸ்தையை அள்ளித்தெளித்து விட்டு
மறைந்து விடுகிறாயே திருடா...!

மொத்தமாய் என்னை திருடிக்கொண்டு
யாதுமறியாததுபோல் முகம் நோக்குகிறாயே திருடா...!

இனியும் நீ திருடக் கூடாதென்கிறேன்,
சரியென திருடிக்கொண்டே
தலையசைக்கிறாய் திருடா...!



- இது ஒரு மறுப்பதிவு 

Thursday 12 December 2013

உன்னிடம் ஒரு யாசகம்...!




உன் வார்த்தை ஜாலங்களில்
கள் குடித்த வண்டாய் மயங்கும் நான்...
உன் சில நேர அலட்சியத்தால்
அனலில்லிட்ட புழுவாய்
துடித்து தான் போகிறேன்...!

குற்றால சாரலாய் மழலை குறும்பால்
சிலிர்ப்பிக்கும் சாகசம் புரியும் நீ...
சில சமயம் வெந்நீர் குளியலென
கொதிக்கும் கொப்பறைக்கைக்குள்
தள்ளி விட்டு வேக வைக்கிறாய்...!

உன் சிறு நேசம் வேண்டுமெனக்கு
உப்பு பெறா விஷயமென சட்டென
அலட்சியம் காட்டுகிறாய்
கடுகளவும் என் துடிப்பறியாமல்...!

பட்டாசு சிதறலாய் வெடிக்கும்மென்
வார்த்தை ஜாலங்களை அண்ணாந்து
ரசித்து விட்டு சில நேரம்
நீரூற்றி அதை நீர்பிக்க செய்து
என் அழுகை ரசித்து ருசி காண்கிறாய்...!

உன் தேடல் துவங்கும் நேரம்
என் உள்ளங்கை அணைப்புள்
அடைக்கலமாகும் நீ
பதறியே விலகியோடுகிறாய்
உன்னை நான் வேண்டும் பொழுதெல்லாம்...!

உன் கட்டை விரல் ரேகையாய்
உறைந்திருக்க வரமொன்று வேண்டிய எனக்கு
சுட்டு விரல் காட்டி விலகிப்போவென
மவுனமாய் சுட்டி உயிர் வதைக்கிறாய்...!

உன்னிடம் நான் வேண்டுவது
உன் வாழ்நாளையல்ல...
எனக்கென ஆயுள் நீட்டிக்கும்
உன் சின்ன புன்னகையை...
ஒரு சிறு கையசைப்பை...
சிறிதே சிறிது அக்கறையை...
கொஞ்சம் என் மனம் சொல்லத் துடிப்பதை...!

தொடர்ந்து செல்லும் உன் வழிப்பயணத்தில்
நீ திரும்பிட வேண்டாம்...
திரும்பி ஒரே ஒரு புன்னகை
அடிக்கடி வீசி விட்டு போ...!

யாசித்து யாசித்தே ஓய்ந்து விட்டேன் நான்...!
மீண்டும் நினைவூட்டினால் என்னை
மனம்பிறழ்ந்தவள் வரிசையில் நிக்க வைத்து
வார்த்தை ஈட்டியினால் சதுரங்கமாடுவாய்யென
மவுனமாய் நானும் மரணித்தே போகிறேன்...!



- இது ஒரு மறுப்பதிவு 

Wednesday 11 December 2013

இன்று ஒரு தகவல்


“முந்தைய நாளின் பகலுக்கு தொடர்ச்சியாய் வந்த இரவுக்கு ஓய்வு கொடுத்து என் இன்றைய பகல் வணக்கம் வரும் இரவுக்கான வரவேற்போடு”

அவ்வ்வ்வ் என்ன, எதுவுமே புரியலயா?

இது தாங்க நான் இன்னிக்கி உங்களுக்கு சொல்லி இருக்குற குட் மார்னிங்.

நல்லா கூர்ந்து கவனிச்சு பாருங்க, முடிஞ்சா கண்ணாடிய தொடச்சு விட்டுட்டு பாருங்க, முதல்ல புரியாத மாதிரி தான் இருக்கும், ஆனா எதோ புரியுற மாதிரி இருக்கும்.

இப்படி தான் நானும் புரியாம பல விசயத்தையும் உளறிக்கிட்டே இருக்கேன். ஆனாலும் எனக்கு சில விஷயங்கள் புரிஞ்சிடும். எனக்கு புரிஞ்ச உடனே, உங்களுக்கு குழம்பிடும்.

அப்படி தான் டெய்லி காலைல கிளம்புறது முன்னாடி எல்லாரையும் குழப்பி விட்டுட்டு போய்டணும்.

எப்படி தெரியுமா?

இந்தா நான் குழப்புறேன் பாருங்க, இன்று ஒரு தகவல் சொல்லி:

இன்று ஒரு தகவல் 1: திங்குறதுக்கே நேரம் இல்லாம அரக்க பறக்க பாஞ்சு போய் ஆபிஸ்லயோ, காலேஜ்லயோ, இல்ல ஸ்கூல்லயோ, அப்படியும் இல்லையா, குட்டி சுவரிலோ போய் உக்காந்தாலும் இன்றைய தினம் திங்கட்கிழமைதானாம்...


இன்று ஒரு தகவல் 2: கிளிக்கு வாய் சிகப்பா இருப்பதாலும், பொண்ணு மாப்பிள்ளைக்கு செவ்வாய் தோஷம் இருப்பதாலும் இன்றைய நாளில் விசேசமில்லை. இன்றைய நாள் செவ்வாயாக இருப்பதாலயே இன்று செவ்வாய் கிழமையாம்...


இன்று ஒரு தகவல் 3: பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்று யாரோ சொல்லி விட்டு சென்று விட்டதால், அந்த வாக்கை பொய்த்து போகாமல் காப்பாற்ற நகை வியாபாரிகளால் கண்டுபிடிக்கப்பட்ட நாளே புதன் கிழமையாம்.


இன்று ஒரு தகவல் 4: கழிந்து விட்ட நேற்று புதன்கிழமை என்பதாலும், கழியப்போகும் நாளை வெள்ளிகிழமை என்பதாலும், இரண்டுக்கும் இடையில் இன்று மாட்டிக்கொண்டதாலும் இன்றைய நாள் வியாழன் கிழமையாம்...


இன்று ஒரு தகவல் 5: இன்று ஆங்கிலத்தில் Friday என்பதால், தமிழில் வெள்ளிக்கிழமை என்றே அழைக்கப்பட வேண்டும் என்ற கட்டாயத்தினால் இன்றைய பொழுதின் பெயர் வெள்ளிக்கிழமையாம்...


இன்று ஒரு தகவல் 6: முந்தின நாள் அரக்கபரக்க வேலை செய்ததாலும், அடுத்த நாள் சோம்பேறியாய் தூங்க போற காரணத்தாலும், துன்பத்துக்கும் இன்பத்துக்கும் இடைல இடிப்பட்டு கழியப் போற இன்றைய நாளின் பெயர் சனிக்கிழமையாம்.


இன்று ஒரு தகவல் 7: மிகவும் சோம்பலாகவே விடிந்து விட்ட காரணத்தாலும், இன்னும் சூரியனை கூட பலபேர் பார்க்காத காரணத்தாலும், சில பல ஆடுகள், மாடுகள், கோழிகள் கொலையுண்ட காரணத்தாலும் இன்றைய கிழமைக்கு ஞாயிற்றுக்கிழமை என்று பெயராம்....!


என்ன, அப்படியே ஏழு நாளுக்கும் ஏழு தகவலா சொல்லியாச்சா, இத எல்லாம் ஒரே நாள்ல சொல்லிடாம, ஒவ்வொரு நாளா வந்து, ஒவ்வொரு தகவலா தெரிஞ்சுகிட்டு போங்க.


நான் இப்போ தகவல் சொல்லி ரொம்ப களைச்சு போயிட்டேன்.



ஹலோ, அந்த ஆப்பிள் ஜூஸ் எங்கப்பா?



.

Tuesday 10 December 2013

தி நோட்புக் (The notebook- 2004) – திரைவிமர்சனம்



சௌத் கலிபோர்னியால “சீபெர்க்”ன்னு ஒரு தீவு. அங்க ஒரு கார்னிவல் நடக்குது, அதாவது, நம்ம ஊரு பொருட்காட்சி மாதிரி ஒரே கொண்டாட்டம். அங்க வச்சி தான் நம்ம ஹீரோ நோவா ஹீரோயின் ஆலிய பாக்குறான். வழக்கமா நம்ம ஊர் சினிமால வர்ற மாதிரி, அவள பாத்ததும் அவ மேல பைத்தியம் ஆகிடுறான். அப்புறமா அவ பின்னாடியே சுத்தி, கொஞ்சம் கொஞ்சமா அவள வழிக்கு கொண்டு வந்து, அவள காதலிக்க வச்சு, கதை அப்படியே ஜாலியா போகுது.

கட், கட், கட். இதெல்லாம் ஆலியோட பதினேழு வயசுல நடந்த சம்பவம். அப்புறம் என்னாச்சுன்னு கேக்குறீங்களா, எல்லாம் நம்ம ஊர் பார்முலா தான். நோவா ரொம்ப ஏழை, ஆலி பெரிய பணக்கார குடும்ப பொண்ணு. எஸ். நீங்க நினைக்குறது சரிதான், இந்த ஏழை, பணக்கார ஏற்றத் தாழ்வுனால ஆலியும் நோவாவும் பிரிஞ்சுடுறாங்க. இல்லல, ஆலியோட அம்மாவால பிரிக்கப்படுறாங்க.

ஆலி மேற்படிப்பு படிக்க போய்டுறா. நோவா ஆர்மில சேர்ந்துடுறான்.

சரி, இது கதை. இதுல நான் ரசிச்ச விசயங்கள சொல்ல வேணாமா?

இந்த படத்துல ஆலி, நோவாவுக்குள்ள வர்றது முதல் காதல். அந்த முதல் காதலுக்கு மரணிக்கும் மரியாதை குடுத்தது எனக்கு ரொம்ப பிடிச்சு இருந்துச்சு. ஹஹா புரியலையா, அப்போ படத்த பாருங்க.

அப்புறம், ஆலிய பாத்த உடனே ஆஆஆ-னு வாயத் தொறக்குற நோவா, கடைசி வர மூடவே இல்லன்னு தான் சொல்லணும்.

ஆளே இல்லாத ரோட்டுல ஆலி கூட நடந்து போற நோவா, திடீர்னு நடு ரோட்டுல படுத்துகிட்டு அவளையும் படுக்க சொல்றான், இவன் என்ன பைத்தியமான்னு சிரிச்சுகிட்டே பக்கத்துல படுத்துகிட்டு, இப்போ வண்டி வந்தா, நாம என்னாவோம்ன்னு கேக்குறா. அவன் கூலா செத்து போவோம்னு சொல்லிட்டே பேசாம ரிலாக்ஸ் பண்ணுன்னு அவன் பாட்டுக்கு கண்ண மூடிட்டு படுத்துருக்கான்.

அந்த சீன பாக்குறப்போ எதோ சின்ன புள்ளைங்க விளையாடுற விளையாட்டு மாதிரியே இருக்கு. லூசு தனமா என்னவோ பண்றானேன்னு நினைச்சுகிட்டே அவளும் லூசு தனமா சிரிக்குறது இருக்கே, கவிதை கவிதை. ஆனா திடீர்னு வேகமா வர்ற கார பாத்து வீல்ன்னு அலறிட்டே ஓடி தப்பிச்சு, ஹஹஹஹஹா... பேய்த்தனமா சிரிக்குறா. ஆத்தீ.... நான் பயந்தே போயிட்டேன். ஆனா ரொம்ப ரொம்ப அந்த சீன ரசிச்சு ரசிச்சு பாக்கலாம்.

அப்புறம், நோவாவோட அப்பா கேரக்டர். நமக்கு ஒரு அப்பா இருந்தா இப்படி தான் இருக்கணும்னு வயசு பசங்கள ஏங்க வச்சிடுறார். அவரோட அன்பு, கனிவு, பையன் மேல காட்டுற பாசம் எல்லாமே அவ்வளவு ரசிக்கும் படியா இருக்கு. பையனோட காதலி அவன விட்டுட்டு போய்ட்டானாலும் அவன் ஆசை பட்ட விசயத்த அடைய வீட்டை வித்து காசு குடுக்குறார். அந்த நேரம் அப்பாவும் பையனும் ரொம்ப அழகா இருந்த மாதிரி எனக்கு தோணிச்சு. கொஞ்சம் கண்ணு வச்சிட்டேன்.

இந்த படத்தோட ஆரம்பமே, சுயநினைவு எல்லாம் மறந்து போன ஒரு வயசான பாட்டிக்கு, ஒரு ஓல்ட் ஏஜ் ஹோம்ல (முதியோர் விடுதி) வச்சு, ஒரு பெரியவர் ஒரு நோட் புக்கல இருக்குற ஒரு கதைய வாசிச்சு காட்டுற நிகழ்ச்சியா தான் வருது. அவர் தான் மெனக்கெட்டு அந்த பாட்டிக்கு இந்த லவ் ஸ்டோரிய சொல்றார்.

ஹலோ மக்களே....

ஏதாவது படத்த பாத்து நானும் விமர்சனம் பண்ணலாம்னு தான் பாக்குறேன், ஆனாலும் அதென்னவோ அப்படியே முழு கதையையும் உளறி கொட்டிடுறேன். அது என் தப்பு இல்லீங்க, அப்படியே எவ்வளவு ட்ரை பண்ணினாலும் இப்படி தான் உளற வருது. அப்புறம், இந்த படம் எல்லாம் வந்து பத்து வருஷம் ஆகிடுச்சு. படம் வசூல் சாதனை பண்ணிச்சா இல்லையான்னு எல்லாம் எனக்கு தெரியாது, ஆனா கண்டிப்பா இப்போ இத எல்லாரும் மறந்துருப்பாங்க. ஒரு அதர பழசான ஒரு படத்த நான் இப்போ ஏன் நோண்டி துருவி எழுதியிருக்கேன்னா, நான் இப்போ தானே இந்த படத்த பாத்தேன். அவ்வ்வ்வ்.....

எனக்கு இதுல ரொம்ப பிடிச்சது ஹீரோயினோட சிரிச்ச முகம். எப்போ பாத்தாலும் சிரிச்சுட்டே, எதையும் சீரியஸா எடுக்காம, அதெப்படி ஒரு பொண்ணால இருக்க முடியும்னு தெரியல. காதல வெளிப்படுத்துற விதமாகட்டும், அழுறதாகட்டும், அதுலயும் ரொம்ப ரொம்ப அழகா இருக்காங்க.

அந்த ஹீரோயின் தான் ரொம்ப வயசாகி, தலை எல்லாம் பஞ்சு பஞ்சா வெள்ளையா, எல்லாத்தையும் மறந்துட்டு, சீரியஸா மூஞ்ச வச்சுகிட்டு, பம்ப்ளிமாஸ் மாதிரி குண்டா இருக்காங்கன்னு சொல்றப்போ அத ஏத்துக்கவும், டைஜஸ்ட் பண்ணவும் கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கு.

எல்லாத்துக்கும் முக்கியமா இன்னொரு கதாபாத்திரம் கூட இந்த படத்துல உண்டு. அது தான் ஆலிக்கு நோவா வாங்கி குடுக்குறதா சொன்ன வீடு. ஆலி அவன விட்டுட்டு போயிட்டாலும் ரொம்பவே கஷ்டப்பட்டு தனியாளா அந்த வீட்டை புதுசா கட்டி முடிக்குறான்.

இந்த படத்துல எனக்கு பிடிக்காத ஒரு விசயமும் இருக்கு. ஆலியோட முதல் காதலாவது சில பல சம்பவங்கள்ல அடுக்கடுக்கா ஆரம்பிச்சு அழகா பூக்குது. ஆனா அவளோட ரெண்டாவது காதல் பட்டுன்னு வந்துடுது. அவனை பாத்த உடனே இவ மயங்கிடுறா, அவன் ப்ரோபோஸ் பண்ணின உடனே சந்தோசமா சிரிச்சுகிட்டே படக்குன்னு ஓகே சொல்லிடுறா. அவங்களோட அந்த காதல் விரிவா சொல்லாததாலோ என்னவோ எனக்கு மனசுல ஒட்டவே இல்ல.

ஏழு வருஷம் கழிச்சு, பழைய காதலன் கட்டின வீட்டை வச்சு அவன அடையாளம் கண்டுகிட்டு இரண்டு நாள் அவன் கூட வாழ்ந்து, தன்னோட பழைய காதலை புதுபிச்சுகிட்ட அவ, தனக்கு நிச்சயம் ஆகிடுச்சுன்னு சொல்லி அவன் கிட்ட இருந்து விலகி ஓடி வந்து ரெண்டாவது காதலன்கிட்ட ஐ லவ் யூ டூன்னு சொல்றா.

“And they happily lived for ever”-னு பெரியவர் கதைய முடிக்கவும் who-ன்னு நியாபகப்படுத்திகிட்டே பாட்டியும் (ஆலி) சேர்ந்து நெகிழ்ந்து போறாங்க. அவரோட காதல புரிஞ்சுகிட்டு நான் மறுபடியும் உங்கள மறந்து போனா என்ன பண்ணுவீங்கன்னு கேக்குறாங்க. அதுக்கு அவர், எப்பவும் நான் உன்னை பின் தொடர்வேன்னு அவங்க கூடவே தூங்கிடுறார்.

காலைல அந்த லவ் பேர்ட்ஸ் ரெண்டும் சந்தோசமா தனி உலகத்துக்கு பறந்து போய்டுது.

அப்புறம் இன்னொரு விஷயம், இந்த படம் முழுக்க ஆளாளுக்கு கிஸ் பண்ணிட்டே இருக்காங்க. இவங்களுக்கு வாயே வலிக்காதான்னு நான் கூட கொஞ்சம் கவலையோட தான் பாத்தேன். இது ஒரு ஏ சர்டிபைட் படம். அதனால அங்கங்க மசாலாக்கள் இருக்க தான் செய்யும். அதுக்காக கட்டய எடுத்துட்டு என்னைய அடிக்க வராதீங்க, மீ எஸ்கேப்.


.

Monday 9 December 2013

உணராத பந்தம் இவள்...!




நீ இல்லாத என் நாட்கள் கிழித்தெறிந்த
நாள்காட்டியாய் கழிந்து கொண்டே இருக்கின்றன...
குளிரில் நடுங்கும் என் துவண்ட மேனியோ
இதுவரை உன் அணைப்பினை உணர்ந்ததே இல்லை...!

உன் முத்தங்களை பெற்றறியா முகத்திலோ
நாய்களின் எச்சில்கள்
ஏக்கம் தீர்த்துப் போகின்றன...!

திடீரென சூழ்ந்துக்கொள்ளும்
வெறுமைக்குள் புதைந்துக் கொண்டு
எதையோ தேடுவதைப்போல் தேடியிருக்கிறேன்...
நீ எப்படிப்பட்ட உணர்வளிப்பாய் என்றே தெரியாமல்...!

யோசித்து யோசித்து பார்க்கிறேன்,
எப்பொழுதெல்லாம் உன்னை நான்
உச்சரித்துப் பார்த்திருக்கிறேன் என்று...!

பசித்த வயிற்றோடு தெருத்தெருவாய்
சுற்றிய நாட்களில் கூட
“ஐயா காசு குடுங்க பசிக்குது” என்றே
கேட்டு பழகியிருக்கிறேன் நான்...!

சோறில்லையென விரட்டப்படும் போதும்
தெருவோர குப்பைத்தொட்டிகளில்
கண்கள் அலைபாய்ந்தே பழகி விட்டன...!

மாற்றுடுப்பு வேண்டுமென
மனம் தேடும் பொழுதெல்லாம்
மாடிவீட்டு கொடிகளை
அண்ணாந்து பார்த்து ஏங்கியிருக்கிறேன்...!

காய்ச்சல் வந்து வாய்க்குழறும் போதுகூட
வடிவில்லா ஒலியெழுப்பி
வெப்பத்தாக்குதலை எதிர்க்கொண்டு
பழகி விட்டேன் நான்...!

பருவம் எய்திய நாளில்
மிரட்சியோடு தேடியிருக்கிறேன்
அதுவும் உன்னை தான் என்றே அறியாமல்...!

வெறித்தப் பார்வை ஒன்றே
எப்பொழுதும் முந்தி நிற்கிறது
தாய் மடி முட்டும் கன்றுகளை பார்க்கும் பொழுதெல்லாம்...!

என் நிலையின் காரணகர்த்தா
விதியென நான் ஏற்றுக்கொள்வதுமில்லை...
நீதானென்று சபித்து விடவும் துணியவில்லை...!
என்னை ஜனனித்து நீ மரணித்துப் போனாயோ
இல்லை ஆகாது என வீசிவிட்டு சென்றாயோ?
தொலைத்துவிட்டு தினம் தேடி தேடி வேதனிக்கிறாயோ?

உனக்கென அடையாளமெதையும்
நீ எனக்காக விட்டுச்சென்றவளில்லை…
உன் குணம் பற்றிய எதிர்பார்ப்போ
நிலைப்பாடு பற்றிய பரிதவிப்போ
என்றுமே எனக்குள் சஞ்சலத்தை புகுத்தியதில்லை...!

நீ யாராய் இருந்தால் என்ன?
எனக்கு நீ அன்னியமானவள்...!

சூல் கொண்ட பெண்கள் கண்களுக்குள்
விழும்போதெல்லாம் வினோத ஜந்துவை
பார்ப்பது போல் வெறித்து விட்டு
பயணம் தொடர்கிறேன் நான்...!



-இது ஒரு மறுபதிவு 

Friday 6 December 2013

இதோ இன்னுமோர் அக்னி பிரவேசம்...!


இதோ நான் இறந்து விட்டதாக
ஊர் சொல்கிறது...!

அவர்களுக்கு தெரியுமா?
உயிரை திரியாக்கி
என்னையே விறகாக்கி
என் காதலை வளர்த்துக் கொண்டிருக்கிறேன் என்று...!

உன்னையே உறவாக எண்ணிய நாள் முதல்
நம்பிக்கையை ஆழ் மனதில் விதைத்து
உன்னை நான் பயிரிட்டக் கதை அவர்களுக்கு தெரியுமா?

இதயம் துளைத்து முளைவிட்ட உன்னை
உதிரமாய் பதியம் செய்த கதை தான்
ஊர் அறியுமா?

என் காதலை உரமாய் போட்டு
வளர்த்து விட முனைந்த உன்னில்
களையாய் ஒருத்தி தோன்றிய
நாள் தான் காலம் மறக்குமா?

வேலிப் படரும் உன் கரங்களென்னவோ
மாற்றான் தோட்டத்தில்... வேர் என்னவோ
இன்னும் என்னுள் பிடுங்கி எறியவே
முடியா உறுதியாய்... உனக்குள் உறுத்தவில்லையா?

நீ மீண்டு வருவாயென்ற நம்பிக்கை
உன் மேல் நான் கொண்டதாய் இருக்கலாம்...
ஆனால்... என் நம்பிக்கையின் வீரியம்
என்னையே அழித்த கதை நீ அறிவாயா?

அக்னி வலம் வந்து கைபிடிப்பாய் என்றிருந்தேன்...
இதோ அணைக்க வேண்டிய உன் கரங்கள்
திசைமாறித் தழுவியதால்
அக்னி என்னை அணைக்க
உன்னுள் பிரவேசிக்க துவங்கி விட்டேன்...!

ஆம்... அங்கே எரிந்துக் கொண்டிருப்பதென்னவோ
என் உடல் தான்... ஆனால் மனமல்லவோ
தகித்துக் கொண்டிருக்கிறது...!

.



- இது ஒரு மறுபதிவு 

Thursday 5 December 2013

இணையத்தில் பெண்கள் நிலை...



ஒரு விதை இருக்கு, அது அவ்வளவு ஈசியாவா முளைக்குது?

இல்லல

தூங்கிட்டு இருக்குற அது, கடினமான தோல துளைசுட்டு, தன் மேல மூடி இருக்குற மண்ணை தாண்டி கஷ்ட்டப்பட்டு தானே முளைக்குது. ஹைய்யோ, இவ்வளவு பெரிய ஓடு இருக்கே, கஷ்ட்டமா இருக்கே, நம்மள சுத்தி மண்ணு இருக்கே, இப்படி போட்டு நம்மள அழுத்துதேன்னு நினைக்காம, தன்னை மறைக்கும் ஓடுகிட்டையும், அழுத்துற மண்ணுகிட்டையும் இருந்து, தனக்கு தேவையான உந்து சக்திய கிரகிச்சு, போராடி வெளில வந்துடுது.

முதல்ல அதுகெல்லாம் ஒரு கைத்தட்டு....

நாம மட்டும் ஏன் எந்த கஷ்டமே இல்லாம முன்னேறணும்ன்னு நினைக்கணும்? அது சுயநலமில்லையா?

நமக்கு கஷ்ட்டம் வர வர சோர்ந்து போகாம, அதையே ஒரு பாடமா எடுத்து, அதுல இருந்து நல்ல விசயங்கள கிரகிச்சுகிட்டு கொஞ்சம் கொஞ்சமா முன்னேறுற முயற்சி இருக்கே, அது கண்டிப்பா நல்ல பலன தரும்ங்க....

சரி, சரி, இப்போ நான் ஒரு குட் மார்னிங் சொல்லிட்டு, வந்த சொல்ல வந்த விசயத்த சொல்லிடுறேன்.

குட் மார்னிங்...

இணையத்தில் பெண்கள் – அப்படின்னு எழுதணும்னு ரொம்ப நாளா யோசிச்சுக்கிட்டு இருந்தேன். ஆனா, அப்படி நாம எழுதினா யாராவது சண்டைக்கு வந்துடுவாங்களோன்னும் தோணிச்சு. சரி, அத எல்லாம் நமக்கெதுக்கு. நாம வந்த வேலைய கவனிப்போம்.

நான் இந்த பேஸ் புக்-ல 2010-ல இருந்து இருக்கேன். அதாவது கிட்டத்தட்ட மூணு வருசத்துக்கும் மேலா இருக்கேன். இங்க பெண்களுக்கு பாதுகாப்பு உண்டா, இல்லையான்னு எல்லாம் அப்போ எனக்கு தெரியாது. எதோ விளையாட்டு தனமா உள்ள வந்தாச்சு.

ஆனாலும் நான் என்னோட போட்டோவ போடல, நெட்டுல இருந்து சுட்ட ரெண்டு கண்ணுங்க தான் என்னோட ப்ரோபைல் படம். கொஞ்ச நாள் போக போக, எனக்கு தெரிஞ்சவங்க எல்லாரும் அவங்க போட்டோவ வைக்க ஆரம்பிச்சாங்க, நான் கூட முக்கால்வாசி என் முகம் தெரியுற அளவு போட்டோ எல்லாம் வச்சேன். ஆனா எதோ ஒரு உள்ளுணர்வு, இது வேணாம்னு தடுத்துச்சு. அப்போ இருந்து, அத எல்லாம் சுத்தமா டெலிட் பண்ணிட்டு, இப்போ எனக்குன்னு ஒரு சின்ன அடையாளம், என்னை நல்லா தெரிஞ்சவங்க, புரிஞ்சவங்க நட்பு மட்டும் போதும்னு முடிவெடுத்துட்டு இன்னும் இங்கயே தான் சுத்திகிட்டு இருக்கேன்.

இத்தன வருசத்துல, நான் புரிஞ்சுகிட்ட விசயத்த தாரளமா இங்க சொல்லலாம் தானே. அதனால தான் இந்த பேஸ் புக்ல பெண்களோட நிலைமை எப்படி இருக்குன்னு கொஞ்சமா யோசிச்சு பாத்தேன்.

ஒரு வகைல பாத்தா, இந்த பேஸ் புக், ரிலாக்ஸ் பண்றதுக்கு நல்ல ஒரு தளம். நம்மோட கருத்துக்கு ஒத்துபோறவங்க, கலகலப்பா பேசுறவங்க, ஒரு நல்ல நட்பு, இப்படி எல்லாமே இங்கயும் இருக்க தான் செய்யுது. குடும்ப பிரச்சனை, வீட்டு வேலை, வெளில ஆபிஸ் டென்சன், அது இதுன்னு ஏகப்பட்ட மெண்டல் பிரஸரோட இருக்குற பெண்களுக்கு பிரெண்ட்ஸ் கூட பேசி ரிலாக்ஸ் பண்ண இந்த பேஸ் புக் ரொம்ப நல்லா ஹெல்ப் பண்ணுது.

அது மட்டுமில்லாம, தனக்குன்னு ஒரு அடையாளத்தையும் அங்கீகாரத்தையும் தேடி குடுத்து, அவங்களுக்கு கண்டிப்பா ஒரு தன்னம்பிக்கையும் குடுக்குது. எல்லாருக்கும் எவ்வளவோ திறமைகள் இருக்கும். அத எல்லாம் வெளிபடுத்த கூட முடியாம எத்தனையோ பேர் மனசளவுல ஒடுங்கி, தன்னோட சுயத்தையே தொலைச்சுட்டு இருக்காங்க. இந்த இன்டர்நெட் அவங்க பிரெண்ட்ஸ் மத்தியில அவங்களுக்குனு ஒண்ணு ரெண்டு கைதட்டையாவது வாங்கி குடுத்து அவங்கள சந்தோசப்படுத்துது. அவங்களுக்குள்ள ஒரு தன்னம்பிக்கைய விதைக்குது.

என்னை பொறுத்தவரை சந்தோசம்னா எது தெரியுமா?

நான் யூ.ஜி படிச்ச காலேஜ்ல எந்த பிரச்சனைனாலும் என்னை தான் பிரெண்ட்ஸ் எல்லாரும் சேர்ந்து பிரின்சிபால் ரூமுக்கு அனுப்புவாங்க. ஏன்னா பிரின்சிபால் கிட்ட அவ்வளவு ஈசியா தப்பிச்சுட முடியாது, திட்டு திட்டுன்னு திட்டி தீத்துடுவாங்க. அப்படி நான் உள்ள போனா, அங்க உள்ளவங்க கிட்ட என்னை பத்தி என்ன சொல்லுவாங்க தெரியுமா?

ஒண்ணாம் நம்பர் கே.டி, உடம்பு முழுக்க திமிரு, கொழுப்புக்கு பஞ்சமே இல்ல, ஆனா ரொம்ப ரொம்ப நல்ல பொண்ணுன்னு அப்படின்னு தான் இன்ட்ரோவே குடுப்பாங்க. அந்த நிமிஷம், நிஜமாவே ஒரு சந்தோசம் இருக்கும்.

நம்மோட கருத்த துணிஞ்சி சொல்றதும், நேர்மையா இருக்குறதும், போராடுற தைரியமும் இருந்தாலே மனசு சந்தோசம் ஆகிடுங்க.


அப்படி தான், இந்த பேஸ் புக்லயும் நிறைய பேர், ஒரு சந்தோசத்துக்காக வராங்க. இதுல சந்தோசம்குறது கண்டிப்பா அவங்க அவங்க வகுத்து வச்சிருக்குற வரைமுறைக்கு ஏற்ப மாறுபடுது. அவங்க ஆணோ பெண்ணோ, அவங்களோட சந்தோசத்தின் வரைமுறைல தான் சில நேரம் பிரச்சனையே ஆரம்பிக்குது.


என்னது, பிரச்சனையா? அதென்ன பிரச்சனை அப்படின்னு பதறுரவங்க, அப்படியே ஒரு நாற்காலிய போட்டு இப்படி உக்காருங்க.

பிரச்சனையே இல்லாத இடம்ன்னு ஏதாவது இருக்கா சொல்லுங்க, அந்த பிரச்சனைல நம்மோட பங்கு என்னங்குறது தான் இப்போ பிரச்சனையே....

ஆரம்ப காலங்கள்ல அன்பை பரிமாறிக்குறது, திறமைகளை ஊக்குவிக்குறது, அப்படின்னு நட்பு வட்டத்துக்குள்ள நல்லா தான் போயிட்டு இருக்கும். அதுவே அந்த கூட்டத்துக்குள்ள ஒரு குள்ள நரி நுழைஞ்சிடுச்சுன்னு வைங்க, அப்புறம் நடக்குறத கொஞ்சம் நினச்சு பாருங்க....

ஒரு ஆண் ஒரு போட்டோ போட்டா அது அந்த அளவு கவனிக்கப்படுறது இல்ல... அவங்க போட்டோ கீழ வர்ற கமண்ட்ஸ் நிறைய இருந்துச்சுனா, அவங்க பிரெண்ட்ஸ் அவங்கள நல்லா கலாய்ச்சு வச்சிருப்பாங்க. அதுவே ஒரு பொண்ணோட போட்டோ இருந்துச்சுனா என்ன என்ன கமண்ட்ஸ் எல்லாம் வருதுன்னு பாத்துட்டு தானே இருக்கீங்க. நல்லா தெரிஞ்ச நட்பு வட்டங்களா இருந்தா அங்க பிரச்சனை குறைவு. அதுவே நட்பு வட்டத்த தாண்டும் போது? கொஞ்சம் யோசிச்சு பாருங்க.

இவ்வளவு ஏன், நான் என்னோட ப்ரோபைல்ல அட்வர்டைஸ்ல வர்ற சின்ன கொழந்தைங்க போட்டோ தான் வைக்குறேன், அங்க வந்தே செல்ல குட்டி, புஜ்ஜி குட்டி, ஐ லைக் யூன்னு கமன்ட் போடுறாங்க, இந்த படத்த வச்சிருக்குறது ஒரு பொண்ணு, அது அந்த பொண்ண காயப்படுத்தும்ன்னு ஒரு இங்கிதம் கூட தெரியாம. நான் அந்த மாதிரி யாராவது கமன்ட் போட்டா, கமன்ட் டெலிட் பண்ணிட்டு, சம்மந்த பட்ட ஆளையும் பிளாக் பண்ணிட்டு போய்ட்டே இருக்கேன். இதுக்கெல்லாம் டென்சன் ஆகி, வீணா ஏன் நம்மோட எனர்ஜி வேஸ்ட் பண்ணனும்னு.

ஏன், அப்படினா, பொண்ணுங்களுக்கு சுதந்திரம் இல்லையா, இங்லாந்துல போட்டோ போடலையா, அமெரிக்காவுல போடலையான்னு சண்டைக்கு வந்துடாதீங்க, அவங்க எல்லாம் போட்டோ போடுறாங்க, அதே நேரம், அதுக்கு வர்ற கமன்ட் என்னவா இருந்தாலும் எதுவா இருந்தாலும் அத ஒரு காம்ப்ளிமென்ட்டா தான் எடுத்துட்டு சந்தோசமா போறாங்க.

சினிமா துறை சார்ந்தவங்களுக்கு கண்டிப்பா ஒரு விளம்பரம் தேவைப்படுது, அதுவும், அவங்க அழகியல் சம்மந்தமா ஒரு விளம்பரம் தேவைப்படுது. அப்படி பட்ட சூழ்நிலைல அவங்க இந்த மாதிரி பிரச்சனைகள ஈசியா எடுத்துட்டு அதுல இருந்து கடந்து போய்டுறாங்க. இல்லனா, இத பத்தி நினைச்சுகிட்டே வருத்தபட்டுகிட்டே இருந்தா அடுத்து அவங்களால பீல்ட்ல நிம்மதியா நிலைக்க முடியாது.

அதுவே நம்ம நாட்டுல சினிமா, மாடலிங் தவிர்த்து மற்ற துறைகள்ல இருக்குற பிரபலங்கள் கூட அவங்களுக்கு இப்படி ஒரு பிரச்சனை வரும் போது தடுமாறி தானே போறாங்க.

ஒண்ணு, நம்மள பத்தி யார் என்ன சொன்னாலும் அத கண்டுக்காம கடந்து 

போக தெரியணும், இல்ல அத காம்ப்ளிமென்ட்டா எடுத்துட்டு சந்தோசப்பட தெரியணும். ரெண்டுமே இல்லையா, நம்மோட திறமைகள வெளிப்படுத்தி நம்மளை இங்க, இந்த தளத்துல ப்ரூவ் பண்ணணும். இவங்க இப்படி தான்ன்னு ஒரு இமேஜ் க்ரியேட் பண்ணி பாருங்க, நம்மோட புகைப்பட இமேஜ் ஒண்ணுமே இல்லன்னு தோணும்.

ஏன், ஏன், ஏன், இந்த ஆம்பளைங்க திருந்தினா என்ன, அவங்க பண்ற தப்புக்கு நாங்க ஏன் ஏன் போட்டோ போட கூடாதுன்னு கேள்வி கேட்டு கொந்தளிக்குறதுக்கு முன்னாடி நாம ஒரு விசயத்த பத்தி நல்லா யோசிக்கணும். இந்த பேஸ் புக் ஒண்ணும் நாம கண்டுபிடிச்ச விஷயம் கிடையாது. அவங்கள பொறுத்தவரை இதெல்லாம் ஒரு தப்பே கிடையாது. நம்மோட கலாச்சாரம் இங்க கட்டி காக்கப்படணும்னா கண்டிப்பா நாம தான் கட்டி காக்கணும். அது எந்த மாதிரின்னு தேவைப்படுற ஒவ்வொருத்தரும் தான் முடிவு பண்ணனும். கண்டிப்பா சமூகம் மாற வேண்டியது தான், அதுக்கு கொஞ்சம் பொறுமையா தான் ஸ்டெப்ஸ் எடுத்து வைக்கணும்.

அதுவரைக்கும்,

நம்ம பேரை கேட்ட உடனே, அடடே, அவங்களா? அவங்க ரொம்ப அழகா இருப்பாங்களே அப்படீங்குற இமேஜ் வேணுமா, இல்ல, அவங்களா, ரொம்ப நல்லவங்க அப்படீங்குற இமேஜ் வேணுமா, இல்ல, அவங்க பயங்கர திறமைசாலி அப்படீங்குற இமேஜ் வேணுமா? இதுல எந்த இமேஜுமே தப்பில்ல தான், யார் யாருக்கு எது வேணுமோ, இல்ல, எதெல்லாம் வேணுமோ, அதுக்கு தகுந்த மாதிரி அவங்கவங்க பாதைல போக வேண்டியது தான்...

அப்புறம், சபாஷ், நல்லா கேட்டுக்கோங்க பெண்மணிகளா, நீங்க முதல்ல ஒழுங்கா வீட்டுக்குள்ள இருங்க, தேவையில்லாம வெளில வரது தான் பிரச்சனையே அப்படின்னு மீசைய முறுக்கிக்குற ஆம்பளைங்களுக்கு ஒரு விஷயம் சொல்லிக்குறேன்...

நீங்க ஆம்பளைங்க, நீங்களும் போட்டோ போடுறீங்க, உங்க போட்டோவ கண்ட கண்ட சைட்ஸ்ல போட்டு எந்த பொண்ணும் ஆனந்தம் அடஞ்சுக்குரதில்ல, அப்படினா, அழுக்கு முழுக்க முழுக்க எங்க இருக்குன்னு யோசிங்க.... உங்கள எல்லாம் நீங்க எப்பவும் சுத்த படுத்திக்க விரும்பவே மாட்டீங்க, அப்படி தானே, நல்லது, அப்படியே இருங்க.... 

இந்த சமூகத்த மாத்தணும்னா கூட பொண்ணுங்க தாங்க நினைக்கணும். அது எப்படின்னு அப்புறமா சொல்றேன்.

இப்போ நான் என்னோட பாதைல போறேன்.

ஹஹா அப்புறமா வரேன்....

Tuesday 3 December 2013

மறு தாயிவள்...

இருள் பரவ துவங்கிய நேரம்...
ஒற்றை குரலொன்று
கேவலாய் அழைத்தது அம்மாவென...

இத்தனை நேரம் போராடிய மனம்
இதோ இலவம் பஞ்சாய் வெடிக்கிறது...

நீர் முட்டிய கண்கள் கண்ணீரை வழிய விடுகிறது...
அதில் மனதின் பாரங்கள் கரைய துவங்கின...

உன்னை காணாது நான் தவித்த தருணங்கள்
நரகம் காட்டி சென்றதடா கண்ணா...
எத்தனை துயரென்றாலும் உன்
உதடுகள் உதிர்க்கும் ஒற்றை வார்த்தையில்
என் சொர்க்கம் காண்பேனே...

நானுனக்கு தமைக்கை என்கின்றனர் பலர்,
நீ என் மணிவயிறு சுமக்கா குழந்தையென அறியாமல்...
வாடா என் கட்டித்தங்கமே,
அம்மாவென என்னை கட்டிக்கொள்
என் ஏழு ஜென்மம் உனக்காய் நீளும்...

என் பல்லாங்குழி ஆட்டத்துள்
குன்னிமுத்தாய் நுழைந்தவன் நீ...
என்னை இடறி விடும் வழுக்கு பாதையில்
கைபிடித்து கரை சேர்த்தவன் நீ..

பிரம்மன் எனக்கொரு வரமளித்தால்
உன் ஆயுள் நீட்டிக்க ஒரு அட்சய பாத்திரம் கேப்பேன்...
வாடா மலராய் நீ என்றும் சிரிக்க
கூடவே வாசனை சேர்ந்து பதிய கேட்பேன்...
எனக்குள்ளே உன்னையும் வைத்து
உன்னை அரணாய் காத்திட கேட்பேன்...

மழையில் நனைந்து வாடிய மலரே...
வா வந்து பசியாறு...
அன்னை நானொருத்தி காவலுக்கு உண்டென
கவலை மறந்து துயில் கொள்ளு....

வானம் வாழ்த்தி பொழிகிறது
நாளைய விடியல் அது நமக்கென தான்...

.

Monday 2 December 2013

மொக்கையிலும் மொக்க, படு மொக்க




இன்னிக்கி என்ன எழுதலாம் என்ன எழுதலாம்னு மண்டைய பிச்சுகிட்டு (அட, நிஜமா தாங்க) யோசிச்சப்போ, நாமளும் 2010-ல இருந்து பேஸ் புக்ல இருக்கோம், அப்படி என்ன தான் பண்ணிட்டு இருந்துருக்கோம்னு பாக்கலாம்னு தோணிச்சு. பாட்டிங்க மட்டும் தான் நாங்க எல்லாம் அந்த காலத்துல...... ன்னு ஆரம்பிக்க முடியுமா? நாங்களும் ஆரம்பிப்போம்ல..... 

ஆரம்பத்துல பேஸ் புக் வந்தப்போ எல்லாரும் நிறைய ஜோக்ஸ் தான் சொல்லிட்டு இருந்தாங்க. நானும் அத பாத்துட்டு கவுன்ட்டர் குடுத்துட்டு இருந்தேன். இருந்தாலும் சொந்தமா எங்க ஜோக் சொல்றது? அதுக்கு தான் இருந்துச்சு பிரெண்ட்ஸோட எஸ்.எம்.எஸ். அத எல்லாம் வச்சு தான் ஒரு மூணு மாசம் நானும் பேஸ் புக்ல மொக்க போட்டுட்டு இருந்தேன்.


அப்படி என்ன தான் மொக்க போட்ருக்கேன்னு கொஞ்சம் பாப்பமா?


மொக்க தத்துவம்:

          1. பிறப்பு ஒரு முறை, 
              இறப்பு ஒரு முறை,
              காதல் ஒரு முறை,
              வாழ்க்கை ஒரு முறை
              ஆனால்
              சாப்பாடு மட்டும் தினமும் மூன்று முறை
              அதனால் கூச்சப்படாமல் சாப்டுங்க, ஆரோக்கியமா இருங்க 

          2. விடியும் வரை தூங்குவது தூக்கம் அல்ல,
              நம்மால் முடியும் வரை தூங்குவதுதான் தூக்கம்
              அதனால் நல்லா தூங்குங்க.

          3. யாருடைய இதயத்தையும் உடைத்து விடாதீர்கள்,
              ஏனெனில் அவர்களுக்கு இருப்பது ஒரே ஒரு இதயம்
             அதற்கு பதில்.
             அவர்களின் எலும்பை உடையுங்கள், அது 206 உள்ளது.....

சீரியஸ் தத்துவம்:

          1. நினைவுகளை உனக்குள் சுமப்பது வெற்றி அல்ல,
             உன்னுடைய நினைவுகளை அடுத்தவரை 
             சுமக்க வைப்பதுதான் வெற்றி

          2. உங்கள் அன்புக்குரியவருக்கு பரிசளிக்க நினைத்தால்,
              உங்கள் விலை மதிப்பில்லா நேரத்தை பரிசாக அளியுங்கள்...

          3. இமைகள் திறந்து நேசிப்பதை விட இதயம் திறந்து நேசித்து பார்,
              உன் உலகம் உனக்காய் காத்திருக்கும்

          4. குளம் வற்றியதும் பறந்து போகிற கொக்கு தான் காதல்
              ஆனால்
              குளம் வற்றினாலும் குளத்தோடு சேர்ந்து இறந்து போகிற 
              மீன் தான் நட்பு

          5. நீங்கள் காயப்படுத்திய மனிதரிடம் மன்னிப்பு கேட்க 
             தேவை இல்லை, ஏன் என்றால் உங்களை நேசிக்கும் 
             மனிதரையே நீங்கள் காயப்படுத்த முடியும், அவர்களோ 
            உங்களிடத்தில் மன்னிப்பை விட அதிக அன்பை தான் 
            எதிர்பார்ப்பார்கள்...

          6. நண்பன்!!! எதிரிகளின் கூட்டத்தில் உன் கைப் பிடித்து நிற்பவன்
              நீ தவறு செய்யும் போது உன் முதுகில் அறைபவன்
             உனக்காக எல்லாம் செய்து விட்டு நன்றியை எதிர்பார்காதவன்
             உன்னை புன்னகைக்க வைப்பவன்
             உன் கண்ணீரை துடைத்து ஐ மிஸ் யு சொல்பவன்
             உன் நன்றியை மறுத்து போடா லூசு என்பவன்
             நண்பேண்டா............


இப்போ கேள்வி பதில் நேரம்:

          1. மண்புழுவுக்கு ஏன் கால் இல்லைன்னு தெரியுமா ..?

              அதுக்கு கால் போட்டா மாண்புழு ஆகிடும்ல 
              அதனால போடுறதில்லை.!

          
          2. எறும்பு ஏன் பல்லு விளக்குறது இல்லைன்னு தெரியுமா ..?

              ஏன்னா அது வாய் சைசுக்கு இன்னும் பிரஷ் கண்டுபுடிக்கலயாம்


          3. லைப்ல ஒண்ணுமே இல்லனா போர் அடிக்கும், 
              தலைல ஒண்ணுமே இல்லனா?

              பளபளன்னு க்ளார் அடிக்கும்


டவுட்டோ டவுட்: 

          1. இங்கிலீஷ்ல பெரிய ABCD சின்ன abcd இருக்குற மாதிரி 
              தமிழ்ல ஏன் இல்ல ..?

          2. கொசுவுக்கு கொம்பு இருக்கா .?
     
          3. இருமல் வந்தால் இருமுவிங்க, 
              காய்ச்சல் வந்தால் காய்ச்சுவிங்களா?

          4. நாம வெய்யில்ல நடந்து போகும்போது நம்ம நிழல் கீழே விழுதுல,
             அப்படி விழும் போது அதுக்கு வலிக்காதா ..?

          5. மஞ்சத்தண்ணிக்கும் பச்சத்தண்ணிக்கும் என்ன வித்தியாசம்?

          6. கால்ல முள் குத்தாம இருக்குறதுக்காக செருப்பு போடுறோம், 
            அப்போ வாயில மீன் முள்ளு குத்தாம இருக்க என்ன 
            போடுறோம்?

          7. கிணத்துக்குள்ள மண்ணை கொட்டினா அது குழியா மாறிடும்.
             ஆனா குழிக்குள்ள மண்ணை கொட்டினா கிணறா மாறுமா?


இதெல்லாம் கூட பரவால, எதோ ஒரு எக்ஸாம் ஹால்ல யாரோ எழுதின கேள்வி பதில் அப்போ ரொம்ப பேமஸா வலம் வந்துட்டு இருந்துச்சு. அது என்னன்னும் கொஞ்சம் பாத்ருவோமே

கேள்வி 1:

நாயக்கர்கள் – பெயர் காரணம் கூறுக :

          Point no:1
          நாயக்கர்களுக்கு நாய்கள் பிடிக்கும் என்பதால் நாயக்கர்கள் என்று 
          பெயர் வந்தது என்று சிலர் கூறுகிறார்கள்.

          Point no 2: 
          நாயக்கர்களின் மண்டபங்களில் நாய் போன்ற சிற்பங்கள்                  
          வைத்திருப்பதால் நாயக்கர்கள் என்று பெயர் வந்தது என்று 
          சிலர் கூறுகின்றனர்.

          Point no 3: நாயக்கர் மஹால் மதுரையில் உள்ளது. அது மிகவும் 
          அழகாக இருக்கும். அந்த மண்டபத்தில் தான் இம்சை அரசன் 
          படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. அதை என் சித்தி பையன் 
          சென்று பார்த்துள்ளான். அதை பாண்டியர்களுக்கு கீழே உள்ள 
          கொத்தனார் நிருவியுள்ளமையால் பாண்டியர்களுக்கு அந்த 
          பெருமை வந்தது. உண்மையில் அந்த கொத்தனார் தான் மிகவும்   
         பாடுபட்டார். எனவே அவரை நான் மிகவும் பாராட்டுகிறேன்.

கேள்வி 2:

கோவில்களின் சிறப்புகளை கூறுக :

          “ஜி” படத்தில் எங்கள் தல அஜித் ஒரு பாடலை பாடியுள்ளார்
          “டிங் டாங் கோவில் மணி கோயில் மணி நான் கேட்டேன்”
          இப்பாடலடி இவ்வளவு தான் எனக்கு தெரியும். அரையாண்டு 
          தேர்வில் கண்டிப்பாக இந்த பாடலை முழுமையாக எழுதி விடுவேன்                     என்று நம்பிக்கை தெரிவித்து கொள்கிறேன்.

கடைசியா, 


மொக்கையோ மொக்கை:
          1. கரண்ட்'டைக் கூட கால்களால் மிதிக்கலாம் 
              “காக்கையாக மாறினால்”!

          2. பரம்பரைக்கு உக்காந்து சாப்டர அளவு சொத்து
              இருந்தாலும் பாஸ்ட் பூட் கடைல நின்னுக்கிட்டுதான் சாப்பிடணும்

          3. நாய்க்கு என்னதான் நாலு கால் இருந்தாலும் அதால கால் மேல 
              கால் போட்டு உட்கார முடியாது

          4. இன்ஜினியரிங் காலேஜ்ல படிச்சா இஞ்சினியர் ஆகலாம், ஆனா 
              பெரசிடேன்சி காலேஜ்ல படிச்சிட்டு பிரசிடென்ட் ஆக முடியாது 





இப்போதைக்கு இவ்வளவு தாங்க.... இதெல்லாம் ரெண்டு மாச பதிவு... மீதி அப்பப்போ வந்து சொல்லிட்டு போறேன்...







Friday 29 November 2013

மழைக்காலம்



ஹாய் ஹாய் ஹாய் ஹாய்.... எல்லாருக்கும் மணக்க மணக்க ஒரு இன்ஸ்டன்ட் காப்பி வணக்கம். 

கொஞ்சநாளாவே இங்க பயங்கர மழை பெஞ்சுகிட்டு இருக்கு. எப்பவும் ஒரு குளிர், அப்படியே போர்வைய போர்த்திகிட்டா ஒரு இதம், சலசலன்னு கேக்குற மழை சத்தம்ன்னு இப்போதைய நாட்கள் ரொம்ப ரொம்ப ரம்மியமா இருக்கு. 

இந்த மாதிரியான மழைக்காலங்கள்ல கைல சுட சுட பில்டர் காபியோட, ஜன்னல் பக்கமா திரைசீலைய ஒதுக்கி வச்சுக்கிட்டு மேல இருந்து விழுற மழைத்துளியை ரசிச்சுகிட்டே கொஞ்சம் கொஞ்சமா காபிய ஊதி ஊதி குடிக்குறதும் தனி சுகம் தான். 

அதுவே மழைல நனஞ்சுகிட்டே பச்சை பசேல்ன்னு இருக்குற இயற்கைய ரசிக்குற அழகு இருக்கே, வேற எதுவும் அதுக்கு ஈடு கிடையாது. 

புல்வெளிகள பார்க்கும் போது எப்பவுமே குளிச்சுட்டு வந்த மாதிரி ரொம்ப பிரெஷ்ஷா இருக்கும், அத பாத்து நம்மோட மனசுக்குள்ளயும் ஒரு புத்துணர்ச்சி வந்துடுது. குட்டி குட்டியா புற்கள்ல கலர் கலரா பூ பூத்துருக்கும் பாருங்க, அத ரசிக்க தனியா நமக்கு கேமரா கண்ணு தான் வேணும். அத எல்லாம் இன்னும் நல்லா ரசிக்கணும்ன்னா நான் ஒரு ரகசியம் சொல்லித்தரேன், காத கிட்ட கொண்டு வாங்க. அதாவது, அந்த புல் தரைல படுத்துகிட்டு அந்த பூக்கள க்ளோஸ் அப்ல பாத்தோம்னு வைங்க, ஹைய்யோ எவ்வளவு அழகா இருக்கும். ஒவ்வொரு புல்லும், பூக்களோட தனித்தனியா பாக்க அவ்வளவு அழகா இருக்கும். 

பச்சை கிளி, வெட்டுக்கிளி, ராத்திரியில மின்னுற மின்மினி பூச்சி இதெல்லாமே தனி அழகு தான். அதுவும் வெட்டுக்கிளி பச்சை கலருல இருந்தா அத நாங்க பச்சை கிளின்னு சொல்லுவோம். மழை காலங்கள்ல நிறைய வீட்டுக்குள்ள வரும். 

இன்னொரு அழகான விஷயம் கூட இருக்கு, அது தான் எறும்பு புற்று கட்டுறது. மழைல நனைஞ்சு எறும்பு கூடுங்க உள்ள தண்ணி போய்டும். கொஞ்சம் வெயில் அடிச்ச உடனே, உயிரோட இருக்குற எறும்புங்க எல்லாம் சுறுசுறுப்பா புற்று கட்ட ஆரம்பிச்சுடும். ஈர மண்ணை குட்டி குட்டி உருண்டையா இருட்டி, புற்று உள்ள இருந்து வெளில கொண்டு வந்து அதுங்க தள்ளுற அழகே அழகு. அப்படியே உக்காந்து ரசிக்கலாம். 

கொஞ்சம் மழை விட்ட நேரத்துல வயக்காடு வழியா இறங்கி நடந்து பாருங்க, சொர்க்கம் தான். அப்படியே ஏதாவது மரங்கள் கீழ போய் நிக்கும் போது காற்றுல கிளைகள் அசைஞ்சு, இலைங்க மேல இருக்குற மழைத் துளிங்க நம்ம மேல படும் போது வரும் சிலிர்ப்பு இருக்கே அட அட அட.... 

நேத்து பெய்த மழைல இன்னிக்கி மொளச்ச காளான்ன்னு புதுசா யாராவது சேட்டை பண்ணினா அவங்கள பாத்து சொல்லுவாங்க. ஆனா இந்த மழைக்காலங்கள்ல அங்கங்கே திடீர் திடீர்னு முளைச்சு வர்ற காளான் கூட அழகு தான். இந்த காளான்ல கூட எத்தனையோ வெரைட்டீஸ் இருக்கு. இப்போ அதோட பெயர் எல்லாம் எனக்கு மறந்து போச்சு. ஆனாலும், மண்ணுல குட்டியூண்டு வளர்ந்து நிக்குற காளான்ல இருந்து, மரத்துல பெருசா வளர்ந்து நிக்குற காளான் வரை எல்லாமே அழகு தான். பொதுவா, காளான் வெள்ளை கலர்ல தான் இருக்கும். சிலநேரங்கள்ல மஞ்சள், நீலம்னு கலர் கலராவும் காளான் இருக்கும். ஆனா இதெல்லாம் விசக்காளான்கள். ஸ்கூல் படிக்குற வரைக்கும் இந்த மாதிரி நேரங்கள்ல முட்டைக் காளான தேடி தேடி போய் பிடிங்கிகிட்டு வருவோம். அத மேல் தோல் கொஞ்சம் சீவிட்டு, நாலா கத்தி வச்சு கீறி, மிளகா தூளும், உப்பும் வச்சு, வாழை இலைல பொதிஞ்சு வச்சு, சுள்ளி வச்சு நெருப்பு மூட்டி அதுல இந்த காளான சுட்டு எடுத்து சாப்பிடுற டேஸ்ட் இருக்கே, எந்த நான்-வெஜ்ஜூம் பக்கத்துல வர முடியாது. 

அது மட்டுமா, அங்கங்கே ரெஸ்ட் எடுத்துட்டு இருக்குற குருவிங்க, காக்கா, கோழி, கொக்கு மைனான்னு எல்லாமே மழைல நனைஞ்சு போய் அதுகளோட இறகுகள நீவி விட்டுட்டு இருக்கும். கொஞ்சம் அமைதியாவே பறவைகளோட சத்தம் இருந்தாலும், அதுவும் தனி அழகா தான் இருக்கும். 

ஆனா ஒண்ணு, இந்த இடியும் மின்னலும் கூட அழகா தான் இருக்கு, அது எங்கயாவது தாக்குற வரைக்கும். பக்கத்து தோப்பு ஒண்ணுல ஒரு தென்னை மரம் மேல இடி தாக்கி பாவம், மரம் பட்டு போச்சு. ஆங்காங்கே மின் கம்பத்துல இருக்குற தெருவிளக்குங்க வெடிச்சு சிதறுது. ஆனா இத எல்லாம் பாத்தா எப்படி நிலத்தடி நீர் உயரும்? 

முன்னாடி எல்லாம் ஓடைகள் வழியா மழைத் தண்ணி எல்லாம் ஆத்துலயோ, குளத்துலயோ போய் சேரும். அங்கயே தண்ணி தேங்கி, கொஞ்சம் கொஞ்சமா நிலத்துக்குள்ள போய்டும். எவ்வளவு வெயில் இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட அளவு மண்ண தோண்டினா, மண் ஈரமா, ஜில்லுனு இருக்குறத பாக்கும் போது எனக்கு ரொம்ப ஆச்சர்யமா இருக்கும். ஆனா இப்போ எல்லாம் சிட்டீஸ்ல மழை வந்தாலே கஷ்டம் தான். மழைநீர் தேங்கவும் இடமில்லாம, சரியா போகவும் வழியில்லாம மழை இல்லனா குடிக்க கூட நிலத்தடி நீர் கிடைக்காம மக்கள் பாவம் தான், ஆனா இதுக்கெல்லாம் காரணம், சரியா திட்டமிடாம இருக்குறது தானே. எத்தன பேர் பொறுப்போட மழைநீர் சேகரிப்பு திட்டம் செயல்படுத்தியிருக்கீங்க?

எப்போ நான் வெளில போனாலும் மழைல மாட்டிகிட்டா எனக்கு பெரிய அவஸ்தை தான், காரணம் என்னோட உடல்நிலை அப்படி. உடனே சளி புடிச்சுக்கும், அப்புறம் காய்ச்சல், இருமல்ன்னு ஒரு ரெண்டு மாசத்துக்காவது படுத்தி எடுத்துடும். ஆனாலும் நான் மழைல மாட்டிகிட்டா, மழை நல்லா பெய்யட்டும், மண் குளிரட்டும், நிலத்தடி நீர் உயரட்டும்ன்னு தான் வேண்டிப்பேன். தனிநபர் அவஸ்தைய [பாத்தா, இந்த உலகத்துல இருக்குற மற்ற ஜீவராசிகளோட சந்தோசத்த பாக்க முடியாதே. பல பேர் சந்தோசப்படுவாங்கனா, யாராவது கொஞ்சம் அவஸ்தை பட்டு தானே ஆகணும், அதுதானே இயற்கை விதி. 

இப்போ ராத்திரியில சில்வண்டுகளோட ரீங்காரம் அதிகமா இருக்கு. முன்னாடியெல்லாம் தவளைகள் சத்தமும் அதிகமா இருக்கும். அது மட்டுமில்ல, மழைத்தண்ணி விழுற சத்தம் எல்லாம் சேர்த்து ஒரு சங்கீத கச்சேரிய நியாபகப்படுத்துது. ஆனா ஏனோ இப்போ தவளைகள் சத்தத்த கேக்க முடியல. இப்போ கொஞ்சம் கவலையா இருக்கு, ஒருவேளை தவளைகள் இனம் அருகிட்டு வருதோன்னு. கண்டிப்பா ஒரு நாள் இந்த தவளைங்க பத்தி ஒரு தனிப் பதிவு எழுதணும். 

உங்ககிட்ட ஒரு ரகசியம் சொல்றேன், காலைல எழுந்த உடனே முடிவு பண்ணியிருந்தேன், இன்னிக்கி கொஞ்சம் ஜாலியா எழுதணும்னு. ஜாலியா எழுதனும்னா எப்படி? 

சின்ன வயசுல இருந்து இப்பவரைக்கும் நாம எவ்வளவோ சேட்டைகள் பண்ணியிருப்போம். அத இன்ன இன்னன்னு வகைப்பிரிச்சு பாத்தோம்னா அது ஒரு பெரிய லிஸ்ட்டா இருக்கும். அதனால தான் மழைக்காலங்கள்ல நான் பண்ணின சேட்டைகள்ல கொஞ்சமே கொஞ்சம் இங்க சொல்லலாம்னு நினச்சேன். ஆனா, மழைய பத்தி நினச்ச உடனே இவ்வளவு விஷயம் கடகடன்னு கொட்டிடுச்சா, அப்போ என்னோட சேட்டைகள இன்னொரு நாள் சொல்லலாம்னு முடிவு பண்ணிட்டேன். நீங்க ஒண்ணும் பயப்படாதீங்க, எல்லாமே ஜாலியான அனுபவங்கள் தான். அது என்னன்னு தெரிஞ்சுக்கணும்னா கண்டிப்பா நான் எழுதுற வரை காத்திருங்க. 



என்ன காத்திருப்பீங்க தானே..... நான் போய் மழைய ரசிச்சுட்டு வரேன்....

Thursday 28 November 2013

நியாபக மறதி...



வாழ்க்கைங்குறது எப்பவுமே நாம நினைக்குற மாதிரி போறதில்ல. நாம ஒரு ப்ளான் போட்டு வச்சிருப்போம், ஆனா நடக்குறது வேறொண்ணா இருக்கும். இந்த மாதிரி எல்லாரோட வாழ்க்கையிலயுமே நடந்திருக்கும்.

என் அம்மா அடிக்கடி நிறைய விஷயங்கள் சொல்லுவாங்க, அதுல ஒண்ணு, எந்த விசயமா இருந்தாலும் அது நடக்கலையேன்னு வருத்தப்படக் கூடாது, கண்டிப்பா அதுக்கு ஒரு ஆல்ட்டர்நேட் இருக்கும், அப்படியும் இல்லையா, அந்த விஷயம் நமக்கு தேவையில்லாததா இருக்கும், அதான் நடக்கலன்னு நினைச்சுக்கணும்ன்னு சொல்லுவாங்க.

அதே மாதிரி தான் நியாபக மறதி இல்லாதவங்க ரொம்பவே குறைவா தான் இருப்பாங்க. எதையாவது எங்கையாவது வச்சுக்கிட்டு அத தேடி தேடி அலுத்து போன சம்பவம் எல்லோரோட வாழ்க்கைலயும் ஒரு தடவையாவது நடந்துருக்கும்.

எனக்கு நிறைய நியாபக மறதி உண்டு. சில சம்பவங்கள் நடந்ததா இல்லையான்னு கூட நியாபகம் இருக்காது. ஆனா யாராவது ஒருத்தங்க அதை பத்தி நினைவு படுத்த விரும்பி, எடுத்து சொல்ல ஆரம்பிச்சாங்கன்னா அடுக்கடுக்கா அந்த நினைவுகள் எல்லாம் அப்படி அப்படியே நியாபகத்துக்கு வர ஆரம்பிச்சுடும்.

எனக்கு அதிகமா படிக்குற பழக்கமும் கிடையாது. எதையுமே ஆழ்ந்து, அப்படியே மனப்பாடமா எதையும் படிச்சுக்கிடவும் மாட்டேன். ஆனா படிச்ச அந்த விசயத்தோட சாராம்சம் மட்டும் மனசுல தங்கிடும். யாராவது அத பத்தி பேசினா கேட்டுட்டே இருப்பேன். ஒரு பக்கம் அவங்க சரியா தான் சொல்றாங்களான்னு கூர்ந்து கவனிச்சுகிட்டே வருவேன், அவங்க தப்பா சொல்லும்போது, பளிச்சுன்னு அத மறுத்து, அப்படி இல்ல, இப்படின்னு சொல்லுவேன்.

ஆக, எனக்கு எல்லாம் நியாபகம் இருக்குதா இல்லையான்னு எனக்கே தெரியாது, ஆனா அப்படி நியாபகம் வர ஆரம்பிச்சுடுச்சுன்னா கடகடன்னு ஒரு கோர்வையா, அச்சு பிசகாம நியாபகம் வந்துகிட்டே இருக்கும்.

சரி, இதுக்கு இப்போ என்ன? ஏன்? எதுக்கு இத சொல்ல வர்றன்னு கண்டிப்பா நீங்க கேக்கணும்.

ஆரம்ப காலங்கள்ல இந்த நியாபக மறதி வந்தப்போ நான் ரொம்ப குழம்பி போயிட்டேன். பக்கத்துல ஏதாவது ஒரு பொருள் இருக்கும். அம்மா வந்து அத என் கண்முன்னாடியே எடுத்துட்டு போயிருப்பாங்க, ஆனா நான் கொஞ்ச நேரம் கழிச்சு அத மறந்துட்டு அந்த பொருள காணோம்னு கத்த ஆரம்பிச்சுடுவேன். இதனால எனக்குள்ள நிறைய மனக்குழப்பங்கள். ஏன் இப்படி நடக்குது, எனக்கு என்ன ஆச்சுன்னு ரொம்ப தவிச்சு, அதனால தலைவலி வந்து அப்புறம் அதுக்கும் சேர்த்து கஷ்ட்டப்படுவேன்.

நான் பேச ஆரம்பிச்சப்பவே பொய் சொல்லக்கூடாதுன்னு அம்மா சொல்லி சொல்லி வளர்த்ததால பொய் சொல்றவங்கள கண்டாலே எனக்கு பிடிக்காது. அதே மாதிரி நானும் பொய் சொல்ல மாட்டேன். ஆனா இந்த நியாபக மறதி வந்ததுக்கப்புறம், அம்மா உண்மை தான் சொல்லியிருப்பாங்க, ஆனாலும் ஏம்மா பொய் சொல்றன்னு கத்துவேன். நானும் எதையாவது சொல்லிட்டு, நான் அப்படி சொல்லலன்னு சாதிப்பேன். இது எனக்கு பெரிய சவாலாவே இருந்துச்சு.

இந்த பிரச்சனைல இருந்து என்னை மீண்டு வர செய்தது அம்மாவும் அப்பாவும் தான். ஒரு வார்த்தை நான் தப்பா எதுவா சொன்னாலோ, இல்லை காணோம்னு தவிச்சாலோ பொறுமையா அந்த சம்பவத்த நியாபகத்துக்கு கொண்டு வருவாங்க. நானும் டென்சன் ஆகாம யோசிச்சா எல்லாமே நியாபகத்துக்கு வரும்.

ஒருத்தங்களுக்கு கோபம் வரலாம், நியாயமான விஷயங்கள் மீறி அநியாயம் நடக்கும் போது கண்டிப்பா கோபம் வரணும், ஆனா எப்பவும் நம்மோட நிதானத்த விட்டுற கூடாது, அப்பவும் பொறுமையா இருக்கணும்னு அம்மா சொல்லுவாங்க. இதுதான் பல இடங்கள்ல தடுமாறாம நின்னு போராட எனக்கு உதவியா இருந்துருக்கு.

இப்போ எனக்கு இந்த நியாபக மறதி ஒரு பெரிய விசயமாவே இல்ல, ஒரு நிமிஷம் தடுமாறினாலும், கொஞ்சம் பொறுமையா ஆழமா சிந்திச்சு ஒரு மூச்சு விட்டேனா கண்டிப்பா எல்லா விசயமும் எனக்கு நியாபகம் வந்துடும். ஆனா முக்கியமான விஷயம், கொஞ்சமும் தடுமாறிட கூடாது. அப்படியே நியாபகத்துக்கு வரலன்னா என்னாச்சு என்னாச்சுன்னு ரொம்பவே யோசிச்சுட்டு இருக்க கூடாது. அந்த விசயத்த அப்படியே விட்டுட்டு வேற விஷயங்கள்ல கவனம் செலுத்த ஆரம்பிச்சுடணும். அப்புறம், மறந்து போன விசயம் எதோ ஒரு சமயத்துல பளிச்சுன்னு நியாபகத்துக்கு வந்துடும்.

இந்த நியாபக மறதி ஏன் வருது, எதனால வருதுன்னா அதுக்கு பல காரணங்கள் இருக்கு. ஆனா இப்போ நான் அத பத்தி சொல்ல வரல, எனக்கு வர காரணம், நான் எடுத்துகிட்ட சில மருந்துகள். இதனால எனக்கு பார்வை தடுமாற்றம், நியாபக மறதி, மனநிலை மாற்றம்னு ஏகப்பட்ட பிரச்சனைகள். ஆனா இப்போ அத எல்லாம் தாண்டிட்டேன். எவ்வளவோ பேர், இந்த மாதிரி பாதிக்கபட்டுருக்கலாம், ஆனா நாம நினச்சா அத ஜெய்க்கலாம். அய்யோ நமக்கு ஏன் இப்படின்னு பதறுரதுக்கு பதிலா, என்னால இதுல இருந்து வெளிவர முடியும்னு நினச்சு பாருங்க, கண்டிப்பா சாதிக்கலாம்.


நான் இன்னொரு நாள் வரேன், இப்போதைக்கு பை பை...

Wednesday 27 November 2013

நிலவு வழித் தூது...!


ஏ நிலவு பெண்ணே...!

நீயே இந்த வழக்கின் உரையாடலை தீர்த்து வையடி…!

கார் என்றானாம், மாலை தொடுவானமென்றானாம்...
செங்காந்தள் நிரமவள், கற்பின் கனலென்று மகுடம் சூட்டி…
இருள் சூழ்ந்த மாலை நேரத்தில்
மதி மயங்கி கள்ளுண்ட மந்தியானானாம்...!

அத்தனை வர்ணனை
தூது செல்ல உன்னிடத்தில் கொட்டிய
என்னவன், என்முன் வார்த்தைகளின்
பஞ்சம் வர விக்கித்து நின்றதேனோடி...!

உனக்கு தெரியுமா?
வாய் சொல்லில் வீரனடி அவன்…
அவன் அதரம் உதிர்க்கும்
அத்தனை அனர்த்தங்களும்
அர்த்தமாய் தான் போய் விடுகிறது
அவன் கண்கள் ஊடுருவி நோக்கும்
மொத்த பாவையருக்கும்…!

கற்பனை உலகில் அவன் அங்கே
சஞ்சாரம் செய்து கொண்டிருக்க
பாவை என் மனமோ சஞ்சலத்தில் தவிக்குதடி...!

உன் மேகக் காதலனோ கொண்டலாய்
உன்னிடம் நேசம் பொழிந்திட்டான்…!
இங்கொருவனை பார்…
கொண்ட மையல் முழுவதையும்
தையல் உன்னிடம் கொட்டி விட்டு
வார்த்தைகள் தேடிக் கொண்டிருக்கிறான் என்னிடத்தில்...!

அவனிடத்தில் சென்று இதை கூறு
உன் அன்பிற்கினியவள் பசலை பீடிக்க
வெற்றிலை கொடியின்
இடையணைப்பில் கூட
மூச்சுத் திணறுகிறாளென்று...!
ஆம்பல் பூத்த தடாகத்து புல்வெளியில்
கரையிட்ட மச்சமாய் துள்ளித் தவிக்கிறாளென்று...!

அரை நாழிகை பொழுது கூட தலைவன்
பிரிந்து விட்ட காரணத்தால்
அரை நூற்றாண்டாய் வேடிக்கை காட்டுகிறது…!

விரைந்து செல்லடி மஞ்சு கொஞ்சும் வான்மதியே...!
இன்னும் ஒரு நொடி நீ தயங்கி நின்றால்
தலைவனின் பிரிவுணர்ந்த அன்றில் பறவையாய்…
என் தேகக்கூட்டில் உயிர் மட்டும்
மின்மினியாய் கண்சிமிட்டும்…!

நானோ...!

அவன் நினைவு தரும் மயக்கத்தில்
பிச்சியாய் உன்னோடு பிதற்றிக் கொண்டே
இப்படியே கல்லாய் சமைய வேண்டியது தான்…
அவனிருக்கும் திசை நோக்கி...!





- இது ஒரு மறுபதிவு 

Tuesday 26 November 2013

கொஞ்ச நேரம் தூங்கிக் கொள்வோம்.....


எப்பொழுதும் நான் சந்திக்கும் வலிகளிவைதாயினும்
வீரியம் குறையாது, கொஞ்சமும் தளராது
தாக்குதல் ஆரம்பித்து விட்டிருந்தது.

பழகிவிட்டதென ஒதுக்கிவிடவும் வாய்ப்பளிக்காமல்
இம்முறை உன்னை விடவே போவதில்லை,
பாரென ஆக்ரோசமாய் படரத் துவங்கியது.

பற்றுதல் வேண்டி கைகள் உன்னைத் தேட,
எதிர்பார்த்த கண்கள் கண்ணீர் குளம் தேக்கியது.
ஆ...வென கதறிதுடிக்கும் ஒவ்வொரு துடிப்புக்குள்ளும்
வந்து விடு வந்து விடென உயிருன்னை வேண்டியது.

தொலைதூரத்தில் உறங்கியதாலோ என்னவோ
உனக்கென் தேடல் மொழி கேட்கவேயில்லை.

இப்பொழுது யோசிக்கவும் இடங்கொடாமல் அது என்
நரம்பு மண்டலத்தை என்னை ஆளத் துவங்கியது.
மலைப்பாம்பின் சுருட்டல்களுக்குள்
மாட்டிக்கொண்ட மான்குட்டியாய்
அது என்னை கையகப்படுத்தியிருந்தது.

அப்படியே என்னை விழுங்கி விட்டிருந்தால் வேதனை தெரியாது.
இதுவோ, சற்று நேரத்தில் கொஞ்சம் விட்டுபிடிக்க துவங்கியது.
வலி தீர்க்க அமுதம் தேடும் மனநிலையில்லை...

ஒரு துளி விஷம் கிடைத்தால்,
அது என்னை பரமானந்தத்தில் ஆழ்த்தி விட்டிருக்கும்.

ஆத்மா தேடி தவித்த அந்த பொழுதில் தான்
திடீரென நீ வந்தாய்...
கண்திறந்து பாரென் செல்லமே என
கன்னம் தட்டி தவித்திருந்தாய்...
நெற்றியிலே மென்முத்தமிட்டு
அஞ்சாதே, நானிருக்கிறேனென்றாய்...

மார்போடு அணைத்தென்னை உன்னோடு கட்டிக்கொண்டதில்
என்னில் குருதி வேட்டையாடியவன் பின்தங்கியவனானான்...
ஐவிரல் பற்றி நீ என்னை சூடேற்றி கொண்டதில்
இந்த கோழிகுஞ்சு கொஞ்சம் கதகதப்பில் மீண்டது.

புன்னகையொன்று பூக்கிறது உன் பரிதவிப்புக் கண்டு...
இது ஆறுதல் கட்டம்...
எனக்காய் தவிக்கும் உன்னுள் முழுதாய் கரைகிறேன்...
போர்த்திய போர்வைக்குள் இப்பொழுது நம் இருவரின்
மூச்சுக் காற்றுகளும் நலமென சங்கமித்துக் கொள்கின்றன.

கண்கள் சொருகுகிறது... தூங்குகிறேன்...
நீயும் தூங்கு...
நாளை இந்நேரம் மீண்டும்
உன் தேவை எனக்காக மட்டுமேயிருக்கலாம்....



.

என்ன மாதிரி சமூகத்துல வாழ்றோம் நாம???? கடுப்பேத்துறாங்க மை லார்ட்..... (2)


சோம்பல்ங்குறது நமக்குள்ள வந்துடுச்சுன்னா அன்றைய நாள் முழுக்க சோம்பலாவே தான் இருக்குமாம். அப்படி தான் ஒரு பதிவு எழுதணும்னு ஒரு வாரமா யோசிச்சுட்டு இருக்கேன். சோம்பல் வந்து, ஏனோ தடுத்துட்டே இருந்துச்சு. இந்தா காலைல ஒன்பது மணிவரை எதுவுமே தோணாம வெறிக்க வெறிக்க மானிட்டர தான் பாத்துட்டு இருந்தேன். அப்புறமா தான் எழுதுவோம்னு முடிவுக்கு வந்தேன்.

எழுதுவோம்னு முடிவு பண்ணியாச்சு, எத பத்தி எழுதலாம்னு யோசிச்சுகிட்டே என்னோட blog போய் ஒவ்வொருத்தர் பதிவா பாக்க ஆரம்பிச்சேன். அப்போ தான் நம்ம கோவை ஆவி அண்ணாவோட பதிவு கண்ணுல பட்டுச்சு.  அதனால அடுத்தவங்க பதிவ சுட்டு போடுறாங்களே, அவங்களுக்கு மறுபடியும் நானும் ஒரு சூடு வச்சா என்னன்னு தோணிச்சு. (இத பத்தி ஏற்கனவே ஒண்ணு சொல்லியிருக்கேன், அத இங்க போய் பாத்துக்கோங்க)

இந்த மாதிரி சொந்த பதிவுகள சுட்டு போடுறவங்க கிட்ட தொலைச்ச அனுபவம், மூளைய போட்டு கசக்கியோ, இல்ல, மனசுக்கு தோணுறத சுயமா எழுத பழகியோ போஸ்ட் போடுறவங்களுக்கு கண்டிப்பா இருக்கும். மாங்கு மாங்குன்னு ஒரு ரசனையோட அவங்க எழுதுவாங்க, அத அப்படியே சுட்டுட்டு போய் தன்னோடதுன்னு போட்டுட்டு ஜாலியா இருப்பாங்க சில பேரு. அவங்களுக்கு எல்லாம் கண்டிப்பா மனசாட்சின்னு ஒண்ணு இருக்கவே இருக்காது.

நானும் தெரியாம தான் கேக்குறேன், இப்படி அடுத்தவங்க பதிவுகள சுட்டு போடுறீங்களே, உங்களுக்கு மானம், ரோசம், இதெல்லாம் கிடையவே கிடையாதா. ரொம்ப நல்லா இருக்குன்னு அத யாராவது பாராட்டினா, உள்மனசுல உறுத்தல் வரவே வராதா?

ஆனா, சொந்த பதிவ எழுதிட்டு, அத இன்னொருத்தன்/ஒருத்தி சுட்டுட்டு போறத பாத்து எத்தனை நாள் தான் அமைதியா இருக்குறது? இல்லனா மனசுக்குள்ளயே கஷ்ட்டப்பட்டுட்டு இருக்குறது? தப்பு செய்றது நீங்க, அதுக்காக வருத்தப்படுறது மட்டும் நாங்களா? இதெல்லாம் பாத்து கொஞ்சமாவது எங்களுக்கு கோபம் வர கூடாதா? அந்த கோபத்துல அத எல்லாம் தட்டிக் கேக்க கூடாதா?

இப்படி தான் ஒரு சம்பவம் (என்னோட கவிதைய அவங்க சொந்த கவிதை மாதிரி சுட்டு போட்டுருந்தாங்க ஒருத்தங்க) நடந்துச்சு. எதேச்சையா அது என் கண்ணுல பட, அங்க போய் சண்டை போட்டேன். இதோ இங்கயே ஒரு பதிவு எழுதினேன். அப்புறம், அந்த பொண்ணு அந்த பதிவ டெலிட் பண்ணிட்டு போய்ட்டாங்க. நானும் அதோட கொஞ்சம் அமைதியா தான் இருந்தேன். இத்தனைக்கும் அந்த குரூப் (single frame) இத கண்டுக்கவே இல்ல.

அப்புறமா தான் இன்னொரு சம்பவம் நடந்துச்சு. எனக்கு ரொம்ப தெரிஞ்சவங்க, இந்த பேஸ் புக்கால எனக்கு கிடைச்ச இன்னொரு அம்மா, அவங்க எழுதின கவிதைய தான் எழுதினதா ஒருத்தங்க அதே single frame குரூப்ல போஸ்ட் பண்ணியிருக்காங்க. அத வேற சிறந்த கவிதைன்னு செலக்ட் பண்ணி, அத அந்த குரூப் கவர் போட்டோல வாழ்த்து தெரிவிச்சிருந்தாங்க.



இத பாத்துட்டு சொந்தமா எழுதினவங்க மனசு எப்படி கஷ்ட்டப்படும்? அவங்க என்கிட்ட சொன்னாங்க. இத கொஞ்சம் என்ன ஏதுன்னு கேளுடா காயத்ரின்னு (ஏன், அவங்களே அத கேட்ருக்கலாமேன்னு யோசிக்குறீங்களா? அவங்களால அந்த குரூப்ல கமன்ட் போட முடியாது, காரணம் அவங்க அந்த குரூப்ல கிடையாது) .

சரி, இப்போ உங்களுக்கெல்லாம் நியாயமான ஒரு விஷயம் தோணியிருக்கும். ஒரு குரூப் இருக்கு, அதுல ஒருத்தங்க ஒரு போஸ்ட் போடுறாங்க, அவங்க போடுறது அவங்க சொந்த போஸ்ட்டா இல்ல சுட்ட போஸ்ட்டான்னு குரூப் அட்மின்னுக்கு தெரிய நியாயம் இல்ல தானே. அதனால தான் நாம தானே எடுத்து சொல்லணும்னு தான் நான், அங்க ஒரு போஸ்ட் போட்டேன், அது இது தான்.

“இன்னிக்கி நீங்க அப்டேட் பண்ணியிருக்குற குரூப் போட்டோல நீங்க பாராட்டி தள்ளியிருக்குற கவிதைக்கு சொந்தக்காரர் நீங்க குறிப்பிட்ட அம்மணி இல்ல, குரூப் அட்மின் அது என்னன்னு விசாரிச்சு அந்த போஸ்ட்ட டெலிட் பண்ணி, அது பத்தி ஒரு போஸ்ட் போட முடியுமா?”


இந்த போஸ்ட் போட்டதுமே, இந்த குரூப் அட்மின்ஸ் கண்ணுக்கு எப்படியோ தெரிஞ்சுடுச்சு. அதுல ஒருத்தர் Kala Roshan. அவர் வந்து என்ன ஏதுன்னு விசாரிச்சார். இது யார் எழுதினது, அத அவங்க தான் எழுதினாங்கன்னு உங்களால எப்படி சொல்ல முடியும்னு எல்லாம் கேள்வி கேட்டார். நானும், அது ஏற்கனவே போஸ்ட் பண்ணியிருந்த லிங்க் எல்லாம் எடுத்து குடுத்து, இந்த தேதிக்கு முன்னாடி இது வேற எங்கயாவது போஸ்ட் ஆகியிருக்கான்னு கூகிள்ல போய் தேடி பாருங்கன்னு சொன்னேன். அத உண்மையா எழுதினவங்க பெயரும், அவங்க வச்சிருக்குற பேஜ் எல்லாமே அவருக்கு தெரியும். ரெண்டு பேருமே நண்பர் வட்டத்துல இருக்குறவங்க தான்.

சரி, இப்போ நீங்க என்ன தான் சொல்ல வறீங்க, அடுத்தவங்க எழுதினத பகிர்றது ஒரு தப்பா? இந்த மாதிரி காப்பி அடிச்சு போடுறவங்கள எப்படி கண்டுபிடிக்குறது? அது இன்னொருத்தர் பதிவு தான்னு எப்படி நம்புறது? அந்த மாதிரி காப்பி அடிக்குரவங்கள என்ன பண்றதுன்னு ஒரு கேள்வியும் எழுப்பினார். சரியான கேள்விகள் தான்னு நானும் எனக்கு தெரிஞ்ச பதில சொன்னேன்.

அது என்னன்னா “முதல்ல அந்த போஸ்ட் பண்ணினவங்கள இங்க வந்து பதில் சொல்ல சொல்லுங்க, தவறா அந்த போஸ்ட் கவர் போட்டோல வந்துச்சுன்னு ஒரு போஸ்ட் அதுவும் pinned போஸ்ட் போடுங்க, அப்புறமாவது அடுத்தவங்க எழுதினத எடுத்து போடுறவங்க எழுதினவங்க பெயரோட சேர்த்து போடுவாங்க. அடுத்தவங்க எழுத்தை பகிரலாம், தப்பில்ல, ஆனா அது யாரோட எழுத்துன்னு சேர்த்தே பகிரனும்நு சொல்லுங்க, அவங்க பண்ணினது தப்புன்னு சொன்னா அத இந்த குரூப்-ல பகிரங்கப் படுத்துவோம்னு சொல்லுங்க, அப்போ ஒரு ஆரோக்கியமான பகிர்தல் இங்க இருக்கும்”-ன்னு சொன்னேன். இதுல இன்னொருத்தங்க வந்து “இனிமேல் யாருடைய பதிவும் மிக நல்லதெனக் கண்டு பாராட்டி முதல் பதிவா போடுமுன் பதிவாளரிடம் அறிவித்து ஆக்கம் அவங்களது தானான்னு தெளிவு படுத்தினா நல்லது என்கிறது எனது அபிப்பிராயம்”ன்னு சொன்னாங்க. நியாயம் தானே.


அப்புறம் எல்லாம் சுமூகமா முடிய Kala Roshan ஒரு போஸ்ட் போட்டார். அதாவது, நான் கேட்ட கேள்வியையும், சொன்ன பதிலையும் வச்சு, கேள்வியும், பதிலும்னு கவர் போட்டோ ஒண்ணு ரெடி பண்ணி போட்டார். இது கண்டிப்பா காப்பி அடிச்சு போட்டவங்களுக்கு ஒரு பயத்த உருவாக்கும் தானே. ஒட்டு மொத்தமா எல்லாரும் திருந்த முடியாது, திருத்தவும் முடியாதுனாலும் ஒண்ணு ரெண்டு பேர் இத பாத்துட்டு திருந்தியோ, இல்ல பயந்துகிட்டோ இதே தப்ப செய்யாம இருந்தா அது நமக்கு பெரிய வெற்றி தானே...




அப்படா, எல்லாம் நல்லப்படியா முடிஞ்சுதுன்னு நினச்சு சந்தோசமா ஒரு வணக்கத்த வச்சுட்டு வந்தேன்.

இதுவரைக்கும் எல்லாமே சுமூகமா தான் போயிட்டு இருந்துச்சு. ஒரு நல்ல குரூப் அட்மின்னா என்ன பண்ணனும்? ஒரு சம்பவம் நடக்குது, சரி, அது என்ன ஏதுன்னு விசாரிச்சு, அத பத்தி ஒரு முடிவுக்கு வரணும். அதுதானே நியாயம். அத விட்டுட்டு இங்க ஒருத்தர் எப்படியெல்லாம் காப்பி அடிச்சவருக்கு வக்காலத்து வாங்குறார் பாருங்க. யாரவர்னு கேக்குறீங்களா? அவர் தான் single frame-மோட இன்னொரு அட்மின் Mohan PRao.











முதல்ல நடந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவிக்குற மாதிரியே ஆரம்பிச்சார். “இத எல்லாம் நாங்க ரூலாவே சொல்லிக் கொண்டு தான் வருகிறோம், ஆனால் யார் செய்யுறாங்க, எல்லாரும் ஈசியா காப்பி பேஸ்ட் தானே செய்யுறீங்க, உங்க சொந்த பதிவுகள போட முயற்சி பண்ணுங்களேன், அடுத்தவங்களுக்கு வக்காலத்து வாங்கி பக்கத்த ரொப்பி தள்ள வேண்டாமே, ஸ்டேடசே இல்லாமல் போர் அடித்துக் கொண்டு இருந்த பேஜ் உங்க டிஸ்கசனால ரோம்பிடுச்சு இல்லே. உங்க பேரும் பேனர்ல வந்துடுச்சு இல்ல”ன்னும் “காயத்ரி தேவி சொல்வதைபோல் திருடுங்கள் ஆனால் திருடிய இடத்தின் விலாசத்தையும் பெயரையும் போட்டு திருடுங்கள், இல்லையென்றால் சண்டை போடுகிறவர்களின் பதிவு எல்லாம் முக்கியத்துவம் பெற்று விடும்”ன்னும் அவர் சொன்னப்போ தான், நான் காப்பி பேஸ்ட் செய்யுறதாகவும், சண்டை போடுறதாகவும், விளம்பரத்துக்காக தான் இத எல்லாம் பண்ணினேன்னும் அவர் சொல்றார்ன்னு எனக்கு புரிஞ்சுது. சபாஷ்... அப்போ ஒரு விசயத்த தப்பு, அத சரி பண்ணுங்கன்னு எடுத்து சொல்றவங்க எல்லாம் சண்டைகாரங்களா? விளம்பர பிரியர்களா? இது எனக்கு தெரியாம போச்சேன்னு நினைச்சுகிட்டே அங்கயே என்னோட கண்டனத்தை தெரிவிச்சுக்கிட்டு நான் வந்துட்டேன்.

எப்பவுமே, என்னுடைய ப்ரோபைல் தாண்டி, நான் யார்கிட்டயும் வம்புக்கு போறதே இல்ல. அதுவும் என்னோட ப்ரொபைல்ல தேவையில்லாம வந்து கமன்ட் போடுறவங்கள தான் நான் கண்டிப்பேன். யார் எதை பற்றி சொன்னாலும் நானா ஆராய்ஞ்சு அத அறியுற வரை அதை கண்டுக்கவும் மாட்டேன். இது என்னை பத்தி நல்லா தெரிஞ்சவங்களுக்கு தெரியும். இங்க அந்த பெரிய மனுஷன், என்னை பத்தி சொன்னதும் எனக்கு சுர்ர்ர்னு கோபம் வந்துச்சு. ஆனா ஒரு விஷயம், ஒரு தெரு நாய் நம்மள பாத்து குலைக்குதுன்னு வச்சுக்கோங்க, நாமளும் அந்த இடத்துல நின்னே திருப்பி குலைச்சா பாக்குறவங்க நம்மள தான் தப்பா நினைப்பாங்க. அந்த நேரம் நாம அந்த இடத்துல இருந்து வந்துடுறது தான் நல்லது. அதனால தான் நானும் அந்த இடத்த விட்டுட்டு வந்துட்டேன். (இந்த இடத்துல இந்த example சரியா இருக்கும்குரதால இத நான் சொன்னேன், இத யாரையும் புண்படுத்த சொல்லல)

ஆனா இத அப்படியே விடவும் கூடாதே, இந்த இடத்துல இப்படியும் ஒரு ஆள் இருக்கார்ன்னு கண்டிப்பா தெரிஞ்சவங்களுக்காவது எடுத்து சொல்லனுமே, அவங்களாவது ஜாக்கிரதையா இருப்பாங்களே, அதனால தான் நான் அதெயெல்லாம் இங்க சொல்றேன்.

நான் அங்க இருந்து வந்ததுக்கு அப்புறமும் அவரோட மனக்குமுறல் அடங்காம அவர் புலம்புனதையும் நான் இங்க சொல்லணும்ல.

அவர் புலம்பினது இது தான்.

“வயித்தெரிச்சல் யாருக்கு வந்ததுன்னு இந்த ஸ்டேடஸ் படிச்சவங்க எல்லாருக்கும் தெரியும். புகழ் தேடாதவங்கன்னா எதை பற்றியும் கண்டுக்காம விடுறது தான். நாலாயிரம் பேரு குரூப்ல இருக்காங்க, நாப்பது பேர் தான் கமன்ட் போடுறாங்க, அந்த மாதிரி தான்” “இந்த குரூப்ப விட்டு வெளியே போய் டிஸ்கஸ் பண்ணி ரூம் போட்டு டிஸ்கஸ் பண்ணி இங்க கமன்ட் போடுறவங்களும் சில பேர் இருக்காங்க” “இந்த குரூப்போட அமைதியை கெடுக்க நினைக்குற எந்த சக்தியும் ஒன்னும் செய்ய முடியாது என்பதை எங்க குழுவின் அன்பர்கள் ஆதரவு தெரிவிக்கும்”




ஆமா, நான் வயித்தெரிச்சல்-ன்னு சொன்னேன் தான், ஆனா அதுல தப்பு இருக்குறதா எனக்கு தோணல, ஒரு தப்பு நடந்தப்போ அத சுட்டி காட்டி, அத அவங்க சரி பண்ணனும்னு நாம சொன்னது அவங்களுக்கு அமைதிய குலைக்குறதாம். இதுல, அவங்க குரூப்-ல நாலாயிரம் பேர் இருக்குறதாகவும், அவங்க ரொம்ப ஒற்றுமையா இருக்குறதாகவும், அந்த ஒற்றுமைய நான் திட்டம் போட்டு குலைக்க நினைக்குறதாகவும் சொல்லியிருக்கார். ஏங்க, நான் தெரியாம தான் கேக்குறேன், நாலாயிரம் பேர் இருக்க கூடிய இடத்துல அந்த போஸ்ட்ட நாலு பேர் ஒழுங்கா பாத்தாங்களாங்குறதே சந்தேகம் தான். அங்க அவ்வளவு சீரியஸா டிஸ்கசன் போயிட்டு இருக்கும் போதே, என்ன ஏதுன்னு கவனிக்காம, அருமை, அற்புதம்னு ஒப்புக்கு வந்து கமன்ட் போட்டுட்டு போனவங்க தான் அதிகம். இதுவா ஒரு குரூப்போட வெற்றி? யாரும் எதையும் கண்டுக்காம இருக்குறதுல தான் அவங்க ஒற்றுமையா காட்டுறாங்களாயிருக்கும்.

அங்க எந்த அன்பர்கள் குழுவும் ஆதரவு தெரிவிக்கலன்ன உடனே எல்லாத்தையும் டெலிட் பண்ணிட்டார் அந்த பெரிய மனுசர்.

செய்யுறதையும் செய்துட்டு, கொட்ட வேண்டிய வார்த்தைகளையும் கொட்டிட்டு, அப்புறம் அந்த பதிவுகளை டெலிட் பண்ணிட்டா எல்லாம் சரியா போய்டுமா? இந்த மாதிரி ஆகக்கூடும்ன்னு தான் நான் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து எல்லாத்தையும் பத்திரப்படுத்தி வச்சுக்கிட்டேன். இந்த போராட்டத்துல என் பக்கம் இருக்குற நியாயத்த உணர்ந்து பேசினவங்களும் இருக்காங்க. அவங்களுக்கு என்னோட தேங்க்ஸ்.

நியாயமான கோபம் எல்லாருக்கும் வரணும். இல்லனா நாம எல்லாம் உணர்சிகளோட பிறந்ததே வேஸ்ட். இந்த மாதிரி தவறு உங்க கண்ணுக்கும் தெரிஞ்சா தயங்காம சுட்டிக் காட்டுங்க, தட்டி கேளுங்க. அப்படியும் முடியலையா அத பத்தி ஒரு போஸ்ட் போட்டு, அடுத்தவங்கள தட்டிகேக்க ஊக்கப்படுத்துங்க.



நான் இன்னொரு போஸ்ட்டோட இன்னொரு நாள் உங்கள மீட் பண்றேன்...



Monday 25 November 2013

எனக்கென ஒரு நண்பனிருந்தான்...










எனக்கென ஒரு நண்பனிருந்தான்...

எப்படி அவனெனக்கு அறிமுகமானான்
என்பது நினைவிலில்லை.
ஆனால் அது ஒரு மழைக்கால காட்சியாய் இருக்கிறது.
வெயிலென்பது கொஞ்சம் கொஞ்சமாய்
களவு போய் கொண்டிருந்த காலமது.

களத்துமேட்டின் மேல் காளைகள் ஓய்வெடுக்க,
வயல்வரப்புகள் நீர் நிறைத்து கொண்டிருந்தன...
சலசலக்கும் ஓடைகளுக்கிடையில்
கப்பல் ஓட்டி களைத்திருந்த நேரத்தில்
எங்கிருந்தோ வந்தவன் சிநேகமாய் புன்னகைத்தான்.

வசீகரிக்கும் கண்கள் காந்தமாய் கவர்ந்திழுக்க,
அவன் வகிடெடுக்கா உச்சந்தலை
கொஞ்சமாய் கலைத்து விட சீண்டியது.
சிற்சில சம்பாசனைகளுக்குள் அவனென்னை கவர்ந்தே விட்டான்...

கரம் பற்றிக்கொள்ளென விரல் பற்றி
ஒரு பறவையாய் சிறகு விரிக்க வைத்தான்...
மரக்கிளையொன்றில் இறக்கி விட்டு
தனந்தனியாய் பறந்திட செய்தான்...

சிறு கல் கண்டு மிரண்டோடிய என்னை
மலைகள் அழகென உள்ளங்கால் பதித்திட செய்தான்...
பஞ்சு மிட்டாய் இதுவென
மேகம் நடுவில் முகம் புதைத்து சிலிர்க்க வைத்தான்...
தாய் விட்டு பிரிந்த
அணில் பிள்ளைகள் கண்டெடுத்து
தாயாய் என்னை கொஞ்சம் மாற்றிப் பார்த்தான்...
தவழத் தடுமாறும் நாய் குட்டிகள் கொஞ்ச வைத்து
சேயாய் நானும் மாறிடச் செய்தான்..

வயல் வெளிக்குள் நாற்று நட்டோம்...
புல் வெளிக்குள் பூ பறித்தோம்...
மழை வந்து விட்டுச் சென்ற
தூறல்களை வழியெங்கும் சிதறடித்தோம்...

பேசும் கதைகளுக்கு குறைவில்லை
களைப்புகள் என்றும் நெருங்குவதில்லை...
தோளில் நிம்மதியொன்றை புதைத்து வைத்து
நான் இவன் நிழலென நகலெடுத்தேன்...

நண்பன் இவனென இறுமார்ந்த வேளையில் தான்
ஓர்நாள், மொட்டை மாடியில், நிலாவொளியில்
தென்னங்கீற்றுகளின் சாட்சியாக
அவன் காணாமல் போயிருந்தான்....

இன்றிவன் என் துணைவனாகி, என் மகளுக்கு
அம்பாரி சுமக்கும் யானையாகி விட்டிருந்தான்...


Saturday 23 November 2013

பவர் ஸ்டாரோட பிறந்தநாளு..... (பார்ட் – டூ)



ரெண்டு மூணு நாளாவே ரொம்ப சீரியஸாவே பதிவு போட்டுட்டு இருக்க, மக்கா, இது சரியில்ல, நீ பொலம்புனாலும் அழுதாலும், வீரமா வசனம் பேசினாலும் இங்க ஒன்னும் அசைக்க முடியாதுன்னு திடீர்னு ஒரு பல்ப், அதுவும் அறுபது வாட்ஸ் பிரகாசத்துல மண்டை மேலே எரிஞ்சு என்னை உசார் படித்த ஆரம்பிச்சுடுச்சு. சரி, ஏதாவது ஒரு நீதி கதைய எடுத்து, அத அக்கு வேற, ஆணி வேறவா பிரிச்சி மேஞ்சி கைத்தட்டல் வாங்கிடுவமான்னு யோசிச்சப்போ, என்னோட கை, ஒரு பெரிய சுத்தியலா எடுத்து என் மண்ட மேலயே நங்குனு போட்டு, சீரியஸா யோசிக்காத, சீரியஸா யோசிக்காதன்னு சொன்னா கேப்பியா கேப்பியான்னு அடிச்சு துவம்சம் பண்ணிடுச்சு. அவ்வ்வ்வ் சாதாரணமாவே நாம கொஞ்சம் ட்யூப் லைட், இப்போ அடிச்ச அடியில ஒண்ணுமே புரியல.

இப்படியே புரியாம இருந்தா நல்லாயிருக்காதேன்னு யோசிச்சுட்டே இருந்தப்போ தான் நம்ம பவர்ஸ்டார்  பரந்தாமன கால்ல கட்டோட அப்படியே நிக்க விட்ருக்கமேன்னு நியாபகம் வந்துச்சு. அவரு வேற இருக்காரா, எங்க அவருன்னு இல்லாத முடிய இருக்குறதா நினச்சு பிச்சுக்குரவங்களுக்காக, முதல்ல இத போய்படிச்சுட்டு வாங்க.

என்ன, படிச்சாச்சா, பாத்தீங்களா, அந்த ஆளு எவ்வளவு எகத்தாளம் இருந்தா என்கிட்டயே வயலுக்கு போக எரோப்ளேன் கேட்டுருப்பாரு. அதுவும், நான் தண்ணி ஊத்தி வேற வளத்து குடுக்கணுமாம். ஒருநாளு இப்படி தான் பிரெண்ட் ஒருத்தர வழி அனுப்பி வைக்குறதுக்காக ஏர்போர்ட் போயிருந்தோம். பாவம் இந்த மனுஷன் வெட்டியா தானே இருக்கார்னு அவரையும் கூடவே கூட்டிட்டு போயிருந்தேன்.

அங்க போய் சும்மா இருக்காம, அங்க வந்த ஜப்பான் பேமிலிய வேற்றுகிரகவாசி ரேஞ்சுக்கு கற்பனை பண்ணி கிண்டல் பண்ணிக்கிட்டு இருக்காரு. ஆனா அவங்க என்னமோ இவர தான் ஏலியன்ன்னு நினச்சு அவர் கூட நின்னு போட்டோ எல்லாம் எடுத்தாங்க. அட, அப்படி போட்டோ எடுத்துட்டு போனா கூட பரவாலயே, என் கண்ணு முன்னாடியே, அந்த போட்டோவ அவங்க எப்.பில அப்லோட் பண்ணி, “A miracle, we are with an alien”ன்னு டைட்டிலே போட்டு விட்டுட்டாங்க. அதுக்கு ரெண்டு நிமிசத்துக்குள்ள ஐநூறு லைக்கு, நூத்தி முப்பத்தாறு கமன்ட்டு. ஹிஹி நான் கூட ஸ்பாட்டுலயே அவங்க ஐ.டி வாங்கி, பிரெண்ட் ரிகுவஸ்ட் குடுத்து, அவங்கள ஆட் பண்ண சொல்லி, ஒரு லைக் போட்டுட்டுதான் மறுவேலை பாத்தேன்னா பாருங்களேன், பவர் எவ்வளவு தத்ரூபமா இருந்துருப்பார்ன்னு.

சரி, ஒருவழியா பிரெண்ட்ட வழி அனுப்பி வச்சுட்டு திரும்பினா, பவரு வாய ஆ-ன்னு தொறந்து வச்சு அண்ணாந்து பாத்துட்டு இருக்காரு. அட, ஏன், ஏன் இப்படி, வாய மூடுங்க, நாலஞ்சு வவ்வாலு பத்துவாட்டி உள்ளேயும் வெளியேயுமா வந்து போயிட்டு இருக்குன்னு அவர உலுப்புனேன் (ஏர்போர்ட்ல வவ்வாலான்னு எல்லாம் நீங்க வாய திறக்க கூடாது. அதெல்லாம் காட்சிக்கு தேவைனா நாங்க டைனோசரையே கொண்டு வருவோம்). அப்புறமா தான் சிலிர்த்துக்குட்டே சொன்னாரு, இந்த ஏரோபிளேன் எவ்வளவு பெருசா இருக்கு, ஒரு நாளாவது அந்த ஜன்னல் சீட்ட புடிச்சு உக்காரணும்னு. நான் கூட அவருக்கு எப்படியாவது துண்டு போட்டாவது ஜன்னல் சீட் புடிச்சு தரேன்னு வாக்குறுதி குடுத்துருக்கேன். நீங்க எல்லாம் என்னோட நண்பர் படை, நலன் விரும்பிகள்ங்குறது உண்மைனா ஏரோப்ளேன்ல ஒரு கார்னர் சீட் கண்டிப்பா நம்ம பவருக்காக புடிச்சு தரணும். அப்புறம், டிக்கெட் ப்ளாக்ல வாங்கினா கூட பரவால, ஆனா டிக்கெட்டு கலரு வொய்ட்டா இருக்கணும்.

இதுவாவது பரவால, எதோ ஏரோப்ளேன பாக்காத மனுஷன் ஆசைபட்டுட்டார்னு விட்டுடலாம், ஆறு மாசம் முன்னால அவர் பண்ணுன அலும்பு இருக்கே, அப்பப்பப்பா.... ஆத்துக்கு குளிக்க போன மனுஷன், அங்க தேமேன்னு மேஞ்சுகிட்டு இருக்குற எரும மாட்ட பாத்து, நான் இந்த யானை மேல சாவாரி பண்ணியே தீருவேன்னு அடம் பிடிச்சிருக்கார். யோவ், அது எருமையான்னு வடக்கு தெருவுல பன்னி மேய்ச்சுகிட்டு இருந்த பையன் சொன்னதுக்கு, நான் சின்ன புள்ளன்னு நீ என்னை ஏமாத்துறன்னு பக்கத்துல கிடந்த சகதியில விழுந்து கைய கால அடிச்சுக்கிட்டு அழுதுருக்கார். இத எல்லாம் பாக்க சகிக்காம அவர எப்படியோ தூக்கி எரும மேல வச்சிருக்காங்க ஊர்க்காரங்க. யானைக்கு லாடம் எல்லாம் ஒழுங்கா அடிச்சிருக்கீங்களா, ஏன் அலங்காரம் பண்ணலன்னு கேள்வி மேல கேள்வி கேட்டு பக்கத்துல நின்னவங்கள எல்லாம் சாகடிச்சுருக்கார். அவர் ஜாலியா எரும மேல ஒரு ரைடு போயிட்டு வந்துட்டார், ஆனா அந்த எரும தான் பாவம், நாத்தம் தாங்காம குடல பொறட்டிட்டு, செத்தே போச்சாம். இத கேள்விபட்டதுல இருந்து, நான் அந்த எருமைக்கு ஒரு கோவில் கட்டியே ஆகணும்னு முடிவு பண்ணியிருக்கேன். இதுக்கு ஆதரவு தரவங்க, தாராளமா ஐம்பது லட்சம் குறைந்த பட்சம் நிதியுதவி செய்யலாம், அப்படி நிதியுதவி செய்தவங்க பெயர கண்டிப்பா அந்த கோவிலுக்கு போடுற ட்யூப் லைட்ல எழுதி போடுவோம். இத பத்தின மேல் விவரங்கள நாம பப்ளிக்ல பேசினா கண்ணு பட்டுரும், அதனால எல்லாரும் ரகசியமா கூடி கூடி பேசிக்கோங்க.

இந்தா, போன வாரம், பவரு துணியெடுக்க கடைக்கு போனாரே, அதாங்க, அந்த மஞ்ச கலரு சிங்குச்சா... அது எடுக்குறது முன்னாடி பெரிய கலவரத்தையே நடத்திப்புட்டாருங்க. அப்படியா, நீ சொல்லவேயில்லயேன்னா சம்பவ இடத்துல நான் இல்லையே, இந்த விசயத்த நான் இன்னிக்கி காலைல தான கேள்விப்பட்டேன். அப்படி என்னதான் பண்ணாருன்னு கேக்குறீங்களா? ஒரு பொம்பள புள்ள அழகா தலை வாரி, ஜடை பின்னி, பூ வச்சுட்டு  வந்துருக்கு. இவருக்கு, அந்த ஜடை ஒரிஜினலா டூப்ளிகேட்டான்னு சந்தேகம். அட, நேரா போய் கேட்ருந்தா கூட பரவால, நாலு அரை கன்னத்துல சப்புன்னு அறஞ்சதோட விட்ருக்கும், இவரு ஜடைய புடிச்சு இழுத்துருக்காரு, அது கையோட வந்துடுச்சாம். அவ்வளவு தான், அங்கயே அவருக்கு பெருசா ஒரு பூஜைய போட்டு, அப்புறம் விஷயம் வெளில தெரியாம இருக்க எல்லாருக்கும் ஆளுக்கு ஐநூறு ரூபா லஞ்சமா குடுத்து தப்பியிருக்கார். அப்படி ஐநூறு ரூபா லஞ்சம் வாங்கின ஒருத்தர் தான், இந்த விசயத்த ஊர் முழுக்க சொல்லிட்டு திரியிறாரு. அப்படி தான் என் காதுக்கும் வந்துச்சு.

இத்தகைய சிறப்பு வாய்ந்த, பெருமை வாய்ந்த நம்ம பவருக்கு பொறந்தநாளு (எப்படி தலைப்ப டச் பண்ணினேன் பாத்தீங்களா?). இந்த தடவையாவது பொறந்தநாள நல்ல படியா கொண்டாடணும். நீங்க, உங்களால முடிஞ்ச பிறந்தநாள் பரிசுகள, பொன்னாவோ, வெள்ளியாவோ, காராவோ, பைக்காவோ, இல்ல நிலபத்திரம், வீட்டு மனை, மாடி வீடு, இப்படி எதுவா வேணும்னாலும் குடுக்கலாம். பவர் அத வேணாம்ன்னே சொல்ல மாட்டார்.


நான் இத பத்தின ஒரு பொதுகுழு கூட்டம் போட வேண்டியிருக்கு, வரட்டா.... 

பின் குறிப்பு: இந்த பால்வடியுற முகத்த நெட்டுல இருந்து தான் சுட்டேன்