நேத்து எனக்கும் என் lab assistant- க்கும் நிறைய வாக்குவாதம்.
தனக்கு பாத்து வச்ச மாப்பிளை சரியில்லன்னும் வேணும்னே சதி செய்து நாசம் பண்ணி தன்னோட குடும்பத்து ஆளுங்க தன்னை நடுத்தெருவுல விட்டுட்டாங்கன்னு புலம்பிகிட்டே இருந்தாங்க.
இடையிடைல “அவ மட்டும் சந்தோசமா இருக்கா. எப்பவும் என் அண்ணன்கிட்ட போன்ல பேசிகிட்டே இருக்கா. நானும் இப்படி மாப்பிள்ளை கூட பேசணும்னு ஆசைப்படுறேனே, ஆனா நான் இப்படி பாதிக்கப்பட்டு இருக்கேனே”னு அண்ணன் மனைவி மேல ஆவேசம் வேற.
இத்தனைக்கும் இவங்கள காத்திருந்து ஸ்கூட்டில கூப்ட்டுட்டு ரெண்டு பேரும் ஒண்ணா தான் காலேஜ் வராங்க.
" யாரும் வேணும்னே யாரையும் நாசமா போகணும்னு நினைக்க மாட்டாங்க. நீங்க நல்லா இருக்கணும்னு நினச்சி பண்ணினது இப்படி ஆகிடுச்சு. "நடந்தது நடந்தாச்சு, முதல்ல அடுத்தவங்கள குறை சொல்றத நிறுத்துங்க. அப்பதான் வாழ்க்கைல உருப்பட முடியும்" னு சொன்னதும் "எப்பவும் ஈஈஈ்னு இளிச்சுகிட்டு இருக்குற உங்களுக்கு என் கஷ்டம் புரியாது"ன்னு பட்டுன்னு சொல்லிட்டாங்க.
சரிதான், இனி வாயக்குடுத்தா நமக்கு தான் அசிங்கம்னு வாய மூடிகிட்டு Bell அடிச்சு பிள்ளைங்க வரவும் class எடுக்க ஆரம்பிச்சேன்.
கொஞ்ச நேரத்துல dehydration, low bp- னு எனக்கு படபடன்னு மயக்கமா வர "madam கொஞ்சம் கேண்ட்டீன்ல சுடு தண்ணி வாங்கிட்டு வாங்களேன்"னு கேக்க "அதெல்லாம் என்னால முடியாது"னு சொல்லிட்டாங்க. நான் நாக்கு குழறி மெதுவா சாய்றத பாத்த பிள்ளைங்க தான் ஓடி போய் சுடு தண்ணி வாங்கி குடுத்து கூடவே இருந்து பாத்துக்கிட்டாங்க. இத்தனைக்கும் ஒழுங்கா படிக்குறது இல்ல, ஒரு practical உருப்படியா பண்றது இல்லன்னு அப்ப தான் திட்டி தீத்துருந்தேன்.
இன்னிக்கி lab- ல நுழைஞ்சதும் “ஹிஹி... தண்ணி வாங்கி தரலைன்னு கோபமா”ன்னு கேட்டாங்க. நான் கொஞ்சம் முறைச்கிகிட்டே seat –ல போய் உக்காந்துகிட்டு class adjustment, official phone calls-ன்னு வேலைய பாக்க ஆரம்பிச்சேன். கொஞ்ச நேரத்துல மனசுக்கு என்னவோ தோண, அவங்கள பாத்தேன். என்னையே பாத்துகிட்டு இருந்தாங்க. பட்டுன்னு சிரிச்சுட்டு, “உங்களுக்கு கொழுப்பு கொஞ்சம் ஓவரா போச்சு, காலைல சாப்ட்டீங்களா இல்லையா, இல்லனா முதல்ல போய் சாப்டுங்க போங்க”ன்னு சொன்னேன். அது வரைக்கும் உம்ம்முனு இருந்த அவங்க முகம் பிரகாசமாகி, சரின்னு போய்ட்டாங்க.
Practical பண்ண வந்த பிள்ளைங்க இத கவனிச்கிட்டே இருந்தாங்க. “ஏன் மேடம் அவங்ககிட்ட பேசுனீங்க? எல்லாம் நீங்க வச்சு குடுக்குற இடம். நாங்க கவனிச்சுட்டு தான் வரோம், அவங்க உங்கள நிறைய எதிர்த்து பேசுறாங்க, மதிக்க மாட்டேங்குறாங்க, எங்ககிட்ட கூட ரொம்ப கோபப்படுறாங்க மேடம்”ன்னு சொல்லவும் “நேத்து நானும் தான் உங்கள நிறைய திட்டினேன், ஆனாலும் நீங்க எனக்கு help பண்ணுனீங்க தானே, அப்படி வச்சுக்கோங்க இதையும். நடந்து முடிஞ்ச சம்பவங்களுக்காக கோபப்பட்டுகிட்டே இருந்தா அப்புறம் வாழ்ந்து என்ன பிரயோஜனம்”ன்னு கேட்டுகிட்டே, “சரி சரி, வேலைய பாருங்க, வந்துட்டாங்க கதை கேக்க”ன்னு மறுபடியும் திட்டி தொரத்தி விட்டுட்டேன்.
என் lab assistant மாதிரியான பெண்கள் அநேகம் பேர் இங்க இருக்காங்க. வாழ்க்கைல அவங்களுக்கு வர்ற stress, அதனால தொடர்ந்து வர்ற மன அழுத்தங்கள். ஏன், நானே கூட இந்த வகையறா தான். நிறைய கோபம், நிறைய அழுகைன்னு ஏதோ ஒரு சூழல்ல சிக்கி, அதுல இருந்து வெளிவர போராடிகிட்டு இருக்குற ஒரு சராசரியான மனுஷ ஜென்மம் தான் நானும்.
ஒருத்தங்க மேல ஒரு பழிய போடுறதுக்கு முன்னாடி, அவங்க என்ன நிலைமைல இருக்காங்க, இத அவங்க செய்திருப்பாங்களா, அப்படியே செய்திருந்தாலும் எதுக்காக செய்திருப்பாங்கன்னு அவங்கள சார்ந்து அவங்க மனநிலைல இருந்து யோசிச்சோம்னாலே பல நேரம் பல misunderstanding சரியா போக வாய்ப்பு இருக்கு. எனக்கு என் lab assistant பத்தி தெரியும். அதனால அவங்கள என்னால adjust பண்ண முடியுது. என்னைப் பத்தி பசங்களுக்கு தெரியும், என் நண்பர்களுக்கு தெரியும், அதனால அவங்களால என்னை adjust பண்ணி போக முடியுது அவ்வளவு தான்.
ஆனா இதெல்லாம் எத்தனைபேருக்கு சரியா புரியும்னு நம்மால சொல்ல முடியாது. காரணம் இயலாமையும் ஆற்றாமையும் அதிகம் ஆகிடுச்சுனா நாம உடனே கைல எடுக்குற ஆயுதம், நம்மோட நிலைமைக்கு காரணகர்த்தாவா அடுத்தவங்கள கைக்காட்டுறது தான்.
“என் வாழ்க்கைய கெடுத்ததே அவன்/ அவள் தான்”ன்னு ரொம்ப ஈசியா அடுத்தவங்கள கைகாட்டிகிட்டு நம்மோட இந்த நிலைமைக்கு நாம காரணம் இல்லன்னு நமக்கு நாமே சமாதானம் செய்துக்குறோம். ஆக மொத்தத்துல பெரும்பாலும் நம்மோட கற்பனைப்படி நாம எப்பவும் நல்லவங்களாவே இருப்போம். ஆனா நமக்கு ஒரு பெரும் பிரச்சனை இருக்கும். அதாவது நம்மள தவிர்த்து எல்லாருமே கெட்டவங்களா இருப்பாங்க, எப்படா நம்ம காலைவாரி விடலாம்னு காத்துகிட்டு இருப்பாங்க.
இப்படி அதீத கற்பனைகுள்ள சிக்கிகிட்டவங்களால அவ்வளவு சீக்கிரம் அதுல இருந்து வெளிவர முடியாம போய்டுது.
தன்னோட கஷ்டங்களுக்கு யார் மேலயாவது பழி போடுறவங்க அடுத்து நாடுறது கோவில் பூசாரிகளையும் ஜோசியக்காரர்களையும் தான். சில பேர் ஒரு படி மேல போய் சாமி மேலயே பழி போடுவாங்க. “என் வாழ்க்கைய கெடுத்தது முத்தாரம்மன் தான், அவ தான் என்னை நாசம் பண்ணிட்டா. என்னை வாழ விடாம பண்ணிட்டா”ன்னு எல்லாம் காதுல விழுறப்ப பாவம் இந்த அம்மன்மார்கள்ன்னு அவங்களுக்காக பரிதாபப்பட மட்டும் தான் முடியுது என்னால. மிஞ்சி மிஞ்சி போனா எனக்கு அத குடு, இத குடுன்னு அவங்கள disturb பண்ணாம இருக்கேன். பாவம், மேல குறிப்பிட்ட என் lab assistant மாதிரியானவங்ககிட்ட மாட்டிகிட்டு முழி பிதுங்கி இருக்குற முத்தரம்மன நான் வேற தொல்லை பண்ணனுமா என்ன?
பெண்கள்ல இன்னும் சில வகைகள் உண்டு. இந்த மாதிரி stress, depression –ல இருக்குறவங்கள உக்கார வச்சு நல்லா கதை கேட்டுகிட்டு, “ஐயோ பாவம், நீ எவ்வளவு நல்லவ. உன் மாமியார்/ புருஷன் இவ்வளவு மோசமானவங்களா? உன்னால தான் இதெல்லாம் சமாளிக்க முடியுது, உனக்கொரு விடிவு வராதா”ன்னு ரொம்ப பரிதாபப்படுவாங்க. சிலபேரு இன்னும் ஒரு படி மேல போய் “அந்த கோவிலுக்கு போனா பரிகாரம் பண்ணலாம், இந்த சோசியர்கிட்ட போனா நல்ல பலன் உண்டு”ன்னு ஏத்தி விடுவாங்க. அவங்க அந்தப் பக்கம் போனதும், அவங்கள பத்தின கேலிகளும் கிண்டல்களுக்கும் அவங்களுக்கு நல்ல time pass –சா இருக்கும்.
இந்த விசயத்துல தான் நான் ரொம்ப முரண்படுவேன். அவங்களா என்கிட்ட ஏதாவது சொல்ல வந்தா காது குடுத்து கேக்காம இருக்க மாட்டேன். கேப்பேன். ஆனா நிறைய குறுக்கு விசாரணை பண்ணுவேன். தப்பு பெரும்பாலும் இவங்க பெயர்லயே இருக்கும். “நீங்க செய்றது தப்பு”ன்னு முகத்துக்கு நேரா காரண காரியங்களோட விளக்கிடுவேன். ரொம்பவே argue பண்ணிட்டு இருந்தா, “போங்க, போய் வேலைய பாருங்க”ன்னு தொரத்தி விடுவேன். பெரும்பாலும் நான் அவங்ககிட்ட முகத்துல கடுமை தான் காட்டியிருக்கேன். அப்படியும் ரெண்டு பேரும் மறுபடியும் புன்னகையோட வலம்வர முடியுதுனா அவங்களுக்கு என் மேல ஏதோ ஈர்ப்பு, இவங்க என்னவோ சொல்ல வராங்கன்னு அவங்களுக்கு தெரிஞ்சிருக்கணும்.
ஒரு தடவ வாய்விட்டே கேட்டேன், “இவ்வளவு திட்டியும் எப்படி என் பின்னாலயே வரீங்க”ன்னு. “நான் நல்லா இருக்கணும்னு நீங்க மனசார நினைக்குறீங்க. அது எனக்கு நல்லா புரியுது”ன்னு சொன்னாங்க.
அவ்வளவு தான் வாழ்க்கை. அவ்வளவு தான் புரிதல்.
என்ன கஷ்டம் வந்தாலும் “ஐயோ என் நிலைமை இப்படி ஆகிபோச்சே”னு சுய இரக்கமோ அனுதாபமோ நம்ம மேலே நமக்கு வந்துடவே கூடாது. அதுல மட்டும் சரியா இருந்துடணும். அந்த விசயத்துல நான் வரம் வாங்கி வந்துருக்கேன்.