Showing posts with label தாய்மை. Show all posts
Showing posts with label தாய்மை. Show all posts

Tuesday, 16 August 2016

அன்புள்ள சூர்யாவுக்கு



சூர்யா,

நீ என் பையன். உனக்கு இப்ப பதினோரு வயசு. ஆனா அந்த வயச மீறுன மெச்சூரிட்டி உனக்கு உண்டு. இந்த லெட்டர் நான் எழுத வேண்டிய அவசியமே இல்ல. ஆனாலும் எழுதுறேன். ஏன் தெரியுமா?

எத்தனையோ பெத்தவங்க அவங்க பிள்ளைங்களுக்கு செய்றது எல்லாமே தியாகம்னு நினச்சு தான் செய்றாங்க. பிள்ளைங்களுக்காகவே செய்றாங்க. ஆனா எப்பவும் உனக்காக இவ்வளவு கஷ்டப்பட்டேன்னு சொல்லாம விட்டுடுறாங்க. இதனால தான் அவங்க படுற கஷ்டம் எல்லாமே பெத்த பிள்ளைங்களுக்கு தெரியாமலே போய்டுது.

எனக்கு தெரியும், நான் அம்மான்னு உனக்கு எந்த கடமையும் செய்யல. ஏன்னா, அதுக்கான பொறுப்பு எனக்கு அளிக்கப்படல. நீங்க என் கூட தான் இருக்கணும்னு நான் ஆசைப்பட்டப்ப எல்லாமே கைமீறி போய்டுச்சு. அது ஏன், எப்படின்னு உனக்கு கண்டிப்பா தெரியப்படுத்துவேன்.

மொவனே, எனக்கு உன்னையும் உன் அக்காவையும் கண்டா பயம். எப்படி உன் அப்பாவ பாத்து நான் நடுங்குவேனோ அப்படியான ஒரு பயம்.

அடுத்தவங்கள அதிகாரப்படுத்தி, காயப்படுத்துற எந்த குணமும் கடைசி வரைக்கும் நிலைக்கப் போவதே இல்ல மொவனே. உன் அம்மா, அதான் நான், யாரையும் காயப்படுத்துனது இல்ல, ஆனா உன் தாத்தாவோட அதிகாரத்தோட வாழ்ந்தவ. அவ கிட்ட எது வேணா இல்லாம போயிருக்கலாம், ஆனா தன்மானம்னு ஒண்ணு நிறைய இருந்துச்சு. ஆனா அத எல்லாத்தையும் உங்க கிட்ட நான் இழந்துட்டேன். எனக்கு பெத்த பிள்ளைங்க கூட வேணாம்னு நான் முடிவுக்கு வந்ததே இதனால தான்.

இத படிக்குறப்ப உனக்குள்ள ஒரு ஏளனம் எழலாம். உங்க கிட்ட நான் எவ்வளவோ அவமானப்பட்டுட்டேன். இன்னிக்கி உச்சகட்டமா அப்படி ஒரு அனாதைத்தனத்தோட நான் ரோட்டுல நின்னேன்.

உனக்கு தெரியுமா, பத்து வயசுல உனக்கு இருக்குற இந்த சுதந்திரம் முப்பது வயசுல உன் அம்மாவுக்கு இல்ல. என்னை இன்னமும் சின்னப்புள்ளையா நினச்சு வீட்டுக்குள்ள பூட்டி வைக்குற என் அப்பா. ஏதோ ஒரு காலம் விடியும், என்னிக்காவது நானும் சுதந்திரமா வாழுவேன், வாழணும்ங்குற ஆசையோட தான் ஒரு வேலைக்காக ஓடி ஓடி அப்ளிகேசன் போட்டுட்டு இருந்தேன்.

அப்ளிகேசன்னா ரொம்ப சாதாரணமா நினைச்சுடாத. எப்போ நான் வேலை தேட ஆரம்பிச்சேனோ அப்ப தான் நான் என்னையே புதுசா புரிஞ்சுகிட்டேன்.

உனக்கு அம்மாவ பத்தி என்ன தெரியும்? அவளுக்கு ஒண்ணுமே தெரியாது, அவ ஒரு லூசு, அவ ஒரு பைத்தியக்காரி, ஆங், முந்தாநேத்து சொன்னியே சூனியக்காரி, இதெல்லாம் தானே.

ஆனா நான் சொல்லட்டுமா உன் அம்மா யாருன்னு?

வாழ்க்கைல எத்தனையோ அவமானப்படுத்தல், போராட்டங்களுக்கு இடையில அவ ஒரு டாக்டரேட். பி.ஹச்.டி முடிச்சவ.

இதுவரைக்கும் தான் கஷ்டப்பட்டு படிச்சத எல்லாம் ரொம்ப சுலபமா எல்லாரும் புரியுற மாதிரி மூணு புக் எழுதினவ.

அவ இதுவரைக்கும் இன்டர்நேசனல் அளவுல வெளியிட்ட ஆராய்ச்சி கட்டுரைகள் இருபத்தி ஒன்பது.

ஒன்பது தடவ இண்டர்நேசனல், நேசனல் கான்பரென்ஸ்ல மேடையேறி பேசி இருக்கா.

ஏழு கான்பரென்ஸ் படிக்குற காலங்கள்ல கலந்துகிட்டு இருக்கா.

தான் வேலை பாத்த காலேஜ்ல ஒரு நேசனல் கான்பரன்ஸ், ரெண்டு மாவட்ட அளவு நிகழ்ச்சிகள் முன்ன நின்னு நடத்தி இருக்கா.

எடிட்டர் பதவியையும் அவ விட்டு வைக்கல. அவ காலேஜ் மேகசீன் எடிட்டர் அவ தான். அது மட்டும் இல்ல, வேலை பாத்த காலேஜ்ல அவ அட்மிசன் கமிட்டி மெம்பர். இன்னும் சொல்றேன் கேளு, அவ டிபார்ட்மென்ட் ஹச்.ஓ.டி அவ தான்.

ஸ்கூல், காலேஜ் லெவல்ல அவ வாங்குன பரிசுகள் பெரும்பாலும் எல்லாமே முதல் பரிசுகள் தான். கிட்டத்தட்ட பதினேழு பரிசுகள். எல்லாமே பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, சிறுகதைகளுக்கு வாங்கினது தான். இதுல யூனிவேர்சிடி அளவுல இளைய சமுதாயம் பத்தி எழுதின கட்டுரைக்கு முதல் பரிசு, கன்னியாகுமரி மாவட்ட அளவுல எட்டாவது படிக்குறப்பவே அவ எழுதின சிறுகதைக்கு முதல் பரிசு.

அவளுக்கு எத்தனை ப்ரெண்ட்ஸ் உண்டுன்னு உனக்கு தெரியுமா? அவள ரொம்ப ரொம்ப நேசிச்ச ப்ரெண்ட்ஸ் அவங்க எல்லாரும்.

நேத்து என் மாணவி ஒருத்தி உன் கிட்ட என்னை பத்தி சொன்னாளே, “உன் அம்மா தான் எங்க எல்லாருக்குமே ரோல் மாடல்”ன்னு. நீ கூட நக்கலா இவளா, இத நான் நம்ப மாட்டேன்னு சொன்னியே, ஆனா அது தான் உண்மை சூர்யா.

என் ப்ரெண்ட்ஸ், எனக்கு பாடம் கத்து குடுத்த ஆசிரியர்கள், என் ஸ்டுடென்ட்ஸ் எல்லாருமே என்னை தான் ரோல் மாடலா சொல்லுவாங்க.

உன் அம்மாவுக்கு பயம்னா என்னனே தெரியாது தெரியுமா? தனி ஆளா குத்த வர்ற கோவில் கிடாவுல இருந்து மிரண்டு வர்ற மாடு வரைக்கும் அடக்குவா. அவளுக்கு பறவைகள், விலங்குகள் பாசம் புரியும். அதோட பாஷை புரியும்.

இப்படி எல்லாம் இருந்த உன் அம்மா இன்னிக்கி ஒரு உதவாக்கரையா இருக்க யார் காரணம் சூர்யா?

இந்த ஆணாதிக்க சமூகம்.

முப்பத்தாறு வயசுலே படம் பாத்தல. அதுல ஒரு கேள்வி வருமே, ஒரு பெண்ணோட எக்ஸ்பயரி டேட்ட முடிவு பண்ணுறது யாருன்னு?

அப்படி தான் என்னோட எக்ஸ்பயரி டேட்ட முடிவு பண்ணினது மூணு பேரு.

முதல்ல காசுக்காக மட்டுமே என்னை கட்டிகிட்ட உன் அப்பா. என்னை பைத்தியக்காரியாக்கி அத்தன சொத்தையும் சுருட்டிடணும்னு பக்காவா ப்ளான் போட்டு, கடைசி கட்டத்துல வெறி புடிச்சு இன்னமும் என்னை கொலை பண்ண சுத்தி சுத்தி வர்றவன்.

அடுத்து, காசு பணத்த இழந்துடுவோம்னு பயந்து உன் அப்பா கிட்ட இருந்து என்னை மீட்டு, எங்க அவனால என்னோட உயிருக்கு ஆபத்து வந்துடுமோன்னு என்னை பூட்டி வச்ச என் அப்பா. அவருக்கு இந்த சமூகத்தின் மேலான பயம்.

அடுத்ததா நீ.

உனக்கு கண்டிப்பா நியாபகம் இருக்காது, ஆனா எனக்கு இருக்கு. நீ, நான், அக்கா மூணு பேருமே மெத்தைல படுத்துக்கிட்டு நம்மோட ஆசைகள் என்ன என்னனு பெரிய பெரிய கனவுகளோட பேசிப்போம். நமக்கு இந்த உலகத்தையே சுத்தி வர ரொம்ப ஆசை. சாதாரண மக்களோட மக்களா கலந்து வாழ ஆசை. எல்லோரையும் நேசிக்க ஆசை. இப்ப வரைக்கும் என்னோட ஆசைகள் இவ்வளவே தாண்டா மொவனே.

ரெண்டு பிள்ளைகள வளர்க்க முடியாதுன்னு என்னை வளர்த்தவங்க கிட்டயே உன்னை தூக்கி குடுத்தது என்னோட தப்பு. சூர்யா, உன்னை விட்டுருக்க கூடாது மொவனே. உன் அக்காவையும் உன் தாத்தாகிட்ட விட்டுருக்க கூடாது. இப்போ உங்கள மீட்டெடுக்கவே முடியாத பாவி ஆகிட்டேன்.

இன்னிக்கி நடந்த சம்பவம் தான் என்னை இத எழுத வைக்குது. நான் வேலை தேடி அப்ளிகேசன் போட்டுட்டு இருக்கேன்னு சொன்னேன் இல்லையா, அதனால எனக்கு ஏகப்பட்ட மன உளைச்சல், உடல் வலி. எல்லாம் சேர்ந்து தான் என் உடல்நிலைய ரொம்ப படுத்திடுச்சு. எத்தனையோ நாள் என்னை அறியாமலே மயங்கி விழுந்துருக்கேன். என் உடல் நிலை பத்தி உனக்கு தெரியப்படுத்தாம போனது என்னோட தப்பு தான். ஆனாலும் ஒரு நாள் நீ இருக்குறப்ப மயங்கி விழுந்தப்ப நடிக்குறேன்னு சொன்ன. அதெப்படி உன்னால அவ்வளவு அழகா நடிக்க முடியுதுன்னு நக்கல் பண்ணின. சரி அத எல்லாம் விடு.

நான் ரொம்ப அவசரமா வெளில போக வேண்டியது இருந்துச்சு. கதவ தொறந்து விடச் சொல்லி உனக்கு நான் போன் பண்ணினேன். ஆமா, ஒரு அம்மாவா இருந்தும், எனக்கு என்ன தேவை, எனக்கு எவ்வளவு காசு வேணும்ன்னு நான் உங்க கிட்ட தான் கெஞ்சி கேக்கணும். என்னோட தேவை அவசியமா இல்லையா, எனக்கு காசு கொடுக்கலாமா வேணாமா, என்னை வீட்டை விட்டு திறந்து விடலாமா வேணாமான்னு முடிவெடுக்குற எல்லா அதிகாரமும் இருந்தது உன் கையில. உன் தாத்தா, அதான் என் அப்பா அப்படி தான் உன்னை பழக்கி வச்சிருக்கார். ஏன்னா, வீட்டுக்கு அடுத்த ஆம்பிள்ளை நீ தானாம். நீ தான் அம்மாவ இனி கவனிச்சுக்கணுமாம்.

நான் உன்னை கூப்ட்டுகிட்டே இருக்கேன். அப்ளிகேசன் அனுப்ப எனக்கு கடைசி நாள். கட்டுகட்டா ஜெராக்ஸ், பிரிண்ட் அவுட் எல்லாமே எடுத்தாகணும். நீ வரவே இல்ல. அப்படி நீ இந்த நேரம் வீட்டை விட்டு வெளில போக வேணாம்னு கோபமா சொல்லி போனை வச்சிடுற.

பின் வாசல் வழியா தட்டு தடுமாறி போய், அவ்வளவு பெரிய கேட்டை தொறந்து நான் வெளில ரோட்டுல நின்னப்ப என் நிலை, உங்க நிலை எல்லாம் நினச்சு ஓ-ன்னு அழுதேன் சூர்யா. பெத்த பிள்ளைங்க கூட எனக்கு இல்ல சூர்யா.

எனக்கு பயமா இருக்குடா. எல்லாருமே நல்லா இருக்கணும்னு ஆசைப்படுவேன். அத்தனைபேருக்கும் நான் புத்திமதி சொல்லுவேன். ஆனா என் பிள்ளை நீ இப்படி தாறுமாறா நடந்துக்குறத நினச்சு எதுவுமே செய்ய முடியாம கைய பிசஞ்சுகிட்டு இருக்கேன்.

உனக்கு என் மேல மிகப்பெரிய கோபம் இருக்கலாம்.

என்னை சூனியக்காரின்னு சொல்லலாம்.

ஒரு அம்மாவுக்கான எந்த பொறுப்பையும் நான் செய்யலன்னு சொல்லலாம்.

ஆனா உன் அம்மாவுக்கு தெரிஞ்ச சூர்யா, அவ கைய விட்டு போய்ட்டான். அவ கிட்ட காசுக்காகவும், தன்னோட தேவைகள நிறைவேத்திக்குறதுக்காகவும் மட்டுமே வருவான். அவனுக்கு சைக்கிள் வேணுமா அம்மாகிட்ட வருவான், மீன் வேணுமா அம்மா கிட்ட வருவான், இன்னும் என்னென்ன வேணுமோ அத எல்லாம் வாங்க அம்மாகிட்ட வருவான். எப்போ எல்லாம் அவளால அத அவனுக்கு குடுக்க முடியலையோ அப்போ எல்லாம் அவ அவனுக்கு சூனியக்காரி ஆகிடுவா. இத்தனைக்கும் அவன் வயசு பதினொன்னு.

ஆனா ஒண்ணே ஒண்ணுடா மொவனே,

இந்த உலகத்துல கோழைகளும், பயந்தாங்கொள்ளிகளும் வாழவே முடியாது. அவங்கள இன்னும் அடிமைப்படுத்தி வைக்கவே இந்த சமூகம் மட்டுமில்ல பெத்த பிள்ளைங்களும் விரும்புவாங்க.

டேய், இதுவரைக்கும் நான் கஷ்டப்படுறேன்னு யார்கிட்டயும் புலம்பினதே இல்லடா. சாக கிடந்த கதை எல்லாம் கூட ஒரு சாகசமா தான் எல்லாருக்கும் சொல்லிட்டு வந்துருக்கேன். இப்பவும் அதே தான். இத எல்லாம் நான் ஒரு சாகசமா தான் எடுத்துக்கப் போறேன். ஆனாலும் உன்னால ஒரு கணம் நான் நிலைகுலைஞ்சு நின்னது உனக்கு தெரியணும்ல, அதுக்கு தான் இந்த லெட்டர்.

ஒரே ஒரு எடுத்துக்காட்டு சொல்றேன் சூர்யா. ஒவ்வொரு உடல் உறுப்பா நான் இழந்துட்டு வந்தாலும், என்னோட கணையத்த நான் இழந்த நேரம், வீட்ல வந்து உக்காந்துட்டு இருந்தேன். நீ என் வயித்துல எட்டி உதச்ச. தையல் விட்டு என் குடல் எல்லாம் வெளில தெரிஞ்சுது. அப்போ கூட காலைல தினமும் ஆஸ்பத்திரி போய் மருந்து போட்டுட்டு, அதே வயித்தோட சேலை கட்டிக்கிட்டு வேலைக்கு ஓடுவேன். வீட்டுக்கு வந்து ஐ என் குடல் தெரியுது பாருன்னு டார்ச் அடிச்சு பாத்து சிரிப்பேன். வாழ்க்கை அவ்வளவே தாண்டா மவனே, கஷ்டம்னு நினச்சா கஷ்டம், சாகசம்னு நினச்சா சாகசம்.

நீ ஒரு அற்புதமான குழந்தை தெரியுமா? உன்கிட்ட நிறைய திறமைகள் உண்டு. அத எல்லாம் பாத்து நான் மலைச்சு போயிருக்கேன். நீ நல்லா வரணும் சூர்யா.

இப்ப கூட நான் உங்ககிட்ட இருந்து தப்பிச்சு போக நினைக்குறதுக்கான காரணம் ரொம்ப சிம்பிள்.

நாளைக்கு இவ என் அம்மான்னு நீங்க நெஞ்சு நிமிர்த்தி நிக்கணும். நிக்க வைப்பேன்.

Wednesday, 15 April 2015

லெட்சுமி பிரசவம்



ஏ வசு எங்க இருக்க? இங்க ஓடி வா....

சுந்தரி கத்துனத கேட்டு பதறியடிச்சு வசந்தி ஓடி வந்தா.

“என்னாச்சுமா, எதுவும் பிரச்சனையா?”

“அந்த டாக்டருக்கு ஒரு போன போட்டுப் பாரு. ஆள இன்னும் காணல”

கைல கொதிக்க கொதிக்க வென்னிப் பானைய துணி வச்சி பிடிச்சு தூக்கிகிட்டே அவசர அவசரமா பின் வாசல் வழியா இறங்கி போனா சுந்தரி.

வசந்திக்கு பயம் வர ஆரம்பிச்சுடுச்சு. நேரே போன் வச்சிருக்குற இடத்துல போய் டாக்டர் நம்பர் எடுத்துட்டு கால் பண்ணினா.

“ஹல்லோ, டாக்டர் இருக்காரா? நான் குமாரசாமி வீட்ல இருந்து பேசுறேன்”

“அவர் அப்பவே கிளம்பி போய்ட்டாரே”

பின் கட்டுல என்ன நடக்குதுன்னு போய் பாக்க வசந்திக்கு பயம். ஏற்கனவே சுந்தரியும் குமாரசாமியும் பேசிகிட்டத கேட்டுட்டு தான் இருந்தா.

.......................................................................

“இன்னிக்கி நெறஞ்ச அமாவாச. எப்படியும் லெட்சுமி பிரசவம் நடந்துரும்”

அவங்க பேசிகிட்ட மாதிரி லெட்சுமிக்கு அப்படி ஒண்ணும் பெரிய மாத்தம் வந்துடல. பத்து மணி வரைக்கும் குடுத்தத எல்லாம் நல்லா தின்னுகிட்டு நல்லா மினுக் மினுக்ன்னு தான் இருந்தா. பதினோரு மணி வாக்குல தான் லேசா வலி வந்து முனங்க ஆரம்பிக்க, சுந்தரி வசந்திய எழுப்பி “நானும் அப்பாவும் பின்கட்டுக்கு போறோம். லெட்சுமி பிரசவம் நடக்கப் போவுது. நீ கதவ பூட்டிகிட்டு ஒரங்கு”ன்னு சொல்லிட்டுப் போய்ட்டா.

வசந்திக்கு இந்த மாதிரி பேரு காலங்கள பாக்குற திராணி இல்ல. இதுவே பகல் நேரமா இருந்தா அந்த இடத்த விட்டே எங்கயாவது ஓடிப் போயிருப்பா. அப்படியே ஆத்தங்கரைல கொஞ்ச நேரம் கல்லெடுத்து பொறுக்கிப் போட்டு, கூடவே மாந்தோப்புக்குள்ள போய் கல்லெறிஞ்சி மாங்கா பறிச்சு தின்னுட்டு மெதுவா தான் வீட்டுப் பக்கம் எட்டிப்பாத்துருப்பா.

ஆனா இன்னிக்கி பாத்து இருட்டிப் போச்சு. இனி எங்கயும் ஓட முடியாது. பேசாம அவ கட்டில்ல போய் குப்புற படுத்துட்டு தலையணைக்குள்ள மூஞ்ச பொதச்சுகிட்டா.

..........................................................

இங்க லெட்சுமியால வலிய பொறுக்க முடியல. கால கால தூக்கி தூக்கி அடிக்குறா. ரெண்டு மூணு தடவ நீரும் சொட்டு சொட்டா போவுது, வயிறு இளக்கி அது வேற கஷ்டமா இருக்கு.

சுந்தரி தான் தலைமாட்டுல ஆறுதலா தடவிக் குடுத்துட்டு இருந்தா. குமாரசாமி முதுகுல வாஞ்சையா தடவுனத பாத்து லட்சுமிக்கு கொஞ்சம் ஆசுவாசமாச்சு. கண்ணெல்லாம் நிறைஞ்சு போய் “ம்ம்ம்மா....”ன்னு முனங்க ஆரம்பிச்சுட்டா. “எப்படியும் இன்னும் அரமணி நேரத்துல பிரசவம் முடிஞ்சிரும். வலிய பொறுத்துக்கோ, புள்ளைய பாத்தா உன் கஷ்டம் எல்லாம் பறந்துரும்”னு ஆறுதலா குமாரசாமி லெட்சுமிக்கி சொல்லிட்டு இருக்கார்.

நேரம் ஆக ஆக இதுக்கு மேல பொறுக்க முடியாதுன்னு லெட்சுமி வாய்விட்டு கதற ஆரம்பிச்சா “அம்மாஆஆஆஆஆஆ”

லெட்சுமி கதறல கேட்டு லேசா கண்ணசந்து போன வசந்தி விருட்டுன்னு எழுந்து உக்காந்தா. “சீக்கிரமா பிரசவம் நடந்துரனும் சாமி, எங்க லெட்சுமிய கஷ்டப்படுத்தாத”

சுந்தரிக்கும் குமாரசாமிக்கும் பரபரப்பு தொத்திகிச்சு. “கொஞ்சம் படுத்து முக்கிப் பாரு. இப்படியே நின்னுட்டு இருந்தா எப்படி?”. சுந்தரி பேச்சுக்கு கட்டுப்பட்டத போல லட்சுமி படுத்து முக்க ஆரம்பிச்சா.

இல்ல, முடியல, மறுபடியும் எந்திரிச்சிட்டா. எப்படியாவது புது உயிர பத்திரமா இந்த ஒலகத்துக்கு கொண்டு வரணுமே, லெட்சுமி படுக்குறா, முக்குறா, கதறுறா, எழும்புறா... ஒருக்கட்டத்துல எழும்பவே முடியாம மாறி மாறி முக்கும் போது தான் மெல்ல கன்னிப்பை எட்டிப் பாக்க ஆரம்பிச்சுது.

“அவ்வளவு தாண்டா, இன்னும் கொஞ்சம், இன்னும் கொஞ்சம், இந்தா வந்துட்டு, முக்கு முக்கு...” குமாரசாமி லெட்சுமிகிட்ட ஆறுதல் சொல்லிகிட்டே, “அந்த சாமி வீட்டு திருநீர எடுத்துட்டு வா”ன்னு சுந்தரிக்கு கட்டள போடுறாரு.

சுந்தரி அவ தலைய ஒரு தடவ மார்ல புதைச்சு அணைச்சுக்கிட்டு “இந்தா வந்துடுறேன், சீக்கிரம் முடிஞ்சிரும்”னு ஓடிப் போய் திருநீர எடுத்துட்டு வந்து நெத்தியில பூசி விட்டா.

அப்படியே முதுகு, பின் பக்கம்ன்னு எல்லா இடத்துலயும் திருநீர தடவ, படீர்ன்னு கன்னிக்குடம் வெடிச்சு அந்த இடம் முழுக்க ஈரம்.

இந்தா இப்ப வந்துரும் இப்ப வந்துரும்னு குமாரசாமி வாய் முணுமுணுத்தாலும் படக்குன்னு உள்ள போய்ட்ட கால்கள பாத்து கொஞ்சம் பீதியாக தான் செய்துட்டார்.

“சுந்தரி, டாக்டர கூப்டுவோமா, எதுக்கும் வந்து பாத்துடட்டும்”

“எனக்கும் அப்படி தாங்க தோணுது. ராத்திரி பனிரெண்டு மணி. ஆனாலும் கூப்ட்டு தான் ஆவணும்”

இப்ப லெட்சுமி எழுந்து நின்னுருந்தா. கன்னி வாய்ல எந்த அடையாளத்தையும் காணோம். உள்ள போய்டுச்சு.

டாக்டர கூப்ட்டுட்டு வந்தவகிட்ட கொஞ்சம் வென்னி ஒத்தடம் குடுப்பமான்னு கேட்டவர பாத்து, அதுவும் சரிதான்னு சாணி அடுப்புல வென்னிப் போட்டுட்டு வந்து கவலையோட உக்காந்தா சுந்தரி.

“ஏங்க, இவ ஏன் இன்னும் படுத்து முக்கல. காலோ தலையோ எதுவும் வெளில தெரியலயே”

“பொறு எல்லாம் சரியாகிடும்” குமாரசாமி லெட்சுமி முதுக விடாம தடவிட்டு இருந்தார்.

...........................................................................

ரெண்டாவது தடவையா டாக்டர கூப்ட்டு பாத்துட்டு வசந்திக்கு இனிமேலயும் படுத்துக் கிடக்க முடியல. எழும்பி மெதுவா கொல்லப்பக்கமா வந்தா.

“ஏம்மா, லெட்சுமிக்கி பிரசவம் ஆச்சா இல்லியா? சத்தத்த காணோம்”

“இன்னும் இல்லடி. வயித்துல அசைவையும் காணோம். எனக்கென்னமோ பயமா இருக்கு”

“ஒண்ணும் ஆவாதுமா” வாய் சொன்னாலும் வசந்திக்கும் இப்ப பதற்றம் தொத்திகிச்சு.

அந்நேரம் பாத்து லெட்சுமி கொஞ்சம் படுத்து முக்க, வெள்ளையா ரெண்டு காலு வெளில தெரியுற மாதிரி இருக்க, “வசு, நாம பிரசவம் பாத்துருவோமா” குமாரசாமி கேட்டதுக்கு சட்டுன்னு “சரிப்பா”ன்னு பதில் சொல்லிட்டா வசந்தி.

சுந்தரி லெட்சுமிய எழும்ப விடாம கழுத்த கட்டிக்கிட்டு கிடக்க, குமாரசாமி மெதுவா கைய உள்ள விட்டார். அவர் தயக்கத்த பாத்த வசந்தி, இருங்கப்பான்னு அவர தள்ள சொல்லிட்டு லாவகமா கைய உள்ள விட்டு கால பிடிச்சு இழுக்க ஆரம்பிச்சா.

“அம்மாஆஆஆஆ.......”

“பொறுடா பொறுடா... இந்தா இப்ப வந்துரும்” வசந்தி இழுத்த இழுப்புல ரெண்டு காலும் கொஞ்சம் வெளில வர, இப்ப குமாரசாமியும் சேந்துகிட்டார்.

“அம்மாஆஆஆஆ.......”

“அம்மாஆஆஆஆ.......”

“அம்மாஆஆஆஆ.......”

“என்னப்பா, தலையக் காணோம்”

பொறுக்க மாட்டாம லெட்சுமி மறுபடியும் எந்திரிச்சு நின்ன நேரத்துல தான் டாக்டர் மெல்ல வெடலிக்கு அந்தப்பக்கமா நின்னு குரல் குடுக்குறார்.

“வர்ற வழில வண்டி மக்கர் பண்ணிடுச்சு. நட்டநடு ராத்திரியில நம்ம முத்த எழுப்பி அத சரி பண்ணிகிட்டு வர்றதுக்கு இவ்வளவு நேரம் ஆகிட்டு”

இந்த நேரம் கம்பவுண்டரயும் சேத்து எதிர்ப்பாக்குறது தப்பு. இவர் வந்ததே பெரிய விஷயம்.

வந்தவரு நேரா வென்னிய எடுத்து கைய நல்லா அலம்பிட்டு கூடவே டெட்டால் சோப்பும் போட்டு கைய கழுவுனார். சட்டைய களத்தி அங்க நின்ன மாமரத்து கிளை ஒண்ணுல தொங்க விட்டுட்டு மெல்ல லெட்சுமி பின்பக்கமா தடவிகிட்டே கைய உள்ள விட்டு பதம் பாத்து முடிச்சவர் நின்னு யோசிச்சுட்டு “கயிறு போடணும் போல”

இன்னும் ரெண்டு பேர் இருந்தா லெட்சுமிய பிடிச்சுக்க வசதியா இருக்கும். ஆனாலும் என்னப் பண்றது, நாமளே சமாளிப்போம்னு எல்லாரும் சேர்ந்து முடிவு பண்ண, டாக்டர் கொண்டு வந்த நைலான் கயித்த லாவகமா முடிச்சுப் போட்டு ஈத்துவாய்ல கைய உட்டு கால சேர்த்து கட்டுனார்.

நல்லா இழுங்க.... ம்ம்ம்ம்.... ம்ம்ம்ம்.... இன்னும் கொஞ்சம்.... இன்னும் கொஞ்சம்....

லெட்சுமிய பாக்க முடியல. அவளால இப்ப கதறக் கூட முடியல. ஏதாவது செய்து என் புள்ளைய காப்பாத்திருங்கன்னு அவ கெஞ்சுற மாதிரி இருக்கு. இந்த வலிய என்னால பொறுக்க முடியலயேன்னு அழுற மாதிரியும் இருக்கு. குமாரசாமியும் டாக்டரும் இழுத்துப் பாத்துட்டு ரொம்பவே சோர்ந்து போய் இருந்தாங்க. லேசா ரெத்தமும் மாசியும் கலந்து ஒழுக்கி விளுந்தத பாத்து வசந்திக்கு மயக்கம் வர்ற மாதிரி இருக்க, “எம்மா, நான் வேணா லெட்சுமி தலைமாட்டுல நிக்கேன், நீ வந்து இழுக்குறியா”ன்னு சுந்தரிகிட்ட கேட்டா.

“எனக்கென்னமோ முடியும்னு தோணல, கம்பி போட்ருவோமா”

டாக்டர் என்ன சொல்றார்ன்னு புரியாம வசந்தி திருப்பிக் கேட்டா

“அப்படினா என்ன டாக்டர்”

“இந்த மாதிரி ரொம்ப முடியாம போனா புள்ளையோட ரெண்டு கண்ணுக்கும் இடையில இருக்குற மூக்கு தண்டு பகுதில ஒரு கொக்கிய போட்டு இழுப்போம். புள்ள வழுக்கிகிட்டு வசமா வெளில வந்துரும்”

“ஐய்யய்யோ, அப்படினா புள்ளயோட கண்ணு போய்டுமே, மூக்கு உடைஞ்சுப் போனா புள்ள செத்துருமே... அத உயிரோட எடுக்க முடியாதா” வசந்தி அழ ஆரம்பிச்சுட்டா. பாவம் லெட்சுமி, எதுவுமே புரியாம ஏக்கமா பாத்துட்டு நிக்கா..

“அதெல்லாம் ஒண்ணும் ஆவாது. ரெண்டு கண்ணுக்கும் இடப்பட்ட அந்த பகுதி ரொம்ப உறுதியானது. கால புடிச்சு இழுத்தா கூட பயப்படணும்... இது பயம் இல்ல... புள்ள ஜம்முன்னு வந்து விழும் பாரேன்”

டாக்டர் சொன்னதுல நம்பிக்க இல்லனாலும் இப்ப நம்பி தான் ஆகவேண்டியிருக்கு. வேற வழியில்ல. எல்லார் முகத்துலயும் சோகம். ஆனாலும் நடக்குறது நடந்து தான ஆவணும்.

இங்க நடந்த களேபரத்துல அப்ப தான் பக்கத்து வீட்டு நடேசன் கண்ண முழிச்சி லைட்ட போட்டுட்டே எட்டிப் பாக்குறான்.

“லே... நடேசா, கொஞ்சம் வந்து உதவி பண்ணுடே... லெட்சுமி பிரசவம் சிக்கலாய்டுச்சு”

வெளிச்சத்த பாத்து சுந்தரி குரல் குடுத்ததும் உடனே அங்க வந்துட்டான்.

டாக்டர் அந்த வளஞ்ச கொக்கிய எடுத்து மறுபடியும் ஈத்து வாய்க்குள்ள கைய உட்டு தலைய தேடுறார். கொஞ்ச நேர போராட்டத்துக்கு பொறவு “மாட்டிட்டேன், இழுங்க”ங்குறார்.

இப்ப டாக்டர் முதல் ஆளா இழுக்க, பின்னால குமாரசாமியும் நடேசனும் தம் கட்டி இழுக்க ஆரம்பிச்சாங்க. சுந்தரி கடைசி ஆளா கைகுடுக்க, அம்மா....ஆஆஆ.....ன்னு அலறுன லெட்சுமிய வசந்தி அணைச்சுகிட்டா...

“இந்தா வந்துடுச்சு, இந்தா வந்துடுச்சுன்னு ஒரு மூணு நிமிஷம் போராடினதுக்கு பொறவு லெட்சுமியோட மூணாவது கதறலோட விருட்டுன்னு வெளில வந்து விழுந்துது புது உசுரு.

புள்ள கண்ணுல மாட்டியிருந்த கொக்கிய உருவிகிட்டு இருந்தவர் கிட்ட “என்ன டாக்டர் இது? அசைவே இல்ல” வசந்தி கலவரத்தோட பாக்குறா.

பிரசவிச்ச அடுத்த நிமிஷம் லெட்சுமி திரும்பி புள்ளைய பாக்கலாம்னா கழுத்துல கட்டியிருந்த கயிறு தடுக்குது. இவங்க மூணு பேரையும் பாத்து வயித்த எக்கி “ம்ம்மா.....”ன்னு கூப்டுறா.

குமாரசாமி புள்ள மூஞ்சில ஒட்டி இருந்த மாசியயும் ரெத்தத்தயும் துணி வச்சு தொடச்சுட்டு இருக்கும் போது டாக்டர் குட்டி நெஞ்சுல கை வச்சு பரபரன்னு தேய்ச்சு பட் பட்ன்னு அடிச்ச அடில புள்ள லேசா அசஞ்சு குடுத்துது. தலைய தூக்க முயற்சி பண்ணி முடியாம தலைய கீழ போட்டுடுச்சு.

எப்பா, உயிரு இருக்கு” அஞ்சு பேர் மூஞ்சிலயும் இப்ப சந்தோசம்.

டாக்டர், குமாரமாமி, நடேசன்ன்னு மூணு பேருமா சேந்து குட்டிய தூக்கி லெட்சுமிகிட்ட போட்டப்ப லெட்சுமி மூஞ்சிய பாக்கணுமே. புள்ளைய அப்படியே நக்கி நக்கி எடுக்குறா.

புள்ள நல்ல கலருன்னு சொல்லிகிட்டே சுந்தரி வாலத் தூக்கிப் பாத்து, பொட்டப் புள்ளைங்கன்னு கலகலன்னு எல்லாரும் சிரிச்சுட்டு இருக்குறப்ப தான் போன உசிரு திரும்ப வந்துச்சு குமாரசாமிக்கு.

அப்புறம் என்ன, தள்ளைக்கும் புள்ளைக்கும் ஆளுக்கொரு ஊசிய போட்டுட்டு விடிஞ்சி வந்து பாக்குறேன்னு லெட்சுமிய ஒரு தடவ தடவிக் குடுத்துட்டு நூறு ரூவா தாளையும் வாங்கிட்டு டாக்டர் கிளம்பிப் போய்ட்டார். நடேசனும் அவன் வீட்ல போய் படுத்துட்டான்.

இங்க ஒரே பரபரப்பு....

“எப்பா, புள்ளைக்கு நான் குளம்பு வெட்டுறேன்”

“நீ வெட்டத் தெரியாம வெட்டிருவ, கத்திய இங்க கொண்டா நான் வெட்டுறேன்”

“எது, எங்களுக்கு வெட்டத் தெரியாதாக்கும். புள்ளைக்கு கண்ணுல மருந்து போட்டு இனி கவனிக்கப் போறதே நான் தான் தெரியும்ல”

“ஆமாமா, பயந்தாங்கொள்ளி, போ போ, போய் தலையணைய கட்டிபுடிச்சு ஒரங்கு. இனி லெட்சுமி கொடி போடுற வரைக்கும் எங்களுக்கு ஒறக்கமில்ல” புள்ளய வாக்கா புடிச்சு பால் குடிக்க வச்சுகிட்டே குமாரசாமி மகள விரட்டிட்டு இருக்கார்....

Thursday, 22 May 2014

தாயென்னும் தேவதை


வலித்திருக்கும் வேளைகளின் தான்
அவளின் தேவைகள்
உணர்வுகளில் உச்சமடைகிறது...

கைகள் துவள, உடல் மெல்ல சாய,
வெட்டி வெட்டியிழுக்கப்படும்
நரம்புகள் மத்தியில்
அவள் ஒரு மின்னலை போல்
வந்து வந்து மறைகிறாள்...

இப்படியான கடந்த காலங்களில்
வெறுமையின் உச்சக்கட்டத்தில்
எதையோ எதிர்பார்த்து
ஓர் அணைப்பு தேவைப்படும் நேரத்தில் தான்
அவள் என் அருகே வருவாள்...

பதமாய் அணைத்து,
இதமாய் இறுக்கம் தந்து,
நடுங்கும் கைகளை பற்றிக்கொள்வாள்...

தலைக்கு தோள்கொடுத்து,
விரல்களை கூந்தல்களுக்குள்
நுழைந்திடச் செய்வாள்...

முதுகோடு பாரமாயிருக்கும்
அவள் உடல் சூடு சுகம்.
கழுத்திலும் நெற்றியிலுமாய்
விழும் உதட்டு ஒத்தடங்கள் சுகமோ சுகம்...

இன்று,
தலையணை அசைவற்று
முதுகில் உறங்குகிறது...

இரு கைகளையும் கால்களையும்
அதற்கு முளைத்திட செய்யுங்கள்..
அணைப்பில் பதுங்க
நான் தயாராய் இருக்கிறேன்..

Saturday, 8 March 2014

என் செல்ல அம்முகுட்டிக்கு (மகளிர் தின ஸ்பெசல்)



என் செல்ல அம்முகுட்டிக்கு,

அம்மா உன்கிட்ட கொஞ்சம் பேசணும்.

வா வா வா, வந்து அம்மா என்ன சொல்லப்போறேன்னு கேளு.

முதல்ல நான் உனக்கு அம்மாவ பத்தி கொஞ்சம் சொல்லப் போறேன். சமத்தா கேட்டுக்க. புரியலனா பரவால, புரியுற நேரம் வர்றப்ப புரிஞ்சிடும்.

நான் குட்டி பாதம் தரைல வச்சு, தமிழ் பேசி பழகுறப்பவே என்னோட அம்மாகிட்ட, அதான் உன் பாட்டிக்கிட்ட என்ன சொல்லுவேன் தெரியுமா? எனக்கு வீரமா ஒரு பொம்பள புள்ளைய பெத்துக்கணும்ன்னு...

ஹஹா... இப்போ நினச்சாலும் உதட்டுல புன்னகை வருது.

இதுவே வேற அம்மாக்களா இருந்தா, இந்த வயசுல உனக்கு இந்த எண்ணம் தேவையான்னு போட்டு சாத்து சாத்துன்னு சாத்தியிருப்பாங்க. ஆனா உன் பாட்டி அப்படி இல்ல. அவங்க என்ன சொன்னாங்க தெரியுமா?

என்னை வாரி அணைச்சு, பெண்ங்குறவ சக்தி, கண்டிப்பா நீ நல்லா படிச்சு பெரியவளாகி, சம்பாதிக்க ஆரம்பிச்ச பிறகு, உன்னோட இஷ்டப்படி பெண் குழந்தை பெத்துக்கோன்னு சொன்னாங்க... அந்த நாள்ல இருந்து யாருக்கு பெண் குழந்தை பிறந்தாலும் என்னவோ எனக்கே பிறந்த மாதிரி அவ்வளவு சந்தோசமா கொண்டாடுவேன்...

ஒரு தடவை பக்கத்து வீட்ல ஒரு சின்னக் குழந்தை கீழ விழுந்து அடிபட்டுடுச்சு. அதோட அம்மா கொஞ்சமும் பதறாம அந்த குழந்தைய ஏண்டி விழுந்தன்னு கேட்டு அடிச்சுட்டு இருந்தாங்க. ஏற்கனவே அடிபட்ட வலி, இப்போ அம்மாவோட நடத்தை எல்லாம் பாத்து அந்த குழந்தை இன்னும் மருண்டு அழ ஆரம்பிச்சது. அப்போ அந்த குழந்தையோட பாட்டி பதறி வந்து குழந்தைய தூக்கிகிட்டு, வலிச்சு பெத்திருந்தா தானே புள்ளையோட அருமை தெரியும்னு ஒரு வார்த்த சொன்னாங்க... அப்போ எனக்கு அர்த்தம் புரியல, அப்புறமா தான் தெரிஞ்சுது அந்த குழந்தை சிசேரியன் மூலமா பிறந்ததுன்னு. அந்த பாட்டி சொன்னது தப்பான வார்த்த தான்.. ஆனா, அது எனக்குள்ள ஒரு வைராக்கியத்த குடுத்திருக்கு. ஆமா, உன்னை வலிக்க வலிக்க நான் பெத்தெடுக்கணும்...

நெஞ்சுல நான் சுமக்குற செல்லமே....

பெண் - ஆளப் பிறந்தவள்.

ஆமா, அவ நினச்சா கண்டிப்பா இந்த தரணிய ஆளலாம். அவ நினச்சா இந்த பூமியோட மொத்த நேசத்தையும் வெளிப்படுத்தலாம்...

அதுக்கு ஒரு அம்மாவா நான் உனக்கு சில விஷயங்கள் சொல்லணும்டா...

செல்லமே, நீ ஒரு பொண்ணு. அதுக்காக கர்வப்படு. அதுக்காக அத வார்த்தைகள்ல காட்டாதே, நல்ல செயல்கள்ல காட்டு

எந்த சூழ்நிலையிலும் பெண்ணாக பிறந்தேனேன்னு சுயபட்சாதாபம் கூடவே கூடாது. அது தற்கொலைய விட கொடுமையானது அம்மு.

எந்த உயிரா இருந்தாலும் அதுகிட்ட அன்பா இருந்து பாரு. இந்த உலகம் எவ்வளவு அழகானதுன்னு உனக்கு தெரியும்

எப்பவுமே தோல்விகள கண்டு துவண்டு போய்டாத. எத்தன தோல்வி வந்தாலும் அத பாடமா எடுத்து, புன்னகையோட அத தாண்டி போ

உன்னோட வாழ்க்கைல குறுக்கிடுற துரோகிகள இனம் கண்டுக்க பழகு. உன்னால முடிஞ்ச அளவு விலகி போ. முடியல்லயா, தொல்லைகள் தொடர்ந்தா எதிர்த்து நில்லு...

தப்பு நடந்தா தட்டிக் கேளு. இடம் பொருள் முக்கியம். உன்னோட விவாதங்களையோ செயல்களையோ நிதானமா எடுத்து வை.. பதறாத... ஆத்திரப்படாத...

யார் கிட்டயும் கையேந்துற மாதிரி நிற்காதே, அது நானாகவே இருந்தாலும் கூட.. ஏன்னா, யாரா இருந்தாலும் சுயமா சம்பாதிக்க வேண்டியது அவசியம். புஜ்ஜிமா, நேர்மையான வழிகள்ல சம்பாதிக்க ஆயிரம் வழி இருக்குடா...

யாரையும் சார்ந்து இருக்கணும்ன்னு நினைக்கவே நினைக்காத... உன்னோட தனித்தன்மை, உன்னோட ஆளுமை கண்டிப்பா முக்கியம்

அடுத்தவங்க பொருளுக்கு எப்பவுமே ஆச படக்கூடாது கண்ணம்மா, அதே மாதிரி அடுத்தவங்கள பாத்து பொறாமப்படவும் கூடாது. நம்மால முடிஞ்ச அளவு அவங்க வளர்ச்சிய கண்டு கைத்தட்டணும். ஊக்கப்படுத்தணும்.

இந்த உலகத்துல நீ அடியெடுத்து வச்ச உடனே நீ நேசிக்க ஆரம்பிக்க ஒன்று இந்த உலகத்தில் படைக்கப்பட்டுருக்கு. அது தான் இயற்கை. நேசித்து பழகுடா. அப்புறம் நேசித்தல்ங்குறது உன்னோட ரத்தத்துலயே ஊறிடும்.

நீ உடுக்குற ஆடைகள் உன்னோட சவுகரியங்களுக்காக தான் இருக்கணும். ஆடம்பரங்கள முடிஞ்ச அளவு தவிர்த்துடு.

ஒரு பெண்ணோட வாழ்க்கைல கல்யாணம் முக்கியம்ங்குற வார்த்தைகள புறம் தள்ளு... ஊருக்காகவும், உறவுக்காகவும் பண்ற கல்யாணத்துல எனக்கு கொஞ்சம் கூட நம்பிக்கையில்ல. எப்போ உன் மனசுக்கு பிடிச்ச பையன நீ பாக்குறியோ, எதிர்பார்ப்புகளே இல்லாம அவன்கிட்ட அன்பாயிரு. கல்யாணத்து மேல நம்பிக்கை வந்தா அம்மா கிட்ட ஒரு வார்த்த சொல்லு, உன்ன கட்டிபுடிச்சி, உச்சி மோர்ந்து, மனசார ஆசீர்வதிக்கிறேன்.

பொய் சொல்லாதடா... அதுக்காக பொய்யே சொல்லாதேன்னு அர்த்தமில்லை. அவசியமான நேரங்கள்ல அடுத்தவங்களுக்கு பாதிப்புன்னு தெரியுற பட்சத்துல உண்மைய மறைக்குறது தப்பில்ல.

நீ ஒரு சொட்டு கண்ணீர் சிந்தினாலும் சிந்துர கண்ணீர ஆழ்மனசில இருந்து சிந்து. அடுத்தவங்க கஷ்டம் கண்டா, அவங்களுக்காக பிரார்த்தனை பண்ண மறக்காத.

வலி தாங்க பழகு. வாழ்க்கைல நீ அனுபவிக்குற வலிகள் எப்பவுமே உன்னை மேலும் மேலும் உறுதியா தான் மாத்தணும். எப்பவும், எந்த சூழ்நிலைலயும் சோர்ந்து போகாத.

எனக்கு மட்டும் ஏன் இப்படிங்குற கேள்விகள்ல எனக்கு நம்பிக்கையே இருந்ததில்ல, அது அவசியமேயில்லாதது. சூழ்நிலைகள் எப்பவுமே உன்னை பாதிக்காம பார்த்துக்கோ

அம்மு குட்டி, இந்த விசயங்கள என் அம்மா எனக்கு சொல்லிக் கொடுத்தாங்க. நான் உனக்கு சொல்லிக் கொடுக்கிறேன். எப்பவும் மறக்காதே, ஒரு பொண்ணு நினைச்சா எதை வேணும்னாலும் சாதிக்கலாம். யாரை வேணும்னாலும் அடக்கியாளலாம். ஆனா இது எதுவுமே அதிகாரத்தினால இருக்க கூடாது, சூழ்ச்சியால இருக்க கூடாது. அன்பால் மட்டுமே சாதிக்கணும்.

இத எல்லாம் நான் உனக்கு சொல்றேன்னா, முதல்ல அதுக்கு என்னை தகுதியாக்கிகிட்டே தான் சொல்றேன்... அதே ஆணவமில்லா கர்வத்தோட சொல்றேன்.... நான் நானா இருக்கேன்.... நீ நீயா இரு....

உனக்காக காத்துக்கிட்டு இருக்கேண்டா...

சீக்கிரம் வந்துரு, சரியா.... 

Sunday, 23 February 2014

சக்தியும் கார்த்திக்கும்


சக்தி- இந்த பெயர நினச்ச உடனே எனக்கு சந்தோசம் துக்கம்ன்னு மாறி மாறி தொண்டை அடைக்குது.

அவன் இப்போ இல்லன்னு ஆன உடனே எல்லாருமே எனக்கு ஆறுதல் சொல்ல ரொம்பவே கஷ்டப்பட்டுட்டாங்க...

அதுல சிலர், சக்திக்கும் அவங்களுக்கும் உள்ள தொடர்ப எல்லாம் நினைவு படுத்தி அவங்கள அவங்களே தேத்திகிட்டு என்னையும் ஆறுதல் படுத்தினாங்க.
............................................................................

இதுல முக்கியமா கார்த்திக் என்கிட்ட என்ன சொன்னார்ன்னு பாப்போமா?
.............................................................
காயத்ரியோட குணநலன்களைப் பற்றிய பரிச்சயம் உடையவனாகவும்.. அவரின் அக்கறைக்குரியவனாகவும் இருப்பதின் காரணத்தாலே...

இந்த நாளோட வருத்தத்தை உங்கள் எல்லாரையும் போல வெளிக்காட்டிக்கொள்ள வாய்ப்பில்லாதவனாய் மௌனப்பட்டுக் கொண்டேன்.

வீட்டு வாசல்ல ஒரு அணில் இறந்துடுச்சு மக்கான்னு காயு சொன்ன போதும் வருத்தப்படாதேன்னு ஓரிருவார்த்தையில் சமாதானப்படுத்திவிட்டேன்.

மறுநாள் ஒரு குட்டி அணில் தன் தாய் செய்து வைத்த கூட்டிலிருந்து தவறி விழுந்துட்டு மக்கா... என்கூடவே இருக்குன்னு ஆனந்தப்பட்டு அதற்கு பெயர் வைக்கக் கேட்டாள்...

ஆணா பெண்ணா என்று தெரியாத அணிலுக்கு சக்தி எனப் பொதுப்பெயரிட்டேன். உண்மையாகச் சொல்வதெனில் காயுவுக்கு முழுக்க முழுக்க சக்தி ஒரு சக்தி டானிக்.

அவனோடான செல்லச்சீண்டல்கள், கீச்சுக்குரலொலின்னு தனக்காக ஒரு உலகத்தையே வடுவமைச்சுகிட்டாங்க...

அப்போதே ஒரு பயம் இருந்தது.. தன் சுயத்தின் பெயரால் அவன் மரங்களையும் வேர்பட்டைகளையும் தேடி இடம்பெயர்ந்துவிட்டால் எப்படித் தாங்கிக்கொள்வாள்... தாயில்லாப் பிள்ளைகளைச் சமாதானப் படுத்துவது அத்தனைச் சுலபமில்லை.

அதிலும் அன்பின் முழுமொத்த உருவமாகி நிற்குமிவளை எப்படிச் சமாதானப்படுத்தவோ! அதனாலேயே எனக்கான ப்ரியத்தை வெளிக்காட்டாமல் அவளது செல்ல சக்தியை... சமைத்து தின்பேன் பாரெனச் சீண்டிவைப்பேன்.

என் பிள்ளை இவனடா! என்றோடுவாள்.

நல்லவேலையாக காலம் சக்திக்கு ஒரு வலிகளற்ற மரணத்தை காயத்ரியினது கரங்களிலே தந்துவிட்டிருக்கிறதென்று சமாதானம் கொள்கிறேன்.

ஒரு வேளை அவன் தொலைந்து போயிருந்தால்.. முடிவுகளற்ற காரணங்களாலேயே பாவம் களைத்துப் போயிருப்பாள்.

உன் அப்பாவை நினைத்து எனக்கு பொறாமையுணர்ச்சி எழுகிறது பெண்ணே!

தக்கலைக்குப் போய்க் கொண்டிருந்த மனிதருக்கு தகவல் சொன்னதும் மருத்துவரை அழைத்துக் கொண்டு வந்து பரிசோதிக்கச் செய்தாராமே...

போகட்டும் அணிலென்று விடும் அப்பாவின் மகளாக நீ பிறந்திருக்கவில்லை என்பதே ,நீ உயிர்களிடத்து கொண்ட பிரியத்தின் காரனத்தை புரிதலாக்குகின்றது.

சக்தி! அவன் பெயரில் பெரும் அன்பும் பாசமும் எனக்குண்டு... stuart little - பார்த்துக்கொண்டிருந்தவன் நம் சக்திக்கும் இப்படி உடை நெய்யக் கேட்டேன் நினைவிருக்கிறதா உனக்கு...

நாம் கேட்டால் செய்யமாட்டான் நீயே கேளென்று கிரிதரனிடத்தில் ஸ்டூவர்ட் லிட்டில் போல் சக்தி லிட்டில் என அட்டைப் படம் வடிவமைக்க அறிவுறுத்தினதெல்லாம் அவன் மேலுள்ள அன்பின் பெயராலென கொள்வாய்.

போ பைத்தியமே! உன்னை சமாதானமே செய்ய முடியாதென்பது எனக்குத் தெரியும்.. ஆயினும் வேடிக்கையாய் உனக்கு ஆறுதல் கூறிக்கொண்டிருந்தேன். நீயும் அமைதிப்பட்டு திடமானவளாய் நடித்துக்கொண்டிருந்திருக்கிறாய்.

கைகள் நடுங்கியதாய் எழுதி கரைந்தழுகிறாய்.. கண்கள் இருளடைந்து கட்டாந்தரையில் நினைவுதப்பி மயங்கி விழுந்த பேதையே உனக்கான ஆறுதல் நிச்சயமாய் என்னிடமில்லை ஆகையால் அழுது தீர்த்துவிடு.

என்ன பெண்ணிவள் இப்படி இருக்கிறாள்  என விமர்சிப்பவர்கள் விமர்சித்துவிட்டுப் போங்கள். அதுபற்றி கவலையில்லை.. இங்கே சக்திக்கு மட்டும் தான் புரியும் காயத்ரி என்று ஒரே ஒருத்திதான் உலகில் இருக்கிறாள் என்பது..

எனக்கொரு சின்ன திருத்தமும் உண்டு.. அதாவது...
இயற்கையோடு வாழும் உயிர்கள் நம்மோடு வாழும் போது பூரணவாழ்வைப் பெறமுடியாது அல்லது.. அதன் தன்மையிலிருந்து விலகிய வாழ்க்கையில் அதன் சுயம் இழக்கப்பட்டுவிடுமென்று..

இந்த விஞ்ஞான அஞ்ஞான விளக்கங்களில் எல்லாம் நம்பிக்கை கொள்ளாதே காயத்ரி.. உனக்கு தெரியும்ல சக்திக்கும் உனக்குமான உறவு.. இந்த விஞ்ஞானம் பச்சைப் புல்லில் இருக்கும் மாங்கனீசு பசுவின் உடலில் பாலாகி எப்படி கால்சியம் வருகிறது என்னும் கேள்விக்கு மாட்டை அறுக்கச்சொல்லும்..

அதற்கு உணர்வுகள் பற்றிய எந்த தெளிவும் இருக்கப் போவதில்லை... தெரியப் போவதுமில்லை. 
சக்தி சம்பாதித்து வைத்த மனிதர்கள் மீதெல்லாம் எனக்கு ஆச்சர்யங்களூக்கு அப்பாற்பட்ட கருணை மேலெழுகிறது. புகைப்படத்திலேயும், எழுத்துக்களின் சிலாகிப்பிலேயும் கண்டுணர்ந்த ஒரு உயிரிடத்தினில் நீங்கள் செய்த அன்பு... வார்த்தைகளின் விவரனைக்குள் அடங்காதது.

கவலையே கொள்ளாதேயுங்கள் சக்தியினை புதைத்த மண்ணீலே தென்னங்கன்று ஒன்று நட்டு வைத்திருக்கிறோம்.. நாளையே அது வானுயர வளர்ந்து கெழுந்ததும் அதன் மீதிலேறி விளையாடும் அணில்களெல்லாம் அவன் சாயலில் நீடூழி வாழ்கும்...

சியர்ஸ்... காயு...
...........................................................................

சக்தி, உனக்காக இங்க பிரார்த்தனை பண்ண நிறைய பேர் இருக்காங்கடா... நீ எங்கள விட்டுட்டு போயிருக்க வேணாம் செல்லம்...


Monday, 17 February 2014

தேவதை பிறந்தாள்





காத்திருப்புகள் யுகமாய் கரைய
சந்தோஷ திகிலொன்று லப்டப்படிக்க
சிறகில்லாமல் கால்கள் பறக்க
காக்க வைத்த தேவதையொருத்தி
இதோ பூமிதனில் ஜனித்துவிட்டாள்

உற்சாகம் துள்ளி குதிக்க
மனதெங்கும் சாரலடிக்க
மாமனின் ஆசியோடு
முதல் சுவாசம் உள்ளிழுத்துக் கொண்டாள்

கீதமிசைக்க குயில்கள் வந்துசேர
நடனமிட மயில்கள் தோகை விரிக்க
வருணனின் ஆசியோடு
தன் சங்கீதத்தை துவக்கி விட்டாள்

வானத்து விண்மீன்களே
வந்தெங்கள் தேவதையை பாருங்கள்
வனத்தின் மான்குட்டிகளே
அவளோடு விளையாட வாருங்கள்

சின்ன சின்ன பாதம் கொண்டு
எட்டி உதைக்கும் அழகினை பருகுங்கள்
ஆதரவாய் பற்றிப் படரும்
அந்த ஐவிரல்களில் இதழ்கள் பதியுங்கள்

புன்னகை என்றும் அவளின்
உதட்டோடு உறையட்டும்
சந்தோசம் என்றும் அவளின்
மனதோடு நிலைக்கட்டும்

இவள் இனி
பரபர உலகந்தனில் அழகியலை ரசிக்கட்டும்
சுயம் சார்ந்து தலைநிர்ந்து நிற்கட்டும்
வேண்டும் கலைகள் கற்று
மனம் நிறைந்து வாழட்டும்

வாருங்கள் வாருங்கள்
மலர்ச்சியோடு உற்சாகம் ததும்ப
வாழையடி வாழையாக
இவள் குலம் தழைக்க
வாழ்த்துவோம் வாருங்கள்...

.

Monday, 30 December 2013

இது என் அம்மா...



என்னடா இவ, மாம்பழத்தோட படம் போட்டுருக்காளேன்னு சாதாரணமா நினைச்சுடாதீங்க. காரணம், இது என் அம்மா...

ஆமா, அம்மாவே தான். என்னை பத்து மாசம் சுமந்து பெத்த அம்மாவே தான். அதெப்படின்னு கேக்குறீங்களா?

இந்த பழம் பழுத்து வந்தது ஒரு சாதாரண மரத்துல இருந்து இல்ல. என் அம்மாவோட சரீரம், இந்த பூமி சுழற்சியினால பதபடுத்தப் பட்டு, அவளோட ஒவ்வொரு அணுவும் உரமா, உயிரா வேர் வழி பரவி, அழகா கிளையா, இலையா, இளந்தளிரா மாறி, பருவத்தோட பூவாகி, பிஞ்சாகி, காயாகி, இப்போ கனியாகி இருக்கா...

அம்மா பத்தி இன்னும் சந்தேகம் இருந்தா இத பாத்து தெரிஞ்சுக்கோங்க...

அப்புறம், இன்னொரு விஷயம் என்னன்னா, இது மாம்பழ சீசனே இல்ல. ஆனாலும் இந்த நேரம் காய்த்ததால மழைல கொஞ்சம் மாட்டிகிட்டு. அதனால அணில்கள், மற்ற மர விலங்குகள், பறவைங்கன்னு எல்லாரும் சாப்பிட்டு போக மொத்தமே அஞ்சு பழம் தான் கிடைச்சதா சித்தப்பா கொண்டு வந்து தந்துட்டு போனாங்க...

இங்க உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லணும், அன்னிக்கி முழுக்க (29/12/13) மனசு கொஞ்சம் அலைபாஞ்சுட்டே இருந்துச்சு. ராத்திரி முழுக்க தூக்கம் இல்லாம, எதையோ நினச்சு குழம்பிட்டு, எதுவுமே தப்பாகிட கூடாதுன்னு பிரார்த்தனை பண்ணிகிட்டே இருந்துச்சு. சாயங்காலம், எங்க தென்னந்தோப்புல தாவி தாவி விளையாடிட்டு, அதுகளோட வாழ்வாதாரத்த சந்தோசமா வச்சிக்கிட்டு இருந்த அணில்ல ஒண்ணு வீட்டுக்குள்ளயே வந்து என் கண்முன்னாடியே துடிதுடிச்சி உயிர விட்டுடுச்சு. எல்லாமா சேர்ந்து என்னை மொத்தமா சோர்வடைய செய்தப்போ தான் சித்தப்பா அம்மாவ கொண்டு வந்து என்கிட்ட சேர்த்தாங்க.

இத விட வேற என்ன நிரூபணம் வேணும்க, அம்மா என் கூடவே தான் இருக்கான்னு சொல்றதுக்கு. நேத்து கார்த்திக் இன்னொரு விஷயம் சொன்னார், உன் அம்மா அவங்க ஆயுள உனக்கு குடுத்துருக்காங்கன்னு. அது எத்தனை உண்மையான வார்த்தைன்னு என்னை முழுசா அறிஞ்சவங்களுக்கு தெரியும்....

இப்போ நான் வாழுற இந்த ஒவ்வொரு நொடியும் என் அம்மாவோட ஆயுள் தான்...

அம்மாவுக்கு எப்பவுமே இயற்கை மேல தணியாத காதல். அத விட தணியாத காதல் அப்பா மேல இருந்துச்சு. என்கிட்ட ஒருத்தர் கேட்டாரு, அம்மா பத்தி மட்டுமே எழுதுறீங்களே, அப்பா பத்தி ஏன் எழுதலன்னு. எனக்கு எழுத தோணலங்குறது தான் நிஜம். காரணம், எப்போ எல்லாம் நான் காதல உணர்றேனோ, எப்போ எல்லாம் அமைதிய உணர்றேனோ, எப்போ எல்லாம் அஹிம்சைய உணர்றேனோ, அப்போ எல்லாம் நான் அவங்க ரெண்டு பேரையுமே உணர்றேன். இங்க, அம்மாங்குற வார்த்தைக்குள்ள ரெண்டுபேருமே அடங்கிடுறாங்க. அம்மா எனக்கு அவ ஆயுசை குடுத்தா, அப்பா, எனக்கு அவளோட அருகாமையை குடுக்குறார். இத தவிர எனக்கு வேற என்ன சொல்றதுன்னு தெரியல...


இந்தா, ஒரு மாம்பழம் மிச்சம் இருக்கு, இந்த அப்பாவ தின்ன விட்ற கூடாது... நான் போய் ஒரு தடை உத்தரவு போட்டுட்டு வர்றேன்....



.

Monday, 9 December 2013

உணராத பந்தம் இவள்...!




நீ இல்லாத என் நாட்கள் கிழித்தெறிந்த
நாள்காட்டியாய் கழிந்து கொண்டே இருக்கின்றன...
குளிரில் நடுங்கும் என் துவண்ட மேனியோ
இதுவரை உன் அணைப்பினை உணர்ந்ததே இல்லை...!

உன் முத்தங்களை பெற்றறியா முகத்திலோ
நாய்களின் எச்சில்கள்
ஏக்கம் தீர்த்துப் போகின்றன...!

திடீரென சூழ்ந்துக்கொள்ளும்
வெறுமைக்குள் புதைந்துக் கொண்டு
எதையோ தேடுவதைப்போல் தேடியிருக்கிறேன்...
நீ எப்படிப்பட்ட உணர்வளிப்பாய் என்றே தெரியாமல்...!

யோசித்து யோசித்து பார்க்கிறேன்,
எப்பொழுதெல்லாம் உன்னை நான்
உச்சரித்துப் பார்த்திருக்கிறேன் என்று...!

பசித்த வயிற்றோடு தெருத்தெருவாய்
சுற்றிய நாட்களில் கூட
“ஐயா காசு குடுங்க பசிக்குது” என்றே
கேட்டு பழகியிருக்கிறேன் நான்...!

சோறில்லையென விரட்டப்படும் போதும்
தெருவோர குப்பைத்தொட்டிகளில்
கண்கள் அலைபாய்ந்தே பழகி விட்டன...!

மாற்றுடுப்பு வேண்டுமென
மனம் தேடும் பொழுதெல்லாம்
மாடிவீட்டு கொடிகளை
அண்ணாந்து பார்த்து ஏங்கியிருக்கிறேன்...!

காய்ச்சல் வந்து வாய்க்குழறும் போதுகூட
வடிவில்லா ஒலியெழுப்பி
வெப்பத்தாக்குதலை எதிர்க்கொண்டு
பழகி விட்டேன் நான்...!

பருவம் எய்திய நாளில்
மிரட்சியோடு தேடியிருக்கிறேன்
அதுவும் உன்னை தான் என்றே அறியாமல்...!

வெறித்தப் பார்வை ஒன்றே
எப்பொழுதும் முந்தி நிற்கிறது
தாய் மடி முட்டும் கன்றுகளை பார்க்கும் பொழுதெல்லாம்...!

என் நிலையின் காரணகர்த்தா
விதியென நான் ஏற்றுக்கொள்வதுமில்லை...
நீதானென்று சபித்து விடவும் துணியவில்லை...!
என்னை ஜனனித்து நீ மரணித்துப் போனாயோ
இல்லை ஆகாது என வீசிவிட்டு சென்றாயோ?
தொலைத்துவிட்டு தினம் தேடி தேடி வேதனிக்கிறாயோ?

உனக்கென அடையாளமெதையும்
நீ எனக்காக விட்டுச்சென்றவளில்லை…
உன் குணம் பற்றிய எதிர்பார்ப்போ
நிலைப்பாடு பற்றிய பரிதவிப்போ
என்றுமே எனக்குள் சஞ்சலத்தை புகுத்தியதில்லை...!

நீ யாராய் இருந்தால் என்ன?
எனக்கு நீ அன்னியமானவள்...!

சூல் கொண்ட பெண்கள் கண்களுக்குள்
விழும்போதெல்லாம் வினோத ஜந்துவை
பார்ப்பது போல் வெறித்து விட்டு
பயணம் தொடர்கிறேன் நான்...!



-இது ஒரு மறுபதிவு 

Tuesday, 3 December 2013

மறு தாயிவள்...

இருள் பரவ துவங்கிய நேரம்...
ஒற்றை குரலொன்று
கேவலாய் அழைத்தது அம்மாவென...

இத்தனை நேரம் போராடிய மனம்
இதோ இலவம் பஞ்சாய் வெடிக்கிறது...

நீர் முட்டிய கண்கள் கண்ணீரை வழிய விடுகிறது...
அதில் மனதின் பாரங்கள் கரைய துவங்கின...

உன்னை காணாது நான் தவித்த தருணங்கள்
நரகம் காட்டி சென்றதடா கண்ணா...
எத்தனை துயரென்றாலும் உன்
உதடுகள் உதிர்க்கும் ஒற்றை வார்த்தையில்
என் சொர்க்கம் காண்பேனே...

நானுனக்கு தமைக்கை என்கின்றனர் பலர்,
நீ என் மணிவயிறு சுமக்கா குழந்தையென அறியாமல்...
வாடா என் கட்டித்தங்கமே,
அம்மாவென என்னை கட்டிக்கொள்
என் ஏழு ஜென்மம் உனக்காய் நீளும்...

என் பல்லாங்குழி ஆட்டத்துள்
குன்னிமுத்தாய் நுழைந்தவன் நீ...
என்னை இடறி விடும் வழுக்கு பாதையில்
கைபிடித்து கரை சேர்த்தவன் நீ..

பிரம்மன் எனக்கொரு வரமளித்தால்
உன் ஆயுள் நீட்டிக்க ஒரு அட்சய பாத்திரம் கேப்பேன்...
வாடா மலராய் நீ என்றும் சிரிக்க
கூடவே வாசனை சேர்ந்து பதிய கேட்பேன்...
எனக்குள்ளே உன்னையும் வைத்து
உன்னை அரணாய் காத்திட கேட்பேன்...

மழையில் நனைந்து வாடிய மலரே...
வா வந்து பசியாறு...
அன்னை நானொருத்தி காவலுக்கு உண்டென
கவலை மறந்து துயில் கொள்ளு....

வானம் வாழ்த்தி பொழிகிறது
நாளைய விடியல் அது நமக்கென தான்...

.

Thursday, 14 November 2013

பாலையாய் ஒரு வெற்றுக் கேவல்...


“கொலைப்பாதகர் கூட்டமது 
கள்வர்களின் உறைவிடமது...
மாண்டவன் மீள மாட்டான்...
நீ சென்றால் தாங்க மாட்டாய், திரும்பி வா அஞ்சுகமே..”

தொலைதூரம் போனவளொருத்தியின்
விட்டு விட்டொலித்த கேவல்
ஏக்கமாய் நெஞ்சை பிசைய,
குயிலொன்று இப்படி தான்
அதன் மொழியில் கூவிக்கொண்டிருந்தது...

கொலைக்களம் இதுவென அறிந்திடா மடந்தையல்ல...
பாதகர் கண்டு பதறியோடும் பரம்பரையில் பிறந்தவளுமில்லை...
தந்திரமாய் வஞ்சிக்கப்பட்டவனின் மாசுமருவில்லா மகிழம்பூ அவள்...

விதி தேடி வந்தாளோ?
வினை விதைக்க வந்தாளோ?
அங்கே கிழ நாயொன்று பலஹீனமாய்
ஊளையிட்டுக் கொண்டிருந்தது...
நரிகளின் நடமாட்டம் இருளினில் மின்ன,
கண்கள் விரித்து விளக்காக்கிக் கொண்டாள்...

“ஏன் சென்றாய்? விட்டகன்றாய்?
திரும்பிடவே கூடாதென வீம்பாய் ஒரு
பிடிவாதம் பிடித்தாற்போல் ஆயிரம் கேள்விகளை
விடைதெரியாமல் விட்டுச் சென்றாய்...
உன் கண்களில் நானதை படித்தறிய கண் விரிய காத்திரு”
இப்படி தான் அவள் மனம் அவனிடத்தில் யாசித்தது...

யாசித்தும் பயனில்லை,
நாளும் பொழுதும் பூஜித்தும் புண்ணியமில்லை...
விட்டு விட்டுப் போனவனின்
ஆழ்நிலை தூக்கமொன்றே அவளை ஆங்காரமாய் வரவேற்றது...

எரிமலையொன்றங்கே தீப்பிழம்பு கக்கியது...
வான் கிழித்து நட்சத்திரம் பாதாளம் பாய்ந்தது...
இதை காணத் தான் கண்களுக்கு மையிட்டுத் திரிந்தாளா?
வளையல்கள் சண்டையிட அவன் ரசிக்க நகைத்தாளா?
மணவாளன் மாய்ந்திடத் தான்
வெண்சங்கு கழுத்திலே மணமாலை ஏற்றாளா?

பற்றியிழுத்து சண்டையிட்ட மார்தனில்
இனி மயிர்கால்கள் சிலிர்க்கப் போவதுமில்லை...
பூப்போல் வாரி அணைத்திடும் கரங்களும்
இனி அவளுக்கு சொந்தமாய் இருக்கப்போவதுமில்லை...

இனி அவன் கழுத்து அவளுக்காய் சாய்வதுமில்லை
அவனின்றி இனியாரும் அவளுக்கு தேவையாய் இருப்பதற்கில்லை..

அவன் வளைத்த மெல்லிடை தீயாய் தகிக்க,
அவன் சுமந்த நெஞ்சமோ இரண்டாய் கிழிகிறது...
பீறிட்டு வரும் குருதி கண்டு
ஆக்ரோஷ மனம் அடங்கல் கொள்ளுமோ?
ஏதோ ஓர் பரமானந்தம் அந்தரத்தில் ஆர்ப்பரிக்கிறது..
மெல்லிய ஆடைகளின் பாரங்கள் கூடிப்போக
வாய்ப்பிளந்து உயிரிழக்க துணிகிறாளவள்..

அமைதியாய் உறைந்திருக்கிறான்...
அவள் கைகள் துவள தாங்காதிருக்கிறான்...
தட்டாமாலை சுற்றிடும் அவள்
தலைக்கு மேலே இன்னொரு உலகம் ஸ்ரிஸ்டித்து
அங்கிருந்து அவளை ஏந்தாதிருக்கிறான்...

அவள் உயிர் துடித்தடங்குவதை
அவன் கண்கள் காணப்போவதேயில்லையென
இமை சொருகி மண்ணோக்கி அவள்
வீழப் போகையில் வயிற்றைப் பிரட்டி
உள்ளிருந்து எட்டி உதைத்தாற்போல்,
அடிக்கள்ளி நான் இங்கிருக்கிறேனென்கிறான்...

பேதையினியென் செய்வாள்?
உயிரிழக்கவும் உரிமையில்லை...
துவண்டிட்ட கால்களினி உரம்பெற்றுமா? தெரியாது...
மாறாய், செலுத்தப்பட்டே தீர வேண்டும்...
உளிப்பட்டு பிளந்திட்ட பாறையின் உள்ளின்று
குதித்தோடிய தேரையாய்
புவிதனில் அவளுக்கும் ஓரிடம் நிச்சயமாச்சு...

கண்ணீரும் வறண்டுப் போக
அவன் வெற்றுடலை ஒரு உறைந்தப்பார்வை பார்க்கிறாள்...
மணிவயிரை தடவுகையில்
விரக்தியொன்று உதட்டில் உறைந்தது...
ஊமையாய் போன இவள் இனி,
ஊர் போய் சேர வேண்டும்...

கூவைகளின் கூப்பாடுகளுக்கிடையில் அவள்
திரும்பி நடக்கையில் அவளுமாய் இருக்கவுமில்லை..
அவளை தொலைத்துவிட்டு அவனை அணிந்துக் கொண்டே
கால்கள் பின்ன ஊர்ந்துக் கொண்டிருக்கிறாள்...

இனி அவன்... அவளின் வாழ்நாள் விசையாகிறான்...

Saturday, 26 October 2013

அம்மா மடி தேடி ஓடுறப்போ....



இன்னிக்கி அம்மாவோட நினைவு நாள். அவ எங்கள விட்டு போய் மூணு வருஷம் ஆகிடுச்சுன்னு இன்னும் நம்ப முடியல. நானெல்லாம் அம்மா கூட ஒட்டி ஒட்டி இருந்தது ரொம்ப குறைவு. ரொம்ப சந்தோசமா இருக்குறப்போ ஓடி வந்து அம்மா கழுத்த கட்டிக்கிட்டு கன்னத்துல ஒரு முத்தம் குடுத்துட்டு மறுபடியும் ஓடிடுவேன். ஆனா தம்பி அப்படி இல்ல, அவனுக்கு தூங்கணும்னா அம்மா மடி வேணும், ராத்திரி அடுத்த ரூமுக்கு போகணும்னா அம்மா கூட போகணும், அம்மா எங்க போனாலும் முந்தானைய புடிச்சுட்டே போவான். அவனோட பாதுகாப்புன்னு அவன் நினைக்குறது அம்மாவ தான். நானே இவ்வளவு கஷ்டப்படுறேனே, அவன் அப்போ எவ்வளவு பீல் பண்ணுவான். என்னால அம்மாவ நினச்சா உடனே உடைஞ்சு போய் அழ முடியுது, ஆனா அப்பாவும் தம்பியும் என்ன பண்ணுவாங்க?

அம்மா போனப்போ நான் அவ்வளவா அழல, திடீர்னு புடிச்சு கிணத்துல தள்ளி விட்டா ஒரு ஷாக் இருக்குமே, அப்படி இருந்துச்சு எனக்கு. அப்புறம், போக போக பழகிட்டேன்.

Tuesday, 22 October 2013

காதலின் கருவாய் நீ...!

கண்ணாடி முன் நான் நின்றாலும் கூட,
உன்பிம்பம் தானே காண்கின்றேன்...!
புலராத வேளை என் மஞ்சம் எங்கும்
உன்வாசம் தானே நுகர்கின்றேன்...!

Friday, 18 October 2013

நீ என் அம்மா தானா?

அம்மா,

நீ இப்போ எங்க இருக்கனு தெரியல

எப்படி இருக்கனும் தெரியல

நீ எனக்கு அம்மா தானானும் தெரியல

ஏன்னு கேக்குறியா?

Thursday, 10 October 2013

முதல் ஸ்பரிசம்...!


இது உனக்கும் எனக்குமான
முதல் ஸ்பரிசம்…!

உன்னை என்னிடத்தில்
கையளித்தவன் முகத்தை பாரேன்…
தான் ஆண்மகனென்று நிரூபித்த திமிர்…
ஒற்றை கண்ணடித்து
என்னை பரவசமாய் பார்க்கிறான்…!