Showing posts with label நூல் விமர்சனம். Show all posts
Showing posts with label நூல் விமர்சனம். Show all posts

Thursday, 1 August 2019

துர்கா மாதா - நோக்கும் போக்கும்

புது சிந்தனை புகட்டி புத்துணர்ச்சி புத்துணர்வு ஆகியவற்றை புகுத்தி மனிதன் மனிதனாக மலர்வதற்கு வழி வகுக்கும் மகோன்னத இலக்கிய வடிவம் புதினம். மேகம், கடல் நீரில் இருந்து உருவாகிறது. உயரே கிளம்பி வானத்தில் வட்டமிட்டு கடலிலும் மற்ற நில பரப்பிலும் மழை பொழிந்து பயன்படுகிறது. அவ்வாறே புதினம் கூட சமூகத்தில் இருந்து உருவாகி சமூகத்திற்கே பயன் அளிக்கிறது. மனித இயல்பும் மனித வாழ்வும் தன்னகத்தே கொண்டுள்ளதால் மனித மனங்களையும் சில சமயங்களில் இதயங்களையும் தொடுகிறது. எனவே புதினத்திற்கு வாசகர்கள் இடையே மிகுந்த வரவேற்பு.

கல்கி, சாண்டில்யன் போன்றோர் வரலாற்றை படம் பிடித்து காட்டினர். வரலாற்று போக்கை புரிந்து கொண்டு அதில் இருந்து நன்மை பெற வேண்டும் என்பதுதான் அவர்களின் நோக்கம் போலும். அகிலன், நா. பார்த்த சாரதி, ராஜவேலு போன்றோர் சுதந்திர போராட்டத்தை சித்தரித்து வாசகர்கள் மனங்களில் தேச பக்தி விதைத்தனர். அவ்வாறே சமூக சிந்தனை உள்ள பலரும் சமூகத்தில் அவ்வப்போது தலைத்தூக்கும் அவலங்களையும் மூட நம்பிக்கைகளையும் சீர்கேடுகளையும் சித்தரித்து சீர்திருத்ததிற்கு வழிவகுத்தனர்.

இத்தகைய சமூக பார்வை கொண்ட எழுத்தாளர்களில் சகோதரி ஜீவா சிறந்த இடத்தை பிடித்து துர்கா மாதா என்னும் புதினத்தை சிறப்புற படைத்திருக்கிறார். மனங்களை கவர்ந்து சிந்திக்கச் செய்யும் ஆற்றல் படைத்த சில புதினங்களில் துர்கா மாதாவுக்கும் சிறப்பிடம் இருக்கிறது என்பதில் மிகை இருக்க முடியாது. வாட்டி வதைக்கும் இக்கால பிரச்சனைகளை தன்னகத்தை கொண்டு தீர்வை நோக்கி புதினம் நடை போடுகிறது. பிரச்சனைகளை நன்கு புரிய வைத்து தீர்வுகளை திணிக்காமல் திறம்பட சிந்திக்க செய்ய இந்த புதினம் முயல்கிறது. எழுத்தாளர் சிந்தித்தவாறே வாசகரும் சிந்திப்பாரேயானால் எழுத்தாளர் எடுக்கும் செய்தியினை ஏற்பது மட்டுமன்றி கடைபிடிக்க இயல்பாயாயின் அதுதான் ஒரு படைப்பின் வெற்றி என்று அழுத்தம் திருத்தமாக அருதியிட்டு கூறலாம். இந்த வகையில் பார்க்கும்போது வெற்றி புதினம் என்றே துர்கா மாதாவை சொல்ல வேண்டி இருக்கிறது.

துர்கா மாதா புதினத்தை எழுதிய சகோதரி ஜீவா இலக்கிய துறையை சார்ந்தவர் அல்ல. முழுக்க முழுக்க விஞ்ஞான துறையை சார்ந்தவர். மாணவர்களுக்கு மைக்ரோபயாலஜி பயிற்றுவிப்பவர். அத்தகைய ஆசிரியரும் இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டு சிறப்புற செயல்பட்டிருப்பது சிந்தனைக்குரியது; பாராட்டிற்குரியது.

அண்மையில் பெண் எழுத்தாளர்கள் தங்களது நற்பார்வையை வீட்டோடு மட்டும் நிறுத்திக் கொள்ளாமல் வெளி உலகத்திற்கும் பரப்புகிறார்கள். சமூகத்தில் ஊறிக் கிடக்கும் அவலங்களையும்; அநீதிகளையும் கண்டு கொதித்தெழுகிறார்கள். மிகவும் பலம் பொருந்திய தங்கள் பேனா முனைகளை கொண்டு அவற்றை தகர்த்தெரிய ஓயாமல் போராடுகிறார்கள். அத்தகைய வீர பெண் எழுத்தாளர்களில் ஜீவாவும் ஜீவித்திருக்கிறார். இவருக்கு நமது மனம் கனிந்த பாராட்டுக்கள் உரித்தாகுக.

எழுத்தாளர் ஜீவாவும் அவரது நண்பரும் ஒரு சிற்றுண்டி சாலையில் வேலை செய்யும் பெண் மனியை பார்த்தனர். அவரை ஒரு புரட்சிகாரியாக உருவகப்படுத்திக் கொண்டனர். அவர்தான் துர்கா. அப்படி தொடங்கிய துர்காவின் பயணம் புதினம் முழுவதும் இடைவிடாமல் தொடர்கிறது. துர்காவின் செல்வாக்கு மற்ற பாத்திரங்கள் மீதும் பலமாக படர்ந்திருக்கிறது. பார்த்து, கவனித்து அனுசரிக்க வேண்டிய பாத்திரமாகவே துர்கா இந்த புதினத்தில் படைக்க பட்டிருக்கிறாள்.

துர்கா பாத்திரத்தை முதன்மையாக கொண்டு படைக்கப்பட்ட இப்புதினத்திற்கு துர்கா மாதா என்ற பெயர் மிகவும் பொருத்தமாக அமைந்துவிட்டது. புதினத்தின் இறுதி பகுதியில் துர்காவை துர்காமாதா என்றழைப்பதில் உள்ள ஞாயத்தை ஒரு பாத்திரத்தால் எடுத்தியம்பினார் ஆசிரியை.

துர்கா மாதா புதினத்தில் இடம் பெற்றிருக்கும் பிரச்சனைகள் முற்றிலும் இக்காலத்திற்கும் பொருந்துபவை. அன்றாடம் செய்தித் தாள்களிலும் டீவி நியூஸ் சேனல்களிலும் பெண்கள் மேல் நடத்தப்படும் பாலியல் கொடுமைகள் பளிச்சிடுகின்றன. அவற்றை அனைவரும் பார்க்கிறார்கள் கேட்கிறார்கள் ஆனால் உரிய முறையில் சிந்திப்பது கிடையாது. எனவே வாசகர்கள் சிந்தனை அவற்றின் பால் ஈர்ப்பதற்கு இந்த புதினம் முயல்கிறது.

வளர்ச்சி குன்றீய வட மாநிலங்களில் இருந்து தமிழ்நாடு போன்ற வளர்ச்சி பெற்ற மாநிலங்களுக்கு பஞ்சம் பிழைக்க பலர் புலம்பெயர்கிறார்கள். அங்கிருந்து இங்கு வரும் அவர்கள் மொழி பிரச்சனை உட்பட பல பிரச்சனைகளை சந்திக்க நேர்கிறது. சந்தேகத்திற்கு ஆளாகிறார்கள். எங்கு எத்தகைய கொடுமை நடந்தாலும் அது அவர்களுடைய செயலாகத்தான் இருக்க வேண்டும் என்று மக்கள் குருட்டுத்தனமாகவே முடிவு செய்கிறார்கள். விளைவாக பஞ்சம் பிழைக்க வந்தவர்களுக்கு நேரும் தொல்லைகளுக்கு எல்லையே இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. இந்த அவல நிலை எழுத்தாளரின் இதயத்தை பிழிந்திருக்க வேண்டும். அத்தகைய வருத்தத்தில் இருந்து உதித்ததுதான் இந்த புதினம்.

வசந்தாவின் இரவு நேர வேலை, அவளது குழந்தையின் பாலியல் வன்கொடுமையும் அதை தொடர்ந்த கொலையுமாய் புதினத்தில் திரையை விலக்குகிறது. இந்த நிகழ்ச்சி அதிகபடி என்றுதான் தோன்றுகிறது. இதை தவிர்த்திருந்தாலும் பாதகம் இல்லை. மகாலெச்சுமியின் ஆறு வயது குழந்தையை வன்புணர்ந்து கொலைசெய்வதில் இருந்துதான் உண்மை புதினம் ஆரம்பம் ஆகிறது.

போலிஸ் கெடுபுடி மக்களை சந்தேகத்தின் பேரில் கைது செய்து சிறையில் போடுவது, தேவைக்கு அதிகமாக தண்டனை கொடுப்பது, குற்றத்தை நிருபிக்க அங்கும் இங்கும் பறந்து படாத பாடுபடுவது மிக நன்றாக சித்தரிக்கப்பட்டுள்ளன.

லெட்சியத்தோடு வெளியே வந்த துர்கா அந்த லெட்சியத்திற்காகவே தன்னை ஒரு ஏழை தொழிலாளியாக மாற்றிக்கொள்வதும் அதனால் விளையும் கொடுமைகளை பொறுமையுடனே ஏற்றுக் கொள்வதும் போற்றற்குரியது.

நம் சமூகத்தின் அவலங்கள் அவை ஏற்படுவதற்கான காரணங்கள் போக்குவதற்கான முயற்சிகள் ஆகியவற்றை பற்றி நீண்ட விவாதங்கள் இடம் பெற்றிருக்கின்றன. அவையும் பல முறை இடம் பெற்றிருக்கின்றன. அவ்வாரில்லாமல் சுருக்கமாகவும் உருக்கமாகவும் இதயத்திற்கு நெருக்கமாகவும் சொல்லி இருக்க முடியும்.

சில நிகழ்ச்சிகள் ஒரு எழுத்து கூட பிசகாமல் இரண்டு மூன்று இடங்களில் இடம் பெற்றிருப்பது சாமான்ய வாசகர்களுக்கு குழப்பமாகவும் மற்றும் பல வாசகர்களுக்கு சலிப்பு தட்டும் வகையிலும் இருக்கலாம். எனவே அவற்றை பற்றி எழுத்தாளர் ஒருமுறைக்கிருமுறை சிந்தித்து பார்க்க வேண்டும் என்று மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். இவரது மொழி அருமை. குறைக் கூற எப்படி முயன்றாலும் முடியாதென்றே சொல்லலாம்.

இந்த புதினத்தை படித்த ஆண் வாசகர்கள் பெண்களை பாலியல் கொடுமைப்படுத்த கூடாதென்று உறுதி மேற்கொள்ள நினைக்க தோன்றுகிறது. இதுவே இந்த புதினத்தின் வெற்றி என்று சற்றும் சளைக்காமல் கூறலாம்.

சகோதரி ஜீவா அவர்கள் மேன்மேலும் இத்தகைய புதினங்களை படைக்கவேண்டும். அவற்றை அவரே ஒருமுறைக்கு இருமுறை ஒரு திறனாய்வாளராக படிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் புதினத்தின் தரம் வரவர உயர்ந்துவிடும்.

மறுபடியும் சகோதரி ஜீவாவுக்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் பாராட்டையும் வாழ்த்துகளையும் தெரிவிக்க விரும்புகிறேன்.


- முனிரெத்தினம் 
...........................
.

நாவலை பெற:


விலை: ரூ: 150 மற்றும் கூரியர்செலவு மட்டும்
தொடர்புக்கு: பொன்னுலகம் புத்தக நிலையம், திருப்பூர்.
அலைபேசி எண்கள்: 70104 84465, 88707 33434
வங்கி கணக்கு: PONNULAGM PUTHTHAGA NILAIYAM, Karur Vysya Bank, Thiruppur, P N Road Branch, A/C -No-1235115000041544, IFSC KVBL0001235

Wednesday, 31 July 2019

துர்கா மாதா - நாவல் விமர்சனம் (அப்ஸரன் ஃபெர்ணாண்டொ)



அன்புள்ள ஜீவா அக்காவுக்கு,

சென்னையிலிருந்து அப்ஸரன் ஃபெர்ணாண்டொ எழுதுகிறேன்.

எனது நண்பர் திருப்பதி மகேஷ் மூலமாகத்தான் உங்கள் ப்ளாக் [blog] அறிமுகம் கிடைத்தது. அவ்வப்போது உங்களின் பதிவுகளை வாசித்து வருகிறேன். உங்களின் புரட்சிகரமான சிந்தனையும் வித்தியாசமான அணுகுமுறைகளும் உங்கள் எழுத்துக்கு என்னை இரசிகனாக்கியது.

உங்களின் முதல்படைப்பான தற்கொலை கடிதம் என்ற சிறுகதைத் தொகுப்பை படித்திருக்கிறேன், அப்போதே உங்களுக்கு கடிதம் எழுதவேண்டும் என நினைத்தேன் ஆனால் இயலாமல் போனது. இப்போது நீங்கள் புதினம் [Novel] எழுதியிருக்கிறீர்கள் என்று நண்பர் மகேஷ் மூலம் கேள்விப் பட்டதும் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். உடனடியாக படிக்கவேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டு, நண்பரிடம் கேட்டுப் பெற்று, படித்தும் முடித்துவிட்டேன். இதைக் குறித்து திரு மகேஷிடம் கூறியபோது, நூல் குறித்த என்னுடய பார்வையை / கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளலாமே என்று யோசனை தெரிவித்தார். அவரது யோசனையும், இந்த நாவலை படித்த பிறகு அது ஏற்படுத்திய விளைவுகளுமே என்னை இக்கடிதம் எழுதத் தூண்டியது.

நூல் குறித்து பேசுவதற்கு முன் சில விஷயங்கள்:

முதலில் என்னைப் போன்ற பார்வையற்றவர்களும் படிக்கக் கூடியவகையில் இந்தப் படைப்பையும் [துர்கா மாதா] இதற்கு முந்தய படைப்பையும் [தற்கொலை கடிதம்] மின் புத்தகமாக [E-Book] அளித்தமைக்கு மிக்க நன்றிகள்.

இதனை தன் தொடர் வாசிப்பின் மூலமாகவும், உங்களைப் போன்ற சான்றோர்கள் நட்பின் மூலமாகவும் சாத்தியமாக்கிய மகேஷ் அவர்களுக்கும் நன்றிகள்.

விஷயத்திற்கு வந்துவிடுகிறேன்.

*************

துர்கா மாதா!

முதலில் இத்தகைய புதினத்தைப் படைத்ததற்கு என் நன்றிகள். ஏனெனில் உங்களைப் போன்ற புரட்சிகரமான எழுத்தாளர்களின் சீர்மிகு எழுத்துக்கள்தான் சமுதாயத்தைச் சீரமைக்கும் கருவியாக அமையும் என்பது என் கருத்து.

நூல் ஆரம்பத்திலிருந்தே [ஒரு சில வார்த்தைகள்] சுவாரஸ்யத்தையும் ஆர்வத்தையும் தூண்டுகிறது. கூடவே இழையோடும் வலிகளும் துயரங்களும் விரைவில் இதற்கெல்லாம் ஒரு தீர்வு வராதா! என்ற ஏக்கத்தையும் தோற்றுவிக்கிறது.

கதையின் ஆரம்பத்தில் வரும் சிறுமி மலர் குறித்த காட்சிகளிலேயே, மலரையொத்த பெண்களும் சிறுமிகளும் கறுக்கி / கசக்கி போடப்படும் அவலத்தை நம் கண்முன்னே நிறுத்தி, இக்கதை கையாளப் போகும் கருவை மெதுவாய் நமக்குள் விளக்கும் / விதைக்கும் வித்தை சிறப்பு.

முதலில் ஒரு கோணத்தில் தொடங்கி பயணித்து, பின்னர் அதை முக்கிய இடத்தில் நிறுத்திவிட்டு, மற்றொரு கோணத்திலிருந்து கதையை விளக்கி முடிச்சிக்களை அவிழ்த்திருக்கும் விதம் சுவையாக இருந்தது. இக்கதையின் நாயகியான துர்கா பெண்களின் திடமான ஆளுமைக்கு ஒரு மிகச் சிறந்த உதாரணம்.

இன்னும் சொல்ல வேண்டுமென்றால், தொட்டதற்கெல்லாம் கோபப்படும், அழுதுவிடும், இன்னும் இத்யாதி இத்யாதி இயல்புகளையெல்லாம் கொண்டிருக்கும் பெண்களிலிருந்து இவள் நிரம்பவே மாறுபட்டவள்.

தணக்கு ஆசுவாசம் தேவைப்பட்டதால் பாபுவைப் பற்றிச் சொல்லுவது, கழிவறைக்கு சென்றுவந்த பிறகு தன் வலியை உதட்டை அழுத்தி அடக்கிக் கொள்வது போன்ற இடங்களில் துர்காவின் தன்நம்பிக்கையும் மனதைரியமும் பயங்கரமாய் வெளிப்படுகிறது.

சீருடையை களைவதே தான் நிர்வாணமாக இருப்பதாக நினைக்குமளவிற்கு உணர்வுபூர்வமாய் தான் நேசித்த இயக்கத்தையே போதிய விளைவுகளை ஏற்படுத்தாத காரணத்தாலும் அதிலுள்ள குறைகளையும் பகிரங்கமாய்ச் சுட்டிக் காட்டிவிட்டு வெளியேறுவதும், தன் மேலாளரை நயமாய் கேன்டீனுக்கு அழைத்து தண்டிக்கும் இடத்திலும் துர்கா எந்த அளவிற்கு தான் தீர்க்கமானவள் என்றும் உடனடி விளைவுகளை விரும்புபவள் என்றும் புலப்படுத்துகிறாள். துர்கா மட்டுமின்றி, சுடரும் நிஷாவும் துணிச்சலான பெண்களுக்கு சிறந்த எடுத்துகாட்டாய் விளங்குகிறார்கள்.

_________

நண்பர் மகேஷ் இந்தக் கதையைப் பற்றி கூறும்போது இது கம்யூனிசமும் ஃபெமினிசமும் கலந்ததொரு கதையென்றார். அது எப்படி சாத்தியம்!!! என வியந்தேன் நான். ஆனால் அதை மிகச் சிறப்பாய் சாத்தியமாக்கியிருக்கிறது உங்கள் எழுத்தும் நீங்கள் எடுத்துக் கொண்ட கதைக்கருவும்.

கதையின் முதல் சில வரிகளிலேயே அந்த கால ஆணாதிக்கம் பெண்களை வீட்டிலேயே அடைத்துவைத்தது ஆனால் இந்தக் கால ஆணாதிக்கம் பெண்களை வேலைக்கு அனுப்பி சோம்பேறிகளாகவும் சுகபோகமாகவும் வாழ்ந்து கொன்டிருக்கிறது என்ற வித்தியாசத்தை சிறப்பாய் உணர்த்தியிருக்கிறீர்கள்.

கதாபாத்திர அமைப்பும் அவர்களின் குணாதிசயங்களும் நம் அன்றாட வாழ்க்கையின் ஏதாவதொரு தருணத்தில் சந்தித்த / சந்திப்பவர்கள் போன்றேயிருப்பதால் கதை மனதிற்கு இன்னும் நெருக்கமாகிவிடுகிறது. இடைஇடையே வரும் ஹிந்தி சொற்களும் வட இந்திய தமிழ் உச்சரிப்புகளும் அந்த மாந்தர்களூடே நம்மையும் உணர்வுபூர்வமாக உலவ விடுகிறது.

வட இந்தியர்கள் பெட்ஷீட் & பாத்திரங்கள் விற்க வந்தால்கூட ஒருவித பயத்தோடே அவர்களை பார்க்க வைத்த சில திரைபட காட்சிகளிலிருந்தும் பல செய்தித்தாள் செய்திகளிலிருந்தும் மாறுபட்டு, அவர்களுக்கு பின்னால் இருக்கும் வலிகளையும் வேதனைகளையும் சிந்திக்க வைக்கிறது இந்த நாவல்.

முதலாளித்துவ நெருக்கடி & ஆளும் வர்க்கங்களின் அதிகார வெறியாட்டம் போன்ற விஷயங்களைப் பட்டவர்த்தனமாய் பேசி, எத்தகைய கிடுக்குபிடிகளில் சிக்கிக் கொன்டு நம் சமூகம் முன்னேற முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது இந்நாவல். ஒரு முக்கியமான இடத்தில் [“இவ்ளோ சீரியசானப் பிரச்சினையை உங்க தமிழ்ச்சமூகம் எப்படி பார்க்குது தோழர்?” “தமிழன் உயர்ந்த பண்பாடும் நாகரீகமும் கொண்ட மூத்தக்குடி என்னும் பெருமிதத்தோடுதான்...” டாக்டர் கூச்சத்தோடு சிரித்தார்.] இரண்டே வரிகளில் கலாச்சாரம் பண்பாடு என்ற பொய் பிரச்சாரத்தின் கன்னத்தில் ஓங்கி அறைகிறது இந்த கதை.

அருப்புக் கோட்டை விவகாரம், பொள்ளாச்சி விவகாரம் போன்றவற்றை இக்கதை தொட்டுச் செல்வதாலும் அவற்றிற்கான தீர்வுகளை பேசுவதாலும் நாவலை வாசிக்கிறோம் என்பதைத் தாண்டி, எதார்த்த உலகில் நாம் சில முக்கிய நண்பர்களோடு இவற்றை விவாதித்துக் கொன்டிருக்கிறோம் என்று உணரவைப்பதில் இந்நாவல் வெற்றிப் பெற்றிருக்கிறது.

குட் டச் [Good touch] பேட் டச் [bad touch] போன்ற விஷயங்களை விரிவாகவும் விவேகத்துடனும் பேசுவதால் அனைத்துத் தரப்பினரும் நிச்சயம் படிக்கவேண்டிய நாவல் என்ற தரத்திற்கு உயர்ந்து, இவற்றைக் குறித்த வழக்கமான கற்பிதங்களையும் கருத்து பிம்பங்களையும் உடைத்து, வேறொரு புதிய கோணத்திலும், வித்தியாசமான, சரியான மற்றும் நியாயமான அணுகுமுறையைக் கற்பித்து பெரியவர்கள் பெரியவர்களாக இருந்தால் குழந்தைகளும் குழந்தைகளாகவே இருப்பார்கள் என்ற கருத்தை அழகாய் புரியவைப்பதில் இந்நாவல் தனித்து நிற்கிறது.

உரிமைகள், கடமைகள், வாழ்வியல் போன்ற இத்தியாதிகளில் ஆண்களிடமிருந்து தனித்து நிற்பதோ அல்லது ஆண்களை மிஞ்சி நிற்பதோ அல்ல பெண்ணியம், மாறாக அவர்களுக்குச் சமமாய் / நிகராய் நிற்பதே நிஜமான பெண்ணியம் என்றக் கருத்தைத் தரமாய்ப் புரியவைப்பதில் இந்நாவல் உயர்ந்து நிற்கிறது.

நாவலின் இறுதியில் துர்கா புல்லட்டில் கம்பீரமாக வரும் காட்சி வேட்டைக்கு புறப்பட்ட சாமி குதிரையேறி செல்வதை கண்முன்னே கொண்டுவருகிறது. கதை அதிகாலை நேரத்தில் ஒரு துயரக் காட்சியோடு தொடங்கி, ஒரு இரவு வேளையில் மகிழ்ச்சியோடும் துர்காவின் புன்னகையோடும் முடிவடைந்ததாக சித்தரித்திருந்த விதம் இந்நாவல் இருட்டில் மறைந்திருக்கிற / மறைக்கப்பட்டிருக்கிற துயரங்களையும் வேதனைகளையும் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்து, அவைகளுக்கான தீர்வையும், இவற்றிற்கு காரணமானவர்களுக்கே இருளை திருப்பித் தரவேண்டும் என்ற கருத்தை அழகாய் விளக்குகிறது.

இறுதியாகச் சொல்ல வேண்டுமென்றா்ல்,

துஷ்டர்களை துடைத்தெரிய துரிதமாய் புறப்பட்டால், இனி துன்பங்களைத் துடைக்காமல் துளியும் ஓயமாட்டாள் இந்த துர்கா மாதா.





- அப்ஸரன் ஃபெர்ணாண்டொ


நாவலை பெற: 

விலை: ரூ: 150 மற்றும் கூரியர்செலவு மட்டும்
தொடர்புக்கு: பொன்னுலகம் புத்தக நிலையம், திருப்பூர்.
அலைபேசி எண்கள்: 70104 84465, 88707 33434
வங்கி கணக்கு: PONNULAGM PUTHTHAGA NILAIYAM, Karur Vysya Bank, Thiruppur, P N Road Branch, A/C -No-1235115000041544, IFSC KVBL0001235

Tuesday, 18 June 2019

துர்காமாதா: எனது வாசிப்பு அனுபவங்கள் – அரவிந்த்

இது நாகர்கோவிலைச் சேர்ந்த உதவிப்பேராசிரியையாய் பணியாற்றும் ஜீவாவின் முதல் புதினமா? நம்ப முடியவில்லை (என்ன ஆழமான கருத்துச்செறிவுமிக்க விவாதங்கள்)!

இவரது “தற்கொலைக்கடிதம்” கதைத்தொகுப்பிலும், வலைப்பதிவுகளிலும் முகநூலிலும் சிரிப்பு நடையில் தனது சொந்த அனுபவங்களையும் சீரியசான நடையில் பெண்களின் துன்பங்களையும் இன்னபிற சமூகச்சிக்கல்களையும் தீர்வுகளோடு அலசுவதை நாம் படித்திருக்கிறோம்.

தோழர்களுடனான விவாதங்களுக்குப்பின் மேலும் எவ்வளவு ஆழமாக சமூகச்சிக்கல்களை புரிந்திருக்கிறார் என்பதற்கு இப்புதினமே சான்று.

வட இந்தியர்களை நம் பொழப்பிற்கு வேட்டு வைப்பவர்கள், நம் வேலைகளையெல்லாம் பறிப்பவர்கள், பாலியல் குற்றமிழைப்பவர்கள் என்ற பிரச்சாரங்கள் வைக்கப்படும் இந்த காலக்கட்டத்திற்கு மிகப்பொருத்தமான புத்தகம் இது.

வட இந்திய ஏழைகள் யார்? எந்தெந்த சூழ்நிலைகளில் வேலைக்கு இங்கே வருகிறார்கள்? அரசியலும் அதிகாரவர்க்கமும் கொண்ட முதலாளித்துவ சமூகம் அவர்களை எந்தெந்த இழிநிலைகளுக்கு தள்ளுகிறது? கணத்திற்கு கணம் பெருகிவரும் பாலியல் குற்றங்களை எப்படி தடுப்பது போன்ற பல கேள்விகளுக்கு விடையே இப்புத்தகம்.

"உத்திரப்பிரதேசம் குலாபி கேங்க்" இயக்கம் போன்ற ஜார்க்கன்டில் ஒரு போராளி இயக்கத்தில் உன்னத லட்சியத்தோடு போராடுபவள் குறும்பும் குதூகலமும் தைரியமும் நிறைந்த கதாநாயகி துர்கா. அதிகாரவர்க்கச்சுரண்டலை எதிர்த்து யாரைக்காக்க முனைகிறார்களோ அம்மக்களே இவர்களை நம்பாமல் ஏன் எங்கே போகிறார்கள் என்ற கேள்வியோடு ரியாசோடு தனக்கிருந்த காதலையும் தியாகம் செய்து தமிழகம் நோக்கி காண்ட்டிராக்டர்களோடு புறப்படுகிறாள் நாயகி.

இங்கு வந்தப்பிறகு அவள் சந்திக்கும் தொழிலாளர்கள், எதிர்ப்பார்ப்புகளோடு வந்தவர்களை மனசாட்சிக்கு புறம்பானவேலைகளை நோக்கி தள்ளப்படும் நிலைமைகள், பணமும் அதிகாரமும் அவர்களை பந்தாடும் விதங்கள், தோழர்களோடு விரிவாக விவாதித்து அவள் கண்டடையும் தீர்வுகள், இதற்கிடையில் அவளே ஒரு மாபெரும் அரசியல் சூதாட்டவழக்கில் சிக்கி என்ன ஆகிறாள் என்பதே கதைச்சுருக்கம்.

சமூகநீதியை வலியுறுத்தும் உயரிய போராளி இயக்கங்களையும் மீறி நுகர்வுவெறியை தூண்டிலாகக் கொண்டு முதலாளித்துவம் எப்படி மக்களை பணத்தை நோக்கி பைத்தியமாக ஓடவைத்து எந்த எல்லைக்கும் சென்று எப்பாவத்தையும் செய்யவைக்கிறது என்று தோழர்களால் மிகத்தீவிரமாக விவாதிக்கப்படும் பக்கங்கள் இன்றைய சமூகம் முழுமையும் படிக்கவேண்டிய பொக்கிஷங்கள்.

இரண்டு வயதுக் குழந்தைகளுக்கே தொடுகைகளின் வகைகளை (good touch, bad touch) கற்றுக்கொடுப்பதன் அறிவீனத்தை எடுத்துக்காட்டி இவ்வகை விஷயங்கள் எப்படி நம் பண்பாட்டிலேயே விளையாட்டுச் சீண்டல்களாக மனதில் பதிய வைக்கப்பட்டுகின்றது என்று நிஷா எடுத்துரைக்கும் காட்சி படைப்பின் உச்சம்.

துர்காவைக் காக்க ரியாஸ் உட்பட நண்பர்கள் செய்யும் தந்திரங்கள் பக்கங்களின் வேகத்தைப் பெருக்கி வாசகர்களை ஒரே மூச்சில் வாசித்து முடிக்க வைக்கிறது.

புதினம் மிக விரைவாக முடிந்துவிட்ட உணர்வால் அடுத்த புத்தகங்களில் எங்கள் எதிர்ப்பார்ப்புகளை இங்கே பதிவுசெய்கிறோம்.

1. பாலியல் குற்றங்கள் பெருகிவிட்ட புள்ளிவிவரங்களை வைக்கும் ஆசிரியரின் பிரதிபலிப்பாக தெரியும் சுடரொளியின் கூற்றுகள் "சமூக ஊடகங்களின் பெருக்கத்தாலேயே இயல்பாக இருப்பவை பெரிதுபடுத்தப்படுகின்றன" என்ற சிலரின் கூற்றுகளுக்கு பதிலளிப்பதாக அடுத்த படைப்பு இருக்கவேன்டும்.

2. பாலியல் குற்றங்களை செய்யும் ஆண்களை கன்டுகொள்ளாமல் பெண்களே மீண்டும் மீண்டும் குற்றம் சுமத்தப்படுகிறார்கள் என்று கூறும் நாம் இதே நுகர்வு கலாச்சாரத்திற்கு அடிமையாகி சுரன்டலின் பிரதிதிகளாய் செயல்படும் சில மேல்தட்டுவர்க்கப் பெண்களையும் எப்படி தூய சிந்தனையுள்ளவர்களாக மாற்றுவது என்பதையும் எடுத்துக்காட்டுவதாக உங்களின் அடுத்தடுத்த படைப்புகள் இருக்கவேண்டும்.

3. கல்வியை விளையாட்டோடும் உடற்பயிற்சியோடும் சுவாரசியமாக தரவேண்டும் என்று பள்ளிகளுக்கு சொல்லும் நாம், செயலிகளும் ரோபோக்களும் பயிற்றுவிக்கப்போகும் வரும் யுகத்தில் எப்படி இச்சிந்தனைகளை செயலாக்கப்போகிறோம் என்பதை பேசும் படைப்புகளை எதிர்ப்பார்க்கிறோம்.

4. தனிநபர் தரவுகளைக்கொண்டு தனிநபர் விருப்பங்களை வடிவமைக்கும் வல்லமையுள்ள இன்றைய முதலாளித்துவ கருவிகளை நம் உயர்ந்த பாலியல் குற்றமற்ற சீரியசிந்னைகள் கொன்ட மாந்தர்களை உருவாக்க எப்படி உபயோகிக்கப்போகிறோம் என்று எடுத்துக்காட்டும் உயரிய படைப்புகளை எதிர்ப்பார்கிறோம்.

இத்தகைய ஆழ்ந்த சின்தனைகளையும் எக்கச்செக்க எதிர்ப்பார்ப்புகளையும் தூண்டிய உங்கள் துர்காமாதாவிற்கு எங்கள் வாழ்த்துக்களும் வந்தனங்களும்.

நீங்கள் மென்மேலும் பற்பல படைப்புகளை உருவாக்கி சமூகத்தைச் செப்பனிட்டு வெற்றிபெற எங்கள் உளம்கனிந்த வாழ்த்துக்கள்.




நன்றியுடன் அரவிந்த் 
 
 
நாவலை பெற: 

விலை: ரூ: 150 மற்றும் கூரியர்செலவு மட்டும்
தொடர்புக்கு: பொன்னுலகம் புத்தக நிலையம், திருப்பூர்.
அலைபேசி எண்கள்: 70104 84465, 88707 33434
வங்கி கணக்கு: PONNULAGM PUTHTHAGA NILAIYAM, Karur Vysya Bank, Thiruppur, P N Road Branch, A/C -No-1235115000041544, IFSC KVBL0001235
 

Wednesday, 12 June 2019

ஜீவாவின் துர்கா மாதா - எனது பார்வையில்... கவிப்பூரணி

என்னோட நாவலோட word format மகேஷ்கிட்ட குடுத்து படிச்சிட்டு கருத்து சொல்லுமானு கேட்டுருந்தேன்.
அவன் அத அவன் நண்பர்களோட பகிர, இப்போ அவன் நட்பு கவி பூரணி அத படிச்சிட்டு ரிவியூ எழுதி அனுப்பி இருக்காங்க.
என் நாவலுக்கு வந்த முதல் ரிவியூ இது. படிச்சதும் அவ்ளோ சந்தோசம் எனக்கு. 

நல்ல உற்சாகமான வார்த்தைகளோடு துவங்குகிறது இந்நாள்....
...................


Novel என்ற ஆங்கிலச் சொல் ‘புதுமை’யைக் குறிப்பதாகும். அந்த சொல்லிற்கு ஏற்றார்போலவே தோழி ஜீவா அவர்களால் எழுதப்பட்ட ‘துர்கா மாதா’ எனும் இந்த நாவல் நான் இதுவரை படித்திருப்பதில் மிகவும் புதுமையான கதைக்களத்தையும் தற்கால நடைமுறையைக் குறித்த மிக வித்தியாசமான மற்றும் ஆழமான பார்வையையும் கொண்டு ஒரு புரட்சிகரமான படைப்பாக வெளிவந்திருக்கிறது.


எனக்கு தோழி ஜீவா அவர்களை அறிமுகம் செய்து அவர்களது வலைத்தளத்தில் வெளிவந்த‘பாலியல் கல்வி’ தொடரையும் படிக்கத் தூண்டியது தம்பி திருப்பதி மஹேஷ்தான். அந்த தொடர் குறித்தே எனது கருத்துக்களை எழுதி ஜீவா அவர்களுக்கு மின்னஞ்சலாவது அனுப்பிவிட வேண்டுமென மிகவும் ஆர்வத்தோடு இருந்தேன். சில காரணங்களால் அது நடைபெறாமலே போய்விட்டது. அவர்களது ‘தற்கொலைக் கடிதம்’ புத்தகம் கூட என்னிடம் இருக்கிறது. அதற்கும் கூட என்னுடைய கருத்துக்களைச் சொல்லிவிட எண்ணி இருந்தேன். இன்னும் படித்த பாடுதான் இல்லை. ஆனால், அதைவிடவும் ஒரு பெரிய ப்ராஜெக்ட்டில் அவர்களது எழுத்து குறித்ததான எனது பார்வையை முன்வைக்க நல்லதொரு வாய்ப்பு மீண்டும் தம்பி மஹேஷ் மூலமே கிடைத்திருக்கிறது. ‘துர்கா மாதா’ எனும் இந்த நாவலையும் அவரே என்னிடம் கொடுத்து நேரம் கிடைக்கையில் படிக்கும்படி சொல்லி இருந்தார்.

தன்னுடைய முதல் நாவலை இவ்வளவு குறுகிய காலத்தில் சிறப்பானதொரு படைப்பாக அமைப்பது என்பது எல்லோருக்கும் சாத்தியம் கிடையாது. ஆனால் தோழி ஜீவாவிற்கு அது மிக நன்றாகவே தன்னுடைய ஆர்வத்தோடும் பலரது துணையோடும் சாத்தியமாகி இருப்பதற்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

 முன்னுரையைப் படிக்கும் போதே படைப்பு பற்றிய ஆர்வமும் எதிர்பார்ப்பும் மாற்றங்களை எதிர்நோக்கும் ஒரு பெண்ணாக எனக்குள் எழுந்திருந்தது.
பொதுவாகவே நாவல்கள் என்றதும் ஒரு சாதாரணமான அல்லது ஒரு பாமர வாசகியாக நான் எப்போதூமே கதைக்கருவைவிட கதையைத்தான் அதிகம் எதிர்பார்ப்பது வழக்கம். படிக்கும் மகிழ்விற்காக மட்டும் படிப்பதுதான் எனது மனப்போக்கு. ஆனால் முதல் முறையாக இந்த நாவலின் முன்னுரையைப் படித்த போது கதைக்கருதான் இந்த நாவல் படிப்பதற்கே ஒரு பெரிய உந்துதலைக் கொடுத்தது என்பேன்.

முழு படைப்பையும் வாசித்தாகிவிட்டது. ஒரு த்ரில்லர் படம் போல சீட் நுனியில் உட்கார வைத்து மிக மிக அழுத்தமான பெண்ணியம் பேசி இருக்கிறார் எழுத்தாளர்.
பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் சமீப காலத்தில் மிக அதிகமான அளவில் தலை தூக்கி இருப்பதற்கான ஆணி வேர் காரணங்களாக பணபலம், முதலாளித்துவம், நுகர்வு கலாச்சாரம், அரசியல், சமூகப்போக்கு என்று பலதரப்பட்ட விசயங்களை மிகத் தெளிவாகவும் துல்லியமாகவும் நடைமுறையைப் படம் பிடித்துக் காட்டி இருக்கிறார். பெரும்பாலும் இறந்தகால படைப்புகளையே படித்து வந்த எனக்கு, இந்த நிகழ்காலப் படைப்பு படிப்பதற்கு ஸ்வாரஸ்யமாக மட்டுமல்லாமல் சிந்திக்கவும் தூண்டுகோலாய் அமைந்திருக்கிறது.

2 இடங்களை மிகவும் குறிப்பிட்டுப் பாராட்டியே ஆக வேண்டும் என்று எனக்குத் தோன்றிய விசயங்களை இங்கே பகிர விழைகிறேன்.
பாலியல் வன்முறைகளுக்கான காரணங்களை அலசி ஆராய்ந்து அதை விவரித்திருக்கும் இடம் மிகச் சிறப்பு. அதன்பின்னர், good touch bad touch பற்றி துர்கா முன்வைப்பதாக ஆசிரியர் முன்வைத்த இடம் சபாஷ். safe zone என்ற பெயரில் நமது சமு்தாய அமைப்புதான் காமம் குறித்தான தூண்டுதலைப் பிள்ளைகளிடம் உருவாக்குகிறது என்பதும் சுமை ஆகிவிட்ட கல்வி முறை பற்றியும் மறந்து போய்விட்ட விளையாட்டுலகம் பற்றியும் பெற்றோர்களாலும் ஆசிரியர்களாலும் புறக்கணிக்கப்படும் குழந்தைகள் உலகம் குறித்தும் மிகச் சிறப்பாக மனோதத்துவ முறையில் நடைமுறைக்கேற்ற பரந்துபட்ட பார்வையை வைத்திருக்கிறார் ஆசிரியர். குழந்தைகளைக் குழந்தைகளாகப் பார்க்காத ஒரு சமுதாய அமைப்பில் நிச்சயம் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை அந்த சமூகமேதான் திணித்து அதன் விளைவாக அவர்களைப் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக வழிவகுக்கிறது என்பதை சிறப்பாக அணுகி இருப்பதோடு பள்ளிக்கூடங்கள் குழந்தைகளைக் குழந்தைகளாக இருக்க அனுமதிக்கும் ஒரு இடமாக இருக்க வேண்டும் என்பதையும் மிகவும் ஆணித்தனமாகக் கூறி இருக்கிறார்.

இப்போது கதைக்கு வரலாம். புலம்பெயர்ந்து தமிழகம் வந்து பிழைப்புத் தேடும் தன் மாநிலத்தவர் படும் துன்பங்களை நேரடியாக தானே அனுபவித்துப் பார்த்து அவர்களது உணர்வுகளைப் புரிந்து அவர்களைப் பாதுகாக்க ஏதாவது ஒரு வழி செய்ய வேண்டும் என்ற தவிப்போடு வரும் ஒரு ஜார்கண்டியப் பழங்குடிப்பெண்ணான துர்கா சந்திக்கும் போராட்டமே இப்புதினத்தின் சுருக்கமான கதைக்களம். கதாநாயகி துர்காவை மிகவும் எளிமையான துணிச்சலான, குரும்புக்காரத்தனமான மற்றும் அன்பு வாய்ந்த இயல்பான பெண்ணாகப் படைத்திருப்பது சிறப்பு. அநேகம் பெண்கள் காணும் சுதந்திரக் கனவை துர்காவைப் பார்த்ததில் நிஜத்தில் கண்ட திருப்தி எனக்கு.

சு்டரொளி, நிஷா மற்றும் மருத்துவர் கதாப்பாத்திரங்களும் கதைக்கு பலமூட்டின. என்னவோ தெரியவில்லை, இதை வெறும் கதையாக மட்டும் என்னால் ஏதோ கடந்துவிட்டு போக முடியாது என்று தோன்றுகிறது. படித்துவிட்டு சுடச்சுட எழுதித் தீர்க்க வேண்டும் என்பதுபோல் ஏதோ தோன்றுகிறது. ஆனால் அவை கூட வார்த்தைகள் கொண்டு சொல்லுவது மிகக் கடினம்தான். உணர்வுப்பூர்வமாக எங்கேயோ மிகவும் ஆழமாகத் தொட்டுவிட்டீர்கள் ஜீவா.
பழமைவாதத்தை பெண்களால் வெறுக்க மட்டுமே முடிகிறதே தவிர, அதிலிருந்து எப்படி அவர்களுக்கான வாழ்வை அவர்களே தேர்ந்தெடுப்பது என்று புரியாமல் அந்த பழமைவாதத்திலேயே ஊறிப்போய்விடுகிறார்கள் என்று எதார்த்தத்தை சுதந்திர உணர்வை நேசிக்கும் பெண்களின் ப்ரதிநிதியாக எடுத்துரைத்திருக்கிறீர்கள். அருமை...

அதே போல் குடும்ப சூழ்நிலைகளால் எப்படி பாலியல் தொழிலில் பெண்கள் தள்ளப்படுகிறார்கள் என்பதை சஞ்சனா மற்றும் மகா பாத்திரங்களின் வாயிலாகப் பேசி இருக்கிறார். வட மாநிலத்தவர் நம் ஊரில் சந்திக்கும் ப்ரச்சனைகள் அல்லது நமது ஆட்கள் அவர்கள் குறித்து முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் போன்றவற்றை எல்லாக் கோணங்களிலும் இயல்பாக அலட்டலில்லாமல் சொல்லி இருக்கிறார். ஒரு பக்கம் பிழைப்பு தேடி வந்து அடிமைப்பட்டிருப்பவர்கள், மறுபக்கம் வடக்கிலிருந்து இங்கு வந்து அதிகாரம் செலுத்துபவர்கள் என்று வட மாநிலத்தவரின் இரு துருவங்களையும் கதை படம் பிடித்துக் காட்டுவது நேர்மை.

பெரும்பாலும் கதைகளில் வரும் காதல் கூட மிகவும் பழமைவாத சாயப்பூச்சான possessive - ஆகவே இருக்கும். ஆனால், துர்கா ரியாஸ் காதல் மிகவும் வெளிப்படையாகவும் சு்தந்திரமானதாகவும் இருந்தது குறித்து மகிழ்ச்சி. கதையில் ஒரு சமுதாயத்தின் இயக்கத்திலிருக்கும் ஏறக்குறைய எல்லா அம்சங்களும் இடம் பெற்றிருந்ததோடல்லாமல் அன்றாட வாழ்வில் நடக்கும் சிறு சிறு விசயங்கள் கூட அழகாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது.

மொத்தத்தில் ஒரு நல்ல படைப்பைப் படித்த மகிழ்ச்சி மட்டுமல்லாது ஒரு நல்ல ஆழமான பார்வையும் பொறுப்பும் கொண்ட துணிச்சலான, நேர்மையான பெண் எழுத்தாளரின் உணர்வை உணர்ந்த திருப்தி இந்த நாவலைப் படிக்கும் ஒத்த சிந்தனாவாதிகளுக்கு ஏற்படும் என்றுதான் சொல்ல வேண்டும். என் சிற்றறிவிற்கு எட்டிய வரையில் பாரதியார், ஜெயகாந்தன் வரிசையில் ஜீவாவின் துணிச்சல் பாராட்டிற்குரியது. இந்த நாவல் நிறைய பெண்கள் படிக்கும்படியாக சேர வேண்டும் என்பதும் தோழி ஜீவா மென்மேலும் பல படைப்புக்களைத் தமிழ் இலக்கிய உலகிற்குத் தர வேண்டும் என்பதும் அவரை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு துணிச்சல் மிக்க பெண் எழுத்தாளர்கள் மென்மேலும் சுதந்திரமா்க எழுத்துலகிற்கு வர வேண்டும் என்பதும் எனது ஆசை. hats of to you jeeva... வாழ்த்துக்கள்.

Thursday, 10 January 2019

கடலோடி கதைகள் (சிறுகதைத் தொகுப்பு) – ஒரு பார்வை



கடலோடி கதைகள் (சிறுகதைத் தொகுப்பு) – ஒரு பார்வை
.....................................................
ஆசிரியர் சப்திகா
............................



முதல்ல கடலோடி கதைகள் எழுதின சப்திகாவுக்கு என்னோட வாழ்த்துகள். எழுதுறதுக்கு ஆர்வம் இருக்குற பலபேர் அத எழுதி புத்தகமாக்குற முயற்சியில ஈடுபடுறது இல்ல. சப்திகா அந்த ஆர்வத்த புத்தகமாக்கி இருக்கிறார். அந்த முயற்சிக்கு என்னோட பாராட்டுகள். ஒரு கதையை பத்து பதினஞ்சு பக்கம் எழுதி சிறுகதைன்னு சொல்றவங்க மத்தியில அறுபத்தி ஆறு பக்கங்கள்ல பத்து கதைகள குடுத்து சிறுகதைகள தன்னால திறம்பட எழுத முடியும்னு நிரூபிச்சு இருக்குறாங்க சப்திகா.

அதுமட்டுமில்லாம காலம்காலமா மக்கள்கிட்ட வாய்வழி புழங்கிகிட்டு இருக்குற கதைகள மீனவ மக்களோட வட்டார பேச்சு வழக்குலயே ஆவணப்படுத்துற அற்புதமான முயற்சியில ஈடுப்பட்டுருக்கார். முக்கியமா “போக்காளி குடும்பம்”த்தை சொல்லலாம். பேய், பிசாசு பூதம் பத்தியான கதைகள் காலாகாலமா நம்மோடவே உலவிட்டு வர்ற கதைகள். இப்படி மக்கள்கிட்ட இருக்குற நாட்டுப்புற கதைகளை ஆவணப்படுத்துறதுங்குறது பாராட்டுக்குரியது.

இனி கதைகள எடுத்துகிட்டா அது கிருஸ்தவ மத நம்பிக்கை கொண்டதாவும் அத உயர்த்தி பிடிக்குறதாகவும் அது மேல எழுத்தாளர் கொண்ட அதீத பற்றாவும் வெளிப்படுது. இது எழுத்தாளர் கிருஸ்தவரா இருக்குறது ஒரு காரணம்னா, இன்னொரு காரணம் குமரி மாவட்டத்துல மத அரசியல் மக்கள்கிட்ட அதிகமா செல்வாக்கு செலுத்துறது இன்னொரு காரணம். ஏன்னா ஒரு மதத்தை சார்ந்த ஒருத்தர் அவர் மதத்தை மட்டுமே சார்ந்து எழுதணும்னா மதம் தாண்டிய கருத்துகள் எதுவுமே வர முடியாது. ஆனா மதம் தாண்டிய கருத்துக்கள் தான் சமூகத்துல நல்ல விசயங்கள கொண்டு வருது.

எழுத்தாளர் சப்திகாவ பொருத்தவரைக்கும் அவர்கிட்ட மதம் சார்ந்த கருத்துகள் இருக்குறது எத குறிக்குதுனா குமரி மாவட்டத்துல மதம் சார்ந்த விசயங்கள் பெரிய அளவுல தாக்கம் செலுத்துறத குறிக்குது. அதை தாண்டிய பார்வை இன்னும் சப்திகாவுக்கு வரல.

ஒரு எழுத்தாளரோட கடமை என்னனா தான் காதால கேட்டது, தான் உணர்ந்தது, இத எல்லாத்தையும் மட்டும் மக்களுக்கு சொல்றது இல்ல. இதனால மக்களுக்கு என்ன பயன் வருது அப்படிங்குறதயும் சேர்த்து தான் எழுதணும். அப்படி எழுதலனா இவங்க ஒரு விசயத்த அப்படியே இன்னொருத்தருக்கு கடத்துறவங்களா மட்டும் தான் இருக்க முடியும். இதுவே எழுத்தாளர்ன்னு வரும் போது வெறும் அழகியலை மட்டும் சொல்லாம மக்களுக்கு அத பயனுள்ளதா மாத்துறதாகவும் இருக்கணும்.

இன்றைய சூழல்ல இந்தியாவும் தமிழ்நாடும் என்ன பிரச்சனைய எதிர்க்கொண்டுட்டு இருக்குதுனா மத பயங்கர வாதத்த எதிர்கொள்ளுது, கார்பரேட் கம்பனிகளோட நெருக்கடிகள எதிர்கொள்ளுது, இத அடிப்படையா கொண்ட சக்திகள் மக்கள்கிட்ட பண்ணிட்டு இருக்குற மோதல்கள எதிர்கொள்ளுது, முக்கியமா ஜாதி பயங்கரமா செல்வாக்கு செலுத்திகிட்டு இருக்கு, ஜாதிய அடிப்படையா கொண்டு அன்றாடம் கொலைகள் நடந்துட்டு இருக்க கூடியதா இருக்கு, இப்போ இருக்குற சமூக சூழல்கள், வேலை நெருக்கடிகள்னால குடும்பங்கள் சிதையுற போக்கு அதிகரிச்சுட்டு இருக்கு.

இந்த விசயங்கள மக்கள்கிட்ட கொண்டுப்போய் சேர்க்கணும், இந்த மாதிரியான சூழல்கள மக்கள் புரிஞ்சுக்கணும், புரிஞ்சுகிட்டு தங்களுக்கான வாழ்க்கைய ஒழுங்குப் படுத்திக்கணும்ங்குற அக்கறை பெரும்பாலான எழுத்தாளர்கள்கிட்ட இருக்கு. ஆனா அதே நேரத்துல குமரி மாவட்டத்துல அந்த சூழல் கம்மியா தான் இருக்கு. ஏன்னா குமரி மாவட்டம், அதோட விசேஷ தன்மை மதத்தை அடிப்படையா கொண்டிருக்குது. இங்க இருக்க கூடிய எல்லாமே வந்து மத தன்மையோட தான் இருக்குது. அது ஏழைகள் பணக்காரர்கள்னு இருந்தாலும் அப்படி தான் இருக்குது.

இதுக்கு காரணம் என்னன்னா பெரும்பாலும் இந்த மதங்கள் பாவ புண்ணியத்தையே தான் அடிப்படையா கொண்டு இயங்குது. புண்ணியம் செய்தவன் எல்லாம் பணக்காரனா இருப்பான், பாவம் செய்தவன் எல்லாம் ஏழையா இருப்பான்ங்குற எண்ணம் இருக்குறதால பணம் இருக்குறவன் அவனுக்கு துணையா இருக்குற கடவுளை தூக்கி பிடிக்குறதும் அந்த மதத்தை பரப்புறதும் இயல்பான ஒண்ணு. குமரி மாவட்டத்தை பொருத்தவரைக்கும் சர்சுகள், சர்சுகளோட சொத்துகள், பள்ளி, கல்லூரிகள் எல்லாமே மதத்தை வளர்த்து எடுக்குது. இந்த குறிப்பிட்ட மதத்தை சார்ந்தவங்களோட படிப்பு, வேலைன்னு வாழ்வாதாரத்துக்கு உத்திரவாதம் அளிக்கப்படுறதால மக்களும் மதத்தை கெட்டியா பிடிச்சுக்குறாங்க. அதனால தான் குமரி மாவட்டத்த பொருத்தவரைக்கும் அரசியல் அதிகாரத்த தீர்மானிக்குற இடத்துல கிருஸ்தவ மதத்துக்கு இருக்குது.

அப்படிப்பட்ட மதம் மக்கள்கிட்ட ஆழமா பிடிப்புகள ஏற்படுத்துறது தவிர்க்க முடியாதது. அந்த பிடிப்பு எழுத்தாளரையும் ஆட்டி வச்சிருக்குது. அவங்க கதைகள நாம வாசிக்குறப்ப கிருஸ்தவ நடவடிக்கைகள் எல்லாம் சரியானதாகவும், கிருஸ்தவ மதம் சொல்ற மூட நம்பிக்கைகள பெருமையாகவும் அதையே மற்ற மதங்கள் பண்ணுறப்ப அது மேல ஒரு அருவெறுப்போ இல்ல எள்ளலோ இருக்கக் கூடிய வகையில அது வெளிப்படுது. இது ஆரோக்கியமான போக்கு இல்லைங்குறது என்னோட கருத்து. சமூகத்துல பொறுப்பா எழுத வந்துட்டா மதங்கள் சொல்ற தவறான கருத்த உடைக்குறதா இருக்கணும்.

எழுத்தாளர் ஒரு பெண்ணா இருக்குறதால மதங்கள் சொல்லக்கூடிய கருத்துக்கள கெட்டியா பிடிச்சுக்குறாங்க. அதனால தான் வீட்ல மாமனார் மாமியார் என்ன பண்ணினாலும் அத சகிச்சுக்கணும், அவங்கள அனுசரிச்சு போகணும், அவங்கள சம்மதிக்க வைக்கணும், அவங்க சம்மதமில்லாம எதுவும் செய்ய கூடாது, சம்மதிக்க வைக்க என்ன வேணும்னாலும் பண்ணலாம்னு அவங்களால நினைக்க முடியுது. ஆனா இன்னிக்கி இருக்குற வாழ்க்கை முறையில ஒவ்வொருத்தரும் வெவ்வேற இடங்கள்ல ஓடி ஓடி உழைக்க வேண்டிய தேவை அதிகரிச்சுட்டு இருக்குறப்ப கூட்டுக் குடும்ப முறையினுடைய தேவை குறைஞ்கட்டு வருது.

இவங்களோட கதையில கூட்டுக்குடும்பத்துல ஏதோ ஒரு வகை புனிதம் இருக்குற மாதிரியும் அப்படி இல்லனா தங்களோட கவுரவம் குறைஞ்சி போயிடும்னு சொல்ற மாதிரியான தொனி வெளிப்படுது. எல்லா குடும்ப அமைப்பும் வாழ்க்கையோடு தான் இணைஞ்சி இருக்கும். வாழ்க்கைக்கு அப்பாற்பட்ட குடும்ப முறைன்னு எதுவும் கிடையாது. விவசாய குடும்பமா வாழ்ந்த காலங்கள்ல கூட்டு உழைப்பும் ஒத்துழைப்பும் அவசியமா இருந்துச்சு. இப்போ ஒவ்வொருத்தருக்கும் ஒரு விதமான படிப்பு, ஒரு விதமான வேலைன்னு இருக்குறப்ப எல்லாரும் ஒரே இடத்துல சேர்ந்து இருக்க முடியாது. அவங்களோட வருமானமும் வேற மாதிரி தான் இருக்கும். மாறுபட்ட வருமானத்த எல்லாரும் சேர்ந்து பகிர்ந்துக்குறது இப்போதைய சூழ்நிலைல சாத்தியப்படாது. ஏன்னா அந்தந்த வருமானத்த பொறுத்து தான் தங்களோட வாரிசுகள அவங்க தங்களோட தகுதிக்கேற்ப வளர்ப்பாங்க. இதெல்லாம் கூட்டுக்குடும்பத்த காலாவதியாக்கிகிட்டு இருக்குற முறை. ஆனாலும் இந்த கூட்டு குடும்ப முறை குமரி மாவட்டத்துல இன்னமும் நீடிக்குது. எல்லாரும் குறிப்பிட்ட எல்லைக்குள்ள சுருண்டுக்குறதும் அதிகமான வரதட்சணை வாங்குறதும் இங்க இருக்குறது. அதோட தாக்கம் தான் “மாமியார் தோரணை” கதைல வெளிப்படுது.

ஆவண படு கொலைகள், ஸ்டெர்லைட் பிரச்னை, மீத்தேன் ஹைட்ரோ கார்பன் பிரச்னை, இயற்கை சீரழிவு பற்றிய எழுத்துகள் குமரி மாவட்டத்துல பிரதிபலிக்குறது குறைவா இருக்கு. இங்க பெரும்பாலானோர் ஒரு வட்டத்துக்குள்ளயே இருக்குறோம். இன்னும் நாஞ்சில் நாடுங்குற ஒரு தனி ராஜ்யத்துக்குள்ள தான் இருக்குறோம். எழுத்தாளருக்கு தான் சார்ந்த சமூகத்தைப் பத்தி சொல்றதுல இருக்குற ஆர்வம் அதுல இருக்குற பிற்போக்கு எண்ணங்களையும் சேர்த்து பிரதிபலிக்குறது தான் யோசிக்க வைக்குது.

கடல் மீனவனுக்கு சொந்தமானது. மீனவர்கள் கடலுக்கு அதிபதியா இருந்தாங்க. ஆனா இன்னிக்கி பெரிய பெரிய முதலாளிகள் மீன்பிடியில செல்வாக்கு செலுத்த ஆரம்பிச்சுட்டாங்க. கடற்கரைகள் எல்லாமே சுற்றுலா தலங்களா, வணிக மண்டலமா மாற ஆரம்பிச்சிடுச்சு. மீனவ மக்களை அங்க இருந்து வெளியேற்றிக்கிட்டு இருக்காங்க. கடற்கரை பாதுகாப்பு சட்டம்ங்குற பெயர்ல கடற்கரை சார்ந்த வாழ்வாதாரம் அந்நியப்படுது. மீனவர்கள் துறைமுகத் திட்டம், அணுஉலை பூங்கா திட்டம் எல்லாம் மீனவர்கள் வாழ்க்கை முறைய அழிக்க கூடியது.

மீனவ மக்களிடமும் கிருஸ்தவ மக்களிடம் அன்பா இருக்குற எழுத்தாளர் பத்து கதைகளிலும் அவங்க பிரச்சனையை சரியா பேசலன்னு நினைக்குறேன். முதல் கதையான “கடலோடி” தவிர்த்து வேற கதைகள் எதுவும் சமூக பிரச்சனைகள பெருசா சொல்லல.

குமரி மாவட்டத்தை பொருத்தவரைக்கும் கிருஸ்த்தவ மதம் மீனவர்களோடு இணைஞ்சு இருக்கு. மீனவர்கள் சர்ச்சுகள நம்பித்தான் வாழ்க்கைய நடத்துறாங்க. அவங்களோட அதிகார மையமா சர்ச் இருக்குது. அதே நேரம் மீனவ மக்களுக்கு நிறைய பிரச்சனை இருக்கு. அணுஉலை தொடங்கி துறைமுகம் பிரச்சனைகள்ல இருந்து கடற்கரை பாதுகாப்பு மன்றம்ங்குற வகையில எல்லா இடத்துலயும் பிரச்சனை இருக்கு.

இந்த பிரச்சனைகள் எல்லாம் தீராததுக்கு காரணமும் இருக்கு. மீனவ மக்கள் குடும்ப பிரச்சனையையும் மீனவ சமூக பிரச்சனையும் தீத்து வைக்க சர்ச்சுகள தான் நம்புறாங்க. குமரி மாவட்டத்தில் கிருஸ்த்தவர்கள் அரச தீர்மானிக்குறதுல முக்கியமானவங்களா இருக்காங்க. அப்புறம் ஏன் இந்த பிரச்சனைகள் தீரல? ஏன்னா, சர்சுகள் சொத்துடைய நிறுவனங்கள். சொத்துடைய நிறுவனங்கள் அரசுடைய அங்கம். அரசு என்பதே சொத்துடைய நிறுவனங்களோட கூட்டதிகாரம் தான். அவங்க பிரதிநிதிகள் தான் செல்வாக்கு செலுத்துறாங்க. அதனால சர்ச்சுகள் அரசோட இணைஞ்சு தான் செயல்படும். மீனவர்கள பாதிக்குற எந்த விஷயத்தையுமே முழுசா தீர்த்து வைக்க முடியாத சூழல தான் சர்சுகள் உருவாக்கும். பணக்காரர்கள் பணக்காரர்களோட தான் சேருவாங்க. அதனால தான் பெரிய பெரிய மீன்பிடி நிறுவனங்கள் சாதாரண விசைப்பிடி படகுகள், கட்டுமரங்கள்ல தொழில் செய்றவங்களோட வாழ்வாதாரத்த அழிக்குறத கட்டுப்படுத்த முடியாத நிலைமை இருக்குது. நம்ம பிரச்சனைய நாமளே தீர்க்கணும்ங்குறது எவ்வளவு முக்கியமோ அதே மாதிரி அதை மத்தவங்களோட சேர்ந்து தான் தீர்க்க முடியும்.

மக்களோட பிரச்சனையான நீட், ஜி.எஸ்.டி, பெட்ரோல் விலை உயர்வு, விலைவாசி உயர்வு தொடங்கி, ஜாதி பிரச்சனைகள், கவுரவ கொலைகள்னு பல்வேறு பிரச்சனைகள் இருக்குது. ஆனா குமரி மாவட்டத்தை பொருத்தவரைக்கும் மதம் செல்வாக்கு செலுத்திட்டு இருக்குறது கவலையான விஷயம் தான். எல்லாத்தயும் கடவுளே தீர்ப்பார்ங்குற நம்பிக்கை இருக்குறதால இந்த பிரச்சனைகள சமூக பிரச்சனையாக எழுத்தாளர் சரியா புரிஞ்சுக்கல. தன்னோட “இரு மனம்” கதையில ரெண்டு வெவ்வேறு மதத்தை சார்ந்தவர்கள் காதலிக்கும் போது “எங்களுக்கு எங்க மதம் முக்கியம்”னு மதத்தையே தூக்கிப் பிடிக்குறார். கடவுள்ங்குற இலக்கை அடைய எந்த பாதைல போனா என்னன்னு கேக்குற அதே சப்திகா காதலை விட மதம் பெரிசுன்னு சொல்ற கிருஸ்தவத்த பெருமையா பாக்குறார். மத பயங்கரவாதம் எப்படி மக்களிடையே செல்வாக்கு செலுத்திக்கிட்டு இருக்குங்குறதும் அவருக்கு புரியல.

அதே மாதிரி பாத்த உடனே ஒரு தெய்வீக காதல்ல விழ முடியும்ங்குற நம்பிக்கையும் அவருக்கு இருக்கு. தோற்றத்தை பாத்து ஒரு நொடியில வரக் கூடிய கவர்ச்சி எப்படி காதலாக முடியும்? இந்தக் கதை இன்னமும் குமரி மாவட்டத்துல தோற்றம் சார்ந்த கவர்ச்சி மிச்சம் இருக்குறத எடுத்துக் காட்டுது. இரண்டு மனங்களோட புரிதல் தான் உறுதியான காதலா பரிணமிக்க முடியும்.

இதையெல்லாம் உற்று நோக்க வேண்டியது எழுத்தாளர்களோட கடமை. சப்திகா இப்போ தான் எழுத தொடங்கி இருக்காங்க. அவங்களோட வளர்ச்சிங்குறது இந்த பிரச்சனைகள எல்லாம் உற்று நோக்குறது மூலமா தான் இருக்க முடியும். கிருஸ்தவ மத பின்புலம், மீனவ மத பின்புலத்த தாண்டி இந்த சமூகத்தோட அனைத்து மக்களோட பிரதிநிதியா இந்த எழுத்தாளர் வளரணும். அதுல இருந்து விசயத்த பாக்கணும்.

மக்கள்கிட்ட இருக்கக் கூடிய கதைகளையும் மக்கள்கிட்ட இருக்குற சாதாரண பிரச்சனைகளையும் வெளிப்படுத்த தெரிஞ்ச சப்திகாவுக்கு மக்கள்கிட்ட செல்வாக்கு செலுத்தக் கூடிய பிரச்சனைகள புரிஞ்சிகிட்டா அதையும் சிறப்பா வெளிப்படுத்த முடியும். அந்த ஆற்றல் சப்திகாவுக்கு இருக்குது. அவங்களோட கண்ணோட்டம் விரிவடையணும், ஒரு நல்ல படைப்புகள் அவங்ககிட்ட இருந்து வரணும், அது மீனவ மக்களுக்கு மட்டுமில்லாம எல்லாருக்கும் பயன்படணும். ஒரு சமூகத்துக்கான இலக்கியம்ங்குறது மற்ற சமூகத்தையும் ஆட்கொள்றதா இருக்கணும். அந்த வகையில அவங்களுக்கு அந்த திறமை இருக்குது. அது வளரணும்னு வாழ்த்துறேன்.

Saturday, 16 July 2016

மூன்றாம் நதி - என் பார்வையில்




எழுதுறத நான் கிட்டத்தட்ட நிறுத்திட்டேன்னு தான் சொல்லணும். எப்பவாவது திடீர்னு மனசுக்கு தோணினத எழுதி ப்ளாக்ல மட்டும் போஸ்ட் பண்ணிட்டு இருக்குற நேரம் மகேஷ் தான் அத படிச்சுட்டு அவனோட கருத்துக்கள அடிக்கடி சொல்லுவான். சொல்லப்போனா கிட்டத்தட்ட அவன் ஒரு கிரியாயூக்கி மாதிரி. நிறைய சோர்ந்து இருக்குறப்ப எல்லாம் அக்கா, வித்யாசமா ட்ரை பண்ணுங்க அக்கா, நல்லா எழுதி இருக்கீங்க அக்கான்னு எதையாவது சொல்லி உற்சாகமூட்டிகிட்டே இருப்பான்.

அப்படி தான் ஒருநாள் அவன் கிட்ட பேசிட்டு இருக்குறப்ப மூன்றாம் நதி பத்தி பேச்சு வந்துச்சுன்னு நினைக்குறேன். சரியா நியாபகம் இல்ல. அப்புறம் ஒரு நாள் மூன்றாம் நதிக்கு தன் நண்பன் எழுதின விமர்சனம் ஒண்ணை எனக்கு படிக்க தந்திருந்தான். அத படிச்சிட்டு மகேஷ் கிட்ட எனக்கு மூன்றாம் நதி படிக்க கிடைக்குமான்னு கேட்டேன்.

நான் இதுக்கு முன்னால படிச்ச நாவல்களோட ஆசிரியர்கள் பற்றி எனக்கு எந்த பரிட்சயமும் இல்ல. ஆனா வா. மணிகண்டன் அப்படி கிடையாது.

மூணு வருஷம் முன்னால முதல் முதலா ப்ளாக் ஒண்ணு ஆரம்பிக்கணும்னு நான் முடிவு பண்ணினப்ப மகேஷ் கிட்ட தான் உதவி கேட்டேன். ப்ளாக் ஆரம்பிச்சாலும் அடுத்து என்ன பண்ணனே தெரியாம முழிச்சுட்டு இருந்தப்ப ஒவ்வொரு படியா ஒவ்வொரு விசயத்தையும் பொறுமையா அவன் தான் எனக்கு கத்துக்குடுத்தான்.

வெறும் கவிதைகள மட்டும் தான் அந்த நேரம் போஸ்ட் பண்ணிட்டு இருந்தேன். அப்ப தான் சிலரோட ப்ளாக் லிங்க் எல்லாம் குடுத்து, இவங்க எழுதினதையும் படிங்க அக்கா, அதனால உங்களுக்கு ஒரு ஐடியா கிடைக்கும்னு சொல்லி அவன் குடுத்த முதல் ப்ளாக் லிங்க் வா. மணிகண்டனோடது. அப்போ இருந்து அவரோட ப்ளாக் என்னோட பாலோஅப் லிஸ்ட்ல இருக்கு.

நான் அவரோட எல்லா போஸ்ட்டும் படிப்பேன்னு பொய் சொல்ல விரும்பல. காரணம் வாசிக்குறதே எனக்கு பிடிக்காம இருந்துச்சு அப்போ. அது ஒரு அயர்ச்சிய குடுத்துச்சு. அந்த சூழ்நிலைல கூட அப்பப்ப வா. மணிகண்டனோட ப்ளாக் படிப்பேன். அவரோட நிசப்தம் அறக்கட்டளை பத்தியும் தெரிய வந்துச்சு. அப்பப்ப அவர் போஸ்ட்கு கமன்ட் போட நினச்சாலும் கிட்டத்தட்ட ரெண்டு வருஷம் முன்னாடி அதுல அந்த ஆப்சனே இல்ல. அதனால சைலென்ட்டா வாசிச்சுட்டு போயிருக்கேன்.

மகேஷ் எப்போ எல்லாம் என்கிட்ட போன்ல பேசுவானோ அப்ப எல்லாம் வா. மணிகண்டனை பத்தி ஒரு வார்த்தையாவது பேசாம விட மாட்டான். அவர் மேல அவனுக்கு பெரிய மதிப்பு உண்டுன்னு எனக்கு ரொம்ப நாள் முன்னாலயே புரிஞ்சுச்சு. அவரோட அறகட்டளை, வாசகர்கள் அவர் மேல வச்சிருக்குற நம்பிக்கைனு ஓயாம பேசுவான்.

ஒரு புத்தகம் போடணும் மகேஷ்னு நான் சொன்னப்பவும் வா. மணிகண்டன் போஸ்ட் லிங்க் ஒண்ணை எடுத்து குடுத்து இத படிங்க அக்கான்னு சொல்லுவான். எதுக்கு எடுத்தாலும் அவர உதாரணமா கொண்டு வந்து நிறுத்தாம விட்டது இல்ல மகேஷ். அப்படி தான் எனக்கு மூன்றாம் நதி புக் கிடைக்குமான்னு நான் கேட்டதும் என் கிட்ட இருக்கு அக்கா, நானே அனுப்பி வைக்குறேன்னு சொல்லி ஒரு நாலு புத்தகமும் (மூன்றாம் நதி, மசால் தோசை 38 ரூபாய், பறக்க எத்தனிக்கும் ஒற்றை இறகு, ஆவிப்பா) பத்து திருப்பதி லட்டும் வச்சு அனுப்பிட்டான். கிட்டத்தட்ட ஒன்னரை நாளுக்குள்ள அது என் கைக்குள்ள கிடைச்சதுல அவனுக்கு ஒரே ஆச்சர்யம். எனக்கு தான் திருப்பதி லட்டு ஒன்னே ஒண்ணு கிடைச்ச வருத்தம். பார்சல் வீட்டுக்கு வந்து, அப்புறமா என் கைக்கு வந்து சேருறதுக்குள்ள அப்பா எல்லாத்தையும் காலி பண்ணிட்டார்.

சரி விடுங்க, நான் நாவல பத்தி பேச வந்துட்டு இன்னும் ஆரம்பிக்கவே இல்ல பாருங்க.

இன்னிக்கி மதியம் தான் புத்தகத்த கைல எடுத்தேன். எனக்கு அந்த அட்டை வடிவமைப்பே வித்யாசமா பட்டுச்சு. முதல்ல பட்டுன்னு பிடிபடல, ஆனா என்னமோ வித்யாசமா இருக்கே இருக்கேன்னு திருப்பி திருப்பி பாத்துட்டு இருந்தேன். அப்புறமா திடீர்னு தடவி பாக்கனும்னு தோணிச்சு. அட, கருப்பு அட்டைல நீல கலர்ல ஒரு பொண்ணோட அவுட்லைனும், மூன்றாம் நதின்னு எழுத்தும் ஸ்டிக்கர் ஒட்டி இருக்காங்க. எனக்கு அது ரொம்ப வசீகரமா இருந்த மாதிரி தோணிச்சு.

இந்த நாவல் விளிம்பு நிலை மனிதர்கள் பற்றியதுன்னு முன்னுரை படிச்சு தெரிஞ்சிகிட்டேன். “பெரும் வேட்டைக் காடான இந்த உலகம் அவர்களைத் துரத்தித் துரத்தி வேட்டையாடிக் கொண்டிருக்கிறது” – முன்னுரைல இருந்த இந்த வார்த்தை எவ்வளவு சத்தியமானது.

சமீப காலமா எனக்குள்ள ஒரு யதார்த்தம் பிடிபட்டு அதிக வலியை குடுத்துகிட்டே இருக்கு. வா. மணிகண்டன் சொன்ன மாதிரி இந்த உலகம் ஒரு வேட்டைக் காடு. ஆனா இங்க விளிம்பு நிலை மனிதர்கள் மட்டும் தான் இரையாகுறாங்கன்னு சொல்ல முடியாது. எல்லாருக்குள்ளேயும் ஒரு வன்மம் இருக்கு. சந்தர்ப்பங்கள் கிடைக்குற நேரத்துல எல்லாம் அத பயன்படுத்தி வேட்டையாடி தன்னோட வன்மங்கள தீத்துக்குறாங்க மக்கள்.

ரெண்டு நாள் முன்னாடி தான் போஸ்ட் டாக்டோரியல் பெல்லோஷிப்க்காக ஒரு மெடிக்கல் சர்டிபிகேட் வாங்க அரசு மருத்துவமனைக்கு போக வேண்டிய சந்தர்ப்பம் வந்துச்சு. பெரும் கூட்டம். டோக்கன் குடுத்தவர் ஈவு இரக்கமே இல்லாம ஒவ்வொருத்தரையும் வார்த்தையால காயப்படுத்திட்டு இருந்தார். அவங்களோட ஊனத்த குத்திக்காட்டி போ போ, அப்புறம் வான்னு துரத்திட்டு இருந்தார். நாலு கால்ல தவழ்ந்து வந்து ஏமாற்றத்தோட திரும்பி தயங்கி தயங்கி தடுமாறிட்டு இருந்த ஒரு மனுசனை வச்ச கண்ணு எடுக்காம பாத்துகிட்டே இருந்தேன். எனக்கு இந்த மாதிரியான இடங்கள் தன்னம்பிக்கையை குலைக்கும் இடங்கள்ன்னு அங்க இருந்து ஒதுங்கியே இருப்பேன். என்னையும் ஒரு வயசான அம்மா “ஏம்மா நொண்டி, ஆயிரம் ரூபாய்க்கா வந்த”ன்னு கேட்டார். என் படிப்பு, என் அதிகாரம், என் சுதந்திரம், என் வீம்பு எல்லாம் தரைமட்டமான இடம் அது. அப்போ அவர் என்னை பார்த்த பார்வைல ஒரு குத்தல் இருந்துச்சு. அப்பவே அவர நாலு வார்த்தை கேப்பமான்னு நினச்சேன். அந்த இடத்துல ஒரு சலசலப்ப உருவாக்க நான் விரும்பல. முறைச்சு பாத்துகிட்டே இருந்தேன்.

என் கதைய விடுவோம், அந்த டோக்கன் குடுக்குறவர் ஒரு கட்டத்துல எழுந்து வெளில போக வேண்டிய கட்டாயம் வந்துச்சு. அவர் எழுந்து நடந்தார். அதுவும் கக்கத்துல ரெண்டு கட்டைகள் உதவியோட. அதிகாரங்கள் கைல இருந்தா யார வேணா காயப்படுத்தலாமா? ஒரு கணம் அந்த நாலு கால் மனுசன பாத்துட்டு அப்புறம் டோக்கன் குடுத்தவர் மேல குத்திட்டு நின்ன என்னோட பார்வை அவர காயப்படுத்தி இருக்கணும். என்னை ஏறிட்டுப் பாத்துட்டு தலைய குனிச்சுகிட்டார். யார் மேல இருந்த வன்மத்த இவர் இவங்க கிட்ட எல்லாம் காட்டிட்டு இருக்காரோ தெரியல. ஆனா என்னோட பார்வைக்கு பிறகு அவரோட அணுகுமுறைல ஒரு மாற்றம் தெரிஞ்சுச்சு. அடுத்து வந்த வயசான பாட்டிகிட்ட அவரே குனிஞ்சு என்ன விவரம்னு கேட்டு எழுதிட்டு, ஒரு ஓரமா அவங்க உக்கார இடமும் ஒதுக்கி குடுத்தார். இப்படி வேட்டையாடுற குணம் ஒவ்வொருத்தருக்குள்ளயும் இருந்துகிட்டு தான் இருக்கு.

எனக்கு சென்னை, ஹைதராபாத், பெங்களூர்ன்னு எந்த பெரு நகரங்களோட பரிச்சயமும் இல்ல. அதனாலயே அங்க வாழ்ற விளிம்பு நிலை மனிதர்கள் பத்தின எந்தவிதமான எண்ண ஓட்டங்களும் இல்ல. இந்த மென்பொருள் நிறுவனங்கள், கேளிக்கை விடுதிகள் பற்றி கூட எனக்கு எந்த பிரக்ஞையும் கிடையாது. உண்மைய சொன்னா எனக்கு யார் மேலயும் எந்த பரிதாபமும் கிடையாது.

எனக்கு இந்த நாவல படிச்சப்ப ஒரு பெண்ணோட வாழ்க்கை மேலோட்டமா சொல்லப்பட்டுருக்குன்னு தான் மனசுல பட்டுச்சு. மகேஷ் பேசும் போது சொன்னான், “அய்யோ, அது பயங்கரம். அந்த பொண்ணு எப்படி எல்லாம் கஷ்டப்படுறா”ன்னு. இல்ல மகேஷ், எனக்கு இதுல எந்த கஷ்டமும் கண்ணுல தெரியல. காரணம் ஒரு பெண்ணோட கஷ்டம் எந்த இடத்துலயும் ஆழமா சொல்லப்படலங்குறது என்னோட கருத்து. ஆசிரியர் கூட சொல்லி இருக்கார் “இருந்தாலும் துளி தயக்கம் ஏதோவொரு மூலையில் எட்டிப் பார்த்தப்படியே இருக்கிறது”ன்னு. அந்த தயக்கம் வேற எதுவும் இல்ல, சம்பவங்கள விவரிச்ச முடிஞ்ச அவரால அவளோட உணர்வுகள விவரிக்க முடியலன்னு நான் நினைக்குறேன்.

என்னை கேட்டா, பவானியோட வாழ்க்கைல வந்த எந்த சந்தர்ப்பமும் அவள கீழ் நோக்கி தள்ளாது. அவ எந்த சூழ்நிலையிலயும் வாழ, தன்னை பொருத்திக்குற ஒரு ஆத்மாவா தான் என் கண்ணுக்கு தெரியுறா. சித்திகிட்ட இருந்து கிடைக்குற வசவு சொல் அவள தற்கொலைக்கு தூண்டுது. அதே நேரம் வருணோட நட்பு அவள அதுல இருந்து காப்பாத்துது. இதெல்லாம் இன்னும் ஆழமா சொல்லி இருக்கலாம். வாழ்க்கையோட ஒவ்வொரு நகர்வுலயும் பவானி வாழ்ந்துகிட்டே தான் இருக்கா. அதனால அவளோட கணவன் இறப்பு கூட “இதுவும் கடந்து போகும்” வகை தான். அவ அவளையே செதுக்க அவளுக்கு கிடைச்ச அடுத்த சந்தர்ப்பம் அதுன்னு எனக்கு தோணுது. கண்டிப்பா பவானி அவ குழந்தைய அநாதையா விட மாட்டா. இந்த வேட்டை உலகத்துல தன்னையும் தன்னோட குழந்தையையும் கண்டிப்பா அவ பொருத்திப்பா.

பெண்ணோட உணர்வுகள் தான் இங்க குறையுதுன்னு சொன்னேனே தவிர, சம்பவங்கள விவரிச்சிருக்குற விதம் பயங்கரம். லிங்கப்பா உடம்பு எரிஞ்சி, கரிஞ்சி விழுறத விவரிச்ச விதம், பால்காரர் கொலைய விவரிக்குற இடம் எல்லாம் அப்படியே காட்சிய கண் முன்னால கொண்டு வந்து நிறுத்திடுது. லிங்கப்பாவோட பவானியோட கடைசி பயணமும் கண் கலங்க வைக்குது. அந்த இடத்துல பவானியோட மனச, உணர்வ கொஞ்சம் ஆழமா சொல்லி இருக்கார் ஆசிரியர்.

பவானிக்காக இந்த நாவல்னு சொன்னா அத என்னால ஏத்துக்க முடியாது. இதுல முழுக்க முழுக்க ஆண்களோட கதை தான் சொல்லப்பட்டுருக்கு. அதுல முதலும் பத்தொன்பதாம் அத்யாயம் தவிர்த்து, பவானி ஒரு அங்கம் அவ்வளவே தான்.

பஞ்சம், கொலை, அதிகாரம், கம்யூட்டர் வர்க்கம்ன்னு ஆசிரியர் விவரிக்குற எல்லாமே யதார்த்தத்த உணர்த்துது. ஒரு நகரம் எப்படி தன்னோட கிளைகளை பரப்பி மனிதாபிமானம், சுகாதாரம் எல்லாத்தையும் அழிக்குது, எப்படி அது தன்னை இன்னொரு நிலைக்கு தயார் படுத்திக்குதுன்னு எல்லா விசயங்களையும் அழகா அடுக்கி இருக்கார் பா. மணிகண்டன். அத படிச்சுட்டு நாம இங்க சொகுசா இருக்கோமோன்னு ஒரு குற்ற உணர்ச்சி என் மனசுல வராம இல்ல. கடைசியா இந்த குற்ற உணர்ச்சி நான் பி.ஜி படிக்குறப்ப மும்பைக்கு இண்டஸ்ட்ரியல் விசிட் போனப்ப ஏற்பட்டுச்சு. அந்த அனுபவம் பத்தி இன்னொரு நாள் கண்டிப்பா எழுதணும்.



மூன்றாம் நதி – ஒரு பெண் அப்படிங்குற காரணத்தால இன்னும் இந்த நாவல்ல என்னோட எதிர்பார்ப்பு அதிகமா இருந்துருக்கலாம். அதனால கொஞ்சம் ஏமாற்றம்னு தான் சொல்லணும். மத்தப்படி எனக்கு தெரியாத ஒரு இடத்துல நின்னுகிட்டு மூச்சு முட்டின உணர்வு இத படிச்சதும். நகரம் பழகிக்கணும்.

Sunday, 19 June 2016

கானகன் - நாவல் ஒரு சிலாகிப்பு



சின்ன வயசுல நான் அப்பாகிட்ட அடிக்கடி கேக்குறது “எனக்கு யானை குட்டி, புலி குட்டி, சிங்கக் குட்டி எல்லாம் வாங்கி தாங்கப்பா. நான் அத எல்லாம் வளப்பேன்”ன்னு தான்.

எப்பவும் சேட்டை செய்துகிட்டு எதையாவது வம்பு பண்ணிக்கிட்டு நான் சீறிகிட்டு பாக்குறப்ப எல்லாம் “அவ கண்ண பாரு, அப்படியே புலியோட கண்ணு. சும்மாவா பொட்ட புலிலா அவ”ன்னு அம்மா சொல்லுவா.

வீட்டுக்கே அடங்காம தனி ராஜாங்கம் நடத்திட்டு இருந்த அப்பா யானையாம். அவர் புள்ள நான் புலி.

இருபது வயசோட தொடக்கத்துல எனக்கு நிறைய தேடல் இருந்துது. அது கிட்டத்தட்ட ஒரு அடங்காத தாகம் மாதிரி எனக்குள்ள தகிச்சுகிட்டே இருந்துச்சு. வாழ்க்கைல எனக்கு எல்லாம் கிடச்சதா எல்லோரும் சொல்லிக்கிட்டு இருந்த நேரம் என் மனசு அதையும் தாண்டி என்னவோ வேணும்னு சொல்லிகிட்டே இருந்துச்சு. இன்னிக்கு வரைக்கும் எனக்கு அது புரியாத புதிராவே தான் இருந்துட்டு இருந்துச்சு.

ஜெயமோகனின் “காடு” படிச்சப்ப கொஞ்சமாய் எனக்கு என்ன வேணும்னு புரிய ஆரம்பிக்க, லெக்ஷ்மி சரவணக்குமாரோட “கானகன்” அத எனக்கு முழுசா உணர்த்துன மாதிரி இருக்கு.

என்னோட சின்ன வயசுல என்னை தொடர்ந்து சில கனவுகள் தொரத்திகிட்டே இருந்துச்சு. ஒண்ணு, ஒரு பெரிய மாட்டுக் கூட்டம். அதோட கொம்புகள்ல நான் மாட்டிகிட்டு அலைக்கழிஞ்சுகிட்டே இருப்பேன். போக போக அந்த கனவு எனக்கு ரொம்ப பிடிச்சுப் போக, மாட்டு கொம்புல பயணம் பண்றது ஒரு சாகசம்ன்னு பெருமையா நினைக்க ஆரம்பிச்சேன். இன்னொன்னு, வீட்டை சுத்தி உலவுற காட்டு மிருகங்கள். நிஜத்துல அப்பாகிட்ட நான் வாங்கி கேட்ட விலங்குகளை எல்லாம் அப்பா கனவுல எனக்கு வாங்கி குடுத்தது. பயம் கலந்த பிரமிப்போட நான் அந்த விலங்குகள் மத்தியில வேடிக்கை பாத்துகிட்டே நிப்பேன்.

புத்தகங்கள கைல வச்சுகிட்டு அதோட வாசத்த முகர்ந்து பாக்குறது ஒரு தனி சுகம்னு இப்பல்லாம் எனக்கு புரிய ஆரம்பிச்சிருக்கு. கானகன் நாவல் படிச்ச உடனே என்னையறியாம அந்த புத்தகம் எங்கேன்னு கண் தேட ஆரம்பிச்சுது. எனக்கு அத வாசம் பிடிச்சு அந்த யானையையும் புலியையும் தழுவி கிடக்க ஆசை. ஆனா பாருங்க, என் துரதிஷ்டம், நான் படிச்சது pdfல. கானகனை வாசிக்க சொல்லி பரிந்துரைத்த நண்பனுக்கும் கேட்ட உடனே ஆன்லைன்ல பி.டி.எப். வாங்கி அனுப்பி வைத்த நண்பருக்கும் முதல்ல என் நன்றி. ஆனாலும் இன்னொரு தடவ அத புத்தகமா கைல வாங்கி தடவி பாக்கணும்.

என் வீட்டு விலங்குகள் பத்தின சுவாரசியங்களையும், அவைகளுக்கு இருக்குற உணர்வுகளையும் விவரிச்சு நான் விலங்குகளுக்கு நெருக்கமானவள்ன்னு சொன்னா சட்டுன்னு யாரும் அவ்வளவு எளிதா நம்பினது இல்ல. இவளான்னு புருவம் தூக்கி பாக்குறத உணர்ந்துருக்கேன். விலங்குகளை யாராவது வசியப்படுத்த முடியுமா? அதுகளுக்கு அவ்வளவு யோசிக்குற சக்தி இருக்கா? விலங்கு எப்பவும் விலங்கு தானே, நினச்ச நேரத்துல நாம வெட்டி சாப்பிடதானே அதெல்லாம் வளர்க்குறோம்னு கேப்பாங்க. எந்த விலங்கா இருந்தாலும் அதுக்கிட்ட பேச நமக்கு ஒரு பாஷை உண்டு. அது கண்களால பேசுற பாஷை. அத நாம எதுவுமே செய்ய மாட்டோம்னு அதுக்கு நாம குடுக்குற தன்னம்பிக்கை பாஷை. நான் உன்னை நேசிக்குறேன்னு சொல்ற பாஷை. அந்த உலகம் தனித்துவமானது, அத புரிஞ்சுகிட்டா கண்டிப்பா அதுல இருந்து மீண்டு வர மனசே வராது.

அப்படி தான் எனக்கு “கானகன்”னோட காட்டுக்குள்ள போயிட்டு மீண்டு வரவே முடியல.

இந்த நாவலுக்கு கிடைத்த விருது பத்தி எல்லாம் எல்லாரும் பேசிட்டு இருக்காங்க. எனக்கு அதுல சுவாரசியம் இல்ல. காரணம் நான் அது பத்தி எதுவுமே அறியாதவ. அதனால அதோட பெருமைகள் கூட எனக்கு தெரியாமலே போயிருக்கும். எனக்கு அதப் பத்தி எந்த கவலையும் இல்ல. ஆனா இந்த நாவல் எனக்குள்ள நிறைய கேள்விகள எழுப்பிச்சு. இந்த நாவல்ல வர்ற சில கதாபாத்திரங்கள் இப்படி எல்லோரும் இருந்துட்டா எத்தன நல்லாயிருக்கும்னு தோண வச்சுட்டே இருக்காங்க.

ஒரு இன மக்களோட வாழ்வாதாரத்த பத்தின நாவல் இதுன்னு பேஸ்புக்ல எங்கயோ ஒரு இடத்துல படிச்சேன். ஆனா அத பத்தி மட்டுமேயான நாவலா கண்டிப்பா எனக்கு தெரியல. இந்த நாவல் ஒரு இனத்த விவரிக்க கூடியதா இருக்கலாம், ஆனா அதையும் மீறி நிறைய விசயங்கள சொல்லிட்டு போகுது.

எனக்கு விலங்குகளோட வாழ்வியல பத்தியும் அதோட குணாதிசயங்கள பத்தியும் தெரிஞ்சுக்க பேராவல் உண்டு. இந்த நாவல் அந்த வகைல எனக்கு நிறைய தீனி போட்ருக்கு. விலங்குகளுக்கு உணர்வுண்டு. மனிதனை விட ஒரு தேர்ந்த வாழ்க்கை நெறியை வகுத்து அதுக்கு ஏத்தாற்போல வாழும் விலங்குகள உணர்வுகளே இல்லாத மனுசனால கண்டிப்பா புரிஞ்சுக்க முடியாது. இந்த நாவல்ல கதைமாந்தர்கள் வழியா விலங்குகள அழகா புரிய வைக்குறார் லக்ஷ்மி சரவணக்குமார்.

செனை மானை சுட்ட ஜெமீந்தார் முதல் கொண்டு இதுல வர்ற கதைமாந்தர்கள் ஒவ்வொருத்தரும் அவங்கவங்க பங்களிப்ப நிறைவாவே செய்துட்டு போய்டுறாங்க. காட்டையே தன்வசப்படுத்திய சடையனும், அவன் மகன் வாசியும் கூட எல்லாரையும் போல ஒரு கதாபாத்திரங்களா தான் வாழ்ந்துட்டு போறாங்க. காரணம், ஒவ்வொரு கதைமாந்தர்களையும் கதைக்கான அவங்களோட பங்களிப்பையும் அழகா செதுக்கி இருக்கார் நாவலாசிரியர். எனக்கு இதுல முரண்பட்டு தெரிஞ்ச விஷயம் தங்கப்பனோட குணாதிசயம். ஆரம்பத்துல ஒரு புலிய சுடுறப்ப அவனுக்கு வேட்டை மேல பெரிய ஆர்வம் இல்லன்னு சொல்லப்படுது. வேட்டை மேல இருந்த தாகத்தால தான் செல்லாயி அவன் கூட போனான்னு சொல்லப்படுது. கடைசில அவன் ஒரு கொடூரமான வேட்டைக்காரனா மாறிப் போயிடுறான். எது எப்படி இருந்தாலும் இந்த குழப்பம் எல்லாம் தூக்கி வீசப்பட வேண்டியவை. வீசியாச்சு.

அவ்வளவு மட்டும் தானா இந்த நாவல்ல இருக்கு. இல்லவே இல்ல. நாம பேசத் தயங்குற, ச்சீன்னு ஒதுக்குற விஷயங்கள் நிறைய இருக்கு இந்த நாவல்ல. அதுவும் ஒரு அழகியலோட! இது தான் வாழ்க்கை, இப்படி தான் வாழணும்னு நமக்கு பாடம் எடுக்குற மாதிரி.

ஒருத்தனுக்கு மூணு பொண்டாட்டினு சொல்றத வேணா இந்த சமூகம் ஏத்துக்கும். ஒருத்திக்கு ரெண்டு புருஷன்னு சொன்னா இந்த சமூகம் ஏத்துக்குமா என்ன?

பொண்டாட்டி மேல அளவு கடந்த ப்ரியம் வச்சிருக்குற சடையன், அவன் மேல அதே அளவு ப்ரியம் வச்சிருக்குற செல்லாயி அதை விட அதிகமா தங்கப்பன் மேல ப்ரியம் வைக்குறா. தங்கப்பனோட வாழ்ந்துட்டு இருந்தாலும் சடையனையும் அவ காதலிக்க தவறல. “உனக்கு ரெண்டு அப்பா”ன்னு பெருமையா தன்னோட மகள் கிட்ட அவ அறிமுகப்படுத்தி வைக்குறா. தங்கப்பன விட்டு விலகவும் முடியாது, அதே நேரம் சடயனையும் அவ கூட வச்சிருக்கணும்ங்குற அவளோட ஆசைக்கு ஒரு சபாஷ்.

மூணு பொண்ணுங்க ஒரு இடத்துல இருந்தா அங்க சண்டை வராம இருக்காது. ஆனா இங்க தங்கப்பனோட மூணு பொண்டாட்டிகளும் அவ்வளவு ஒத்துமையா இருக்காங்க. அதுவும் சடையனுக்கும் செல்லாயிக்கும் பிறந்த வாசி மேல தங்கப்பனோட மத்த ரெண்டு பொண்டாட்டிகளான மாரிக்கும் சகாயராணிக்கும் கொள்ளை அன்பு. இப்படி பட்ட குணாதிசயம் கொண்டவர்கள நாவல்ல மட்டும் தான் பாக்க முடியுமோ?

தங்கப்பன் கூடவே சுத்துற அன்சாரிக்கு தன்னை விட பலமடங்கு அதிக வயசுள்ள சகாயராணி மேல ஆசை. ஒரு கட்டத்துல சகாயராணி அன்சாரி கூட போக முடிவெடுத்து மாரி கிட்ட சொல்றப்ப, “நீயும் தான் இத்தன காலம் தங்கப்பனுக்கு மாடா உழச்சிட்ட, இனியாவது சந்தோசமா இரு”ன்னு அவ வழியனுப்பி வைக்குறா. “இப்பவும் நான் தங்கப்பன நேசிக்குறேன், ஆனாலும் நானும் மனுசி தானே”ன்னு சகாயராணி சர்வசாதாரணமா ஒரு கேள்விய வீசி விட்டு போறா. அன்சாரி கூட வாழ்ந்துட்டு தங்கப்பனுக்கு செய்ய வேண்டிய பணிவிடைகள்லயும் அவ கொறை வைக்கல.

அதே மாதிரி தான் இதுல வர்ற ஆண் கதாபாத்திரங்களும். சடையனுக்கும் செல்லாயிக்கும் பிறந்த வாசியை தன்னோட வாரிசா பாக்குற தங்கப்பன் ஆகட்டும், தான் நேசிச்ச பெண் தன்னோட அண்ணனை விரும்புறான்னு தெரிஞ்சதும் மனச தேத்திக்குற கட்டையனாகட்டும் எல்லாருமே இம்மியளவு கூட பிசகாம நம்ம மனசுல ஒட்டிக்கறாங்க.

சகாயராணிக்கும் அன்சாரிக்கும் இடைல ஏற்பட்ட உறவு தங்கப்பனுக்கு தெரியுமா தெரியாதான்னு நாவலாசிரியர் தெளிவுப்படுத்தல. ஆனாலும் அவனுக்கு தெரிஞ்சாலும் தன்னை ஒண்ணும் சொல்ல மாட்டான்னு சகாயராணி மூலமா உணர்த்துறார். அதே மாதிரி தான் தங்கப்பனுக்கு அன்சாரி மேல கரிசனம் அதிகமாகிப் போகுது. அன்சாரி இடத்துல சகாயராணிய பாத்துட்டு ஒரு புன்னகையோட கடந்து போறான்.

இங்க எத்தனை பேர் அடுத்தவங்க அந்தரங்கம் மேல ஆர்வம் காட்டாம இருக்கோம்? நமக்கு வேண்டியதெல்லாம் அடுத்த வீட்டு வம்பு தான். நீ இப்படி தான் இருக்கணும் அப்படி தான் இருக்கணும்னு ஆளாளுக்கு ஆலோசனைகள சொல்ல வந்துடுவாங்க. அவங்களுக்கு எல்லாம் செருப்படி குடுக்காமலே தன்னோட கதாபாத்திரங்கள் மூலமா யோசிக்க வச்சிருக்காரோ நாவலாசிரியர்ன்னு எனக்கு ஒரு கேள்வி வருது.

இங்க யாரும் யார் குடியையும் கெடுக்கல, யாரும் யாரையும் கட்டாயப்படுத்தல. அவரவருக்கு தேவையான வாழ்க்கைய அவரவர் வாழ்ந்துகிட்டே இருக்காங்க எந்த விதமான மன கசப்புகளுக்கும் இடம் குடுக்காம.

ஒரு விஷயம் சொல்லாம இருக்க முடியல, காடு நாவலோட கதாநாயகியான நீலி வெறும் கதாபாத்திரமா தான் என் கண்ணுக்கு தெரிஞ்சா. அவ ஒரு உயிருள்ள அழகு சிலை அவ்வளவே. அதனால தான் அவளோட முடிவு சட்டுன்னு இருந்தாலும் பெருசா மனச பாதிக்கல. ஆனா இங்க செல்லாயி, மாரி, சகாயராணி, குயிலம்மாள் மட்டுமில்லாம, வாசிய முதல் முதலா அனுபவிக்கும் ஜெமீந்தார் மனைவி, தங்கப்பன் தேடிப் போய் அவனை ஆளும் பெண்னு எல்லா கதாபாத்திரங்களும் நம்ம கூடவே வாழ்ந்துட்டு போய்டுறாங்க.

காதலும் காமமும் இல்லா வாழ்க்கை அர்த்தமற்றது. அந்த காட்டைப் போல அழகானவை. ரெண்டுமே கொண்டாடப்பட வேண்டியவை. துவேசிக்கப்பட வேண்டிய அவசியமே இல்ல.
......................................




பின்குறிப்பு: நாவல் வாசிக்க ஆரம்பிச்ச நேரம் எனக்கு நெருடியது எழுத்துப்பிழைகளும் அவசியம் இல்லாத இடங்கள்ல வர்ற முப்புள்ளிகளும். இதுல கொஞ்சம் கவனம் செலுத்தி இருந்தா இன்னும் அதிகமா சந்தோசப்பட்டுருப்பேன்.

Monday, 6 June 2016

ஜெயமோகனின் காடு நாவலும் கோதையாறு பயணமும்




“காடு”. காடும் காடு சார்ந்த இடமும், அதில் வாழ்ந்த மனிதர்களயும் பற்றிய நாவல். எழுதினது ஜெயமோகன். எழுத்தாளர் பற்றிய எந்த பரிட்சயமும் இதுக்கு முன்ன இல்ல. காரணம் நான் புத்தகங்கள் வாசிக்குற பழக்கமே இல்லாதவ. எதேச்சையா தான் எழுத்தாளர் ஊர் கண்ணுல தட்டுப்பட்டுச்சு. அட, நம்ம ஊரு. நாகர்கோவில்.

இந்த நாவல் ரொம்ப தாமதமா தான் என் கைல கிடச்சுது. அதாவது மே பதிமூணு, 2016- க்கு அப்புறம். அதனால என்ன, படிக்க வேண்டியது தானேன்னு கேக்குறீங்க. படிச்சேன். படிச்சு முடிக்க ரெண்டு நாள் ஆச்சு. ஆனா அதுக்கப்புறம் அதுல இருந்து வெளில வர பல நாள் ஆச்சு. இந்த நாவல பத்தி இன்னொரு நாள் விலாவரியா எழுதணும். அதுக்கு முன்னால இந்த நாவல் மே பதிமூணு, 2016- க்கு முன்னால கிடச்சிருக்க கூடாதான்னு ஒரு ஏக்கம்.

அதுக்கு ஒரு முக்கியமான காரணம் இருக்கு. கிட்டத்தட்ட ஒரு அஞ்சாறு வருஷம் கழிச்சு இப்படியான ஒரு காட்டை பாக்க எனக்கு ஒரு வாய்ப்பு கிடச்சுது. ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் சேர்ந்து பதிமூணாம் தேதி எங்கயாவது ஒரு நாள் போயிட்டு வரலாம்னு யோசிச்சப்ப காட்டுக்கு போகலாம்னு முடிவாகிச்சு. காடுனா நம்மூரு பக்கத்துல என்ன இருக்குன்னு அலசி ஆராய்ஞ்சப்ப கோதையாறு போகலாம், அங்க தான் ஈசியா பெர்மிசன் வாங்க முடியும்னு ஃப்ரெண்ட் ஒருத்தன் சொல்ல, சரின்னு மளமளன்னு ஏற்பாடு நடக்க ஆரம்பிச்சது.

அப்படிதான் எங்க பயணம் ஆரம்பிச்சுச்சு. பேச்சிப்பாறை போய், அங்க இருந்து உள் காட்டுக்குள்ள கோதையாறு லோயர் பவர் ஹௌஸ் போய், மறுபடியும் பேச்சிப்பாறை வந்து அங்க போட்டிங் போயிட்டு, திற்பரப்பு, தொட்டிப்பாலம்ன்னு சுத்திட்டு வந்தப்பவே கொஞ்சம் மனசு குளிர்ந்து தான் இருந்துச்சு.

ஆனா அதெல்லாம் விஷயம் இல்ல. பேச்சிப்பாறைல போட்டிங் போயிட்டு செம பசியோட சாப்பிட உக்காந்தப்ப, சுத்தமான தேன், பரோட்டாவுக்கு வச்சு சாப்பிடுங்கன்னு எங்கள கூட்டிட்டு ஊர் சுத்தி காட்டின இஞ்சினியர் கனி சொன்னப்ப, ஞே, பரோட்டாவுக்கு தேனா, வேணாம் வேணாம்னு மறுத்துட்டேன். அப்புறம் பரோட்டாவுக்கு சாம்பார் தான் இருக்குன்னு கேள்விப்பட்டு, தலைல அடிச்சுட்டே, கொஞ்சமா தேன் தொட்டு சாப்ட்டு பாக்கலாமோன்னு ஒரு நப்பாசை வந்து, “சரி, கொஞ்சம் விடுங்க”ன்னு தட்டை நீட்டினதும் தான் தாமதம், அப்படியே பரோட்டா முழுக்க தேனை ஊத்தி விட்டுட்டார். “அய்யய்யோ இத எப்படி சாப்டுறது”ன்னு பதறின நொடி, ஒரு டம்ளர்ல முக்கால் பகுதி ஊத்தி, “அது பத்தலனா இத விட்டுக்கோங்க”ன்னு பக்கத்துல வச்சுட்டு போய்ட்டார்.

நானெல்லாம் சமீப காலமா தேனை நக்கிப் பாத்து தான் பழக்கம். இல்லனா ப்ரெட் சாப்பிடுறப்ப பிச்சு பிச்சு தேன்ல தொட்டுக்கிட்டு சாப்பிடுறது உண்டு. அதையும் தாண்டி சின்ன வயசுல தேனடை சாப்ட்டுருக்கேன். ஆனா அதெல்லாம் கடந்து போன காலமாவே மாறி மறந்தே போயிருந்தது. கடைசியா கார்த்திக் எழுதின “ஆரஞ்சு முட்டாய்” கதை தொகுப்புல வர்ற “தேனடை” கதை படிச்சப்ப பழைய நியாபகங்கள் மீண்டு வந்துச்சு. அதுக்கப்புறம் இப்ப தான் அதோட நியாபகங்கள் வர ஆரம்பிக்குது.

தோப்புக்குள்ள எங்கயாவது தேனடை இருந்துச்சுனா கைல ஒரு தீபந்தத்தோட கும்பலா கிளம்பிடுவோம். தேன்னா, சாதாரண தேனீ உருவாக்குற தேன், அப்புறம் கடந்தை தேன், இன்னொரு வகை கொசு மாதிரி இருக்கும். பேர் தெரியல, அதோட தேன்னு எனக்கு தெரிஞ்சு மூணு வகைல கிடைக்கும். தேன் எடுக்குறப்ப நானெல்லாம் எப்பவும் பாதுகாப்பு வளையத்துக்குள்ள தான். அதனால தேனீகிட்ட கொட்டு வாங்கின அனுபவங்கள் குறைவு தான். அப்படியே கொட்டு வாங்கினாலும் பாட்டி சுண்ணாம்பு எடுத்து கொட்டுப்பட்ட இடத்துல தடவி விடுவாங்க. அவ்வளவு தான். கடந்தை தேன் எல்லாம் நாங்க எடுக்க முடியாது. அது பெரியவங்க தொகுதி. காரணம், கடந்தை விஷம் ரொம்ப கடுமையானதாம். கொட்டினா ஆளே மேலே போக வாய்ப்பு அதிகமாம். ஆனா மருத்துவ குணம் நிறைஞ்சதுன்னு சொல்லுவாங்க. அந்த கொசு (மாதிரி) தேனை எல்லாம் சுலபமா எடுத்துடலாம். பெரும்பாலும் கிணற்று கல் இடுக்குகள்ல தான் கூடு கட்டியிருக்கும்.

இப்படியா கஷ்டப்பட்டு எடுத்துட்டு வர்ற தேனை அப்படியே அந்த மெழுகு கூட்டோட ஒரு பாத்துரத்துல போட்டு கொண்டு வருவோம். வீட்டுக்கு வந்ததும் அந்த மெழுகு கூட்டோட பக்குவமா அரிஞ்சி அப்படியே வாய்ல போட்டுட வேண்டியது தான். இப்ப நினச்சாலும் நாக்குல சப்பு கொட்டுது. சில நேரம் பருவம் தவறி எடுக்குற தேன் கூட்டுக்குள்ள தேனீ குஞ்சுகள் பொரிச்சு வெள்ளை புழுவா உள்ள இருக்கும். அதையும் அப்படியே அரிஞ்சு நல்லா சவைச்சு சாப்பிடுன்னு தின்னத் தருவாங்க. வாய் எல்லாம் வெள்ளையா ஒழுக, தேனையும், அதோட கூட்டு புழுக்களையும் மெழுகோட சேர்த்து சாப்ட்டு முடிச்சா முகத்துல அப்படியே ஒரு மந்தகாசமான புன்னகை வரும். அந்த தேன் மெழுகு, சப்புன்னு இருந்தாலும் அதுக்கும் ஒரு சுவை உண்டு.

அப்படியே ஒவ்வொரு பாளம் பாளமா அள்ளி தேனை குடிச்சு முடிச்சா, அம்மாவும் பாட்டியும் மீதி இருக்குற தேனை அடுப்புல விட்டு காய்ச்சு இறக்குவாங்க. அப்புறம் அந்த தேனுக்கு அதிகமா ருசி இருக்காது. நாங்க தொடக் கூட மாட்டோம். அப்பப்ப புட்டுக்கு விட்டு சாப்ட்டா தான் உண்டு. இதெல்லாம் தான் சின்ன வயசு நியாபகங்கள்ன்னு சொல்லிட்டேனே. இப்பலாம் இப்படி சுத்தமான தேன் எங்க கிடைக்குது. ரொம்ப கட்டியா, கொஞ்சம் வாய்ல விட்ட உடனே திகட்டிப் போய்டுது.

அடடா, பரோட்டாவுல தேனை விட்டுட்டு அப்படியே கதை விட வந்துட்டேன் பாருங்க. கனி சார் பரோட்டா முழுக்க தேனை விட்டுட்டு அவர் பாட்டுக்கு போயிட்டாரா, என்னடா இது, இத எப்படி திங்குறதுன்னு கொஞ்ச நேரம் முழிச்சுட்டு, வேண்டா வெறுப்பா ஒரு துண்டு பரோட்டாவ பிச்சு வாய்ல வச்சேன். கொஞ்ச நொடி ஒண்ணுமே தோணல. அப்புறமா அந்த ருசி நாக்குல ஒட்டிக்கிட்டு என்னை விடவே இல்ல. குழைய குழைய பரோட்டாவ தேன்ல முக்கி முக்கி சாப்ட்டுட்டே இருந்தேன். டம்பளர்ல இருந்த தேன் காலி ஆனதுக்கு அப்புறம் தான் நிமிர்ந்தே பாத்தேன்னா பாத்துக்கோங்களேன். ஆனா நீங்க இப்படி ஒரு விபரீத பரிச்சைல இறங்கிடாதீங்க, காரணம், இப்ப கடைல கிடைக்குறது எல்லாம் சீனி பாகு தான். அத தான் தேன்னு சொல்லி நம்மள ஏமாத்திடுறாங்க. கொஞ்சம் குடிச்சாலும் திகட்டிடும்.

கோதையாறு போயிட்டு வந்ததுல நான் பண்ணின ஒரு நல்ல காரியம், நூத்தி அறுபது ரூபா குடுத்து கிட்டத்தட்ட அரை லிட்டர் காட்டுத் தேன் வாங்கிட்டு வந்தது தான். ஆனா வாங்கிட்டு வந்த நாள் அத கொண்டு போய் பத்திரமா செல்ப்ல வச்சதுல அதப் பத்தி மறந்தே போனேன்.

கிட்டத்தட்ட இருபத்தி ரெண்டாம் தேதி நான் காடு நாவலை படிக்க ஆரம்பிக்குறேன். நாவல் அதோட முதலாம் அத்தியாயத்திலேயே ஒரு மிளாவை அறிமுகப்படுத்துது. ஒரு கல்வெர்ட் மேல கம்பீரமா நின்னு தன்னோட கால் தடத்தை பதிச்ச மிளா எனக்கு காஸ்மீராவ நியாபகத்துக்கு கொண்டு வந்துச்சு. காஸ்மீரா எங்க வீட்டு ஆட்டுக்குட்டி.

வளர்ப்பு பிராணிகள் வச்சுட்டு இருந்த வீடுகள்ல நாய்க்குட்டியும் பூனைக்குட்டியும் படுக்கை அறைக்குள்ள தூங்கிட்டு இருந்த காலத்துல என் வீட்டு படுக்கை அறைக்குள்ள என் கூட தூங்கிட்டு இருந்தவ தான் காஸ்மீரா. அவள பத்தி சொல்ல நிறைய இருக்குறதால அத தனிப் பதிவா பகிரலாம். இப்போதைக்கு, அப்பாவோட ஹீரோ ஹோண்டா மேல கம்பீரமா ஏறி நின்னு ரெண்டு ஹேண்டில் பார் மேலயும் கால்கள அழுத்தமா ஊனி, கண்ணாடியில தன்னோட பிம்பத்த பாக்குற காஸ்மீராவ எனக்கு அந்த மிளா நியாபகப்படுத்திச்சு. அத்யாயத்தோட ஏதோ ஒரு பகுதியில அந்த மிளா காணாம போனப்ப, அதுக்கு எதுவும் ஆகி இருக்காது, சும்மா காணாம போயிருக்கும்னு மனசு சமாதானம் பண்ணிக்க தவறல. அந்த மிளா இன்னும் எங்கயாவது அந்த காட்டுக்குள்ள தான் சுத்திட்டு இருக்கணும்.

நாவலுக்குள்ள போறப்பவே கொஞ்சம் கொஞ்சமா குட்டப்பன், ரெசாலம், சினேகம்மை, ரெஜினாள் மேரி, குருசு இவங்க எல்லாம் நம்ம கூடவே வந்து ஒட்டிக்குறாங்க. அப்படியே சடசடன்னு நம்மள கதைக்குள்ள இல்லல, காட்டுக்குள்ள இழுத்துட்டு போய்டுறாங்க. ஒண்ணே ஒண்ணு மட்டும் நிச்சயம். இந்த ஒரே ஒரு போஸ்ட் எழுதி என்னால காடு நாவல முழுசா சிலாகிக்கவே முடியாது. அதனால இங்க நான் ரசிச்ச மேம்போக்கான விசயங்கள என்னோட வாழ்க்கையோட கொஞ்சம் பேராசையோட பொருத்திப் பாத்துக்குறேன் அவ்வளவு தான். மத்தப்படி காட்டை பத்தி சொல்ற தகுதி எனக்கெல்லாம் நிச்சயமா கிடையாது.

இந்த நாவல்ல குட்டி குட்டியா நான் ரசிக்குறதுக்கு நிறைய விஷயங்கள் இருந்துச்சு. குறிப்பா அந்த தேவாங்கு. தேவாங்குக்கும் ரெசாலத்துக்கும் இருக்குற உறவு முறைய என்னால காயுவும் சக்தியுமா உணர முடிஞ்சுது. சக்தி என்னோட அணில் குட்டி. பிறந்த கொஞ்ச நாள்ல அதோட அம்மா செத்துப் போக, என்கிட்ட அடைக்கலமா வந்தவன். ரெசாலத்துக்கு எப்படி அந்த தேவாங்கு தான் உலகமோ அப்படி தான் இந்த காயுவுக்கு சக்தி தான் உலகு. எப்படி தேவாங்குக்கு ரெசாலம் தாண்டி யாரையும் தெரியாதோ அப்படியே சக்திக்கு காயுவை தாண்டி யாரையும் தெரியாது.

இந்த காட்டுக்குள்ள முன்னேறி போக போக காட்டோட வாசமும், அதோட ஈர சொதசொதப்பும், சலசலக்குற தண்ணியும் நம்மள சூழ்ந்துக்குது. நீலி கிரிதரனுக்கு சந்தன மரக்காட்டுக்குள்ள இருந்து எடுத்துட்டு வந்த தேனடைய வாகா அரிஞ்சி குடுத்து குடிக்க சொன்ன நேரம் எனக்கு நான் வாங்கி மறந்து போயிருந்த தேன் நியாபகம் வந்துச்சு. கிரிதரன் அந்த தேனை குடிச்சுட்டு போதைல கிறங்கிக் கிடந்த நேரம் நானும் அரைலிட்டர் தேனையும் குடுச்சு முடிச்சு ஒரு மிதப்புல இருந்தேன். அந்த தருணத்த எப்படி விவரிக்கனு எனக்கு புரியவே இல்ல. முழு போதை. ஒரு தேன் இத்தன போதைய தரும்னு அதுவரைக்கும் எனக்கு தெரியவே தெரியாது. ரெண்டாயிரத்து பதினாறாம் வருஷம் கிடச்ச தேனே இத்தன போதைனா, கிட்டத்தட்ட நூற்றாண்டு பிந்திய காலத்துல கிடச்ச சுத்தமான சந்தனத் தேன் எத்தனை போதைய குடுத்துருக்கும். நமக்கு கண்டிப்பா தெரியாது, ஆனா கிரிதரன அவனோட இருப்பிடத்துக்கு கொண்டு வந்த மலையத்தி நீலிக்கு தெரிஞ்சிருக்கும்.

எப்படி காட்டுக்கு ஒரு வாசம் இருக்குதோ, அப்படி தான் இந்த நாவலுக்கும் ஒரு வாசம் இருக்கு. அது மலையாளமும் தமிழும் கலந்து ஒரு மாதிரியான புதுவிதமான கலவைய குடுக்குது. ஒவ்வொரு வசனமும் புரிய ஆரம்பிச்சுட்டா அப்புறம் நாமளும் கூட அந்த பாஷை பேசிடலாம். வாசிக்க வாசிக்க அந்த சொற்கள் மனசுக்குள்ள கர்வெட்டா நிலைக்க ஆரம்பிச்சிடுது.

எனக்கு கீரக்காதனை (யானை) பாத்ததும் என்னையே பாத்த நினைப்பு தான். கிட்டத்தட்ட அது காட்டுக்குள்ள வாழ்ந்த கம்பீர வாழ்க்கை, பிடித்த மதம், வழி தப்பி போய் யாராவது காப்பாத்த வந்துட மாட்டாங்களாங்குற ஏக்கம்... கடைசில கீரக்காதனோட அந்த “பாங்” சத்தம் இன்னும் என் காதுக்குள்ள ஒலிச்சுட்டே இருக்கு. அனாதையா விடப்பட்டவங்கள வேடிக்கை மட்டுமே பாக்க முடியும். மிஞ்சி மிஞ்சிப் போனா தலைய வெட்டிப் போட்டு உலக விடுதலை குடுக்கலாம். ஒரே ஒரு காட்சியில வந்தாலும் அந்த புலி மேல ஒரு வெறுப்பு பட்டுன்னு வராம இல்ல.

எப்படி பனிரெண்டு வருசத்துக்கு ஒரு தடவ பூக்குற குறிஞ்சிய பாத்து கிரிதரனுக்கு நீலி மேலயும் குறிஞ்சி மேலயும் இருந்த பிரமிப்பு அகல ஆரம்பிக்குதோ, அப்படி தான் இந்த “காட்டை” படிச்சு முடிச்ச நேரம் எனக்கு நிறைய விஷயங்கள் மேல இருந்த அசூயை, வெறுப்பு, மலைப்பு எல்லாமே தரைமட்டத்துக்கு வந்துருந்துச்சு.

ஜாதிகளும் இனங்களும் நமக்கு அவசியமானவை தான். ஆனா நாம இப்ப ஜாதிகள தூக்கி கொண்டாடிட்டு இனங்கள அழிச்சுட்டோம். அத பத்தின வருத்தம் கொஞ்சம் கூட பெரும்பாலான நம்மகிட்ட இல்ல. அவன் இவனை வச்சிருந்தான், அவள் அவனை வச்சிருந்தாள்ன்னு எல்லாம் கொஞ்சமும் பதறாம இந்த நாவல் சொல்லிகிட்டே போகுது. இந்த உறவுமுறைகள எல்லாம் மனசுக்குள்ள வஞ்சமா வச்சுக்காம “இவன் பிள்ள அவனுக்கு பிறந்ததாக்கும்”ன்னு கூடி கிசுகிசுத்து கொஞ்ச நேரம் மனக்களி அடஞ்சுட்டு அது பாட்டுக்கு நடக்கட்டும்னு அவங்கவங்க வேலைய பாத்துட்டு போற மக்கள்; வயித்துப்பாட்டுக்கு பணம் இல்லனா வர்ற லாரிக்காரங்ககிட்ட ஒதுங்கலாம்னு நினைக்குற பெண்கள், அவங்கள தப்பா பேசாத ஊரும் அதோட நடத்தையும், இயல்பும்; காமம் வந்தா அத தீத்துக்க சொல்லி இருக்குற விதம்னு இந்த நாவல் யதார்த்த மனுசங்கள அப்படியே படம் பிடிச்சு காட்டி இருக்கு.

கற்பும், காமமும்னு பேசி பேசி நாம என்னத்த சாதிச்சுட்டோம்னு தெரியல. காரணம், ஒரு நடுத்தரவர்க்கத்துக்கும் கொஞ்சம் மேலே ஒரு சமூகத்துல பிறந்து, ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள ஒழுக்கங்கள் இது தான்னு மன கட்டுப்பாடுகளோட வளர்ந்த எனக்கு ஒரு கட்டத்துல கிட்டத்தட்ட சினேகம்மைக்களும், ரெஜினாள் மேரிக்களும் கிரிதரனோட மாமியும் அறிமுகம் ஆனப்ப ரொம்ப அதிர்ந்து போனேன். ஓட்டை பிரிச்சு இறங்குறதும் தென்னந்தோப்புக்குள்ள ஒதுங்குறதும் வெகு சஜமா கொண்டாடின அந்த ஜனங்க என் கண்ணு முன்னால வந்துட்டு போனாங்க. எல்லாத்தையும் மீறி அந்த ஊர் மக்களோட அன்னியோன்யம் எனக்கு ஏனோ இப்ப அருவெறுப்ப தரவே இல்ல.

இந்த நாவல்ல வர்ற பலபேரு முறைத்தவறிய காமத்துள் தெரிஞ்சோ தெரியாமலோ மூழ்கிப் போறாங்க. ஆனா அதப் பத்தின குற்ற உணர்ச்சி யாருக்காவது இருக்கான்னு திரும்ப திரும்ப யோசிச்சுப் பாத்தேன். கதை நாயகன் கிரிதரனாகட்டும், சதாசிவம் மாமாவாகட்டும், மாமியாகட்டும், ரெஜினாளாகட்டும், மேரியாகட்டும் எல்லாரும் அத ஒரு சம்பவமாகவோ இல்ல அனுபவமாகவோ எடுத்துட்டு கடந்து போயிட்டே இருக்காங்க. தன் சகமனுசியோட கணவன் இறந்ததும், அவளையும் அவளோட குழந்தைகளையும் ஏத்துக்குற குருசுவாகட்டும், சதாசிவத்துக்கும் தன்னோட மனைவிக்கும் பிறந்த சவலை குழந்தை நியாபகமா தேவாங்கை பிள்ளையா தத்தெடுத்துக்குற ரெசாலமாகட்டும் எல்லோருமே ஒரு வகைல கதை நாயகர்கள் தான்.

நாகரீகம் மக்கள ரொம்ப கெடுத்துடுச்சுன்னு மட்டும் தான் எனக்கு சொல்லத் தோணுது. இயல்பு மனிதர்கள் காட்டைப் போலவே தொலஞ்சுட்டு இருக்காங்க. இல்லனா இப்படியும் சொல்லலாம், ஜெயமோகன் மூலமா, அவரோட காட்டுல மட்டும் இயல்பு மனிதர்கள் வாழ்ந்துட்டு இருக்காங்க...




இன்னும் பேசுவோம்......

Thursday, 19 February 2015

வற்றா நதி - சிறுகதைத் தொகுப்பு


வற்றா நதி – இத பத்தி இதுவரைக்கும் நான் மூச்சு கூட விடல. ஆனா இதோட மேக்கிங் ப்ளான் எப்ப ஆரம்பிச்சுதோ, அப்ப இருந்து கூட இருக்கேன். இதுல இருக்குற இருபத்தி ரெண்டு கதைகளும் புத்தக தயாரிப்புல இருக்கும் போதே நான் வாசிச்சுட்டேங்குரதால புக் கைல கிடைச்சதும், யாதுமாகியவளுக்கு ப்ரியமும் அன்புமாய் மு. கார்த்திக் புகழேந்தி அப்படிங்குற வார்த்தையையே ஒரு மாசத்துக்கு வெறிக்க வெறிக்க பாத்துட்டு இருந்துட்டேன் (புக் ரிலீஸ் டிசம்பர் இருபத்தி ஒண்ணு, எனக்கு புக் கைல கிடைச்சது ஜனவரி பத்து. என்ன ஒரு வேகம் பாருங்க).

அப்புறம் அதுல இருக்குற கதைகள பத்தி சொல்லனும்னா, ஒவ்வொரு கதையும் படிச்சுட்டு ரசிச்சு ரசிச்சு நான் கொண்டாடின கதைகள் தான் எல்லாமே. திருநெல்வேலில வச்சு, இந்த கதைய படிச்சுப் பாருன்னு கார்த்திக் சொன்னா முந்திரிகொட்டைதனமா நான் முதல்லயே படிச்சுட்டேன்னு சொல்லி திட்டு எல்லாம் வாங்கியிருக்கேன். லூசு, இது எடிட்டெட் வெர்சன், வர வர உனக்கு பொறுப்பும் இல்ல அக்கறையும் இல்லன்னு மண்டைல கொட்டும் வாங்கியிருக்கேன். அதனால ஒருவேளை வற்றா நதி-ல சில அடையாளக் கதைகள் நான் சரியா வாசிக்காம விட்டுருக்கலாம்... (என் மேல தப்பே இல்ல, இந்த கண்ணாடி தான் பிரச்சனையே... திட்டனும்னா என் கண்ணாடியை திட்டிக் கொள்ளவும்).

எனக்கும் கார்த்திக்குக்கும் வாக்குவாதங்கள் எல்லாம் வந்துச்சுன்னா அது “சிவந்திப்பட்டி கொலை வழக்கு” கதைல தான். நிறைய விவாதம் பண்ணியிருக்கேன் அதுல. அந்த கதைய வாசிச்ச வேகத்துல எனக்கு மனசே ஆரல. யார திட்டுறேன்னே தெரியாம நிறைய திட்டித் தீத்திருக்கேன். அப்புறம் வந்த கமண்ட்ஸ், திருப்பி கதைய எல்லாம் படிச்சுட்டு தான் நடக்குறத தான் சொல்லியிருக்கார், இங்க மெஸ்சேஜ் சொல்ல இடம் இல்ல தானேன்னு எனக்கு நானே சமாதானம் சொல்லியிருக்கேன். ரெண்டு நாள் என்னை கோபப்பட வச்ச கதை அது. அவ்வளவு தாக்கம்.

“அப்பாவும் தென்னை மரங்களும்”ல கார்த்திக் ஆந்தைகள் பத்தி சொல்லியிருப்பார். அதுவும் அதோட அருமை பெருமைகள எல்லாம் அடுக்கியிருப்பார். என் அப்பா அத எல்லாம் சொல்லித் தந்தது இல்லைனாலும் ஆந்தைகள் அப்பாவுக்கும் ரொம்ப பிடிக்கும். யாரு சொன்னா எங்கையா செத்துட்டார்ன்னு கார்த்திக் அதுல கெத்தா நிமிர்ந்து நிப்பாரு, அதே தான் நானும் சொல்லுவேன், எங்கப்பா சிங்கம்டே...

எங்களோட பழைய வீடு, அந்த வீட்ல ஒரு நிலை கதவு உண்டு. தம்பி எப்பவும் அந்த நிலைகதவுல தான் தொங்கிட்டு இருப்பான். எல்லாரோட வீட்லயும் இப்படி ஒரு நிலைக்கதவு கண்டிப்பா இருக்கும். அது பழைய நியாபகங்கள கண்டிப்பா தட்டி எழுப்பும். “நிலை கதவு” படிச்சா இப்படி தான் இப்படி தான், எங்க வீட்ல நானும் ____ம் ன்னு சொந்த கதைய நாமளும் ஆரம்பிச்சுடுவோம். இத தான நான் சொல்ல வந்தேன், அதுக்குள்ள இந்தாளு சொல்லிட்டாரேன்னு கண்டிப்பா பொறாம வரும்... ஏன்னா, எனக்கு வந்துச்சு.


இவர் எழுதின லவ் ஸ்டோரி படிச்சுட்டு இன்பாக்ஸ் பக்கமா ஒதுங்குன பொண்ணுங்க ஏராளாம். எல்லார் கிட்ட இருந்தும் இவர படாதபாடு பட்டு காப்பாத்த நான் பட்ட பாடு எனக்கு தான தெரியும்... “இதுக்கு மேல பச்சை, பிரிவோம் சந்திப்போம், கிறிஸ்டி ஒரு டைரி குறிப்பு, ஜெனி” கதைகள் பத்தி எதுவும் சொல்லத் தேவையில்லன்னு நினைக்குறேன். ஒவ்வொரு கதையும் தனிப்பட்ட முறைல ஹப்பா... என்னமா எழுதியிருக்க, செம, ஐயோ செல்லம் சான்சே இல்ல பின்னிட்ட போன்னு கால் பண்ணி சிலாகிச்சாலும் பக்கி ஒரு வேளை இவரே சைட் அடிச்சிருப்பாரோன்னு கொஞ்சம் கிலிய உண்டு பண்ணினது என்னவோ உண்மை. அவ்வளவு தத்ரூபம் (இந்த இடத்துல ஒரு சோக ஸ்மைலி எனக்கு மட்டும் நானே போட்டுக்குறேன் L )

ஆனாலும் “காற்றிலிடைத் தூறலாக” படிச்சதும், அப்படியே இல்லாத சட்டைக் காலர நானே தூக்கி விட்டுகிட்டேன். ஏன் தெரியுமா, அதுல வர்ற ஹீரோயின் கல்கி என்னை மாடலா வச்சு எழுதினது தான். நான் இம்பூட்டு நல்லவளா அப்படின்னு நானே பெரும பட்டுகிட்டேன்னா பாத்துக்கோங்களேன். அந்த கதை ரொம்ப நல்லா இருக்கு, சான்சே இல்லன்னு பெரிய பெரிய ரைட்டர்ஸ் எல்லாம் பாராட்டினாங்க மக்கான்னு கார்த்திக் சொன்னப்ப, அப்படியே காத்துல மிதக்குற மாதிரி இருக்கும். அதே மாதிரி “வணக்கத்துக்குரிய” படிச்சுட்டு பெரும தாங்கல. இத எல்லாம் கல்வெட்டுல பொரிக்கணும் அதுக்கு பதிலா தான் புக் போட்ருக்கு. பின்ன நாளைக்கு இவர் பேச்சு மாறிடக் கூடாதுல. இன்னொரு முக்கியமான விஷயம், அந்த கதைல அப்படி என்ன விசேசம்னு கேக்குறீங்களா, மாமனாருக்கு லெட்டர் எழுதினாராமாம், அதையே கதையாக்கிட்டார். படிச்சு பாருங்க, புரியும்.


இந்த பொங்கலோ பொங்கல் கதைய படிச்சதும், பாரு, இந்த பக்கி அப்பவே இப்படி, அதான் இப்பவும் ரசிகைகள் கூட்டம் இவருக்கு மொய்க்குதுன்னு செம கடுப்புல இருக்கேன். அதனால அத பத்தி நான் ஒண்ணும் சொல்ல மாட்டேன். நீங்களும் படிச்சுடாதீங்க, அப்புறம் உங்களுக்கும் கடுப்பு ஏறும், எப்படி எல்லாம் வாழ்ந்துருக்கான் பாருயான்னு...


“பற்றியெரியும் உலை” பத்தி நான் அதிகமா சொல்ல விரும்பல. காரணம், நீங்க அதுல ஆழ்ந்து வாசிச்சா உங்களுக்கே புரியும். நம்மளை பேசவே விடாம, ஒரு மாதிரி குற்ற உணர்ச்சியில தள்ளி விடுற கதை அது. மனசு படபடத்து என்ன பண்றதுன்னே தெரியலயேன்னு ஒரு தவிப்பு நாலு நாளுக்கு மனச பிசைஞ்சுட்டே இருக்கும். உங்களுக்கு குற்றவுணர்ச்சி வரவேனாம்னா அந்த கதைய படிக்காதீங்க, அதுவும் ரெண்டு தடவ படிச்சிடவே படிச்சிடாதீங்க.

இன்னும் நிறைய கதைகள். அத பத்தி எல்லாம் இன்னொரு நாள் சொல்றேன். இப்ப மூச்சு வாங்குது...


கடைசியா ஒண்ணு, இவர் கே.பி இல்ல கே.டி.... ஒவ்வொருத்தரோட பல்ஸ் அறிஞ்சி ஆள ஈசியா மயக்கிடுறாரு... நான் ரொம்ப ரொம்ப கேர்புல்லா இருக்கணும்...