Showing posts with label தென்னங்கீற்றுகளின் சாட்சியாக. Show all posts
Showing posts with label தென்னங்கீற்றுகளின் சாட்சியாக. Show all posts

Wednesday, 2 September 2015

தென்னங்கீற்றுகளின் சாட்சியாக - காயு பேசுறேன்


கவிதை புக் போடணும்னு முடிவெடுத்த உடனே கார்த்திக் கிட்ட போய் பாவமா மூஞ்சை வச்சுகிட்டு, "டே மக்கா, எனக்கு அந்த முன்னுரையோ, அணித்துரையோ என்னமோ ஒண்ணு உண்டுல, அத எழுதி தருவியா"ன்னு கேட்டேன்...

மனுஷன் என்ன மூட்ல இருந்தாரோ, "உனக்கில்லாததா... என்னடி இப்படி கேட்டுட்ட"ன்னு பீல் பண்ணின கையோட, கடகடன்னு அரை மணி நேரத்துல அவரோட பார்ட்ட எழுதி தந்துட்டார். வார்த்தைகளோட விளையாட அவருக்கா தெரியாது...

செல்வா அண்ணா கிட்ட கேட்டேன், அண்ணா சந்தோசமா பொறுமையா என்னோட கவிதைகள படிச்சு எழுதி குடுத்துட்டாங்க. தமிழரசி அக்கா கேக்கவே வேணாம், நம்மள ஒரே செல்லம் கொஞ்சல்ஸ் தான்...

எல்லாரும் எழுதியாச்சு. நான் என்ன எழுதுறது?

பேஸ்புக்லனா எதையாவது கடகடன்னு எழுதி போட்டுடலாம். ஆனா இது புக்கு. கவிதை புக்குக்கு கொஞ்சமாவது கவிதைத்துவமா எழுத வேண்டாமா?

என்ன எழுத, என்ன எழுதன்னு யோசிச்சு யோசிச்சு ஒண்ணும் புரியல. சரி, இதுக்கு ஏதாவது பண்ணணுமேன்னு கார்த்திக் கிட்ட போய் "மக்கா, நான் எழுத வேண்டிய போர்சன் சொல்லித் தாயேன், ப்ளீஸ், ப்ளீஸ், ப்ளீஸ்"ன்னு கெஞ்ச ஆரம்பித்தேன்.

ஆளு கெஞ்சினாலும் மசியல, கொஞ்சினாலும் மசியல, "ஓடிப் போய்டு"ன்னு தொரத்தியே விட்டுட்டார்.

ஆனாலும் விடுற ஆளா நாம.... ஒரு நாள் ராத்திரி முழுக்க உக்காந்து, மனுசன சொரண்டி சொரண்டி, கொஞ்சம் கொஞ்சமா சேகரிச்ச விசயங்கள தான் நீங்க கீழ படிக்கப் போறீங்க...

முழுசா எல்லாத்தையும் முடிவு பண்ணிட்டு அந்த வார்த்தைகள படிச்சா, எனக்கே அவ்வளவு பிடிச்சுப் போச்சு...

என்னை, முழுசா இதான் நான்னு உணரவச்ச வரிகள் அதெல்லாம்....

இதுக்காக கார்த்திக்குக்கு தேங்க்ஸ் எல்லாம் சொல்ல முடியாது. ராட்சசன், எவ்வளவு கெஞ்ச வேண்டியதா போச்சு... கிர்ர்ர்ர்ர்....

சரி, சரி, அப்படி என்ன தான் என் புக்ல எழுதியிருக்கேன்....

இந்தா இதான்......

*******************************************

வண்ணங்கள் நிறைந்த நாட்கள்
----------------------------------------------

எந்த புள்ளியிலிருந்து தொடங்குவது என்றெல்லாம் தெரியவில்லை.. ஆனால் தொடங்கிவிட்டேன். தென்னங்கீற்றுகளின் சாட்சியாக... நான் காயத்ரிதேவி. இப்படி ஒரு பெயரால் உங்களிடம் அடையாளப்பட்டுக் கொண்டவள்..
மரங்கள், அணில்கள், வண்ணத்துப்பூச்சிகள், மீன்கள், கிளிகள், நந்து, தம்பி, தேவதைகளுக்குப் ஆண்பாலாக வாய்த்திருக்கும் அப்பா என்ற என் உலகம் அத்தனையும் பேரன்பால் சூழப்பட்டதென்று நீங்கள் அநேகமாய் அறிந்திருப்பீர்கள். ஆனால் நீங்கள் அறியாத ஏதோ ஒன்றிலும் இல்லை இல்லை ஒவ்வொன்றிலும் நான் இருக்கின்றேன்.

இதோ நகர்ந்துபோன இந்த நொடிகளைக் கூட உணர்வுகளால் கடத்திப் போகும் மாயவித்தையை இந்த கவிதைகளில் மட்டுமே நான் கண்டடைந்திருக்கின்றேன். என் உலகை அம்மாவுக்கு முன் அம்மாவுக்குப் பின் என்று இரண்டிரண்டாய்ப் பிரிக்கலாம்...

செல்லமாய்க்கிள்ளி என்பிள்ளை என்று வாரியெடுத்து முத்தமிட்ட தாயின் கன்னத்து எச்சிலைத் துடைத்து போம்மா என்று தூக்கக் கலக்கத்தில் வீராப்புக்காட்டும் சிலுப்பட்டைக்காரியாக வாழ்ந்த நாட்கள்... வண்ணங்கள் நிறைந்தவை..

அம்மாவுக்குப் பிறகான நாட்களை அத்தனை வலிகளோடு கடந்திருக்கிறேன்... வலிகள் என்றால் உச்சரிக்கின்ற வெறும் வார்த்தை அல்ல, ஒவ்வொரு இழையாகக்கீறி மறுபடி இழைத்து என்னை நெய்தது போல மரணங்களைத் தொட்ட நாட்கள் அவை. பின்னே வான்முட்டப் பறக்க சிறகுகளை வளர்த்துக்கொள்ள சுதந்திரப்படுத்தப்பட்டேன்.

கூட்டுப்புழுவுக்குச் சுதந்திரம் பிடிக்குமென்று நாம் கற்பித்துக் கொண்டிருக்கின்றோம்... எதுவுமற்ற பிரபஞ்சத்தில் எல்லாமுமான சுதந்திரத்தில் நிரம்பி இருக்கும் வெறுமையை நீங்கள் கொஞ்சம் நினைத்துப் பார்த்தால் பயமொன்று கவ்விக் கொள்கிறதா இல்லையா.. அப்படி என்னைக் கவ்வின பயத்தை நான் மெல்ல மெல்ல தடவிக்கொடுத்து நான் சொன்னது கேட்கும் நாய்க்குட்டியாக்க கொஞ்சம் அன்பைப் பொழியவேண்டியதாய்ப் போனது...

அதன்பின்னான நாட்களில் எனக்கு பயங்கள் இல்லை... ஆனால் ஏதோ ஒன்றை இழந்த வெற்றிடத்தை எதைக் கொண்டு நிரப்பினாலும் இன்னும் இன்னுமென அடம்பிடிக்கத் துவங்கிய மனதுக்கு ஏதோ உரு ஸ்திரமான பிடி தேவையாக இருந்தது. அந்நாளில் தான் என்னுள் மொத்தமாய் ஒருவன் நுழைந்து என் வெற்றிடங்களில் எல்லாம் தன்னை நிரப்பிக்கொண்டான்.

அவன் திமிர், பரிச்சயம், வலிகள், கோபம், நட்பு, அன்பு, பேரன்பு என எல்லாமுமாய் நிறைத்துவிட்டான்.. வெள்ளியுதிரும் வரைக்கும் கதைசொல்லியாகி மறத்துப் போன விழிகளுக்கு உறக்கம் கொடுத்தான். போதும் இனி அள்ளிக்கொள்ள என் கைகள் பத்தாது என்று சொல்லும் வரைக்குமாய் கை நிறைய அன்பைக் கொடுத்தான். அவன் தோள்கள் எத்தனை சுகமானது... அதனால் தான் தோழனென்ற வார்த்தை கூட அழகாகப் படுகிறதோ என்னவோ...

அன்பின் நிமித்தம் என்னையே முழுமொத்தமாய்த் தாங்கித் திரிந்தவன்.. எல்லாமுமாகிவிட்ட ஒருநாள் காதலைக் கேட்டபோது ஒரு மொட்டைமாடி நிலவும் சில தென்னங்கீற்றுகளும் மட்டுமே எங்களுக்குள் சாட்சியாகி நின்றன...

அன்பின் ஈர்ப்பில் கரைந்துகொண்டிருந்த என்னை அசட்டையாய்க் கடந்துபோக இயலாத அந்த நண்பன்... இதோ இன்னும் நெருக்குகிறான் இதயத்தின் சப்தங்களை...

இப்போது எங்களுக்குள் காதல் பூத்துவிட்டதாய் ஊர்சொல்லித் திரிகிறது... நெருப்பில்லாமல் புகையாதாமே! உண்மையா இல்லையாவென்று அவனிடமே தான் கேட்கவேண்டும்..

நண்பனாகியிருந்த அவன் நினைவுகள் காதலாகிப் போனபின் ஏற்பட்ட சலனங்களின் மொழிகளை உணர்வுகளாக்கி இங்கே பக்கங்கள் பூராவும் எழுதப்பட்டிருக்கிறது... மீண்டும் வண்ணம் தீட்டப் பட்டிருக்கிறது என் வீடு.

விம்மலான அழுகையும், பின்னே அவன் படுத்துகிற சமாதானமும்... அழவைக்கும் கோபமும்.. தவிக்கவிடும் விலகலும், தேடிவந்து கோர்த்துக் கொள்ளும் கரங்களும், திகட்டத் திகட்டத் தீராக் காதலுமாய்.. நிகழ்ந்த இவ்வுணர்வுகள் எல்லாம்... எனக்குள் நானே எழுதிக்கொண்ட எழுதின இரண்டாம் அத்யாயம்...

அந்த அத்யாயங்களை மீண்டும் வாசித்துப் பார்க்க என் பக்கங்களைப் புரட்டியபோது இழையோடிக் கொண்டிருந்த என் சிநேகங்களுக்குரியவனைப் பற்றிய பாடல் தான் மழையாய் நனைந்துகொண்டிருக்கிறது..

அந்த மழையில் நனைந்த தென்னங்கீற்றுகளின் நுனியில் வரிசைகட்டி நிற்கும் மழைத்துளிகள் தாம் இந்தக் கவிதைகள்.

கொஞ்சம் விரல்நீட்டி மழைத்துளிகளை சிதறடித்து விளையாடிக் கொண்டிருக்கின்றேன் அத்தனைக் குழந்தைத் தனத்தையும் பத்திரமாய்ச் சேமித்துக் கொண்டபடி.. யார் சொன்னார் இப்போதென் அம்மா என்னருகில் இல்லையென...

-காயத்ரி தேவி

Thursday, 4 June 2015

மாமலையும் ஓர் கடுகாம்




வேக வேகமா இல்லாம ஆமை வேகத்துல என்னோட "தென்னங்கீற்றுகளின் சாட்சியாக" கவிதை புக் ரெடி ஆகிட்டு இருக்கு.

அது வெளி வரப்போற நாளை ஆவலோட எதிர்பாத்துக்கிட்டு இருந்தாலும், அடுத்த புத்தகத்துக்கான கவிதைகள தொகுத்துடலாமா இல்ல வேணாமான்னு ஆலோசனைல இருக்கேன்.

எதோ ஒரு தைரியத்துல என்னோட கவிதை புக்கை நானே பப்ளிஷ் பண்றேன்னு மங்காத்தா முன் வந்தாலும் அவருக்கு அச்சடிச்ச காசாவது மிச்சம் கிடைக்கணுமேன்னு எனக்கு பயமா இருக்கு. அதனால தான் கிட்டத்தட்ட ரெண்டு வருசமா, உங்க கவிதைகள புத்தகமா போட தாங்களேன்ன்னு அவர் கேட்டும் நான் ஒத்துக்கல...

இப்ப தான் ஒரு தைரியம் வந்திருக்கு. சொந்த காசைப் போட்டு கவிதை புக் அச்சடிக்குற இந்த  காலத்துல நம்ம கவிதைகள அவரே புக்கா  போடுறாரே, அப்படினா  நம்ம எழுத்துல என்னமோ கண்டிப்பா இருக்கும்ங்குற நம்பிக்கை பூத்திருக்கு.

சரி, அத எல்லாம் விடுங்க, இந்த புக்ல கார்த்திக் பணிந்துரை எழுதிருக்கார். அதென்ன பணிந்துரைன்னு கேக்குறீங்களா?

இந்தா நீங்களே படிச்சுக்கோங்க....
.............................................................................

இதுவே சங்ககாலமாக இருந்தால் தலைவியின் கவிதைகளுக்குத் தலைவன் அணிந்துரை எழுதுகிறான் என்று சொல்லியிருக்கலாம். சமகாலத்தில் அப்படிச் சொன்னால் எந்த அரசியல்கட்சித் தலைவன் என்று கேட்பார்கள். ஆகவே காதலியின் கவிதைத் தொகுப்புக்கு ஒரு காதலனாக பணிந்து உரை எழுதுகிறேன்.

உலகில் மெய்ப்பிக்க முடியாத பிரச்சனைகள் பல. பிரச்சனையாக அல்லாமல் அல்லும் பகலும் நம்மை உலுக்கியெடுக்கும் ஒன்றாக இருப்பது நம் உணர்வுகள். இந்த உணர்வுகளை இப்படி அப்படி புரட்டுப் போட்டு நிறைய கேள்விகளை நமக்கு நாமே கேட்டுக் கொண்டுதான் இந்த நாகரீகம் கலாச்சாரம் பண்பாடு பாஸ்பரஸ் பயோ கெமிஸ்ட்ரி சமீப நெருக்கமாக நானோ டெக்னாலஜி வரைக்கும் நுட்பங்கள் பல உருப்பெற்றிருக்கின்றன.

பன்முக உணர்வுகளின் ஆகச் சிறந்த கிறுக்குத்தனம் கவிதை எழுதுவதென நம்பிக் கொண்டிருப்பவன் நான். ஆதியிலிருந்தெல்லாமில்லாமல் பாதியிலிருந்து கவிதை எழுதத் தொடங்கினவன். ஆனால் அவைகளை எல்லாம் தொகுத்து புத்தகமாக்கும் தைரியம் இந்த நிமிடம் வரை எனக்கு வரவே இல்லை. காயத்ரிக்கு அந்த தைரியமிருப்பது எனக்கு ஆச்சர்யமான ஆச்சர்யம். உணர்வுகளின் மொழி தான் காயத்ரி தேவியின் கவிதைகளின் பாடுபொருள். அவற்றை பேசுபொருள் என்றுகூட அழைக்கலாம். ஆம் இக்கவிதைகள் உங்களோடு பேசக் கூடும். இந்த உத்திரவாதம் தருவதற்குக் காரணம் இவை என்னோடும் பேசியிருக்கின்றன.

அத்துவானக் காட்டில் அடக்கமாட்டாத சிறுகுழந்தையின் ரீங்காரமிசைக்கும் குரல் போல ஒலிக்கும் காயத்ரியினது கவிதைகளை அளவுகடந்து நேசிப்பவன் நான். ஆனால் அதனை ஒருபோதும் வெளிச் சொன்னதில்லை, எப்போதாவது பொங்கும் கங்கைபோல் வார்த்தைகள் என்னையும் மீறி வெளிப்பட்டிருக்கின்றது. அம்மாவுக்கு ஒரு கவிதை எழுதி இருப்பார்; ஒரு மகளின் கேவல்களை எல்லாம் அசட்டையான கேள்விகளால் கடக்கச் சொல்லும் காலத்தின் வலியை பரிபூரணமாய் வெளிப்படுத்துமந்தக் கவிதை. பின்பொருநாள் தந்தைக்கு மகள் எழுதும் வேண்டலாக ஒன்று, தாய்மையோடொன்று, ஏராளமாக காதலோடு பல கவிதைகள் எழுதி இருக்கிறார்.

இந்தத் தொகுப்பில் நீங்கள் கவிதைகள் இருக்கும் வாசிக்கலாம் என்று நினைத்தால் பெரும்பாலும் நீங்கள் ஏமாற்றமடையலாம். இவை அத்தனையும் உணர்வுகள். காற்று சுழன்றடிப்பதை கண்முன்னே காண முடிந்தும் அதன் அரூபத்தை ஏற்றுக்கொள்ளமுடியும் உணர்வுகள். அவைதான் இங்கே கவிதைகளெனச் சொல்லப்பட்டிருக்கின்றன காயத்ரியால்..

இந்த பணிந்துரை எழுதுவதற்கு மட்டும் தான் வலியுறுத்தப்பட்டேன். மற்றபடி என்ன எழுதவேண்டுமென்பதெல்லாம் என் விருப்பங்கள் தான். ஆக நீங்கள் என்னை பயந்த சுபாவமுடையவன் என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். “கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால் மண்ணில் குமரர்க்கு மாமலையும் ஓர் கடுகாம்” என்ற பாரதிதாசன் கூற்றை ஏற்றுக் கொள்வீர்கள் தானே!

மிகமுக்கியமாக இந்தத் தொகுப்பின் தலைப்பு பற்றிச் சொல்லியாகவேண்டும். பெளர்ணமி நிலவு ஓர் நாள் ஊரில் உள்ள அத்தனைப் பெண்களிலும் இவளொருத்தியை மட்டும் பேரழகியாகப் பிரதிபலித்துக் கொண்டிருந்தபோது இவள் விழிப்பார்வைக்கு அடங்க மாட்டாமல் “ உன்னைப் பிடித்திருக்கிறது. எப்போ கல்யாணம் பண்ணிக்கலாம்” என்று கேட்டு வைத்தேன். அந்த இரவில் எங்களுக்கிடையில் சாட்சியாக இருந்தது அந்த மொட்டைமாடி நிலவும், தென்னங்கீற்றசைவுகளும் தான்... நான் நிலவின் மீது கொஞ்சம் போதை கொண்டிருந்ததால், இவள் தென்னங்கீற்றை தனக்குச் சாதகமாக்கிக் கொண்டுவிட்டாள். முதலாம் தொகுப்புக்கு வாழ்த்துகள் காயு. மலர்போல் வாழ்க. என்ன மலரென்று சொல்லவில்லையே..! அதை உனது அடுத்த புத்தகத்திலெழுதுகிறேன்...


- கார்த்திக் புகழேந்தி
.

Wednesday, 22 April 2015

வண்ணங்கள் நிறைந்த நாட்கள்



எந்த புள்ளியிலிருந்து தொடங்குவது என்றெல்லாம் தெரியவில்லை.. ஆனால் தொடங்கிவிட்டேன். தென்னங்கீற்றுகளின் சாட்சியாக... நான் காயத்ரிதேவி. இப்படி ஒரு பெயரால் உங்களிடம் அடையாளப்பட்டுக் கொண்டவள்..

மரங்கள், அணில்கள், வண்ணத்துப்பூச்சிகள், மீன்கள், கிளிகள், நந்து, தேவதைகளுக்குப் ஆண்பாலாக வாய்த்திருக்கும் அப்பா என்ற என் உலகம் அத்தனையும் பேரன்பால் சூழப்பட்டதென்று நீங்கள் அநேகமாய் அறிந்திருப்பீர்கள். ஆனால் நீங்கள் அறியாத ஏதோ ஒன்றிலும் இல்லை இல்லை ஒவ்வொன்றிலும் நான் இருக்கின்றேன்.

இதோ நகர்ந்துபோன இந்த நொடிகளைக் கூட உணர்வுகளால் கடத்திப் போகும் மாயவித்தையை இந்த கவிதைகளில் மட்டுமே நான் கண்டடைந்திருக்கின்றேன். என் உலகை அம்மாவுக்கு முன் அம்மாவுக்குப் பின் என்று இரண்டிரண்டாய்ப் பிரிக்கலாம்... செல்லமாய்க்கிள்ளி என்பிள்ளை என்று வாரியெடுத்து முத்தமிட்ட தாயின் கன்னத்து எச்சிலைத் துடைத்து போம்மா என்று தூக்கக் கலக்கத்தில் வீராப்புக்காட்டும் சிலுப்பட்டைக்காரியாக வாழ்ந்த நாட்கள்... வண்ணங்கள் நிறைந்தவை..

அம்மாவுக்குப் பிறகான நாட்களை அத்தனை வலிகளோடு கடந்திருக்கிறேன்... வலிகள் என்றால் உச்சரிக்கின்ற வெறும் வார்த்தை அல்ல, ஒவ்வொரு இழையாகக்கீறி மறுபடி இழைத்து என்னை நெய்தது போல மரணங்களைத் தொட்ட நாட்கள் அவை. பின்னே வான்முட்டப் பறக்க சிறகுகளை வளர்த்துக்கொள்ள சுதந்திரப்படுத்தப்பட்டேன்.

கூட்டுப்புழுவுக்குச் சுதந்திரம் பிடிக்குமென்று நாம் கற்பித்துக் கொண்டிருக்கின்றோம்... எதுவுமற்ற பிரபஞ்சத்தில் எல்லாமுமான சுதந்திரத்தில் நிரம்பி இருக்கும் வெறுமையை நீங்கள் கொஞ்சம் நினைத்துப் பார்த்தால் பயமொன்று கவ்விக் கொள்கிறதா இல்லையா.. அப்படி என்னைக் கவ்வின பயத்தை நான் மெல்ல மெல்ல தடவிக்கொடுத்து நான் சொன்னது கேட்கும் நாய்க்குட்டியாக்க கொஞ்சம் அன்பைப் பொழியவேண்டியதாய்ப் போனது...

அதன்பின்னான நாட்களில் எனக்கு பயங்கள் இல்லை... ஆனால் ஏதோ ஒன்றை இழந்த வெற்றிடத்தை எதைக் கொண்டு நிரப்பினாலும் இன்னும் இன்னுமென அடம்பிடிக்கத் துவங்கிய மனதுக்கு ஏதோ உரு ஸ்திரமான பிடி தேவையாக இருந்தது. அந்நாளில் தான் என்னுள் மொத்தமாய் ஒருவன் நுழைந்து என் வெற்றிடங்களில் எல்லாம் தன்னை நிரப்பிக்கொண்டான்.

அவன் திமிர், பரிச்சயம், வலிகள், கோபம், நட்பு, அன்பு, பேரன்பு என எல்லாமுமாய் நிறைத்துவிட்டான்.. வெள்ளியுதிரும் வரைக்கும் கதைசொல்லியாகி மறத்துப் போன விழிகளுக்கு உறக்கம் கொடுத்தான். போதும் இனி அள்ளிக்கொள்ள என் கைகள் பத்தாது என்று சொல்லும் வரைக்குமாய் கை நிறைய அன்பைக் கொடுத்தான். அவன் தோள்கள் எத்தனை சுகமானது... அதனால் தான் தோழனென்ற வார்த்தை கூட அழகாகப் படுகிறதோ என்னவோ...

அன்பின் நிமித்தம் என்னையே முழுமொத்தமாய்த் தாங்கித் திரிந்தவன்.. எல்லாமுமாகிவிட்ட ஒருநாள் காதலைக் கேட்டபோது ஒரு மொட்டைமாடி நிலவும் சில தென்னங்கீற்றுகளும் மட்டுமே எங்களுக்குள் சாட்சியாகி நின்றன...

அன்பின் ஈர்ப்பில் கரைந்துகொண்டிருந்த என்னை அசட்டையாய்க் கடந்துபோக இயலாத அந்த நண்பன்... இதோ இன்னும் நெருக்குகிறான் இதயத்தின் சப்தங்களை...

இப்போது எங்களுக்குள் காதல் பூத்துவிட்டதாய் ஊர்சொல்லித் திரிகிறது... நெருப்பில்லாமல் புகையாதாமே! உண்மையா இல்லையாவென்று அவனிடமே தான் கேட்கவேண்டும்..

நண்பனாகியிருந்த அவன் நினைவுகள் காதலாகிப் போனபின் ஏற்பட்ட சலனங்களின் மொழிகளை உணர்வுகளாக்கி இங்கே பக்கங்கள் பூராவும் எழுதப்பட்டிருக்கிறது... மீண்டும் வண்ணம் தீட்டப் பட்டிருக்கிறது என் வீடு.

விம்மலான அழுகையும், பின்னே அவன் படுத்துகிற சமாதானமும்... அழவைக்கும் கோபமும்.. தவிக்கவிடும் விலகலும், தேடிவந்து கோர்த்துக் கொள்ளும் கரங்களும், திகட்டத் திகட்டத் தீராக் காதலுமாய்.. நிகழ்ந்த இவ்வுணர்வுகள் எல்லாம்... எனக்குள் நானே எழுதிக்கொண்ட எழுதின இரண்டாம் அத்யாயம்...

அந்த அத்யாயங்களை மீண்டும் வாசித்துப் பார்க்க என் பக்கங்களைப் புரட்டியபோது இழையோடிக் கொண்டிருந்த என் சிநேகங்களுக்குரியவனைப் பற்றிய பாடல் தான் மழையாய் நனைந்துகொண்டிருக்கிறது..

அந்த மழையில் நனைந்த தென்னங்கீற்றுகளின் நுனியில் வரிசைகட்டி நிற்கும் மழைத்துளிகள் தாம் இந்தக் கவிதைகள். கொஞ்சம் விரல்நீட்டி மழைத்துளிகளை சிதறடித்து விளையாடிக் கொண்டிருக்கின்றேன் அத்தனைக் குழந்தைத் தனத்தையும் பத்திரமாய்ச் சேமித்துக் கொண்டபடி.. யார் சொன்னார் இப்போதென் அம்மா என்னருகில் இல்லையென...

......................................................

நான் கொடுத்த அத்தனை இடைஞ்சல்களையும் சிரமமேற்று சின்ன கன்னச்சுழிப்புகளைக் கூட உதிர்க்காமல் புன்னைகையோடு என் கனாக்களுக்குக் காகிதத்தில் வடிவம் கொடுத்த மங்காத்தாவுக்கு...

என் உலகங்களின் ஒவ்வொரு அசைவிலும் சியர்ஸ் சொல்லில் தட்டிக்கொடுத்து மொத்தக் கவிதைகளையும் படித்து அப்படியே தன் உள்ளுணர்வுகளை வார்த்தைகளால் சிந்தி அன்புக்கு அன்பு செய்த செல்வா அண்ணாவுக்கு...


எனக்கான தேசத்திற்குள் என் அன்பை அப்படியே ஏற்றுக்கொண்டு துளியும் களங்கமற்று எனக்கே திருப்பி அளிக்கும் தமிழரசி அக்காவுக்கு...

என்னுடைய பேரன்பு...



என்னைப் பாராட்டத் தெரியாத என்னை நேசிக்கத் தெரியாத என் ப்ரியங்களைப் புரிந்துகொள்ளாத இவ்வளவு ஏன் என் கோபங்களைக் கூட குழந்தைத்தனமாகக் கொள்கிற...

கார்த்திக்கு ஓங்கி மண்டமேலே ரெண்டு கொட்டு....





-இப்படிக்கு பட்டர்ஃப்ளை


(என்னோட "தென்னங்கீற்றுகளின் சாட்சியாக" கவிதை புத்தகத்துல வர்ற என் உரை) 





.

Wednesday, 8 April 2015

தென்னங்கீற்றுகளின் சாட்சியாக...



திடீர்னு ஒரு நாளு அர்த்தராத்திரியில மனசுக்குள்ள ஒரு மாதிரியான ஒரு வெறுமை. என்னடா இது, பிறந்தோம், வளந்தோம்னு ரொம்ப வெட்டியாவே இருக்கோமோன்னு தோணிகிட்டே இருந்துச்சு.

எனக்குன்னு ஒரு அடையாளம் வேணும், அதுவும் சீக்கிரமே வேணும்னு நினச்சப்ப தான் ஏன் நாம எழுதின உணர்வுகள எல்லாம் ஒரு புத்தகமா போட்டு இந்த மக்கள கொலை பண்ணக் கூடாதுன்னு தோணிச்சு.

உடனே சரி, நாம எழுதினதுல காதல் சார்ந்தத தனியா எடுத்து வைப்போம்னு முடிவு பண்ணி கடகடன்னு காதல் கவிதைகள (கவிதைன்னு சொல்றது தப்பு தான், ஆனா வேற என்ன பேரு குடுக்கணும்னு தெரியல) அந்த அர்த்த ராத்திரியில தொகுக்க ஆரம்பிச்சேன்.

ஒரு புக் போட தேவையான கவிதைகள தேர்ந்தெடுத்தாச்சு, அடுத்து என்னப் பண்ணலாம், காசு குடுத்து எல்லாம் நம்மால புக் போட முடியாதேன்னு ஒரே யோசனை...

ரெண்டு வருசத்துக்கு முன்னாடி ம்ம்ம்-ன்னு ஒரு வார்த்தை சொல்லுங்க, உங்க கவிதைகள புக்கா போட்ரலாம்ன்னு மங்காத்தா சொல்லிட்டே இருப்பார். அவருக்கு "நான் புக் போட ரெடி, இதெல்லாம் தான் நான் புக்ல போட தேர்ந்தெடுத்த கவிதை. எப்போ புக் வெளி வரும்னு ஒரு மெயில் தட்டி விட்டேன்...

அப்புறம் என்ன, அடுத்த நாள்ல இருந்து மளமளன்னு வேலை ஆரம்பிச்சாச்சு...

பப்ளிஷர்க்கு கால் பண்ணி, நான் அஞ்சு பைசாக் கூட தர மாட்டேன், எனக்கு மார்கெட்டிங் பண்ணத் தெரியாது, அதனால ஒரு புக் கூட என்னால விக்க முடியாதுன்னு சொன்னேன். அதனாலென்ன, எல்லாம் நான் பாத்துக்குறேன்னார்... நமக்கு அந்த வார்த்த போதாதா என்ன?

நம்மகிட்ட மாட்டிகிட்டவர சும்மா விட முடியுமா, அடுத்து, ஒவ்வொரு கவிதைக்கும் படம் போட்டு டிசைன் பண்ணுவோமான்னு கேட்டேன். பாவம், அவரும் சரின்னு தலையாட்டினார்.

இப்ப புக் கலர்ல பிரிண்ட் ஆகுறதா முடிவாகிடுச்சு. வெறுமனே ஒரு படத்த எடுத்து கவிதை மேல போடுறதுல எனக்கு விருப்பம் இல்லாததால நானே படங்கள தேர்வு செய்து, இந்த கவிதைக்கு இது தான் படம்னு முடிவு பண்ணி டிசைன் பண்ணினேன்...

எல்லாமே நல்லா தான் போயிட்டு இருந்துச்சு, அடுத்து கவிதை பிரிண்ட் பண்ணப்பட வேண்டிய பேப்பர் சாதரணமா இருந்தா நல்லாயிருக்காதேன்னு அதையும் பளபளப்பா குடுக்குறதா முடிவு பண்ணியாச்சு. பப்ளிஷர் அதுக்கும் தலையாட்டுறார்... எனக்கு கோவில் ஆடு ஏனோ நியாபகத்துக்கு வந்து தொலைக்குது...

சரி, அடுத்து இந்த அணிந்துரை, கருத்துரை எல்லாம் இருக்கே யார் கிட்ட கேக்குறது?

எனக்கு செல்வா அண்ணா, கார்த்திக், தமிழரசி அக்கா மூணு பேரும் தான் நியாபகத்துக்கு வந்தாங்க.

கார்த்திக் கிட்ட கேக்கலாம், ஆனாலும் ஒரு பயம். திட்டி விட்ருவாரோன்னு. தயங்கி தயங்கி கேட்டேன். எழுதி தரேன்னு சொன்னார், ஆனாலும் அடுத்த நேரம் பேசும் போது கவிதை புக் எல்லாம் நீ போடுறது வேஸ்ட்ன்னு சொன்னார். சரி தான், அப்ப இவர் எழுதிக் குடுக்குறது சந்தேகம் தான்னு முடிவு பண்ணிட்டேன்...

பேஸ்புக்ல எழுத ஆரம்பிச்ச காலங்கள்ல செல்வா அண்ணா என்னை தட்டிக் குடுத்துருக்கார். இவர் மட்டும் அணிந்துரை எழுதி தந்தா "ஆத்தா நான் பாசாயிட்டேன்"ன்னு எகிறி குதிக்கலாம். ஆனா அண்ணாவுக்கு நேரம் இருக்குமா, அப்படியே நேரம் இருந்தாலும் நம்ம எழுத்தெல்லாம் அவர் ரசிக்குற மாதிரி இருக்குமான்னு எல்லாம் பயங்கர சந்தேகம். ஆனாலும் அண்ணா, நான் ஒரு கவிதை புக் போடப் போறேன், அணிந்துரை எழுதித் தருவீங்களான்னு கேட்டுட்டேன். அதுக்கென்ன தங்க்ஸ், உடனே எழுதி தரேன்னு அவரும் சொல்லிட்டார்.

அப்புறம் தமிழரசி அக்கா. எங்கடா போனாங்க இவங்கன்னு பேஸ்புக் முழுக்க வலைவீசி தேடிட்டு இருக்கேன். அவங்க வாட்ஸ் அப் நம்பர கூட நான் தொலைச்சுட்டேன் (இந்த வாக்கியம் அக்கா கண்ணுல பட்டுரக் கூடாது அவ்வ்வ்வ்). திடீர்னு ஒரு நாள் ஒரே பட்டாசு வெடிக்குற சத்தம். யாருடா இதுன்னு பாத்தா அட, நம்ம அக்கா... ஓடிப் போய் அவங்க இன்பாக்ஸ்லயும் நான் புக் போட போற விசயத்த சொல்ல அவங்களும் சந்தோசமா எழுதித் தரேண்டான்னு சொல்லிட்டாங்க...

ஆக, இப்ப செல்வா அண்ணா, தமிழரசி அக்கா ரெண்டு பேரும் ஆசிகளோட அவங்க முன்னுரைய எழுதி தர, எழுதி தரமாட்டாரோன்னு நினச்ச கார்த்திக்கும் அணிந்துரை எழுதித் தர, புக் முக்கால்வாசி தயாராக ஆரம்பிச்சாச்சு.

அட்டைப்படம் டிசைன் பண்ணணும். ஏற்கனவே சிவகாசி சுரேஷ் கிட்ட சொல்லி ஒரு அட்டை வடிவமைச்சாச்சு. ஆனாலும் மனசுக்குள்ள இன்னும் பெட்டரா இருந்தா நல்லாயிருக்குமோன்னு தோணிகிட்டே இருக்கு. யாராவது நல்லா படம் வரைய தெரிஞ்சவங்க ஒரு அட்டைப் படம் வரைஞ்சு குடுத்தா நல்லாயிருக்கும்... தேடிட்டு இருக்கேன்...

வழக்கம் போல, நான் எதுனாலும் உங்ககிட்ட தானே சொல்லுவேன், அதனால இதையும் சொல்லிட்டேன்...

நன்றியும் ப்ரியமும்

Mangaaththa Mangai க்கு

Selva Kumar அண்ணாவுக்கு

தமிழ் அரசி அக்காவுக்கு

சிவகாசி சுரேஷ் க்கு...

அப்புறம், அப்புறமா கார்த்திக்கு தனியா தேங்க்ஸ் சொல்லிக்குறேன், காரணம், இன்னும் கொஞ்சம் வேலை வாங்கவேண்டியிருக்கு அவரை. ஒருவாரமா ட்ரை பண்றேன், ஆள் இன்னும் சிக்கல...