Showing posts with label கடீஸ் டைம். Show all posts
Showing posts with label கடீஸ் டைம். Show all posts

Wednesday, 28 May 2014

சந்திரமண்டலம் போவோமா?


ரொம்ப நாளா உங்கள எல்லாம் சந்திரமண்டலத்துக்கு கூட்டிட்டு போகணும்ன்னு ஆசை. அதனால வாங்க, முதல்ல உங்கள வேற ஒரு இடத்துக்கு கூட்டிட்டு போறேன். 

இப்ப நாம நின்னுட்டு இருக்குறது மொட்டை மாடி. அங்க இருந்து பாத்தா சந்திர மண்டலம் தெரியுது பாருங்க...

என்னது, தெரியலையா?

அதெப்படி, நான் தான் தெரியுதுன்னு சொல்லிட்டேனே, அப்புறம் ஏன் தெரியாது?

சரி சரி, ரொம்ப பிகு பண்ணாதீங்க, இந்தா ஒரு தீபாவளி ராக்கட் வந்து மொட்டை மாடியில லேன்ட் ஆகுது பாத்தீங்களா, இது மேல ஏறிக்கோங்க, நாம சந்திரமண்டலம் போய்டலாம்...

இப்போ நாம விண்வெளில பறந்துட்டு இருக்கோம். பஞ்சு பஞ்சா மேகங்கள். எவ்வளவு அழகு பாத்தீங்களா? ஹலோ யாருங்க, மேகத்த பஞ்சு மிட்டாய்ன்னு நினச்சு திங்குறது? அட, தின்னாலும் பரவால, இனிப்பு இல்லன்னு சலிச்சுக்க வேற செய்றீங்க, பேசாம பயணத்த கண்டிநியூ பண்ணுங்க, இல்லனா ராக்கெட் அடியில தண்ணி ஊத்தி அணைச்சுடுவேன்.. ஆங்க்... அந்த பயம் இருக்கட்டும்.

ஆஹா... கிலோ கணக்குல தங்க பூக்கள கொட்டி வச்ச மாதிரி இந்த நட்சந்திரங்கள் என்னமா ஜொலிக்குது பாருங்க. ஹே ஹே... நட்சத்திர பூக்கள் என்ன நம்ம ஊரு பூ மாதிரி சாப்ட்டாவா இருக்கும்? சுட்டுடும்... பாத்து பறிச்சுக்கோங்க. கிறிஸ்த்மஸ் அன்னிக்கி நம்ம வீட்ல அலங்காரமா கோர்த்து தொங்க விடலாம்.

அச்சச்சோ, அப்படியே வலது பக்கமா திரும்புங்க, உடனே திரும்புங்க, சீக்கிரம் சீக்கிரம், ஒரு எரி நட்சத்திர கல்லு நம்மள நோக்கி தான் வந்துட்டு இருக்கு. ம்ம்ம்ம் வேகமா போங்க, அப்படியே வலது பக்கம் தான்... ஆமா, ஆமா அப்படி தான்... ஹப்பாடி, நூலிழை இடைவெளில தப்பிச்சாச்சு.

வாங்க, இன்னும் மேல மேல மேல பறக்கலாம்... 

அந்தா, கொஞ்சம் நிலப்பரப்பு தெரியுதே, அங்க தான் நாம தரையிரங்கணும். அட, மெதுவா குதிங்க, என்னமோ திருட்டு பஸ் ஏறிட்டு கண்டக்டர் பாக்குறதுக்கு முன்னாடி குதிக்குற மாதிரி குதிக்க பாக்குறீங்க.. இது நிலாங்க... அதான் சந்திரன். நாம இறங்கி இருக்குறது சந்திர மண்டலம். இங்க காற்றுல மிதக்குற மாதிரியே தான் ஒவ்வொரு அடியா எடுத்து வைக்க முடியும். ரெடி, ஒன், டூ, த்ரீ... ஜம்ப்.. 

அப்படியும் இப்படியுமா,ஒருவழியா சந்திர மண்டலத்துக்கு வந்து சேர்ந்தாச்சு. ஏன்ப்பா அந்த டீக்கடை எங்க இருக்குன்னு கொஞ்சம் பாத்து சொல்லுங்க, ஒரே டயர்ட். இனிமேல் இந்த தீபாவளி ராக்கெட் மேல எல்லாம் ஏறி வரக்கூடாது. பத்ரமா சைக்கிள்லயே வந்துடணும். அஞ்சலி பாப்பா மட்டும் தான் சைக்கிள்ல விண்வெளி போகணுமா என்ன?

அப்படியே அந்த வடை சுடுற பாட்டி எங்கன்னு தேடுங்க, நல்ல ஆம வடையா வாங்கி திங்கணும். கூடவே இட்லி சப்ளை பண்றாங்களான்னும் பாக்கணும். பசிக்குதுல..

ஹஹா பாத்தீங்களா, பசி வந்த உடனே உங்கள மறந்துட்டேன், சரி சரி, நீங்களும் பாட்டிய கண்டுபிடிச்சு போய் சாப்பிடுங்க. 

அப்புறம், இன்னொரு விஷயம் மறந்துட்டேனே......

குட் மார்னிங்



Thursday, 27 March 2014

கதை நேரம் - கதையும் தத்துவமும்



ரொம்ப நாள் கழிச்சு மறுபடியும் ப்ளாக் பக்கம் வந்துருக்கேன். அதனால முதல்ல உங்கள எல்லாம் நான் ஒரு இடத்துக்கு கூட்டிட்டு போய் சுத்திக் காட்டலாம்னு நினைக்குறேன்... 

நாம இப்போ நின்னுட்டு இருக்குற காடு ஸ்ரீலங்கால இருக்கு. இங்க நாம வேடிக்கை பாத்துட்டே போகலாம் வாங்க.... 

அட, பயப்படாம வாங்க, நான் தான் கூட இருக்கேன்ல, ஒரு பயமும் இல்ல. இந்த சிங்கம், புலி, கரடி எல்லாம் என்னை கண்ட உடனே வாலை சுருட்டிட்டு பம்மிடும்.

இங்க, பெரிய பெரிய மரங்கள், தரையே பாக்க முடியாத வெயில், காலுக்கடியில சலசலத்து ஓடுற நீரோடை இப்படி எத்தனையோ இருந்தாலும் நாம இப்போ ஒரு விசித்திர ஜந்துவ தேடிப் போறோம்.

மான் அடிச்சு சாப்பிடுற புலி பாத்துருப்போம், ஏன், எலி புடிச்சி திங்குற காக்கா பாத்துருப்போம், பூச்சி புடிச்சி திங்குற செடி பாத்துருக்கீங்களா?

பாக்கலனா, நாம இப்போ அத தான் தேடி போயிட்டு இருக்கோம்...

அட, அங்க பாருங்க, ஒரு குரங்கு தண்ணி குடிச்சுட்டு இருக்கு. எதோ ஒரு செடில தண்ணி தேங்கி நிக்குது போல... பக்கத்துல போய் பாக்கலாம்.... எப்படியும் நாம பக்கத்துல போனா அந்த குரங்கு ஓடிடும்... 

குரங்கு போனா போகட்டும். நம்ம டார்ஜட் நாம தேடி வந்த ஜந்து தானே... இந்தா அந்த செடி பக்கத்துல நெருங்கிட்டோம்.

ஹை.... வித்யாசமா குடுவை மாதிரி இருக்குல... இது உள்ள மழைத் தண்ணி தேங்கி நிக்குது போல... அச்சோ, உள்ள ஒரு பல்லி இருக்கு பாருங்க... அவ்வ்வ்வ் பல்லி செத்து போச்சு...

இந்த பல்லிய கொன்னது யாருன்னு நினைக்குறீங்க, எல்லாம் இந்த செடி தான்... இதோட பெயர் தான் நெப்பன்தஸ்... இது ஒரு மாமிச உண்ணி. பொதுவா இத பிச்சர் பிளான்ட்ன்னு சொல்லுவாங்க.

இது ஒரு வகையான தேன் மாதிரி ஒரு திரவத்த சுரக்குது, அப்புறம் பூச்சிகள கவர்ந்திழுக்க வித்யாசமான ஸ்மெல் வேற வெளியிடுது. இத எல்லாம் மோப்பம் பிடிச்சுட்டு பக்கத்துல வர்ற பூச்சிங்க, அதோட குடுவைக்குள்ள வழுக்கி விழுந்துடும்... அப்புறம் எங்க தப்பிக்குறது?

பாத்தீங்களாங்க, பிடிச்ச வாசம், பிடிச்ச சுவை இருக்குன்னு இந்த பூச்சிங்க நம்பி அத தேடி போனா, இந்த நெப்பன்தஸ் அத கொன்னு அதோட சத்துக்கள உறிஞ்சிடுது... இப்படி தாங்க சில மனுசங்க இருக்காங்க. இனிக்க இனிக்க பேசி, நைசா நம்மள அவங்க வலைல விழ வச்சு நம்மளால நிறைய பலன் அடஞ்சுட்டு, ப்ரோயோஜனம் இல்லன்னு ஆனா உடனே கழட்டி விட்ருவாங்க...

அதனால எப்பவுமே கொஞ்சம் எச்சரிக்கையா ஒரு எல்லை கோட்டுக்குள்ள நாம இருந்துகிட்டா எப்பவுமே பயம் இல்ல...

ரொம்ப ரொம்ப ஜாக்கிரதையா இருக்க வேண்டிய உலகம் இது.... 

கதை கேட்டு திகில் வந்துச்சோ இல்லையோ, எனக்கு தத்துவம் சொல்லி திகில் வந்துடுச்சு.... அவ்வ்வ்வ், எதுக்கும் நான் நாளைக்கு வாரேன்...

Friday, 21 February 2014

குட் மார்னிங்.... (1)


ரொம்ப நாள் ஆகிடுச்சுல கதை சொல்லி....

அதனால கொஞ்சம் டெரரான ஏரியாவுக்குள்ள தைரியமா நுழைவோமா?

அப்படியே சைலென்ட்டா வாங்க, மூச்சு விடுற சத்தம் கூட வெளில கேக்க கூடாது...

ஒரே கும்மிருட்டா இருக்கா, அப்படியே எல்லாரும் ஒரே நேரத்துல வலது கால் எடுத்து வைங்க... ம்ம்ம்ம் இப்போ லெப்ட்டு...

முன்னாடி நிக்குறவங்க கொஞ்சம் கைய முன்னாடி நீட்டுங்க... எதோ நீளமா வழவழன்னு தட்டுப் படுதுல அதான் மலப்பாம்பு.

ஹே.... நோ... இப்படி பேய் தனமா வீல்ன்னு கத்தக் கூடாது, அப்புறம் மலப்பாம்ப கழுத்துல விட்ருவேன்... அப்படியே சைலென்ட்டா வரணும், புரியுதா?

அவ்வ்வ்வ் அதென்ன தந்தியடிக்குற சத்தம் கேக்குது, பயந்தீங்கன்னா உள்ளுக்குள்ளயே பயந்துக்கணும். இப்படியா பயத்துல பல்ல தந்தியடிக்க விடுறது...(எனக்கே சாவு பயத்த காட்ட ட்ரை பண்றாங்க பரமா...)

கொஞ்சம் தள்ளி நில்லுங்கப்பா, எல்லாரும் பயத்துல புளி மூட்ட மாதிரி அப்பிகிட்டு....

சரி, சரி, அடுத்த ஸ்டெப் எடுத்து வைங்க, ஹலோ முன்ன நிக்குறது யாரு? மலப்பாம்ப தொட்டு தடவினது போதும், கொஞ்சம் முன்னாடி நகருங்க...

என்னது காலு நகர மாட்டேங்குதா, கிளம்புங்கங்க.... இல்லனா மலப்பாம்பு கடிச்சுடும்...

போச்சா, போச்சா, கடிச்சிடுச்சா.... அதுவும் பெருவிரல் பாத்து நறுக்குன்னு கடிச்சிடுச்சா? நான் தான் அப்பவே சொன்னேன்ல....

ஐய்யய்யோ, ஏன் எல்லாரும் ஓடுறீங்க, திரும்பி வாங்க, இன்னும் நிறைய இருக்கு பாக்க....

ஹஹா... அந்த இடத்த விட்டு வெளில வந்தும், ஏன் உங்க மூஞ்சி எல்லாம் இப்படி வேர்த்து கொட்டுது? பயந்துட்டீங்களாக்கும்?

அது சரி, நீ ஏன் கடைசி வர பயப்படவே இல்லன்னு கேக்குறீங்களா?

ஹிஹி, நீங்க சுத்தி பாத்ததே என்னோட ரூம் தான். அது மலப்பாம்பு இல்ல, புடலங்காய அங்க கட்டி தொங்க விட்டதே நான் தான்...

நறுக்குன்னு கடிச்சி வச்சது நம்ம சக்தி செல்லம்....

ஹிஹி.... ஏமாந்துட்டீங்களாக்கும்.... சரி சரி, போங்க போங்க ஒரு குட் மார்னிங்க வாங்கிட்டு வேலைய போய் பாருங்க...

குட் மார்னிங்....
.....................................................................

ஹஹா என்ன இதுன்னு குழம்பிட்டீங்களாக்கும்....

எப்பவுமே பேஸ் புக்ல கத சொல்லியே குட் மார்னிங் சொல்ல பழகிட்டேனா, அதான் உங்களையும் இம்சை பண்ணலாம்ன்னு முடிவு பண்ணிட்டேன்.

நான் அப்பப்போ எப்.பியில போடுற ஸ்டேடஸ் நீங்களும் படிக்கணும்ல... அதான் இப்போ ரெண்டே ரெண்டு சாம்பிள் படிச்சுட்டு போங்க... மீதி, இன்னொரு நாள் பார்ட் பார்ட்டா வரும்....
................................................................................

இப்போ கொஞ்சம் குளுகுளுன்னு ஒரு கதை பாருங்க.... 
.........................................................................

இது ஒரு குளிர் காலை நேரம். போர்வைக்குள்ள தூங்கினாலும் குளிர் வெடவெடக்க வைக்குது. இந்த குளிர்ல ஒரு வாக்கிங் போனா எப்படி இருக்கும்? வாங்களேன் போய் பாப்போம்....

எதுக்கும் ஒரு போர்வை எடுத்துக்கலாம். குளிருக்கு இதமா இருக்கும். அப்படியே போய் வாசல் கதவை திறப்போம்.

அவ்வ்வ்வ் வெளில மழை பெய்யுது பாருங்களேன். அதனால ஓடிப் போய் கைல குடையும் எடுத்துப்போம்.

ஓகே, இப்போ மெதுவா தெருவுல இறங்கி நடப்போம்.

பாருங்களேன், இந்த மழைல ஒரு சேவல் நனஞ்சிகிட்டே நடந்து போகுது. செகப்பு கலரு சேவல்ன்னு சொன்னாலும், அது செக்கசெவேல்ன்னு இருக்காது. கருப்பும், செவலையும் கலந்த ஒரு நிறம். மழைல நனைஞ்சு இருந்தாலும் அதோட வால் பளபளப்பு குறையவே இல்ல.

இது கிராமமில்லையா, பெரும்பாலும் நம்மள கடந்து போறவங்க தினமும் நிலத்துல உழைக்குற மக்களா தான் இருக்காங்க. குடை யூஸ் பண்றதெல்லாம் ரொம்ப கம்மி. இவங்க மழை கிட்ட இருந்து எப்படி தப்பிக்குறாங்க பாத்தீங்களா? சொசைட்டில கிடச்ச யூஸ் பண்ணின பிளாஸ்டிக் உர சாக்குகள ஒரு பக்கமா கிழிச்சி விட்டு அத எடுத்து போர்த்தியிருக்காங்க.

இப்போ எனக்கு இந்த குடைய பாத்தா ஏனோ அந்நியமா தோணுது. சரி, அவங்க அப்படியே வேலைக்கு போகட்டும். நாம, இந்தா திண்ணையில ஒரு பாட்டி கால் நீட்டி உக்காந்துட்டு வெத்தலை இடிச்சுட்டு இருக்காங்க பாருங்க, குடைய மடக்கி வச்சுக்கிட்டு அவங்க கிட்ட போவோம்...

இனி பாட்டி வாய தொறந்தா ஊர்ல உள்ள பல கதைகள் சொல்லுவாங்க. அதனால நான் சைலென்ட் ஆகிக்குறேன். அதுக்குமுன்னாடி எல்லாருக்கும் குட் மார்னிங் சொல்லணும்ல...

குட் மார்னிங்........
......................................................................................

ஹஹா இனி குட்டியா ஒண்ணு
....................................................................

மனுசங்கள பொருத்தவரைக்கும் இது ஒரு இரண்டாம் உலகம். இந்த உலகத்து அன்போ, சந்தோசங்களோ, சுக துக்கங்களோ மனுசங்களுக்கு (பெரும்பாலும்) புரியவே புரியாது. ஆனா, அங்க உள்ள ஜீவன்களோட உணர்வுகளா நாமளும் மாறிப் பாத்தா அந்த அற்புத உலகம் நம்மோட கண்ணுக்குள்ள தெரியும்...

ஆமாங்க, இந்த விலங்குகளோட உலகம் ரொம்ப அழகானது. அவங்களுக்கும் உணர்வுகள் உண்டு. அவங்களுக்கும் பிடிக்காத விசயங்கள கண்டா கோபம் வரும், சுயம் சீண்டப்படும் போது ரவுத்திரம் வரும், மனசுக்கு பிடிச்சவங்கள கண்டா காதல் வரும்.. அதுவே ஒருத்தங்க பிரிஞ்சி போய்ட்டா சோகமும் வரும்....

கண்ணால பேசி, செய்கையால அன்பை உணர்த்துற அந்த ஜீவன்கள நாமளும் நேசிப்போம். நேசிச்சா மட்டும் பத்தாது, புரிஞ்சுப்போம்...

குட் மார்னிங்...
..........................................................................
இப்போதைக்கு இது போதும், நீங்க பொறுமையா படிச்சுட்டு கமன்ட் போட்டு வைங்க.... குட் மார்னிங் கூட சொல்லலாம்....
வர்ட்டா...... (தொடரும்)



Thursday, 2 January 2014

எங்க வீட்டு சக்தி...


ஜில்லுன்னு மார்கழி குளிர். காலைல எழவே நேரம் இல்ல. அப்படியே போர்வைக்குள்ள சுருண்டு படுத்துக்கலாம் போல இருந்துச்சு.

ஆனாலும் நேத்து ராத்திரி தூங்க வச்ச அணில்குட்டிய எழுப்பி ஆகாரம் குடுக்கணுமே... அவ்வ்வ்வ், இந்த நினைப்பு வந்த உடனே அடிச்சு புடிச்சு எழும்பி உக்காந்தாச்சு.

என்னது, அணில் குட்டியா, அத எல்லாம் நாம வளக்க கூடாது, அதோட, அத நம்மளால சரியா வளக்க முடியாதுன்னு சொல்றீங்களா? எனக்கும் அதே கவலை தான்...

ஆனாலும், நேத்து நியூ இயர், காலைல கீச் கீச்ன்னு ஒரு குட்டி சத்தம். அதுவும், வீடு மாறி வந்ததுல பொருள் எல்லாம் கன்னா பின்னான்னு போட்டு வச்சிருக்குற ரூம்ல இருந்து. என்னடா இதுன்னு போய் பாத்தா, பாவம் ஒரு குட்டி அணில் பிள்ளை சத்தம் போட்டுட்டு அதோட கூட்டுக்குள்ள சுருண்டு போய் இருக்கு.

அத அப்படியே விட்ருக்கலாம் தான், ஆனா ரெண்டு நாள் முன்னாடி தான் ஒரு அணில் எங்க வீட்டு ஹால்ல துடிதுடிச்சு செத்து போச்சு. ஒருவேளை இது அந்த அணிலோட குட்டியா இருந்தா? இருந்தா என்ன, அதே குட்டிதான்னு முடிவுக்கு வந்த உடனே ஒரு பரபரப்பு தொத்திகிச்சு.

பாவம், அது அம்மா இறந்து ரெண்டு நாள் ஆகிடுச்சு, அப்போ ரெண்டு நாளா அது பசியோட எதுவுமே சாப்டாம தானே இருந்துருக்கும். அப்போதைக்கு கொஞ்சம் பசும்பால் எடுத்து ஒரு தட்டுல விட்டு அது முன்னாடி வச்சு பாத்தா, அது கடகடன்னு கொஞ்சம் பால குடிச்சுது.

அச்சோ செல்லம், எவ்வளவு பசில இருந்துருக்குன்னு நினைச்சுகிட்டே அடுத்து என்ன செய்யலாம்ன்னு யோசிச்சோம். என்ன, வழக்கமா மாடில கொண்டு வச்சுடலாம், ஏதாவது அணில் வந்து தூக்கிட்டு போகும்னு முடிவு எடுத்தோம்.

அந்த முடிவு படி, தம்பி அத தூக்கிட்டு மாடி போயிருக்கான். இது அப்படியே அவன் கை மேல ஏறிகிச்சாம். ரொம்ப ட்ரை பண்ணி அது அம்மா கட்டி குடுத்த கூட்டுக்குள்ள விட பாத்ருக்கான். நோ யூஸ்.... அப்புறம் என்ன நினைச்சானோ, என் கிட்ட கொண்டு வந்து தந்துட்டான்.

எனக்கும் அத வளக்கலாமேன்னு ஒரு ஆச. நேத்துல இருந்து அது என் கிட்ட ரொம்ப ஒட்டிசிச்சு. மடியிலயே படுத்துக்குது. அப்புறம் கொஞ்ச நேரத்துல மறுபடியும் குடுகுடுன்னு ஊர்ந்துட்டே இருக்கு. இருக்குற எல்லா வேலையும் அப்படியே போட்டுட்டு அத மட்டும் தான் தனியா கவனிச்சுட்டு இருந்தேன்.

அப்புறம், ராத்திரி அத தூங்க வைக்குறதுக்குள்ள அவ்வளவு கஷ்டமா போச்சு. என்கிட்டயே தூங்க வச்சா ராத்திரி எப்படியும் அது காலின்னு தெரியும். தெரிஞ்சே அத காலி பண்ண முடியுமா? அதான் ரொம்ப கஷ்டப்பட்டு அதோட அம்மா செய்த கூட்டுக்குள்ள தூங்க வைக்க ட்ரை பண்ணினேன். ம்ஹும்... அது கேக்கவே இல்ல. அப்புறம் அத அது உள்ள விட்டு, மேல ஒரு பெட்ஷீட் எடுத்து போர்த்தி விட்டுட்டேன்.

அவ்வ்வ்வ், அது மேல இல்லங்க, அதோட கூடு வச்சிருந்த பெட்டி மேல. கொஞ்ச நேரம் மேல வர ட்ரை பண்ணிட்டு, முடியாம அதோட கூட்டுக்குள்ள போய் படுத்துசிச்சு. நானும் நிம்மதியா தூங்கிட்டேன்.

அப்புறம் காலைல அதுக்கு பால் குடுக்கணுமேன்னு மெதுவா போர்வைய விலக்கிட்டு மெதுவா எட்டி பாத்தா பக்கி கடிக்க வருது, அவ்வ்வ்வ்... அப்புறம், செல்லம் செல்லம்ன்னு சமாதானம் பண்ணினா யார் கிட்ட? கொஞ்ச நேரம் சீறிட்டு அப்புறமா தான் அதுவே யோசிச்சிருக்கும் போல, ஓடி வந்து கைல ஏறிடுச்சு.

நான் கூட ரொம்ப யோசிக்காம, தட்டுல பால விட்டு குடிக்க குடுத்தேன். அது குடிச்சதும், இனி கைல வச்சிருந்தா விடாதுன்னு டக்குன்னு அதோட கூட்டுக்குள்ள விட்டு மறுபடியும் போர்வையால மூடியாச்சு. ரொம்ப சமத்தா தூங்க போய்டுச்சு.

அவ்வளவு தாங்க, இப்போதைய நிலவரம். அடுத்து அது என்ன செய்யும்ன்னு அடுத்து பால் குடுக்கும் போது தான் தெரியும். அதனால, நானும் இப்போதைக்கு என்னோட வேலைய பாக்க போறேன்.

அச்சச்சோ, அதுக்கு பெயர் வச்ச விசயத்த சொல்ல மறந்துட்டேனே...

நான் பாட்டுக்கு எப்.பில குட் மார்னிங் ஸ்டேடஸ் போட்ருந்தேனா, அதுல நம்ம தமிழ்வாசி பிரகாஷ் அண்ணா வந்து அதுக்கு என்ன பெயர்ன்னு கேட்டார். அப்போ தான் பெயர் வைக்காத விசயமே உறைச்சது.

அதுமட்டுமில்லைங்க, பெயர் வைக்குற பொதுகுழுவ கூட்டலாம்ன்னா பொது குழு மெம்பர் நேத்து முழுக்க பிசி. அதனால தான் பொதுகுழு கூட்டி பெயர் வைக்க முடியாம போச்சு. அப்புறம் காலைலயே பொதுகுழுவ கூட்டி, இந்த அணில் பிள்ளை ஆணா பெண்ணான்னு தெரியாததால பொதுப்பெயரா “சக்தி” ன்னு பெயர் வைக்கலாம்ன்னு முடிவு பண்ணியாச்சு.

அதுக்குள்ள நம்ம பேஸ்புக் போராளிகள் எல்லாம் பொங்கிட்டங்க வேற பேர் வைங்கன்னு...

ஆனா நான் முடிவு பண்ணிட்டேன், வச்ச பேர் வச்சது தான்னு.

பெயர் சூட்டு விழா, அடுத்து கொஞ்ச நேரம் கழிச்சு நடக்க போகுது. நீங்களும் அங்க இருந்தே எங்க சக்திய வாழ்த்துங்க....


நன்றி... வணக்கம்...



Wednesday, 11 December 2013

இன்று ஒரு தகவல்


“முந்தைய நாளின் பகலுக்கு தொடர்ச்சியாய் வந்த இரவுக்கு ஓய்வு கொடுத்து என் இன்றைய பகல் வணக்கம் வரும் இரவுக்கான வரவேற்போடு”

அவ்வ்வ்வ் என்ன, எதுவுமே புரியலயா?

இது தாங்க நான் இன்னிக்கி உங்களுக்கு சொல்லி இருக்குற குட் மார்னிங்.

நல்லா கூர்ந்து கவனிச்சு பாருங்க, முடிஞ்சா கண்ணாடிய தொடச்சு விட்டுட்டு பாருங்க, முதல்ல புரியாத மாதிரி தான் இருக்கும், ஆனா எதோ புரியுற மாதிரி இருக்கும்.

இப்படி தான் நானும் புரியாம பல விசயத்தையும் உளறிக்கிட்டே இருக்கேன். ஆனாலும் எனக்கு சில விஷயங்கள் புரிஞ்சிடும். எனக்கு புரிஞ்ச உடனே, உங்களுக்கு குழம்பிடும்.

அப்படி தான் டெய்லி காலைல கிளம்புறது முன்னாடி எல்லாரையும் குழப்பி விட்டுட்டு போய்டணும்.

எப்படி தெரியுமா?

இந்தா நான் குழப்புறேன் பாருங்க, இன்று ஒரு தகவல் சொல்லி:

இன்று ஒரு தகவல் 1: திங்குறதுக்கே நேரம் இல்லாம அரக்க பறக்க பாஞ்சு போய் ஆபிஸ்லயோ, காலேஜ்லயோ, இல்ல ஸ்கூல்லயோ, அப்படியும் இல்லையா, குட்டி சுவரிலோ போய் உக்காந்தாலும் இன்றைய தினம் திங்கட்கிழமைதானாம்...


இன்று ஒரு தகவல் 2: கிளிக்கு வாய் சிகப்பா இருப்பதாலும், பொண்ணு மாப்பிள்ளைக்கு செவ்வாய் தோஷம் இருப்பதாலும் இன்றைய நாளில் விசேசமில்லை. இன்றைய நாள் செவ்வாயாக இருப்பதாலயே இன்று செவ்வாய் கிழமையாம்...


இன்று ஒரு தகவல் 3: பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்று யாரோ சொல்லி விட்டு சென்று விட்டதால், அந்த வாக்கை பொய்த்து போகாமல் காப்பாற்ற நகை வியாபாரிகளால் கண்டுபிடிக்கப்பட்ட நாளே புதன் கிழமையாம்.


இன்று ஒரு தகவல் 4: கழிந்து விட்ட நேற்று புதன்கிழமை என்பதாலும், கழியப்போகும் நாளை வெள்ளிகிழமை என்பதாலும், இரண்டுக்கும் இடையில் இன்று மாட்டிக்கொண்டதாலும் இன்றைய நாள் வியாழன் கிழமையாம்...


இன்று ஒரு தகவல் 5: இன்று ஆங்கிலத்தில் Friday என்பதால், தமிழில் வெள்ளிக்கிழமை என்றே அழைக்கப்பட வேண்டும் என்ற கட்டாயத்தினால் இன்றைய பொழுதின் பெயர் வெள்ளிக்கிழமையாம்...


இன்று ஒரு தகவல் 6: முந்தின நாள் அரக்கபரக்க வேலை செய்ததாலும், அடுத்த நாள் சோம்பேறியாய் தூங்க போற காரணத்தாலும், துன்பத்துக்கும் இன்பத்துக்கும் இடைல இடிப்பட்டு கழியப் போற இன்றைய நாளின் பெயர் சனிக்கிழமையாம்.


இன்று ஒரு தகவல் 7: மிகவும் சோம்பலாகவே விடிந்து விட்ட காரணத்தாலும், இன்னும் சூரியனை கூட பலபேர் பார்க்காத காரணத்தாலும், சில பல ஆடுகள், மாடுகள், கோழிகள் கொலையுண்ட காரணத்தாலும் இன்றைய கிழமைக்கு ஞாயிற்றுக்கிழமை என்று பெயராம்....!


என்ன, அப்படியே ஏழு நாளுக்கும் ஏழு தகவலா சொல்லியாச்சா, இத எல்லாம் ஒரே நாள்ல சொல்லிடாம, ஒவ்வொரு நாளா வந்து, ஒவ்வொரு தகவலா தெரிஞ்சுகிட்டு போங்க.


நான் இப்போ தகவல் சொல்லி ரொம்ப களைச்சு போயிட்டேன்.



ஹலோ, அந்த ஆப்பிள் ஜூஸ் எங்கப்பா?



.

Monday, 2 December 2013

மொக்கையிலும் மொக்க, படு மொக்க




இன்னிக்கி என்ன எழுதலாம் என்ன எழுதலாம்னு மண்டைய பிச்சுகிட்டு (அட, நிஜமா தாங்க) யோசிச்சப்போ, நாமளும் 2010-ல இருந்து பேஸ் புக்ல இருக்கோம், அப்படி என்ன தான் பண்ணிட்டு இருந்துருக்கோம்னு பாக்கலாம்னு தோணிச்சு. பாட்டிங்க மட்டும் தான் நாங்க எல்லாம் அந்த காலத்துல...... ன்னு ஆரம்பிக்க முடியுமா? நாங்களும் ஆரம்பிப்போம்ல..... 

ஆரம்பத்துல பேஸ் புக் வந்தப்போ எல்லாரும் நிறைய ஜோக்ஸ் தான் சொல்லிட்டு இருந்தாங்க. நானும் அத பாத்துட்டு கவுன்ட்டர் குடுத்துட்டு இருந்தேன். இருந்தாலும் சொந்தமா எங்க ஜோக் சொல்றது? அதுக்கு தான் இருந்துச்சு பிரெண்ட்ஸோட எஸ்.எம்.எஸ். அத எல்லாம் வச்சு தான் ஒரு மூணு மாசம் நானும் பேஸ் புக்ல மொக்க போட்டுட்டு இருந்தேன்.


அப்படி என்ன தான் மொக்க போட்ருக்கேன்னு கொஞ்சம் பாப்பமா?


மொக்க தத்துவம்:

          1. பிறப்பு ஒரு முறை, 
              இறப்பு ஒரு முறை,
              காதல் ஒரு முறை,
              வாழ்க்கை ஒரு முறை
              ஆனால்
              சாப்பாடு மட்டும் தினமும் மூன்று முறை
              அதனால் கூச்சப்படாமல் சாப்டுங்க, ஆரோக்கியமா இருங்க 

          2. விடியும் வரை தூங்குவது தூக்கம் அல்ல,
              நம்மால் முடியும் வரை தூங்குவதுதான் தூக்கம்
              அதனால் நல்லா தூங்குங்க.

          3. யாருடைய இதயத்தையும் உடைத்து விடாதீர்கள்,
              ஏனெனில் அவர்களுக்கு இருப்பது ஒரே ஒரு இதயம்
             அதற்கு பதில்.
             அவர்களின் எலும்பை உடையுங்கள், அது 206 உள்ளது.....

சீரியஸ் தத்துவம்:

          1. நினைவுகளை உனக்குள் சுமப்பது வெற்றி அல்ல,
             உன்னுடைய நினைவுகளை அடுத்தவரை 
             சுமக்க வைப்பதுதான் வெற்றி

          2. உங்கள் அன்புக்குரியவருக்கு பரிசளிக்க நினைத்தால்,
              உங்கள் விலை மதிப்பில்லா நேரத்தை பரிசாக அளியுங்கள்...

          3. இமைகள் திறந்து நேசிப்பதை விட இதயம் திறந்து நேசித்து பார்,
              உன் உலகம் உனக்காய் காத்திருக்கும்

          4. குளம் வற்றியதும் பறந்து போகிற கொக்கு தான் காதல்
              ஆனால்
              குளம் வற்றினாலும் குளத்தோடு சேர்ந்து இறந்து போகிற 
              மீன் தான் நட்பு

          5. நீங்கள் காயப்படுத்திய மனிதரிடம் மன்னிப்பு கேட்க 
             தேவை இல்லை, ஏன் என்றால் உங்களை நேசிக்கும் 
             மனிதரையே நீங்கள் காயப்படுத்த முடியும், அவர்களோ 
            உங்களிடத்தில் மன்னிப்பை விட அதிக அன்பை தான் 
            எதிர்பார்ப்பார்கள்...

          6. நண்பன்!!! எதிரிகளின் கூட்டத்தில் உன் கைப் பிடித்து நிற்பவன்
              நீ தவறு செய்யும் போது உன் முதுகில் அறைபவன்
             உனக்காக எல்லாம் செய்து விட்டு நன்றியை எதிர்பார்காதவன்
             உன்னை புன்னகைக்க வைப்பவன்
             உன் கண்ணீரை துடைத்து ஐ மிஸ் யு சொல்பவன்
             உன் நன்றியை மறுத்து போடா லூசு என்பவன்
             நண்பேண்டா............


இப்போ கேள்வி பதில் நேரம்:

          1. மண்புழுவுக்கு ஏன் கால் இல்லைன்னு தெரியுமா ..?

              அதுக்கு கால் போட்டா மாண்புழு ஆகிடும்ல 
              அதனால போடுறதில்லை.!

          
          2. எறும்பு ஏன் பல்லு விளக்குறது இல்லைன்னு தெரியுமா ..?

              ஏன்னா அது வாய் சைசுக்கு இன்னும் பிரஷ் கண்டுபுடிக்கலயாம்


          3. லைப்ல ஒண்ணுமே இல்லனா போர் அடிக்கும், 
              தலைல ஒண்ணுமே இல்லனா?

              பளபளன்னு க்ளார் அடிக்கும்


டவுட்டோ டவுட்: 

          1. இங்கிலீஷ்ல பெரிய ABCD சின்ன abcd இருக்குற மாதிரி 
              தமிழ்ல ஏன் இல்ல ..?

          2. கொசுவுக்கு கொம்பு இருக்கா .?
     
          3. இருமல் வந்தால் இருமுவிங்க, 
              காய்ச்சல் வந்தால் காய்ச்சுவிங்களா?

          4. நாம வெய்யில்ல நடந்து போகும்போது நம்ம நிழல் கீழே விழுதுல,
             அப்படி விழும் போது அதுக்கு வலிக்காதா ..?

          5. மஞ்சத்தண்ணிக்கும் பச்சத்தண்ணிக்கும் என்ன வித்தியாசம்?

          6. கால்ல முள் குத்தாம இருக்குறதுக்காக செருப்பு போடுறோம், 
            அப்போ வாயில மீன் முள்ளு குத்தாம இருக்க என்ன 
            போடுறோம்?

          7. கிணத்துக்குள்ள மண்ணை கொட்டினா அது குழியா மாறிடும்.
             ஆனா குழிக்குள்ள மண்ணை கொட்டினா கிணறா மாறுமா?


இதெல்லாம் கூட பரவால, எதோ ஒரு எக்ஸாம் ஹால்ல யாரோ எழுதின கேள்வி பதில் அப்போ ரொம்ப பேமஸா வலம் வந்துட்டு இருந்துச்சு. அது என்னன்னும் கொஞ்சம் பாத்ருவோமே

கேள்வி 1:

நாயக்கர்கள் – பெயர் காரணம் கூறுக :

          Point no:1
          நாயக்கர்களுக்கு நாய்கள் பிடிக்கும் என்பதால் நாயக்கர்கள் என்று 
          பெயர் வந்தது என்று சிலர் கூறுகிறார்கள்.

          Point no 2: 
          நாயக்கர்களின் மண்டபங்களில் நாய் போன்ற சிற்பங்கள்                  
          வைத்திருப்பதால் நாயக்கர்கள் என்று பெயர் வந்தது என்று 
          சிலர் கூறுகின்றனர்.

          Point no 3: நாயக்கர் மஹால் மதுரையில் உள்ளது. அது மிகவும் 
          அழகாக இருக்கும். அந்த மண்டபத்தில் தான் இம்சை அரசன் 
          படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. அதை என் சித்தி பையன் 
          சென்று பார்த்துள்ளான். அதை பாண்டியர்களுக்கு கீழே உள்ள 
          கொத்தனார் நிருவியுள்ளமையால் பாண்டியர்களுக்கு அந்த 
          பெருமை வந்தது. உண்மையில் அந்த கொத்தனார் தான் மிகவும்   
         பாடுபட்டார். எனவே அவரை நான் மிகவும் பாராட்டுகிறேன்.

கேள்வி 2:

கோவில்களின் சிறப்புகளை கூறுக :

          “ஜி” படத்தில் எங்கள் தல அஜித் ஒரு பாடலை பாடியுள்ளார்
          “டிங் டாங் கோவில் மணி கோயில் மணி நான் கேட்டேன்”
          இப்பாடலடி இவ்வளவு தான் எனக்கு தெரியும். அரையாண்டு 
          தேர்வில் கண்டிப்பாக இந்த பாடலை முழுமையாக எழுதி விடுவேன்                     என்று நம்பிக்கை தெரிவித்து கொள்கிறேன்.

கடைசியா, 


மொக்கையோ மொக்கை:
          1. கரண்ட்'டைக் கூட கால்களால் மிதிக்கலாம் 
              “காக்கையாக மாறினால்”!

          2. பரம்பரைக்கு உக்காந்து சாப்டர அளவு சொத்து
              இருந்தாலும் பாஸ்ட் பூட் கடைல நின்னுக்கிட்டுதான் சாப்பிடணும்

          3. நாய்க்கு என்னதான் நாலு கால் இருந்தாலும் அதால கால் மேல 
              கால் போட்டு உட்கார முடியாது

          4. இன்ஜினியரிங் காலேஜ்ல படிச்சா இஞ்சினியர் ஆகலாம், ஆனா 
              பெரசிடேன்சி காலேஜ்ல படிச்சிட்டு பிரசிடென்ட் ஆக முடியாது 





இப்போதைக்கு இவ்வளவு தாங்க.... இதெல்லாம் ரெண்டு மாச பதிவு... மீதி அப்பப்போ வந்து சொல்லிட்டு போறேன்...







Saturday, 23 November 2013

பவர் ஸ்டாரோட பிறந்தநாளு..... (பார்ட் – டூ)



ரெண்டு மூணு நாளாவே ரொம்ப சீரியஸாவே பதிவு போட்டுட்டு இருக்க, மக்கா, இது சரியில்ல, நீ பொலம்புனாலும் அழுதாலும், வீரமா வசனம் பேசினாலும் இங்க ஒன்னும் அசைக்க முடியாதுன்னு திடீர்னு ஒரு பல்ப், அதுவும் அறுபது வாட்ஸ் பிரகாசத்துல மண்டை மேலே எரிஞ்சு என்னை உசார் படித்த ஆரம்பிச்சுடுச்சு. சரி, ஏதாவது ஒரு நீதி கதைய எடுத்து, அத அக்கு வேற, ஆணி வேறவா பிரிச்சி மேஞ்சி கைத்தட்டல் வாங்கிடுவமான்னு யோசிச்சப்போ, என்னோட கை, ஒரு பெரிய சுத்தியலா எடுத்து என் மண்ட மேலயே நங்குனு போட்டு, சீரியஸா யோசிக்காத, சீரியஸா யோசிக்காதன்னு சொன்னா கேப்பியா கேப்பியான்னு அடிச்சு துவம்சம் பண்ணிடுச்சு. அவ்வ்வ்வ் சாதாரணமாவே நாம கொஞ்சம் ட்யூப் லைட், இப்போ அடிச்ச அடியில ஒண்ணுமே புரியல.

இப்படியே புரியாம இருந்தா நல்லாயிருக்காதேன்னு யோசிச்சுட்டே இருந்தப்போ தான் நம்ம பவர்ஸ்டார்  பரந்தாமன கால்ல கட்டோட அப்படியே நிக்க விட்ருக்கமேன்னு நியாபகம் வந்துச்சு. அவரு வேற இருக்காரா, எங்க அவருன்னு இல்லாத முடிய இருக்குறதா நினச்சு பிச்சுக்குரவங்களுக்காக, முதல்ல இத போய்படிச்சுட்டு வாங்க.

என்ன, படிச்சாச்சா, பாத்தீங்களா, அந்த ஆளு எவ்வளவு எகத்தாளம் இருந்தா என்கிட்டயே வயலுக்கு போக எரோப்ளேன் கேட்டுருப்பாரு. அதுவும், நான் தண்ணி ஊத்தி வேற வளத்து குடுக்கணுமாம். ஒருநாளு இப்படி தான் பிரெண்ட் ஒருத்தர வழி அனுப்பி வைக்குறதுக்காக ஏர்போர்ட் போயிருந்தோம். பாவம் இந்த மனுஷன் வெட்டியா தானே இருக்கார்னு அவரையும் கூடவே கூட்டிட்டு போயிருந்தேன்.

அங்க போய் சும்மா இருக்காம, அங்க வந்த ஜப்பான் பேமிலிய வேற்றுகிரகவாசி ரேஞ்சுக்கு கற்பனை பண்ணி கிண்டல் பண்ணிக்கிட்டு இருக்காரு. ஆனா அவங்க என்னமோ இவர தான் ஏலியன்ன்னு நினச்சு அவர் கூட நின்னு போட்டோ எல்லாம் எடுத்தாங்க. அட, அப்படி போட்டோ எடுத்துட்டு போனா கூட பரவாலயே, என் கண்ணு முன்னாடியே, அந்த போட்டோவ அவங்க எப்.பில அப்லோட் பண்ணி, “A miracle, we are with an alien”ன்னு டைட்டிலே போட்டு விட்டுட்டாங்க. அதுக்கு ரெண்டு நிமிசத்துக்குள்ள ஐநூறு லைக்கு, நூத்தி முப்பத்தாறு கமன்ட்டு. ஹிஹி நான் கூட ஸ்பாட்டுலயே அவங்க ஐ.டி வாங்கி, பிரெண்ட் ரிகுவஸ்ட் குடுத்து, அவங்கள ஆட் பண்ண சொல்லி, ஒரு லைக் போட்டுட்டுதான் மறுவேலை பாத்தேன்னா பாருங்களேன், பவர் எவ்வளவு தத்ரூபமா இருந்துருப்பார்ன்னு.

சரி, ஒருவழியா பிரெண்ட்ட வழி அனுப்பி வச்சுட்டு திரும்பினா, பவரு வாய ஆ-ன்னு தொறந்து வச்சு அண்ணாந்து பாத்துட்டு இருக்காரு. அட, ஏன், ஏன் இப்படி, வாய மூடுங்க, நாலஞ்சு வவ்வாலு பத்துவாட்டி உள்ளேயும் வெளியேயுமா வந்து போயிட்டு இருக்குன்னு அவர உலுப்புனேன் (ஏர்போர்ட்ல வவ்வாலான்னு எல்லாம் நீங்க வாய திறக்க கூடாது. அதெல்லாம் காட்சிக்கு தேவைனா நாங்க டைனோசரையே கொண்டு வருவோம்). அப்புறமா தான் சிலிர்த்துக்குட்டே சொன்னாரு, இந்த ஏரோபிளேன் எவ்வளவு பெருசா இருக்கு, ஒரு நாளாவது அந்த ஜன்னல் சீட்ட புடிச்சு உக்காரணும்னு. நான் கூட அவருக்கு எப்படியாவது துண்டு போட்டாவது ஜன்னல் சீட் புடிச்சு தரேன்னு வாக்குறுதி குடுத்துருக்கேன். நீங்க எல்லாம் என்னோட நண்பர் படை, நலன் விரும்பிகள்ங்குறது உண்மைனா ஏரோப்ளேன்ல ஒரு கார்னர் சீட் கண்டிப்பா நம்ம பவருக்காக புடிச்சு தரணும். அப்புறம், டிக்கெட் ப்ளாக்ல வாங்கினா கூட பரவால, ஆனா டிக்கெட்டு கலரு வொய்ட்டா இருக்கணும்.

இதுவாவது பரவால, எதோ ஏரோப்ளேன பாக்காத மனுஷன் ஆசைபட்டுட்டார்னு விட்டுடலாம், ஆறு மாசம் முன்னால அவர் பண்ணுன அலும்பு இருக்கே, அப்பப்பப்பா.... ஆத்துக்கு குளிக்க போன மனுஷன், அங்க தேமேன்னு மேஞ்சுகிட்டு இருக்குற எரும மாட்ட பாத்து, நான் இந்த யானை மேல சாவாரி பண்ணியே தீருவேன்னு அடம் பிடிச்சிருக்கார். யோவ், அது எருமையான்னு வடக்கு தெருவுல பன்னி மேய்ச்சுகிட்டு இருந்த பையன் சொன்னதுக்கு, நான் சின்ன புள்ளன்னு நீ என்னை ஏமாத்துறன்னு பக்கத்துல கிடந்த சகதியில விழுந்து கைய கால அடிச்சுக்கிட்டு அழுதுருக்கார். இத எல்லாம் பாக்க சகிக்காம அவர எப்படியோ தூக்கி எரும மேல வச்சிருக்காங்க ஊர்க்காரங்க. யானைக்கு லாடம் எல்லாம் ஒழுங்கா அடிச்சிருக்கீங்களா, ஏன் அலங்காரம் பண்ணலன்னு கேள்வி மேல கேள்வி கேட்டு பக்கத்துல நின்னவங்கள எல்லாம் சாகடிச்சுருக்கார். அவர் ஜாலியா எரும மேல ஒரு ரைடு போயிட்டு வந்துட்டார், ஆனா அந்த எரும தான் பாவம், நாத்தம் தாங்காம குடல பொறட்டிட்டு, செத்தே போச்சாம். இத கேள்விபட்டதுல இருந்து, நான் அந்த எருமைக்கு ஒரு கோவில் கட்டியே ஆகணும்னு முடிவு பண்ணியிருக்கேன். இதுக்கு ஆதரவு தரவங்க, தாராளமா ஐம்பது லட்சம் குறைந்த பட்சம் நிதியுதவி செய்யலாம், அப்படி நிதியுதவி செய்தவங்க பெயர கண்டிப்பா அந்த கோவிலுக்கு போடுற ட்யூப் லைட்ல எழுதி போடுவோம். இத பத்தின மேல் விவரங்கள நாம பப்ளிக்ல பேசினா கண்ணு பட்டுரும், அதனால எல்லாரும் ரகசியமா கூடி கூடி பேசிக்கோங்க.

இந்தா, போன வாரம், பவரு துணியெடுக்க கடைக்கு போனாரே, அதாங்க, அந்த மஞ்ச கலரு சிங்குச்சா... அது எடுக்குறது முன்னாடி பெரிய கலவரத்தையே நடத்திப்புட்டாருங்க. அப்படியா, நீ சொல்லவேயில்லயேன்னா சம்பவ இடத்துல நான் இல்லையே, இந்த விசயத்த நான் இன்னிக்கி காலைல தான கேள்விப்பட்டேன். அப்படி என்னதான் பண்ணாருன்னு கேக்குறீங்களா? ஒரு பொம்பள புள்ள அழகா தலை வாரி, ஜடை பின்னி, பூ வச்சுட்டு  வந்துருக்கு. இவருக்கு, அந்த ஜடை ஒரிஜினலா டூப்ளிகேட்டான்னு சந்தேகம். அட, நேரா போய் கேட்ருந்தா கூட பரவால, நாலு அரை கன்னத்துல சப்புன்னு அறஞ்சதோட விட்ருக்கும், இவரு ஜடைய புடிச்சு இழுத்துருக்காரு, அது கையோட வந்துடுச்சாம். அவ்வளவு தான், அங்கயே அவருக்கு பெருசா ஒரு பூஜைய போட்டு, அப்புறம் விஷயம் வெளில தெரியாம இருக்க எல்லாருக்கும் ஆளுக்கு ஐநூறு ரூபா லஞ்சமா குடுத்து தப்பியிருக்கார். அப்படி ஐநூறு ரூபா லஞ்சம் வாங்கின ஒருத்தர் தான், இந்த விசயத்த ஊர் முழுக்க சொல்லிட்டு திரியிறாரு. அப்படி தான் என் காதுக்கும் வந்துச்சு.

இத்தகைய சிறப்பு வாய்ந்த, பெருமை வாய்ந்த நம்ம பவருக்கு பொறந்தநாளு (எப்படி தலைப்ப டச் பண்ணினேன் பாத்தீங்களா?). இந்த தடவையாவது பொறந்தநாள நல்ல படியா கொண்டாடணும். நீங்க, உங்களால முடிஞ்ச பிறந்தநாள் பரிசுகள, பொன்னாவோ, வெள்ளியாவோ, காராவோ, பைக்காவோ, இல்ல நிலபத்திரம், வீட்டு மனை, மாடி வீடு, இப்படி எதுவா வேணும்னாலும் குடுக்கலாம். பவர் அத வேணாம்ன்னே சொல்ல மாட்டார்.


நான் இத பத்தின ஒரு பொதுகுழு கூட்டம் போட வேண்டியிருக்கு, வரட்டா.... 

பின் குறிப்பு: இந்த பால்வடியுற முகத்த நெட்டுல இருந்து தான் சுட்டேன் 

Wednesday, 13 November 2013

பவர் ஸ்டாரோட பிறந்தநாளு..... (பார்ட் – ஒன்)


இந்த காலத்துல கைல மொபைல் இல்லாத யங்ஸ்டேர்ஸ் பாக்குறது அபூர்வம்ங்க. அதுவும் பிரெண்ட்ஸ்க்குள்ள மாத்தி மாத்தி எஸ்.எம்.எஸ் அனுப்புறத அடிச்சுக்கே யாராலயும் முடியாது. இப்போ இந்த எஸ்.எம்.எஸ் ட்ரன்ட் வாட்ஸ்அப், வைபர்னு டெவலப் ஆகிடுச்சு. அப்படி தான் என் வாட்ஸ்அப்க்கு என் மாமா பொண்ணு ஒரு மெசேஜ் அனுப்பி இருந்தா. அத பாத்த உடனே அத ஒரு கதையா எழுதினா என்னன்னு தோணிச்சு. சோ, நீங்க இனி படிக்கப் போற கதையோட காமடி பகுதிக்கு காரணமான புண்ணியவான் யாரோ?

பிட் அடிச்சாலும், பிட் எழுதி வச்சிருந்த பேப்பரும், அதுல எழுதின பென்னும், பிட்ட பாத்த கண்ணும், எழுதின கையும் எனக்கே சொந்தமானதுன்னு நாம உரிமை கொண்டாடுற மாதிரி இதில் வரும் கதை, திரைக்கதை வசனம் அனைத்தும் எனக்கே சொந்தம்... (அவ்வ்வ்வ் எப்படி எல்லாம் பில்ட் அப் விட வேண்டியிருக்கு).

Monday, 4 November 2013

பிசியான நாட்கள் - வலைச்சரமும் ப்ராஜெக்ட்டும்


பெருமதிப்பிற்குரிய பெரியோர்களே, பேரன்புக்குரிய தாய்மார்களே, ஆசை சகோதர சகோதரர்களே, அன்பு தோழர்களே...

அவ்வ்வ்வ் இதுக்கு மேல முடியல... நாம நம்ம ஸ்டைல்ல இறங்கிற வேண்டியது தான். நான் இப்போ உங்க கிட்ட என்ன சொல்ல வரேன்னு எனக்கே தெரியல, அதனால அங்கங்க நீங்க ஏதாவது பாயிண்ட்ட கண்ணால மோப்பம் புடிச்சுட்டு நீங்களே ஒரு முடிவுக்கு வந்துடுங்க...

அப்புறம், ஒரு வாரமா நான் ரொம்ப பிசி. ஓவர் பில்ட் அப் குடுக்காதனு நீங்க பிரம்ப தூக்கி ஜாடையா காட்டுறது தெரியுது, ஆனாலும் உண்மைய சொல்லாம இருக்க முடியாதே. நம்புங்க, இல்லனா அதே பிரம்ப பிடுங்கி உங்கள மிரட்டுவேன்..

சரி, சரி, அப்படி என்ன பிசினு நீங்க கேக்கலனாலும் நான் சொல்லித் தானே ஆகணும். அது என் கடமையாச்சே...

பொதுவா ப்ராஜெக்ட் சப்மிசன்னா அது எப்பவும் ஈவன் (even) செமஸ்டர்ல தான் வரும். அதனால கோர்ஸ் (course) முடிச்சுட்டு போறப்போ தான் இந்த ப்ராஜெக்ட் எல்லாம் சப்மிட் பண்ண வேண்டியிருக்கும். ஆனா இந்த தடவை திருநெல்வேலி மனோன்மணியம் யூனிவர்சிட்டி ரூல்ஸ்ச மாத்திட்டாங்க, அதனால ப்ராஜெக்ட்  ஆட்(odd) செமஸ்டர்லயே வச்சுட்டாங்க. சோ, போன மாசம், அதான் அக்டோபர் 31 ப்ராஜெக்ட் சப்மிட் பண்ண கடைசி நாள்.

நம்ம மாணவ செல்வங்களை தான் நமக்கு நல்லா தெரியுமே (என்னையும் சேர்த்து தான்), எப்பவுமே கடைசி நிமிசத்துல தான் எதையுமே செய்வோம். எல்லாம் முடிச்சுடலாம் முடிச்சுடலாம்னு அதீத நம்பிக்கை வச்சு கடைசி நிமிசத்துல அய்யோ அய்யோனு பதற வேண்டியது.

இங்க இன்னொரு விஷயம் சொல்லணும்ங்க. அதாவது சில கோர்சஸ்ல கைட்னு ஒருத்தங்க இருப்பாங்க, ஆனா ஸ்டுடென்ட்ஸ் வெளில போய் ப்ராஜெக்ட் செய்துட்டு வருவாங்க. காசு குடுத்து அவங்களே தீசிஸ் ரெடி பண்ணி குடுத்துடுவாங்க. கைடோட வேலை முடிச்சு வர்ற தீசிஸ்ல வலிக்காம கையெழுத்து போடுறது மட்டும் தான். உடனே அடிக்க வராதீங்க, இது தான் நாட்டு நடப்பு. எந்த இஞ்சினியரிங் காலேஜ்லாவது அவங்க சொந்த லேப்ல கைட் உக்காந்து சொல்லி குடுக்குராங்களா? சொந்த காலேஜ் காம்பஸ்குள்ளயே ப்ராஜெக்ட் முடிச்ச ஸ்டுடென்ட் உண்டா? இதே தான் இப்போ ஆர்ட்ஸ் அண்ட் சைன்ஸ் காலேஜ்லயும் நடக்குது.

ஆனா என்னோட கோர்ஸ் அப்படி இல்ல, எங்க டிபார்ட்மென்ட்ல ஸ்டுடென்ட்ஸ் யாரையும் வெளில போய் வொர்க் பண்ண விட மாட்டாங்க. ரொம்பவே அட்வான்ஸ் வொர்க்னா மட்டும் வெளில போகலாம். நான் கூட என்னோட வொர்க்காக பெங்களூர், திருவனந்தபுரம்னு போனேன். இன்னும் ஒரு வருஷம் அங்க எல்லாம் வேலை இருக்கு. ஆனாலும் பெரும்பாலான வேலைகள காலேஜ் உள்ள தான் செய்யணும்.

நாங்க வெளில போய் முழு ப்ராஜெக்ட்டையும் பண்ணிக்குறோம்னு யாராவது கேட்டா எங்க எங்களோட தல என்ன சொல்லுவார் தெரியுமா? உங்க அப்பா அம்மா நிறைய சம்பாதிச்சு வச்சிருக்காங்கங்குறதுக்காக நீ வெளில போய் முப்பதாயிரம், நாப்பதாயிரம்னு காச இறைஞ்சு எதையாவது வாங்கிட்டு வந்து தலைல ஒண்ணுமே இல்லாத களிமண்ணா வெளில போக வேணாம், இங்கயே மூவாயிரம் நாலாயிரம் செலவு பண்ணி சின்ன விசயமா இருந்தாலும் எதையாவது கத்துக்கிட்டு போன்னு சொல்லிடுவார். அவர் கிரேட் தானே.... நான் கூட இத பத்தி நம்ம ஜீவா மேடம் கிட்ட கூட கேட்டுருக்கேன், நீங்க என்ன பண்ணுவீங்க உங்க காலேஜ்லன்னு. அவங்க கூட இதயே தான் சொன்னாங்க. அப்போ அவங்களும் கிரேட் தான்.

சரி, விஷயத்துக்கு வருவோம். இந்த மாதிரி உள்ளுக்குள்ளயே ப்ராஜெக்ட் செய்ய வைக்குறதால ஸ்டுடென்ட்ஸ் சில பேருக்கு கடுப்பு. காசக்குடுத்தோமா, ப்ராஜெக்ட் வாங்கினோமா, சப்மிட் பண்ணினோமான்னு இல்லாம, இதென்ன நாங்களே ப்ராஜெக்ட் பண்ணனும், நாங்களே எழுதணும்னு. இந்த பசங்க கூட ஓரளவு ஆர்வத்துல நாம சொல்லி குடுத்தா செய்வாங்கங்க, ஆனா பொண்ணுங்க இருக்காங்களே, முழு சோம்பேறிங்க. இது என்னோட அனுபவம் தான். நான் எல்லோரையும் சொல்லல, எனக்கு ஒரு ஸ்டுடென்ட் இருந்தா, அப்படியே என்னோட டிட்டோ மாதிரியே, அவ்வளவு ஆர்வம் அவளோட ப்ராஜெக்ட்ல. கைல 93% மார்க் வச்சிருக்கா, அப்படினா அவ எவ்வளவு ப்ரிலியன்ட் பாருங்க. அந்த பொண்ணு மட்டும் இல்லனா இந்த ஒரு வாரமா நான் ரொம்ப திணறி தான் போயிருப்பேன்.

இது கிராமத்து பக்கம். இங்க வர ஸ்டுடென்ட்ஸ் எல்லோரும் தமிழ் மீடியத்துல படிச்சிருப்பாங்க. யூ.ஜி பண்ணும் போது கூட தமிழ்லயே எழுதி பாஸ் ஆகிட்டு பி.ஜி வந்துடுவாங்க. இங்க வந்ததுக்கப்புறம் தான் அவங்க இங்கிலீஷ்னா என்னன்னே பாப்பாங்க. முதல் வருஷம் முழுக்க அவங்களுக்கு சின்ன சின்ன இங்கிலீஷ் வார்த்தைகள் கத்துக் குடுத்து, அவங்கள ட்டியூன் பண்ணி கொண்டு வரணும். இங்க தீசிஸ் முழுக்க முழுக்க இங்கிலீஷ்ல இருக்கும். இத அவங்கள விட்டு எழுத சொல்றது கொடுமைன்னு நீங்க நினைக்குறது கண்டிப்பா எனக்கு புரியுது.

ஆனாலும் வேற வழி இல்லையே, ரொம்பவே பொறுமையா தான் சொல்லிக் குடுக்கணும். நிறைய ரெபரன்ஸ் வாசிக்க வைக்கணும், அதுல அவசியமான பாயிண்ட்ஸ் எதுன்னு அவங்கள புரிஞ்சுக்க வைக்கணும். இப்படி தான் நான் எனக்குன்னு ஒதுக்குன ஆறு பேருக்கும் சொல்லிக் குடுத்தேன்.

நாம ஒரு ப்ராஜெக்ட் தனியா எழுதணும்னா ரொம்ப ஈசி, ஆனா அவங்கள எழுத வச்சு, அவங்க எழுதிட்டு வர விசயங்கள வாசிச்சு பாத்தா நமக்கு தலையும் புரியாது, காலும் புரியாது. ஏதாவது ஒரு செண்டென்ஸ்ல இருந்து துண்டு துண்டா எடுத்து போட்டுருப்பாங்க. இது என்னது, எங்க இருந்து பாத்து எழுதினன்னு கேட்டா அவங்களுக்கும் தெரியாது. அப்புறம் அவங்கள உக்கார வச்சு, மறுபடியும் அவங்க கைல இருக்குற ரெபரன்ஸ்ல நாம முழுசா வாசிச்சு, அந்த செண்டென்ஸ் கண்டுபிடிச்சு, இத இப்படி எடுக்க கூடாது, இப்படி எடுக்கணும்னு சொல்லி நிமிர்ரதுக்குள்ள முதுகு வளைஞ்சுடும்.

இது தான் மெண்டல் ப்ரெஸர்னு சொல்லுவாங்க. ஆனா நான் சில சமயம் ரொம்ப கடுமையா அந்த பிள்ளைங்கள எல்லாம் திட்டியிருக்கேன். அவங்கள பாத்தா எனக்கே பாவமா தான் இருக்கும். நான் ஏற்கனவே சொன்னேனே, ஒரு பொண்ணு மட்டும் ரொம்ப புத்திசாலின்னு அவ கூட ஒரு சோம்பேறி தான். அவளும் கடைசி நிமிசத்துல தான் எழுதவே உக்கார்ந்தா. அவளை நான் முடிச்சு விடவே ஒரு நாள் ஆச்சு. மீதி ஆறு நாள்ல அஞ்சு தீசிஸ் ரெடி பண்ணனும். என்ன பண்றதுன்னு ஒண்ணும் புரியல. நானே எழுதி குடுத்துடலாம் தான், ஆனா அப்புறம் யார் அந்த பிள்ளைங்களுக்கு சொல்லிக் குடுப்பா? வாழ்க்கைல இப்போ அவங்க கஷ்ட்டப்பட்டாலும் நாளைக்கு ஒரு நல்ல நிலைமைக்கு வரும் போது கண்டிப்பா நம்ம பெயர நினச்சு பாப்பாங்க.

அந்த ஒரு ஸ்டுடென்ட் பிரிலிமினரி வொர்க்ஸ் எல்லாம் பாத்துகிட்டா. நான் அப்புறமா வர கரெக்சன் எல்லாம் பாத்துக்கிட்டோம். அந்த ஒரு வாரமும் எல்லா பிள்ளைங்களும் என் வீட்ல தான் ராத்திரி தங்கினாங்க. தூக்கம் கூட யாருக்கும் கிடையாது. எனக்கு இருந்த மெண்டல் ப்ரெஸர்க்கு வடிகால் இந்த பேஸ் புக் தான். அப்பப்போ எட்டிப் பாப்பேன். பத்து நிமிஷம் பிரேக் எடுத்துப்பேன். அப்புறம் பேக் டு வொர்க்.

சாப்டுற சாப்பாட கூட மறந்து, அப்படியே நான் மட்டும் உக்காரல, அந்த பிள்ளைங்களும் தான். முதல்ல முரண்டு பிடிச்சாலும், அப்புறம் நான் சொல்லிக் குடுத்தத புரிஞ்சுகிட்டு, சரியா செய்யலைனா நான் சப்மிட் பண்ண விட மாட்டேங்குரதையும் புரிஞ்சுகிட்டு அவங்க என் வழில வர ஆரம்பிச்சுட்டாங்க. சந்தேகங்கள்னு வரும் போதெல்லாம் என்கிட்டயோ இல்ல, அந்த இன்னொரு ஸ்டுடென்ட்கிட்டயோ கேட்டு கேட்டு தெரிஞ்சுகிட்டாங்க. அந்த பொண்ணும் அவ வேலை முடிஞ்சுதுன்னு வீட்டுக்கு போகாம, எங்க கூடவே தங்கிட்டா.

இந்த நேரத்துல தான் வலைசரத்துல இருந்து எனக்கு ஆசிரியரா இருக்கீங்களான்னு அழைப்பு. அக்டோபர் 31-க்கு அப்புறம் நான் ப்ரீ தான், வேணும்னா அப்போ இருக்கவான்னு கேக்கலாம்னு ஒரு நிமிஷம் நினச்சேன், அப்புறம்,ச்சே ச்சே, வேணாம் வேணாம், நம்மள நம்பி கேக்குறாங்க, நம்ம கஷ்டம் நம்மோட, அதோட பயங்கர மெண்டல் ப்ரெஸ்ஸர்ல இருக்குறப்போ இது நமக்கு கண்டிப்பா நல்ல ரிலீப். கிடைக்குற கேப்ல எழுதிடலாம்னு நினச்சு தான் சரின்னு தலையாட்டிட்டேன். அப்படி நான் எழுதின பதிவுகள கண்டிப்பா நான் நியாபகார்த்தமா வச்சிருக்கணுமில்லையா?
அதெல்லாம் இது தான்...
   
இந்த நேரத்துல தீபாவளி வேற வந்ததால என்னோட பதிவுகள் நிறைய பேர போய் சேரலன்னு ஒரு சின்ன வருத்தம் மனசுக்குள்ள இருக்கத்தான் செய்யுது. ஆனாலும் எதோ என்னால முடிஞ்சத நான் பண்ணிட்டேன்ங்குற திருப்தியும் கூடவே இருக்கு.

இத்தன களேபரத்துக்கு நடுவுல வெற்றிகரமா ஆறு பேரையும் தீசிஸ் சப்மிட் பண்ணவும் வச்சுட்டேன். அதுவரைக்கும் என்னை பற்றி அவங்க என்ன நினச்சாங்கன்னு எனக்கு தெரியாது, ஆனா எல்லாம் சப்மிட் பண்ணிட்டு, பெருசா ஒரு பெருமூச்சோட சிரிச்சுகிட்டே, ரொம்ப தேங்க்ஸ் மேடம்ன்னு சொன்னாங்க பாருங்க, நான் பட்ட கஷ்டத்துக்கெல்லாம் பலன் கிடைச்சிடுச்சு.  

இதோ, இப்போ வேற ஒரு கைடோட ஸ்டுடென்ட், அவ எழுதினத ரீ-சப்மிட் பண்ண சொல்லிட்டாராம் அவளோட கைட். அவளுக்கு ஹெல்ப் பண்ண முடியுமான்னு என் கைட் கேட்டாங்க... நாம எப்போ இந்த விசயத்துல முடியாதுன்னு சொல்லியிருக்கோம், சரின்னு சொல்லிட்டேன். இதோ, அவ வந்துட்டா. அவளுக்கு சொல்லி குடுக்க வேண்டியத சொல்லிக் குடுத்துட்டு, அவள எழுத வச்சுட்டு, நான் இத எல்லாம் உங்க கிட்ட சொல்லிட்டு இருக்கேன்.


இப்போ வேலைய பாக்கணும், வர்ட்டா.... 

Monday, 21 October 2013

டாங்கில்ட் (tangled) - வாங்களேன், நாமளும் அவங்க கூட பயணிச்சுட்டு வருவோம்


ஒருநாள் ப்ராஜெக்ட் சம்மந்தமா நிறைய வொர்க்ஸ் இருந்ததால நைட் புல்லா முழிச்சு இருக்க வேண்டி இருந்தது. அப்போ ரிலாக்ஸ் பண்றதுக்காக, பிரேக்ல புல்லா டாங்கில்ட் (tangled) படம் தான் பாத்துட்டு இருந்தேன்...

Thursday, 17 October 2013

ஒரு நரியும் காக்காவும், முயலும், ஆமையும் கூடவே பவ்-வவ்வும் பாட்டியும்....


ஒரு ஊருல ஒரு நரி இருந்துச்சாம். அந்த நரி அப்படியே ரோட்டோரமா நடந்து வரப்ப நிலாவுல வடை சுட்டுட்டு இருந்த பாட்டி கை தவறி ரெண்டு வடை கீழ விழுந்துடுச்சாம். இத பாத்துட்டு இருந்த நரி, ரெண்டு வடையையும் தூக்கிட்டு ஜாலியா ரோட்ல நடந்து வந்துச்சாம்.

Tuesday, 15 October 2013

மீன் பிடிக்க போவோமா? தவளை பிடிக்க போவோமா?


காலேஜ் அஞ்சு நாள் லீவ் விட்டாலும் விட்டாங்க, ஊர்ல இருந்து தங்கச்சிங்க எல்லாம் வந்துட்டாங்க. ஒவ்வொரு நாளுக்கு ஒவ்வொரு ப்ளான் போட்டு வந்தவங்களுக்கு சனிகிழமை நான் காலேஜ் போயிட்டேன்னு தெரிஞ்சதும் கொஞ்சம் அப்செட் ஆகிட்டதா சொன்னாங்க... நானும் அப்படியே நம்புற மாதிரியே நம்பாம அவங்கள மேலும் கீழும் பாத்துட்டு ரூம்க்கு போனா, ரூம் எல்லாம் தலைகீழா இருக்கு. அம்மாவோட சாரி எல்லாம் எடுத்து குலைச்சு போட்டுருந்தாங்க. ஒருத்தி, என்னோட ஜீன்ஸ் எடுத்து போட்டுட்டு இருக்கா.

Monday, 14 October 2013

இது ஒரு நட்பின் கதை....


சின்ன வயசுல இருந்தே என்கிட்ட ஒரு பழக்கம்... எனக்கு தோணுற விசயம் தான் சரினு ஆர்க்யூ பண்ணுவேன், அதுலயும் அப்பா என்ன சொன்னாலும் அது சரியில்லனு சண்ட போடுவேன்... அப்பா எங்கயாவது போககூடாதுனு சொன்னா அங்க தான் போவேன்னு அடம் பிடிப்பேன்...

Monday, 7 October 2013

வீட்ல யாரும் இல்லப்பா...... லொள்ளு பாட்டி


ஒரு அழகான காடு... லேசா மழை தூறல்... ஒரு பட்டாம்பூச்சி ஜாலியா நனஞ்சுகிட்டே ஒவ்வொரு பூவா போய் உக்காந்து பொறுமையா அதோட அழக ரசிச்சுட்டே தேன் குடிக்குது. அப்புறம் அதுக்கு வயிறு நிறைஞ்சதும் போய் தூங்கலாம்னு தற்காலிகமா அதோட கூட்டுப் புழு வாழ்க்கைக்கு திரும்பிடுச்சு.

Friday, 4 October 2013

ஓட்டபந்தயத்துல கலந்துகிட்ட முயல் செத்து போச்சாமே... யாராவது கேளுங்களேன்..



என்ன சொல்லணும், ஏன் சொல்லணும், எதுக்கு சொல்லணும், எப்படி சொல்லணும் அப்படின்னு சொல்றதுலயே பல மாதிரி இருந்தாலும் இந்த காலை வணக்கம் மட்டும் ஒரே மாதிரி சொல்லணுங்க.. எப்படி தெரியுமா, சும்மா மனச ப்ரெஷா வச்சுக்கிட்டு, சிரிச்சுகிட்டே, குழந்தை மனசோட சொல்லணும். அதனால நான் இப்போ உங்களுக்கெல்லாம் சிரிச்சுட்டே குட் மார்னிங் சொல்ல போறேன், எங்க நீங்களும் அதே குழந்தை மனசோட ஒரு குட் மார்னிங் சொல்லுங்க பாக்கலாம்....

Monday, 30 September 2013

சத்தியமா மொக்க இல்லீங்க, தத்துவம் தான்


காலைல சீக்கிரமே எந்திரிச்சு ரிப்ரஸ் ஆகி, அப்பா போட்ட டீய மூக்கால இழுத்து வாசத்த உள்ள விட்டு, எனக்கு ஜூஸ் போட்டு குடிச்சுட்டு, பட படனு ஒரு தக்காளி சாதம், காலைல அப்பாவுக்கு ஓட்ஸ், தம்பிக்கு நாலு சப்பாத்தி, எனக்கு ரெண்டு சப்பாத்தி கூடவே கொண்டைகடல குருமா வச்சு முடிச்சாச்சு. இனி என்ன, உங்கள எல்லாம் மறக்காம உங்களுக்கு குட் மார்னிங்க சொல்லிட்டு அப்படியே கிளம்பிறலாம்தான்...

Tuesday, 24 September 2013

பாட்டிக்கு வடை சுட கத்துக்குடுப்போம் வாங்க....

எப்பவும் சீரியஸா பேசிட்டு இருந்தாலும் சரிபட்டு வராது. கொஞ்சம் சிரிக்கவும் வேணுமே. ஹஹா இப்போ நீங்க சிரிக்குறத பத்தி யார் சொன்னா, நீங்க இத படிச்சுட்டு தலைல அடிச்சுட்டு போறத பாத்து நான் தான் விழுந்து விழுந்து சிரிக்க போறேன். என்னது? இந்த டகால்ட்டி எல்லாம் உங்ககிட்ட நடக்காதா? அப்படியா? சரி வாங்க, ஒரு கை பாத்ருவோம், நீங்க சிரிக்க போறீங்களா நான் சிரிக்க போறேனானு... ஆனா ஒண்ணு, கடைசி வர இத நீங்க படிக்கணும்... அவ்வ்வ்வ் படிச்சுடுங்க....