Tuesday 12 April 2016

செல்லாக்காசு



“நீயெல்லாம் ஏண்டி சனியனே பொறந்து தொலஞ்ச? இப்படி வந்து வந்து வயித்தக் கழுவுறதுக்கு பேசாம செத்துத் தொலையேன். அப்படி என்னடி சொகம் வேண்டிக் கிடக்கு” இறைந்துக்கொணடே சென்ற நர்ஸ் பின்னே மெதுவே எட்டிப் பார்த்தேன்.

மிகவும் இளவயசு. கிட்டத்தட்ட பதினைந்து வயதிருக்கலாம். பூஞ்சையாய் தேகம். வாரப்படாத தலை. வயிற்றைப் பிடித்தப்படி மலங்க மலங்க முழித்துக் கொண்டிருந்தாள்.

எனக்கு அவளைப் பார்த்து இரக்கம் எதுவும் தோன்றவில்லை, “இந்த வயசுல இப்படியா” என்ற கேள்வி மனதில் தோன்றியதையும் தடுக்க முடியவில்லை.

************

வர வர பாட்டியின் உடம்பு சீர் கெடத் துவங்கியிருந்தது. படிப்பறிவும் இல்லாமல் புருசனும் இல்லாமல் அண்ணனின் நிழலில் ஒதுங்கி, அதனாலேயே இந்த சமூகத்திலிருந்தும் மறைந்து வாழ்ந்தவள். பெற்றப்பிள்ளைகளை கூட சீராட்டி வளர்க்க முடியாமல் தனிமைக்குள் தன்னை புதைத்துக் கொண்டவள் அவள்.

அப்பாவுக்கு எப்பொழுதும் பாட்டியின் மேல் பெரிதாய் அக்கறை இருந்ததாய் தெரியவில்லை. மாசாமாசம் சொற்ப காசு அனுப்பி வைப்பார். அதற்கும் மேல் வேண்டுமென்றால் ஒவ்வொரு காசுக்கும் செலவு கணக்கு கொடுத்தாக வேண்டும். வீட்டு வாடகையும் கொடுத்து சாப்பாட்டுக்கும் என்ன செய்வாள், மருத்துவ செலவுகளுக்கு எங்கு போவாள் என்றெல்லாம் எண்ணுவதே இல்லை. அதனால் தானோ என்னவோ பாட்டி தனக்கென தேவைகளை கூட எப்பொழுதும் பூர்த்தி செய்துக்கொள்வது இல்லை. எதைக் கேட்டாலும் “எனக்கெதுக்கு” என்று ஒதுங்கி போகின்றவள்.

போன மாதம் ஊருக்கு வந்தபொழுது தான் கவனித்தேன், பாட்டியின் கால்கள் நீர் கோர்த்துக் கொண்டிருந்ததை. அதன் பின் நான்கு நாட்கள் விடுமுறை கிடைத்து, இதோ கட்டாயமாய் அவளை இந்த மருத்துவமனை வரவேற்பறையில் அமர வைத்துள்ளேன்.

*************

“ஏண்டி, இது மூணாவது தடவ, பதினோரு மாசத்துல இத்தனவாட்டி வந்துட்ட. எவடி ஒன்ன கொண்டு வந்து விடுறா? என்ன தொழில் செய்றாளா ஒன்ன வச்சு?” – மறுபடியும் அதே நர்ஸ். இப்பொழுது அந்த சிறுமி அழ ஆரம்பித்திருந்தாள். அழுகையின் ஊடே அவள் என்ன சொல்கிறாள் என்று கவனித்தேன்.

“பசிக்கி. மூணு நாளாச்சு. ஏதாவது தாங்கக்கா”

தனக்கு நேர்ந்தது என்ன என்பது அறியாது, வயிற்றை பிடித்து அவள் எதற்காக அழுதுக் கொண்டிருக்கிறாள் என்ற உண்மை தெரிந்த பொழுது உள்ளுக்குள் நொறுங்கிப் போவதைப் போன்ற உணர்வு. அதைத் தொடர்ந்து “நம்மால என்ன செய்ய முடியும்?” என்று எனக்குள் நானே சமாதானமும் செய்துக் கொண்டேன்.

“அந்த புள்ள ஒரு அனாத சிறுக்கியாம். தவுப்பன் தாயில்லாம ஒவ்வொருத்தன் திண்ணையிலா படுத்து கெடக்குமாம். வயித்துக்கு சோத்த போட்ட எவனோ அவ வயித்தையும் நெரப்பி விட்டுருக்கான். பாவம் புள்ள, வயித்துப் பாட்டுக்கு வழியில்லாம இப்படி வயித்துல சொமந்துகிட்டு நிக்குவு. அந்த வீட்டுவளுக்கு பத்து பாத்திரம் தேய்க்குரவ தான் எரக்கப்பட்டு வயித்த கழுவ இங்க கொண்டு வந்து விட்டுருக்கா. ஹ்ம்ம்ம்... இனிமேல எவன் வந்து இவள கெட்டி, இவ கூட குடும்பம் நடத்தி... புள்ள வாழ்க்கைய சீரழிச்சுப் புட்டானுவ” பெரிதாய் மூச்சை இழுத்துவிட்டு அமர்ந்த பாட்டியை பரிதாபமாய் பார்த்தேன்.

“நம்மால என்ன செய்ய முடியும் பாட்டி”

“ஏதாவது செய்துர முடியாதான்னு மனசு கெடந்து அடிக்குது ஆத்தா. இந்த வயசுல இந்த புள்ள இப்படி திரியுவே, இத எல்லாம் மனுச சென்மமா மதிச்சு நடத்த ஒருத்தரும் இல்லையா? அந்த நர்சு ஒரு பொம்பள தான, அவளுக்கு அந்த புள்ள நெலம புரியாதா? இப்படி போட்டு கரிச்சுக்கொட்டுறா. என்னவோ போத்தா, பொட்டப்புள்ளையா பொறந்துட்டமே. ஒந்தாத்தன் விட்டுட்டு ஓடுனப்பவே அவன் கொதவளைய நெருச்சிப் போட எனக்கு துப்பில்ல. எவன் மூஞ்சியையும் நிமிர்ந்து பாக்க வக்கில்லாம செல்லாகாசா கூடப்பொறந்தவன் பிச்ச போடுற மாதிரி போட்டத துன்னுட்டு கெடந்தேன். இப்ப ஒன் அப்பன் எரியுற அஞ்சு பத்து காச பொறிக்கிகிட்டு கெடந்து அல்லாடிக்கிட்டு கெடக்கேன்”

எனக்கு என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை. மெல்ல பாட்டியின் கைகளை பற்றிக் கொண்டேன்.

“பாட்டி, நாம வருத்தப்பட்டு எதுவும் ஆவப்போறது இல்ல. நம்ம பொழப்பயே நம்மளால பாக்க முடியல, இதுல அடுத்தவ எப்படிப் போறான்னு எப்படி பாக்குறது?”

“இப்படியே சொல்லிக்கிட்டு கெடந்தா எப்படித்தா. மனசுக்குள்ள என்னென்னவோ பண்ணுது ஆத்தா... பொண்ணா பொறந்துட்டாலே சாவுற வரைக்கும் அண்டி தான் பொழைக்கணுமாத்தா? எதாவது செய்யணும்த்தா, ஏதாவது செய்யணும்” வெடித்து அழும் பாட்டியை இப்பொழுது என்னோடு சேர்ந்து அவளும் வேடிக்கைப் பார்க்கத் துவங்கியிருந்தாள்.

Wednesday 6 April 2016

பெண்மை தூற்றுங்கள்



தலைப்ப பாத்த உடனே “என்னடா இது, இவ இப்படி சொல்லிட்டாளே”ன்னு கோவப்படுறீங்களா? எனக்கு அதை விட கோவம் அதிகமாக இருக்கு.

“பெண் அன்பின் மறுவுருவம்”

“பெண் பொறுமையின் சிகரம்”

“பெண் தெய்வம்”

இப்படி எல்லாம் சொன்னா கேக்கவும் படிக்கவும் நல்லா தான் இருக்கும். இத எல்லாம் கேக்குற பெண்கள் கூட “அட, ஆமா. நாங்க இப்படித் தான்”னு நெஞ்ச நிமிர்த்திப்பாங்க.

அட, அதெல்லாம் விடுங்க. ரொம்ப சமீபத்துல ஒரு கவிதை பாத்தேன்.

“பெண்ணே உன் முன்னே
நான் தலை குனிந்து நிற்கின்றேன்
அன்பு கொண்ட உன்னில்
காமம் கொண்ட என் பார்வை படாதிருக்க”

படிக்குறப்பவே அப்படியே ஒரு சோக வயலின் பின்பாட்டா ஒலிக்குதுல. “அடடா, பெண்ணே, நீ எவ்வளவு அன்பானவள், பண்பானவள். உன் முன்னால எல்லாம் தலைநிமிர்ந்து நிக்க ஆண்களுக்கு தகுதியே இல்ல, மொத்த ஆண்களும் காமப்பார்வை பார்ப்பவர்கள் அப்படின்னு சொல்றப்ப, பெண்கள் எல்லாரும் “ஆமாப்பா ஆமா” அப்படின்னு அப்படியே கண்ணுல தண்ணி வச்சுட்டு பாந்தமா சாந்தமா ஸ்லோ மோசன்ல நிமிர்ந்து பாக்குற மாதிரியே ஒரு உணர்வு எனக்கு.

அப்படியே இதுக்கு பின்னால எனக்கு இன்னொரு அர்த்தமும் இருக்குறதா தோணுது. “இங்கப்பார், நீ அன்பானவள். அன்பா மட்டும் தான் இருக்கணும். காமம்ங்குறது ஆண்கள் சொத்து. எங்களுக்கு நீ தேவைனா உன்னை எல்லாம் நாங்க காமமா மட்டும் தான் பாப்போம், அன்பா எல்லாம் இருக்கத் தெரியாது”ன்னு அடக்குமுறைல சொல்ற மாதிரியே எனக்கு கேக்குதே.

அப்படினா, பெண்களுக்கு காமம் வரக்கூடாது, வந்தாலும் வெளில சொல்லக் கூடாது. அப்படி சொல்லிட்டா போச்சு, “ச்சீ நீ எல்லாம் ஒரு பொண்ணா, இப்படி அலையுறியே”ன்னு வாய் வலிக்க வலிக்க திட்டித் தீக்கணும். கூடவே “உங்கள எல்லாம் நாங்க தான் ரசிக்கணும், நாங்க தான் பாராட்டணும், பெண்-னா அவளுக்கு அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு எல்லாமே உண்டு. அப்படி இருந்தா தான் அவ பெண். அவள நாங்க கால்ல விழுந்து கும்பிடுவோம், தேவைபட்டா தூக்கிப் போட்டு மிதிப்போம், அப்படியே காமம் வந்தா இழுத்துட்டு போய்....” அடப்போங்கப்பா.... இத சொல்றது ஆண்கள் தான்னு மட்டும் தப்பு கணக்கு போட்டுடாதீங்க. பெண்களே ஒரு பெண்னா இப்படி தான் இருக்கணும், இதுதான் வரைமுறைன்னு சொல்றாங்க.

ஒவ்வொரு தடவ பெண்ணுக்கு எதிரா அசம்பாவிதம் நடக்குறப்ப எல்லாம் சில நடுநிலையாளர்கள் (இதுல ஆண் பெண்ன்னு எல்லாம் இல்ல, எல்லா பாலினரும் தான்) பொங்குறது அவ ஆடை விசயத்துல தான். அய்யோ அவ அப்படி ட்ரெஸ் போட்டு எங்கள உசுப்பெத்துறா, இப்படி ட்ரெஸ் போட்டு எங்கள கூப்டுறான்னு கூச்சல் வேற. ஏன்னா இவங்களுக்கா செல்ப் கண்ட்ரோல் கிடையாதாம். எல்லாமே எல்லாத்துக்குமே பொண்ணு தான் காரணமாம்.

இதுல இப்போன்னு இல்ல எப்பவுமே இன்னொரு ட்ரெண்ட். “அம்மானா சும்மா இல்லடா, அவ இல்லனா யாரும் இல்லடா”ன்னு. இந்த சமூக வலைத்தளங்களும் மீடியாக்களும் அம்மாக்கள படுத்துற பாடு சொல்லி மாளாது. அம்மானா அவ ஒரு தியாக சொரூபி. பிள்ளைங்களுக்காக எல்லாத்தையும் இழக்கணும். தூக்கம் மறந்து துக்கம் மறச்சு, சாப்பாட்ட கூட பிள்ளைங்களுக்காக விட்டுக் குடுக்கணும். எத்தன காலத்துக்கு தான் இதயே சொல்லிக் குடுக்கப் போறாங்களோ தெரியல.

ஏன், அம்மான்னா மனுசி இல்லையா? அவளுக்கு ஆசாபாசங்கள் இருக்கக் கூடாதா? அம்மா அம்மான்னு அம்மாவ தியாகி ஆக்குற கூட்டம், அம்மாவ பாத்துக்குற பொறுப்பு பிள்ளைங்களுக்கு உண்டுன்னு எப்போ சொல்லிக் குடுக்கப் போறாங்க?

காலைல எழுந்த நேரத்துல இருந்து, அம்மாவுக்கான அத்தன வேலைகள்லயும் தானும் பங்கெடுத்து செய்யணும்னு யாரு பிள்ளைங்களுக்கு கத்துக் குடுக்கப் போறாங்க? திங்குற சாப்பாட்ட தட்டிப் பறிக்காம அம்மாவுக்கும் பங்கு உண்டுன்னு பகிர்ந்து அளிக்குற எண்ணத்த என்னிக்கி பிள்ளைங்களுக்கு விதைக்கப் போறாங்க? அம்மாவ எல்லாம் நீங்க பாத்துக்க வேணாம், ஆனா அவளோட சுயமரியாதைய அடக்கி வைக்காதீங்க. நீ அம்மா, நீ தியாகம் பண்ண பொறந்தவ, தியாகம் பண்ணியே தீரணும்னு நினைக்குற மனப்போக்க முதல்ல புள்ளைங்க மனசுல இருந்து மாத்தப்பாக்கணும்.

என்கிட்ட ஒருத்தங்க சொன்னாங்க, “எந்த ஆணும் யோக்கியன் கிடையாது, பெண்கள பாத்தா அவனுக்கு தானாவே ரசிக்கத் தோணும். அவள அடைய தோணும். இத எல்லாம் தப்புன்னு சொல்லக் கூடாது”ன்னு. எனக்கும் தெரியும், பெண்களோட கூடிக் கிடப்பவங்க எல்லாம் அயோக்கியனும் கிடையாது, பெண் வாசமே வேணாம்னு போறவங்க எல்லாம் யோக்கியனும் கிடையாதுன்னு. இன்னும் சொல்லப்போனா இந்த யோக்கியன், அயோக்கியன்ங்குற வார்த்தை பிரயோகமே தப்புன்னு தான் சொல்லுவேன்.

இயற்கையாவே மனுஷ இனம்னு இல்ல, எல்லா இனத்துக்கும் இருக்குற பொதுவான குணம் இந்த ஆண் டாமினேஷன். ஆனா ஒவ்வொரு உயிர்களோட இயங்குசக்தியே பெண்ணை சுத்தி தான் நடந்துட்டு இருக்கு. ஒரு பெண்ணுக்காக சண்டைப் போட்டு அழிஞ்ச பெரும் சாம்ராஜ்யங்கள் பத்தி நாம படிச்சதில்லையா? ஒரு பெண்ணை கவர தான் ஆண் அவன் வல்லமைய கூட்டிக்குறான்.

திறமையான ஒரு ஆணை தன்னோட இணையா தேர்ந்தெடுக்குற உரிமை எல்லா உயிரினத்து பெண்களுக்கும் உண்டு. அப்படி இருக்குறப்ப ஏன் இந்த மனுஷ இனத்துல மட்டும் ஒரு பொண்ணு தன்னோட இணைய தைரியமா தேர்ந்தெடுக்க முடியுறது இல்ல?

கேட்டா, நீ பெண், நீ அடக்க ஒடுக்கமானவள், நீ அன்பானவள், நீ வீட்டுக்கு அடங்கி நடப்பவள்... இன்னும் பல வள்... வள்... வள்...

வேற ஒண்ணுமே இல்ல, வீட்டுக்குள்ளயே அடைஞ்சு கிடந்து சலிச்சுப் போய் கொஞ்சம் ஊர் சுத்திட்டு வரலாம்னு நினச்சா கூட அந்த பெண்ணுக்கு என்ன பெயர் கிடைக்கும்னு நினைக்குறீங்க?

அதெப்படி அவள அவ இஷ்டப்படி வெளில விடலாம்? இருக்கவே இருக்கு வழக்கமான ஆராதனைகளும் அர்ச்சனைகளும். மறுபடியும், நீ பெண்ல.... ஒரு பொண்ணுனா எப்படி இருக்கணும்னு தெரியுமா? இந்தா உன் அக்காவ பாரு, பக்கத்து வீட்டு பரிமளாவ பாருன்னு ஆரம்பிச்சு அறிவுரையா சொல்லி திருத்தப் பாக்குறது (ஏன்னா ஒரு பெண் ஊர் சுத்துறது மாபாதகம் பாருங்க). இந்தபுள்ளையும் அடக்க ஒடுக்கமா இருந்துட்டா “இவள மாதிரி நல்ல பெண்ணே கிடையாது”. மீறி வெளில போயிட்டாளா, “ஓடுகாலி, அடங்காப்பிடாரி”.

நம்மள சுத்தி இருக்குற பிற உயிர்கள கூர்ந்து கவனிச்சாலே போதும், ஒரு விஷயம் நல்லாவே புரியும். ஒருத்தனுக்கு ஒருத்தின்னு இணைபிரியாம இருக்குற இணையும் இருக்கும், திருட்டுத் தனமா இன்னொரு இணையை சேர்த்துக்குற  இணையும் இருக்கும். இப்படி எல்லா குணங்களும் எல்லா உயிர்களுக்கும் பொதுவானது தான். ஆனா மத்த உயிர்கள்கிட்ட இருக்குற ஒரு நல்ல குணம் என்னன்னு பாத்தீங்கனா, யாரும் யார் விஷயத்துலயும் தலையிடுறது இல்ல. யாரும் யார் கூடவும் சேர்ந்து வாழக் கூடாதுன்னு அதிகாரம் பண்றது இல்ல, தடுக்குறது இல்ல. சேர்ந்து வாழணும்னு கட்டாயப்படுத்துறதும் இல்ல. வயசு வித்யாசம்னு எதுவும் பாக்குறது இல்ல. பிடிச்ச இணையை சேர்த்துகிட்டு கஷ்டமோ நஷ்டமோ இணைகள் அவங்க பாட்ட அவங்க தான் கவனிச்சாகணும். இதுவே மனுஷ இனமா இருந்தா?

ஆண்டாண்டு காலமா இந்த சமூகத்துல புரையோடிப் போயிருக்குற சாதீய படுகொலைகளுக்கு நாம என்ன பெயர் வச்சிருக்கோம்?

கெளரவக் கொலை. ஆணவக் கொலை.

இந்த கொலைய எல்லாம் தூண்டுறது யாரு?

இந்த சமூகம் தான் இல்லையா? சம்மந்தப்பட்ட ஆட்களை சுத்தி இருக்குற நாம எல்லாரும் தான் இல்லையா?

ஒரு ஆணும் பெண்ணும் ஓடிப் போய்ட்டா அது என்ன, ஏது, எங்க, எப்படி, யார், யாரோடன்னு தெரிஞ்சுக்கலனா தலை வெடிச்சு சிதறிடும் பாருங்க. அதுலயும் அவங்க இப்படி செய்திருக்க கூடாதுன்னு அவங்க உரிமைல தலையிடுறதுக்கு நிகர் நாமளே தான்.

ஒண்ணு மட்டும் புரிஞ்சுக்கணும், இந்த சமூகம் இப்படி இருக்க நாமளே தான் காரணம். நாம மாறாம சமூகம் மாறணும்னு நினச்சா?

ஆக, பெண்ணை போற்றுதும், பெண்மை போற்றுதும்னு சொல்லி சொல்லியே பெண் இனத்துக்கு ஒரு வரைமுறை வகுக்காம, எல்லாருக்கும் பொதுவான ஒரு நீதியோட எல்லாரும் இருந்தாலே போதும்.

சுருக்கமா சொன்னா...

ஆணோ பெண்ணோ....

யார் விசயத்துலயும் யாரோட வாழ்க்கை முறையிலயும் தங்களோட அதிகாரத்த செலுத்தாம இருந்தா போதும்.

நம்மோட வாழ்க்கை நம்மோட நிம்மதின்னு இருந்துட்டாலே போதும்...

யாரும் யாரையும் போற்ற அவசியம் இல்ல.

அட, தூற்றினாலாவது ஒரு பெண் அதுல இருந்து மீள வீறுக்கொண்டு எழலாம். ஆனா போற்றினா புகழ்ச்சிக்கு மயங்கியே அடங்கிப் போவாங்க....

ஆதனால் பெண்மை தூற்றுங்கள்.




Monday 4 April 2016

ஐ லவ் யூ பார்த்தி




இந்த புகைப்படத்த பாரு பார்த்தி,

எவ்வளவு பிரகாசம் படர்ந்திருக்கு
அந்த முகங்கள்ல...

நீயே எல்லாமும்னு
சரணாகதி அடைஞ்ச
தருணங்கள் பார்த்தி அதெல்லாம்...

உன் முகத்தைக் கூட பாரேன்...

எத்தனை கம்பீரமான புன்னகை
உன்னோடது...

என்னோட கண்கள பாத்தியா?

ஒரு குறும்பு சிறுமியோட குறுகுறுப்பு
தெரியுதுல அதுல...

நீ என் கைமேல படுத்துருக்க...
நான் உன் நெஞ்சோடு
படுத்துருக்கேன்...

அதுவும் உன்னையே
விழுங்குற மாதிரி பாத்துட்டு...

இந்த தருணத்த
பொய்ன்னு சொல்றியா பார்த்தி...

இது எல்லாமே
நடிப்பும் நாடகமும் கலந்ததுன்னு சொல்றியா?

வலிக்குது பார்த்தி,
ரொம்ப வலிக்குது பார்த்தி...

எழுத எழுத
தீரவேப்போறதில்ல பார்த்தி...

ஆறாத ரணமா கெடந்து
கொஞ்சம் கொஞ்சமா
என்னை கொல்லுது பார்த்தி...

எத்தன முறை யோசிச்சாலும்
ஒண்ணே ஒண்ணு மட்டும் தான்
புரியுது பார்த்தி...

ஐ லவ் யூ பார்த்தி....