Thursday 25 August 2016

வெறும் முத்தமென்று நினைத்தாயா?





அதை வெறும் முத்தமென்று நினைத்தாயா?

என் கோபம், வெறுப்பு,
ஆற்றாமை அத்தனையையும்
கூர்முனை கொண்டு குத்தி கிழித்து விட்டது...

உன் முத்தம் ஒவ்வொன்றாய் என்னை
சேர்ந்த பொழுது நான்
சில்லு சில்லாய் உடைந்து கொண்டிருந்தேன்...

முத்தமிட்டு நீ அப்பால் சென்றதும்
ஓ-வென நான் வெடித்து சிதறியதை
நீ அறிவாயா?

என் உணர்வுகள் கட்டப்பட்டுள்ளன...

என் கண்கள் பொய்யாய் மலர
கற்றுக் கொண்டுள்ளன...

உன் முன் எவ்வகை உணர்வை
காண்பிப்பதென்ற எந்த தெளிவையும்
எடுக்க முடியாதவளாய் நான்
சித்தம் கலங்கி நிற்கின்றேன்...

உன்னிடம் கேட்பதற்கோ என்னிடம்
ஏராளமாய் கேள்விகள்
கொட்டிக் கிடக்கின்றன...

கண்சிவந்து கோபப்பார்வை பார்த்து
நான் அவற்றையெல்லாம் உன்
கண்பார்த்து கேட்க வேண்டும்...

ரவுத்திரம் கொண்டு உன்னை
அடித்து தாக்கும் ஆத்திரமெனக்கு...

இருந்தும் என்ன பயன்?

என் கண்ணீரின் காரணகர்த்தாவாகிய
நீ தான் இந்த முத்தங்களையும் இட்டு சென்றாய்...

உன் மேல் நான் கோபமாய் இருக்கிறேன்...

உன் தலை மயிர் பற்றி
உன்னை ஆவேசமாய் பிடித்து தள்ள வேண்டும்...

என் கோபங்கள் அத்தனையும் சேர்த்து
உன்னோடு மல்லுகட்ட வேண்டும்...

ஆவி சேர அணைத்து உன்னை
முத்தத்தாலயே சாகடிக்க வேண்டும்...

எத்தகைய கொடுங்கோலன் நீ?

செய்வதெல்லாம் செய்து விட்டு
ஒரே ஒரு முத்தத்தால்
மொத்தமாய் என்னை வீழ்த்தி
மீண்டுமென்னை பேதையாக்கி விடுகிறாய்...

இருக்கட்டும்...

இந்த முத்தங்களின் போதை தெளியட்டும்...

நான் கோபமாய் வருகிறேன்,
இரு கைகள் கொண்டு கன்னம் பொத்தி 
உன்னை மீண்டும் சந்திக்க....

6 comments:

  1. so முத்தம் குடுத்த ஆடவனை love kisses ஆல் கொல்லுவதுதான் பெண்களின் real love போல?

    ReplyDelete
    Replies
    1. அதென்னமோ தெரியல, ஆனா இங்க லவ் எல்லாம் இல்ல, கொலைவெறி தான்

      Delete
  2. கவிதை அருமை....
    வாழ்த்துக்கள் சகோதரி.

    ReplyDelete
  3. அருமை. பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. தேங்க்ஸ் பிரதர்

      Delete