Saturday 18 April 2015

அவள் பெயர் ப்ரியம்வதனா



என்னடி, ஓவரா சவுண்ட் விட்டுட்டு இருக்க. நான் அப்படி தான் போவேன். நிம்மதியா மனுசனால ஒரு படம் கூட பாக்க போவ முடியல, எப்பப்பாரு உன்னையே தூக்கி வச்சிட்டு இருக்க முடியுமா?

உனக்கென்ன பார்த்தி, உனக்கு ஆயிரம் பிரெண்ட்ஸ் இருக்கலாம், ஆனா நான் உன்னை மட்டும் தான நினச்சுட்டு இருக்கேன். எனக்கு உன்னை விட்டா யாரு இருக்கா சொல்லு...

உன்னை யாருடி என்னையே நினச்சுட்டு இருக்க சொன்னது? நானா உன்னை கட்டுப்படுத்தினேன், நானா உன்னை யார் கிட்டயும் பேசக் கூடாதுன்னு சொன்னேன்.

ஆனா எனக்கு வேற யார் கூடவும் பேசத் தோணலயே”

“அதுக்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்?”

“நான் கேக்காமலே நீ தான சொன்ன, இன்னிக்கி முழுக்க என் கூட இருக்கப் போறேன்னு”

“சொன்னேன் தான், ஆனா அவங்க கூப்ட்டாங்க, மறுக்க முடியல”

“அப்போ ஏன் நான் மட்டும் உனக்கு மறந்து போய்டுறேன்?”

“எதுக்கு திரும்ப திரும்ப அதையே பேசிட்டு இருக்க, எனக்கு தூக்கம் வருது, தூங்கப் போறேன். குட் நைட்”

பட்டென்று அவளோடலான மொபைல் உரையாடலை துண்டித்துக் கொண்டான் பார்த்தி...

பிரியம்வதனா முகம் இறுகி போயிருந்தது. இந்த மாதிரியான சம்பவங்கள் அவளுக்கு புதிதில்லை தான். எப்பவுமே பழகிப் போனது தான். எப்பொழுதெல்லாம் அவளோடு கூடவே அவன் இருக்க வேண்டுமென்று நினைக்குறாளோ அப்பொழுதெல்லாம் அவன் அவளை விட்டு விலகியே இருந்திருக்கிறான். இதற்காக ஒட்டு மொத்த பழியையும் அவன் மேல் தூக்கிப் போட்டு விட முடியாது தான், அப்படி போட நினைப்பது கூட தப்பு. சூழ்நிலைகள் அவளையும் அவனையும் எப்பவுமே கைதிகளாகவே வைத்திருக்கிறது என்று வேண்டுமென்றால் சொல்லலாம்.

ஆனாலும் அன்று அவனாகவே அவளிடம் வந்தான். “இன்று முழுக்க உன்கூடத் தான் இருக்கப் போகிறேன்” என்றான். அவளுக்கும் அவன் தேவையாய் இருந்தான். சோர்ந்து போயிருந்ததாலும் வலிகளால் துவண்டிருந்த காரணத்தாலும் அவன் அருகில் இருந்தால் அத்தனையையும் மறக்கலாம் என்றிருந்தாள்.

அழைத்துச் செல்ல வருவான் என்று காத்திருந்து காத்திருந்து சோர்ந்து போய் தூக்கம் தழுவிய நேரத்தில் தான் அவன் அவளை அழைத்திருந்தான்.

காலம் கடந்து அவளிடத்தில் ஓடி வந்தவனை அவள் திட்டியிருக்க கூடாது தான். கோபத்தில் வார்த்தைகளை விட்டிருக்க கூடாது தான். ஆனாலும் நடந்தது நடந்தே விட்டது. வார்த்தைகள் தடித்து விடக் கூடாதென்ற பயத்தில் அவன் அந்த நிமிடம் அவளை புறக்கணித்து சென்று விட்டான்.

இன்று என்று இல்லை, கொஞ்ச நாளாவே அவள் மனதுக்குள் ஒரு விஷயம் தொண்டையை அடைத்துக் கொண்டேயிருக்கிறது. அவன் நண்பனாய் இருக்கையில் எத்தனை விட்டுக் கொடுத்தல்கள் இருந்திருக்கிறது. ஏன் காதலில் ஆரம்பத்தில் அவர்கள் ஊடல் இப்படி தான் ஆரம்பித்திருந்தது.

“நான் இருக்குறப்பவே வர்ற போற பொண்ணுங்கள எல்லாம் சைட் அடிக்குற, தலை வலிக்குது, கால் வலிக்குதுன்னு அப்படியே என்னை கழட்டி விட்டுட்டு அவங்க கூட கடலப்போட போய்டுற”

“அழகா பொறந்துது என் தப்பா...”

“நீயாடா அழகா இருக்க? அப்படியே ஹிப்போபோட்டாமஸ் மாதிரி இருக்க. அவங்க எல்லாம் சைட் அடிக்க என் புருஷன் தான் கிடைச்சானா?”

“உனக்கு பொறாமை டி”

“எனக்காடா பொறாமை. எருமை. மூஞ்சப் பாரு, சகிக்கல, ஆனாலும் அழகா தாண்டா இருக்க”

அப்புறம் என்ன, கண்கள் இரண்டால் கண்கள் இரண்டால்ன்னு ரெண்டு பக்கமும் பாட்டு சத்தம் கேக்க ஆரம்பிச்சுடும்.

“இருந்தாலும் அவனுக்கு ஒரு குட் நைட் சொல்லல. கூப்ட்டு சொல்லிடுவோமா?” ப்ரியம்வதனா மனசுக்குள் பெரிய பட்டிமன்றத்தை நடத்திக் கொண்டிருந்தாள்.

“அட, இதென்ன நமக்கு புதுசா?” என மனதை சமாதானப் படுத்தியப் படி அவன் மொபைலை தொடர்புக் கொண்டாள். அந்த பக்கம் ரிங் போய்ட்டு இருந்தது. இரண்டு மூன்று புறக்கணிப்புகளுக்கு பின்

“ஹல்லோ”

“ஏண்டா நான் குட் நைட் சொல்றதுக்குள்ள வச்சிட்ட”

“என்னை தூங்க விடக் கூடாதுன்னே முடிவு பண்ணிட்டியா?”

எரிச்சலோடு அவன் விலகிப் போவதை கவனித்து உள்ளுக்குள் நொறுங்கி அழ ஆரம்பித்தாள்.

“உனக்கு என்னை தவிர வேற எல்லாருமே வேணும் பார்த்தி. அவங்களுக்காக என்னை எப்பவுமே விட்டுக் குடுத்துடவ இல்ல”

“நீ ஏன் உன்னை அவங்களோட கம்பேர் பண்ணி உன்னை நீயே தாழ்த்திக்குற?”

“நீ ஏன் என்னை தவிர அவங்கள எல்லாம் உயர்த்தி பிடிச்சு கொண்டாடிக்குற?”

“அவங்க எல்லாம் ஒண்ணுமே இல்ல தெரியுமா எனக்கு?”

“ஆனா நான் தான் உனக்கு எல்லாமேன்னு தெரியுமா உனக்கு?”

“இதென்னடி கேள்வி? கேள்வியே தப்பா இருக்கு?”

“இல்ல அப்படி தெரிஞ்சிருந்தா ஒண்ணுமே இல்லாத அவங்களுக்காக எல்லாமுமா இருக்குற என்கிட்ட இப்படி எடுத்தெரிஞ்சி பேசிட்டு இருக்க மாட்ட”

உனக்கு பைத்தியம் தாண்டி புடிச்சிருக்கு. நான் போறேன். நாளைக்கு பேசுறேன். குட் நைட்.

படீர்னு மூஞ்சுக்கு நேரே கதை இழுத்து மூடினா எப்படி இருக்கும். பிரியம்வதனா அப்படி ஒரு மனநிலையில் இருந்தாள். சமீப காலமாவே அவளுக்குள் குடைந்து கொண்டிருந்த கேள்வி இது தான்...

“பார்த்தியோட வாழ்க்கைல நான் யார்?”

“நீ தாண்டி எல்லாமே”ன்னு அவன் கண்டிப்பா சொல்லுவான் தான். இப்படி ஒரு கேள்வியை தெரிந்து கொண்டே கேட்க அவளுக்குள் எத்தனை குரூரம் இருக்கணும் என்று மனசுக்குள் மருகி தான் போவான். ஆனாலும் அவளுக்கு அந்த கேள்விக்கான பதில் தேவையாயிருந்தது.

ஏதோ ஒரு ஆக்ரோசம் அவளுக்குள் கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்திருந்தது.

“எல்லாரையும் அரவணைத்துப் போகிறான், தட்டிக் கொடுக்கிறேன் என்று அனைவரையும் பாராட்டித் தள்ளுகிறான். ஏன், நான் அதற்கு கொஞ்சமும் தகுதி இல்லாதவளாகி தான் போனேனா? காதல் கிண்டல்களில் மட்டும் ஏதோ கொஞ்சம் ஒட்டிக் கொள்கிறான், அதுவும் எனக்கு பயந்து தான் இருக்க வேண்டும். எனக்கு என்ன கொறைச்சல்? என்கிட்ட எந்த திறமையுமே இல்லையா? நான் ஏன் இப்படி இருக்கேன்?

கொஞ்சிக் கொண்டே இருக்கும் காதல்களில் எப்பவுமே அவளுக்கு உடன்பாடு இருந்ததே இல்ல. ஏன் காதலிக்குறவங்க அவங்க இணையை சின்னதா பாராட்டிக்க கூடாதா, தட்டிக் கொடுக்க கூடாதா?

கோபம் வெடிக்க ஆரம்பித்தது. “நான் ஒண்ணும் தியாகி இல்ல, நான் எதுக்கு இப்படியே இருக்கணும்? எனக்கு இதையெல்லாம் தாண்டி எதுவோ தேவைபடுதுங்குறத அவனுக்கு எப்படி புரிய வைக்குறது?”

அவனோடு கதை பேசிக் கிடந்த நாட்களும், வாக்குவாதங்கள் புரிந்த நாட்களும், சந்தோசமாய் பாடித் திரிந்த நாட்களும் திரும்ப திரும்ப அவள் நினைவுகளில் மோதத் துவங்கி விட்டது. எத்தனையோ தர்க்கங்கள், படித்த கதைகள், பார்த்த நிகழ்வுகள் என்று நண்பர்களோடு அவளையும் முன்னிறுத்தி அவன் பகிர்ந்து கொண்டது ஏராளம். இப்பொழுதோ அதையெல்லாம் பேசி மகிழ புதிது புதிதாய் தோழர்கள், தோழிகள். இவள் காதலுக்கு மட்டுமேயானவள்ன்னு முடிவே கட்டிவிட்டானா என்ன?

“இந்த பாழாய்ப்போன வெற்றுக் காதலால நானும் ஒரு சராசரி பொண்ணா மாறித்தான் போனேனோ? அப்படி மாறிட்டதால இவ இனிமேல் என் தனி சாம்ராஜ்யத்துள் நுழைய தகுதி இல்லாத அந்தப்புர மகாராணின்னு அவனே முடிவு பண்ணி தள்ளி வச்சிட்டானோ. அப்படி தள்ளி வைக்குற அளவு நான் உணர்ச்சிகளே இல்லாத வெற்று காகிதம் இல்லையே”

இவன் ஒருத்தனின் புறக்கணிப்பின் பெயரால் அத்தனை பேர் மேலேயும் கோபம். “ஆமா, என்னை விட அவங்க தான் அவனுக்கு ஒசத்தி”ங்குற இயலாமை. அதனால ஏற்படுற ஆங்காரம், ஆக்ரோசம். இவனால் அத்தனை பேரும் அவளுக்கு கெட்டவர்களாகி போனார்கள்.

யோசிக்க யோசிக்க தலையே வெடிச்சிடும் போல இருந்தது அவளுக்கு. ராத்திரி முழுக்க தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்து விட்டு காலைலயே காரை எடுத்து வேக வேகமாக அவன் வீடு சென்று கதவை தட்டினாள்.

“டொக் டொக்”

கதவை திறந்தவன் ஆச்சர்யமானான்.

“என்ன இது, இவ்வளவு காலைல வந்துருக்க. நானே உன்னைப் பாக்க வரணும்னு நினச்சிட்டு இருந்தேன். சாரிடா, நேத்து கொஞ்சம் கோபமா பேசிட்டேன். மன்னிச்சுடு”

“பார்த்தி, நான் வந்தது என்னைப் பத்தி பேசுறதுக்கு”

“இதென்னது, புதுசா இருக்கு, நான் நீன்னு பிரிச்சு பேச ஆரம்பிச்சிருக்க. அப்போ நான் வேற நீ வேறயா?”

“இது நீ வேற நான் வேறங்குற மாதிரியான விஷயம் இல்ல பார்த்தி”

“அப்புறம் என்ன விஷயம்?”

“எனக்கு எல்லாமே வெறுமையா தோணுது பார்த்தி, எனக்குன்னு எதுவுமே இல்லாத மாதிரி”

“உனக்கு நான் எதுவுமே செய்யலன்னு சொல்றியா வதனா?”

“எனக்கு பதில் சொல்லத் தெரியல பார்த்தி. எனக்கு எல்லாமே நீயா தான் இருந்துருக்க, இருக்குற. அப்புறம் நீ எனக்கு எதுவுமே செய்யலன்னு நான் எப்படி சொல்ல முடியும்? ஆனா என்னவோ ஒரு வழிப் பாதையாவே இருக்குறதா எனக்கு தோணுது. இது ஒரு வேளை என்னோட பிரம்மையா கூட இருக்கலாம், ஆனா தோணுது. பிரிச்சு பாக்காத அந்த இடத்துல நீ மட்டும் தான் கண்ணுக்கு தெரியுற, என்னை காணவே காணோம்”

“நீயும் எனக்கு எல்லாமுமா இருந்துருக்க. வேற யாரா இருந்தாலும் இப்படி செய்ய மாட்டாங்க”

“இங்க பாரு பார்த்தி, உனக்கு நான் யாரு, உனக்காக நான் என்ன செய்தேன்னு எல்லாம் கண்டிப்பா கேக்க மாட்டேன், காரணம் எல்லாமே முழுக்க முழுக்க காதல், காதல் மட்டும் தான்னு எனக்கு தெரியும். ஆனா அதே காதலால இப்ப எனக்கு பெரிய மன அழுத்தம் இருக்கோன்னு தோணுது”.

“இப்போ என்ன பண்ணனும்னு நினைக்குற?”

“உன் காதல் என்கிட்ட இருக்குறப்போ அது மட்டும் தான் என்கிட்ட இருக்கு. வேற எதுவுமே இல்ல. ஒரு வேளை அந்த காதல நான் விட்டுட்டா? இந்த காதல தவிர வேற எல்லாமே எனக்கு கிடைச்சிடும்ல”

“அப்படி எது கிடைச்சாலும் அதுல சந்தோசம் இருக்காதுடி”

“பாக்கலாம் பார்த்தி. கொஞ்ச நாள் கண்டிப்பா கஷ்டப்படுவேன், நான் என்னை மாத்திக்க முயற்சிப் பண்றேன். என்னால முடியும்னு நம்பிக்கை இருக்கு. எனக்குன்னு நான் வாழணும்னு ஆசையா இருக்கு”.

“அந்த வாழ்க்கைய என் கூட வாழலாம்ல”

“நீ என் லைப்ல வந்ததுக்கு அப்புறம் தான சின்ன சின்ன பாராட்டுக்கு எல்லாம் ஏங்கிப் போக ஆரம்பிச்சுது மனசு. நீ என்னைத் தவிர எல்லாரையும் தூக்கி வச்சு கொண்டாடும் போது அத பாத்து நான் ஏன் தாழ்வு மனப்பான்மைல கூனிக் குறுகி போகணும்? எனக்கு என்ன கொறைச்சல் பார்த்தி. உனக்குத் தெரியுமா? உன்னைத் தாண்டிய என் உலகத்துல என்னை எல்லாரும் தூக்கி வச்சு கொண்டாடுறாங்க. நான் அவங்களோட ராஜ குமாரி. பிரியம்வதனா நினச்சா சாதிக்காம விட மாட்டான்னு அவ்வளவு பெருமையா பேசுவாங்க. அலட்சியத்தையும் புறக்கணிப்பையும் என் வாழ்க்கைல நீ வரதுக்கு முன்னால சந்திச்சதே இல்ல பார்த்தி”.

“வதனா”

“கொஞ்ச நாளாவே என் மனசு ரணமா காயப்பட்டு துடிக்குரத உனக்கு நான் எப்படி புரிய வைப்பேன் பார்த்தி? என்னோட மனநிலைல இருந்து என்னிக்காவது யோசிச்சு பாத்திருக்கியா?”

நான் என்னடி பண்ணுவேன்? என் இயல்பே அது தான, நான் மாறிட்டா அப்புறம் நான் நானாவே இருக்க மாட்டேனே”

“அதுவும் எனக்கு தெரியும், நீ மாறினாலும் உன்னை எனக்கு பிடிக்காம போய்டும். நீ மாறாத, ஆனா எனக்கு உன்னை தாண்டிய எதுவோ தேவையா இருக்கு. என்னை போக விடேன்...”

சொல்லும் போதே குரல் கம்ம ஆரம்பித்தது. உதட்டுக்குள் முணுமுணுத்துக் கொண்டாள். “இல்ல, நான் பலவீனமாவள்ன்னு அவன் நினச்சிடக் கூடாது. எக்காரணம் கொண்டும் கண்ணீரை அவன் முன்னாடி சிந்திடக் கூடாது”.

கவனத்தை திசைத் திருப்ப சிதறிக் கிடந்த புத்தகங்களை எடுத்து மேஜை மேல் அடுக்கி வைத்தாள். கடகடவென்று சமையலறை சென்று வெந்நீரை கொதிக்க வைத்தாள். டீத்தூள் எடுத்து திறந்தவள் அப்படியே அதை ஓரமாய் வைத்து விட்டு வெறும் வெந்நீரை ஆற்றிக் குடித்து ஆசுவாசப்படுத்திக் கொண்டாள்.

“இங்கப் பாரு, இனிமே நீ யார வேணா சைட் அடிச்சுக்கோ, எவ கூட வேணா கடலை போட்டுக்கோ. உன்னை கேக்க யாருமே இருக்க மாட்டாங்க. நான் போறேன். எப்போ நீ எனக்கு தேவைன்னு நினைக்குறேனோ அப்ப நானே வரேன்”.

“அதுக்கு முன்னாடி வேற யாராவது என்னை கொத்திட்டு போய்டுவா”

வாசலை நோக்கி அடி எடுத்து வைத்தவள் ஒரு கணம் நின்றாள். அப்படியே திரும்பி அவன் சட்டையை பிடிச்சு

“எனக்கு தெரியும், என்னைத் தவிர வேற எவளாலும் உன் கூட குடும்பம் நடத்த முடியாது”

“அதான் திமிரு”

விறுவிறுவென நடக்க ஆரம்பித்தாள். மனதுக்குள் வைராக்கியம் உறுதியாய் அவளிடம் சொல்லிக் கொண்டிருந்தது


“வது, திரும்பிராத வது. வது திரும்பவே திம்பிராத, வது திரும்.....”




.

3 comments:

  1. எல்லாம் ஒரு நம்பிக்கை தான் வாழ்க்கை...

    ReplyDelete
  2. Priyamvathana payar nalla iruku. payar ku thani kathai yathanum iruka. vaalthukal.

    ReplyDelete
  3. ம்ம்ம்.
    கதையை வாசிக்கும்போது nethane ponvasantham படம் ஞாபகம் வந்தது அக்கா.
    ந.ல்.ல.க.தை.
    பாவம் அந்த ப்ரியம்வதனா:-)

    ஏம்ப்பா பார்த்தி அந்த பொன்னு
    ப்ரியம்வதனாவ கொஞ்சம் புரிஞ்சிக்க ட்ரை பண்ணிதான் பாரு:-)

    ReplyDelete