Tuesday 20 September 2016

அடுத்து நேரப் போறது என்னன்னு தெரியாது

நான் யூ.ஜி பண்ணினப்ப தான் அவங்கள பாத்தேன். கருப்பா, ஒல்லியா இருப்பாங்க. அவங்க நடை உடை பாவனைல ஒரு மிடுக்கு இருக்கும். அவங்க சேலை கட்டுற விதமே அத்தனை பிரமிப்பா இருக்கும். ஆங்கிலம் அவங்க நுனி நாக்குல விளையாடும்.

அவங்கள பொருத்தவரைக்கும் பொண்ணுங்க நல்லா படிச்சா அவங்களுக்கு ரொம்ப பிடிக்கும். அதோட அவங்களுக்கு இன்னும் நிறைய திறமைகள் இருந்தா சொல்லவே வேணாம், அவ்வளவு இஷ்டம். செமினார் க்ளாஸ் எடுக்குறதுல எனக்கு ரொம்ப இஷ்டம்ங்குறதால நான் எப்பவும் அவங்களுக்கு செல்லம். அடிக்கடி என்னை க்ளாஸ் எடுக்க சொல்லி அவங்க கவனிச்சுட்டு இருப்பாங்க. என் கூட இன்னொருத்தியும் உண்டு. நான், அவ, அவங்க மூணு பேரும் தான் மாத்தி மாத்தி க்ளாஸ் எடுத்துட்டு இருப்போம்.

இப்படி இருக்குறப்ப ஒரு நாள் காலேஜ்ல இருந்து டூர் கூட்டிட்டு போனாங்க. போன இடத்துல நாங்க மூணு பேரும் தான் ஒரு ரூம்ல தங்க வேண்டிய சூழ்நிலை. அன்னிக்கி ராத்திரி மூணு பேருமே தூங்கல. விடிய விடிய மேடம் அவங்க கதைய சொல்லிட்டே இருந்தாங்க. நாங்க ரெண்டு பேரும் பிரமிப்போட அத கவனிச்சுகிட்டே இருந்தோம். இது நாள் வரைக்கும் வெறும் ஆசிரியையா இருந்த அவங்கள நாங்க தோழி ஆக்கிகிட்டது அன்னிக்கி தான்.

அவங்க அப்பா ஒரு கவர்மென்ட் வெட்னரி டாக்டர். வேலைக்கு போன இடத்துல இவங்கள விட ரெண்டே வயசு பெரிய பெண் (பதினாறு வயசு)கிட்ட தப்பா நடந்து, அந்த பொண்ணு கர்ப்பம் ஆகி, ஊர்ல எல்லாரும் சேர்ந்து அவருக்கே அந்த பொண்ணை கட்டி வச்சுட்டாங்க. இவங்க அம்மாவுக்கு பைத்தியம்னு சொல்லி ரெண்டு வருஷம் ரூமுக்குள்ள அடச்சு வச்சு, ஒரு நாள் அவங்களும் செத்துப் போய்ட்டாங்க.

மிரட்சியோட கேட்டுகிட்டு இருந்த எங்கள பாத்து அவங்க சொன்னாங்க, “ஊர்ல எல்லோருக்கும் எங்க அம்மாவ விச ஊசி போட்டு கொன்னது எங்க அப்பான்னு தெரியும். என்னையும் சாட்சி சொல்ல கூப்பிட்டாங்க. அம்மா செத்தப்ப எனக்கு பதினாறு வயசு. என் தங்கச்சிக்கு பத்து வயசு. அந்த நிலைமைல என் அப்பாவ நான் காட்டி குடுத்தா அவர் ஜெயிலுக்கு போய்டுவார், நாங்க ரெண்டுபேரும் யாருமே இல்லாத அநாதை ஆகியிருப்போம். ஊர்ல யாருமே உதவிக்கு வந்துருக்க மாட்டாங்க. அதனால எங்க அம்மா பைத்தியம் முத்தி தான் செத்து போனாங்கன்னு சாட்சி சொல்லிட்டேன்”னு அவங்க சொன்னதும் மனசு கனத்து போச்சு.

அப்பாவ ஜெயிலுக்கு போகாம காப்பாத்தி விட்டாலும் அப்புறம் அவர் மேல இருந்த வன்மம் அவங்களுக்கு கூடி போச்சு. அப்பாவோட அத்தனை சொத்தையும் ஊர்காரங்க, சொந்தக்காரங்க சாட்சியா வச்சு தன்னோட பெயர்ல எழுதி வாங்கிகிட்டாங்க. இதனாலயே அவங்க ஒவ்வொரு பரீட்சை நேரத்துலயும் அவங்க அப்பா புக்ஸ் எல்லாம் எடுத்து வச்சுட்டு, சொத்தை எழுதி குடு, அப்போ தான் புக்ஸ் தருவேன்னு மிரட்டுவாராம். நல்லா படிக்குறவங்க, அதனாலயே படிக்காமலே பரீட்சை எழுத பழகிட்டாங்களாம்.

விரும்பி ஒருத்தர் கல்யாணம் பண்ணிக்குறேன்னு பொண்ணு கேட்டு வந்தப்ப அவங்க எம்.எஸ்.சி படிச்சுட்டு இருந்துருக்காங்க. அவங்க படிப்புக்கு எந்த தடையும் வரக்கூடாதுன்னு கட்டளை போட்டுக்கிட்டு தான் கல்யாணமே பண்ணிகிட்டாங்களாம். கல்யாணத்துக்கு அடுத்த நாள் யூனிவர்சிட்டி எக்ஸாம். அதையும் போய் எழுதி இருக்காங்க. தங்கச்சிக்கு பதினெட்டு வயசு வந்ததும் அவங்களுக்கு சேர வேண்டிய சொத்தை பிரிச்சு குடுத்து கல்யாணமும் முடிச்சு வச்சிட்டு அப்புறம் ஒரு பங்கை அப்போவோட ரெண்டாவது மனைவி மூலமா பிறந்த தம்பிக்கே திருப்பி குடுத்துட்டாங்க.

“அன்னிக்கி நான் இப்படி ஒரு முடிவை எடுக்கலைனா நானும் என் தங்கச்சியும் சின்னாபின்னமாகி இருப்போம்”னு சொல்ற அவங்கள பாத்தா எங்களுக்கு நிஜமாவே மலைப்பா இருக்கும். ஒவ்வொரு மாசம் பீரியட்ஸ் நேரத்துல மரண அவஸ்த்தைப்படுவாங்க. பொண்ணுங்கனா இத விட எவ்வளவோ கஷ்டங்கள் உண்டு. இதெல்லாம் ஜுஜுபின்னு சொல்லுவாங்க. கிட்டத்தட்ட மனோ தைரியத்த அதிகமா நான் கத்துகிட்டது அவங்க கிட்ட தான்.

திடீர்னு ஒரு நாள் வேற வேலைக்கு போறேன்னு சொன்னாங்க. அழுதுகிட்டே பிரியாவிடை குடுத்தோம்.

அப்புறம் அவங்கள பத்தி நிறைய விஷயங்கள் கேள்விப்பட்டோம். திடீர்னு அவங்க மால்தீவ்ஸ்ல இருக்காங்கன்னு செய்தி வரும். அடுத்து இந்தோனேசியான்னு சொல்லுவாங்க. அப்புறம் ஒரு நாள் அவங்களுக்கு பைத்தியம் பிடிச்சிடுச்சுன்னு சொன்னாங்க. என்னால அத ஜீரணிக்கவே முடியல. ஆனா செய்தி உண்மை தான்னு எனக்கு ரொம்ப வேண்டப்பட்ட பெண் ஒருத்தி சொன்னப்ப நொறுங்கி போனேன்.

எப்படி பட்ட பெண் அவங்க. கிட்டத்தட்ட அவங்க பாடம் எடுத்த எல்லோருக்குமே அவங்க தான் ரோல் மாடல். கல்யாணம் ஆகி, ரெண்டு குழந்தைகளுக்கு அம்மாவாகி, குடும்பத்து பிரச்சனை அவங்கள எப்படி எல்லாம் புரட்டி போட்டுருக்கு.

எனக்கு அவங்க கணவரையும் தெரியும். கிட்டத்தட்ட எனக்கும் அவருக்கும் ஒரே மாதிரியான ரசனை. நான் வீட்ல மீன் வளர்த்துட்டு இருந்தேன். ஒரு நாள் எதேச்சையா வீட்டுக்கு வந்த அவர் நான் மீன்கள பராமரிக்குற விதத்த பாத்துட்டு நானும் மீன் வளர்க்க போறேன்னு கிளம்பிட்டார். உனக்கும் என் வீட்டுக்காரருக்கும் வேற வேலையே இல்ல. மீன் வளர்க்குறேன்னு என் உயிரை வாங்குறார்னு என்கிட்ட சிரிச்சுகிட்டே சலிச்சுப்பாங்க மேடம். எப்பவும் வீட்டுக்காரர விட்டுக்குடுத்தது இல்ல, அவரும் அப்படியே தான்.

நம்ம சமுதாயத்துல தான் ஒரு ஆணும் பெண்ணும் நிம்மதியா இருக்க, காதலோட இருக்க அவங்க ரெண்டு பேர் மட்டும் சம்மந்தப்பட்டா போதாதே, குடும்பம், உற்றார், உறவினர்னு ஆளாளுக்கு சொல்ற மாதிரி தானே குடும்பம் நடத்த வேண்டியது இருக்கு. காதலிக்கவும் வேண்டியிருக்கு.

ஆக, ஒரு காதல் முடிவுக்கு வந்துடுச்சு. அவங்களுக்கும் பைத்தியம் முத்தி போய்டுச்சு. ஒன்னரை வருஷம் முன்னாடி வரைக்கும் அவங்கள பத்தி அரைகுறையா கேள்விபட்டுட்டு இருந்தோம். அப்புறம் அவங்க என்ன ஆனாங்கன்னு எங்களுக்கு தெரியவே இல்ல.
.............

இன்னிக்கி எங்க காலேஜ் பிரின்சிபால்கிட்ட ஒரு கையெழுத்து வாங்க அவங்க வீட்டுக்கு நானும் என்னோட சூப்பர் ஜூனியர் பொண்ணும் போயிருந்தோம். போயிட்டு திரும்பி வர்றப்ப தான் அவர பாத்தோம். மேடத்தோட அப்பா. கார விட்டு இறங்கி போய் பேசலாம்னு சொன்னா அவ. எனக்கோ அவர் மேல இருந்த வெறுப்பு துளியும் குறையல. வேண்டா வெறுப்பா காரை விட்டு இறங்கி முகத்தை வேற பக்கமா திருப்பிகிட்டு நின்னேன்.

அவ போய் பேசிட்டு இருந்தப்பவே அவர் என்கிட்ட வந்துட்டார். நீ இன்னாரோட பொண்ணு தானே, உங்க வீட்டு மாட்டுக்கு ஊசி எல்லாம் போட உங்க வீட்டுக்கு அடிக்கடி வருவேன்னு சொன்னார். வலிய வந்து பேசுறவர்கிட்ட பேசாம எப்படி போக? ஒப்புக்கு மேடம் நல்லா இருக்காங்களான்னு கேட்டேன். உடனே மளமளன்னு ஆரம்பிச்சுட்டார்.

அவ கத உனக்கு தெரியுமாமா, அவளால நான் நிறைய கஷ்டப்பட்டுட்டேன்னு அவர் கண்ணு கலங்கி போச்சு. அத்தன வயசான மனுஷன், என்ன தான் அவர பத்தி தப்பா கேள்விப்பட்டுருந்தாலும் அவர் கண்கலங்கினத பாத்து மனசு பதறி போச்சு. மேடம் இப்ப எப்படி இருக்காங்க, எங்க இருக்காங்கன்னு கேட்டேன்.

“She is perfectly alright”னு தான் முதல் வார்த்தையே சொன்னார். மனநிலை ரொம்ப பாதிக்கப்பட்டு நட்டநடு ராத்திரியில ஊர்ல ஒரு கோடில இருந்து மறுகோடிக்கு அலறிகிட்டே ஓடுவாங்களாம். பாக்குற சுவர்ல எல்லாம் அவங்க பெயர் எழுதி முன்னால Dr னு போட்டு வைப்பாங்களாம். எத்தனையோ நாள் பக்கத்து போலிஸ் ஸ்டேசன்ல ராத்திரி நேரம் போய் கலாட்டா பண்ணி, நிறைய தடவ அரெஸ்ட் பண்ணி உள்ள வச்சிருக்காங்களாம்.

“நான் ஒரு ஆத்தீகன்மா. எனக்கு தெய்வ நம்பிக்கை எல்லாம் சுத்தமா கிடையாது. மனசாட்சிய மட்டும் நம்புறவன். ஆனா வாழ்க்கைல எல்லாத்தையும் இழந்துட்டு ஏதோ ஒரு வழி பிறந்துடாதான்னு ஏக்கத்துல இருந்தப்ப, பக்கத்து ஊரு பூசாரி என்னை வலுக்கட்டாயமா அவரோட கோவிலுக்கு இழுத்துட்டு போனார். உங்க பொண்ணு புத்திக்கு எதுவுமே இல்ல, செய்வினை கோளாறு தான். நான் சரி பண்றேன்னு சொல்லி கொஞ்சமா திருநீறு, குங்குமம் வச்சு சின்னதா பூஜை பண்ணினார். அன்னிக்கே அவ சென்னை போய்ட்டா. மறுபடி அவ திரும்பி வந்தப்ப அப்படியே மாறி இருந்தா. இன்னிக்கி அவ ஒரு காலேஜ்ல வேலை பாக்குறா. டிபார்ட்மென்ட் ஹச்.ஓ.டி அவ. காலேஜ் வைஸ்-ப்ரின்சிபால் கூட”ன்னு அவர் சொன்னதும் என் முகம் எல்லாம் மலர்ந்துடுச்சு. கூட இருந்தவள பாத்தேன், அவளும் அப்படியே ஒரு பரவச நிலைல தான் இருந்தா.

எனக்கு இந்த செய்வினை, பூசாரி எதுவுமே காதுல விழல. எத்தனையோ வைத்தியங்கள் மத்தியில ஏதோ ஒரு வகைல அவங்க சரி ஆகிட்டாங்க. என்னோட மேடம் நல்லா இருக்காங்க. அது போதும்.

அவங்க பிள்ளைங்க எங்க இருக்காங்கன்னு இழுத்தேன். இதோ, பொண்ணு என் கிட்ட தான் சின்னதுல இருந்தே வளருறா. அப்படியே அவ அம்மா மாதிரி. புக் எடுத்து படிக்கவே மாட்டா, ஆனா மார்க் தொன்னுத்து எட்டுக்கு கீழ குறையாதுன்னு சொன்னப்ப அவர் முகத்துல அத்தன பெருமை. இதோ, இதான்மா எங்க வீடுன்னு சொல்லி, அந்த பொண்ணையும் கூப்பிட்டு எங்களுக்கு அறிமுகப்படுத்தினார். தாத்தா இடுப்பை கட்டிக்கிட்டு அந்த சின்னப் பொண்ணு சிரிச்ச சிரிப்புல ஒரு நிறைவு இருந்துச்சு. அவ தலைய அவர் வருடி விட்டதுல ஒரு ஆன்ம நெருக்கம் இருந்துச்சு. என்னோட அத்தனை தவறுகளுக்கும் பிராயசித்தமா இவள நான் வளர்த்துட்டு இருக்கேன்னு அவரே சொன்னார்.

அடியே செல்லமே, உனக்கு ஒரு லவ், உன் அம்மாவுக்கும் ஒரு லவ்.

மேடத்தோட நம்பர் குடுங்கன்னு கேட்டு வாங்கிட்டு வீட்டுக்கு வந்தோம். அவ இன்னும் என் மேல கோபமா தான் இருக்கா. நான் நம்பர் குடுத்தேன்னு சொல்லிடாதீங்கன்னு சொல்லி அனுப்பி வச்சார் அவர்.

வீட்ல வந்து உக்காந்து யோசிச்சுகிட்டே இருக்கேன். அவங்களுக்கு கால் பண்ணலாமா வேணாமான்னு. இல்ல வேணாம். வாழ்க்கைல நானும் ஒரு நாள் ஜெய்ச்சுட்டு பெருமிதமா தான் அவங்க கிட்ட பேசணும். அப்ப தான் நான் அவங்க மாணவிங்குறது சரியா இருக்கும்.

........................

4 comments:

  1. அருமையான அலசல்

    ReplyDelete
  2. நல்லதொரு பகிர்வு. என்ன நடக்கும் என்பது புரியாத புதிர்....

    ReplyDelete
  3. அனுபவ பதிவு திரைகதை வடிவத்தில் இனிதே தொடரட்டும்.

    ReplyDelete
  4. வாசித்து முடிச்சதும் மனசை என்னமோ செய்தது காயத்ரி ..
    அந்த பேராசிரியை நல்லா இருக்கட்டும் ..சிலர் சொல்வாங்க பெற்றோர் செஞ்ச பாவம் பிள்ளைகளை சேரும்னு அதன் உண்மையான அர்த்தம் பற்றி எங்க சர்ச் ரெவரென்ட் சொன்னாங்க ..இந்த மாதிரி கெட்ட விஷயங்களை சந்தோஷமில்லா சூழலில் வளரும் பிள்ளைகள் குறிப்பா பெற்றோர் வாக்குவாதம் சண்டை சச்சரவு வன்முறை போன்றவற்றை பார்த்து வளரும் பிள்ளைகள் மனநிலை அதையே செய்ய விழையுமாம் ..சில எக்ஸப்ஷன் இருந்தாலும் அநேக பிள்ளைகள் வாழ்க்கை நாசமாவது இந்த தவறான வாழ்வுமுறைகளை பார்த்து வளருவதால்தானாம் .எப்படியோ அவர் சுகமாகி விட்டாரே அதுவே போதும் இறைவன் துணையிருப்பார்

    ReplyDelete