Wednesday, 11 February 2015

தாய்ப்பால்



இந்த பதிவ நான் ஒரு எட்டு நாள் முன்னாடியே எழுதியிருக்கணும், ஆனாலும் ஏற்கனவே ப்ளட் குரூப் பத்தி ஒரு பதிவு போட்டுட்டேன்ங்குரதாலயும் ஒரே மாதிரியான பதிவை போட்டா இவ இப்படிதாங்குற முத்திரை குத்திடக் கூடாதுங்குரதாலயும் அத எழுதாமலே விட்டுட்டேன்.

சரி, இப்ப எதுக்கு இந்த பதிவு?

நாலு நாள் முன்னாடி Abdulwahab Sherkhan​ அண்ணா கேன்சர் சம்மந்தப்பட்ட பதிவ அவரோட ப்ளாக்ல போட்ருந்தார். கேன்சருக்கான மாற்று மருத்துவம்ங்குற தொணில அந்த பதிவு இருந்தாலும், அதுல சொல்லப்பட்ட ஒரு விஷயம் தாய்ப்பால் பற்றியது. கண்டிப்பா அது என்ன விசயம்னு கடைசில சொல்றேன்... அதுக்கு முன்னாடி, வாங்க, ஒரு ப்ளாஸ்பேக் போவோம்....

......................

அன்னிக்கி க்ளாஸ்ல நுழைஞ்சதுமே பிள்ளைங்களுக்கு அப்படி ஒரு சந்தோசம். சரி தான், இன்னிக்கும் க்ளாஸ் எடுக்க முடியாது போல, ஆனாலும் அவங்களுக்கு பிடிச்ச டாபிக் போறதுக்கு முன்னாடி நாம கொஞ்சம் க்ளாஸ் எடுத்துரணும்னு முடிவு பண்ணிட்டேன்.

ப்ளட் குரூப் பத்தின க்ளாஸ் முடிஞ்சதால, அடுத்து நான் எடுக்க வேண்டிய டாபிக், இம்யூன் சிஸ்டம். அதாவது நோய் எதிர்ப்பு சக்தி பத்தினது. நான் டாபிக் உள்ள போக ஆரம்பிச்சேன்...

இன்னிக்கி நாம எல்லோரும் நல்ல ஆரோக்கியமா இருக்குறோம்னா அதுக்கு காரணம் நம்மோட உடம்புல இருக்குற நோய் எதிர்ப்பு சக்தி தான். நமக்கு தெரிஞ்சதெல்லாம் நல்ல சாப்பாடு, நல்ல பொழுது போக்கு, நல்ல தூக்கம், அப்பப்ப கொஞ்சம் வேலை இல்ல படிப்பு, இதெல்லாம் தான். ஆனா நாம இப்படி ஆரோக்கியமா இருக்க, நம்ம உடம்புக்குள்ள பெரிய போராட்டமே நடக்கும் தெரியுமான்னு கேட்டேன்.



அதென்ன மேடம் போராட்டம், அஹிம்சை போராட்டமான்னு ஒருத்தன் கிண்டலா கேட்டான். அப்படியே அவன ஒரு பார்வை பாத்துட்டு நான் சொல்ல ஆரம்பிச்சேன்.

உங்களுக்கே தெரியும், ஒரு நோய் கிருமியோட உடல்பெருக்க (இனபெருக்கம்ன்னு சொல்லியிருக்கலாம், ஆனா இந்த மைக்ரோப்ஸ் ரெண்டா பிரிஞ்சி தான் தன்னோட சந்திதிய பெருக்கிக்குது. அப்படினா அது உடல் பெருக்கம் தானே) நேரம் இருபது நிமிசத்துல இருந்தே ஆரம்பிச்சுடுது. அப்படி பாத்தா நம்மள சுத்தி இப்போ நிறைய நோய் கிருமிகள் இருக்குது. ஆனாலும் நாம ஆரோக்கியமா தான் இருக்குறோம். அது எப்படின்னு கேட்டேன்...

அப்படினா நாம ஸ்ட்ராங்கா இருக்கோம்னு அர்த்தம் மேடம்ன்னு ஒரு பொண்ணு சொன்னா. அதெல்லாம் சரி தான், அந்த ஸ்ட்ராங் எப்படி கிடைக்குதுன்னு திரும்ப கேட்டேன், நீங்களே சொல்லுங்கன்னு சொல்லிட்டா.

இப்படி நம்மள சுத்தி இருக்குற கிருமிகள அழிக்குறதுக்கு நம்ம உடம்புல ஒரு போர் படையே இருக்கு. படைகள் உருவாகும் இடம், ஆயுதக் கிடங்கு, உளவாளிகள், படை வீரர்கள், மல்யுத்த வீரர்கள், பீரங்கி, அம்பு மாதிரியான ஆயுதங்கள் எல்லாமே இருக்குன்னு சொன்னதும், ஆ....ன்னு கொஞ்ச பேர் தாடைல கைவச்சுட்டு உக்காந்து கேக்க ஆரம்பிச்சுட்டாங்க.

அந்த நேரம் நான் நம்மோட "இம்யூன் சிஸ்டம்" பத்தி விளக்கமா சொல்ல ஆரம்பிச்சேன். தைமஸ், எலும்பு மஜ்ஜை, கல்லீரல் பத்தி எல்லாம் விளக்கி சொல்லிட்டு இருக்கும் போது ஒருத்தன் எலும்பு மஜ்ஜைனா என்னன்னு கேட்டான். வீட்ல ஆட்டு இறைச்சி எடுக்கும் போது ஆட்டு கால் எலும்பு உள்ள இருந்து உஸ்ஸ்ன்னு உறிஞ்சி தின்னுவியே அது தான் எலும்பு மஜ்ஜைன்னு சொன்னதும் எல்லாரும் சிரிச்சுட்டாங்க.

நம்மோட உடலை பாதுகாக்குறதுல இந்த எலும்பு மஜ்ஜையோட பங்கு ரொம்பவே பெருசு. அதே மாதிரி தான் தைமஸ்சும். நம்மோட படை வீரர்களான “பி” செல்ஸ் மற்றும் “டி” செல்ஸ்கள உருவாக்குற படைத் தளம் அதுன்னு சொன்னேன்.

சரி, யார் இந்த “பி” “டி” செல்ஸ்?

சுருக்கமா சொல்லப்போனா இதெல்லாம் நம்ம ரெத்தத்துல இருக்குற வெள்ளை அணுக்கள் அப்படின்னு சொன்னதும் எல்லாரும் ஓ இப்ப தெரியுதுன்னு சிரிச்சுட்டே நிமிர்ந்து உக்கார ஆரம்பிச்சாங்க.

சட்டுன்னு நான் டாபிக்க மாத்தி, “எய்ட்ஸ்”னா என்னன்னு கேட்டேன்... அந்த பக்கம் இருந்து அதுக்கான விளக்கங்கள் வர ஆரம்பிச்சுது. அது ஒரு நோய் இல்ல உடல் குறைபாடுன்னு ஒரு பொண்ணு எழுந்து சொன்னா... சரி, அப்படி என்ன குறைபாடு வருதுன்னு கேட்டேன். வெள்ளை அணுக்கள இந்த ஹச்.ஐ.வி வைரஸ்கள் அழிச்சுடும்னு சொன்னதும், வெரி குட்ன்னு கைதட்டிகிட்டேன். இன்னும் இத விளக்கமா சொல்ல முடியுமான்னு கேட்டேன். காரணம் இன்னிக்கி எய்ட்ஸ்னா என்னன்னு ஓரளவுக்கு எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கு. அது எப்படி பரவும், அத தடுக்க என்ன பண்ணனும்னு எல்லாம் பெரும்பாலும் எல்லாரும் தெரிஞ்சே வச்சிருப்பாங்க. நான் பிள்ளைங்க கிட்ட கேட்டப்பவும் அவங்க அத தெளிவாவே சொன்னாங்க. ஆனாலும் இந்த ஹச்.ஐ.வி வெள்ளை அணுக்கள தாக்குங்குற அளவு மட்டுமே தெரிஞ்சி வச்சிருக்காங்க.

நான் விரிவா சொல்ல ஆரம்பிச்சேன்.

வெள்ளை அணுக்கள்ன்னு நாம பொதுவா சொல்லிடுறோம். ஆனா இந்த வெள்ளை அணுக்கள்லயே பல வகைகள் உண்டு. தற்கொலை படை, ஆயுதப் படை, தற்காப்பு படைன்னு இங்க ஏகப்பட்ட வகைகள் உண்டு. அதுல ஒண்ணு தான் “டி-ஹெல்பர்” செல். இந்த “டி-ஹெல்பர்” எதிரிய அடையாளம் கண்டுக்க பெரிய உதவியா இருக்கும். எதிரியோட அத்தனை செயல்களையும் அதை அழிக்கும் தந்திரத்தையும் கண்டுபிடிச்சு, அத மத்த செல்கள்கிட்ட எடுத்து சொல்லும். வைரஸ், இல்ல மத்த கிருமிகளால பாதிக்கப்பட்ட நம்மோட சொந்த செல்கள், கேன்சர் செல்கள், அழிக்கப்பட வேண்டிய வயசான செல்கள்ன்னு எல்லாத்தையும் அழிக்க இந்த “டி-ஹெல்பர்” செல் தேவைபடுது.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த “டி-ஹெல்பர்” செல்களுக்குள்ளயே போய் தன்னோட இனத்த இந்த ஹச்.ஐ.வி வைரஸ் பெருக்கிக்குது. ஒவ்வொரு “டி-ஹெல்பர்” செல்லா அது கைப்பற்றி நம்மோட மொத்த நோய் எதிர்ப்பு சக்தியையும் முடக்கிடுது. . “டி-ஹெல்பர்” செல்களோட உதவி இல்லனா பெரும்பாலும் நம்மால எதிரிய அடையாளம் கண்டுபிடிக்க முடியாது. அப்படி நாம எதிரிய அடையாளம் கண்டுபிடிக்க முடியலனா எதிரிகள் நம்ம உடல் முழுக்க ஊடுருவிடுவாங்க. அப்புறம் என்ன, ஆள் ஆளுக்கு ஏதாவது ஒரு குறிப்பிட்ட வியாதிய கொண்டு வந்துருவாங்க.

கடைசியில அத்தனை உடல் வலிமையையும் இழந்து, வர்ற நோய்கள எதிர்த்துப் போராட சக்தி இல்லாம மரணம் வந்துடுதுன்னும், ஆரோக்கியமா இருந்தா ஒரு ஹச்.ஐ.வி பாதிக்கப்பட்ட ஆள் இன்னும் கொஞ்ச வருஷம் வாழலாம்ன்னும் சொன்னேன். இனிமேல், ஹச்.ஐ.வி வைரஸ் எதை தாக்குதுன்னு கேட்டா, வெள்ளை அணுக்களோட முக்கிய படையான “டி-ஹெல்பர்” செல்சை தாக்குதுன்னு சொல்லுங்கன்னும் சொன்னேன்.

இன்னும் இன்னும் பாடம் உள்ள போய்ட்டே இருந்தோம். போர் வீரர்கள் பத்தி சொன்னேன், இப்போ போர் ஆயுதம் பத்தி சொல்லப்போறேன். நம்ம உடம்புல நடக்குற போர்ல முக்கியமான ஆயுதங்கள் தான் “ஆன்டி-பாடீஸ்”ங்குற “இம்முனோக்ளோப்லின்ஸ்” (பிறபொருளெதிரிகள்ன்னு கூகிள் ட்ரான்ஸ்லேட்டர்ல வருது). இது ஒரு அம்பு மாதிரி, நம்மோட “பி” செல்ஸ்ல பிறந்து, எதிரிகள நோக்கி ஏவப்படுதுன்னு சொன்னதும், செம மேடம், இப்படி எல்லாம் நம்ம உடம்புல நடக்குதான்னு ரொம்பவே இன்ட்ரெஸ்ட் ஆகிட்டாங்க பசங்க. இந்த “ஆன்டி-பாடீஸ்” ஒவ்வொண்ணும் ஒவ்வொரு ரகம். நம்மள சுத்தி உள்ள லெட்சகணக்கான கண்ணுக்குத் தெரியாத எதிரிகள அழிக்க அதே அளவு விதமான “ஆன்டி-பாடீஸ்” நம்ம உடம்புல உண்டு. இந்த “பி” செல்ஸ் முதல் தாக்குதல்ல எதிரிய அடையாளம் கண்டு, அதை நியாபகம் வச்சிருக்கும். அடுத்த முறை அதே எதிரி நம்ம உடம்புக்குள்ள நுழைஞ்சா ஒரே, அடி, எதிரி காலின்னதும் க்ளாஸ் முழுக்க ஹஹான்னு சிரிப்பு.

இதனால தான் நாம பிறந்த குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுறோம். இந்த தடுப்பூசிங்குறது வேற எதுவுமே இல்ல, நமக்கு நோய் உருவாக்குற அதே எதிரிய கொலை பண்ணியோ இல்ல கைய கால கட்டிப் போட்டோ நாம நம்மோட வெள்ளை அணுக்கள் கிட்ட பிடிச்சு குடுத்துடுறோம் (நீண்ட விளக்கம் குடுத்தேன்). நம்ம எதிரிய தெரிஞ்சிகிட்ட நம்ம போர் படைகள் அதுக்கு எதிரான ஆயுதங்களையும் படைவீரர்களையும் தயாரா வச்சு அத அழிச்சிடுது. கூடவே அத நியாபகமா தன்னோட மெமரி செல்ஸ்ல சேமிச்சும் வச்சுடுது. அடுத்த தடவ அதே எதிரி உள்ள வந்தா, முதல் தாக்குதல்லயே அதை அடிச்சு காலி பண்ணிடுது. அதனால தான் போலியோ, தட்டம்மை, இன்னும் பல, இந்த மாதிரி வியாதிகளுக்கு நாம தடுப்பூசி போட்டா, அந்த நோய் திரும்ப வர்றதேயில்ல.

சரி, இது எல்லாத்தையும் விடுங்க, தாய்ப்பால் பத்தி என்ன நினைக்குறீங்கன்னு அடுத்த கேள்விய கேட்டேன். அது ரொம்ப சத்தானது அப்படிங்குற அளவு மட்டுமே தெரிஞ்சி வச்சிருக்காங்க பிள்ளைங்க. ஒரு பொண்ணு எழுந்து சொன்னா, எங்க அக்காவுக்கு ஆப்பரேசன் பண்ணி தான் மேடம் குழந்தைய எடுத்தாங்க, அதனால ரெண்டு மூணு நாள் புட்டிப்பால் குடுத்தாங்க, அப்புறம் அவ தாய்ப்பால் தான் குடுத்தா, அது தான ரொம்ப சத்துன்னு சொன்னா.

நான் சிரிச்சுட்டே, கொலஸ்ட்ரம்(colestrum)னா என்னன்னு கேட்டேன். யாருக்கும் தெரியல. இது கண்டிப்பா எல்லாருமே தெரிஞ்சிக்க வேண்டிய விசயம்னு சொல்லிட்டு அத பத்தி சொல்ல ஆரம்பிச்சேன்.

கொலஸ்ட்ரம்ங்குறது ஒரு தாயோட இறுதி பிரசவகாலங்கள்ல சுரக்குற சீம்பால். இது பால் மாதிரி வெள்ளையா இருக்காது. ஒரு மாதிரி பிசுபிசுப்பா மஞ்சள் கலந்தோ, சில நேரங்கள்ல நிறம் இல்லாமலோ இருக்கும்ன்னு சொன்னதும், ஐயே மேடம் அது கெட்டுப்போன பால், அத எல்லாம் பிள்ளைக்கு குடுக்க கூடாதுன்னு ஒருத்தன் சொல்றான்.

உக்காருடான்னு அவன உக்கார வச்சுட்டு நான் தொடர ஆரம்பிச்சேன்.

இப்படி தான் நிறைய பேர் நினச்சுட்டு இருக்காங்க. அந்த பால் கெட்டுப் போய்டுச்சுன்னும், அத பிள்ளைக்கு குடுக்க கூடாதுனும் வயசானவங்களே தடுக்குறாங்க. இன்னும் கொஞ்ச பேர் பிள்ள பெத்த உடம்பு, அத போய் ஏன் கஷ்டப்படுத்தணும், மெதுவா தாய்ப்பால் குடுத்துக்கலாம்னு முடிவு பண்ணி ரெண்டு மூணு நாள் பிள்ளைக்கு தாய்ப்பால் குடுக்குறதில்ல. ஆனா அவங்களுக்கு தெரியுறதில்ல, அதுல தான் அத்தன உயிர் சத்தும் இருக்குன்னு.

ஒரு குழந்தை பிறந்து, இந்த பூமியில எதிர்கொள்ளப் போற அத்தனை கிருமிகளுக்கும் எதிரான உயிர்பொருள் அந்த கொலஸ்ட்ரம்ல இருக்கு. குழந்தை பிறந்த ஆறு மணி நேரத்துக்குள்ள இந்த சீம்பாலை குழந்தைகளுக்கு கண்டிப்பா குடுக்கணும். அது இருபத்திநாலு மணிநேரமோ இல்ல நாப்பெத்தெட்டு மணி நேரமோ தான் சுரக்கும். நீங்க புள்ளைங்களுக்கு சொத்து சேர்த்து வச்சிருக்கீங்களோ இல்லையோ, நல்ல படிப்பு சொல்லி குடுக்குறீங்களோ இல்லையோ ஆனா தயவு செய்து ஆரோக்கியத்த குடுங்க. நீங்க உங்க பிள்ளைக்கு குடுக்குற விலைமதிப்பு இல்லாத ஒரே சொத்து இந்த கொலஸ்ட்ரம் தான்னும் சொன்னேன்.

இந்த கொலஸ்ட்ரம் எல்லா உயிர்கள்லயும் சுரக்கும். நம்ம வீட்ல பசு போடுற நேரத்துல கன்னுக்குட்டிக்கு குடுத்து போக மீதி பாலை (முதல் சீம்பாலை) தீட்டுன்னு கீழ கொட்டிடுவோம். ஆனா அதுல அத்தன உயிர்பொருள் இருக்கு. வீணாக்காதீங்கன்னு சொன்னதும் கண்டிப்பா சொல்றோம் மேடம், இனிமேல் எங்க வீட்டு பசு குட்டி போட்டுச்சுனா கண்டிப்பா அத வீணாக்க விட மாட்டேன்னு ஒருத்தி சொன்னா. அத எல்லாருமே ஆமோதிச்சாங்க.

.............................................................
தாய்ப்பால் பற்றின ஒன்னொரு விஷயம் இருக்குன்னு ஆரம்பத்துல சொன்னேன் இல்லையா, அது வேற ஒண்ணும் இல்ல, கேன்சருக்கு எதிரா போராடவும் இந்த கொலஸ்ட்ரம் பெரிய உதவி செய்யுது. பசுவோட கொலஸ்ட்ரம் மனுஷ கொலஸ்ட்ரம் அளவு அதே சக்தி வாய்ந்தது. அதனால அத கூட கேன்சர் நோயாளிகள் எடுத்துக்கலாம். கூடவே பிற சிகிச்சைகளையும் எடுத்துக்கலாம்.

கொலஸ்ட்ரத்துல இருக்குற என்சைம்கள், இமுனோக்ளோபின்கள் எல்லாம் நம்மை தாக்குற பேக்டீரியா, வைரஸ்கள், எல்லாத்தையும் அழிச்சு உடம்ப அம்பது வழிகள்ல புத்துணர்ச்சியாக்குது. அலர்ஜி, டயாபடிஸ், அல்சர், இதயநோய்ன்னு எல்லா வகை நோய்க்கும் பாரபட்சமே இல்லாம குணம் அளிக்குது.

................................................

அட, அதெல்லாம் விடுங்கங்க, நம்பிக்கையும் தைரியமும் இருந்தா, எந்த வியாதியும் நம்மள அண்டவே அண்டாது இல்லையா....

நமக்கு இருக்குறது ஒரு வாழ்க்கை, வாழ்ந்து தான் பாத்துறலாமே

Friday, 6 February 2015

பார்த்திக்காக -3


பார்த்தி,

சில நேரங்கள்ல
இந்த மாதிரியான சூழ்நிலை
எல்லோருக்கும் வந்துரும் போல...

எப்பவுமே உன்னோட
தோள்ல தொங்கிட்டே இருக்க
ஆசப்பட்டேண்டா,
அதனால தான் சுமைன்னு
இறக்கி வைக்க நினைச்சியா?

பார்த்தி, என்னை பாத்தா
ஏன் உனக்கு இத்தன வெறுப்பா இருக்கு?
எதனால பார்த்தி இப்படி விலகிப் போற?

நீ இல்லாத
ஒவ்வொரு நிமிசமும் தகிக்குதுடா.
அப்படியே நெருப்பு கங்குகள
விழுங்குற மாதிரி இருக்கு.

அம்மாவா இருப்பேன்னு
சொன்னியேடா பார்த்தி,
பாரு, என் கண்ண நல்லா பாரு பார்த்தி,
அழக் கூட உரிமை இல்லாம
ஈரம் கசிஞ்சு கலங்குறத...

நான் அழுதா
உன்னால தாங்கிக்க முடியாதா பார்த்தி,
என்னை அழாம பாத்துக்க மாட்டியா?

என்னிக்காவது ஒரு நாளு
என்னைத் தேடி வந்துருவடா,
ஆனா வர்றப்ப நான் நானா இருப்பேனான்னு
சந்தேகமா இருக்கு பார்த்தி...
பைத்தியம் பிடிச்சுடும்டா அதுக்குள்ளே...

பார்த்தி,
நேத்து ராத்திரி என்னை
மிஸ் பண்றதா சொன்னியே,
நிஜமாவே அது நீ தானா?
கனவு மாதிரி இருந்துச்சுடா,
சொல்லிட்டு அடுத்த நொடி காணாம போய்ட்ட?

புலம்ப விட்டுராத பார்த்தி,
உன் பிரியம்வதனா பாவமில்லையா?

நான் உன்னை காயப்படுத்தியிருந்தா மன்னிச்சுடு பார்த்தி...

வந்துருடா...


- உயிரற்ற பிரியம்வதனா


Wednesday, 4 February 2015

பார்த்திக்காக -2



வெளில என்னமா மழை பெய்யுது,
டேய் பார்த்தி,
இந்த மாதிரி ஒரு மழை நாள்ல தான
நீ என்கிட்ட உன் காதல சொன்ன?

ஹேய்... என்ன,
நான் எவ்வளவு உருகிப் போய்
பேசிட்டு இருக்கேன்,
நீ அங்க என்னடா பாத்துட்டு இருக்க?

அட, இதெல்லாம் தெரியாத்தனமா
உன்னை லவ் பண்றப்ப
நான் உனக்கு எழுதின லெட்டர்ஸ் தான?

பார்த்தி, இங்க பாரு,
இந்த லெட்டர்ல உன்ன எப்படி
திட்டு திட்டுன்னு திட்டியிருக்கேன்,
நல்லா வேணும்டா உனக்கு...

ஒரு நாளு நல்லா சண்டை போட்டுட்டு
அப்புறம் பெரிய இவனாட்டம் சமாதானத்துக்கு வந்தியே,
அப்ப நீ குடுத்த முத்தத்துக்கு பதில் முத்தம் இது....
ஹீ-ன்னு இளிக்காதடா, பாக்க சகிக்கல...
அன்னிக்கி உன் உதடு எப்படி வீங்கி போச்சுன்னு
எனக்கு தான தெரியும்...

இந்த லெட்டெர பாரு,
உன்னையெல்லாம் நல்ல பையன்னு நம்பி
ஐ லவ் யூ சொல்லியிருக்கேன்.
அடேங்கப்பா, என்னடா லெட்டர் முழுக்க
அதையே எழுதியிருக்கேன்?

ஹ்ம்ம். இதப் பாரு பார்த்தி,
மனசுக்கு பாரமா இருந்தப்ப
உன்கிட்ட தான் ஓடி வந்துருக்கேன்.
நீ என்னை எப்படி தாங்கிப்பன்னு
எனக்கு தான தெரியும்...
ஆனாலும் கொஞ்சம் நல்லவன்டா நீ...

ஆமா, ஏண்டா, மழை பெய்யுது,
பக்கத்துல சுட சுட காபி,
அத விட சூடா நீ லவ் பண்றேன்னு அலைவியே
அந்த பிரியம்வதனா,
இத எல்லாம் விட்டுட்டு இன்னும் என்னடா
அந்த லெட்டர்ஸ்சயே பாத்துட்டு இருக்க?

நகருடா,
அந்த பேப்பரும் பென்னும் எங்க வச்சேன்,
உனக்கெல்லாம் நாலு வார்த்த
நறுக்குன்னு திட்டி
ஒரு லெட்டர் எழுதினா தான் நிமிர்ந்து பாப்ப....


இப்படிக்கு ப்ரியம்வதனான்னு சொன்னாத்தான் தெரியுமோ?

Tuesday, 3 February 2015

பார்த்திக்காக - 1



கண்ணாடி முன்னின்று
பார்த்துக்கொண்டிருக்கிறேன் பார்த்தி.
பாரேன், காலம் என்னை
எத்தனைப் புரட்டிப் போட்டிருந்தாலும்
என் எழில் மட்டும் குறையவேயில்லை.

இதோப் பார் இந்த கண்களை.
சோகங்கள் இறுகப் பற்றி திரைவிழுந்திருந்தாலும்
அந்த கருந்திரை உன் பிம்பம் சுமந்து
குதூகலிக்கிறது பார் பார்த்தி.

நீ வருடிய கன்னங்கள்
இன்னும் வறண்டுப் போய்விடவில்லை பார்த்தி.
தொட்டுப்பார்த்தால்
உன் முத்தங்களால் ஜில்லிடுகிறது.

கண்களை மூடிக்கொண்டு
நடக்க முயல்கிறேன். பின்னின்று அணைத்து
என்னை தாங்கிக் கொள்ளும் அந்த
பாதங்கள் உன்னுடையது தானே பார்த்தி?

அடிக்கடி யாரோ அழைப்பது போல்
தோன்றுகிறது பார்த்தி.
நீ தான் அழைக்கிறாயா?

உன்னைத் தான்
வார்த்தைகளால் கொன்றுவிட்டு
திரும்பிப்பார்க்காமலே வந்துவிட்டேனே.
பார்த்தி, திடீரென்று இருண்ட குகைக்குள்
விழுந்து விட்டது போல் தோன்றுகிறது பார்த்தி.

மன்னிப்பாயா பார்த்தி,
நான் காயப்படுத்த
எனக்கு உரிமையானவன்
நீ மட்டும் தானே பார்த்தி.

இதோ வரைமுறையே இல்லாமல்
வழிந்தோடும் இந்த கண்ணீர் கூட
அழகாய் தானே இருக்கிறது பார்த்தி.

விம்மித் துடிக்கும் இந்த உதடுகள் தான்
எத்தனை அழகு பார்த்தி.
இன்னமும் என் உதட்டுச்சாயம்
உன்னில் மிச்சமிருக்கிறதா பார்த்தி.

என் மேற்பூச்சுகளை உதிர்த்து விட்டு பார் பார்த்தி.
உனக்காக நான் இன்னும் அழகாய்
மெருகேறியப்படியேதானிருக்கிறேன்.

இந்த கண்ணாடியை ஓர் நாள்
தூக்கிப் போட்டுவிடத்தான் வேண்டும் பார்த்தி.
எத்தனை பொல்லாதது பார்த்தாயா?
உள்ளிருக்கும் உன்னையும் வெளிச்சம் போட்டு
காட்டிக்கொடுத்து விடுகிறது.

பார்த்தி, நேரமாகிவிட்டது.
பள்ளியிலிருந்து மகள் வந்துவிடப் போகிறாள்.
அவளுக்கு என் எழில் தெரிய வேண்டாம்.
நீ கலைத்து விட்ட என் கூந்தலுக்குள்
ஒளிந்துக் கொள் பார்த்தி.

மீண்டுமொருமுறை உன்னை இங்கு சந்தித்துக் கொள்கிறேன்.
நேரம் தவறிவிடாதே பார்த்தி.
நீயில்லையென்றால் துடித்துப் போய்விடுவேனென்பது
நீயறியாததா பார்த்தி.

- உன் பிரியம்வதனா

Monday, 2 February 2015

குடி குடியை கெடுக்கும்...



நேத்து மதியம் சாப்ட்டுட்டு ரெஸ்ட் எடுத்துட்டு இருந்தேன். ஏற்கனவே உடம்பு சரியில்லன்னு சொல்லியிருந்ததால வீட்ல யாரும் டிஸ்டர்ப் பண்ணல. திடீர்னு ஒரு குரல் என் ரூம் பக்கத்துல ஒலிச்சுது. நான் பாப்பாவ பாக்கணும், பாத்துட்டு தான் போவேன்னு. பாட்டி அவளுக்கு உடம்பு சரியில்ல, ரெஸ்ட் எடுக்குறான்னு சொன்ன பிறகும் கேக்கல. நான் உடனே மெதுவா எழுந்து கதவைத் திறந்தேன்.

ஒரு ஆள் நின்னுட்டு இருந்தார். கூடவே பாட்டி. அப்பா ஹால்ல சோபால உக்காந்துட்டு இருக்காங்க.

“பாப்பா, நல்லா இருக்கியாமா, என் பேர் பால்ராஜ்மா. இங்க தான்மா நம்மூருல டீக்கடை வச்சிருக்கேன். நீ வெளில போகும்போது பாப்பேன் பாப்பா, ஆனா பேச எல்லாம் வாய்ப்பு கிடைக்கல. வர்ற ஞாயிற்று கிழமை தங்கச்சிக்கு (அவர் பொண்ணுக்கு) நிச்சயதார்த்தம் வச்சிருக்கேன் பாப்பா. நீ கண்டிப்பா வரணும். வந்து நான் எப்படி ஏற்பாடு எல்லாம் பண்ணியிருக்கேன்னு பாக்கணும்”ன்னு சொன்னார். அவர் கிட்ட அப்படி ஒரு ஆர்வம். ஆளை முழுங்குற மாதிரி பாக்குறாங்கன்னு சொல்வாங்களே, அப்படி தலை முதல் கால் வரைக்கும் என்னை பாத்து பாத்து சந்தோசப்படுறார்.

எனக்கு ஒரே குழப்பம். யாருடா இந்த ஆளு, சம்மந்தமே இல்லாம நம்மள பாப்பா பாப்பாங்குறார், அப்பா வேற பாத்து புன்னகைச்சுட்டே இருக்கார்ன்னு. இதுல அவர் பொண்ணு நிச்சயதார்த்தத்த வேற நான் எதுக்கு போய் பாக்கணும்ன்னு சுத்தமா புரியல.

நின்னுட்டேயும் இருக்க முடியல, சரி இந்தாளு விட மாட்டார் போலன்னு மெதுவா ஹால்ல போய் அப்பா பக்கத்துல உக்காந்துட்டு நீங்களும் உக்காருங்கன்னு சொன்னேன்.

இல்ல, பரவாலமா, எனக்கு நேரம் ஆச்சு, மத்த வீடுகளுக்கும் போய் எல்லாருக்கும் அழைப்பு வைக்கணும்ன்னு சொல்லிட்டே, பாப்பாவுக்கு என்னை தெரியுதான்னு கேட்டார். நான் இல்ல தெரியலன்னு சொன்னதும், அதானே உனக்கு தெரியாது, அப்போ நீ ரொம்ப சின்ன கொழந்தை, ஆனா எனக்கு தெரியும், என்னோட வாழ்க்கைல வெளக்கு ஏத்தி வச்சவமா நீன்னு சொன்னதும் எனக்கு ஒரே குழப்பம்.

அப்பாவ பாக்குறேன், சரி, அப்பாகிட்ட கேட்டா நல்லாயிருக்காதுன்னு அவர் கிட்டயே அப்படி என்ன பண்ணினேன்னு கேட்டேன்.

நீ அப்போ ரொம்ப சின்னக் கொழந்த பாப்பா, தெருவுல உன் வயசு புள்ளைங்களோட விளையாடிட்டு இருப்ப. நான் ஒரு மொடாக் குடிகாரன். அன்னிக்கி குடிச்சுட்டு கருமம் ஒடம்புல ஒட்டுத் துணி கூட இல்லாம கிடந்துருக்கேன். சுத்தமா முடியல பாப்பா. வர்றவன் போறவனெல்லாம் காறித் துப்புறான். எட்டிட்டு சவுட்டிப் போட்டு போனவனும் உண்டு. அப்ப நீ தான் பாப்பா வீட்ல இருந்து ஒரு சீலத் துணி கொண்டு வந்து போர்த்தி விட்ட. என்கிட்ட தண்ணி வேணுமான்னு கேட்ட. ஆனா அப்புறம் என் பொண்டாட்டி வந்து கூட்டிட்டு போய்ட்டா. அம்மா இருந்தா சொல்லியிருப்பாங்க. என் பொண்டாட்டி புள்ளையோட அம்மா கிட்ட தான் வந்து அழுதேன். புத்தியோட பொழச்சுக்கன்னு அறிவுரை சொன்னாங்க பாப்பா. உங்க மாமன் பெரியய்யா கிட்ட சொல்லி கடை வைக்க உதவி பண்ணுனதே நம்ம தாயி தான் பாப்பா. அன்னியோட அந்த கருமத்த உட்டவன் தான் பாப்பா. இன்னிக்கி என் புள்ளைக்கு நல்ல நெலமைல கல்யாணம் கட்டிக் குடுக்கப் போறேன். நான் நல்லா வந்தத உங்க கிட்ட எல்லாம் காட்டணும்ன்னு ஆச பாப்பான்னு சொல்லிட்டே போனார்.

எனகென்னமோ அம்மா தான் நிறைய அட்வைஸ் பண்ணியிருப்பான்னு தோணிச்சு. சின்ன புள்ளைல அப்படி நான் என்ன செய்துருக்க முடியும்?

உங்க பொண்ணு என்ன படிச்சிருக்காங்கன்னு கேட்டேன். ஏதோ டீச்சராம்ல, அதுக்கு படிச்சிருக்கா பாப்பா, அடுத்த தடவ வேலைக்கு ஆள் எடுக்கும் போது இவளுக்கும் கிடச்சிருமாம்ல, இப்ப நம்ம பெரிய தாத்தன் ஸ்கூல்ல தான் வாத்திச்சியா இருக்கான்னு சொன்னார்.

மனசுக்குள்ள சந்தோசமா இருந்துச்சு. அவர அனுப்பிட்டு ரூமுக்குள்ள வந்தப்ப எதுவுமே செய்யலனாலும் என்னமோ சாதிச்சுட்ட மாதிரி அப்படி ஒரு கெத்து வந்துச்சு. தன்னாலயே சிரிப்பும் கண்ணீரும் சேர்ந்துடுச்சு.

படுத்துட்டே யோசிச்சு பாக்க ஆரம்பிச்சேன். இந்த குடியும், போதையும் எத்தன குடும்பங்கள சீரழிச்சு போட்ருக்கு? குடிக்குற எத்தனை பேருக்கு அவங்க வீட்டு புள்ள குட்டிங்க வாழ்க்கையோட அவங்க விளையாடுறது தெரியும்? குடிக்கும் போது அத எல்லாம் நினச்சு பாத்தா ஒரு மிடறு உள்ள இறங்குமா என்ன?

ஸ்கூல் படிக்குறப்ப பிரெண்ட்ஸ் எல்லாம் சேர்ந்து கிராமம் கிராமமா சுத்தியிருக்கோம். பெரும்பாலும் எங்க நோக்கம் ரெத்த தானமும், எய்ட்ஸ் அவேர்னஸ்சும் தான்னாலும் இந்த மாதிரி நிறைய ஆட்கள கடந்து வந்துருக்கோம். குடிச்சு குடிச்சு குடல் அழுகி, வாழத் தெரியாம பொண்டாட்டியவே தொழிலா மாத்தி வாழ வேண்டிய அவல நிலையையும் பாத்துருக்கோம், நடு ரோட்டுல பையன தூக்கி போட்டு அடிச்சு உதச்சு, அவன் ஸ்கூல் பீச பிடிங்கிட்டு போற அப்பனையும் பாத்துருக்கோம். குடி போதைல ரோட்டுல அடிபட்டு நாயை விட கேவலமா செத்துக் கிடந்தவங்கள பத்தி கேள்வியும் பட்ருக்கோம். எங்கப்பன் எல்லாம் செத்தா தாண்டா எங்களுக்கு நிம்மதின்னு பிஞ்சு மனசு கதறுனத கேட்ருக்கோம்.

நாங்கெல்லாம் சொல்லி எந்த ஆளும் திருந்துன மாதிரி எனக்கு நியாபகம் இல்ல. ஆனா அந்த வகைல பால்ராஜ் ஒரு சாதனை மனுஷன் தானே... அந்த மனுஷன் வீட்டு கல்யாணத்துக்கு போகாம வேற எந்த வீட்டு கல்யாணத்துக்கு போகப் போறோம்?

இந்த நேரத்துல குடி பத்தி நான் எழுதின கவிதைய உங்க கிட்ட ஷேர் பண்ணிக்கனும்னு தோணிச்சு...

இதோ அந்த கவிதை....

அப்பா ப்ளீஸ்ப்பா.....
..........................................................
நீயெல்லாம் ஏன்ப்பா குடிக்குற?
குடிச்சுட்டு வந்து அம்மாவ போட்டு அடிக்குற...
அம்மா பாவம்லப்பா, நமக்காக தானே
அடுத்த வீட்ல போய் பத்து பாத்திரம் தேச்சுட்டு வருது.

அடுத்தவங்க கிட்ட ஏச்சும் பேச்சும் வாங்கிட்டு
அவங்களுக்கு மாடா ஒழச்சுட்டு
அவங்க குடுக்குற காச பாத்து பாத்து
வீட்டுக்கு கொண்டு வந்தா
நீ அத புடிங்கிட்டு போய் குடிச்சுட்டு வர...

நான் ஏன்ப்பா உனக்கு பொண்ணா பொறந்தேன்?
பொட்ட புள்ளைய பெத்து போட்டுருக்கா
சிறுக்கினு அப்பவும் அம்மாவ தான் திட்டுற...

என்கிட்ட நீ பாசமா தான் இருக்க,
ஆனா குடிச்சுட்டு வந்தா
புள்ளனு கூட பாக்காம
பொட்டச்சிக்கி எதுக்கு படிப்புன்னு
எட்டில ஒதைக்குற...

போன பரிட்சையிலயாவது அந்த கோபிய முந்திட்டு
நான் முதலாவதா வரணும்னு நினைச்சேன்.
என் புத்தகத்த எல்லாம் கிழிச்சு போட்டுருந்தா கூட
ஒட்டி வச்சி படிச்சிருப்பேன்,
நீ தீயில போட்டு கருக்கிட்ட.

பள்ளி கூடத்துல நான் தான் நல்லா பாடுறேனாம்
பெரிய பாட்டுக்காரியா வருவன்னு சார்மார்
எல்லாம் சொல்றாங்க...
இப்போ நடந்த பாட்டு போட்டியில
நான் தான் பஸ்ட்...
கலக்டர் முன்னால பாட சொன்னாங்க...
ஆனா பாக்க நீ வரலயேப்பா...

நம்ம சங்கீதா அப்பா
அவள சந்தைக்கு கூட்டிட்டு போய்
கேட்டதெல்லாம் வாங்கி குடுப்பாராம்...
கத கதயா சொல்றா...

போன மாசம் திருவிழாவுக்கு
பெரியப்பா கூட எனக்கு பலூன் வாங்கி தந்தாரு,
நடேசன் மாமா தேன்குழல் வாங்கி தந்தாரு...
நீ என்ன எங்கயுமே கூட்டிட்டு போனது இல்ல,
ஆசையா என்ன தூக்கி தட்டாமால சுத்தினதில்ல...

ஆனாலும் அப்பா, நீ அப்பப்போ வாங்கிட்டு வருவியே
அந்த முட்ட போண்டா, வாழக்கா பஜ்ஜி, பரோட்டா...
அதெல்லாம் நீ பக்கத்துல உக்காந்து
தின்னுடி ராசாத்தி னு சொல்லுறப்போ
எனக்கு எப்படி இருக்கும் தெரியுமா?

கண்ணுல இருந்து தண்ணி வருதுப்பா,
எனக்கு எங்கப்பா தான் ஒலகமேனு
கூட்டாளிங்க கிட்ட எல்லாம் ஓடி போய்
சொல்லணும் போல இருக்கும்.

நீ ஏன்ப்பா அப்படியே இருந்துர கூடாது. உன்ன நான்
படிச்சு பெரிய ஆபீசர் ஆகி
ராஜா மாதிரி வச்சுப்பேன்ப்பா...

உன் மடியில படுத்து தூங்கணும்,
உன் கழுத்த கட்டிக்கிட்டு
அந்த ராமாயியக்கா பசங்க
என்ன கிண்டல் பண்ணின கதை சொல்லணும்.
நீ மட்டும் அவங்கள ஓட ஓட விரட்டினா
நான் விழுந்து விழுந்து சிரிப்பேனே...

அப்பா, குடிக்க மட்டும் செய்யாதப்பா.
நீ குடிச்சுட்டு வந்துபுட்டா
உங்கண்ணுக்கு புள்ளையா தெரிய மாட்டேங்குறேன்...
கழுத கழுதனு என்னைய கழுதைய விட கேவலமா நினைக்குற...

உன்கிட்ட சொல்ல வேண்டியத எல்லாம்
சுவர பாத்தும் வானத்த பாத்தும் தான்
சொல்ல வேண்டியதா இருக்கு...
அப்பா, ப்ளீஸ்ப்பா......

Thursday, 29 January 2015

பாலின அறிதலும் பதின் பருவத்து புரிதலும்


இப்பலாம் காலேஜ்ல பொதுவா லெக்சர் க்ளாஸ் போக மாட்டேன். நாம காலேஜ் போறதே எப்பவாவது ஒரு தடவ. அதுல புள்ளைங்களுக்கு க்ளாஸ் எடுத்தா விளங்கிடும்னு தான் இந்த முடிவு. லேப், ப்ராஜெக்ட் டிசைன்னு என்னோட வட்டத்த என் கைடு கிட்ட சொல்லிட்டு நானே சுருக்கிகிட்டேன்.

எப்பவாவது ரொம்ப அர்ஜன்ட், இந்த டாபிக் எடுத்தே தீரணும்னா அந்த நேரம் வந்து சொல்லுவாங்க. நான் பாட்டுக்கு டாபிக்க மட்டும் உள்வாங்கிட்டு ஒரு மணிநேரம் க்ளாஸ் எடுத்துட்டு வந்துடுவேன்.

இப்படி தான் நேத்து  திடீர்னு வந்து, பிள்ளைங்களுக்கு ப்ளட் க்ரூப்பிங் பத்தி க்ளாஸ் எடுக்கணும், அர்ஜன்ட், போயிட்டு வர்றியான்னு கேட்டாங்க. அட, ஈசி சப்ஜெக்ட்ன்னு நானும் உடனே ஓகே சொல்லிட்டு க்ளாஸ் போயிட்டேன்.

ரெத்தத்தோட வகைகள் என்னென்ன, அத எப்படி கண்டுபிடிக்குறது, 'ஏ' வகை ப்ளட் குரூப்னா என்ன ஆன்டிஜன் இருக்கும், என்ன ஆன்டி-பாடி இருக்கும், 'பி'னா அதுல என்னென்ன இருக்கும்ன்னு விளக்கிட்டே இருந்தேன். அப்படியே ரெத்த தானம், யார் யாருக்கு ரெத்தம் குடுக்கலாம், யார் யாருக்கு ரெத்தம் குடுக்கக்கூடாதுன்னு எல்லாம் சொல்லிட்டே வந்தேன்.

ரெத்த தானம் பத்தின சாதகம், பாதகம் பத்தி அலசிட்டு இருந்தப்ப திடீர்னு "எரித்ரோப்ளாஸ்டாசிஸ் பீட்டாலிஸ்" (Erythroblastosis Fetalis) னா என்னன்னு தெரியுமான்னு கேட்டேன். பசங்களும் சரி பொண்ணுங்களும் சரி, முளிச்சாங்க...

சரி, இத எல்லாம் அப்படியே தூக்கி வச்சிடுவோம், ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் கல்யாணம் பேசுறப்ப ஜாதக பொருத்தம் பாக்குறாங்களோ இல்லையோ ரெத்த பொருத்தம் பாக்கணும். தெரியுமான்னு கேட்டேன். இல்ல மேடம் தெரியாது, இப்ப தான் இத கேள்வியே படுறோம். கல்யாணம்னா ஜாதகம் தானே பாக்கணும், ஏன் ரெத்த பொருத்தம் பாக்கணும்ன்னு ஒரு பொண்ணு கேட்டா.

உடனே ஒரு பையன் எழும்பி, பையனுக்கோ இல்ல பொண்ணுக்கோ எய்ட்ஸ் இல்லனா வேற ஏதாவது எஸ்.டி.டி நோய்கள் இருந்தா தெரிஞ்சிக்க தான் ரெத்த பொருத்தம் பாக்கணும்ன்னு சொன்னான்.

அடேய்... அட்வான்சா இருடா, அதுக்காக ஓவர் அட்வான்சா இருக்காத, அதுக்கு ரெத்தத்த டெஸ்ட் பண்ணினா போதும், பொருத்தம் எல்லாம் பாக்க வேணாம்னு சொன்னேன். அட, ஆமாலன்னு பையன் உக்காந்துட்டான்.

நீங்க சொல்லுங்க மேடம், இன்ட்ரஸ்ட்டா இருக்குன்னு பிள்ளைங்க சொல்லவும் நான் ஆரம்பிச்சேன்.

எரித்ரோப்ளாஸ்டாசிஸ் பீட்டாலிஸ்ங்குறது சிசுக்களுக்கு வர்ற ரெத்த அணு சிதைவு நோய் (நான் அத இங்கிலீஷ்ல தான் சொன்னேன் "It's a hemolytic disease"ன்னு. அதுக்கு சரியான தமிழ் அர்த்தம் தெரியல... தெரிஞ்சா சொல்லுங்க) அப்படின்னு. இந்த நோய் வர சில காரணங்கள் இருந்தாலும் முக்கியமான காரணம், குழந்தையோட அம்மா அப்பாவோட ரெத்த வகைன்னு சொன்னதும் அதெப்படின்னு புள்ளைங்க ஆர்வமாகிட்டாங்க.

நான் சொல்ல ஆரம்பிச்சேன்.

நம்மோட ரெத்த வகைல ஆர்.ஹச் (Rh) பாசிட்டிவ் நெகட்டிவ் ன்னு ரெண்டு வகை தெரியும் தானே, (எ.கா: O+, O-) அதுல பொண்ணு Rh நெகடிவா இருந்து பையன் Rh பாசிட்டிவா இருந்தா அவங்களுக்கு பிறக்குற அல்லது பிறக்கப் போற ரெண்டாவது குழந்தைக்கு இந்த பாதிப்பு வரும்.

எப்பவுமே நம்மோட உடம்புல இருக்குற நோய் எதிர்ப்பு சக்திகள் அந்நிய பொருட்கள் நம்ம உடம்புல நுழைஞ்சா அதுக்கு எதிரா போரிடும். ஒரு Rh நெகட்டிவ் வகை பொண்ணுக்கு Rh பாசிட்டிவ் மூலம் உருவாகுற குழந்தை Rh பாசிட்டிவா உருவாக வாய்ப்பு அதிகம். அப்படி ஒரு குழந்தை உருவாகுற பட்சத்துல அந்த குழந்தையோட ரெத்த வகை தாய்க்கு அந்நிய பொருள். அத எதிரியா பாக்குற தாயோட நோய் எதிர்ப்பு சக்தி காரணிகள் குழந்தையோட ரெத்தத்துக்கு எதிரா போராட ஆரம்பிச்சிடும். இதனால குழந்தையோட ரெத்த அணுக்கள் அழிஞ்சு போய், அபார்சன் நடக்க வாய்ப்புண்டுன்னு சொன்னேன்.

சிம்பிளா சொல்லணும்னா கல்யாணம் பண்ற வயசுல இருக்குற பொம்பள புள்ளைங்க, "ஓ-நெகட்டிவ்" ரெத்த வகைய சேர்ந்தவங்களா இருந்தா ஒரு நெகட்டிவ் ஆணை கல்யாணம் பண்ணிக்கலாம், அப்படி இல்லனா கன்சீவ் ஆறதுக்கு முன்னாலயே நல்ல டாக்டரா பாத்து குழந்தை ஆரோக்கியமா பிறக்க என்ன பண்ணனும்ன்னு கேட்டு தெரிஞ்சிக்கலாம்.

இப்போ அறிவியல் உலகத்துல இதுக்கெல்லாம் ஈசியா தீர்வு இருக்கு. ஆனா இது தெரியாம எத்தனை பேர் குழந்தை அபார்ட் ஆனா காரணமும் தெரியாம, ஹாஸ்பிட்டலும் போகாம இருக்காங்கன்னு சொன்னதும் ஒரு பொண்ணு எழுந்து எங்க பக்கத்து வீட்ல ஒரு பொண்ணுக்கு முதல்ல ஒரு பையன் பிறந்தான். அதுக்கு அப்புறம் தொடர்ந்து அவங்களுக்கு அபார்சன் ஆகிட்டே இருக்கு. அவங்க ஹாஸ்பிட்டல் எல்லாம் போகல மேடம்ன்னு சொன்னா. இது பத்தி விசாரிக்குறேன்னும் சொல்லியிருக்கா (கிராமங்கள்ல ஹாஸ்பிட்டல் போகாம இருக்குறது இப்பவும் சகஜம் தான்).

பொண்ணுங்கள பெத்த அம்மாவும் அப்பாவும் கூட இங்க இருப்பீங்க, உங்க பொண்ணோட ரெத்த வகை என்னன்னு கண்டிப்பா தெரிஞ்சிருக்கும். அதுக்கு தகுந்தமாதிரி பையனோ இல்ல டாக்டர் அறிவுரைகளோ கேட்டுக்கலாம்.

இது பேசிட்டு இருக்கும் போதே, கரு எப்படி உருவாகுது, எப்படி பதியுது, அப்போ என்னென்ன பிரச்சனை வருதுன்னு க்ளாஸ் நீண்டுட்டே போச்சு. அப்போ தான் ஒருத்தன் எழுந்து சொன்னான் "நாங்க ஸ்கூல்ல படிக்குரப்பவே இதெல்லாம் உண்டு மேடம். ஆனா யாருமே சொல்லித் தரலன்னு". சரி, இப்போ பேசுவோம்னு நிறைய விஷயங்கள் பேச ஆரம்பிச்சோம். பிள்ளைங்க கிட்ட பேசிட்டு இருந்தப்ப ஒரு விஷயம் தெளிவா தெரிஞ்சுது.

இங்க யாருக்கும் செக்ஸ் எஜுகேசன்ன்னா என்னங்குற தெளிவான புரிதல் இல்லவே இல்ல. அது என்னமோ ஆண் பெண் உறுப்புகள் பற்றின ஒரு மாய தோற்றம், அத பத்தி பேசுறதே தப்புன்னு தான் நினச்சிட்டு இருக்காங்க. ஆனா அதையும் தாண்டி அதுல இருக்குற அறிவியல், ஒரு கரு உருவாக உடல்கள்ல நடக்குற மாற்றங்கள், கர்ப்பப்பை பிரச்சனைகள், ஆண்களுக்கு வர்ற பிரச்சனைகள், குடும்ப கட்டுப்பாடு, அதோட அவசியம்ன்னு நீண்டுட்டே போற விஷயம்.

பசங்கள பாத்து கேட்டேன், எத்தன பேருக்குடா பெண்களோட மென்சஸ் நேர அவஸ்த்தை தெரியும்னு. நிறைய பேர் ஒருத்தர் மூஞ்சை இன்னொருத்தர் பாத்துட்டு தான் இருந்தாங்க. ஒரு பையன் எழுந்து, நிறைய ப்ளீட் ஆகும் மேடம், சில நேரம் தலை சுத்தி கீழ விழுவாங்க. சொல்லவே முடியாத அளவு வயித்த புடிச்சிட்டு கண் எல்லாம் கண்ணீர் நிறைஞ்சு அழுதுட்டு இருப்பாங்க. சில நேரம் நிறைய கோபம் வரும். அத மீறி கண்ணீரும் வரும். தங்கச்சி அப்படி அழுவா மேடம். சில நேரம் அவ உக்காந்து இருக்குற இடம் எல்லாம் ரெத்த கறை ஆகிடும், நான் அத கழுவி விட்ருக்கேன். அவளுக்கு சோடா வாங்கி குடுத்துருக்கேன். வேற என்ன பண்ணன்னு தெரியல மேடம், தெரிஞ்சா கண்டிப்பா செய்வேன்னு சொன்னான். அப்படி சொல்லும்போதே அவளுக்கு ஏதாவது செய்ய முடியாதாங்குற ஆதங்கம் தெரிஞ்சுது.

கொஞ்ச நேர மவுனத்துக்கு பிறகு, ஒரு சத்தம் பொண்ணுங்க பக்கத்துல இருந்து வந்துச்சு...

"நீ தான் ஆம்பளடா"

க்ளாஸ் ரூம்ல அத்தன பேரும் கைதட்டிட்டாங்க.

எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலனாலும் பொண்ணுனா அவ கலரு, அழகுன்னு மட்டும் தெரிஞ்சி வச்சிருக்குற பசங்க மத்தியில அவங்க வலிகளையும் தெரிஞ்சி வச்சிருக்கடா, வர போற பொண்டாட்டிய நீ பத்ரமா பாத்துக்கணும்ன்னு சொன்னேன். அதுக்கு முன்னால என் அம்மாவையும் தங்கச்சியையும் பத்ரமா பாத்துப்பேன் மேடம்ன்னு சொன்னான்...

எனக்கு என்னோட பிரெண்ட்ஸ், தம்பி எல்லாரும் தான் நியாபகத்துக்கு வந்தாங்க.... யாரு சொன்னா, என்னோட பதின்பருவம் மறைஞ்சு போச்சுன்னு. இந்தா, இந்த பசங்க ரூபத்துல அது இருந்துகிட்டே தான் இருக்கு...

Thursday, 15 January 2015

பொங்கலோ பொங்கல்




வீட்ல பண்டிகைகள்ன்னு கொண்டாடி வருசகணக்கா ஆகிடுச்சு. ஏன் எதுக்குன்னு காரணங்கள் தேடிட்டு இருக்காம, அப்படி அமைஞ்சு போய்டுச்சுன்னே வச்சுக்கலாம். சின்ன வயசுல அவ்வளவு உற்சாகமா கொண்டாடுவோம். சொந்தம் பந்தம்னு எல்லாரும் எங்க வீட்ல தான் கூடுவாங்க. தீபாவளினா சின்னவங்க எல்லாரும் விடிய விடிய வெடி போட்டுட்டு இருப்போம். பெரியவங்க தீபாவளி பலகாரத் தயாரிப்புல ரெண்டு மூணு நாள் முன்னாடியே மூழ்கிடுவாங்க. முறுக்கு, அதிரசம், சீடை, உன்னியப்பம், முந்திரிகொத்து, போளி, லட்டு, மிக்சர், சிப்ஸ், பூந்தி, காரச்சேவு, தேன்குழல், ஜாங்கிரி, அல்வா, கேசரின்னு முடிவே இல்லாம லிஸ்ட் நீளும். அதுவும் கடைசி நாள் வடைகள், பாயசங்கள்ன்னு அதுலயே பல வகை வைப்பாங்க.

அதுவே பொங்கல்னா முந்தினநாளே புது ட்ரெஸ் எடுத்து ரெடியா வச்சுட்டு, கைல, கால்ல மருதாணி வச்சு அலங்கரிக்க ஆரம்பிப்போம். புது ட்ரெஸ் கண்டிப்பா ஒரு பாவாடை சட்டையா தான் இருக்கும். நாலு வருஷம் நானும் தாவணி போட்ட நியாபகம். பசங்க, எவ்வளவு குட்டியா இருந்தாலும் மல்லு வெட்டி மைனர் கெட்டப் தான். மஞ்சள் குலை, கரும்பு, காய்கறி, கிழங்கு வகைகள், பழங்கள் மண் பானை, பூஜை சாமான்ன்னு வீடே தெய்வீகமா இருக்கும். ஆனா அதுல ஒரு சிக்கல் உண்டு, காலைல நாலரைனா தண்ணி தெளிச்சு எழுப்பி விட்ருவாங்க. அப்போ தானே குளிச்சு முடிச்சு ரெடியாக முடியும். வெந்நீர் வேணும்னு அடம்பிடிச்சாலும் கிடைக்காது. அலேக்கா தூக்கிட்டு போய் மோட்டார் போட்டு புது தண்ணி புடிச்சு, அந்த தண்ணி தொட்டிக்குள்ள போட்டுட்டு வந்துடுவாங்க. வெடவெடன்னு வெறயல் கொஞ்ச நேரத்துல பழகிடும். அப்புறம் படபடன்னு ரெடியாகி, சூரியன் எட்டிப் பாக்குறப்ப பொங்கப் பானை பொங்கி அதை வரவேற்கும்.

நமக்கு குலவை எல்லாம் விட்டு பழக்கம் இல்ல, தம்பியும் அம்மாவும் விடுவாங்க. நாங்க எல்லாம் பொங்கலோ பொங்கல்ன்னு கோரஸ் பார்டிங்க. பொங்கல் பொங்கின உடனே அதுக்குள்ள சர்க்கரை தட்டுற பொறுப்பு என்னுது. தம்பி நெய் டப்பாவ கைப்பற்றிருவான். பக்கத்து வீட்டு பசங்க முந்திரி, கிஸ்மிஸ்ன்னு ஆளுக்கொரு தீனியை கைப்பற்றி உள்ள போடுவோம். இதுல நாலு பக்கமும் விறகு வச்சு தீ மூட்ட நாலு கைபுள்ளங்க வேற இருப்பாங்க. பொங்கல் நல்லா வெந்து, பதத்துக்கு வந்ததும் சுட சுட தலை வாழை இலைல வச்சு சூரியனுக்கு படைப்போம். கூடவே அஞ்சாறு வாழை இலை துண்டுல பொங்கல் எடுத்து வச்சு காக்காக்கும் வைப்போம். அந்த காலைலயும் காக்காங்க வரும்னா பாத்துக்கோங்களேன். இப்போ உள்ள காக்காய்ங்க சோம்பேறி போல... வீட்ல ஆறரைக்கு எழும்பி லைட்ட போட்டா ஏண்டி எங்கள எழுப்பி விடுறன்னு மொறைக்குதுங்க இந்த பின்ஞ்சஸ்...

அன்னிக்கி முழுக்க கரும்பு கடிச்சுட்டு, பொங்கல் தின்னுட்டு, கூடவே செய்து வச்ச எல்லா தின்பண்டங்களையும் பிடிச்சதா பாத்து பொறுக்கி பொறுக்கி திங்குறதுலயே வயிறு நிறைஞ்சிடும். அப்புறம் மதியம் ஆனா பருப்பு, சாம்பார், ரசம், மோர் வச்சு கூடவே அவியல், தொவரம், ஊறுகான்னு ஒரு பத்து கூட்டு வகையோட சாப்பாடு ரெடியா இருக்கும். அது மட்டுமா, சேமியா பாயாசம், அடை பாயாசம், பாசிப் பருப்பு பாயாசம்னு வகை வகையா பாயாசம் வேற.

நல்லா திம்போம், ஓடி புடிச்சு விளையாடுவோம், மறுபடியும் திம்போம், அப்பப்ப அலுப்பு தீர குட்டி குட்டி சண்டை, பட்டு பாவாடை, கொலுசு சத்தம் சகிதம் அது ஒரு சங்கீத நாளா இருக்கும். அம்மா தோள் கட்டி கிடக்குறதும், அப்பா கழுத்தை பிடித்து தொங்குறதும் தனி சுகம்.

சமீபத்துல தீபாவளி நேரத்துல தான் நான் முறுக்கு சுட்டேன் (சொன்னா நம்பணும், ஒரே ஒரு முறுக்கு, சுத்தினேன், ஆனா நல்லா வரலன்னு பிச்சு போட்டுட்டேன்). அப்புறம் அடுப்பு பக்கத்துல கூட போனதில்ல. இன்னிக்கி காலைல சோம்பலா தான் விடிஞ்சுது. கார்த்திக் தான் கூப்பிட்டு பொங்கல் வைக்கணும், போய் ரெடியாகிட்டு வான்னு சொன்னார். கார்த்திக் சென்னைல பொங்கல் பொங்க, நான் இங்க இருந்து கேட்டுட்டு தான் இருந்தேன். அப்புறம் மறுபடியும் தூக்கம்.

பத்தரை மணிக்கு அப்பா ரெடி ஆகிட்டியான்னு கேக்க, என்னப்பா விசயம்னு கேட்டேன். ஹோம்-ல போய் பசங்க கூட பொங்கல் வைக்கப் போறேன்னு நீ தானே சொன்னன்னு சொன்னதும், ஆமால, அப்படின்னு பதறி, அஞ்சே நிமிசத்துல வெளில வந்து அப்பா கூடவும் தம்பி கூடவும் வண்டியில ஏறிகிட்டேன்.

நாங்க ஹோம்க்கு போய் சேர்ரப்ப மணி பதினொண்ணே கால் ஆகிடுச்சு. நாங்க போனதும் அந்த ஐயா வாங்க வாங்கன்னு வாசல்லயே நின்னு கூப்பிட்டாங்க. லேட் ஆகிடுச்சுன்னு சாரி கேட்டுட்டு உள்ள எட்டிப் பாத்தேன். பிள்ளைங்க எல்லாம் சிரிச்சாங்க. ஆனாலும் ஏதோ ஒரு அந்நியத்தன்மை இருந்த மாதிரி ஒரு பீல். பின்ன, ரெண்டு வருசமா அந்த பக்கமே எட்டிப் பாக்கலனா?

மடமடன்னு சாமான் எல்லாம் கீழ இறக்கி வச்சு, பிள்ளைங்களுக்கு புது ட்ரெஸ் எடுத்து என்கிட்ட தந்து தம்பி குடுக்க சொன்னான். நிஜமாவே மனசுக்குள்ள கில்டி பீலிங்க்ஸ். இதே பசங்களுக்கு பொங்கல்னா என் காசுல தான் கரும்பு, பொங்கல் சாமான், பழங்கள்ன்னு வாங்கிட்டு போவேன். ட்ரெஸ் அப்பா எடுத்து தந்துடுவாங்க. ஆனா இப்போ நான் எதுவுமே செய்யல, ஆனா என்னை போய் அவங்க கிட்ட குடுக்க சொன்னாங்க. தயக்கமா ஆரம்பிச்சு போக போக கொஞ்சம் சகஜமாக ஆரம்பிச்சுட்டேன். தேங்க்ஸ் அக்கான்னு சொன்ன ஒரு பொடியன நன்றின்னு சொல்லுடான்னு சொன்னேன். நீ எப்பவும் தேங்க்ஸ் தான சொல்லுவன்னு கிண்டல் பண்றான். அட, பார்ரா...ன்னு சிரிக்க ஆரம்பிச்சவ தான். அப்புறம் என்ன, அவங்களோட ஒன்னுமண்ணா ஈசியா கலக்க ஆரம்பிச்சுட்டேன்.

உண்மைய சொல்லணும்னா எல்லார் பெயரும் மறந்த மாதிரி ஆகிடுச்சு. எத்தனை பேர்ன்னு எண்ணி பாத்தேன், பத்து பேர் தான் இருந்தாங்க. மூணு பேர் எங்கன்னு கேட்டா, ஒருத்திக்கு கல்யாணம் ஆகிடுச்சாம், ஒருத்தன் ஹாஸ்டல்ல தங்கி சிஸ்த் படிக்குறான், அங்க பொங்கல் கொண்டாடணும்னு அவனை விடலையாம், இன்னொரு குட்டி பாப்பா, அடாப்ட் பண்ணிட்டு போய்ட்டாங்களாம்.

ஒவ்வொருத்தரையும் கூப்பிட்டு தம்பி சாக்லேட் குடுத்துட்டு இருந்தான். பக்கி, தனியா வாங்கிட்டு வந்துருக்கான் பாருங்க, கிர்ர்ர்ர்.... ஒவ்வொருத்தர் கிட்டயும் உன் பேர் என்ன, என்ன படிக்குறன்னு கேட்டுட்டு இருந்தப்ப, நான் அத எல்லாம் கொஞ்சம் ரீ-கால் பண்ண ட்ரை பண்ணிட்டு இருந்தேன். முதல் வேலையா அவங்க பெயரை எல்லாம் நியாபகப் படுத்தி எழுதி வச்சிக்கணும். எப்படியும் அடுத்த தடவ போகும் போது பெயர் சொல்லித் தான் கூப்பிடணும்.

நட்டநடு வெயில்ல நாலு பக்கம் செங்கல் எடுத்து வச்சு, பானைக்கு மஞ்சளும் குங்குமமும் பூசி, அடுப்பு மூட்டி, பொங்கல் பொங்குறப்ப மணி பனிரெண்டரை. பெரிய பானையா இருந்ததால பொங்கலே மதியம் போதும் போதும்னு ஆகிடுச்சு. அவ்வளவு வயிறு முட்ட சாப்ட்டாச்சு.அப்புறம் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு, மதிய சாப்பாடு ரெண்டரைக்கு சாப்ட்டோம். சமையல் கூடத்துக்குள்ள நான் போகல, ஆனா தம்பி, அங்க இருந்த பெரியம்மா கூட சேர்ந்து சமையல்காரனாகிட்டான். அவன் இங்க வர்றது ரெண்டாவது தடவ தான். ஆனாலும் என்னமோ ரொம்ப தெரிஞ்சவன் மாதிரி சுத்திட்டு இருந்தது எனக்கு பொறாமையா இருந்துச்சு.

ஒரு வழியா போயிட்டு வரோம்டான்னு கைகாட்டிட்டு வண்டியில ஏறினோம். மனசு கொஞ்சம் ரிலாக்ஸ் ஆன மாதிரி பீலிங். ஆனாலும் பழைய சந்தோசங்கள் இன்னும் திருப்பி எடுக்க வேண்டியது நிறைய இருக்குன்னு புரிஞ்சுது. அடுத்த வருஷம், காலைல நாலரை மணிக்கே தண்ணி தொளிச்சு எழுப்பி விட்டு என்னை பொங்கல் வைக்க விரட்டணும். மண் பானை, இயற்கை காற்று, இளம் சூரியன்னு அனுபவிச்சே ஆகணும்.... கூடவே வயல் வரப்புல தழைய தழைய புடவை கட்டி நடந்து போற சுகத்த அனுபவிக்கணும்....



பொங்கலோ பொங்கல்....