Sunday, 17 February 2013

நானிங்கு நீயோ?

ஆழ்நிலை தவமாய்
கணினித்திரையில் உன் விரல்கள்
பரபரப்பாய் இயங்கி கொண்டிருக்க…
உன் சிந்தனை சிதறல்களை
உயர்த்திய புருவங்களோடு
கழுத்தை கட்டிக்கொண்டு ரசிக்கிறேன் நான்...!

அதெப்படி?
வார்த்தைகளின் கோர்வைகள்
உன்னிடத்திலே மயக்கம் கொண்டு
அப்படி கிறங்கிப்போய் கிடக்கின்றன?

நீ நினைத்த மாத்திரத்தில்
நினைத்த உருவத்துள் சுலபமாய்
கூடு விட்டு கூடு பாய்ந்து விடுகிறாய்...!
நானோ என்னிடத்திலும்
கொஞ்சம் கவனம் வையென
காது கடித்து என் பக்கம் திருப்புகிறேன்...!

கிழக்கே கரம் விரிக்கும்
கதிரவனும் தோற்றான் போ...
உன் பார்வை அனலினிலே
நெருங்கி வந்து எரிந்து சாம்பலாக
நானொன்றும் சாதாரணமானவளா என்ன?

இறந்த சாம்பலுக்குள்ளிருந்தே
மேலெலும் பீனிக்ஸாய்
என்னையே உயிர்ப்பித்துக் கொண்டுன்
மடியில் அமர்வேன் நான்...!

கைகள் மாலையாய் கோர்த்திருக்க
கெஞ்சும் கிள்ளையாய்
ஒரு அரைப்பார்வை பார்கிறேன் நான்...
ம்ஹும்... அசைவில்லையே உன்னிடத்தில்...!
கோபத்தின் வீரியம் மட்டும்
உதட்டோர சுளிப்பில்
பனிகட்டியாய் உருகிக் கொண்டிருக்கிறது...!

ஓய்வெடுக்கா கரங்களினால்
என் கரம்பற்றி உன் நெஞ்சில் பதிக்கிறாய்...
இதென்ன?
உன் விரலசைக்கும் வேகத்திலே வீழும்
உன் சுயம், கோபம், காதல்,
பொறுப்பு, நேர்மை, கனிவு என
அத்தனை கலவைகளுக்கும்
நானே பிம்பமாகி போகிறேன்?

ஆயுளும் முடிந்துவிட்டால் தான் என்ன?
ஆகாயம் இருக்கும் வரை வாழ்ந்திருப்போமென
பக்கத்து வீட்டு வானொலியும்
நமக்காகவே அறிவித்துக்கொண்டிருக்கிறது...!

மனதோடு ஒரு ராகம்...!

வான் விட்டு பிரியாத நிலவாய் நாமும்
வாழ்வோடு இணைந்து ஒரு பயணம் செல்வோம்...!

தோழனாய் நீ வந்த காலம் மாறி
என் உயிரோடு கலந்திட்ட மாயம் என்ன?

கார்முகில் பொழிகின்ற மழையை போலே
என் மனதோடு நீ ஒரு ஜாலம் செய்தாய்...!

கிழக்கினில் உதித்திட்ட சூரியன் போலே
வந்தது நமக்குள்ளே உறவின் பந்தம்...!

கண்மூடி திறக்கின்ற நொடியில் நீயும்
என் நரம்போடு ஓர் இசை மீட்டிச்சென்றாய்...!

கனவுக்குள் புகுந்தென்னை திருடிக்கொண்டே
சலிக்காமல் நீயும் ஓர் காவல் செய்தாய்...!

விழிபார்த்து அல்ல, என் உணர்வின் வழி நீ
ஊடுருவிக்கொண்டே என் இதயம் அடைந்தாய்...!

என் நாடி நரம்பெங்கும் சிலிர்த்தது கொண்டே
புகுந்திட்ட உன்னை நான் முழுதாய் உணர்ந்தேன்...!

எத்திசையும் நிறைந்து நிற்கும் காற்றைப் போலே
என் சுவாசம் முழுதும் நீயாய் நிறைந்தே கொண்டாய்...!

இளங்காலை சிரிக்கின்ற வெண்பனிக் கொண்டு
என் தேகம் முழுதுமாய் சிலிர்க்கச் செய்தாய்...!

நீரோடை பிரதிபலிக்கும் பிம்பமாய் நானும்
நீயாக உருமாறி உன் உயிரில் கலந்தேன்...!

இனி நமக்குள் பிரிவொன்று என்றும் இல்லை
உயிர் கோர்த்து வாழ்வோம் என் வாழ்வே நீ வா...!

Tuesday, 5 February 2013

தீண்டத்தகா விலைபொருள்...!

நம் கண்கள் மோதிக்கொண்டதால்
காதல் பற்றியதென்று கவிபாட துணியவில்லை நான்...!

பார்த்துக்கொண்டோம்,
முறைத்துக்கொண்டோம்,
பின் ஏனோ சிரித்தும் கொண்டோம்...!

மூளையின் தூசுபடிந்த மூலையில்
பளிச்சென்று ஏதோ ஒன்று படபடத்துக்கொண்டது...!

படபடத்து சென்றது பச்சைக்கிளியின்
ரெக்கையென நான் நினைத்திருக்க,
பறந்து சென்ற வவ்வாலோ
தலைகீழாய் விதிமாற்றி சிரித்தது...!

நீ ரோஜா மலர் என்றாய்...
பாதுகாப்பாய் முட்களை வெட்டித்தள்ளியபடி...!

மான் குட்டியின் மறுபிறவி நீ என்றாய்...
வேங்கையொன்றாய் எனக்காக காவல் இருந்தபடி...!

உன்னை எடுத்துரைத்த தந்தை
எனக்கு இற்றுப்போன கோடாலியானார்...
அதட்டி உருட்டிய தாயோ
எனக்கு சொக்கட்டானாய் மாறிப் போனாள்...
தாய் மறந்தேன், தந்தை மறந்தேன்,
கூடி குலவிய உறவுகள் மறந்தேன்...!

தேவதூதனாய் நீ என் கைப்பிடித்து
அணைத்துக்கொள்கிறாய்...
உன் முதுகின் பின்னால் எட்டிப்பார்த்த
சாத்தானின் உதடோ கள்ளத்தனமாய் சிரித்துக் கொண்டது...!

உன் நிழல் தீண்டுமிடம்
சுவர்க்கம் என்றே அடியெடுத்து வைத்தேன்...
புதைமணலாய் நீ என் பாதம் தாங்குவாய் என்று அறியாமல்...!

அவசர அவசரமாய் நீ நடத்திய
காதல் நாடகம் முற்றுபெற்றதாய் அறிவிக்கப்பட்டு,
அடுத்த அத்யாயம் உடனே துவங்கப்பட்டது...
மான் வேட்டை நடத்தும் வேடர்கள் மத்தியில்...!

இச்சைகள் கொண்டு பெண்மை ருசிக்கும்
பேய்களின் மத்தியில்
என் இதயம் பிடுங்கி
முள் படுக்கையில் தள்ளிவிட்டுப் போகிறாய்...!

தடுமாறி விழுகிறேன்,
காற்றடிக்கும் திசையெல்லாம் இழுத்துச் செல்லப்படும்
நூலறுந்த பட்டமாய் திசைமாறி போகிறேன்...
எச்சில் ஊற பின்தொடர்கிறது,
சதைத்தின்னும் பிணங்களின் கூட்டம்...!

செத்தும் நடக்கிறேன், வலித்தும் படுக்கிறேன்...

வாழ்க்கை கொடுக்கிறேன் என
என் மேனி வருடிக் கொள்கிறான் ஒருவன்...
காசு எறிந்து விட்டு
அலட்சியமாய் பிடித்திழுக்கிறான் மற்றொருவன்...!

இங்கு நான் இரையாகி கொண்டிருக்கிறேன்,
நாளும் பொழுதுமாய் விலையாகிப் போகிறேன்...!

நீ விதைத்துச் சென்ற விதையொன்று
இன்னுமோர் சிதையேற துடிக்கிறது...!
ஆண் என்றால் அவனொரு தரகன்...
பெண் என்றால் அவள் மற்றுமோர் பந்தயப் பொருள்...!

வேறு கண்ணோட்டம் தோன்றுவதில்லை உங்களுக்கு...
உங்கள் பார்வையில் நான் ஒரு விலைமகள்...!
என் சமூகம் ஒரு தீண்டத்தகா விளைநிலம்...
நீங்கள் தீண்டி விளையாடி விட்டுச் செல்லும் பொழுதுகள் நீங்கலாக...!

முதல் ஸ்பரிசம்...!

இது உனக்கும் எனக்குமான
முதல் ஸ்பரிசம்…!

உன்னை என்னிடத்தில்
கையளித்தவன் முகத்தை பாரேன்…
தான் ஆண்மகனென்று நிரூபித்த திமிர்…
ஒற்றை கண்ணடித்து
என்னை பரவசமாய் பார்க்கிறான்…!

உன் பிஞ்சு தீண்டல்,
உன்னை பதியம் செய்தவனின் செல்ல சீண்டல்
இரண்டும் சேர்ந்து
உலகம் மறக்க வைக்கிறது என்னை…!

நம்மை தவிர
நம்மை சுற்றி இருந்தவர்கள்
மாயமாய் மறைகிறார்கள்…!

உன் பிஞ்சு விரல் பற்றுகிறேன் ஆசையாய்...
அதே நேரம் ஈரம் உணர்கிறேன் நெற்றியில்…!

உன்னை அணைத்த நான்...
நம்மை அணைத்த அவன்...
உன்னோடு அவன் மார் சாயும் போது
முதுகில் படர்கிறது எனக்கான நிம்மதி…!

எத்தனை ஜென்மம் காத்திருந்தேனோ
உன் பிஞ்சு முகம் காண..!

உன்னை முத்தமிட மனம் தவிக்கிறது,
என் முரட்டு உதடுகள்
உன்னை காயப்படுத்தி விடுமோயென
தயக்கம் எட்டிப்பார்க்கும் முன்
என்னவனின் முரட்டு மீசை
உன்னை அழுத்தமாய் கொஞ்சத் துவங்குகிறது…!

சட்டென என்னுள் எட்டிப்பார்த்தது பொறாமையா?
வெடுக்கென அவன் தலை மயிர் பற்றி இழுக்கிறேன்...!

அப்படியே சாய்ந்து
என் கழுத்திலும் முத்தமிடுகிறான்…
இந்த நிமிடம், இந்த நொடி,
அவனின் காதல், அவனின் காதல் பரிசாய் நீ...!

அன்பு மகளே... உணர்ந்துகொள்,
இது காமமில்லை, காமம் தாண்டிய பந்தமடி நீ...
சுவாசித்துக்கொள்...
நமக்கான பந்தம் இதுதானென்று...!

எங்களின் காற்றுப் புகா இடைவெளிக்குள்
புகுந்து விட்டவள் நீ…
இன்னும் இன்னும் எங்கள் பந்தம்
ஈர்த்துக் கொள்ள காந்த விசையாய் ஜனித்தவள் நீ…!

கட்டுக்கடங்கா ஆசையோடு
களைத்திருக்கும் கண்களால் உன்னையே
பருகி கொண்டிருக்கிறேன் நான்…
நீயோ, என்னிடத்தில் சேர்ந்து விட்டேனென
நிம்மதியாய் ஒரு செல்ல கொட்டாவி விடுகிறாய்...!

என் உள்ளங்கை பற்றி இதமாய் அழுத்துகிறான்
உன்னை விதைத்தவன்...
அப்படியே உன் வாயில் வழிந்த எச்சில் தொட்டு
ரசித்து சுவைக்கிறான் திருடன்…!

உன்னைக் காட்டி நான் அவனை தவிர்ப்பதும்..
உன்னை கொஞ்சி அவன் என்னை வெறுப்பேத்துவதும்
தொடரும் நிகழ்வுகளாய் என்றென்றும்...!

செல்ல கோபங்களும் போலி முறைப்புகளும்
இனி வழிநடத்திச் செல்லட்டும்
நம் வாழ்க்கை சுவாரசியங்களை...!

Sunday, 13 January 2013

உன்னைத்தேடி உன்னோடொரு பயணம்...!

கொட்டும் அருவியாய் சிலிர்க்கும் உன் கவிதைகளை
ஏனோ காணவே முடிவதில்லை இப்பொழுதெல்லாம்...!

உன் கவிதை கண்டு பொங்கும் மனமோ
ஏதோ ஒரு வெறுமை சூழ்ந்து
கணினித் திரையை வெறிக்கத்துவங்க...

கைகள் அனிச்சை செயலாய்
உன் வலைப்பூ முகவரியை தேடியலைந்ததால்
அங்கே பதுங்கி இருக்கும்
உன் பொக்கிச சாலைகள்
ஒவ்வொன்றாய் திறக்கத் துவங்கின...!

கொல்லுஞ்சொல் விடுத்து
குரும்புன்னகை அணிந்து
எள்ளுஞ்சொல்லையும் இமயமாய் பார்க்கும்
எழுத்துக்குழந்தையாய் அங்கே நீ சிரித்து நிற்கிறாய்...!

உனக்காக நான் செதுக்கி வைத்த
பச்சை புற்தரையில்
பிரத்யேகமாய் நீ அமைத்த “நண்பர்களின் கூடார(ம்)”த்தில்
உன் எண்ணத்தேடல்களும் சிந்தனைசிதறல்களும்
பொன்வண்ண மலர்களாய் கொட்டிக்கிடக்கின்றன...!

அலைபாயும் கண்களை
கட்டிபோட மனமில்லாமல்
உன் கவிப்பூக்கள்
ஒவ்வொன்றாய் தாண்டிச்செல்கிறேன்...!
ஒவ்வொன்றை கடக்கும் போதும்
ஒவ்வொரு விநோதங்கள்...!

ஒற்றை காளானாய் தனித்திருந்தும்
என்றாவது ஓர் நாள்
மண் கிளறி வேர்பதிக்கத் துடிக்கும் நீ...

மனதிற்குள் பாடும் மனங்கொத்தியாகவும்
தோல்விக்காயங்களை சொருகிய சரங்கொத்தியாகவும்
உன்னை அடையாளப்படுத்தி கொள்கிறாய்...!

அன்பை தேடி தேடி
கிறுக்கும் உன் பேனா ஏனோ
அன்னையின் அன்பை மட்டும்
எழுதுவதில்லை...!

கடலோரக்குருவியையும் கார்ல்மார்க்ஸ்-சையும்
முழுதாய் சிலாகிக்கும் நீ
எனக்காக விட்டுச்சென்ற கவிதையொன்றை
கண்கள் விரிய ஆவலாய் பார்க்கிறேன் நான்...!

இறுகிக்கிடந்த உன் மனப்பாறையில்
நம் நட்பு இதமான தூறலாய்
அங்கே சாரலடித்துக்கொண்டிருந்தது கண்டு
அந்த நாளின் நிகழ்வுக்குள்
குடையில்லாமல் சற்று நனைந்துக்கொள்கிறேன் நான்...!

யாருமே எழுதிடா கவிதையொன்றை
எழுதிவிட்டு போவென அடம்பிடித்து,
என்றோ உன் மனம்கவர்ந்து சென்ற காதலியின்
வாசத்தை ஆங்காங்கே நகர்ந்துக்கொண்டே நுகர்கிறேன்-
கொஞ்சம் பொறாமை கலந்த பெருமூச்சோடு...!

இங்கு மட்டுமே முற்றுபட்டு விட்டதா என் தேடல்?
இல்லையில்லை, பாதை சற்றே மாற்றி
வலைப்பக்கம் உன் கவிதைகளை தேடினால்
கண்ணுக்குள் வந்து கவிமழை பொழிகிறான்
கவிதைக்காரன்...!

சற்றே திகைத்து நிற்கிறேன்...
உன் கவிதைகளுக்குள் மூழ்கி விட்டால்
உறங்க நினைக்கும் முன்
என் இரவும் விடிந்து தான் போகுமோ?

பெயர் அறியா குழந்தைக்கும் கவிபாடி,
கொங்கு மண்டலத்தின் அழகினை
பொங்கும் தமிழில் சலிப்பே இல்லாமல்
பாமரனையும் ரசிக்க வைப்பதில் நீ கில்லாடி...!

மணநாள் காணும் தோழியாகட்டும்,
தலைவனை காணா தலைவியாகட்டும்
உன் கவிக்குள் வீழ்ந்துவிட்டால்
தன்னையே தலைவியாக்கி
மொத்த காதலையும் தத்தம் இணைகள் மேல்
கொட்டித் தீர்த்து விடுகின்றனர்...!

இனியும் பொறுமை எனக்கில்லையென
சற்றும் தாமதிக்காது உன்னிடமே கேட்டு விட்டேன்...
எப்படி உன்னால் கூடு விட்டு கூடு பாய்ந்து
சராமாரியாய் கவிதை சரம் தொடுக்க முடிகிறதென்று...!

அதுவென்னவோ கவிபடைக்க
கருத்துக்களை தேடும் பொழுதெல்லாம்
தாயாகவும் தனையனாகவும்,
தோழியாகவும் நிலவாகவும்,
அத்வைதமாய் உருமாறி
கவிதை ஊற்றுக்குள் மூழ்கிப் போகிறேன் என்கிறாய்...!

நீ தான் சோழநாட்டு கம்பனா என்கிறேன்
இல்லையில்லை,
பாண்டிய நாட்டுப் புலவன் புகழேந்தி என்கிறாய்…!

முண்டாசு கவிஞனின் மூத்த மகன் நீயோ என்கிறேன்...
இல்லவேயில்லை
எட்டயபுரத்துக்காரனின் இளையமகன் நான் என்கிறாய்...
சற்றும் கர்வம் குறையாமல்...!

வந்ததுதான் வந்தாய், உனக்கு பிடித்த கவிதையொன்றை
சொல்லிவிட்டு போ என்கிறேன்…
இன்னமும் எழுதா கவிதையே
எனக்கு பிடித்ததென்று சொல்லிவிட்டு சிரிக்கிறாய்...!

அட திமிர் பிடித்த தோழா...!
உன்னால் கிறுக்கப்பட்ட கவிதைகள்
என் மனமெங்கும் இறைந்துகிடக்கின்றன...
உடனடியாய் வெள்ளையடிக்க வந்துவிடு...
நாளை என் வீட்டில் பொங்கல்...!


Wednesday, 26 December 2012

சங்கமிக்கும் பார்வைகள் (கடற்காதல் ) ...!

நினைவிருக்கிறதா உனக்கு?
பாய்மர கப்பல்கள் அணிவகுத்த நாள் ஒன்றிலே
உனக்கும் எனக்குமிடையில் நடந்த பார்வை பரிமாற்றங்கள்?

வேடிக்கை மும்முரத்தில் தோழிகள் பின்தங்க
எற்பாடு பொழுதிலே தனித்து விடப்பட்டு
தவிப்போடு தயங்கியே நானும் நடந்து வந்தேன்…!

துவைத்தறியா மேலாடை ஒன்றும்,
தலையிலே முண்டாசுமாய் நீ…

உன்னோடும் உன் வலையோடும் மோதிப்பார்த்து
வென்று விட்ட சுறா ஒன்று விட்டுச்சென்ற மிச்சங்களை
பொறுக்கி வலையென பின்னிக்கொண்டிருந்தாய்...!

என் சலங்கை ஒலியிலே கவனம் கலைந்து
இழையொன்று தவறிவிட
சுருக்கென கோபக்கனலை என்மீது வீசி நின்றாய்...!
ஒன்றுமறியாத நானோ என்னவோ ஏதோவென பதறித்தவிக்க
என் கண்களில் உவர்நீர் எட்டிப்பார்த்தது...!

என் கண்ணீர் கண்டதாலோ என்னவோ நானறியேன்,
வருணன் மழை அள்ளிச் சொரிந்தான்... நானோ
உன் முன் முழுதாய் நனைந்து நின்றேன்...!

ஒற்றை புருவம் தூக்கி அபிநயம் பிடித்து
நீ சிரித்த அந்த சிரிப்பில்
என் உதட்டோர புன்னகையை
உடனடியாய் களவாடிக் கொண்டாய்...!

உன் கூர்விழி அம்புகளால் என் இதயம் கிழித்து
உன் இதயம் உள்வைத்து என்னில் புதைந்து
என்னை உனக்காய் மாற்றியமைக்கிறாய்...!

தொலைத்து வந்த தோழியர்
மதி தொலைத்த என்னை கண்டெடுத்து
கைப்பிடித்து நகர்த்தி விட்டனர்...

நான் கடைக்கண் பார்வையொன்றை
உன்னிடத்தில் காவல் விட்டு
இதயமிழந்து புன்னை மர நிழலொன்றில்
என்றும் உனக்காய் தவமிருக்கத் துவங்கினேன்...!

உன்னில் நான் தொலைந்தேனென நான் நினைத்திருக்க
நீயோ என் விழி சொல்லும் சேதிக்காய்
கடல் காகம் தூது விட்டு கல்லுப்பின் மேல்
ஒற்றைக்கால் தவமிருந்திருக்கிறாய்...!

கார், கூதிர், முன்பனி, பின்பனியென
பெரும்பொழுதுகளும் கரைந்துவிட
இளவேனிற்லொன்றில் மீண்டும் நமக்குள் பார்வை சங்கமம்...!

தோழியொருத்தி விளரி இசைக்க என்னை மறந்து
உன்நினைவில் கானமிசைத்து கொண்டிருக்கிறேன் நான்...!
குறுகுறுக்கும் பார்வையொன்றில் எண்ணம் தடுமாற
என் கூந்தல் தாழையும் சரிந்தது...!

உன்முன் நான் இன்று என் முதுகுகாட்டி நிற்கிறேன்,
இருந்தும் முதுகோரம் உன் பார்வை வீச்சொன்றினால்
நாணம் கொள்ளச் செய்கிறாய்...!

இப்பொழுதல்லவா தெரிகிறது
மீன் பிடிக்க நீ வலை வீசும் போதெல்லாம்
என்னையல்லவோ தூண்டில் புழுவாய் துடிக்க விட்டிருக்கிறாய்...!

கடலலையில் வலை வீசி பழகிய நீ,
என் எண்ண அலைகளில் நீச்சல் கற்றுக் கொள்கிறாய்...!

இத்தனை பரவசங்கள் என்னுள் உன்னால்...
இன்று மூச்சுத்திணற வைத்து வேடிக்கை காட்டுகின்றன...!

எத்தனை பொழுதுகள் கழிந்தாலென்ன?
பாரேன், கடைக்கண் பார்வை வீசியறியா
கேணியொன்றின் தவளையாய் இருந்த என்னை
உன் காதல் சாம்ராஜ்யத்துள் பதுக்கி விட்டு
ஒன்றுமறியா குழந்தை போல்
அப்பாவியாய் ஒரு பார்வை பார்ப்பதை?

ஆனாலும் உனக்கு நினைவிருக்கிறதா?
நினைவு கிடக்கையில் கழிந்திடா பொழுதொன்றாய்
இன்னனும் நம் பார்வைகளின் சங்கமம் மோதிக்கிடப்பதை...!


Saturday, 22 December 2012

மோகன கானம்....!


எங்கோ தோன்றிய ஒளி வட்டமாய் நீ...
என் பார்வை பறித்து வசியம் வீசி செல்கிறாய்...!
உன்னால் சுழலவிட்ட பம்பரமாய்
நான் உன்னை சுற்றியே நினைவிழந்து போகிறேன்...!

உன்னை கண்ட நிமிடம் நான்
ஆர்ப்பரிக்கும் அலைக்குள் சிக்கிக் கொண்டேன்...!
நீயோ தெளிந்த நீரோடை ஒன்றில்
என் மனமென்னும் மீன் கொத்திச் செல்கிறாய்...!

நான் போகும் பாதையில் பூக்களின் திசைமாற்றி
என் சுவாசம் முழுவதும்
நறுமண வாசம் வீசி செல்கிறேன்...!
எனக்கே தெரியாமல் என்னை ஊடுருவி சென்று
எப்படி ஆக்கிரமித்தாய் நீ?

மென்மை ஒன்றை உன்னில்
நான் கண்டவளுமில்லை...
அஹிம்சை ஒன்றை
உன்னிடத்தில் அறிந்தவளுமில்லை...!

உன் தோள் கண்டு உன்னோடு
மோகித்து விடவுமில்லை...
குரலோசை கேட்டு
உனக்காக சஞ்சலித்து விடவுமில்லை...!

இரவின் கரங்களுக்குள்
அடங்க மறுக்கும் நான்
உன் முரட்டு நெஞ்சத்துள்
புகுந்து விட துணிகிறேன்...!

கட்டுக்கடங்கா திசையெல்லாம்
சுழலும் காற்றாய் நான்...
சிறைபட்டு உன்னை
சிறையெடுக்க விரைகிறேன்...!

ஊர்க்குருவி ஒன்று கூவும் இசைகேட்டு
நீ கண் விழிக்கும் முன்னே
உன்னில் மூழ்கி விட முனைகிறேன்...!

தடைக்கல்லென என் நடைபாதை நுழைந்தவனே
கேள்விக்குறியாய் நீ மாறி பின்
பதிலே நீயுமாய் பதிந்து விட்ட கதை அறிவாயோ?

உன் கண்சிமிட்டல்களுக்குள்
தொலைந்து போன என்னை
தேடி தேடி மறுகுகிறேன்
நீ என்னுள் தொலைந்ததே அறியாமல்...!